Monday, September 12, 2022

தீரா உள்ளூற்று

 


         மிகவும் அரிதாகவே நல்லதொரு இசைப் பாடல் கிடைக்கிறது. வரிகள் நன்றாக இருந்தால் இசை தேராது, இசை சிறப்பு என்றால் வரிகள் தேயும், இசையும் வரிகளும் தரம் காட்டினால் காட்சி சகிக்காது. மூன்றும் சிறப்பாகவும் பொருத்தமாகவும் அர்த்தமுள்ளதாகவும் அமைந்து திருப்தி தருவது அரிதினும் அரிது. அவ்வகையில், 2018-ஆம் ஆண்டு வெளியான 96 என்னும் திரைப்படத்தில் உள்ள ;லைஃப் ஆஃப் ராம்’ என்னும் இசைப் பாடலே அதன் பின் இந்நாள் வரை நான் ’அண்மையில் கேட்ட’ அருமையான பாடலாகத் தொடர்கிறது.

            இது ஆன்மிகச் சாயல்கள் கொண்ட ஒரு பாடல். ஆன்மிகத்தில் பரிச்சயம் உள்ள அனைவருக்கும் இதை அடையாளம் காண்பதில் சிரமம் ஏதுமில்லை. இது வாழ்க்கையைச் சொல்லும் பாடல் என்றால் அனைவருக்கும் புரியும். வாழ்வைப் பிரிந்து ஆன்மிகம் ஏது?

            எத்தனை உள்ளங்கள் இந்தப் பாடலை எப்படியெல்லாம் கொண்டாடின என்பதை இப்பாடலுக்கான பின்னூட்டங்களை வாசித்தால் அறியலாம். “Introvert anthem” என்று ஒருவர் போற்றியிருந்தார். ஹாரிஸ் ஹரி என்றொருவர் வியந்து எழுதியதை இங்கே சுட்ட விரும்புகிறேன்: “ஒரு பாடல், தனிமையில் இருக்கும் ஒருவனை சட்டென எழுப்பி, ‘இது உன் வாழ்க்கை இல்லை, எழுந்து செல் உன் வாழ்க்கையை நோக்கி’ என அழைத்துச் செல்கிறது என்றால், எவ்வளவு பெரிய படைப்பு அந்தப் பாடல் என்பது, இதனைக் காணும் என்னைப் போன்ற தனிமை விரும்பிகளுக்குப் புரியும்.”



            இந்தப் பாடலை எழுதியவர் யார் என்று விசாரித்தேன். அவன் கவியுலகின் பேரரசோ சிற்றரசோ அல்லன். ஆனால், கவிச்சித்தன் என்று அழைக்கலாம் என்னும்படி இப்பாடலை எழுதியிருக்கிறார் கார்த்திக் நேத்தா.



இசை அமைத்தவர் கோவிந்த் வசந்தா என்று அறிந்தேன். ஆச்சரியம். இவரை நான் எட்டாண்டுகளுக்கு முன்பே அறிவேன். கோவிந்த் மேனன் என்று அப்போது பெயர். கப்பா டி.வி என்னும் யூடியூப் சேனலில், தாய்க்குடம் பிரிட்ஜ் என்னும் குழுவில் இவரது வைலின் வாசிப்பில் வெளியான கோர்வைகளைக் கேட்டு ரசித்து நண்பர்களுக்கும் பகிர்ந்திருக்கிறேன். அப்போதே இசை இவருக்கொரு தியானம் என்பதை உணர்ந்தேன். இப்போது இப்பாடலில் அவரின் இசைக் கற்பனையில் அந்த தியான ருசி வெளிப்பட்டுள்ளது.

             இப்பாடல் தமிழிலும் தெலுங்கிலும் தனித்தனியாக உருவாக்கப் பட்டுள்ளது. இரண்டுக்கும் இருவேறு மெட்டுக்கள், இருவேறு காட்சிப்பாடுகள், இருவேறு பாடல் வரிகள். (சுந்தரத் தெலுங்கினில் இசைக்கும் பாடல் மெட்டிற்கு எழுதப்பட்ட தமிழ் பிரதி ஒன்றும் இருக்கிறது. அதையும் சேர்த்தே பேச வேண்டும்.)

