Tuesday, April 18, 2017

இஸ்லாமியக் கலையின் செய்தி - part 2

Related image
Jean Louis Michon

(1)  கலை : முஸ்லிம் வாழ்வின் ஒருங்கிணைந்த கூறு

குர்ஆனில், இறைவன் மனிதனைப் பற்றிச் சொல்கிறான், ’என்னை வணங்குவதற்காகவே அன்றி அவனை நான் படைக்கவில்லை’ (51:56). மேலும் சொல்லப்பட்டுள்ளது, “இறை ஞாபகம் மகத்தானது” (29:45). இதனால் அறியலாகிறது, மனிதனின் உண்மை நோக்கம் இறைவனை வணங்குவது. அதாவது, மனிதனின் உள்ளமை முழுவதும் அவனது படைப்பாளனுக்கான வழிபாடாகவும் தியானிப்பாகவும் இருக்க வேண்டும்.

தியானம் நினைவுகூர்தல் (திக்ரு, தத்கீர்) என்னும் கோட்பாடு இஸ்லாத்திற்கு அடிப்படை ஆகும். திக்ருல்லாஹ் – இறைநினைவு என்பது குர்ஆனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெயர்களில் ஒன்றாகும். மேலும் அப்பெயர் இறைத்தூதர் முஹம்மதுக்கும் கொடுக்க்ப்பட்டுள்ளது. அஃது ஏனெனில், அவரே குர்ஆனை பரப்பும் பொறுப்பு வழங்கப்பட்டவர் என்பதால் மட்டுமல்ல, ஆனால் அவரின் பண்பும் சொல்லும் போதனைகளும் – சுருங்கச் சொல்வதெனில் சுன்னாஹ் என்னும் நபிவழியைக் கட்டமைக்கும் அனைத்தும் – அவர் தனது ரட்சகனை எந்த அளவுக்கு நினைவு கூர்ந்தார், அந்த இடையறாத நினைவின் விளைவாக எந்த அளவுக்கு இறைநெருக்கம் பெற்றார் என்பதைக் காட்டுகின்றன என்பதாலுமாம்.

இறை நினைவில், இறை தியானத்திலான இந்தப் பிடிப்பு, ஏன் பித்தென்று கூட சிலர் சொல்லக்கூடும், தனிமனித முழுமையாக்கத்திற்கான காரணி மட்டுமன்று. அஃது சமூக வாழ்வுக்கும் கலை வளர்ச்சிக்குமான உந்து சக்தியாகும். இறைவனை அதிகமாக நினைவுகூர, முஸ்லிம் சமூகத்தின் உறுப்பினர்கள் சடங்கான தொழுகை நேரங்களில் மட்டும் இல்லாது அனைத்து நேரங்களிலும் அதற்கான சூழலில் தம்மை வைத்துக்கொள்வதற்குப் பாடுபடுதல் இன்றியமையாதது. அத்தகு சூழல் அழகும் அமைதியும் நிரம்பியதாய் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், அச்சூழலில் ஒருவர் சந்திக்கும் ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு பொருளும் (இயற்கையாயினும் செயற்கையாயினும்) திக்ரு என்னும் இறைநினைவுக்கான தருணமாகவும் உறுதுணையாகவும் இருக்கும்.

தனிமனித மற்றும் சமூகச் சூழலை நோக்க, அத்தகு சூழல் என்பது ஷரீஅத் (அனைவரும் கீழ்ப்படிய வேண்டியதான வெளிப்படுத்தப்பட்ட சமயச் சட்டவியல்) நடைமுறையால் அடையப்படுகிறது. எவ்வளவு தனிமனிதமோ அவ்வளவுக்குச் சமூகத் தன்மையுமான, ஐம்பெருங் கடமைகளும் தூய நடத்தை விதிகளும் கொண்ட இந்த சமயச்சட்டம் உம்மத் என்னும் சமூகத்தின் இதயத்தில் வேர்பிடித்துள்ளது.

புறவுலகின் இச்சூழல் ஆன்மிக உலகின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும் என்னும் கோரிக்கை எழும் தருணத்தில்தான், மிகச்சரியாக, ஒருவர் புனிதக்கலை என்பதன் களத்தினுள் நுழைகிறார். அந்தப் புனிதக் கலையைப் பற்றிச் சிந்தனையாளர் ஃப்ரிட்ஜாஃப் ஷுவான் கூறுகிறார், “அது முதலில் வேத வெளிப்பாட்டின் காட்சி மற்றும் கேட்டல் வடிவங்களாக இருக்கிறது. பின் அது அதன் இன்றியமையாத வழிபாட்டு வடிவமாக இருக்கிறது” (Fritjof Schuon, “Understanding Islam”, Ch.4).

Related image

இஸ்லாத்தின் கோட்பாடுகளை அழகியல் மொழியில் பெயர்த்தளிப்பதே கலைஞர்களின் பணியாகும். வேறு விதத்தில் சொல்வதெனில், மிகப் பிரம்மாண்டமான கட்டிடங்கள் முதல் அன்றாட எளிய புழங்கு பொருள் வரை அனைத்துக் கட்டமைப்பிலும் அலங்காரங்களாக இடம்பெற வல்ல வடிவங்களாகவும் சின்னங்களாகவும் இஸ்லாமியக் கோட்பாடுகளை அமைவாக்கம் செய்வதாகும். “அல்லாஹ் அழகன்; அவன் அழகை விரும்புகிறான்” (அல்லாஹு ஜமீலுன் யுஹிப்புல் ஜமால், அறிவிப்பு நூல்: முஸ்னத் அஹ்மத்) என்னும் ஹதீஸ், முஸ்லிம் அழகியலின் கோட்பாட்டு அடித்தளம் என்று கருதலாம்.

