Thursday, June 23, 2022

கஜல் விகடன்

 

உருது மொழியின் உன்னதமான கவிதை வடிவம் கஜல். காதலைப் பேசுவதில் கஜலுக்கு இணையான வேறொரு கவிதை வடிவம் இருக்க முடியாது.

            ஆனால், சோக உணர்வு இழையோட கஜல் பாடிக் கொண்டிருந்த கவிஞர்களின் மத்தியில் அங்கதத்தை ஆயுதமாக ஏந்தி வந்தவர் அக்பர் அல்லாஹாபாதி. ஆம், அவர் கஜல் உலகின் விகடகவி.

            அவர் தன் கவிதைகளை வாசித்த போது ’கஜலில் நகைச்சுவையா?’ என்று உருதுக் கவியுலகம் புருவம் உயர்த்தி வியந்து பார்த்தது.



            அக்பர் அல்லாஹாபாதியிடம் காதல், ஆன்மிகம், உளவியல் என்று கஜல் கவிதை மரபின் அத்தனை பொருண்மைகளும் இருந்தன. ஆனால், அவர் தன் சிந்தனைகளை எள்ளலும் பகடியுமாக வெளியிட்டார்.

            கஜலின் உள்ளீடுகள் க்ளீஷே என்னும் தேய்வழக்குகளாகி மலிந்து போனபோது அக்பர் அல்லாஹாபாதி அவற்றை மறுபரிசீலனை செய்யும் நோக்கில் பகடி பண்ணி அதிர்ச்சி வைத்தியம் பார்த்தார் என்று சொல்லலாம்.

            கஜல் கவிதைகளில் ஆங்கிலச் சொற்களை அள்ளித் தெளிப்பதில் தனி ஆற்றல் அவருக்கு இருந்தது. அது அவரின் கவிதைகளில் அங்கதச் சுவையை அதிகப் படுத்திற்று. ஆங்கிலேயரின் ஆட்சியில் மேற்கத்திய கலாச்சாரம் இந்தியர்களிடம் பரவி வந்ததை அவர் கவிதைகள் அவ்விதம் பதிவு செய்துள்ளன. எனவே அவரை “லிசானுல் அஸர்” (காலத்தின் நாவு) என்று கவிஞர்களும் ரசிகர்களும் போற்றினார்கள்.     

            அவரின் பரந்துபட்ட கவியுலகில் இருந்து சில விகடத் தெறிப்புகளை இங்கே தமிழாக்கித் தருகிறேன்.

            ”உன் பிரிவே என் மரண சாசனம்” என்று புலம்பும் காதலர்களை அக்பர் பார்க்கிறார். அவருக்கும் காதலின் பிரிவு அனுபவம் இருக்கிறதாம். ஆனால், அவரின் புலம்பல் வேறு விதமாக இருக்கிறது:

            ”யாருக்கோ வந்திருக்கலாம்

             காதலின் பிரிவில் மரணம்.

             எனக்கோ தூக்கம் கூட

             வரமாட்டேன் என்கிறது!”

            ஆங்கிலத்தில் tongue என்னும் சொல் மொழியையும் குறிக்கிறது, அதைப் பேசும் நாவையும் குறிக்கிறது. Mother tongue என்றால் தாய்மொழி என்று அர்த்தம். தமிழிலும் நாவன்மை என்றால் மொழித் திறன் என்று பொருள். யாரேனும் துடுக்காகப் பேசினால், “என்ன, நாக்கு நீளுது?” என்று கேட்கிறோம். உருதுவிலும் ஸபான் என்னும் சொல் மொழியையும் நாவையும் குறிக்கிறது. இந்த சிலேடையை வைத்துக் கொண்டு பகடி ஆடுகிறார் அக்பர்:

            ”நான் சொன்னேன்:

             பல்வேறு மொழிகளில் பண்டிதன் நான்;

             ஜெர்மன் ஃபிரெஞ்சு லத்தீன் ஆங்கிலம்

             அனைத்திலும் என் திறமையை

             அகில உலகமே அறிந்துள்ளது!

             ஒரு வாயாடி ‘மிஸ்’ என்னிடம்

             விவாதத்தில் இறங்கினாள்,

             அவளின் நாக்கு நீண்டது.

             அப்போது மேகத்தில் மின்னல் அடித்தது

             வானில் இருந்தது வெண்ணிலா.

             அவள் சொன்னாள்:

             இந்த நாவை நீ அடையவில்லை எனில்

             வாழ்வின் ருசியை அறியவே மாட்டாய்!”

            மஜ்னூனுக்கு லைலாவின் மீது காதல் வந்தது எப்போது என்று தெரியுமா? பால்ய வயதில்! ஆரம்பப் பள்ளியில் இருவரும் படித்துக் கொண்டிருந்தபோது. காவியம் அப்படித்தான் சொல்கிறது. எதார்த்தத்தில் அப்படி நிகழ்ந்தால் என்ன ஆகும்? இதோ அக்பர் சொல்கிறார்:

            ”காதல் எனக்குத் தீய விதி ஆனது.

             எல்லா முயற்சிகளும் செய்த பின்னும்

             A,B என்பதற்கு அப்பால் ஏறவில்லை எனக்கு,

             B.A வரை சென்றுவிட்டார்

             என்னுடன் படித்த எல்லாரும்.”

            அவர் காலத்தில் பி.ஏ என்பது பென்னம் பெரிய படிப்பாக இருந்தது. ஒருவன் கல்லூரியில் சேர்ந்து விட்டான் என்று தெரிந்தாலே பெரிய இடத்திலிருந்து பெண் தர போட்டி போட்டுக் கொண்டு வரிசையில் நிற்பார்கள் என்ற சூழ்நிலை இருந்தது. அப்படித்தான் அக்பருக்கும் ஒரு பீபி (மனைவி) வாய்த்தாளாம். பிறகென்ன, ’வாழ்வின் ருசி’யை அனுபவிக்க ஆரம்பித்தார். அவர் சொல்கிறார்:

            ”பி.ஏ தேரினேன்,

             விரும்பியபடி

             பீபி கிடைத்துவிட்டாள்.

             அது மதியின் காரியமாக இருந்தது,

             இது விதியின் காரியமாக முடிந்தது!”

            1920-களில் பி.ஏ, எம்.ஏ ஆகிய படிப்புகள் உயர்ந்த மதிப்புடன் இருந்த சூழலை அவரின் இன்னொரு அங்கதக் கவிதை தெளிவாகக் காட்டுகிறது. அதில் லைலா – மஜ்னூன் என்னும் மரபான கவிதைக் குறியீட்டை அக்பர் கையாள்கிறார்:

            ”மஜ்னூனிடம் சொன்னார் லைலாவின் அம்மா:

             ’எப்படியேனும் எம்.ஏ தேரிவிடு,

             லைலாவை உனக்கே கட்டி வைக்கிறேன்,

             தயங்காமல் உனக்கு மாமியார் ஆவேன்.’

             மஜ்னூன் சொன்னான்:

             ’என்ன பேசுகின்றீர்?

             காதலன் எங்கே? காலேஜ் எங்கே?

             இயல்பாகக் கிளம்பும் உணர்ச்சிகள் எங்கே?

             செயற்கையாய் திணிக்கப்படும் சிந்தனைகள் எங்கே?

            கிழவியே! உனக்கு என்ன ஆனது?

            மான் தன் முதுகில் புல்லுக்கட்டு சுமக்குமா?”

            இலட்சியங்களுக்காகத் தன் உயிரையே அர்ப்பணித்து தியாகி (ஷஹீத்) என்னும் புகழை அடைபவர்கள் இருக்கிறார்கள். நாட்டுக்காக உயிர் நீத்த பகத் சிங் “ஷஹீதே வதன்” (தேசத் தியாகி) என்றே போற்றப்படுகிறார். அக்பர் அல்லாஹாபாதியும் அந்த உயரிய நிலையை அடைந்திருக்கிறாராம். ஆனால், அவர் ஷஹீத் ஆனது போரில் அல்ல, அக்கப்போரில். அது எப்படி என்று அவர் சொல்கிறார்:

            ”எந்தவொரு மன்னனின் படையிலும்

             வீழ்ந்துபடவில்லை அக்பர்;

             மனைவியிடம் சண்டை போட்டே

             அவனொரு தியாகி ஆகிவிட்டான்!”



            அப்படி என்ன விபரீதம் நிகழ்ந்தது? என்று நாம் பதறுகிறோம். வாழ்வின் எதார்த்தம் ஒன்றை அக்பர் நம்மிடம் தெரிவிக்கிறார்:

            ”காதலன் காதலி என்னும் உறவில்

             எவ்வளவு இன்பம் இருந்தது முன்பு!