            காட்சியைப் பற்றி இங்கே விரிவாகப் பேசப் போவதில்லை. இயற்கையின் அழகுகளை வெவ்வேறு இடங்களில் – ஐந்திணை நிலங்களில் – அவன் பயணித்துக் காணும் காட்சிகளில் எல்லாம் – “காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்னும் பாரதியின் வரிகளும், மக்கள் திரளில் தன்னைக் கலந்தபோதும் தனிமையாக அவன் செல்வதில் – “மக்கள் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள் … … … மானுட சமுத்திரம் நான் என்று கூவு” என்னும் பாரதிதாசன் வரிகளும் நினைவுக்கு வருகின்றன. (நான் ஒருமுறை இயற்கை அழகு கொழிக்கும் இடம் ஒன்றில் அவ்வாறு எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் “LIFE OF RAMeez” என்று எழுதி நண்பர்களுக்கு அனுப்பினேன். சித்த சேட்டை!)

            இனி, இப்பாடலின் வரிகளில், ஞானிகள் மற்றும் பெருங்கவிகள் சொன்ன கருத்துக்களுடன் ஒப்பிடக் கூடிய இடங்களைத் தொட்டுக் காட்ட விழைகிறேன்.

            ”வாழா என் வாழ்வை வாழவே

             தாழாமல் மேலே போகிறேன்

             தீரா உள்ளூற்றைத் தீண்டவே

             இன்றே இங்கே மீள்கிறேன்

             இங்கே இன்றே ஆழ்கிறேன்”

            ”வாழாதொரு வாழ்வைத் தீண்டித்

            தெளிவில் பூப்பேன்”

 

            உன்னுள் ஆழ்ந்து செல்வதே இங்கு விட்டு விடுதலை ஆகி மேலே செல்வதாகும். “தீரா உள்ளூற்றைத் தீண்டவே…” என்னும் வரியில் மவ்லானா ரூமியின் சாயல். அடுத்த வரியே சூஃபித்துவத்தில் இருந்து ஜென்னுக்குத் தாவுகிறது. நிகழ் கணத்தில் விழிப்புடன் இருத்தல் என்பது ஜென்னில் வலியுறுத்தப்படும் அடிப்படைகளுள் ஒன்று. உண்மையில் மனித மனம் நிகழ்காலத்தைத் தவற விட்டுவிட்டு நேற்றிலும் நாளையிலும் அலைகிறது. எனவே நிகழ்காலத்துக்கு அதைக் கொண்டு வந்து நிறுத்துவது என்பது மீள்வதுதான். பின்னர், ஆழ்வது தியானம்.

            இப்பாடல் நெடுகிலும் மீண்டும் மீண்டும் ஆழ்தல், ஆழம் ஆகிய சொற்கள் இடம் பெறுகின்றன. தன்னுள் ஆழும் தியான நிலையை இப்பாடல் பேசுகிறது. அங்கே வெளியே இருக்கும் வெளிச்சமோ இருளோ இல்லை; இருளும் ஒளியும் ஒன்றான ஒரு நிலை இருக்கிறது; அங்கே, வெளியே இருக்கும் கால நேரம் இல்லை, அதற்கே உரிய ஒரு காலம் அல்லது காலமின்மை இருக்கிறது. இதைச் சொல்லும் வரிகள்:

            ”ஆழ் என்பது மெய்ஞான போதம்

             போல் என்பது பகட்டு வாதமே

             நாள் என்பதும் பொய்யான காலம்

             இப்போதில் எல்லாமும்

             கேள் என்குதே தெளிந்த ஞானமே

             கேட்க கேட்க ஓசை மீறிக் கேட்கிறதே”

            இசையமைப்பில் பாடும்போது இந்த வரிகள் வேறொரு கட்டமைப்புக் கொண்டுள்ளன. முதல் மூன்று வரிகளின் பின்னும் “இப்போதில் எல்லாமும்” என்பது மீள்வரியாக (refrain) வருகிறது. அதுவும், “இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும்” என்று உள்-மீள் சொல் (inter–refrain) கொண்டிருக்கிறது. இதை, ((இப்போதில் X 3) எல்லாமும்) X 3) என்று கணிதச் சூத்திரம் போல் எழுதலாம். இந்தக் கட்டமைப்பு இசையின் தாளக் கட்டுக்கு மெருகூட்டுகிறது.