மனித உரிமைகளின் மேலாக இறைவனது உரிமைகளின் முற்றான ஆதிக்கம் உள்ளது என்பதை அடிக்கோடிட்டுரைக்கும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தின்படி, கலைப் படைப்பாக்கம் என்பது இறைவனிடம் மனிதனை இட்டுச் செல்லும் பாதையில் உதவியாய் இருக்குமாறு மனிதனில் இறைவன் வைத்ததொரு மனவியல்பே அன்றி வேறில்லை. இதனால், கலைஞன் என்பவன் இறைவனின் அடியார்களில் ஒருவனே தவிர விதிவிலக்கான வகையினன் அல்லன். எனவே அவன், சுயநலமற்ற சுயவிருப்பற்ற சேவையின் மூலம்  தான் சார்ந்த மரபினை தெள்ளத் தெளிவாக புலப்படுத்துவதில் சமூகத்தில் தனக்குள்ள பங்களிப்பை நிறைவேற்ற முனைய வேண்டும். எனவேதான், முஸ்லிம் கலைஞர்களில் ஒழுக்கங்களைப் பேணுதலுக்கும் அவர்களது கலைத்தொழிலுக்கும் இடையிலான உறவுநிலை எப்போதும் இருந்துள்ளது. நபி சொன்னார்கள், “உங்களில் ஒருவர் ஏதேனுமொன்றைச் செய்தால் அதனைத் தொடர்ச்சியாகச் செய்வதை இறைவன் விரும்புகிறான்”. இந்தப் போதனையைக் கலைஞர்கள், குறிப்பாக ஒவ்வொரு கலைத்துறையிலும் வாக்குறுதி பெற்று இயங்கி வந்த செவ்வியற்காலத்துச் சகோதர அமைப்புக்கள், முழுமையாக நிறைவேற்றியுள்ளார்கள் எனலாம்.

இஸ்லாத்தின் கலைப்படைப்பாக்கம் ஒருபோதும் புலனின்ப நுகர்வின் பொருட்டுச் செயல்படுத்தப்படுவதில்லை என்பது அதன் இன்னொரு பண்பாகும். அது தீர்க்கமான முடிவு நிலைகளை நோக்கிச் செல்வதாகும். நவீன மேற்குலகில் தூய கலை என்றும் கலை கலைக்காகவே என்றும் பயன்பாட்டுக் கலை அல்லது பயனுறு கலை என்றும் முதல் வகையானது அழகியல் உணர்வைத் தூண்டுதற்கென்றும் இரண்டாம் வகையானது ஏதேனுமொரு தேவையைத் தீர்ப்பதற்கென்றும் ஆகியுள்ளது போன்ற பாகுபாட்டினை இஸ்லாமியக் கலை ஒருபோதும் கண்டதில்லை. இஸ்லாமியக் கலை எப்போதுமே இயங்குதலாக (functional) இருந்துள்ளது, குர்ஆன் வசனங்கள் மெக்காவில் உள்ள கஃபாவை மூடியிருக்கும் கறுப்புத் துணியில் தைக்கப்பட்டுள்ள நிலை அல்லது ஏதேனுமொரு தர்காவின் கட்டிடங்களில் செதுக்கப்பட்டுள்ள நிலை போல் அதன் பயன்பாடு நேரடியாக ஆன்மிகம் சார்ந்ததாக இருப்பினும் சரியே, பூப்பின்னலும் ஜியோமிதி சார்ந்த சித்திரவேலைகளும் கொண்டு அலங்கரிக்கப்பட்ட கிண்ணங்கள் அல்லது சரவிளக்குகள் போன்று அதன் பயன்பாடு ஒரே சமயத்தில் பல தளங்களில் இருப்பினும் சரியே.

Image result for islamic artisans

இஸ்லாத்தின் கலை வெளிப்பாட்டிற்குப் பங்களிப்புச் செய்வோரை, கலைஞன் மற்றும் கலைவினைஞன் என்னும் சொற்களால் பாகுபடுத்திக்கொள்ளாமல் பொதுவாக நான் அழைப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இஃது ஏனெனில், அரபி மொழியில் தனது கைகளால் கலைப்பொருட்களை வடிவமைத்து உருவாக்குபவனைச் சுட்டுவதற்கு ஒரே ஒரு சொல்தான் இருக்கிறது: ஸானிஃ. அவன் கலை வினைஞன், ஒரு கைத்தொழிலை அல்லது கைவினையைப் பழகுபவன், அதன் பொருட்டு கைவினைத் தொழில்நுட்பத்தைக் கற்பதற்காக மாணவனாய் இருப்பவன். இங்கே கலை என்பது மத்தியக் காலங்களில் புரிந்துகொள்ளப்பட்ட பொருளிலே அன்றி நவீன உலகிலான அர்த்தத்தில் அல்ல. ஃபன் (கலை) என்னும் அரபிச் சொல்லும் அதே பழைய அர்த்தத் தொனி கொண்டதுதான். “வித்தை அற்ற அறிவு பாழ்” என்னும் முதுமொழி இதனைக் காட்டும். இதனை அக்காலத்தில் முஸ்லிம் கைவினைஞர்கள் உருவாக்கியிருக்க வேண்டும். இக்காலத்து தொழில்நுட்பத் துறையினருக்குப் பொருந்தும். எனவே, கலைஞன் என்று நாம் இக்காலத்தில் காண்கிறோமே, தனது தனிப்பட்ட வெளிப்பாட்டினைத் தேடியவனாக, சமுதாயத்தில் விளிம்பு நிலையில் இருப்பவனாக, அந்த நிலை ஒருபோதும் இஸ்லாமிய மரபில் இருந்ததில்லை. கலைஞன் அல்லது கலைவினைஞன் என்னும் சொற்கள் இப்பின்னணியில் எவ்விதக் குழப்பத்தையும் தவறான புரிதலையும் உண்டாக்கிவிடக் கூடாது என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

பிரத்தியட்சமான கலைப்பொருட்களாய் வெளிப்பாடு கொள்ளாத இயல்பு கொண்ட  கைவினைகள் சில இருக்கின்றன என்பது உண்மைதான். சில தொழில்சார் கலைகள், தோல் பதனிடுதல், நூற்றல், சாயமேற்றுதல் போன்றவை அப்படி ஆயினும் அவை இன்றியமையாது இடம் பெற்றிருக்கும் பணிகளின் இறுதி வெளியீடு ஒரு கலைப்பொருள்தான் (உதாரணமாக, ஒரு தொழுகை விரிப்பு). வேறு சில கலைக் கூறுகள், உதாரணமாக வேலைப் பாடல்கள் அல்லது விழாக்களில் அணியப்படும் சிறப்பு ஆடைகள் அணிகள் போன்றன எப்போதும் மரபார்ந்த கைவினைகளுடனே தொடர்புள்ளவை. முஸ்லிம் சமூகத்தின் வாழ்விற்கு அவற்றின் பங்களிப்பு மிகப் பெரிது.


