Monday, August 27, 2018

மழைக்காற்று
























மழை பெய்கிறது
வாருங்கள்
என்றழைத்தாள்

எத்தனை முறை ஆனாலும்
பித்தனைப் போல்
மழையை ரசிப்பேன்
என்பதறிவாள்

கணினியை மூடினேன்
வாசற்படியில் இருவரும்
அமர்ந்துகொண்டோம்

வேறேதோ புதிய இடம் போல்
வேறேதோ பழைய காலம் போல்
சித்தத்தில் மழை
தித்தித்தது

எப்போது வரினும்
இடத்தின் தடத்தையும்
காலத்தின் குறிப்பையும்
துடைத்தழிக்கின்றது
மழை எனக்கு

தூறல் கிளர்த்தும்
ஈர வாசத்தில்
ஒருவித போதை

விண்ணும் மண்ணும்
விளையாடும்
பெருமுயக்கு அல்லவோ
மழை

நேராக மேகம் அனுப்பும்
அமிர்தத் துளிகளை
திசைகளில் எல்லாம்
சிதறடித்திருந்தது
கடுங்காற்று

’மழை வந்தாப்லதான் போங்க
காத்து கலைக்குது
நான் உள்ளே போறேன்’
என்றெழுந்து சென்றாள்

அழகிய மழையைக்
கலைத்தபடிச் சுழன்றடிக்கும்
அழகிய காற்றை
ரசிக்கத் தொடங்கினேன்

1 comment: