Sunday, November 30, 2025

காந்தி கலந்த ’காஃபி’


            தமிழில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் நான் ரசித்தும் வியந்தும் வாசித்த கட்டுரைகளின் பட்டியல் ஒன்றுண்டு. அதில் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய “’அந்தக் காலத்தில் காப்பி இல்லை’ தமிழக்கத்தில் காப்பி : ஒரு பண்பாட்டு வரலாறு” என்னும் கட்டுரையும் ஒன்று. எத்தனை தடவை வாசித்தாலும் சுவாரஸ்யம் குறையாத ஓர் ஆய்வுக் கட்டுரை!

            பிரிட்டிஷார் தமிழகத்தில் காஃபி பானத்தை அறிமுகப் படுத்தியபோது அதனைத் தமிழ்ச் சமூகம் எப்படி எதிர்கொண்டது என்ற செய்திகள் சுவையானவை. ஆரம்பத்தில் அதை ஒரு லாகிரி பானமாகவும், கள்ளை விட மோசமான ஒன்று எனவும் தள்ளிய சமூகமே பின்பு அதை அருந்துவது ஒரு பண்பாட்டு அடையாளம் என்று ஆக்கிக் கொண்டனர் என்பது வரலாறு.

            காப்பி, தேயிலை, கொக்கோ, மற்றும் சாராயம் ஆகியவை நச்சுப்பண்டங்கள் என்று மறைமலையடிகள் கண்டித்திருக்கிறார் என்பது காஃபி நம் முன்னோர்களால் எப்படி அணுகப்பட்டது என்பதற்கு ஒரு சான்று.

            மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரிமத்திலும் தேநீருக்கும் காஃபிக்கும் தடை இருந்தது என்று செய்தி. ஆனால், தமிழில் அழகாக எழுதிய சமய அறிஞர்களில் ஒருவரான பி.ஸ்ரீ. அவர்களின் கருத்து ஒன்றை ஆ.இரா.வே தன் கட்டுரையில் மேற்கோள் காட்டியிருக்கிறார்: ”என்னுடைய மூன்று காதலையோ நான் ’காந்தி, காஃபி, கம்பன்’ என்று சுருங்கக் கூறிவிடுகிறேன்.” (நான் அறிந்த தமிழ்மணிகள், சென்னை, 1971, ப.69).



            ஜெயகாந்தன் எழுதிய ”ஜெய ஜெய சங்கர” நாவலில் ஆதி என்று ஒரு கதாபாத்திரம். அவர் காந்தியவாதி. அவருக்கு காஃபி என்றாலே ஒரு வெறுப்பு. “ஆதி காபியை விஷம் என்று கருதினார். பல நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் வறுமைக்குக் காரணம் இந்தக் காபி என்கிற பேய்தான். ஒரு குடும்பத்தின் வருமானத்தில் கணிசமான பகுதியை அந்தப் பேய் வடிகட்டி இறுத்துக் கொள்கிறது என்றெல்லாம் ஆதி சொல்லுவார்” (ப.204).

            காந்திக்கு காஃபி அருந்துவது குறித்து எதிர்க்கருத்து இருந்திருக்கலாம். ஆனால், தென்னிந்தியாவில் இருந்து வருவோருக்காக கஸ்தூர்பாவின் சமையலறையில் தேநீரும் காஃபியும் தயாரிக்க அவர் அனுமதித்திருந்தார். தன் ஆசிரம விதியை ஒரு சிறுவனுக்காக அவர் தளர்த்திய நிகழ்வும் உண்டு.


            
ஒருமுறை அவரின் ஆசிரமத்தில் இருந்த தமிழ்ச் சிறுவன் ஒருவனுக்கு வயிற்றுப் போக்கு வந்துவிட்டது. அவன் காந்தியின் நேரடிக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்றான். உடல்நலம் சற்றுத் தேறி வந்தது. அந்தப் பையன் காஃபியின் ருசியில் மனதைப் பறிகொடுத்திருந்தான். உணவு இல்லாமல்கூட இருந்துவிடுவான். ஆனால் காஃபி குடிக்காமல் அவனால் இருக்க முடியாது. தமிழ்நாட்டில் தன் வீட்டில் பருகிய காஃபியின் மணமும் ருசியும் அவன் நினைவில் எழுந்து வாட்டிக் கொண்டிருந்தன. காந்தி அவனிடம் ஒருநாள் இப்படிக் கேட்டார்: “இப்ப ஒடம்பு தேறி நல்லாத் தெரியிறியே! ஒனக்குப் பசி கெளம்பீருக்குமே? சாப்பிட என்ன வேணும் சொல்லு, உப்புமாவா? தோசையா?” அவனுக்கு அந்த இரண்டு உணவுமே ஒவ்வாது என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டே காந்தி கிண்டலாக அப்படிக் கேட்டார். எனவே அவன் யோசிப்பதைப் பார்த்து அவர் சிரித்துக் கொண்டிருந்தார். அவனுக்குச் சட்டென்று ஒரு யோசனை உதித்தது. சற்றும் தாமதிக்காமல், “எனக்கு ஒரு கப் காஃபி கிடைக்குமா?” என்று அவன் காந்தியிடம் கேட்டான். காந்தி மேலும் சிரித்துக் கொண்டே சொன்னார்: “ஓ! திருந்தாத பாவிப்பயலே! அதுதான் வேணுமா ஒனக்கு?” இதைக் கேட்டதும் அந்தச் சிறுவனின் முகம் வாடிப் போவதைக் கவனித்துவிட்டு அவர் அவனிடம் சொன்னார்: “கட்டாயம் ஒனக்கு ஒரு கப் காஃபி கிடைக்கும், கவலைய விடு. மிதமான காஃபிதான் ஒன் வவுத்துக்கு நல்லது. சரி, காஃபியோட சேத்து சாப்பிட என்னா வேணும். உப்புமாவோ தோசையோ செய்யலாம்தான். ஆனா, காஃபிக்கு அது பொருந்தாது. சூடாக டோஸ்ட் போட்டுத் தரச் சொல்றேன். ஒரு தாம்பாளம் ஒனக்கு அனுப்பி வைக்கிறேன்.” இப்படிச் சொல்லிவிட்டு காந்தி போய்விட்டார்.

            அந்தப் பையன் காத்திருந்தான். ‘சபர்மதி ஆசிரமத்தில் காஃபி! நிச்சயமாக இது ஓர் அற்புதம்தான்! காந்தி கண்டிபானவரே தவிர கொடுமை செய்பவர் அல்லர். அவர் அன்பானவர்’ என்று எண்ணி அவன் சந்தோஷப்பட்டான்.  இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. கஸ்தூர்பா ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பார் என்பதைக் கூட யோசிக்காமல் கேட்டுவிட்டோமே, காந்தி போய் அவரைச் சங்கடப்படுத்த வேண்டியிருக்குமே என்றெல்லாம் அவனுக்கு எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது.

            சிறிது நேரத்தில் மரப் பாதுகையின் டக் டக் சத்தம் கேட்டது. காந்தி தன் கையில் தாம்பாளம் ஒன்றை ஏந்திக்கொண்டு அங்கே வந்தார். அது கதர் துணி போட்டு மூடப்பட்டிருந்தது. அதை அவன் முன் வைத்துத் திறந்தார். பிரட் டோஸ்ட்டும் ஆவி பறக்க ஒரு கப் காஃபியும் இருந்தன.   

            ”இந்தா, நீ கேட்ட டோஸ்ட்டும் காஃபியும். இதை நானே கலந்து கொண்டு வந்தேன் என்பதை மறந்துவிடாதே. நீ மதராஸிதானே, நான் நல்லா காஃபி போட்டிருக்கேனான்னு சொல்லு,” என்று காந்தி அவனிடம் சொன்னார்.

            ”ஆனா, இத நீங்களே ஏன் தூக்கிக்கிட்டு வந்தீங்க? வேற யாரையாச்சும் அனுப்பியிருக்கலாமே? ஒங்களுக்கு நான் சிரமம் கொடுத்துட்டேன். மன்னிக்கணும்” என்று அவன் சொன்னான்.

            ”சரி, சரி. ஒங் காஃபிய வீணாக்கிடாதே.  ஆறிப் போன காஃபி கெட்ட காஃபி. பாரு,   பா இப்போ ஓய்வு எடுத்துக்கிட்டிருக்கா. அவளைத் தொந்திரவு செய்ய வேணாம்னு நானே கலந்து கொண்டாந்தேன். சரி நான் இப்ப போறேன். தாம்பாளத்த வாங்கிக்க வேற ஆளு வருவாங்க” என்று சொல்லிவிட்டு காந்தி அங்கிருந்து சென்றுவிட்டார். அந்த காஃபி மிதமாகவும் இதமாகவும் இருந்தது.

            இந்த வரலாற்று நிகழ்வைப் படித்தபோது அந்தப் பையன் என் கற்பனையில் ஒரு குண்டுப் பையனாகத் தோன்றினான், உசிலை மணி போல. நரசுஸ் காஃபி விளம்பரத்தில் வரும் வாசகத்தை அவன் மாற்றிச் சொன்னான்: “பேஷ்! பேஷ்! காஃபின்னா காந்தி கலந்த காஃபிதான். ரொம்ப நன்னாருக்கு!”

            காஃபி என்பது இன்று மிக வேகமாகப் பரவி வரும் ஒரு கார்ப்பரேட் வணிகச் சந்தையாக மாறியுள்ளது. ஐ.டி துறையில் பணியாற்றும் இந்திய இளைஞரிடம், அமெரிக்கர்களைப் போல் காஃபி அருந்துதல் அதிகமாகியுள்ளது. சென்னையின் மிகப் பெரிய வணிக நிலையமான எக்ஸ்பிரஸ் அவென்யூவுக்குள் நுழைந்ததுமே அமெரிக்காவின் முன்னணி காஃபி பிராண்டான ஸ்டார் பக்ஸ் வரவேற்கிறது. ஐந்நூறு முதல் ஆயிரம் ரூபாய் வரை ஒரு கப் காஃபிக்குச் செலவு செய்து அருந்தும் நபர்களைக் காண முடிகிறது.