சுருக்கமாக, இஸ்லாமியக் கலைத் தயாரிப்பின் இரண்டு முக்கியமான பண்புகள் உள்ளன. முதலில், ஆன்மிக மற்றும் அற நோக்கில், அது தான் பொதுத் தளத்திற்கு எடுத்துச் செல்லும் மதிப்பீடுகளை குர்ஆனின் செய்தியிலிருந்து அடைகிறது. இரண்டாவதாக, தொழில்நுட்ப நோக்கில், அது தந்தையிலிருந்து மகனுக்கு அல்லது ஆசானிலிருந்து மாணவனுக்கு தொடர்ச்சியாய் வழங்கப்படும் மாற்றமில்லாத விதிகளையும் பயிற்சிகளையும் கொண்டுள்ளது. இந்தப் பாரம்பரியத்தின் பொருள் தேக்கமோ அல்லது முந்தைய வடிவமைப்புக்களை யந்திரத்தனமாக மீண்டும் செய்தலோ அல்ல. மாற்றமாக, அது பல நேரங்களில் கலைஞர்களுக்கு மிகுந்த ஊக்கத்தையளிக்குமொரு ஊற்றாகவும் பிரதியாகா நிலை கொண்ட எண்ணற்ற மேதமைப் படைப்புக்கள் உருவாகுவதற்கான தொழில்நுட்ப ஸ்திரத்தன்மையாகவும் இருந்துள்ளது. ஏதேனும் தருணங்களில் மரபான கோட்பாடுகள் பன்முறை மீண்டும் செய்தலினால் நீர்த்துப் போயிருக்குமெனில் அதன் சீர்கேட்டிற்கான காரணத்தை அக்கோட்பாடுகளில் அல்லாது வேறு இடங்களில்தான் தேடிப்பார்க்க வேண்டும்.

to be continued

இஸ்லாமியக் கலையின் செய்தி - part1

ழீன் லூயி மிஷான்

Image result for jean louis michon

      (22 ஏப்ரல் 1982 அன்று ஜெனீவாவின் இஸ்லாமிய மையத்தில் ஃபிரெஞ்சு இஸ்லாமிய அறிஞர் ழீன் லூயி மிஷான் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்)

”ஓதுக: படைத்த நும் ரட்சகனின் நாமத்தால்
மனிதனைப் படைத்தான் ’அலக்’கில் இருந்து
ஓதுக, நும் ரட்சகன் மகா கொடையாளி
எழுதுகோலால் கற்பித்தவன்
மனிதனுக்கு அவன் அறியாதவற்றைக் கற்பித்தான்”
(குர்ஆன்:96:1-5)
     
   பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன், ஹிஜ்ரிக்குப் பத்து ஆண்டுகளுக்கு முன், கி.பி.612-ல் இந்த அழைப்புக்களை, வானவர் தலைவர் ஜிப்ரீல் அவர்களின் வழியே இறைத்தூதர் முஹம்மதுக்கு இடப்பட்ட கட்டளையைக் கொண்டே குர்ஆன் வெளிப்பாடு ஆரம்பமாயிற்று. உரக்க வாசிக்கும்படி, இறைச்செய்தியைப் பறைசாற்றும்படி முஹம்மதைத் தூண்டிய இந்த அழைப்புக்கள் ‘இஸ்லாமியக் கலை’ என்னும் பொருண்மை குறித்துப் பேசுவதற்கு மிகவும் பொருந்துவதாகக் கருதுகிறேன்.

      இது, இஸ்லாத்தின் மகத்தான பணியைத் தொடங்கி வைக்க இந்த வசனங்கள்தான் முதன் முதலில் அருளப்பட்டவை என்பதற்காக மட்டுமல்ல, அதற்குச் சற்றும் குறையாத பிற துல்லியமான காரணங்களாலும்தான். ஏனெனில், புனித நூலின் இந்த முதல் வார்த்தைகளில், அவை சொல்லும் செய்தியிலும் சொல்லப்பட்டுள்ள வடிவத்திலும், இஸ்லாத்தின் கலை என்பது முன்னதாகவே அமைந்திருக்கின்றது.

      இந்த வார்த்தைகள், அரபி மொழியில், மிகத் துல்லியமான ஒலியதிர்வு கொண்டுள்ளன. அந்த ஒலியதிர்வு பின்வரும் மூன்றெழுத்து வேர்கள் மற்றும் அவற்றின் மோனைகளும் வரிசை மாற்றங்களும் தரும் அர்த்தபாவங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. (மொ.பெ.குறிப்பு: அரபி அமைந்த மூன்றெழுத்து வேர்ச்சொற்களை இங்கே மூலக்கட்டுரையில் மிஷான் தரும்படிக்கே ஆங்கிலத்தில் தருகிறேன். அவற்றைத் தமிழில் மாற்றினால் தற்சமயம் குழப்பமே தரும்.) : Kh-L-Q (படைக்க) மற்றும் ‘-L’Q (ரத்தக்கட்டி); Q-R-‘ (படிக்க / வாசிக்க / ஓத) மற்றும் Q-L-M (எழுதுகோல் / பேனா); ‘-L-M (அறிய / கண்டுகொள்ள) மற்றும் மீண்டும் Q-L-M (எழுதுகோல் / பேனா).