            எங்கே போனது அது,

            கணவன் மனைவி என்று ஆன பின்பு?”

            கணவனும் மனைவியும் காதலர்களாய் இருக்கும் வரம் அனைவருக்கும் கிடைப்பதில்லை. கணவன் மனைவி என்பது ஏதோ அலுவல் பணி போல் அலுத்துப் போனால் அதிலே எப்படி இன்பம் இருக்கும்?

            எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெளிவாகச் சொல்ல வேண்டும் எனில் அவர் ஒரு தீர்க்கதரிசியாகத்தான் இருக்க வேண்டும். அடுத்த நொடி என்ன நிகழும் என்று நமக்குத் தெரியாது. வாழ்க்கையிலேயே இந்த நிலை என்றால், மரணத்துக்குப் பின் என்ன நடக்கும் என்று தன்னால் சொல்ல முடியும் என்கிறார் அக்பர். நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதை அவர் சொல்லியும் விடுகிறார்:

            இறந்துபோன பின் என்ன நடக்கும்

உனக்கு நான் சொல்லவா?

பிரியாணி தின்பார்கள் எல்லாரும்

ஓதுவார்கள் உனக்கு ஃபாத்திஹா!

 

            ஆம், முஸ்லிம் சமூகத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அவருக்குப் புண்ணியம் சேர்க்கும் பொருட்டு ஃபாத்திஹா என்னும் சிறப்புப் பிரார்த்தனை ஒதி உற்றார் உறவினர்களுக்கு விருந்து போடுவது மரபு.



            நாட்டு நிலைமை எப்படி இருக்கிறது என்பதையும் அவரிடம் கொஞ்சம் கேட்கலாம். தன்னலமற்ற தலைவர்கள் எல்லாரும் வரலாறு ஆகிவிட்டார்கள். இப்போதெல்லாம் வெளிப் பகட்டை வைத்தே தலைவர் ஆகிவிடுகிறார்கள். ஆடையே ஆளைத் தீர்மானிக்கிறது; பேச்சே மக்களை மயக்கிவிடுகிறது. அக்பர் சொல்கிறார்:

            ”கோட்டும் சூட்டும்

             அணிந்து கொண்டான்,

             ‘மிஸ்டர்’ ஆகிவிட்டான்.

             பொதுக்கூட்டத்தில்

             வாய் திறந்தான்,

             ‘லீடர்’ ஆகிவிட்டான்!”

            எல்லாத் தொழில்களிலும் ஊழல் மலிந்துவிட்டது உண்மைதான். அக்பர் வழக்கறிஞர் பணியை ஒரு பிடி பிடிக்கிறார்:

            ”வழக்கறிஞர் பிறந்தார்.

             சாத்தான் கூறினான்:

             இன்று நானும்கூட

             அப்பா ஆகிவிட்டேன்!”

            ஐரோப்பியக் கலாச்சாரம் இந்தியர்களிடம் பரவி வந்த காலகட்டத்தைத் தன் கவிதைகளில் அவர் பதிவு செய்திருக்கிறார். அந்த மாற்றம் அவருக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது. ஆனால் அதையும் அங்கதச் சுவையுடன்தான் பாடியிருக்கிறார். எதிர்காலத்தில் முஸ்லிம் பெண்களிடம் ’பர்தா’ என்னும் திரையும் இந்துப் பெண்களிடம் ’கூங்கட்’ என்னும் முக்காடும் இல்லாமல் போய்விடும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தப் பொருண்மையில் ஒரு கவிதை:

            ”முகத்திரை இன்றி சில பெண்கள்

             கண் முன் காட்சி ஆனார்கள்;

             சமுதாயத்தின் வெட்கக்கேடே! என்று

             நிலத்தில் சாய்ந்துவிட்டார் அக்பர்.

             ‘எங்கே போனது உங்கள் முகத்திரை?’

             என்று கேட்டார் அவர்களிடம்.

             ‘ஓ அதுவா? ஆண்களின் அறிவின் மீது

             விழுந்து கிடக்கிறது’ என்றார்கள்.”

