Friday, July 22, 2022

அலமாரிப் பூக்கள்

 (இந்தக் கட்டுரை பேராசிரியர் சேமுமு அவர்கள் நடத்திவரும் “இனிய திசைகள்” என்னும் மாதிகையில் ஜூலை 2022 இதழில் வெளியாகியுள்ளது.)


“ஒரு தோட்டமும்

ஒரு நூலகமும்

உன்னிடம் இருந்தால்

தேவையானதெல்லாம்

அடைந்துவிட்டாய்”

என்கிறார் ரோமானிய தத்துவ அறிஞர் மார்க்கஸ் சிசரோ.

            நான் அடைந்த நல்லூழ், சிறுவனாக இருந்த காலம் தொட்டே எங்கள் வீட்டில் தோட்டம் இருந்தது. பதின் பருவத்தில் எனக்கான சிறு நூலகம் ஒன்றையும் உருவாக்கிக் கொண்டேன்.

            சொந்தமாக வீடு கட்டியபோதும் முற்றத்தில் தோட்டம் வைக்க போதிய இடம் விட்டே கட்டினேன். அதில் இப்போது தோட்டம் இருக்கிறது. வாசிக்கும் கூடம் வைத்து வீட்டு நூலகமும் வளர்ந்துள்ளது.



            சிசரோ சொன்னதைச் சிந்தித்துப் பார்க்கையில் இரண்டும் ஒன்றுதான் என்று படுகிறது. நூலகம் என்பது வீட்டின் அகத் தோட்டம். தோட்டம் என்பது வீட்டின் புற நூலகம்.

            நூலகம் என்பது தாள்களால் ஆன பூந்தோட்டம்; தோட்டம் என்பது செடி கொடிகளால் ஆன நூலகம்.

            எப்படி அமைய வேண்டும் என்று திட்டமிட்டேதான் என் நூலகத்தை உருவாக்கி வந்திருக்கிறேன். வீட்டுத் தோட்டமும் அப்படியே.

            ஒருவரின் வீட்டுத் தோட்டத்தில் என்னென்ன தாவரங்கள் இருக்கும் என்பது அவரவரின் ரசனையைக் காட்டும். வீட்டு நூலகமும் அப்படியே.

            ஆரம்பத்தில் என்னிடம் இருந்த நூற்களின் சேகரத்தில் பலவற்றை நானே பிற்பாடு நீக்கியிருக்கிறேன், பூச்செடி என்று நினைத்து வளர விட்டதை நாமே பிறகு களை என்று கண்டு நீக்கிவிடுவதைப் போல்.

            என் நூலகத்தில் கவிதைப் பூக்கள் இருக்கின்றன, ஞானக் கனிகள் இருக்கின்றன. என் தோட்டத்தில் பூக்களே கவிதைகளாகவும் கனிகளே ஞானங்களாகவும் இருக்கின்றன.

            சிலர் துளசிச் செடி புனிதமானது என்று அதற்குத் தனியாக பீடம் அமைத்து அதில் உயர்த்தி வைப்பார்கள். அதேபோல், என் நூலகத்திலும் இறை வேதத்திற்கும் நபிமொழித் தொகுப்புக்களுக்கும் தனியாக அலமாரி இருக்கிறது. 



            சில வீடுகளில் வேறு செடியே இல்லாமல் துளசி மட்டும் ஒரு தொட்டியில் நின்று கொண்டிருக்கும். அதுபோல், பல வீடுகளில் நூல் என்று திருமறை ஒன்று மட்டுமே இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.



             பயன்படும் செடிகளை வைக்க வேண்டும். வெறும் அழகுக்கென்று பூச்செடிகளை வைப்பதால் என்ன பயன்? தோட்டத்தில் காய்கள் கனிகள் தரும் தருக்கள் இருக்க வேண்டும் என்பது ஒருவரின் கோட்பாடாக இருக்கலாம். அது போல் ஒருவரின் நூலகத்தில் புனைவுகளுக்கே இடமில்லாமல், அகராதி, அட்லஸ், சமையல் நூற்கள் என்பன போல் அன்றாட வாழ்க்கைக்குப் ’பயன்’படும் நூல்கள் மட்டுமே இருக்கக்கூடும்.

            தோட்டங்களில் சில வகைகள் இருக்கின்றன. ஜென் தோட்டம், முகலாயத் தோட்டம் (பாரசீகத் தோட்டம்), ஆங்கிலேயத் தோட்டம் ஆகியவை போல். நூலகங்களும் அப்படி ஒரு குறிப்பிட்ட பொருண்மை சார்ந்த நூற்கள் அதிகமாக இருக்கும்படி அமையக்கூடும். ஒரே தோட்டத்தில் இந்த வகைகளுக்கு இடங்கள் ஒதுக்கப் பட்டிருக்கலாம். என் நூலகம் அப்படித்தான் இருக்கிறது. அதில் சூஃபி, ஜென், மேலை மற்றும் கீழை ஞான மரபுகள் என்று அனைத்துக்கும் இடம் இருக்கிறது.

            சிறு சிறு தொட்டிகளில் கை மருந்துக்கான மூலிகைகளும் வீட்டுத் தோட்டங்களில் இருக்கும். ஓமவள்ளி, துளசி, வெற்றிலை, பச்சிலை ஆகியவை போல. அதுபோல் சில நூற்கள் மனதுக்கு மருந்தாக அமையும். சில வீடுகளில் மருந்துக்கும் செடி இருக்காது; சில வீடுகளில் மருந்துக்கும் நூல் இருக்காது.



            என் நூலகத்தில் செய்தித்தாள்களுக்கு இடம் இல்லை; என் தோட்டத்தில் பிளாஸ்டிக் தாவரங்கள் இல்லை.