      சுருக்கமாக, குர்ஆன், அதனுடைய அரபிப் பெயர் சுட்டுவதுபோல், படித்தல், ஈடு இணையற்ற ஓதுதல், கேட்கப்படுவது, மனனம் செய்யப்பட்டு மீண்டும் ஓதப்படுவது என்பதாக அமைந்து தன்னில் இஸ்லாத்தின் முதல் கலையான ’அரபியில் குர்ஆன் ஓதுதல்’ என்பதன் வேர்களைக் கொண்டிருக்கிறது. வெளிப்பாட்டின் சொற்கள் ஒரு நூல் வடிவில் தொகுப்புறும், அது எழுத்துக்களால் ஆகியிருக்கும் என்பதில் இஸ்லாத்தின் இரண்டாம் கலையான கலையெழுத்து (Calligraphy) என்பதன் கரு இதில் இருக்கிறது. இக்கலையும்கூட ஒருவகையில் வெளிப்பாட்டின் தொடக்கத்திலிருந்தே மனிதன் தன்னில் கொண்டிருப்பதுதான். ஏனெனில் “இறைவன் மனிதனுக்கு எழுதுகோல் கொண்டு கற்பித்தான்”. பேனா அல்லது எழுதுநாணல் என்பது முதலறிவின் குறியீடு. அஃது, இறைப் பேரறிவின் மைக்குள் தோய்க்கப்பட்டு மனிதகுலத்திற்கு அறிவூட்டும் புனித அடையாளங்களை எல்லாம் எழுதிச் செல்கிறது.

      மறையோதல் என்பது குர்ஆனின் அரபி மொழி வசனங்களின் ஒலியையும் அதன் ஏற்றயிறக்கங்களையும் காலத்தில் வெளிப்படுத்தும் கலையாகும். கலையெழுத்து என்பது மறையோதலின் ஓசைகளை காட்சிப்படுத்தி அவற்றை இடத்தில் பதிக்கும் கலையாகும். இவ்விரு புலப்பாடுகளில் நாம் முஸ்லிம்களுடைய கலையின் ஊற்றுக்கண்ணைக் கண்டடைகிறோம். இந்த ஊற்றுக்கண்ணிலிருந்து இஸ்லாத்தின் கலைஞர்கள் பல நூற்றாண்டுகளாகத் தமக்கு அகத்தூண்டலைப் பெற்றுக்கொள்ளத் தவறவில்லை.
     
 இஸ்லாமியக் கலையின் விற்பன்னர்கள் தமது பொருண்மையைக் காலக்கிரமமும் இடக்குறிப்பும் ஒருங்கேயுள்ள கோணத்திலிருந்தே அணுகுகின்றனர். அவர்கள் அதன் காலப் பரிணாம வளர்ச்சியை விளக்குகின்றனர்; பெறுதல்களையும் வழங்குதல்களையும் அலசுகின்றனர்; இஸ்லாமிய உலகின் பல்வேறு பகுதிகளில், கட்டடவியல் இசை தொழிலகம் மற்றும் வனப்புக்கலைகள் முதலிய பல்வேறு துறைகளில், பல்வேறு காலகட்டங்களில் உருவான வேலைப்பாடுகளின் தனித்தன்மைகளைச் சுட்டுகின்றனர். இச்சுருக்கமான கட்டுரையில் அத்தகு அணுகுமுறை பொருத்தமாய் இராது. செய்யின், இடங்கள் கலைப்பொருட்கள் மற்றும் புரவலர்களின் நீளமான பட்டியல்களே மிஞ்சும். மேலும், இஸ்லாமியக் கலைகளை எவ்வெக்காலங்களிலும் நிஜமாகத் தொடரச் செய்து அதற்கொரு அசல் தன்மையை வழங்கிவரும் அதன் நிலையான பண்புகளையும் மதிப்புக்களையும் அத்தகைய பகுப்பாய்வு அணுகுமுறை வெளிக்காட்டாது.

      எனவேதான் நான் இஸ்லாமியக் கலையை முற்றிலும் வேறு கோணத்தில் அணுகுவது மிகவும் அவசியம் என்று கருதுகின்றேன். அது வரலாற்று அணுகுமுறையும் அல்ல, பகுப்பாய்வு அணுகுமுறையும் அல்ல. மாறாக அது இஸ்லாத்தின் ”ஆன்மிகப் பிரபஞ்சம்” என்றொருவர் சொல்லத் தகுவதாகும். இப்பிரபஞ்சம் கலைஞர்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல என்பதில் ஐயமில்லை. வெளிப்படுத்தப்பட்ட செய்தி என்பதால் அது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரியது. ஆனால், கலைஞர் இடை நுழைந்தவுடன் சிந்தனைகள் பருவடிவுக்கு மாற்றப்பட்டு அவை சமூகத்தின் பொதுச் சொத்தாகிவிடுகிறது. எனவே, சிந்தனைகளை பருவடிவாக மாற்றும் ’கலைமொழி’யை வாசிக்கவும் விளங்கிக்கொள்ளவும் முதலில் ஒருவர் அந்தச் சிந்தனைகளின் அர்த்தங்களை அறிவது அவசியமாகிறது.


      தூர கிழக்கிலும் தூர மேற்கிலும் மரபான கலைஞர்களுடன் நான் நிகழ்த்திய அதிகமான சந்திப்புக்களின் நினைவுகளால் விளக்குநர்கள் வழி இஸ்லாமியக் கலையை அணுகும் பணி எனக்கு எளிதாயிற்று. எங்கும், அக்கலைஞர்களை நான் ஒரே மாதிரிதான் பார்த்தேன்: பணிவும் நேர்மையும், நுண்ணறிவும் ஒழுக்கமும் கொண்டவர்களாக, எத்தகைய விழுமியங்களுக்கு, பெரும்பாலும் பொருந்தாச் சூழல்களில் கூட அவற்றின் வாழ்வு நீட்டிப்பிற்குத் தாம் பொறுப்பாளராய் இருக்கிறோம் என்னும் பிரக்ஞை உள்ளவர்களாக, எனவே நான் முதலில் அவர்களின் பேரார்வத்தையும், அதன் பின் அவர்கள் பயன்படுத்திய வெளிப்பாட்டு முறைகளையும், இறுதியாக அவர்களின் கலைப்படைப்புக்கள் சிலவற்றையும் பற்றிப் பேசப்போகிறேன்.

to be continued...