            தமிழுக்கு ஈழத்துக் கவிஞர் மஹாகவி போல, மலையாளத்துக்கு குஞ்ஞுண்ணி போல, உருது மொழிக்கு அக்பர் அல்லாஹாபாதி என்று சொல்லலாம்.

            அவரின் கவிதைகளில் கேலியும் கிண்டலும் மட்டும்தான் இருக்கிறது என்று எண்ணி விடாதீர்கள். அவரின் காத்திரமான அரசியல் கவிதைகளையும் ஆழமான ஆன்மிகக் கவிதைகளையும் நாம் பார்க்க வேண்டும்.

             இந்திய விடுதலைக்கான போராட்டம் கொதி நிலைக்கு வந்து கொண்டிருந்த காலம். 1919-இல் பிரிட்டிஷ் அரசு ஒருவித சமரசத்துக்கு வந்தது. ஆங்கிலேயரின் மேற்பார்வையில் இந்தியர்களுக்கு சில அதிகாரங்கள் வழங்கப்படும் என்று அது சொன்னது. அதற்கு மாண்டேக் – செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தம் என்று பெயர். அவ்வளவுதான், இந்தியத் தலைவர்களுக்கு இடையே பதவிச் சண்டைகள் மூள ஆரம்பித்தன. அக்பர் அல்லாஹாபாதி அதை இப்படிக் குத்திக் காட்டினார்:

            ”சகோதரர்கள் சண்டையில்

             சட்டையைக் கோர்த்துவிட்டார்கள்!

             சுயராஜ்யம் வந்துவிட்டது!”

            மேற்கத்திய கல்வியும் கலாச்சாரப் பரவலும் இந்தியர்களுக்கு நன்மை செய்யாது என்று அக்பர் அல்லாஹாபாதி மிக உறுதியாக நம்பினார். இந்திய இளைஞர்கள் கல்லூரிகளில் சேர்ந்து பி.ஏ., எம்.ஏ முதலிய பட்டப் படிப்புகளை மேற்கொள்வதில் அவருக்குக் கிஞ்சிற்றும் விருப்பம் இல்லை. கவிதைகளால் அதைக் கண்டனம் செய்தார்.



            ”ஓ! நம் தேசத்தின் பெருமிதமான இவர்களை

             வருணிக்க என்னிடம் வார்த்தைகள் ஏது?

             பட்டதாரி ஆனார்கள்

             பணி செய்து முடித்தார்கள்

             ஓய்வூதியம் பெற்றார்கள்

             செத்துப் போனார்கள்!”

என்று அவர் ’நித்திய தரித்திரர்’ ஆன ’கலக மானிடப் பூச்சி’களின் வாழ்க்கையை வரைந்து காட்டுகிறார்.

            ”இந்தியா இஸ்லாத்தின் வீடாகவும் இல்லை

             இலக்குவன ராமரின் நாடாகவும் இல்லை

            நாம் அனைவரும் ஆங்கிலேயரின் அடிமைகள்

            இந்தியா இப்போது ஐரோப்பாவின் மண்டி!”

என்று தீ உமிழவும் அவரின் பேனாவுக்கு ஆற்றல் இருந்தது.

            அக்பர் அல்லாஹாபாதி சூஃபித்துவத்தில் ஈடுபாடு காட்டியிருக்கிறார். சூஃபித்துவம் இறைஞானம் அடைவதற்குக் காதலையே வழியாக முன் வைக்கிறது. அதாவது, ஆன்மீக அனுபவங்களின் வழியாகவே இறைஞானம் அடைய முடியும்; தத்துவச் சிந்தனைகள் இறைஞானம் தராது என்று சொல்கிறது. அக்பர் அல்லாஹாபாதி தனது கவிதைகளில் இதனைப் பல இடங்களில் வலியுறுத்துகிறார்.

            ”தத்துவவாதியின் விவாதங்கள்

             இறைவனை அடைவதில்லை.

             அவன் முடிச்சுகளை

 அவிழ்த்துக்கொண்டே போகிறான்,

 முடிவேதும் கிடைப்பதில்லை!”

சூஃபி கவிதைகள் காதலின் மொழியில் பெண்ணைப் பேசுவது போன்ற தோரணையில் இறைவனைப் பற்றிப் பேசிவிடுகின்றன. அதற்கு அக்பரிடம் இருந்து ஓர் அழகான எடுத்துக்காட்டு இது:

அறிந்தேன் கடைசியில்

 நீ யார் என்று;

 வரிந்து கொள்ளலாம்

 இதயத்தில் உன்னை,

 புரிந்து கொள்ள முடியாது

 புத்தியால் ஒருபோதும்.”