            நூற்களும் விற்கப்படும் நவீன காஃபி அங்காடி ஒன்றில் ஒருமுறை அன்பளிப்பாக ஒரு சிறு செடியைக் கொடுத்தார்கள். அதுபோல், தோட்டத்தில் உள்ள ஒவ்வொரு செடியின் பின்னணியிலும் ஒரு கதை இருக்கக் கூடும். என் நூலகத்தில் உள்ள சில நூல்களின் பின்னணியில் சுவையான நிகழ்வுகள் உள்ளன.

            நூல்களிலும் விஷச் செடிகளும் நச்சு மரங்களும் உண்டு. பொதுவாக அவை கேளாமலே முளைப்பவை, இலவசமாக வந்து சேர்பவை. ஆரம்பத்திலேயே அவற்றை அகற்றிவிட வேண்டும். சில காலம் சென்ற பிறகே எனக்கு இந்த விழிப்புணர்வு ஏற்பட்டது.

            தோட்டத்தில் உள்ள பெரிய மரம் சில நேரங்களில் வீட்டுச் சுவரில் விரிசல் ஏற்படுத்திவிடலாம். அப்போது மரத்தை வெட்டிவிடுவார்கள். ஓஷோவின் சுவாங்சூ அரங்கத்தை அவர் காடு போல் உருவாக்கிப் பேணிய தோட்டத்தின் மரம் ஒன்று சாய்ந்து விரிசல் ஏற்படுத்தியது. அந்த மரத்தை வெட்டிவிட அனுமதி கேட்ட சீடர்களிடம், “வேண்டுமானால் அரங்கத்தை இடித்துவிடலாம்; மரத்தை வெட்டக் கூடாது,” என்று அவர் சொன்னாராம்.



            என் நூல் சேகரம் வீட்டின் சகல இடங்களையும் ஆக்கிரமித்து வருகிறது. அவற்றுக்கென்று கூடத்தில் உள்ள மூன்று அலமாரிகள் போக மகனின் அறை அலமாரியில் ஓர் அடுக்கை எடுத்துக் கொண்டது, பரணில் ஒரு பகுதியை நிரப்பிவிட்டது, தொலைக்காட்சிக்கான அலமாரிக்குள்ளும் நூற்கள் புகுந்துள்ளன. ஆனாலும், புதிய நூற்களின் வருகை தொடர்கிறது. அது நிற்காது.

            செழித்து மலர்ந்திருக்கும் செடியை மாடோ ஆடோ புகுந்து அழித்துவிடுவது உண்டல்லவா? அல்லது, அசந்த நேரத்தில் மனிதர்களே கூட பறித்துக் கொண்டு போய்விடுவதும் நடப்பதுதானே?             அப்படி என் நூலகத்தில் இருந்தும் பல நூற்களை இழந்திருக்கிறேன். வாசிக்கக் கொடுத்துத் திரும்பி வராதவை.

          தோட்டம் என்றால் தாவரங்கள் மட்டும்தானா? வசதி இருந்தால் சிறு குளம் வைத்து அதில் மீன்களை விடுகிறார்கள். அதுபோல், என் நூலகத்தில் ஒரு பகுதியாக இசைக்கு இடம் இருக்கிறது.

            மண் உலகம் வேறு, நீர் உலகம் வேறு. இரண்டுமே தோட்டத்தில் இடம் பெறுகின்றன. அதுபோல், மொழி உலகம் வேறு, இசை உலகம் வேறு. அவை இரண்டும் என் நூலகத்தில் ஒன்றாக இருக்கின்றன.

            செடியில் மலர்ந்து மணம் வீசும் மலர்கள் எப்படித் தோன்றுகின்றன. அவை வேரின் சாரம் வெளிப்படுவதுதான் அல்லவா? அப்படித்தான், நூற்கள் எனக்கு என் வேர்களைக் காட்டுகின்றன. அதன் சாரமே என் சிந்தையில் ஆயிரம் பூக்களை மலர வைக்கிறது.

            இப்போதெல்லாம், உன் நூலகம் எங்கே என்று யாரையேனும் கேட்டால் மடிக்கணினியை அல்லது கைப்பேசியைக் காட்டுகிறார்கள். அதற்குள் நூறு நூல்கள் வைத்திருக்கிறேன், ஆயிரம் நூல்கள் இருக்கின்றன என்றெல்லாம் சொல்கிறார்கள். நூலகம் டிஜிட்டல் ஆகிவிட்டது. (என்னிடமும் அப்படி ஒரு டிஜிட்டல் சேகரம் இருக்கிறது.) இனி, டிஜிட்டல் சுவர்கள் அமைத்து அதில் தோட்டம் வளர்க்கப்படலாம்.

            “நூற்கள் இல்லாத அறை உயிரற்ற உடலைப் போன்றது” என்றும் சிசரோ சொல்கிறார். முற்றத்தில் தோட்டம் இல்லாத வீடு, அந்தகனின் முகம் போல் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.


Thursday, June 23, 2022

கஜல் விகடன்

 

உருது மொழியின் உன்னதமான கவிதை வடிவம் கஜல். காதலைப் பேசுவதில் கஜலுக்கு இணையான வேறொரு கவிதை வடிவம் இருக்க முடியாது.

            ஆனால், சோக உணர்வு இழையோட கஜல் பாடிக் கொண்டிருந்த கவிஞர்களின் மத்தியில் அங்கதத்தை ஆயுதமாக ஏந்தி வந்தவர் அக்பர் அல்லாஹாபாதி. ஆம், அவர் கஜல் உலகின் விகடகவி.

            அவர் தன் கவிதைகளை வாசித்த போது ’கஜலில் நகைச்சுவையா?’ என்று உருதுக் கவியுலகம் புருவம் உயர்த்தி வியந்து பார்த்தது.