            ”யாரோ போல் நான் என்னைப் பார்க்கிறேன்

             ஏதும் இல்லாமலே இயல்பாய்

             சுடர் போல் தெளிவாய்”

            ”காணாதொரு வெளிச்சத்தில்

             எனை நானே, அட! முழுதாய்ப் பார்ப்பேன்”

            சாட்சி பாவம்! (saakshi bhaavam). தன்னை விலகி நின்று கவனித்தல். கோட்பாடுகளின் வழியாக அல்ல. சுயத்தின் சுடர் என்னும் அகப் பார்வை கொண்டு பார்த்தல்.

            ”நானே இல்லாத ஆழத்தில்

             நான் வாழ்கிறேன்;

             கண்ணாடியாய்ப் பிறந்தே

             காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன்”

            இறைமையின் சுயம் மட்டுமே உண்மையில் இருக்கின்றது. இருப்பது ஒரே ஒரு ’நான்’ மட்டுமே. அது பலகோடி ’நான்’களாகக் காட்சி தருகின்றது. படைப்பைக் கண்ணாடி ஆக்கிப் பிரதிபலிக்கின்றது. இன்னனம் ஞானியர் உரைப்பர். ”வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்…” என்று தொடங்கும் பாரதியின் பாடலை இங்கே நினைவு கூர்கிறேன்.

            ”இரு காலின் இடையிலே

             உரசும் பூனையாய்

             வாழ்க்கை போதும் அடடா”

            வாழ்க்கை இயல்பானது, எளிமையானது, சிக்கலற்றது என்பதைச் சொல்லும் இவ்வரிகளில் ஒரு ஜென் ஹைகூ இருக்கிறது. இதை ஒரு ஜப்பானிய ஜென் கவி எழுதியிருந்தால் “கால்களின் இடையில் / உரசும் பூனை / வாழ்க்கை” என்று எழுதியிருப்பான்.

            ”நானே நானாய் இருப்பேன்

             நாளில் பூராய் வசிப்பேன்

             போலே வாழ்ந்தே

 சலிக்கும் வாழ்வை

 மறக்கிறேன்

 வாகாய் வாகாய் வாழ்கிறேன்

 பாகாய் பாகாய் ஆகிறேன்”

பாவனைகள் பண்ணாமல், நடிக்காமல் வாழும் வாழ்க்கை எத்தனை பேருக்கு வாய்க்கிறது? லௌகீக வாழ்வின் கெட்டிக்காரத்தனம் என்னும் பேரில் யார் யார் போன்றோ பாவித்து போலி செய்து வாழும் முறையைப் பலரும் ஏற்றிருக்கின்றனர். Personality -  ஆளுமை – என்பதன் மூலச் சொல்லான persona என்பதற்கு முகமூடி என்று பொருள். அரிதாரம் இன்றி வாழ்க்கைக்கு உண்மை ஆக வாழ்வோர் மிகச் சிலரே. வாழ்க்கையின் நீர்மைக்குத் தக வாகாய் வாழ உள்ளம் கல்லாய் இல்லாமல் பாகாய் உருகியிருக்க வேண்டும்.

“நான் என்பது யாரோ பெருந்திரளினிலே? – ஏடே!

 நான் என்பதை வீசி எழுந்தேனே மனமே!

 தான் என்பது போகும் பெருங்கணத்தினிலே – கூவி

 வாவென்றொரு வாழ்க்கை

 சிறு குரலாய் அருளாய்ப் பேச”

இழக்க வேண்டிய நான் என்பதொன்று உண்டு. வெளியே இருந்து கொடுக்கப்பட்டிருக்கும் போலியான அடையாளங்களைத் தான் என்று காணும் நான் அது. அதைத் துறக்கும் கணத்தில் ஓர் அக எழுச்சி நிகழ்கிறது.