Saturday, April 15, 2017

செம்போத்து

Related image

காட்டின் ஆன்மாவைக்
குரலில் சுமந்தபடி
கட்டிடங்களினூடே அலையுமொரு
பரிதாபப் பறவையாய்
அறிமுகமானாய் நீ

அன்றாடம் அதிகாலை
வேம்பின் உச்சியில் வந்தமர்ந்து
இணையுடன் நீ கொஞ்சுதல் கண்டு
மனதுக்கினியை ஆனாய் என்னவளுக்கு

செம்பொன்னாடை போர்த்தியது போன்ற
நின் சிறகுகள் விரித்தசைத்து
எருக்கலஞ் செடியடியில்
ஏதோ பொறுக்கிக்கொண்டிருந்த உன்னை
மகளுக்குக் காட்டி மகிழ்ந்தேன்

“செந்தோப்பு” என்றவள்
நின் பெயரை போலிச் செய்ததில்
செல்லம் பெருகியது நின்மீதெமக்கு

எம் வீட்டுத் தோட்டத்தில்
பசும்புற் தரையிறங்கி
நடந்திருந்தாய் நேற்று முன்

இறைத்தேடலாய் அர்த்தமாகியிருந்த
நின் குறியீட்டுருவம் கலைத்தது 
இரைத்தேடலில் நீ நடந்திருந்த எதார்த்தம்

நேற்று என்னடாவென்றால்
அலகிலொரு அரணையைக் கவ்வியபடி
எம் தோட்டம்விட்டுப் பறக்கிறாய்

தினப்பாடுகள் தீவிரம்கொள்ளும் பாவனையில்
அத்தருணம் சற்றே

அச்சந்தரும் பறவையாய் ஆனாய் நீயே

Friday, December 16, 2016

ரூமியின் தோட்டம் - 7

Image result for hatched egg

      சிசுவுக்குக் கருவறை போல், புழுவிற்குக் கூடு போல், நேரம் வரும்போது சௌகரியத்தைத் துறந்துவிடத்தான் வேண்டும். இல்லையெனில், அதுவே உன் ஆன்மாவின் கல்லறை ஆகிவிடும். உருதுப் பழமொழி: ‘பாப் கே மெஹர்பானி சே உஸ்தாத் கா மார் பெஹ்தர்’ – ‘தந்தையின் செல்லத்தை விடவும் ஆசானின் அடி சிறந்தது’. குருநாதர் உன் பாதையில் முட்களைத் தூவுகிறார் எனில் உன்னையே ஒரு பூவாக மலர வைக்கத்தான். மவ்லானா ரூமி சொல்வது கேள்:

மலை முகடு செல்லும் நேரம் இது
குளிர்கால வீடு விட்டு வெளியே

பறவைகள் போல்
நீயே உனது கண்காணியாய் இரு

கால தேச இக்கணம்
நம்பிக்கையின் கருவில் ஊறிக்கொண்டொரு
உயிர் உரையும் முட்டையோடு,

உடைத்துக்கொண்டது அறிவினின்றும்
பறவையின் கடவுளின் பாடலுடன்
வெளியேறும் வரை
அடைகாக்கப்படும்
கருணையின் சிறகடியில்.

v
     
Image result for sun painting

ஐம்பது அடி தூரத்தில் காகம் பார்க்க முடியாததை ஆயிரம் அடி உயரத்திலிருந்து பார்த்துவிடுகிறது பருந்து. பறவைகள் எல்லாம் சமமன்று. அரசனின் கையில் அமர்த்தப்படுவது ராஜாளிதான், அண்டக் காக்கை அல்ல. இறைநேசர் என்பவரின் நிலை என்ன? அல்லாஹ் சொல்கிறான், “அவரின் பார்வையாக நான் ஆகிறேன். அவர் என்னைக் கொண்டு பார்க்கிறார்” (ஹதீஸ் குத்ஸி). ’பாராததேன்?’ என்னும் புலம்பல் சீடனின் வசதிக்காகத்தான். இறைவனாகட்டும், இறைவனைக் கொண்டே பார்க்கும் குருவாகட்டும், எப்போது பார்வை தடைப்பட்டுப் போனது? தனது குருநாதரைப் பற்றி மவ்லானா ரூமி சொல்கிறார்:

’ஷம்ஸ், இப்பக்கம் பாரீர்’

இல்லை. என் சொல் பிழை.
சூரியன் என்பது முழுதும் முகமே
எப்போதும் எத்திசையும் நோக்கியபடி.

தலையின் பின்புறம் என்பது
சூரியனுக்கு இல்லை.

v
 Image result for moon fish painting  

   இறைவனின் சுயம் பூர்வீகம். படைப்பின் சுயம் சுழியம். இருப்பதில் கோலமான இல்லாமை. பூர்வீகத்தில் வந்துள்ளது புதுமை! ’அஸ் பஹ்ரே கிதம் மவ்ஜே நூ’ – பூர்வீகக் கடலிலிருந்து புதுப்புது அலைகள் புறப்படுகின்றன. ’ஒன்று மற்றொன்றாகவே முடியாத இரண்டு, பிரிக்கவே இயலாதபடி ஒன்றில் மற்றொன்றாய் இணைந்திருக்கின்றன. இதுவே இப்பாதையின் சுவை’ என்று சூஃபி மகான் ஃபைஜி ஷாஹ் நூரீ (ரஹ்) அவர்கள் பேச்சிலிருந்து நினைவு. இச்சுவை தவிர யான் கேட்க எச்சுவை உள்ளது?