            அக்பர் அல்லாஹாபாதியிடம் காதல், ஆன்மிகம், உளவியல் என்று கஜல் கவிதை மரபின் அத்தனை பொருண்மைகளும் இருந்தன. ஆனால், அவர் தன் சிந்தனைகளை எள்ளலும் பகடியுமாக வெளியிட்டார்.

            கஜலின் உள்ளீடுகள் க்ளீஷே என்னும் தேய்வழக்குகளாகி மலிந்து போனபோது அக்பர் அல்லாஹாபாதி அவற்றை மறுபரிசீலனை செய்யும் நோக்கில் பகடி பண்ணி அதிர்ச்சி வைத்தியம் பார்த்தார் என்று சொல்லலாம்.

            கஜல் கவிதைகளில் ஆங்கிலச் சொற்களை அள்ளித் தெளிப்பதில் தனி ஆற்றல் அவருக்கு இருந்தது. அது அவரின் கவிதைகளில் அங்கதச் சுவையை அதிகப் படுத்திற்று. ஆங்கிலேயரின் ஆட்சியில் மேற்கத்திய கலாச்சாரம் இந்தியர்களிடம் பரவி வந்ததை அவர் கவிதைகள் அவ்விதம் பதிவு செய்துள்ளன. எனவே அவரை “லிசானுல் அஸர்” (காலத்தின் நாவு) என்று கவிஞர்களும் ரசிகர்களும் போற்றினார்கள்.     

            அவரின் பரந்துபட்ட கவியுலகில் இருந்து சில விகடத் தெறிப்புகளை இங்கே தமிழாக்கித் தருகிறேன்.

            ”உன் பிரிவே என் மரண சாசனம்” என்று புலம்பும் காதலர்களை அக்பர் பார்க்கிறார். அவருக்கும் காதலின் பிரிவு அனுபவம் இருக்கிறதாம். ஆனால், அவரின் புலம்பல் வேறு விதமாக இருக்கிறது:

            ”யாருக்கோ வந்திருக்கலாம்

             காதலின் பிரிவில் மரணம்.

             எனக்கோ தூக்கம் கூட

             வரமாட்டேன் என்கிறது!”

            ஆங்கிலத்தில் tongue என்னும் சொல் மொழியையும் குறிக்கிறது, அதைப் பேசும் நாவையும் குறிக்கிறது. Mother tongue என்றால் தாய்மொழி என்று அர்த்தம். தமிழிலும் நாவன்மை என்றால் மொழித் திறன் என்று பொருள். யாரேனும் துடுக்காகப் பேசினால், “என்ன, நாக்கு நீளுது?” என்று கேட்கிறோம். உருதுவிலும் ஸபான் என்னும் சொல் மொழியையும் நாவையும் குறிக்கிறது. இந்த சிலேடையை வைத்துக் கொண்டு பகடி ஆடுகிறார் அக்பர்:

            ”நான் சொன்னேன்:

             பல்வேறு மொழிகளில் பண்டிதன் நான்;

             ஜெர்மன் ஃபிரெஞ்சு லத்தீன் ஆங்கிலம்

             அனைத்திலும் என் திறமையை

             அகில உலகமே அறிந்துள்ளது!

             ஒரு வாயாடி ‘மிஸ்’ என்னிடம்

             விவாதத்தில் இறங்கினாள்,

             அவளின் நாக்கு நீண்டது.

             அப்போது மேகத்தில் மின்னல் அடித்தது

             வானில் இருந்தது வெண்ணிலா.

             அவள் சொன்னாள்:

             இந்த நாவை நீ அடையவில்லை எனில்

             வாழ்வின் ருசியை அறியவே மாட்டாய்!”

            மஜ்னூனுக்கு லைலாவின் மீது காதல் வந்தது எப்போது என்று தெரியுமா? பால்ய வயதில்! ஆரம்பப் பள்ளியில் இருவரும் படித்துக் கொண்டிருந்தபோது. காவியம் அப்படித்தான் சொல்கிறது. எதார்த்தத்தில் அப்படி நிகழ்ந்தால் என்ன ஆகும்? இதோ அக்பர் சொல்கிறார்:

            ”காதல் எனக்குத் தீய விதி ஆனது.

             எல்லா முயற்சிகளும் செய்த பின்னும்

             A,B என்பதற்கு அப்பால் ஏறவில்லை எனக்கு,

             B.A வரை சென்றுவிட்டார்

             என்னுடன் படித்த எல்லாரும்.”

            அவர் காலத்தில் பி.ஏ என்பது பென்னம் பெரிய படிப்பாக இருந்தது. ஒருவன் கல்லூரியில் சேர்ந்து விட்டான் என்று தெரிந்தாலே பெரிய இடத்திலிருந்து பெண் தர போட்டி போட்டுக் கொண்டு வரிசையில் நிற்பார்கள் என்ற சூழ்நிலை இருந்தது. அப்படித்தான் அக்பருக்கும் ஒரு பீபி (மனைவி) வாய்த்தாளாம். பிறகென்ன, ’வாழ்வின் ருசி’யை அனுபவிக்க ஆரம்பித்தார். அவர் சொல்கிறார்:

            ”பி.ஏ தேரினேன்,

             விரும்பியபடி

             பீபி கிடைத்துவிட்டாள்.

             அது மதியின் காரியமாக இருந்தது,

             இது விதியின் காரியமாக முடிந்தது!”