            வீட்டில் காஃபி கலந்து குடிக்கலாம் என்றால் அதிலும் ரசனை மெல்ல மெல்ல உயர் தரம் நோக்கித் தாவிச் சென்று விட்டது. கடைகளில் காஃபி என்றாலே ப்ரூ காஃபிதான் கொடுக்கிறார்கள். ஒரு நிலையில் எனக்கு அதன் ருசி பிடிக்காமல் போய் சன்ரைஸ் பிடித்திருந்தது. அப்போது யாரோ நெஸ்கஃபே கிளாசிக் ஒரு பாட்டில் வாங்கிக் கொடுத்தார்கள். அதை ருசி பார்த்த பின்னர் சன்ரைஸ் பிடிக்காமல் போய்விடவே சில ஆண்டுகள் தொடர்ந்து கிளாசிக் காஃபி வாங்கி இலவசக் கோப்பைகள் எல்லாம் சேகரித்தேன். இடையிடையே வேறு ப்ராண்டுகளையும் பரிசோதித்துக் கொண்டிருந்தேன். கிளாசிக் மாதிரி வரவில்லை. இதிலேயே நின்றுவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது அபூதபியில் இருந்து நெஸ்கஃபே கோல்டு வந்து சேர்ந்தது. அதன் ருசியில் கிளாசிக்கே சப்பென்று ஆகிவிட்டது. போத்தல் காலியானதும் திருச்சியிலேயே கிடைக்கிறதா என்று தேடியபோது ஒரு கடையில் அது ருஷ்ய எழுத்துக்களிட்ட வில்லையுடன் கிடைத்தது. இறக்குமதி செய்யப்பட்டது என்றார்கள். விலையும் சகாயமாக இருந்தது. அது தீர்ந்த பின்னர் மீண்டும் அந்தக் கடையில் கேட்டபோது வரவில்லை என்று சொல்லி விட்டார்கள். நல்லூழாக, பல்பொருள் அங்காடிகளில் கிடைத்தது. அப்படிப் போய்க் கொண்டிருந்தபோது டேவிடாஃப் என்று ஒரு பிராண்ட் வந்து மூளையைப் பிறாண்டவே அதில் ரிச் அரொமா, ஃபைன் அரோமா, க்ரீமெ அண்டு இண்டென்ஸ் என்று வரிசையாக வாங்கிக் கொண்டிருந்தேன். இன்னும் கடுங்காப்பி – எக்ஸ்ப்ரஸ்ஸோ – குடிப்பதற்கு மனம் வரவில்லை! ‘பால் இல்லாமல் காஃபியா? நெவர்’ என்ற அக்மார்க் இந்திய மனநிலையில்தான் இருக்கிறேன். ’கறந்த பசும்பாலை உடனே காய்ச்சி அதில் ஃபில்டர் காஃபி போட்டுக் குடித்திருக்கிறீர்களா? எங்க வீட்ல அப்படித்தான் குடிப்போம். அந்த ருசியெல்லாம் இதுல எங்கே வரப்போவுது?” என்று பானு அடிக்கடி சொல்வாள்.



            இடையில் ஒரு மாறுதலுக்காக ”ஸ்லீப்பி ஔள்” (தூங்கும் ஆந்தை) என்னும் பிராண்டில் அராபிக்கா காஃபி வாங்கினேன். இருமருங்கும் செவிமடல் துருத்திய ஆந்தை ஒன்றின் தலையை பாவித்து அதன் போத்தலும் மூடியும் வடிவமைக்கப் படிருந்தன. அதை அழகு பார்த்துக் கொண்டே காஃபி பருக நன்றாக இருந்தது. ஆனால் மனம் மீண்டும் நெஸ்கஃபேயின் பக்கம் திரும்பி சில நாட்களுக்கு முன் ஆல்டா ரிக்கா வாங்கி வந்தேன்.

            வீட்டுப் புழக்கத்துக்கே இப்படியெல்லாம் வகை வகையாகக் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது ஒருபுறம் இருக்க, ஷாப்பிங் என்று கிளம்பிப் போய் வெளியே சிற்றுண்டி சாப்பிட நேர்ந்தால் காஃபி பருக என்று அதற்கும் பலவிதக் கடைகள் முளைத்துள்ளன. பொதுவாக, காப்புச்சீனோ என்னும் வகை எல்லோரும் அறிந்த ஒன்றாகிவிட்டது. இரு தசாப்தங்களுக்கு முன்பே தமிழ்த் திரைப்பாடலில் அந்தச் சொல் ஒலித்துவிட்டது. ’காஃபி டே’வில் அமர்ந்தால் காப்புச்சீனோ, லாத்தே, மற்றும் மோக்கா ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்று பருகுவேன். மோக்கா என்பது காஃபியில் சாக்லேட்டும் கலக்கப்படுவது. ஐரிஷ் காஃபி என்று ஒன்றை மெனுவில் பல கடைகளில் போட்டு வைத்திருக்கிறார்கள். ஒருமுறை, மதுரை விஷால் டி மாலில் ஒரு கடையின் மெனுவில் அதைப் பார்த்துவிட்டு புதிதாகப் பருகிப் பார்ப்போமே என்று கேட்டேன். கடைக்காரர் பதறிப் போய், “பாய். இது என்னன்னு தெரியுமா?” என்றார். “புதுசா இருக்கேன்னு கேட்டேங்க” என்றேன். “இது லிக்கர் கலக்குற காஃபி பாய்” என்றார். அதிர்ந்து போய், “என்னங்க, காஃபி கடைல இதெல்லாம் விக்கிறீங்க? ஒங்க கடை பேரு கெட்டுப் போகாதா?” என்று கேட்டேன். ”அப்படியெல்லாம் ஆவாது பாய். இங்க வர்ற ஸ்கூல் பசங்களே இதுதான் வேணும்னு வாங்கிக் குடிச்சிட்டுப் போறாங்க” என்று அவர் சொன்னார். அதிலிருந்து புதிய பெயர்களை மெனுவில் பார்த்தாலே சற்றுத் தயக்கமாக இருக்கும். என்ன ஏது என்று விசாரிக்காமல் வாங்குவது இல்லை.

            தமிழில் ஆங்கிலம் அதிகமாகக் கலக்கிறதே என்று கவலைப் படுகிறோம். ஆங்கிலம் என்பதே பல்வேறு மொழிகளின் கலவைதான். எனவே ஆங்கிலம் கலக்கிறது என்றால் உலகில் உள்ள எல்லா மொழிகளும் கலக்கிறது என்றுதான் அர்த்தம். விஞ்ஞானத்தின் வழியாக ஆங்கிலம் வந்து கலப்பது தொடர்கிறது. ஐபேட், ஐஃபோன், டேப்லட் என்றெல்லாம் அது ஒரு பக்கம் கலந்து கொண்டு போகிறது. இராம கி ஐயா போன்றோர் தூய தமிழில் அவற்றுக்கான சொற்களைக் கண்டறிந்து அறிவித்தாலும் புழக்கத்தில் கொண்டு வர என்ன வழி என்று அறியாமல் தவிக்கிறோம். இன்னொரு பக்கம் உணவின் வழியாகப் பிற மொழிச் சொற்கள் வந்து கலப்பதும் நடக்கிறது. முன்பு அப்படித்தான் பிரியாணி, குலாப் ஜாமூன், ஜாங்கிரி, கபாப் எல்லாம் வந்தது. கிரில் சிக்கன், ஷவர்மா சில ஆண்டுகளுக்கு முன் வந்தன. பீட்சா பர்கர் ஆகியவையும் மிகப் பிரபலமாகிவிட்டன. ‘பீ…ட்சாவாம். பேரைச் சொன்னாலே சும்மா குமட்டுதுல்ல… ஹெஹ்ஹெஹ்ஹே’ என்று ஏதோ அறிவார்த்தமாக ஹாஸ்யம் பண்ணிவிட்டது போல் பேசும் பட்டிமன்ற அசடுகளையும் அதைக் கேட்டுச் சிரிக்கும் ரசிக மந்தைகளையும் தாண்டி அச்சொல் பொதுப் புழக்கத்தில் ஏற்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. இப்படி அருவருப்பு ஊட்டினால் அச்சொல் ஒழிந்துவிடுமா என்ன?

            இப்போது அறபியோ ஃபார்சியோ அல்ல, இத்தாலிய, எஸ்பஞோல், மற்றும் ஃப்ரெஞ்சுப் பதங்கள் உணவுப் பெயர்கள் வழி நுழைந்து கொண்டிருக்கின்றன. நூடுல்ஸ் என்பது ஜெர்மன் மொழிச் சொல்லாம். ஸ்பேகட்டி, பாஸ்ட்டா என்னும் இத்தாலியச் சொற்கள் இன்று வீட்டில் இலகுவாகப் புழக்கத்தில் வந்துவிட்டன. 


            
சென்ற மாதம் பானுவுடன் சிற்றுண்டி கொள்ள (திருச்சி, தில்லை நகர் இரண்டாம் குறுக்குச் சாலை மேற்கில் “கிரில் சிக்கன்” உணவகத்துக்கு அருகில்) ‘பராஷீ’ சென்றபோது நான் மோக்கா கேட்டேன். அவள் கொர்ட்டாடோ கேட்டாள். முன்னதாக, ஃபஹிட்டா சிக்கன் கேசடிய்யா மற்றும் சிக்கன் கொர்தோன் ப்ளியூ ஆகியவை உண்டோம். இதெல்லாம் எஸ்பஞோல் மொழிச் சொற்கள் என்று தெரிகிறது.  