      அடையவே முடியாத உயரத்தில் இருப்பவராய்த் தோன்றுகிறார் குரு. ’தூ குஜா? மன் குஜா?’ – நீங்கள் எங்கே? நான் எங்கே? மஜ்னூனுக்கு ஈருலகிலும் அடையவே முடியாத ஒன்று இருக்கிறது எனில் அது லைலாதான். மஜ்னூன் அடைந்து கொண்டதும் லைலாவை அன்றி வேறில்லை! எட்டவே முடியாதவர் என்று குருவை உணரும் சீடனே அவரை அடைகிறான். எட்டிவிட்டேன் என்று நினைப்பவன் தவர விடுகிறான். சில்சிலா என்னும் சூஃபி குருவழித் தொடரில் ஒன்றுக்கு மேல் ஒன்று சிகரங்கள்தான். என் சிகரம் தன் சிகரத்திற்கு முன் தானொரு குன்றெனவே கூறிக்கொள்கிறது.

Image result for pt pran nath
      
இசையுலகிலிருந்தொரு உதாரணம். கிரானா இசைப்பள்ளியின் கானரிஷி பண்டிட் ப்ராண் நாத் தனது குரு உஸ்தாத் அப்துல் வாஹித் ஃகான் பற்றிச் சொல்கிறார், “என் குருநாதர் ஒரு குதுப் மினாராக இருந்தார். அதில் முதல் படிக்கட்டில்தான் நான் காலடி வைத்திருந்தேன். அடுத்த அடி வைப்பதற்குள் அவர் சாய்ந்துவிட்டார். அவரின் உயரத்தை நான் அறியவே இல்லையே!”

நானொரு மீன்                                                   
நீ நிலா

எனைத் தீண்ட முடியாது நீ எனினும்
நான் வாழும் கடலில்
நிறைகிறது நின் ஒளி

v
 Image result for ney painting     

மரணித்தில் வாழ்வது எப்படி? ‘மூத்து கப்ல அன்த மூத்து’ – ’சாகுமுன் செத்துவிடு’ (ஹதீஸ்). ’சிரஞ்சீவி பவ’ என்று ஆசீர்வதிக்கிறது சிரத்தை சீவும் குருவின் கை வாள். “நபிகளின் வாள் எது? அவரின் அழகிய பண்புதான்” என்கிறார் ஹஸ்ரத் இனாயத் ஃகான். நபி என்னில் வந்துவிட வேண்டும் என்னும் தவிப்பு, இஷ்கே றசூல் என்னும் நபிக்காதல், தலை போகும் காரியம்தான் உண்மையில் அது! சீடனுக்காகத் தன் தலையைத் தர முன்வந்தார் குரு ஷம்ஸுத்தீன் தப்ரேஸ் எனில் அந்த சீடரான மவ்லானா ரூமியின் ஸ்தானம் நான் என்ன சொல்ல? தெய்வீக இசை வெளிப்பட்ட புல்லாங்குழல் அது. இதோ ஒரு ராகம்:

ஒன்பது ஓட்டைகளுடன்
இந்த நாணற் புல்லாங்குழல்
மனிதனின் பிரக்ஞையைப் போல்

சிரம் துணித்த பின்பும்
உதடுகளின் மீது ஆசை!

v
    
Image result for leaves in wind

  ”அன்ஃபாசே ஈசா” – ஏசுவின் மூச்சு என்று சூஃபிகள் பரிபாஷையால் சொல்வது என்ன? குருவின் உயிரிலிருந்து உன் உயிருக்குப் பாயும் உணர்ச்சிதான். அதனை ‘இல்கா’ என்பர். இல்காவே உண்மையில் ’லிகா’ (சந்திப்பு). உயிர்கள் சந்தித்துக் கொள்ளாமல் உடல்கள் சந்திப்பதில் சங்கமம் இல்லை. குருவின் உயிரில் உன் உயிர் சத்தியத்தை அடைந்து கொள்ளும் சந்திப்பே ’சத்சங்’ ஆகும்.
      ஏசுவின் மூச்சு தம் திசையில் வீச வேண்டுமாய் விருட்சங்கள் கிளைக்கைகள் கூப்பி தவம் இயற்றுகின்றன. வரம் கனிந்து அத்தென்றல் வீசுகையில் என்னவொரு ஆனந்த நடனம்!
ப்ரிய! உன் கிளைகளை எப்போதும் பசுமையாக வைக்கும் அந்தப் புனித மூச்சுக் காற்றினை யாசித்திரு. மவ்லானா ரூமி சொலவதைக் கேள்:

இறந்தவற்றிலிருந்து
உயிர் வளர்கிறது
உயிருள்ளவை மெல்ல மெல்ல
இறப்பினுள் செல்லச் செல்ல.

பசுங்கிளைகள் கனி கொண்டு
தரை நோக்கித் தாழ
காய்ந்த சுள்ளிகள்
தீக்குள் செல்லும்.

v

 Image result for grapes painting chinese    

உணவு குறித்த பாட விரிவுரையில் எரிச்சல் அடைகிறேன் எனில் என்ன அர்த்தம்? மிகு பசி கொண்டவன் நான் என்பதல்லவா? என் உயிர் உணவைத் தேடுகிறது என்பதல்லவா? மேலும் மேலும் வெறுமனே வார்த்தைகள் பரிமாறப் படுதலை எங்ஙனம் சகிப்பேன்? பிரசங்கியே! உம் வார்த்தையில் அல்ல, நான் இங்கே லயித்து அமர்ந்திருப்பது. என் இதயத்துள் ஊன்றிய ஒரு கனிவுப் பார்வையின் இனிமை அது.  மவ்லானா ரூமி சொல்கிறார்:

பழமொழி நினைவு கொள்:
“திராட்சைகளை ருசி”

தோட்டத்தைப் பற்றித்
தொனதொனக்காதே

திராட்சைகளை ருசி.