            1920-களில் பி.ஏ, எம்.ஏ ஆகிய படிப்புகள் உயர்ந்த மதிப்புடன் இருந்த சூழலை அவரின் இன்னொரு அங்கதக் கவிதை தெளிவாகக் காட்டுகிறது. அதில் லைலா – மஜ்னூன் என்னும் மரபான கவிதைக் குறியீட்டை அக்பர் கையாள்கிறார்:

            ”மஜ்னூனிடம் சொன்னார் லைலாவின் அம்மா:

             ’எப்படியேனும் எம்.ஏ தேரிவிடு,

             லைலாவை உனக்கே கட்டி வைக்கிறேன்,

             தயங்காமல் உனக்கு மாமியார் ஆவேன்.’

             மஜ்னூன் சொன்னான்:

             ’என்ன பேசுகின்றீர்?

             காதலன் எங்கே? காலேஜ் எங்கே?

             இயல்பாகக் கிளம்பும் உணர்ச்சிகள் எங்கே?

             செயற்கையாய் திணிக்கப்படும் சிந்தனைகள் எங்கே?

            கிழவியே! உனக்கு என்ன ஆனது?

            மான் தன் முதுகில் புல்லுக்கட்டு சுமக்குமா?”

            இலட்சியங்களுக்காகத் தன் உயிரையே அர்ப்பணித்து தியாகி (ஷஹீத்) என்னும் புகழை அடைபவர்கள் இருக்கிறார்கள். நாட்டுக்காக உயிர் நீத்த பகத் சிங் “ஷஹீதே வதன்” (தேசத் தியாகி) என்றே போற்றப்படுகிறார். அக்பர் அல்லாஹாபாதியும் அந்த உயரிய நிலையை அடைந்திருக்கிறாராம். ஆனால், அவர் ஷஹீத் ஆனது போரில் அல்ல, அக்கப்போரில். அது எப்படி என்று அவர் சொல்கிறார்:

            ”எந்தவொரு மன்னனின் படையிலும்

             வீழ்ந்துபடவில்லை அக்பர்;

             மனைவியிடம் சண்டை போட்டே

             அவனொரு தியாகி ஆகிவிட்டான்!”



            அப்படி என்ன விபரீதம் நிகழ்ந்தது? என்று நாம் பதறுகிறோம். வாழ்வின் எதார்த்தம் ஒன்றை அக்பர் நம்மிடம் தெரிவிக்கிறார்:

            ”காதலன் காதலி என்னும் உறவில்

             எவ்வளவு இன்பம் இருந்தது முன்பு!

            எங்கே போனது அது,

            கணவன் மனைவி என்று ஆன பின்பு?”

            கணவனும் மனைவியும் காதலர்களாய் இருக்கும் வரம் அனைவருக்கும் கிடைப்பதில்லை. கணவன் மனைவி என்பது ஏதோ அலுவல் பணி போல் அலுத்துப் போனால் அதிலே எப்படி இன்பம் இருக்கும்?

            எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெளிவாகச் சொல்ல வேண்டும் எனில் அவர் ஒரு தீர்க்கதரிசியாகத்தான் இருக்க வேண்டும். அடுத்த நொடி என்ன நிகழும் என்று நமக்குத் தெரியாது. வாழ்க்கையிலேயே இந்த நிலை என்றால், மரணத்துக்குப் பின் என்ன நடக்கும் என்று தன்னால் சொல்ல முடியும் என்கிறார் அக்பர். நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதை அவர் சொல்லியும் விடுகிறார்:

            இறந்துபோன பின் என்ன நடக்கும்

உனக்கு நான் சொல்லவா?

பிரியாணி தின்பார்கள் எல்லாரும்

ஓதுவார்கள் உனக்கு ஃபாத்திஹா!

 

            ஆம், முஸ்லிம் சமூகத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அவருக்குப் புண்ணியம் சேர்க்கும் பொருட்டு ஃபாத்திஹா என்னும் சிறப்புப் பிரார்த்தனை ஒதி உற்றார் உறவினர்களுக்கு விருந்து போடுவது மரபு.



            நாட்டு நிலைமை எப்படி இருக்கிறது என்பதையும் அவரிடம் கொஞ்சம் கேட்கலாம். தன்னலமற்ற தலைவர்கள் எல்லாரும் வரலாறு ஆகிவிட்டார்கள். இப்போதெல்லாம் வெளிப் பகட்டை வைத்தே தலைவர் ஆகிவிடுகிறார்கள். ஆடையே ஆளைத் தீர்மானிக்கிறது; பேச்சே மக்களை மயக்கிவிடுகிறது. அக்பர் சொல்கிறார்:

            ”கோட்டும் சூட்டும்

             அணிந்து கொண்டான்,

             ‘மிஸ்டர்’ ஆகிவிட்டான்.

             பொதுக்கூட்டத்தில்

             வாய் திறந்தான்,

             ‘லீடர்’ ஆகிவிட்டான்!”

            எல்லாத் தொழில்களிலும் ஊழல் மலிந்துவிட்டது உண்மைதான். அக்பர் வழக்கறிஞர் பணியை ஒரு பிடி பிடிக்கிறார்:

            ”வழக்கறிஞர் பிறந்தார்.

             சாத்தான் கூறினான்:

             இன்று நானும்கூட

             அப்பா ஆகிவிட்டேன்!”

            ஐரோப்பியக் கலாச்சாரம் இந்தியர்களிடம் பரவி வந்த காலகட்டத்தைத் தன் கவிதைகளில் அவர் பதிவு செய்திருக்கிறார். அந்த மாற்றம் அவருக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது. ஆனால் அதையும் அங்கதச் சுவையுடன்தான் பாடியிருக்கிறார். எதிர்காலத்தில் முஸ்லிம் பெண்களிடம் ’பர்தா’ என்னும் திரையும் இந்துப் பெண்களிடம் ’கூங்கட்’ என்னும் முக்காடும் இல்லாமல் போய்விடும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தப் பொருண்மையில் ஒரு கவிதை:

            ”முகத்திரை இன்றி சில பெண்கள்

             கண் முன் காட்சி ஆனார்கள்;

             சமுதாயத்தின் வெட்கக்கேடே! என்று

             நிலத்தில் சாய்ந்துவிட்டார் அக்பர்.