            பத்து நாட்களுக்கு முன் நியூ ஜெர்சியிலிருந்து தம்பி யூனுஸ் வந்திருந்தான். அமெரிக்கர்கள் லிட்டர் கணக்கில்தான் காஃபி குடிப்பார்கள் என்பதைப் பற்றியும் பேச்சு ஓடிற்று. அவன் எக்ஸ்ப்ரஸ்ஸோ பருகுவானாம். அதைத் தயாரிக்க என்று வீட்டில் ஒரு இயந்திரம் வைத்திருப்பதாகச் சொன்னான். ஸ்டார் பக்ஸ் பற்றி நான் கேட்டேன். “இங்கே டீக்கடைல இழுத்து இழுத்து ஆத்தி கால் டம்ளருக்கு நுரை தள்ளி குடுக்குறாங்கல்ல, அதத்தான் அவனும் செய்றான். காத்த அடிச்சு ஏத்தி ஏத்தி பாதிக்குப் பாதி நுரை போட்டுத் தர்றான். பக்கிங்க, அத ஒரு ஃபேமஸ் பிராண்டுன்னு குடிக்கிதுங்க” என்றான்.

            ஒருநாள், பராஷீக்குப் போனோம். நாங்கள் மூவர் காப்புச்சீனோ கேட்க, பானு தனக்கு கொர்ட்டாடோ கேட்டாள். அது, காஃபி-நீரும் பாலும் சம விகிதத்தில் கலந்து போடப்படுவது. மிக மிதமாகவும் இதமாகவும் இருப்பதால் அவளுக்கு அது மிகவும் பிடித்திருந்தது. ’வயிற்றுக்கு இதமாக’ என்று சொல்லி, தமிழ்ச் சிறுவனுக்கு காந்தி கலந்த காஃபி என் நினைவுக்கு வந்தது. கோப்பைகளை அலங்கரிக்க காஃபியின் மீது நுரையால் இதயங்கள் வரைந்து கொண்டு வந்து பரிமாறுகிறார்கள். திறன் மிக்க ஒரு பாரிஸ்டா மிக லாவகமாகவும் நேர்த்தியாகவும் இதயங்களையும் பூக்களையும் காஃபியில் வரைந்துவிடுகிறார். காந்தி ஒரு பாரிஸ்டாவாக மாறி, தன் இதயத்தையே கலந்து பரிமாறிய கொர்ட்டாடோ ஒரு தமிழ்ச் சிறுவனுக்கு எப்போதோ கிடைத்துவிட்டது!

Friday, November 21, 2025

ஜாவிதின் குறுங்கதைகள்


{ நவம்பர் 2025 “இனிய திசைகள்” மாதிகையில் வெளியாகியுள்ள என் கட்டுரை. இதழாசிரியர் பேராசிரியர் சேமுமு அவர்களுக்கு நன்றிகள்.} 


            
எம் கல்லூரியின் மேனாள் துணை முதல்வரும் விலங்கியல் துறைத் தலைவருமான எம்.எம்.எஸ் என்று அழைக்கப்படும் எம்.எம்.ஷாஹுல் ஹமீத் அவர்கள் என் வாசிப்பு மற்றும் எழுத்து ஆகியவற்றின் மீது மதிப்பும் அக்கறையும் கொண்டவர். தேர்ந்த நல்ல வாசகர். அண்மையில் என் நூல்களில் சிலவற்றைப் பெற்றுக்கொண்டு நான் மறுக்கவே கூடாது என்று ஆயிரம் ரூபாயும் தந்தார். அகத்தில் ஆயிரம் நூலை வாசித்து அவ்வப்போது அழைத்துத் தன் கருத்துக்களைச் சொல்வார். சில நாட்களுக்கு முன் தன் மகன் ஜாவித் அஹ்மத் எழுதிய “The Hard Comfort” என்னும் குறுங்கதை ஒன்றை நான் வாசித்துக் கருத்துச் சொல்ல வேண்டும் என்னும் கோரிக்கையுடன் அனுப்பியிருந்தார்.


            
ஜாவித் தற்போது ஜித்தாவில் அல்-அபீர் குழுமத்தில் ‘Branding and Communication Manager’-ஆகப் பணியாற்றி வருகிறார். ஆங்கிலத்தில் flash fiction என்று சொல்லப்படுகின்ற, ஒரு பத்தியில் இருந்து ஒரு பக்க அளவில் அமைகின்ற குறுங்கதை வடிவத்தில் ஜாவித் பல கதைகள் எழுதியுள்ளார். அவை ஆட்டோ ஃபிக்‌ஷன் என்று சொல்லப்படும் தற்புனைவு பாணியிலானவை. அத்தகைய கதைகளைத் தொகுத்து ஏற்கனவே “Life’s Little Things” (வாழ்வின் சிறு சிறு பொருண்மைகள்) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டுள்ளார் (நோஷன் பிரஸ் வெளியீடு; அமஸானில் கிடைக்கிறது.) யுவன் சந்திரசேகர் எழுதிய ’மணற்கேணி’ நூல் போல் ஆங்கிலத்தில் ஒரு நூல். அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்துக்கு ஜாவித் தயாராகிறார் என்று காட்டுவது போல் இப்போது இந்த குறுங்கதை வந்திருக்கிறது. அதைத் தமிழாக்கித் தருகிறேன்:


            
”அது செப்டம்பர் 5, 1998. இரவு. பெய்யெனப் பெய்த மழை ஒருவழியாக ஓய்ந்திருந்தது. அத்துடன் என் பாசமிகு தாத்தாவின் ஓராண்டுப் போராட்டமும் முடிவுக்கு வந்திருந்தது. அவரின் உடலை நகர மருத்துவமனையில் இருந்து எங்கள் கிராமத்துக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடானது. அது நவீன ஆம்புலன்ஸாக இல்லை. இரக்கமற்ற சவ ஊர்தியாகவும் இல்லை. அது ஒரு சாதாரணமான, பாந்தமான வாகனம். வெண்ணிறக் கோடி சுற்றப்பட்ட தாத்தாவின் உடல் ஒரு பக்கம் சத்தமின்றிக் கிடந்தது. நான் எதிர்ப்பக்கம் அமர்ந்திருந்தேன், என் மாமாவுக்கும் குடும்ப நண்பர் ஒருவருக்கும் இடையில். குடும்பத்தில் மற்ற அனைவரும் முன்பே கிளம்பிவிட்டனர், என்னை இந்தச் சூழலின் வெறுமையான அணுக்கத்தில் விட்டுவிட்டு – ஆம்புலன்ஸில் என் முதல் பயணம், உயிரற்ற உடல் ஒன்றுடன்.

            அன்று காலையில்தான் பொறியியல் கல்லூரில் ஒன்றில் சேர்க்கையை வெற்றிகரமாக முடித்திருந்தேன். தாத்தாவிடம் சேதியைச் சொல்ல மருத்துவமனைக்கு விரைந்திருந்தேன். அவரால் பேச முடியவில்லை என்றாலும் கண்களில் நீர் முட்டி நின்றது – ஒரு மௌன சந்தோஷம். பல ஆண்டுகளாக அவர் தன் பேரப்பிள்ளைகளிடம் இரண்டே அறிவுரைகளைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார்: ‘நல்லா சாப்பிடுங்க, நல்லா படிங்க.’ அவரின் இறுதி நிமிடங்களில் என்றாலும், அவர் கேட்க விரும்பிய சேதியை அவருக்குச் சொல்லிவிட்டேன் என்பது எனக்கு ஆறுதலாக இருந்தது. இந்த ஞாபகங்களில் தொலைந்து போயிருந்தேன் என்றாலும் மழையில் நனைந்த புழக்கமற்ற சாலைகளில் வேன் தூக்கிப் போட்டுக்கொண்டு குலுங்கிச் சென்றதில் அசௌகரியமாக நான் நெளிந்து கொண்டிருந்தேன். வேனுக்குள் நிரம்பியிருந்த சங்கடமான நிசப்தத்தை எந்திரத்தின் உறுமல் மட்டுமே நடுநிசிக் காற்றுடன் சேர்த்துத் துளைத்துக் கொண்டிருந்தது.

            என் அசௌகரியத்தை உணர்ந்து என் மாமா குறுக்கிட்டார், “என்னப்பா கஷ்டமா இருக்கா?” நான் ஆமோதித்தேன், “முதுகு வலிக்குது மாமா, சீட்டெல்லாம் லொட லொடன்னு ஆடுது”. கண்ணாடிச் சில்லின் விளிம்பு நிசப்தத்தைக் கீறுவது போல் சில நொடிகள் சலனமற்று அவர் என்னை நோக்கினார். ‘ஒரு ஆம்புலன்ஸ்ல ஒனக்கு சௌகரியமா பயணிக்கணும்னா நீ பொணமாத்தாம்ப்பா இருக்கணும்” என்றார். அவர் சொன்னதன் நிதர்சனமான உண்மை என் அசௌகரியத்தை நீக்கிவிடவில்லை. ஆனால், அது என் மனப் பதற்றத்தைச் சிதறடித்து அப்பட்டமான ஒரு தரிசனத்தில் நிறுத்தியது: அக்கணத்தில் அந்த ஆம்புலன்ஸில் மிக சௌகரியமான ஒருவர் இறந்து கிடப்பவர்தான்.

            மீதிப் பயணம் எனக்கு ஆழமான தணியாத சிந்தனைக்குரிய வசதியான சூழலாக மாறியிருந்தது: நாம் வாழ்க்கை முழுவதும் சௌகரியங்களைத் துரத்திக் கொண்டு ஓடுகிறோம். மெத்தென்ற இருக்கையும், சுலபமான வழிகளும், பூரண அமைதியும் கிடைக்கச் சண்டை போடுகிறோம். ஆனால் வாழ்க்கை என்பது கொஞ்சம் அசௌகரியமாக இருக்க வேண்டிய ஒன்றுதான். நிலையான, ஓய்வற்ற இயக்கமே, உங்கள் முதுகு நோவதே, இலக்கை நோக்கிய பாடுகளே, நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்பதற்கான நிரூபணம். உச்ச ஓய்வை இவ்வளவு ஆரம்பத்திலேயே அடைய நினைக்காதீர்கள். பயணத்தின் அசௌகரியத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். இன்னமும் உங்களுக்கு ஓர் இலக்கு இருக்கிறது என்பதற்குச் சான்று அது மட்டுமே.”