Tuesday, November 22, 2016

ரூமியின் தோட்டம் - 6

Image result for man is microcosm

அறிவியல் சொல்கிறது, மனிதன் பிரபஞ்சத்தினும் மிக மிகச் சிறியன். ஆன்மிகம் சொல்கிறது, மனிதன் பிரபஞ்சத்தினும் மிக மிகப் பெரியன். “நீயொரு சிறிய பிரபஞ்சம் என்று நினைக்கிறாய். மனிதனே! நீயே பெரிய பிரபஞ்சம் என்பதை அறி!” என்றார்கள் ஹழ்ரத் அலீ முர்தழா. மனிதப் படைப்பின் சாத்தியப் பரிமாணங்களை அடைந்து முழுமைப் பெற்றுவிட்ட மனிதனை சூஃபிகள் “இன்சானுல் காமில்” (செம்மனிதன்) என்று அழைக்கின்றனர். சூஃபி யார்? விருட்சமாய் விரிந்த விதை! பிரபஞ்சத்தில் தானொரு அங்கம் போல் மனிதவுருக் கொண்டு நடமாடும் ஞானியருக்குள் எத்தனையோ பிரபஞ்சங்கள் அடக்கம். அன்னார் பற்றி மவ்லானா ரூமி சொல்கிறார்:

இங்கிப்போது நம்முடன் இருக்கின்றனர்

ஒவ்வொரு அதிகாலையும்
ஒடியாப் புதுக்குதிரை மீதேறி
வானேழின் எல்லைகள் கடந்து செல்வோர்,

சூரியனும் நிலாவும் தலையணையாய்
இரவில் துயில் கொள்வோர்

இந்த ஒவ்வொரு மீனின் உள்ளும்
ஒரு யூனுஸ் நபி
கரிப்புக் கடலினை இனிப்பாக்கியபடி

மலைகளைப் பிசைந்து வடிவமைக்கும் திறத்தினர்
எனினும் அவர்தம் செயல்கள் எதுவும்
வரமும் அல்ல சாபமும் அல்ல

அதி நிதர்சனம் எனினும்
அதனினும் ரகசியம் அவர்

ஓடைப்புனலில் அவர்தம்
பாதப் புழுதியைக் கலந்துவிடு

அது கொண்டு கண்ணுக்கு மை எழுது

இதுவரை உன்னுள் நீ
நிந்தித்திருந்த முள்ளொன்று
ரோஜாவாய் மலர்ந்திடக் காண்பாய்

v
Image result for sufi guru
      
ஆயுள் பரியந்தம் மூளையைக் கசக்கினாலும் எவ்வொரு மேதையும் சிக்கறுக்கக் காணாத கணக்கு இவ்வாழ்க்கை. இரண்டும் மூன்றும் ஏழு என்று லகுவாகச் சொல்லிச் சிரிக்கும் குழந்தையின் பேதைமை. அது வேண்டும் நமக்கு. போரும் அமைதியும் இரவும் பகலும். மண்ணில் மட்டுமல்ல, மனதிலும். சூர்யோதயப் போதுக்கான காத்திருப்புத் துயரம் எல்லோர் வாழ்விலும் உண்டு. ஷம்ஸுத்தீன் என்னும் ஞானச் சூரியன் – குருநாதர் – வரும் வரை மை எழுதிய இருளாய்த்தான் இருந்தது மௌலானா ரூமிக்கும் கல்வியறிவு எல்லாம். குரு யார்? இதயத்திற்குள் தலையை ஊறப்போடும் கலையைச் சொல்லித் தருபவர். உன்னைத் தன் சஹ்ருதயனாய் மாற்றும் தயன். மவ்லானா ரூமி சொல்கிறார்:

நைல் நதி பாய்கிறது
குருதிச் சிவப்பாய்
நைல் நதி பாய்கிறது
ஸ்படிகத் தூய்மையாய்

காய்ந்த முட்களும் அகிலும் ஒன்றுதான்
நெருப்புத் தீண்டும் வரை

வீரனும் கோழையும் சமமாகவே நிற்பர்
சர மழை பெய்யும் வரை

வீரர்களுக்குப் போர் பிடிக்கும்
வியூகம் அறியும் நுட்ப அரிமா
இரையைத் தன்னிடம் ஓடிவரச் செய்கிறது
“என்னைக் கொல்”

இறந்த கண்கள் வெறிக்கின்றன
வாழும் கண்களை.

இது என்னவென்று தலையை உடைக்காதே

காதலின் வேலை அபத்தமாய்த் தோன்றும்
எனினும், அர்த்தம் காணும் முயற்சி
அதனை மேலும் திரையிடுகிறது.

மௌனம்.

v
Related image
     
 கலை என்பது நிஜத்தின் நிழற்படம். தத்துவம் நிழல். கிரேக்கத் தத்துவம்தான் சூஃபித்துவத்தின் பிதா என்பார் உளர். அது ஓர் உட்காய்ச்சலின் உளறல் என்பதறிக. நிழலின் விளைவாய் நிஜம் தோன்றியதில்லை இதுவரை. சூஃபித்துவம் என்பதென்ன? அது எப்போது தோன்றிற்று? இக்கணத்தில் முகம் காட்டும் விடை: ‘ஆதமுக்குள் அல்லாஹ் தன் ஜீவனிலிருந்து ஊதுவதன் அனுபவம் அது.’ இங்கே செய்வது அங்கே அனுபவிப்பதற்கான அறுவடை என்னும் நியதிக்கு மேலே தெய்வீகக் கருணையால் உயர்த்தப்பட்டவர்கள் சூஃபிகள். அவர்க்கு, இங்கும் அங்கும் அறுவடையே! ‘லஹுமுல் புஷ்ரா ஃபில் ஹயாத்தித் துன்யா வ ஃபில் ஆஃகிறா’ – ’அவர்களுக்கு இம்மை வாழ்விலும் மறுமையிலும் சுப சோபனம்’ என்கிறது குர்ஆன். இசைஞனின் மூச்சு ஊதலில் மெய்ம்மறந்து சொக்கியுள்ளது புல்லாங்குழல், வீட்டிலாயினும் காட்டிலாயினும். மவ்லானா ரூமி சொல்கிறார்:

நிலப்பறவை
ஆழ்கடலின் மீது
என்னதான் செய்யும்?