             ‘எங்கே போனது உங்கள் முகத்திரை?’

             என்று கேட்டார் அவர்களிடம்.

             ‘ஓ அதுவா? ஆண்களின் அறிவின் மீது

             விழுந்து கிடக்கிறது’ என்றார்கள்.”

            தமிழுக்கு ஈழத்துக் கவிஞர் மஹாகவி போல, மலையாளத்துக்கு குஞ்ஞுண்ணி போல, உருது மொழிக்கு அக்பர் அல்லாஹாபாதி என்று சொல்லலாம்.

            அவரின் கவிதைகளில் கேலியும் கிண்டலும் மட்டும்தான் இருக்கிறது என்று எண்ணி விடாதீர்கள். அவரின் காத்திரமான அரசியல் கவிதைகளையும் ஆழமான ஆன்மிகக் கவிதைகளையும் நாம் பார்க்க வேண்டும்.

             இந்திய விடுதலைக்கான போராட்டம் கொதி நிலைக்கு வந்து கொண்டிருந்த காலம். 1919-இல் பிரிட்டிஷ் அரசு ஒருவித சமரசத்துக்கு வந்தது. ஆங்கிலேயரின் மேற்பார்வையில் இந்தியர்களுக்கு சில அதிகாரங்கள் வழங்கப்படும் என்று அது சொன்னது. அதற்கு மாண்டேக் – செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தம் என்று பெயர். அவ்வளவுதான், இந்தியத் தலைவர்களுக்கு இடையே பதவிச் சண்டைகள் மூள ஆரம்பித்தன. அக்பர் அல்லாஹாபாதி அதை இப்படிக் குத்திக் காட்டினார்:

            ”சகோதரர்கள் சண்டையில்

             சட்டையைக் கோர்த்துவிட்டார்கள்!

             சுயராஜ்யம் வந்துவிட்டது!”

            மேற்கத்திய கல்வியும் கலாச்சாரப் பரவலும் இந்தியர்களுக்கு நன்மை செய்யாது என்று அக்பர் அல்லாஹாபாதி மிக உறுதியாக நம்பினார். இந்திய இளைஞர்கள் கல்லூரிகளில் சேர்ந்து பி.ஏ., எம்.ஏ முதலிய பட்டப் படிப்புகளை மேற்கொள்வதில் அவருக்குக் கிஞ்சிற்றும் விருப்பம் இல்லை. கவிதைகளால் அதைக் கண்டனம் செய்தார்.



            ”ஓ! நம் தேசத்தின் பெருமிதமான இவர்களை

             வருணிக்க என்னிடம் வார்த்தைகள் ஏது?

             பட்டதாரி ஆனார்கள்

             பணி செய்து முடித்தார்கள்

             ஓய்வூதியம் பெற்றார்கள்

             செத்துப் போனார்கள்!”

என்று அவர் ’நித்திய தரித்திரர்’ ஆன ’கலக மானிடப் பூச்சி’களின் வாழ்க்கையை வரைந்து காட்டுகிறார்.

            ”இந்தியா இஸ்லாத்தின் வீடாகவும் இல்லை

             இலக்குவன ராமரின் நாடாகவும் இல்லை

            நாம் அனைவரும் ஆங்கிலேயரின் அடிமைகள்

            இந்தியா இப்போது ஐரோப்பாவின் மண்டி!”

என்று தீ உமிழவும் அவரின் பேனாவுக்கு ஆற்றல் இருந்தது.

            அக்பர் அல்லாஹாபாதி சூஃபித்துவத்தில் ஈடுபாடு காட்டியிருக்கிறார். சூஃபித்துவம் இறைஞானம் அடைவதற்குக் காதலையே வழியாக முன் வைக்கிறது. அதாவது, ஆன்மீக அனுபவங்களின் வழியாகவே இறைஞானம் அடைய முடியும்; தத்துவச் சிந்தனைகள் இறைஞானம் தராது என்று சொல்கிறது. அக்பர் அல்லாஹாபாதி தனது கவிதைகளில் இதனைப் பல இடங்களில் வலியுறுத்துகிறார்.

            ”தத்துவவாதியின் விவாதங்கள்

             இறைவனை அடைவதில்லை.

             அவன் முடிச்சுகளை

 அவிழ்த்துக்கொண்டே போகிறான்,

 முடிவேதும் கிடைப்பதில்லை!”

சூஃபி கவிதைகள் காதலின் மொழியில் பெண்ணைப் பேசுவது போன்ற தோரணையில் இறைவனைப் பற்றிப் பேசிவிடுகின்றன. அதற்கு அக்பரிடம் இருந்து ஓர் அழகான எடுத்துக்காட்டு இது:

அறிந்தேன் கடைசியில்

 நீ யார் என்று;

 வரிந்து கொள்ளலாம்

 இதயத்தில் உன்னை,

 புரிந்து கொள்ள முடியாது

 புத்தியால் ஒருபோதும்.”

இதே கருத்தைத் தரும் இன்னொரு கவிதை:

“அறிவுக்குள் விழுகின்ற ஒன்று

 எல்லையற்ற ஒன்றாய்

 எப்படி இருக்க முடியும்?

 மனத்தின் புரிதலில்

 வந்துவிடும் ஒருவன்

 இறைவனாய் எப்படி

 இருக்க முடியும்?”