            கதையை தமிழாக்கி முடித்துவிட்டேன். எவ்வளவு யோசித்தும் “The Hard Comfort” என்னும் தலைப்பைத் தமிழாக்குவதில் எனக்குத் திருப்தி வரவில்லை. சிரம சௌகரியம், கடின சௌகரியம், சிரம சுகம், கடின சுகம் என்றெல்லாம் பண்ணிப் பார்த்தால் ஏதோ ஃபஹத் ஃபாஸில், ஜோஜு ஜார்ஜ், துல்கர் சல்மான் போன்றோர் நடிக்கும் மலையாளத் திரைப்படத் தலைப்புகள் போல் தொனிக்கின்றன. அதனால், தலைப்பை அப்படியே விட்டு விடுகிறேன். தேவை எனில் நீங்களே தமிழாக்கிக் கொள்ளுங்கள்.

            இந்தக் கதை குறித்து என் கருத்து என்ன என்று நேற்று எம்.எம்.எஸ் சார் அழைத்துக் கேட்டார். இதில் சுட்டப்பட்டுள்ள வாழ்க்கை தரிசனம் குறித்துப் பேச ஆரம்பித்து பல்வேறு புள்ளிகளைத் தொடர்பு படுத்தி உரையாடல் சென்றது. நேற்று காலைதான் “திப்பு சுல்தானின் கனவுகள்” என்னும் நூலினைத் தமிழாக்கம் செய்து பதிப்பாளருக்கு அனுப்பி வைத்திருந்தேன். அதில் பின்னிணைப்பாக அல்லாமா இக்பால் எழுதிய ”சுல்தான் திப்பு கீ வஸிய்யத்” (திப்பு சுல்தானின் இறுதி அறிவுரை) என்னும் கவிதையையும் சேர்த்திருந்தேன்.

            இந்த உலகத்தில் சௌகரியமாக வாழ வேண்டும் என்றால் நீ இறந்தவனைப் போல் வாழ்ந்துவிடு என்னும் தத்துவத்தைச் சொல்வதாக ஜாவித் இந்தக் கதையை அமைத்திருக்க முடியும். “நீ மரணிக்கும் முன் மரணித்துவிடு” என்று ஸூஃபிகள் அடிக்கடி குறிப்பிடும் வாசகத்தைப் பிரதிபலிப்பதாக இந்தக் கதையை ஆக்கிவிட முடியும். ஆனால் ஜாவித் இந்தக் கதையை அதற்கு நேர் எதிரான நிலைக்கு நகர்த்திச் செல்கிறார்.

            ’உலகப் பற்றற்று இரு. உலக விடயங்களில் மரணித்தவனைப் போல் ஆகிவிடு” என்னும் உபதேசங்கள் பல நூற்றாண்டுகளாக வலியுறுத்தப்பட்டு முஸ்லிம் சமூகத்தை ஒரு மந்த நிலையில் ஆழ்த்திவிட்டது என்று மகாகவி இக்பால் கண்டார். எனவே, அசௌகரியங்களைத் தேடு, அதுவே வாழ்வின் உயிர்த்துடிப்புக்கு அடையாளம் என்று அவர் இந்தச் சமூகத்தை நோக்கி அறைகூவல் விடுத்தார். நபித்தோழர்களின் பாடுகளை அதற்கு ஆதாரமாகச் சுட்டிக் காட்டினார். அவரின் கவிமுழக்கத்தில் இருந்து நான்கு உதாரணங்கள்:

            1. ”இருத்தலின் பூங்காவை ஏதோ அந்நியனைப் போல் பார்க்காதே / இது பார்க்கப்பட வேண்டிய ஒன்றுதான், இதை மீண்டும் மீண்டும் பார்” (’குல்ஸாரே ஹஸ்த்-ஒ-பூத் ந பேகானாவார் தேக் / ஹே தேக்னே கீ ச்சீஸ் இஸே பார் பார் தேக்’ – நூல்: பாங்கே தாரா #50)

            2. “எம் பணி காலையும் மாலையும் பயணிப்பதே / செல்லுதல் செல்லுதல் நில்லாமல் செல்லுவதே” (’காம் அப்னா ஹே ஸுப்ஹ்-ஒ-ஷாம் ச்சல்னா / ச்சல்னா ச்சல்னா மதாம் ச்சல்னா’ – நூல்: பாங்கே தாரா #72)

            3. ”நீ ஒரு ராஜாளி, பறப்பதே உன் பணியாகும் / உன் முன்னே இன்னும் வேறு வானங்கள் இருக்கின்றன!” (’தூ ஷாஹீன் ஹே, பர்வாஸ் ஹே காம் தேரா / தேரே சாம்னே ஆஸ்மான் ஆர் பீ ஹேன்’ – நூல்: பாலே ஜிப்ரீல் #60)

4. “நீ காதலின் பாதையில் ஒரு பயணியாய் இருந்தால் தங்குமிடம் தேடாதே

லைலா உன்னுடன் வருகிறாள் எனில் அவள் பல்லக்கை ஏற்காதே!” (’தூ ரஹ்நவர்தே ஷவ்க் ஹே மன்ஸில் ந கர் கபூல் / லைலா பி ஹம்நஷீன் ஹோ தோ மஹ்மில் ந கர் கபூல்’ – நூல்: ஜர்பே கலீம் #78)

             மேலே நான்காவதாகச் சொல்லியிருக்கும் மேற்கோள் ‘திப்பு சுல்தானின் இறுதி அறிவுரை’ என்னும் கவிதையின் முதல் கண்ணி. இந்த விடயங்களைச் சொல்லிவிட்டு இன்னொரு பொருத்தத்தையும் பேராசிரியரிடம் சொன்னேன். அல்லாமா இக்பாலின் மகன் பெயர் ஜாவித். தன் மகனுக்குச் சொல்லும் அறிவுரையாக அல்லாமா இக்பால் அவர்கள் ‘ஜாவித் நாமா’ என்று ஒரு கவிதையும் எழுதியிருக்கிறார்.

            பேராசிரியர், ”இதுதான் வாசிப்புச் செய்யும் வேலை ரமீஸ். என் மகனுக்கு ஸூஃபித்துவமோ அல்லாமா இக்பாலோ அவர் சொல்லும் தத்துவங்களோ தெரியாது. அவர் தன் அனுபவத்தில் இருந்து கதையை இயல்பாக எழுதியிருக்கிறார். ஆனால் நீங்கள் அதைத் தொட்டுத் தொட்டு திப்பு சுல்தான் அல்லாமா இக்பால் என்றெல்லாம் எங்கெங்கோ போய் மீண்டும் ஜாவிதிடம் வந்துவிட்டீர்கள். அந்த இக்பாலின் மகன் பெயரும் ஜாவித் என்று இருக்கலாம். ஆனால் இந்த ஜாவிதின் தந்தையான நான் இக்பால் இல்லையே?” என்று சொல்லிச் சிரித்தார்.

            ’வாழ்வில் இருந்துதானே அல்லாமா இக்பாலும் தத்துவ தரிசனங்களை எடுத்தார்?’ என்று நான் திருப்பிக் கேட்டேன்.

            ஜாவிதின் சொந்த அனுபவ தரிசனத்தை குர்’ஆனின் வெளிச்சத்திலும் என்னால் மதிப்புடன் ஏற்க முடிகிறது:

            ”நிச்சயமாக சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது; மெய்யாகவே சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது” (ஃப-இன்ன ம’அல்-உஸ்ரி யுஸ்ரா; இன்ன ம’அல்-உஸ்ரி யுஸ்ரா – 94:5-6).

            ஜாவித் அஹ்மத் இன்னும் இதுபோல் நிறைய எழுத என் வாழ்த்துக்கள்.

Monday, November 17, 2025

கள்வனின் காதலி

 


            உலகப் புகழ் பெற்ற எகிப்திய எழுத்தாளரும் நோபல் விருதாளருமான நஜீப் மஹ்ஃபூழ் எழுதிய “அல்-லிஸ்ஸு வல் கிலாப்” என்னும் நாவலின் தமிழாக்கம் “களவாணியும் நாய்களும்” என்று டிசம்பர் 2024-இல் சீர்மை பதிப்பக வெளியீடாக வந்தது. அதற்கான விமர்சனக் கூட்டம் இணைய வழியில் 15-11-2025 அன்று மாலை நடந்தது. எழுத்தாளர் தோழர் கார்த்திகைப் பாண்டியன் நூல் விமர்சன உரை ஆற்றிய கூட்டத்தில் பார்வையாளர் நேரத்தில் நானும் கொஞ்சம் பேசினேன். அதற்கான காரணமும் தேவையும் இருந்தது.

            நஜீப் மஹ்ஃபூழின் இரண்டு நாவல்கள் இதுவரை தமிழில் வந்துள்ளன (இரண்டுமே சீர்மை பதிப்பக வெளியீடுகள்). முதல் நாவல் 1959-இல் வெளியான “அவ்லாதே ஹாரிதுனா” என்பதாகும். தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலையில் அறபிப் பேராசிரியராகப் பணியாற்றிய பஷீர் அஹ்மது ஜமாலி  இந்நாவலை ”நம் சேரிப் பிள்ளைகள்” என்னும் தலைப்பில் தமிழாக்கித் தந்துள்ளார். அறுநூறு பக்கங்களில் விரியும் இந்தப் பெருநாவல் எகிப்தில் மிகப் பெரிய கொந்தளிப்பையும் எதிர்ப்பையும் உண்டாக்கிய ஒன்று. நிகோஸ் கஸான்சாக்கிஸின் “தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் க்றைஸ்ட்”டுடன் இந்த நாவலை ஒப்பிடுகிறார்கள்.


