Thursday, November 16, 2023

இது ஒரு திட்டமிட்ட…

 


            பிள்ளை பெற்றுக்கொள்ளாமல் இருக்கும் தன் உரிமையைப் பற்றி ஒரு பெண் ஜக்கி வாசுதேவிடம் கேள்வி தொடுத்தார். ஜக்கி தன் பதிலை இப்படி முடித்தார்: “நீங்கள் பிள்ளை பெற்றே ஆக வேண்டும் என்றும் சொல்லமாட்டேன், பிள்ளை பெறவே கூடாது என்றும் சொல்லமாட்டேன். நீங்கள் பிள்ளை பெற்றாலும் சரி, பெறாவிட்டாலும் சரி, அந்த முடிவு பிரக்ஞை பூர்வமாக இருக்கட்டும்.”

            இந்தியா விடுதலை அடைந்த காலம் தொட்டே மக்கள் தொகை குறைப்பு என்னும் சிந்தனை அதிகரித்து வந்திருக்கிறது, மக்கள் தொகையும் பெருகிக்கொண்டேதான் வந்துள்ளது. எண்பதுகளில் “குடும்பக் கட்டுப்பாடு” என்னும் பிரச்சாரத்தை அரசே முடுக்கி விட்டிருந்த சூழலில் ஜெயகாந்தன் அதற்கு எதிரான சிந்தனையை முன் வைத்தார். அதை முன்னிட்டு, 1981-இல் “கரு” என்னும் குறுநாவல் ஒன்றையும் எழுதினார்.


            
”இந்தியாவின் செல்வமும், பலமும் அதன் மக்கள் தொகையே ஆகும்! அந்தச் செல்வங்களை அனாதைகளாக நிறுத்தியிருப்பது தனியுடைமைச் சமூக அமைப்பாகும்” என்று கம்யூனிஸ்ட் சிந்தனைப் பள்ளியின் கோணத்தில் மிகத் தெளிவாகச் சொன்ன ஜெயகாந்தன், அரசின் கு.க பிரச்சாரத்திற்குப் பின்னால் ‘அந்நியப் பணம்’ இருப்பதாகச் சொல்லி அதை வெளிநாட்டின் திட்டமிட்ட சதி என்று காட்டினார்.


            
”கூடுகள், அடிமைகள், வெறுக்கத்தக்க இனத்தவர், அழிக்கப்பட வேண்டிய தாழ்ந்த தேசத்தவர் என்று தாம் கருதியோரை ஒழித்துக் கட்டுவதற்கு நாஸிகள் கைக்கொண்ட ‘கருவறுப்புச் சிந்தாந்தம்’ இந்தியர்களை மிக வஞ்சகமாய் ஏமாற்றி அழிக்க முயல்கிற அசட்டுத்தனம் ஒருபோதும் வெற்றி பெறாது. எனினும் சமூக – தார்மிக நெறிகளை மானங் கெடுத்து மானிட உணர்ச்சிகளைக் ‘காயடித்து’ விட இதனால் முடிகிறது!” என்று மிகக் காட்டமாகவே சாடினார். இதில் அவர் சொல்லியிருக்கும் இரண்டு கருத்துக்கள் இன்று கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை என்று படுகிறது.

            அவர் சொன்னது போலவே ‘கருவறுப்புச் சிந்தாந்தம்’ என்னும் அசட்டுத்தனம் வெற்றிபெறவில்லை. அதை, நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுள்ள மக்கட் தொகைக் கணக்கு காட்டுகிறது.

            ’சமூக – தார்மிக நெறிகளை மானங் கெடுத்து…” என்று சொல்லியிருக்கிறாரே அதை வேறொரு கோணத்திலும் சிந்திக்க முடிகிறது.

            அரசு தனது கு.க பிரச்சாரத்தின் முன்னெடுப்பாக என்பதை “கரு” நாவலில் ஓரிடத்தில் சித்திரிக்கிறார் ஜெயகாந்தன்: ”’நிரோத் உபயோகியுங்கள்! ஆண்களுக்கானது! மூன்றின் விலை 15 பைசாக்கள்’ என்ற விளம்பரம் ஒவ்வொரு எழுத்தும் ஆளுயரத்துக்கு அவனுக்கு வழியெல்லாம் அலறி அலறி அறிவுரை கூறுவதுபோல் இருந்தது.”



            ”காதலுக்கு வழிவைத்துக் கருக்கதவம் சாத்த ஒரு கருவி செய்வோம்” என்று ’முழங்கினார்’ பாரதிதாசன். ’புதியதோர் உலகம் செய்வோம்’ என்பதன் ஒரு பகுதி போலும். அந்தக் கருவியும் வெளிநாட்டவரின் கண்டுபிடிப்பாகத்தான் இங்கே வந்து சேர்ந்தது.

            சுவர் விளம்பரம் ஒன்று நியாபகம் வருகிறது: “ஆணுறையைப் பயன்படுத்து; பெண்ணுரிமையை நிலைநிறுத்து.” எவ்வளவு பூடகமான சொல்லாடல்கள் கொண்ட விளம்பரம்! இது திரித்துப் புரிந்து கொள்ளப்படும் சாத்தியங்களே இன்று அதிகம் என்பதை மறுக்க முடியுமா?

இதன் நோக்கத்தில் நேர்மை இருந்ததா இல்லையா என்பது வேறு விஷயம். பாரதிதாசனும்கூட தம்பதிகளைக் கருத்தில் கொண்டுதான் மேற்கண்ட வரிகளைப் பாடியிருக்கிறார் என்று நம்புகிறேன். ஆனால், இககருவி, ஜெயகாந்தன் சொன்னதுபோல், சமூக – தார்மிக நெறிகளைச் சீர்குலைத்து விடவில்லையா? இதையும் இன்று சிந்திக்க வேண்டியிருக்கிறது.

            ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர், ’காஜா மலை’ப் பள்ளிவாசலில் ஒரு வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் போது, பிரசங்கம் பண்ணிய இறைஞானி கபீர் ஹஜ்ரத் அவர்கள் இந்த ஆணுறை பிரச்சாரத்தை விமர்சித்துப் பேசினார். அப்போது அவர் சொன்ன ஒரு சிறிய சொற்றொடர் என் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது: “இது திட்டமிட்ட விபச்சாரம்.”  

No comments:

Post a Comment