            ’உலகில் இரு; உலகைச் சேர்ந்தவனாக இருக்காதே’ என்று ஞானிகள் சொல்கிறார்கள். அக்பர் அந்த நிலைக்கு மிக இலகுவாகக் கனிந்து விட்டார் என்று தெரிகிறது. அவர் சொல்கிறார்:

            ”உலகில் இருக்கிறேன்,

             அதைத் தேடுபவனாக நானில்லை;

             சந்தையைக் கடந்து போகிறேன்,

             அதில் எதையும் வாங்கும் எண்ணமில்லை!”

            இந்த ஆன்மிகச் சிந்தனைகள் எல்லாம் மரபாக சூஃபி ஞானிகள் சொல்லி வருவதுதானே என்று நினைத்தபடி அக்பரின் கவிதைகளை வாசித்துக்கொண்டு போனால் இதுவரை யாரும் சொல்லாத கோணத்தில் சில சிந்தனைகளை அவர் வெளிப்படுத்துகிறார்.

            உள்ளத்தை விட்டும் உருவங்களை நீக்க வேண்டும் என்றுதான் சூஃபி ஞானிகள் சொல்வார்கள். ஆனால், உருவங்கள் இறைவனின் கைவண்ணத்தைக் காட்டுகின்றன, அவனது ஆற்றலின் அத்தாட்சிகளாக இருக்கின்றன என்று அக்பர் பார்க்கிறார். இறைவனுக்கு ’முஸவ்விர்’ (’உருவமளிப்போன்’) என்றொரு திருநாமம் இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் அத்தனை உருவங்களும். இந்தக் கோணத்தில் கூர்ந்து நோக்கும்போது அக்பருக்கு ஓர் அற்புத தரிசனம் கிடைக்கிறது:

            ”இறைவா!

             எத்தகைய எத்தகைய

             உருவங்களை நீ

             உண்டாக்கி இருக்கிறாய்!

             உருவம் ஒவ்வொன்றும்

             உள்ளத்தில் ஏந்திக்கொள்ள

             தகுதியைப் பெற்றுள்ளதே!”

            இறைவன் இருக்கிறான் என்று எப்படி அறிவது? படைப்புக்களை ஆராய்ந்தால் படைத்தவன் இருப்பது உறுதியாகும் என்று ஞானிகள் சொல்கின்றனர். அதை அக்பர் அல்லாஹாபாதி சொல்லும் விதத்தில் அழகும் அழுத்தமும் இருக்கிறது:

            ”ஒவ்வொரு அணுவும்

             இறைவனின் ஒளியால்

             பிரகாசிக்கின்றது.

             ஒவ்வொரு மூச்சும் சொல்கிறது

             நாம் இருக்கிறோம் என்றால்

             இறைவனும் இருக்கிறான்!”

            இதைப் படித்து முடித்துவிட்டுக் கண்களை மூடிக் கொண்டேன். நெஞ்சில் நிம்மதி நிரம்பிற்று. மூச்சு சுகமாக இருந்தது.

Tuesday, June 21, 2022

பூர்ணிமைக் கிண்ணம்

 

’குணா’ என்றொரு திரைப்படம் (1991). அதன் கதை ஆன்மிகக் குறியீடுகளைப் பயன்படுத்தி எழுதப்பட்ட ஒன்று.

            குணா சிறுவனாக இருக்கும்போதே அவனின் அப்பா அவனையும் அவனின் தாயையும் நிர்க்கதியாக விட்டுவிட்டு எங்கோ போய்விடுகிறார். சூழ்நிலை அவனின் தாய் மனோன்மணியை வேசை ஆக்கிவிடுகிறது. அப்படி வளரும் அவனுக்குத் தன் பிறப்பு அழுக்கானது என்னும் சிந்தனை மனப்பிறழ்வை ஏற்படுத்துகிறது. குணசீலம் கோயிலில் சங்கிலியால் கட்டிப் போடப்படுகிறான். எனவே “குணா” என்பதே அவன் பெயராகிவிடுகிறது. குணாவுக்கு அவனின் சிற்றப்பன் கள்ளச் சாவியால் பூட்டுகளைத் திறக்கும் வித்தையைக் கற்றுத் தருகிறான்.


            
பிறகு குணா ஒரு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெறுகிறான். அங்கே வினோதமான பைத்தியங்கள் இருக்கின்றன. பக்திப் பரவசம் நிரம்பிய பித்தர் ஒருவரும் இருக்கிறார். அவர் தன்னை அபிராமி பட்டர் என்று பாவித்துக் கொள்கிறார். குணா சிவபெருமானின் அம்சம் என்றும் அவன் பௌர்ணமி இரவில் அபிராமியைத் திருமணம் செய்துகொண்டால் அவனின் அழுக்கு நீங்கித் தூய்மை ஆகிவிடுவான் என்றும் அவர் குணாவின் மனத்தில் பதிய வைக்கிறார். (பௌர்ணமி என்பது இப்படத்தில் மிக முக்கியமான குறியீடாகத் தொடர்ந்து வருகிறது.)

            கோயில் கருவூலத்தைத் திருடுவதற்காகச் சிற்றப்பனும் அவனின் நண்பர்களும் துறவி போல் வேடமிட்டுக்கொண்டு குணாவை அங்கே அழைத்துச் செல்கின்றனர். அபிராமி அங்கே வருவாள் என்று சிற்றப்பன் அவனிடம் சொல்கிறான். அப்போது, அண்மையில் தன் தந்தையை இழந்தவளும் அறுபது கோடி ரூபாய் சொத்துக்கு ஒரே வாரிசுமான யுவதி ஒருத்தி அன்னதானம் இடுவதற்காகக் கோயிலுக்கு வருகிறாள். தற்செயலான சமிக்ஞைகள் தனக்கு அடையாளம் காட்டுவதாகப் புரிந்துகொள்ளும் குணா அந்த இளம் பெண்ணையே அபிராமி என்று மனதிற்குள் வரித்துக் கொள்கிறான். கோயிலில் நடக்கும் திருட்டுக் கலவரத்தில் நகையையும் அவளையும் தூக்கிக் கொண்டு காரில் தப்பிவிடுகிறான்.

            ’மதிகெட்டான் சோலை’ என்னும் மலையில் உள்ள பாழடைந்த தேவாலயம் ஒன்றில் சில காலம் அவளைத் தங்க வைக்கிறான். தானும் அவளும் சிவனும் சக்தியும் என்று அவளிடம் சொல்கிறான். அவனின் பிதற்றல்களால் அவள் எரிச்சல் அடைகிறாள். அவனிடம் இருந்து தப்பித்துப் போவது எப்படி என்று சிந்திக்கிறாள். ஒருகட்டத்தில், தன் தந்தையின் காரியதரிசி தன்னைக் கொன்றுவிட்டு சொத்து முழுவதையும் சுருட்டிக்கொள்ள நினைக்கிறான் என்பது அவளுக்குத் தெரிகிறது. மனிதர்கள் அனைவரும் பதவி, பணம், காமம் ஆகிய பித்துப் பிடித்து வாழ்கிறார்கள் என்பதையும் குணாவின் மனப் பிறழ்வுக்குள் தூய காதல் இருப்பதையும் உணர்கிறாள்.

            தன்னை ஒரு திருடன் என்று கருதி விரட்டி வரும் காவலர்களிடம் இருந்தும் பணத்துக்காகக் கொலை செய்யத் துடிக்கும் பகைவரிடம் இருந்தும் தப்பிக்க குணா தன் நாயகியுடன் மலையுச்சியில் இருக்கும் குகைக்குப் போய்விடுகிறான். அங்கும் அவனைத் தேடி வரும் காவலரும் பகைவரும் செய்யும் தாக்குதலில் தப்பிதமாக நாயகி இறந்துவிடுகிறாள். அந்த மரணத்தை அவனால் நம்ப முடியவில்லை. இந்த உலகத்தை விட்டே போனால்தான் அவளுடன் வாழ முடியும் என்று முடிவு செய்தவனாக அவளின் உடலைத் தூக்கிக்கொண்டு மலையுச்சியில் இருந்து பள்ளத்தில் பாய்கிறான். அப்போது வானில் பௌர்ணமி இலங்குவதைக் காட்டியபடி திரைப்படம் முடிகிறது.

            உருவம் உள்ளத்தில் பதிந்துவிட்டால் அதை அழிப்பதுதான் எவ்வளவு கடினமாக இருக்கிறது! அதிலும் அந்த உருவத்தை தெய்விகத்தின் குறியீடாக வரித்துவிடும்போது அதை அழிப்பது சாத்தியமே இல்லாமல் போய்விடும். குணாவின் கதை இதையும் உணர்த்துகிறது.


            
ராமகிருஷ்ண பரமஹம்சர் காளி பக்தராக இருந்தார். காளி தேவியின் உருவம் அவரின் உள்ளத்தில் மிக உறுதியாகப் பதிந்து போயிருந்தது. தோத்தாபுரி அவருக்கு யோகப் பயிற்சி அளித்தபோது தியானத்துக்குள் அவரால் மூழ்கிச் செல்ல முடியவில்லை. கண்களை மூடினால் போதும், சமாதி நிலையை அடையவிடாமல் காளியின் உருவம் குறுக்கே நின்றது. அந்த உருவத்தை வெட்டிவிட்டு முன்னே செல்லும்படி தோத்தாபுரி அவரிடம் கூறினார். ‘வாள் எங்கே?’ என்று கேட்ட ராமகிருஷ்ணரிடம் தோத்தாபுரி சொன்னார்: “எந்தக் கற்பனையில் இருந்து உன் காளியை உருவாக்கினாயோ அதே கற்பனையில் இருந்து வாளெடுத்து அவளை வெட்டு!” பிறகு காளி வெட்டப்படுவதாக ராமகிருஷ்ணர் கற்பனை செய்துகொள்ளத் தோதாக அவரின் நெற்றியில் தோத்தாபுரி ஒரு கண்ணாடிச் சில்லு கொண்டு கீறினார். உருவத்தைத் தாண்டிய பிறகுதான் நிர்க்குண பிரம்மத்தின் யோக நிலை அவருக்கு சித்தித்தது என்கிறது அவரின் சரிதை.

            ”ஸ்தூலம் கடப்பதே பாலம் கடப்பது” என்கிறார் சூஃபி மகான் ஷாஹ் மதார் ஆலிம். ஆனால் காரியத்தில் அதைச் சாதிப்பது எப்படி? ’சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’ என்பதை யாம் அறிவோம்.

            இன்னொரு அழகான நிகழ்ச்சியும் நினைவுக்கு வருகிறது.