            
நஜீபின் இன்னொரு நாவலைத் தமிழுக்குக் கொண்டு வந்திருப்பவரும் ஒரு ஜமாலிதான் [அதாவது, சென்னை பெரம்பூரில் உள்ள ஜமாலிய்யா மதரஸாவில் ஆலிம் (இஸ்லாமிய மார்க்க அறிஞர்) பட்டம் பெற்றவர் என்று பொருள்.] இவர், ஜமால் முகமது கல்லூரியில் அறபிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் முனைவர். அலி இப்ராஹிம் ஜமாலி. என் நண்பர்.

            இந்த நாவலை அவர் முதலில் ஆங்கிலத்தில்தான் மொழி பெயர்த்தார், அறபி மூலத்தில் வாசிக்கச் சிரமப்படும் தன் மாணவர்கள் புரிந்து கொள்வதற்காக. இதுவே கல்விப் புலத்தில் ஓர் ஆச்சரியம்தான். ‘அந்த அளவு ஆங்கிலப் புலமை இல்லை ஐயா, தமிழில் தாருங்கள்’ என்று கேட்ட மாணவர்களுக்காகத் தமிழிலும் பெயர்த்தார் என்பது மேலும் ஆச்சரியம். அப்போது இது பற்றி அவர் என்னிடம் கலந்துரையாடியபோது செய்யுங்கள் சீர்மையில் கொண்டு வரலாம் என்று சொல்லி சகோ. உவைஸிடம் பேசி அப்படியே அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து நூல் வெளியீடும் நிகழ்ந்தது.

            இந்த நாவலுக்கான தலைப்பை ஆங்கிலத்தில் “The Thief and Dogs” என்று அலீ இப்ராஹிம் ஜமாலி இட்டிருந்தார். தமிழில் “திருடனும் நாய்களும்” என்னும் தலைப்பு ஈர்ப்பாக இல்லை என்பதால் “கள்வனும் நாய்களும்” என்று இட்டுப் பார்த்திருக்கிறார். அது குறித்து ஒருமுறை என்னுடன் ஆலோசித்தார். “கள்வனின் காதலி” என்று கல்கி எழுதிய குறுநாவல் ஒன்று உண்டு. [இந்தத் தலைப்பை எஸ்.ஜே.சூர்யா தன் திரைப்படம் ஒன்றுக்குச் சூட்டினார். அதுதான் மாணவர்களுக்குத் தெரிகிறது என்பது வேறு விடயம்.] அதே போல் “கள்வனும் நாய்களும்” தலைப்பும் நன்றாகத்தான் இருக்கிறது என்றாலும் அலி இப்ராஹிம் அதனை விடவும் ‘சிக்கெனப் பிடிக்கும்’ தலைப்பு, அதாவது ’catchy’-யான தலைப்பு வேண்டும் என்று கேட்டார். “களவாணியும் நாய்களும்” என்னும் தலைப்பை நான் பரிந்துரைத்தேன். அது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதையே சூட்டிவிட்டார். இந்த நிகழ்வுகளை முந்தாநாள் நடந்த நிகழ்விலும் நினைவு கூர்ந்து குறிப்பிட்டார். [தலைப்பு நன்றாக இருக்கிறது என்று கார்த்திகைப் பாண்டியனும் பாராட்டினார்.]

            ”இருத்தலியப் பதற்றம் மீதான ஒரு நாவல்” (A novel of existential angst) என்று நான் இதைக் குறிப்பிட விரும்புகிறேன். விமர்சனக் கூட்டத்திற்குப் பின், இந்த நாவலின் உள்ளடக்கம் பற்றி மணிக்கணக்கில் பேசலாம் என்றும், ஒவ்வொருவரின் புரிதலுக்கு ஏற்ப பல்வேறு கோணங்களில் இந்த நாவலை விளக்க முடியும் என்றும் தெரிந்தது. இந்த நாவலின் protagonist ஆன ‘களவாணி’ ச’ஈத் மஹ்ரான் தவிர ஏனைய முக்கியப் பாத்திரங்கள்: 1. அவன் துரோகிகளாக (நாய்களாக) நினைக்கும் மூவர் – க) நபவிய்யா (ச’ஈத் மஹ்ரானின் முன்னாள் காதலியும் முன்னாள் மனைவியும் ஆன இவள் அவனை போலீசில் காட்டிக் கொடுத்துவிட்டு அவனின் நண்பனைத் திருமணம் செய்து கொண்டவள்.), உ) இலைஷ் ஸித்ரா (ச’ஈதின் முன்னாள் நண்பன்; நபவிய்யாவின் இந்நாள் கணவன்.), ங) றவூஃப் இல்வான் – பத்திரிகையாளர் (ச’ஈதின் ஆதர்ஷமான போராட்டத் தலைவர். அவனுக்கு கம்யூனிசக் கொள்கையைக் கற்பித்த ஆசான், அவன் திருட்டுத் தொழிலில் ஈடுபடுவதற்குத் தூண்டுகோலாக இருந்தவர், தற்போது அரசு அதிகாரத்தின் ஓர் அங்கமாக இயங்கி வளமான வாழ்க்கை வாழ்ந்து வரும் ஒரு பூர்ஷ்வா.); 2. முஅல்லிம் தறாஜான் – கஃபே வைத்திருப்பவர் (ச’ஈதின் நண்பரான இவர்தான் அவனுக்குக் கைத்துப்பாக்கி தருகிறார்.); 3. ஷைஃகு அலீ அல்-ஜுனைதி – ஸூஃபி குருநாதர் (ச’ஈதின் தந்தை இவரிடம் தீட்சை பெற்றிருந்தார். ச’ஈது ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அவனுக்குப் போதிப்பவர்.); 4. நூர் (எ) ஷலபிய்யா – வேசி (ச’ஈதை ஒருதலையாகக் காதலித்து வந்திருப்பவள். சூழ்நிலை காரணமாக பாலியல் தொழிலாளியாக மாறியவள், அவனுக்கு அடைக்கலம் தருபவள்).

            நாவலின் முழுக் கதையை அதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை சிலருக்கு வாய்ப்பே தராமல், அவர்களின் முயற்சிகள் வெற்றி பெற விடாமல் தொடர்ந்து அடித்துத் துவைத்துப் போடுகிறது. அப்படிப்பட்ட ஒரு ஆள்தான் ச’ஈத் மஹ்ரான். இதில் அவன் எங்கிருந்து ஸூஃபி மகானின் போதனைகளுக்குச் செவி கொடுப்பான். அவை அவன் காதில் ஏறுவதே இல்லை. முடியாது என்பதுதான் இங்கே செய்தி. ஆன்மிக வழியில் அவன் செல்ல முடியவில்லை என்றாலும், இன்னொரு வாசல் திறக்கத்தான் செய்கிறது. அது நூர் என்னும் விலைமகளின் வழியில் வருகிறது. அவளின் காதலையும் அவனால் உடனடியாக ஏற்க முடியவில்லை. அந்த அளவுக்கு துரோகிகளைப் பழிவாங்கும் உணர்வே அவனிடம் மிகைத்திருக்கிறது. அவர்களின் கதையை முடித்துவிட்டு நூருடன் எங்காவது போய் நல்ல வண்ணம் வாழலாம் என்று அவன் திட்டமிடுகிறான். அது தோல்வி அடைகிறது. திடீரென்று அவள் எங்கோ காணாமல் போய்விடுகிறாள். அவன் போலீசில் சரணடைய வேண்டியதாகிறது. அத்துடன் நாவல் முடிந்துவிடுகிறது.


            
’அவன் காதலித்துத் திருமணம் செய்த நபவிய்யா அவனுக்குத் துரோகம் செய்துவிடுகிறாள். எவளின் காதலை ஏற்காமல் புறக்கணித்தானோ, அந்த நூர் (எ) ஷலபிய்யா ஒரு வேசியாக மாறியிருந்தாலும் அவன் மீதான உண்மைக் காதலை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறாள். அவன் அவளை ஏற்காவிட்டாலும் பரவாயில்லை அவனுக்காகத் தன் உயிரையே கொடுக்கத் தயாராக இருக்கிறாள். இது எவ்வளவு விசித்திரமாக இருக்கிறது?” என்று கார்த்திகைப் பாண்டியன் சொன்னார்.

           இதைக் கேட்டபோது நான் ஜெயகாந்தன் ஒரு மேடையில் பேசியதை நினைவு கூர்ந்தேன்: “ரொம்ப விசித்திரமாக இருக்கிறது. நம்மைத் தெரிந்தவர்களை எல்லாம் நாம் இழந்துவிடுகிறோம்; நமக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் நம்மைத் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள்.”

            நஜீப் மஹ்ஃபூழ் நாவலை நிறுத்திய இடத்தில் அதன் கதை முடிந்து விடுகிறதா? ஒரு நாவலின் கதை முடிந்துவிட முடியுமா? ஒவ்வொரு நாவலாசிரியனும் கதையை ஒரு கட்டத்தில் வாசகனிடம் கையளித்துவிட்டு விலகிப் போகிறார் என்றே தோன்றுகிறது. ‘இதுவரை நீ ஈடுபாட்டுடன் இதை வாசித்து வந்துவிட்டாய். எனவே உன் மீது நான் நம்பிக்கை வைக்கிறேன். இதை நீ தொடர்ந்து எழுதிக்கொள்’ என்று நாவலாசிரியன் தன் வாசகனிடம் சொல்வதாகவே படுகிறது.

            இந்தக் கதையைத் தொடர்ந்து நீட்டிப்பதற்கான வாயில்களை நஜீப் மஹ்ஃபூழ் வைத்திருக்கிறார். என் கற்பனையில் அப்படி இதன் கதை நீண்டு சென்றது. தனித்துவமான கற்பனையெல்லாம் ஒன்றுமில்லை. பெரும்பான்மை வாசகருக்குத் தோன்றுவதுதான் எனக்கும் தோன்றுகிறது. ச’ஈத் எப்படியாவது நூருடன் சேர்ந்து ஒரு நிம்மதியான வாழ்க்கையை அடைய வேண்டும் என்பதுதான் அது. அப்படித்தான் நானும் கற்பனித்தேன். அப்போதுதான் ச’ஈத் மர்வான் மற்றும் நூர் ஆகிய இரண்டு பாத்திரங்களுக்கான ‘முகங்கள்’ எனக்குக் கிடைத்தன: ஃபகத் ஃபாசிலும் நஸ்ரிய்யாவும்.

            போலீசாரால் கைது செய்யப்பட்ட ச’ஈத் மர்வான் பின்னர் மனநிலை சரியில்லாதவன் என்று காரணம் காட்டி விடுதலை செய்யப்படுகிறான். மனநல விடுதியில் இரண்டு ஆண்டுகள் இருக்க வேண்டியதாகிறது. பின்னர் அங்கிருந்து வெளியேறி நூரைத் தேடிக் கொண்டு அலைகிறான். அவள் வெகு தொலைவில் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருக்கிறாள் என்றறிந்து அங்கே போகிறான். ஆங்கு அவள் செவ்விளக்குப் பகுதி ஒன்றில் கண்ணாடி அறைக்குள் (பளிக்கறை புக்க காதை!) இருக்கிறாள். அந்தக் கண்ணாடிச் சிறை உடைகிறது. அவள் அவனை நோக்கிப் பாய்ந்து வருகிறாள். என் கற்பனை அங்கே ’சுபம்’ போட்டுவிட்டது. உண்மையில், ஒவ்வொரு கதையிலும் வாசகனுக்குதான் நிம்மதி தேவைப்படுகிறது போலும்.

            இந்தக் கற்பனை 2020-இல் வெளியான ”ட்ரான்ஸ்” என்னும் மலையாளத் திரைப்படத்தின் கதையாகும் (இயக்கம்: அன்வர் ரஷீத்; திரைக்கதை: வின்செண்ட் வடக்கன்.) அதில் மதம் எப்படிக் கார்ப்பரேட் மயமாகிப் போகிறது, பெரு வணிகமாகிறது, எப்படி அது புரட்டு அற்புதங்களை (hoax miracles) உருவாக்கி மக்களை மூளைச் சலவை செய்து கொழிக்கிறது என்று காட்டியிருப்பார்கள். அதன் கருவியாக இருந்த விஜு பிரசாத் என்பவன் (அற்புதச் சுகமளிக்கும் பாஸ்டர் என்னும் தோரணையில் இவனின் புனைபெயர் ஜோஷுவா கார்ல்டன்), எஸ்தர் லோபெஸ் என்னும் விலைமாதுக்கும் மெய்க்காதல் உண்டாகிறது. மோசடி நிறைந்த போலி மத சாம்ராஜ்யத்தை விட்டு விலகி அவன் ஆம்ஸ்டர்டாமிற்குப் போய் அவளைச் சந்திப்பதாகக் கதை முடியும். என் சிந்தையில் அந்த மாந்தர்கள் ச’ஈத் மர்வான் மற்றும் நூரின் தொடர்ச்சியாகிப் போனார்கள். ஒரே கதையைத்தான் எல்லா எழுத்தாளர்களும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு கோட்பாடு உண்டு. அதற்கு இது ஒரு சான்று போலும்.

Tuesday, November 4, 2025

ரகசியங்களின் ரகசியம் - 3

 


இனி, பொருள்முதல்வாதம் அல்லது நாத்திகம் முன் வைக்கும் பார்வைகளும் இந்த நாவலில் பல இடங்களில் குறிப்பிடப்படுகின்றன. அவற்றில் சிலவற்றைத் தருகிறேன்:

1.“மறுமை என்பதொரு பகிர்மாயை… நம் எதார்த்த வாழ்க்கை சகிக்கக்கூடியதாக இருக்க வேண்டி உருவாக்கப்பட்ட ஒன்று” (‘The afterlife is a shared delusion… created to make our actual life bearable.’ P.5.)

2. “மனித மனம் மாற்றத்தை வெறுக்கிறது. நிலவும் நம்பிக்கைகளைக் கைவிடுவதை மனம் புறக்கணிக்கிறது. அதனால்தான், மதங்களின் நம்பிக்கைகளுக்கு எதிராக மலையளவு ஆதாரங்கள் இருந்தாலும் அவை பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்கின்றன.” (ப.174)

3. ஆன்மிகவாதிகளுக்கு உண்டாகும் அகக் காட்சிகள் எல்லாம் ஆழமான ஆன்மிக ஏக்கத்தினால் உருவாகும் வலிந்த துல்லியமான காட்சிகள்தாம் (vividly persuasive visions brought on by a profound spiritual longing.) லாங்டன் அடிக்கடி தன் மாணவர்களிடம் சொல்வார்: “இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. கானல் நீர் என்பது பாலைவனத்தில் செல்லும் தாகித்த பயணிகளால்தான் காணப்படுகிறது – சதுக்கத்தில் நடந்து கொண்டிருக்கும் கல்லூரி மாணவர்களால் அல்ல. நாம் எதைப் பார்க்க விரும்புகிறோமோ அதையே பார்க்கிறோம்.” (ப.193) [இந்தக் கடைசி வரிக்கு ஓர் உதாரணமாக இந்த நாவலின் நான்காம் அத்தியாயத்தில் காட்டப்பட்டிருக்கும் Hermann Grid என்னும் வரைபடத்தைச் சொல்லலாம்.]

4. அப்டன் சின்க்ளேர் சொன்னார்: டிமோர் மார்ட்டிஸ் எஸ்ட் பேட்டர் ரிலிஜனிஸ் – மரண பயமே மதத்தின் தந்தை. (ப.193)

இந்த நாவல் செக் குடியரசின் தலைநகரான ப்ரேக் (Prague) நகரில் நடக்கிறது. கதைப்படி இந்த நகரில் உள்ள ஃபிளமான்கோ பூங்காவின் மையப்பகுதியில் நிலத்துக்கடியில் இருக்கும் ஓரிடத்தில் சிஐஏ-வின் அதிகாரியான ஃபின்ச் என்பவன் ரகசிய ஆராய்ச்சிக்காக நவீன விஞ்ஞானக் கூடம் ஒன்றை நிறுவியிருக்கிறான். அதன் பெயர் Threshold என்பதாகும். Threshold என்பது வாசல் / முற்றம் / முன்றில் என்பதைக் குறிக்கும். “ப்ரேக் என்னும் சொல்லுக்கு முற்றம் என்றே பொருள்” (‘The word ‘Prague’ literary means ‘threshold’’. p.31) அந்த ரகசிய இடத்திற்குள் நுழைய கெஸ்னர் ஒரு காந்த அட்டை வைத்திருக்கிறாள். அது ஒரு கறுப்பு நிற அட்டை. அதன் ஒரு ஓரத்தில் PRAGUE என்று மட்டும் ஆங்கிலப் பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் மூன்றாம் எழுத்தான A வித்தியாசமாக எழுதப்பட்டிருப்பதை லாங்டன் கவனித்துவிடுகிறார். அது ஒரு குறியீடு என்று புரிந்துகொள்கிறார்.

அந்தக் குறியீடு தமிழுடன் தொடர்புடையது என்று அறிந்தபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அந்தப் பகுதியைச் சற்றே தமிழாக்கித் தருகிறேன்:

”கெஸ்னர் குனிந்து அந்த அட்டையைப் பார்த்தாள். ஒரு கணம் தடுமாறினாள். ’ஓ, இது ஒன்றுமில்லை,’ என்று தன் கைப்பையை மூடினாள், ’இது என் ஹெல்த் கிளப் அட்டை.’

”ஓ? ஆர்வமாகத்தான் கேட்டேன்,” என்றார் லாங்டன், “அதுல மூனாவது எழுத்து, அது என்ன?’

அவள் அவரை வித்தியாசமாகப் பார்த்தாள். “எது, A-ங்ற எழுத்தா?”

“அது A இல்ல” என்றார் லாங்டன். அதை அவர் தெளிவாகப் பார்த்திருந்தார். “அது ஒரு வேல் ஈட்டி (Vel Spear).”

இரண்டு பெண்களும் குழப்பத்துடன் பார்த்தனர்.

“மன்னிக்கணும், அது என்ன?” என்றார் கெஸ்னர்.

“அதோட குறுக்குக் கோடுதான் வித்தியாசம்,” என்றார் லாங்டன். “A-ல ஒத்தக் கோடுதான் இருக்கும். அந்த லோகோவ்ல அதுக்கு மூனு கோடுகளும் ஒரு பொட்டும் இருக்கு. மேல் நோக்கிய ஒரு ஈட்டிய நீங்க பாக்குறப்பவ்லாம் –அதான், கேப்பிட்டல் A-யோட வடிவத்த, மூனு குறுக்குக் கோடுகளும் ஒரு பொட்டும் வச்சாப்ல பாக்குறப்பவ்லாம் – அது குறிப்பான அர்த்தமுள்ள ஒரு விசேஷமான அடையாளம்தான்.”

“ஓ, அதுக்கு ஆரோக்கியம்னு அர்த்தமா?” என்று கேத்தரின் வெள்ளந்தியாகக் கேட்டாள்.

கொஞ்சம்கூட பக்கத்துல வரல என்று லாங்டன் நினைத்தார். ”வேல் ஈட்டீங்றது சக்தியைக் குறிக்கிற ஹிந்து குறியீடு. வேலோட முனை ஞானத்தைக் குறிக்கிறது, கூர் தீட்டப்பட்ட மனம், அறியாமையைத் துளைத்துச் சென்று உங்கள் பகைவர்களை வீழ்த்தும் மேலான அகப்பார்வை. ஹிந்துப் போக்கடவுளான முருகன் எங்கெ போனாலும் வேலையும் கொண்டு போவான்.” (ப.195)

முருகன் ஹிந்து மதத்தின் போர்க்கடவுள் என்று டான் ப்ரவ்ன் எழுதியிருக்கிறார். தமிழ் மொழியைப் பற்றியும் அவர் குறிப்பிட்டிருந்தால் மேலும் சரியாக இருந்திருக்கும், எனக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஏனெனில், தமிழ் எங்கெங்கெல்லாமோ சென்று பல மொழிகளில் உருமாறி இடம் பெற்றுள்ளது. உதாரணமாக, இந்த நாவலில் வரும் அமெரிக்கத் தூதரின் பெயர் Heide Nagel. இதில் இரண்டாம் பெயர் நேகல் அல்லது நாகல் என்று உச்சரிக்கப்படுகிறது. ஜெர்மன் மொழியில் இதன் அர்த்தம் ஆணி (nail) என்பது. ”ஆணி அடிச்சாப்ல அங்கயே நிக்கிறான்” என்று சொல்வார்கள் அல்லவா? பிடிவாதத்தை அது குறிக்கும். அதே அர்த்தத்தில்தான் ஆகுபெயராக இதை ஆட்களுக்கு வைத்துக் கொள்கிறார்கள், உறுதியானவள் என்று காட்டுவதற்கு. ஆனால் நகத்தையும் ஆங்கிலத்தில் nail என்றுதான் சொல்கிறார்கள். நகம் என்னும் தமிழ்ச் சொல் வடமொழியில் நகுன் என்றாகிறது. அதுவே ஜெர்மனியில் நாகல் அல்லது நேகல் என்று ஆகியிருக்கலாம்.

இதே போல் சம்ஸ்கிருத மொழியும் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் தாக்கம் செலுத்தியிருக்கிறது. இந்தக் கதை நடை பெறும் ஊரான Prague என்பதை செக் மொழியில் Praha என்றுதான் சொல்கிறார்கள், எழுதுகிறார்கள். அதற்கு முற்றம் அல்லது வாசல் என்று அர்த்தம் என்பதை மேலே பார்த்தோம் அல்லவா? எனில், சம்ஸ்கிருத வார்த்தையான ப்ரகாரம் என்பதே அதன் மூலச் சொல்லாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது [ப்ரகாரம் என்பது கோயிலின் கருவறையைச் சுற்றியுள்ள வெளிப்பகுதி. இதனை திருமுற்றம் என்றும் கூறுப.]

 Prague என்னும் ஊர் பழங்காலத்தில் இருந்தே மீவுளவியல் நிகழ்வுகளை வரவேற்கும் இடமாக இருந்துள்ளது. அதாவது அது மனிதப் பிரக்ஞை பிரபஞ்ச பிரக்ஞையை அணுகும் நிலை என்ற வாசல் / முற்றம் மனித மூளையில் திறக்கும் செயற்பாடுகளின் களமாக இருந்துள்ளது. அங்கேதான் இரண்டாம் ருடால்ஃப் என்னும் அரசன் பாதாள அறையான “ஸ்பெகுலம் ஆல்கமியே” என்னுமிடத்தில் ரசவாதக் கலையில் சோதனைகள் செய்தான். இங்கேதான் மீப்புலக்காட்சியர் (Clairvoyants) ஆன ஜான் டீ மற்றும் எட்வர்டு கெல்லி ஆகியோர் ஆவிகளுடனும் வானவர்களுடனும் பேசும் பயிற்சிகளை நிகழ்த்தினார்கள். இங்கேதான் மர்மமான யூத எழுத்தாளர் ஃப்ரான்ஸ் காஃப்கா பிறந்து வளர்ந்து எழுத்துப்பணி ஆற்றி, மெடமார்ஃபசிஸ் (உருமாற்றம்) என்னும் மீ-எதார்த்த நாவலை எழுதினார் (ப.31).

Avante Garde என்னும் கலகத்தன்மையும் புதுமுயற்சிகளும் கொண்ட கலைச் செயற்பாடுகளுக்கு வரவேற்பளித்த ஊரான ப்ரேகில் வாழ்ந்த காஃப்காவுக்கு வித்தியாசமான சிலை ஒன்று இருக்கிறது. ஜரோஸ்லாவ் ரோனா என்பவர் வடிவமைத்த அந்தச் சிலைக்கு ’சோச்சா ஃப்ரான்ஸே காஃப்கி’ என்று பெயர். தலையும் முன கைகளும் இல்லாத ஒருவன் தன் தோளில் காஃப்காவைச் சுமந்து செல்கிறான் என்பதாக அச்சிலை அமைந்துள்ளது. இது ஃப்ரான்ஸ் காஃப்கா எழுதிய Description of a Struggle என்னும் கதையை வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நாவலில் வரும் கோலம் என்னும் கதைமாந்தன் தன்னை அதனுடன் அடையாளம் காண்கிறான்.

 இந்த நாவலில் விஞ்ஞானம் குறித்த செய்திகள் அதிகம் இடம் பெற்றாலும் குறிப்பாக ஒரு செய்தியை நான் மிகவும் ரசித்தேன். அது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனையே வம்புக்கு இழுக்கும் அறிவியல் பகடி! கேத்தரீன் சொல்கிறாள்: “இரட்டையான இரண்டு அணுத்துகள்களுக்கு இடையிலான தொடர்பாடல் உடனடியானது என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் இயற்பியலாளர்கள் நிரூபித்துவிட்டனர்… ஆனால் நாம் இன்னமும் ‘ஒளியின் வேகத்தை விட விரைவாகப் பயணிப்பது எதுவுமில்லை’ என்னும் ஐன்ஸ்டீனின் மந்திரத்தை ஓதிக்கொண்டிருக்கிறோம்!” (ப.174)

கேத்தரின் அப்படிச் சொன்னதன் அடிப்படையில் அறிவியல் பரிசோதனை ஒன்று இருக்கிறது. இரட்டையான இரண்டு அணுத்துகள்களில் ஒன்றின் துருவ நிலையை காந்தம் கொண்டு திருப்பினால், அந்த இரட்டையில் மற்றொரு துகள் அதே அறையில் இருந்தாலும் அல்லது பல மைல்களுக்கு அப்பால் இருந்தாலும், உடனடியாக – அதாவது அதே சமயத்தில் – தானும் தலைகீழாகத் திரும்பிவிடுகிறது! பின்னாளில் செயற்கைக் கோளின் உதவியுடன் சீனர்கள் இந்தப் பரிசோதனையை நிகழ்த்தி உறுதிப்படுத்தினார்கள். அந்தப் பரிசோதனையில் இரட்டைத் துகள்கள் 1200 மைல்கள் இடைவெளியில் வைக்கப்பட்டிருந்தன!

நடத்தையொத்திசைவு (behavioral synchronization) என்று விஞ்ஞானத்தில் கூறப்படும் நிகழ்வும் உடனடியாக (instantly), அதாவது ஏக காலத்தில் நிகழ்வதேயாகும். இது பற்றிக் கேத்தரின் சொல்லும் கருத்தும் சுவையானது: “மரபார்ந்த விஞ்ஞானியர் சிலர் நடத்தை ஒத்திசைவு என்பது உண்மையில் ஒரு மாயை (illusion)… இந்த உயிரினங்கள் வெறுமனே ஒன்றுக்கொன்று எதிர்வினை ஆற்றுகின்றன. அது மிகத் துரிதமாக நிகழ்வதால் தாமதத்தை நம்மால் உணரமுடிவதில்லை என்று சொல்கின்றனர். பரிதாபம். மீன்களின் கூட்டம் ஒன்றிற்கு முன்னும் பின்னுமாக மிகுவிசை கேமராக்கள் வைத்துப் படம் பிடித்துள்ளனர். அந்தக் கேமாராக்கள் அணுக் கடிகாரங்களுடன் இணைக்கப்பட்டவை. அந்த மீன்களின் ஒத்திசைவு – ஒன்றுக்கொன்றான எதிர்வினை – ஒளியின் வேகத்தை விட துரிதமாக நிகழ்கிறது என்று அவை காட்டியுள்ளன!” (ப.236)

மனம்தான் ஒளியை விட வேகமானது என்பார்கள். ”விசையுறு பந்தினைப் போல் மனம் விரும்பிய படி செல்லும் உடல் கேட்டேன்” என்றார் பாரதியார். காக்கை குருவி மீன் எல்லாம் இந்த விசயத்தில் நம் போன்ற ஜாதி அல்ல போலும். அவற்றுக்கு மனத்தில் நிகழும் கணத்திலேயே உடலும் அதன்படி இயங்குகிறது. உண்மையில், அவற்றுக்கு உடல் வேறு மனம் வேறாக இல்லை போலும்!