இதே கருத்தைத் தரும் இன்னொரு கவிதை:

“அறிவுக்குள் விழுகின்ற ஒன்று

 எல்லையற்ற ஒன்றாய்

 எப்படி இருக்க முடியும்?

 மனத்தின் புரிதலில்

 வந்துவிடும் ஒருவன்

 இறைவனாய் எப்படி

 இருக்க முடியும்?”

            ’உலகில் இரு; உலகைச் சேர்ந்தவனாக இருக்காதே’ என்று ஞானிகள் சொல்கிறார்கள். அக்பர் அந்த நிலைக்கு மிக இலகுவாகக் கனிந்து விட்டார் என்று தெரிகிறது. அவர் சொல்கிறார்:

            ”உலகில் இருக்கிறேன்,

             அதைத் தேடுபவனாக நானில்லை;

             சந்தையைக் கடந்து போகிறேன்,

             அதில் எதையும் வாங்கும் எண்ணமில்லை!”

            இந்த ஆன்மிகச் சிந்தனைகள் எல்லாம் மரபாக சூஃபி ஞானிகள் சொல்லி வருவதுதானே என்று நினைத்தபடி அக்பரின் கவிதைகளை வாசித்துக்கொண்டு போனால் இதுவரை யாரும் சொல்லாத கோணத்தில் சில சிந்தனைகளை அவர் வெளிப்படுத்துகிறார்.

            உள்ளத்தை விட்டும் உருவங்களை நீக்க வேண்டும் என்றுதான் சூஃபி ஞானிகள் சொல்வார்கள். ஆனால், உருவங்கள் இறைவனின் கைவண்ணத்தைக் காட்டுகின்றன, அவனது ஆற்றலின் அத்தாட்சிகளாக இருக்கின்றன என்று அக்பர் பார்க்கிறார். இறைவனுக்கு ’முஸவ்விர்’ (’உருவமளிப்போன்’) என்றொரு திருநாமம் இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் அத்தனை உருவங்களும். இந்தக் கோணத்தில் கூர்ந்து நோக்கும்போது அக்பருக்கு ஓர் அற்புத தரிசனம் கிடைக்கிறது:

            ”இறைவா!

             எத்தகைய எத்தகைய

             உருவங்களை நீ

             உண்டாக்கி இருக்கிறாய்!

             உருவம் ஒவ்வொன்றும்

             உள்ளத்தில் ஏந்திக்கொள்ள

             தகுதியைப் பெற்றுள்ளதே!”

            இறைவன் இருக்கிறான் என்று எப்படி அறிவது? படைப்புக்களை ஆராய்ந்தால் படைத்தவன் இருப்பது உறுதியாகும் என்று ஞானிகள் சொல்கின்றனர். அதை அக்பர் அல்லாஹாபாதி சொல்லும் விதத்தில் அழகும் அழுத்தமும் இருக்கிறது:

            ”ஒவ்வொரு அணுவும்

             இறைவனின் ஒளியால்

             பிரகாசிக்கின்றது.

             ஒவ்வொரு மூச்சும் சொல்கிறது

             நாம் இருக்கிறோம் என்றால்

             இறைவனும் இருக்கிறான்!”

            இதைப் படித்து முடித்துவிட்டுக் கண்களை மூடிக் கொண்டேன். நெஞ்சில் நிம்மதி நிரம்பிற்று. மூச்சு சுகமாக இருந்தது.

2 comments:

  1. மிகச்சிறாந்த பகிர்வு, எப்போதும் தங்களின் ஆக்கங்களை பிரமித்து பார்ப்பவன் நான். உங்கள் பிரபஞ்சக் குடில் மிகப்பெரிய இளைப்பாறுதல் கொடுக்கும் தளம். அக்பர் அலஹாபாதி அவர்களை இக்கட்டூரை எனக்கு சிறப்பாக அறிமுகம் கொடுத்தது மட்டுமல்ல உங்கள் அரி-முக எழுத்தால் நான் சொக்கி வாசித்து வசியப்பட்டேன்.
    மகிழ்ச்சி. ரமீஸ் சாஹெப்.

    ReplyDelete