Friday, August 13, 2021

வள்ளல்

 சூஃபி கதை நேரம்...

(இத்ரீஸ் ஷாஹ் அவர்களின் “Stories of the Dervishes" என்னும் நூலின் தமிழாக்கம் இன்று நிறைவடைந்தது. மொத்தம் எண்பத்திரண்டு கதைகள். அவற்றில் ஒருசில கதைகளைத்தான் இங்கே அவ்வப்போது ‘சூஃபி கதை நேரம்’ என்னும் தலைப்பில் பகிர்ந்து வந்தேன். தமிழாக்கத்தின் கோப்பினை நண்பர் உவைஸுக்கு இன்று மின்னஞ்சல் செய்தேன். இன் ஷா அல்லாஹ், விரைவில் ‘சீர்மை’ பதிப்பகம் அதனை “தர்வேஷ்களின் கதைகள்” என்னும் நூலாக வெளியிடும். நூல் வந்ததும் அனைத்துக் கதைகளையும் நீங்கள் வாசிக்கலாம். இதோ இன்றைக்காக அதிலிருந்து கதை எண்#80)


புகாராவில் பணக்கார வள்ளல் ஒருவர் இருந்தார். கண்ணுக்குத் தெரியாத அதிகார அடுக்கில் அவர் மேல் நிலையில் இருந்ததால் உலக அதிபர் என்று அவர் அழைக்கப்பட்டார். தன் கொடைகளுக்கு அவர் ஒரு நிபந்தனை விதித்திருந்தார். நோயாளிகள், விதவைகள், அனாதைகள், முதியோர்கள் இத்தியாதி மக்களில் ஒவ்வொரு நாளும் ஒரு வகையினருக்கு மட்டும் அவர் தங்கத்தை வாரி வழங்கினார். ஆனால் யாராவது வாயைத் திறந்து பேசினால் அவருக்கு ஒன்றுமே வழங்கப்படாது.

ஆனால், எல்லோராலும் மௌனமாக இருக்க முடியவில்லை.

ஒரு நாள், வழக்கறிஞர்கள் கொடை வாங்கும் முறை வந்தது. அவர்களில் ஒருவனால் தன்னைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. மிக நேர்த்தியாகவும் திறமையாகவும் தன் கோரிக்கையை அவன் முன்வைத்தான்.

அவனுக்கு ஒன்றுமே வழங்கப்படவில்லை.

ஆனால் அவன் தன் முயற்சியை இத்துடன் நிறுத்தவில்லை. அடுத்த நாள் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. எனவே அந்த வழக்கறிஞன் கை உடைந்தவன் போல் நடித்தபடி அங்கே போய் நின்றான்.



ஆனால், அதிபருக்கு அவனை அடையாளம் தெரிந்துவிட்டது. எனவே ஒன்றும் கொடுக்கப்படாமல் அவன் திருப்பி அனுப்பப்பட்டான்.

அடுத்த நாளே அவன் வேறு வேடம் இட்டான். தன் முகத்தை மூடிக்கொண்டு வேறு தினுசான மக்களில் ஒருவனாகச் சென்றான். மீண்டும் அடையாளம் காணப்பட்டு விலக்கப்பட்டான்.

மீண்டும் மீண்டும் அவன் முயற்சி செய்தான். ஒருமுறை பெண்ணாக வேடம் அணிந்துகொண்டும் போனான். ஆனால் பயன் இல்லை.

கடைசியில் அவன் ஒரு வெட்டியானைப் பிடித்து தன் மீது கோடித் துணியைச் சுற்றி கீழே கிடத்தும்படி ஏற்பாடு செய்தான். ’வள்ளல் அந்த வழியாகப் போகும்போது என்னை ஒரு பிணம் என்று கருதுவார். என் அடக்க காரியத்துக்காக அவர் ஏதாவது உதவி செய்வார். அதில் உனக்கு ஒரு பங்கு தருகிறேன்” என்று அவன் வெட்டியானிடம் சொன்னான்.

அப்படியே செய்யப்பட்டது. அதிபரின் கையில் இருந்து ஒரு பொற்காசு கோடித் துணி மீது போடப்பட்டது. எங்கே அதை வெட்டியான் முதலில் எடுத்துவிடுவானோ என்னும் அச்சத்தில் சட்டென்று வழக்கறிஞன் அதை வௌவிக்கொண்டான். அவன் வள்ளலிடம் சொன்னான்:  ’நீங்கள் உங்கள் கொடையை எனக்கு மறுத்தீர்கள். இப்போது அதை நான் அடைந்துவிட்டேன்!”

“நீ சாகும் வரை என்னிடம் இருந்து எதையும் நீ பெற முடியாது,” என்றார் அந்த வள்ளல். “’சா முன் சா’ – மூத்து கப்ல அன்தமூத்து என்று சொல்கிறார்களே, அந்த ஞான வாசகத்தின் அர்த்தம் இதுதான்.”



இறப்பிற்குப் பிறகுதான் அருட்கொடை வருகிறது. அதற்கு முன் அல்ல. மேலும், அருட்கொடையைப் பெற்றுத் தரும் அந்த ’இறப்பு’ம்கூட ஒருவர் உதவி செய்தால்தான் சாத்தியப்படுகிறது.

db

            மவ்லானா ரூமி எழுதிய மஸ்னவி காவியத்தின் நான்காம் நூலில் இடம்பெறும் இக்கதையைத் தனியே விளக்கத் தேவையில்லை.

            எனினும், இகக்தை குறித்து தர்வேஷ்கள் தரும் விளக்கம்: சில கொடைகள் நாடுவோரால் ‘பறிக்கப்பட’ முடிந்தாலும், இக்கதையில் வரும் புகாராவின் வள்ளலைப் போன்றதொரு ஆசானிடம் இருந்து பெறப்படுகின்ற திறன் (”தங்கம்”) என்பது வெளித்தோற்றத்துக்கு அப்பாலும் ஆற்றல் உள்ளதாக இருக்கிறது. அந்த பிடிடாத ஆற்றலைத்தான் “பரக்கத்” என்று அழைக்கிறோம்.

No comments:

Post a Comment