முழுப் பாழின் மதுவிடுதி
வெளித் தள்ளிய சித்தர்கள் யாம்,

கணமேனும் கவலையில்லை
லாபம் அல்லது வரதட்சணை அல்லது
எதை உடுத்துவது என்பதெல்லாம்.

பைத்தியத்திற்கு
நூறாயிரம் வருடங்களுக்கு அப்பால்
இருக்கின்றோம்.
பிளாட்டோ பேசவில்லை இது பற்றி.

ஆண் பெண்ணின் உடலழகு
இங்கொரு உருவம் அல்ல.

எவ்வளவு மரிப்பரோ
அவ்வளவே காதலரின் உயிர்ப்பு

ஷம்ஸிடம் கேட்கிறதொரு புனிதாத்மா:
“என்ன செய்கிறாய் இங்கே?”
விடை:
“அங்குதான் என்ன செய்ய?”

v
Image result for shabda kahn

     பண்பாட்டு அடையாளங்கள் ஆடைகள் எனில் அதன் விழுமியங்கள் தேகம். சத்தியம் என்பது இவற்றில் தன்னைக் காட்டிக் கொள்ளக்கூடும் எனினும் அது இவை அல்ல. எங்கே தேகத்தையே உதறிவிட வேண்டியுளதோ அங்கே ஆடை களையவும் தயங்குவோர்க்கு என்னதான் கிட்டும்? முகமூடி அணிந்து கொண்டு கண்ணாடி பார்ப்பவன் தன் முகத்தை எப்படிப் பார்க்க முடியும்? உன் சுயத்தின் முகத்தை நீ காணவொட்டாது தடுக்கும் முகமூடிகள்தான் எத்தனை, கால தேச இன மொழி மதம் சார்ந்த பண்பாடுகள் என்னும் பெயரில்? சத்தியத்தின் சந்நிதியில் முகமூடிகளுடன் வந்து நிற்போர்க்கு சத்தியத்தின் தரிசனம் ஒருபோதும் இல்லை. மவ்லானா ரூமி சொல்கிறார்:

அக்கறையான அறிவுரைகளைப் புறந்தள்ள
சரியான தருணம் இது,

பண்பாடு நம்மில் இடும் முடிச்சுக்களை
அவிழ்த்துவிட

சீக்கிரம் முடி.
புறச்செவிகள் இரண்டிலும் பஞ்சு அடை

நாணற் காட்டினுள் மீண்டும் செல்
சர்க்கரை இனிமை
மீண்டும் உன்னில் ஏறட்டும்

விதிகளோ அன்றாடக் கடமைகளோ இல்லை
மௌனத்தின் அமைதியை அவை கொண்டு வருவதில்லை

v

Image result for shabda kahn 
    
இன்னல்லாஹ ஜமீலுன் வ யுஹிப்புல் ஜமால்” – ’இறைவன் அழகன், அவன் அழகை நேசிக்கிறான்’ (ஹதீஸ் குத்ஸி). ஒவ்வொரு சிருஷ்டியும் அந்த அழகெனும் சாகரத்தின் ஓர் அலை. சௌந்தர்ய லஹரி. ஞானி யார்? ஆழிப் பேரலை! சூஃபிகளின் தியான சபை என்பதென்ன? அவன் தன் அழகைத் தனக்குக் காட்டித் தானே ரஸித்திருக்கும் நிகழ்வு. பிரபஞ்சம் முழுதும் சூஃபி சபையே. குல்ல யவ்மின் ஹுவ ஃபீ ஷஃன் – ’ஒவ்வொரு நாளும் அவன் தன் வெளிப்பாட்டில் இருக்கிறான்’ (குர்ஆன்: 55:29). அகத்தின் கண் இன்னும் திறக்காத மனிதரின் முன் இப்பிரபஞ்சம் என்பது என்ன? இசையைக் கல்லாதவன் முன் விரிக்கப்பட்ட இசைக் குறிப்பேடு! மவ்லானா ரூமி சொல்கிறார்:

ஒவ்வொரு சபையின் நோக்கமும் இதுவே
அழகைக் கண்டறிதல்
அழகை நேசித்தல்.

பசித்த யாசகரின் அளவுக்கு
அடுமனைக்காரர் அறிவதில்லை
ரொட்டியின் சுவையை

நேசன் அறிய விரும்புவதால்
அருவங்கள் உருக்கொள்கின்றன

மறைவதே படைப்பின்
மறைவான நோக்கம்.

உன் விதையைப் புதைத்துக்
காத்திரு.

v


      அறிஞனின் ஆன்மா வழங்க முடியாத கனிவை ஞானியின் தேகமே உனக்கு வழங்கிவிடும். அவரின் உள்ளும் புறமும் ஒளிமயம். அறிஞனின் தலையை விட்டுத் தப்பித்து ஞானியின் பாதத்தில் அடைக்கலம் ஆகு. உடலுக்கு உண்டாகும் நோய்களை நீக்க மூலிகைகள் பல. அகநோய் நீக்கும் மூலிகை குருவின் கை ஒன்றுதான். வேர்களைத் தான் கெட்டியாகப் பிடித்து வைத்திருப்பதான பெருமிதத்தில் கிடக்கிறது மண். நீ நீராகி வேருக்குள் நுழைந்து விடுவாய் எனில் ஒருநாள் அல்லது ஒருநாள் கொப்பின் நுனியில் சிரிக்கும் மலரில் இருப்பாய், பின் அதன் கனியில் இருப்பாய். மவ்லானா ரூமி சொல்கிறார்:

ஒவ்வொரு மூலிகையும்
ஏதேனும் நோய் நீக்கும்

ஒட்டகைகள் முட்களைத் தின்னும் பிரியமாய்
நமக்கோ உட்பருப்பு வேண்டும்
கொட்டாங்குச்சி அல்ல.

முட்டையின் உட்புறம்
பேரீத்தங்கனியின் வெளிப்புறம்
அப்புறம், உனது உள்ளும் வெளியும்?

பல அடிகள் மேலே
கிளைகள் உறிஞ்சும் நீர் போல

கடவுளிடம் உனது ஆன்மாவும்.