“(அ)தோ காற்றோடு வல்லூறு தான் போகுதே

 பாதை இல்லாமலே அழகாய்

 நிகழே அதுவாய்”

பறத்தல் மட்டுமல்ல, பறவையே ஒரு நிகழ்வுதான். அதன் உள்ளுணர்வே அதன் பாதை. ”வரவும் போகவும் / இந்த நீர்ப்பறவைகள் / சுவடுகள் வைப்பதில்லை / பாதையிற் செல்வதில்லை” என்கிறார் ஜென் ஞானி டோஜன்.

”திமிலேறி காளை மேல் தூங்கும் காகமாய்

 பூமி மீது இருப்பேன்

 புவி போகும் போக்கில்

 கை கோர்த்து நானும் நடப்பேன்”

சித்தன் போக்கு சிவன் போக்கு அல்லவா? அதாவது, இறை நாட்டமே ஞானியின் நாட்டம். இறைவன் நிகழ்த்துவதை எல்லாம் பொருந்திக் கொளல், இயைந்து செலல். ”பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணை போல் ஆருயிர் முறை வழிப் படூஉம்” என்கிறார் கணியன் பூங்குன்றன். அதாவது, ஓடி வரும் பெரிய நதியின் விசையின் படி தெப்பம் போகும். ”நின் படகை வெறுமை ஆக்கி உலகெனும் நதி கட” என்கிறார் சுவாங்சூ.

”ஆறறிவென்றே அலட்டாமல்

 அலட்டாமல் எளிதாய் நானும்

 ஓர் உயிர் என்றே இருப்பேனே.

 குழம்பாமல்

 யார் உடைத்தாலும்

 சிரிக்கின்ற பொம்மை போலே

 நான் என் இயல்பில் இருப்பேன்”

உன் படகை வெறுமை ஆக்குவதற்கான வழி இது. நீ மனிதன் என்னும் உணர்வு, ஏனைய உயிர்களை விட மேலானவன் என்னும் எண்ணம் கர்வமாக, ஆணவமாக மாறிவிடக் கூடும். அறிவை வைத்து உன் மேன்மையை அளக்காதே. உலகில் வாழும் பலகோடி உயிர்களில் நீயும் ஓர் உயிர் என்று மட்டும் உணர்ந்து இரு. அப்போது ஆணவம் இல்லாமல் எளிமையாய் இருப்பாய். அப்போது, வெளியிலிருந்து உன் மீது தாக்கும் எதுவும் உன் இயல்பை பாதிக்காத நிலையில், உன் இயல்பில் இருப்பாய்.

“ஓடும் நதியின் மேலே

 உட்காரும் தட்டான் போலே

 லேசாக அமர்ந்தே பறப்பேனே”

அத்தனை லாலவகம். எதையும் பற்ற வேண்டும் என்றோ, கைப்பற்ற வேண்டும் என்றோ நோக்கம் இல்லை. “ஒரு புல்லின் இதழையும் அசைக்காமல் காட்டினுள் நுழைகிறான்; ஒரு சிறு அலை கூட எழுப்பாமல் நீருக்குள் நுழைகிறான்” என்று சொல்கிறது பாடியோன் பெயர் அறியப்படாத சீனத்துக் கவிதை ஒன்று.

”பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன்

 இப்போது கண்ணாக;

 பேருண்மையில் கலந்து போகிறேன்

 இப்போது ஒன்றாக;

 பேரன்பிலே தள்ளாடி பூத்தேன்

 இப்போது நன்றாக;

 பேராற்றலில் கரைந்து போகிறேன்

 பூத பேத வாத மோகம் மறைகிறதே”

உண்மையின் ஓர் ஒளிச்சுடர் காண்பதற்கும் எவ்வளவு தொலைவு போக வேண்டியிருக்கிறது! பேரெல்லையில் உட்கார்ந்து பார்ப்பது என்றால் என்ன? பேரெல்லை எது? இந்தப் பிரபஞ்சத்தின் எல்லையா? சித்தம் அந்த எல்லை வரை போய்த்தானே சத்தியத்தை தரிசிக்க முடியும்? பேரெல்லை, பேருண்மை, பேரன்பு, பேராற்றல் என்று இவ்வரிகள் ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தையும் தன்னுள் கொண்ட ஏக நிலையைப் பேசுகிறது. அந்நிலை உணர்ந்தார்க்கு அதன் பின் ஐம்பூதங்களும் அவை கலந்த மயக்கத்தால் ஆகியிருக்கும் பற்பல பொருட்களும் வேறு வேறு என்று பார்க்கும் பேதப் பார்வை மறைந்து விடுகிறது. “ஒன்றாகக் காண்பதுவே காட்சி” என்கிறார் ஔவையார். “எல்லா பூதங்களிலும் சமமாக இருப்பவன் பரமேஸ்வரன்; அழிபவற்றில் அழியாததை எவன் காண்பானோ அவனே காட்சியுடையான்” (13:27) என்கிறது பகவத் கீதை.

பாடலின் இரண்டாம் சரணத்தை இங்கே முழுதாய்த் தருகிறேன். அதன் விளக்கங்களுக்கு மேற்சொன்ன செய்திகளே போதும் என்று கருதுகிறேன்:

“நான் எனக்குள்ளே

 அசைந்தேனே ஊஞ்சல் போலே

 யார் எனை அசைத்தே ரசித்தாரோ?

 பேரலைமேலே

 விளையாடும் காகம் போலே

 யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்?

 சீறும் புலியைப் பார்த்தே

 சிரிக்கின்ற சிசுவைப் போலே

 கோபங்கள் மறந்தே சிரிப்பேனே.

 பதறாமல்

 பூவிழும் குளத்தின் மேலே

 உருவாகும் வளையல்போலே

 நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே

 கதறாமல்

 வாகாய் வாகாய் வாழ்கிறேன்

 பாகாய் பாகாய் ஆகிறேன்

 தோதாய் தோதாய்ப் போகிறேன்

 தூதாய் தூதாய் ஆகிறேன்

 போதாய் போதாய்ப் பூக்கிறேன்

 காதாய் காதாய்க் கேட்கிறேன்

 தாலாட்டும் காலம்

 தலையாட்டும் ஞானம்

 தாய் போல் பாடுதே

 ஆரோ ஆரோ ராரிரோ…”

இந்த வரிகளின் முதல் வார்த்தைகளைக் கவனித்துப் பாருங்கள். எல்லாம் நெடில் ஓசை கொண்டு ஆரம்பிக்கும் சொற்கள். நான், யார், பேரலை, சீறும், கோபங்கள், பூவிழும் – இப்படி எல்லாமே நெடில் ஓசை கொண்டு தொடங்குவன. இது இப்பாடலின் மெட்டுக்கு மிகவும் அவசியமான ஒன்று. அப்படியும் வரிகளின் கவித்துவமும் கருத்தும் அற்புதமாக வந்திருக்கின்றன. சிற்சில இடங்களில் உளறல் போன்றும் தொனிக்கின்றன. உன்னதக் கவிதை உளறல் நிகர்க்கும்; ஞானியர் பித்தரைப் போல்வர்.



”ஏதாரெதுரைனா எதுவெலுதுண்டோ அடிகானா…” என்று தொடங்கும் தெலுங்குப் பிரதிக்கான பாடலை ஸ்ரீவெண்ணல சீதாராம சாஸ்த்ரி எழுதியுள்ளார். அதன் ஆங்கிலப் பெயர்ப்பின் வழி அதனைத் தமிழாக்கம் செய்துள்ளேன்:

என் முன் விரியும் எந்த ஒரு பாதைக்கும்

இலக்கு என்னவென்று கேட்டதில்லை நான்.

