Sunday, September 5, 2021

இரவினும் பெரிதே

               பேராசிரிய நண்பர் ஒருவர் சிறிய அறுவை சிகிச்சை முடித்து வீடு திரும்பியிருந்தார். நானும் மகனும் பார்க்கச் சென்றிருந்தோம்.

தனது அறுவை சிகிச்சை அனுபவம் பற்றி அவர் சொன்ன குறிப்பு ஒன்று சிந்தனையைத் தூண்டுவதாக இருந்தது. சிகிச்சையின் போது தனக்கு உடல் கடந்த அனுபவம் (out of body experience) ஏற்பட்டதாக நண்பர் சொன்னார். ஆனால், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யும் காட்சி இல்லை. வீடு ஒன்றை மேஸ்திரி கொத்தனார் முதலியோர் இடித்துச் செப்பணிட்டுக் கட்டும் காட்சி தோன்றியது என்றார்.

வீடு மனித உடலுக்கு ஒரு குறியீடுதான் என்று அவரிடம் நான் சொன்னேன். “கலீல் ஜிப்ரான் தனது “Prophet” (தீர்க்கதரிசி) என்னும் நூலில் இதனைக் குறிப்பிடுகிறார்: Your house is your larger body (உங்கள் வீடு உங்களின் பேருடல்). அதனால், Your body is your smaller house - உங்கள் உடல் உங்களின் சிற்றில்.”

வீட்டில் நமக்கேயான பிரத்யேக அறை இருக்கும் அல்லவா? நம் மனமே நமது அந்தரங்க அறை என்பது ஒரு கவித்துவ உருவகம்.


தமிழின் அற்புத அதிசய எழுத்தாளரான ஜெயமோகனின் ‘சங்கச் சித்திரங்கள்’ நூலில் ‘கரிய பேரலைகள்’ என்றொரு கட்டுரை. அதில் குறுந்தொகையின் 387-ஆம் பாடலை முன்வைத்து மனித மனம் இரவை என்னனம் எதிர்கொள்கிறது என்று பேசுகிறார். “கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே” என்பது அப்பாடலின் ஈற்றடி. “இரவெனும் வெள்ளம் கடலினும் பெரிது” என்பது பொருள்.



கட்டுரையில் ஜெ.மோ-வின் இரண்டு வரிகள் என் சிந்தையைக் கவர்ந்தன:

”ஒருவனின் அறை அவன் மனமேதானோ?”

“நிழல்களில் இரவு பதுங்கி இருக்கிறது.”

மனம் சட்டென்று கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய கட்டுரை ஒன்றிற்குத் தாவியது. “அறைக்குள் அறை” என்பது தலைப்பு. ஜஃபர் கோரக்பூரி என்னும் உருதுக் கவிஞர் எழுதிய கஜல் ஒன்றைப் பற்றியது. அதன் முதல் அடியை ஜெ.மோ கட்டுரையில் ஓரக் குறிப்பாக எழுதினேன்: தின் கோ பீ அந்தேரா ஹே மேரே கம்ரே மேன்


கவிக்கோவின் மொழி பெயர்ப்பில் கஜலின் முதல் கண்ணி:

            பகலில் கூட

இருள் அதிகமாக இருக்கிறது

என் அறையில்

                        நிழல் கூட

                                    வருவதற்கு பயப்படுகிறது

                                    என் அறையில்

            கஜலின் கடைசி கண்ணி உருது கவிதை மரபில் இல்லாத புதுமையான ஒரு படிமத்தைக் காட்டுகிறது என்கிறார் கவிக்கோ:

                        திருடன்

எங்கே ஒளிந்திருக்கிறான்

எண்ணிப் பார்க்கிறேன்

                        இன்னும் ஓர்

                                    அறையிருக்கிறதோ

                                    என் அறையில்?

            ஜஃபரின் இந்த வரிகளைப் பற்றிக் கவிக்கோ அப்துல் ரகுமான்  கூறூகிறார்:

            ”மனம் என்ற அறைக்குள்ளேயே இன்னுமோர் அந்தரங்க அறை இருக்கிறது. அடிமனம். மனிதனின் கள்ளத்தனங்கள் எல்லாம் அங்கேதான் போய் ஒளிந்துகொள்கின்றன.”

            இரவு என்னும் வெள்ளம் கடலினும் பெரிது என்கிறாள் சங்கப் பாடலின் பெண். அவளின் அடிமனம் என்னும் அந்தரங்க அறை அந்த இரவினும் பெரிது.

No comments:

Post a Comment