இந்த நாவலில் நான் ரசித்த உத்திகளில் ஒன்று இதில் வரும் ஜோனாஸ் ஃபவ்க்மேன் என்னும் கதாபாத்திரத்தின் உருவாக்கம் சார்ந்தது. இவர் ஒரு நூல் பதிப்பாளர். இவரின் நிறுவனம் ‘பெங்குவின் ராண்டம் பதிப்பகம்.’ இது உலகின் மிகப் பெரிய பதிப்பகம். இதன் தலைமையகம் அமெரிக்காவின் மிட்-டவுன் மன்ஹட்டனில் இருக்கும் ராண்டம் ஹவுஸ் டவர் என்னும் இருபத்துநான்கு அடுக்கு மாடிக் கட்டடம். ஆண்டு ஒன்றுக்கு இருபதாயிரம் நூல்களை வெளியிட்டு ஐஞ்ஞூறு கோடி டாலர்கள் வருமானம் பார்க்கிறது. டான் ப்ரவ்ன் எழுதியிருக்கும் ”தி சீக்ரட் ஆஃப் சீக்ரட்ஸ்” என்னும் இந்த நாவலையும் அந்தப் பதிப்பகம்தான் வெளியிட்டுள்ளது! 1900-ங்களின் ஆரம்பத்தில் பென்னட் செர்ஃப் மற்றும் டொனால்ட் எஸ். க்ளாப்ஃபர் ஆகியோர் இந்தப் பதிப்பகத்தை ஒரு சிறிய மறுபதிப்பு நிறுவனமாகத் தொடங்கியபோது அவர்களின் இலக்கிய ரசனை ஒரு முகப்பட்டதாக இல்லாமல் பல்துறைகளில் விரவிக் கிடந்ததால், அதாவது  random-ஆக இருந்தால் ‘பெங்குவின் ராண்டம் பதிப்பகம்’ என்று பெயர் வைத்தார்களாம். இன்று அந்தப் பதிப்பகம் உலகெங்கும் புத்தகங்களை வெளியிடுகிறது. ஓர் உதாரணம் தருகிறேன்: நம் தமிழ் கூறு நல்லுலகின் சிறந்த ஆய்வறிஞரான ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய ஆங்கில நூல்களான “லவ் ஸ்டாண்ட்ஸ் எலோன்’, மற்றும் ‘ஸ்வதேஷி ஸ்டீம்’ ஆகிய நூல்களை இந்தப் பதிப்பகமே வெளியிட்டுள்ளது!

இந்த நாவலின் ஆரம்பத்தில் டாக்டர் கெஸ்னர் நினைக்கிறார்: “நீ இறக்கும்போது, நீ இறக்கிறாய். முற்றுப் புள்ளி” (’When you die, you die. Full stop.” P.6). இந்தப் பொருள்முதல்வாதப் பார்வைக்கு எதிரான கருத்துமுதல்வாதம் இந்த நாவலில் வெற்றி பெறுவதாகக் கதை அமைகிறது. பருவுடலின் மரணத்திற்குப் பிறகும் பிரக்ஞை அல்லது வாழ்க்கை தொடரும் என்னும் சிந்தனை முன் வைக்கப்படுகிறது. இதைத்தான் நாவலின் இறுதிப் பகுதியில், ராபர்ட் லாங்டன் “ரகசியங்களின் ரகசியம்” (The Secret of Secrets) என்று சொல்கிறார். ஆன்மிகப் புலத்தில் இது வியக்கத்தக்க ஒரு ரகசியம் இல்லைதான். ஆனால், விஞ்ஞானப் புலத்தில் இது மாபெரும் ரகசியத்தின் திறப்புதான்.

இந்த நாவலை நான் வாசிக்க ஆரம்பித்த நாளில் ’ஆவி பறக்க’ [குறியீடெல்லாம் இல்லை -  நீராவிதான்] சுடச்சுட காஃபி ஒரு கப் அருந்திவிட்டுதான் ஆரம்பித்தேன். அமெரிக்காவின் முதன்மை காஃபி நிறுவனமான ’ஸ்டார் பக்ஸ்’ பிராண்டின் இலச்சினை பற்றி நாவலின் இறுதிப் பகுதியில் ஒரு சேதி இருக்கிறது. ராபர்ட் லாங்டன் அந்த காஃபியைப் புறக்கணிக்கிறாராம். காரணம், “egregious misuse of a classical symbol” (செவ்வியல் குறியீடு ஒன்றை அருவருப்பூட்டும் வகையில் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.)

’ஸ்டார் பக்ஸ்’ காஃபி இலச்சினையில் அப்படி என்னதான் இருக்கிறது? லாங்டனே சொல்கிறார்: “ஸ்டார் பக்ஸ் கடல்கன்னிக்கு இரண்டு வால்கள் உள்ளன! அதாவது அவள் ஒரு கடல்கன்னியே அல்ல. அவள் ஒரு சைரன் – அதாவது, கடலோடிகளை வழி தவறச் செய்து கப்பலைக் கவிழ்த்து அவர்களை அழித்துவிடும் ஒரு தீய வசியக்காரி!” (பக்.622-623).

இந்த நாவலில் அமெரிக்க மேலாதிக்க மனநிலையைச் சற்றே டான் ப்ரவ்ன் வெளிப்படுத்தியுள்ளார் என்று கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டு அதற்குச் சான்றாக ஹெய்டே நேகல் பேசும் பகுதியைக் காட்டியிருந்தேன். இந்த நாவலின் மையப் பொருண்மை பிரக்ஞை என்பது மூளையில் கட்டுப்பட்ட ஒன்றன்று, அது பிரபஞ்சம் அளாவியது, அது தனி மனிதர்களின் மூளைக்குள் சிறிய அளவில் உள்வாங்கப்படுகிறது என்பதுதான். ஞானியர் மற்றும் அறிவர்களின் படங்களில் சித்திரிக்கப்படும் ஒளிவட்டம் (Halo)வின் சுடர்கள் அதையே குறிப்பதாக டான் ப்ரவ்ன் காட்டியுள்ளதையும் ஏற்கனே பார்த்தோம். அமெரிக்காவின் அடையாளமாக இருக்கும் சுதந்திர தேவி சூடியிருக்கும் மகுடத்தில் நீட்டிக்கொண்டிருக்கும் சுடர்கள் அதையேதான் குறிக்கின்றன என்று அவர் அர்த்தப்படுத்துகிறார். அமெரிக்காவே அத்தகைய மனவளத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு தேசம்தான் என்கிறார்.


நாவலின் கடைசிப் பக்கத்தில், லாங்டனும் கேத்தரீனும் அமெரிக்காவிற்குத் திரும்பி வந்து சுதந்திர தேவியின் சிலையைப் பார்க்கிறார்கள். குறிப்பாக அதன் ஏழு கொம்புகள் உள்ள மகுடத்தை அவதானிக்கிறார்கள். அந்தப் பகுதியைத் தமிழாக்கித் தருகிறேன்: “ஏழு கொம்புகள், ஒவ்வொன்றும் தோராயமாக ஒன்பது அடி நீளம். அவை, இந்த இளம் தேசத்தில் இருந்து வெளியே பாய்ந்து உலகின் ஏழு கண்டங்களையும் வெளிச்சமாக்கப் போகும் அறிவுச் சுடர்களைக் குறிப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அது இதற்கு நேரெதிரானது என்பதே உண்மை. அறிவுச் சுடர்கள் உள்நோக்கிப் பாய்கிறது என்பதையே அது காட்டுவதாக கேத்தரீன் நம்புகிறாள். ஏழு கண்டங்களில் இருந்தும் பண்பாடுகள், மொழிகள், மற்றும் கருத்துக்களின் சுடர்கள் அதனுள் பாய்வதை அது குறிக்கிறது. அவை அனைத்தும் உள்பாய்ந்து கரைந்து ஒன்றாகும் கலமாக அமெரிக்க மனம் இருக்கிறது.” (ப.671).

உண்மையில் அமெரிக்கா அப்படித்தான் இருக்கிறதா? உலகின் அனைத்து ஞான மரபுகளுக்குமான வாசிப்புக்குக் கிடைக்கும் நூல்கள் அமெரிக்காவில் எழுதப்பட்டு வருகின்றன. அத்தகைய நூல்களின் ஒரு சிறு சேகரம் என்னிடம் உண்டு. அமெரிக்காவில் ஜென் மடாலயங்கள் உள்ளன, யோகா நிலையங்கள் உள்ளன, ஸூஃபி  நெறியின் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன. பரதநாட்டியப் பள்ளிகள் உள்ளன, இகெபானாவுக்கும் ஓரிகாமிக்கும் பள்ளிகள் உள்ளன. இவ்வளவு ஏன், இங்கிருந்து அமெரிக்கா சென்றுள்ள தமிழர்கள் அங்கே இப்போது பறையிசைக்குப் பள்ளிகள் திறந்துள்ளனர். அனைத்துக்கும் இடமளிக்கும் ஒரு தேசம்தான் அது என்பதில் ஐயமில்லை. இந்தப் பன்மியத்தை அது எந்த அளவு நேர்மையாக நிலைநிறுத்துகிறது என்பதுதான் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று.

இனி, கட்டுரையின் ஆரம்பத்தில் நான் ‘கடைசியில் சொல்கிறேன்’ என்று சொன்ன நூற்பட்டியல்:

1.      “தி ஹோலி ப்ளட் அண்ட் தி ஹோலி க்ரெய்ல்” (1982) – மைக்கேல் பைஜண்ட், ரிச்சர்ட்ல் லெய், மற்றும் ஹென்ரி லின்கன்.

2.      ”ஜீசஸ் லிவ்டு இன் இந்தியா” (1983) – ஹோல்கர் கெர்ஸ்டன்.

3.      ”தி வைஃப் ஆஃப் ஜீசஸ்” (2013) – ஆந்தொனி லெ டோன்.

4.      ”தி சீக்ரட் ஹிஸ்டரி ஆஃப் தி வோர்ல்ட்” (2007) – மார்க் பூத் / ஜொனாதன் ப்ளாக்.

5.      ”எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் சீக்ரட் சொசைட்டீஸ்” (2007) – டேவிட் வி பார்ரட்.

6.      ”தி சைன்ஸ் ஆஃப் லியோனார்டோ” (2007) – ஃப்ரிட்ஜாப் காப்ரா.


(இந்த நூலை நான் ஃப்ரிட்ஜாப் காப்ராவுக்காகத்தான் வாங்கினேன். ஏற்கனவே அவரின் ‘தி டாவோ ஆஃப் ஃபிசிக்ஸ்’ நூலை வாசித்து அவர் மீது மதிப்பு உண்டு.)


(முற்றும்)