வாழ்க்கை எனை இட்டுச் செல்லும்

வழியிலே போகின்றேன்.

தேடல் எதுவும் எனக்கில்லை என்றபோதும்

கோடி பொருட்கள் எனைச் சூழ்ந்து நின்றபோதும்

ஆடாத அசையாத கற்சிலை ஒன்று

மெல்ல கனவில் கரைவது போல் ஆகின்றேன்.

யாரேனும் நான் யாரென்று கேட்டால்

மாறவில்லை, முன்பிருந்த ஆளேதான் நான் என்பேன்

மரணம்வரை ஒரு கேள்வியாய் நானிருப்பேன்

மாற்றம் செய்யாதே என்னில்

என்று காலத்திடம் கேட்கிறேன்.

தனிமையில் கிடக்கிறேன் நான் என்று

என்னைத் துரத்தி வந்து

எவரும் கூற வேண்டாம்;

இன்னும் பல ஆயுளுக்கு

என்னவளின் நினைவுகளை

என்னுள் வைத்திருக்கின்றேன்

என்பதை யார் அறிவார்?

யாரின் துணையால் ஓடுகிறது

இந்நாட்களில் என் மூச்சு?

ஆறுதல் என் உள்ளத்துக்கு

அளிப்பது இங்கே யார் பேச்சு?

புது நாள் புலர்ந்து ஒளிரும்போது

புதிய நானும் பிறக்கின்றேன் மீண்டும்,

காலம் என்னைப்

புதிதாகப் பெற்றதைப் போல்.

என் கதையை முடிவின்றி

சொல்லியபடி இருக்கின்றேன்

முடிவேதும் இல்லாத கதைதான் நான்.

 

காற்றில் ஏகுமொரு பருந்தினைப் போல்

என்றன் கால்கள் எங்கும் நிற்பதில்லை.

 

முகவரியும் பதிலும் இல்லாத கடிதமொன்று

மௌனத்தில் கதறுவதை

ஏன் என்று வியக்கின்றேன்

உலகம் எனைச் சுற்றிப்

பின்னியதோர் தனிமையை

எனதென்று அழைக்கின்றேன்.

நான் சொல்வது புரிகிறதா?

நானும் என் நிழலும் ஆன

இருவருமே போதுமாவோம்

வேறொருவர் துணை வேண்டேன்.

முன்பு தாயின் மடியில் அப்போது

பின்பு தூரத்து நம்பிக்கைகள் இப்போது

என்று,

நிலா என்னை ஈர்க்கிறது.

தொலைவில் இருக்கிறது என்றாலும்

நிலவின் ஒளி என்னைச் சூழ்ந்து

தாலாட்டித் தூங்க வைக்கும்

தாய்மையை உணர்கிறேன்

ஆரோ ஆரோ ராரிரோ…”

கார்த்திக் நேத்தா தமிழுக்கு எழுதிய பாடல் வரிகளின் உயரத்தை தெலுங்குப் பிரதியின் வரிகள் தொடவில்லை என்று எனக்குப் படுகிறது.

“வானம் எனக்கொரு போதி மரம்” என்று வைரமுத்து எழுதியபோது தமிழ்த் திரைப்பாடல் துறை வேறு உடை மாற்றிக் கொண்டது என்று சொல்வார்கள். அது போல் இப்பாடலும் எண்ணத் தகும்.

 

 

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஓர் ஆயிரம் பூஜ்ஜியங்கள் போட்டாலும் அவற்றின் மதிப்பு 0 தான்.
    அவற்றிற்கு முன் ஒரே ஒரு எண் 1 சேர்க்காத வரை.

    1 ஆக இறைவன் இருக்கிறான்
    பூஜ்ஜியங்களாக நாம் இருக்கிறோம்

    ReplyDelete
  3. மிக அருமை மிக அருமை ஒரு பாடலை இவ்வளவு உள்ள அர்த்தங்கள் விளங்கி அதை மற்றவருக்கு புரியும் வண்ணம் விரிவாக எடுத்து வைத்தமைக்கு நன்றிகள் கோடி

    ReplyDelete