            ஹரிவன்ஷ் லால் பூஞ்சா ஓர் அத்வைத ஞானி. ‘பாப்பாஜி’ என்று அழைக்கப்படுகிறார். ரமண மகரிஷியின் தொடர்பே அவரை ஞான நிலைக்கு இட்டுச் சென்றது. ரமணரிடம் தான் பெற்ற வழிகாட்டல்கள் பற்றி அவர் பேசும்போது ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறார். அப்போது பாப்பாஜிக்கு இளம் வயது. அவர் கிருஷ்ண பக்தியில் மூழ்கியிருந்தார். அவரின் கண் முன்னே ஸ்தூல வடிவமாகவே கிருஷ்ணன் தோன்றும் தரிசனங்களை அவர் அடைந்திருந்தார். திருவண்ணாமலைக்கு அவர் வந்தபோது ஒருமுறை அவர் மலையின் அப்பக்கம் போய் வெகு நேரம் கழித்து வந்தார். அவர் எங்கே போயிருந்தார் என்று ரமணர் விசாரித்தார். கிருஷ்ணன் தோன்றியதாகவும் அவனுடன் விளையாடிவிட்டு வருவதாகவும் பாப்பாஜி சொன்னார். ‘இப்போ கிருஷ்ணன் எங்கே?’ என்று ரமணர் கேட்டார். ‘அவன் மறைந்துவிட்டான்’ என்றார் பாப்பாஜி. அப்போது ரமணர் செய்த உபதேசம்தான் பாப்பாஜியை அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது: “எது தோன்றவும் மறையவும் செய்கிறதோ அது சத்தியம் அல்ல, இறைவன் அல்ல. அது உன் மனக் கற்பனையின் நீட்சிதான். பார்த்தவன் இங்கே இருக்கிறாய். பார்க்கப்பட்டவன் எங்கே? அவன் இப்போது இங்கே இல்லை. பார்த்த நீ இப்போது இங்கே இருக்கிறாய். பார்த்தவன் யார் என்று அறி!”

            உருவங்கள் தோன்றி மறைகின்றன. அவை எதுவும் இறைவன் இல்லை. அவை இறைவனை வெளிப்படுத்தும் வாயில்கள் ஆகலாம். ஆனால், அவையே இறைவன் ஆகிவிடாது.

            இறைவனுக்குத் தோற்றமும் மறைவும் இல்லை. அவனுக்கு உருவம் இல்லை. அவன் எப்போதும் மாற்றமின்றி நிலையாக இருக்கிறான்.

            எல்லாம் சரி. என்றாலும் உருவத்தை விட்டுவிடுவது அவ்வளவு எளிதாக இல்லையே? எத்தனை எத்தனை உருவங்கள் உள்ளத்தைக் கவர்கின்றன, வனத்தில் தோன்றும் வைகறை நேரத்துப் பூக்களைப் போல், அந்தப் பூக்களின் இதழ்களில் மின்னும் பனித்துளிகளைப் போல்.

            பூக்கள் தோன்றி மலர்ந்து உதிர்ந்து மறையலாம். ஆனால் பூ என்னும் தொல் படிமம் ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு பூவிலும் அதையேதான் தரிசிக்கிறோம். உண்மையில் நம் மனத்தைக் கவர்வது பல பூக்கள் அல்ல; அந்தத் தொல் படிமமான ஒற்றைப் பூவே இந்த அனைத்துப் பூக்களின் வழியாகவும் நம்மை ஈர்க்கிறது.

            உன்னதமான ஓர் ஒற்றைப் படிமத்தைத் தேடித்தான் உருவங்கள் அனைத்தையும் உள்ளம் சலிக்கிறது போலும்.

            உருவம் அற்ற இறைவனை நீ எப்படி தரிசிப்பாய்? ஓர் உருவத்தில்தான் அவன் வெளிப்பட்டாக வேண்டும். “மதுவே போதை தருகிறது, கோப்பை அல்ல; எனினும், கோப்பை இன்றி மதுவை அருந்த முடியாது,” என்கிறார் மகாகவி இக்பால்.

            ’கோப்பையே வேண்டாம்’ என்று உதறித் தள்ளுபவனும்கூட கூஜா என்னும் ஒரு பெரிய கோப்பையில் இருந்துதான் பானத்தைப் பருகுகிறான்.



             படைப்புக்கள் என்னும் சிறு கிண்ணங்கள் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்ட பின்னரும், இறைத்தூதர் என்னும் கூஜா தனக்கு வேண்டும் என்று கோருகிறார் இக்பால்:

                                    ”தேடப்படும் சத்தியமே!

                                     எப்போதேனும் வா,

                                     உருவமெனும் ஆடையை

                                     உடுத்திக்கொண்டு!

                                     பக்திப் பரவசத்தில்

                                     பலநூறு சிரவணக்கம்

                                     துடித்தபடி உள்ளன

                                     அர்ப்பணமாகும்

                                     என் நெற்றியில்!”

            ஆனால், அதே அல்லாமா இக்பால் அவர்கள் வேறு விதமாகவும் நமக்கு அறிவுரை சொல்கிறார்.

            கூஜாவில் இருந்தே குடிப்பவரும்கூட அடையாத போதையை லைலா என்னும் எளிய கிண்ணத்தில் பருகி அடைந்தவன் மஜ்னூன். எனவேதான், பேரின்பக் காதலுக்குக் குறியீடாக அவனின் காதலை ஞானிகள் கையாள்கின்றனர். அவனும் இலக்கை அடைந்தவன் அல்லன்; லைலாவே அவனுக்குத் தடையாக நிற்கிறாள் என்கிறார் இக்பால். அவர் நமக்குச் சொல்கிறார்:

                                    ”ஊரைத் துறந்துவிட்டான் மஜ்னூன்,

                                     நீ பாலைவனத்தையும் துறந்துவிடு!

                                     சத்தியத்தின் தரிசனம் வேண்டுமெனில்

                                     லைலாவையும் துறந்துவிடு!

                                     பிரசங்கியே!

                                     துறவின் முழுமைதான்

                                     இலக்கை அடைகிறது.

                                     இவ்வுலகைத் துறந்துவிட்டாய்,

                                     எனில் இப்போது

                                     மறுவுலகையும் துறந்துவிடு!”

            இதற்கு மஜ்னூன் என்ன சொல்வான்? ”ஈருலகையும் நான் எப்போதோ விட்டுவிட்டேன். ஆனால், லைலா ஈருலகையும் சேர்ந்தவள் இல்லையே?” என்றுதான் கேட்பான்.