Monday, July 14, 2025

சூத்திரம் போல் வேண்டுமடா மதிப்பீடு

 


 

            கவிதை, நாவல், சிறுகதை, நாடகம் என்று பல வடிவங்களில் இலக்கியம் எழுதப்படுகிறது. அடுத்து அவற்றின் மீது விமர்சனமும் மதிப்பீடும் எழுகின்றன.

            விமர்சனமும் மதிப்பீடும் காய்தல் உவத்தல் இன்றிச் செய்யப்பட வேண்டும் என்று நியதி இருந்தாலும் அது முற்றிலும் அவ்வாறு நிகழ்வதில்லை. அதில் தவறொன்றும் இல்லை.

            ஓர் இலக்கியம் எல்லோருக்கும் ஒரே மாதிரி பிடித்திருக்கும் என்று கூற முடியாது. ஒருவருக்கு இனிக்கும் அதே இலக்கியம் வேறொருவருக்குக் கசக்கிறது. எனவே, விமர்சனங்களும் மதிப்பீடுகளும் வேறு படுகின்றன.

            ’இப்போதெல்லாம் இலக்கியம் படைக்க நிறைய பேர் இருக்கிறார்கள். உருப்படியாக விமர்சனம் எழுதத்தான் ஆளில்லை. நீங்கள் எழுதுங்கள் சார்’ என்று அவ்வப்போது என்னிடம் கவிஞரும் கதைஞருமான ஜார்ஜ் ஜோசப் சொல்லி வருகிறார்.

            எனக்கு விமர்சனக் கட்டுரைகள் எழுத நினைத்தாலே அலுப்புத் தட்டுகிறது. அத்துறையில் காத்திரமாகத் தொடர்ந்து இயங்க என்னால் இயலாது என்றே உணர்கிறேன்.

            எனினும், தோழர்களுடன் உரையாடும்போது இலக்கியம் குறித்த விமர்சனங்களையும் மதிப்பீடுகளையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளவே செய்கிறோம். மிகப் பெரிய ஆராய்ச்சியின் முடிவை ஓரிரு வாக்கியங்களில் செறிவாகச் சொல்லிவிடுவது நிம்மதியாகவும் திருப்தியாகவும் இருக்கிறது.


            இதற்கு முன்னோடி ‘இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய விடிவெள்ளி’யாய் வந்த மகாகவி பாரதி.

            ஈராயிரம் ஆண்டுகளின் இலக்கிய நெடுவெளியை ஆராய்ந்து அவன் உரைத்த தீர்ப்பினைத் தமிழுலகம் ஒப்புகின்றது; அதைத் திருத்தும் தேவை இன்றி அப்படியே இதுகாறும் செப்புகின்றது. அவன் தந்த மதிப்பீடு அனைவரும் அறிந்ததுதான்:

            ”யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்

வள்ளுவர் போல் இளங்கோவைப் போல்

பூமிதனில் யாங்ஙனுமே பிறந்ததில்லை

உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை”

            ’ஊருக்கு நல்லது சொல்வேன், எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்’ என்னும் கோட்பாடு கொண்ட பாரதி, இங்கே தனக்குத் தெரிந்த உண்மையைச் சொல்லியிருக்கிறான். ஆனால், அந்த உண்மையைத் தெரிந்து கொள்ள அவன் நீண்ட ஆராய்ச்சியைச் செய்திருக்கிறான் என்பது ‘யாமறிந்த புலவரிலே’ என்பதில் இருந்து தெரிய வருகிறது. அதற்காக, தான் அறிந்த மொழிகளில் விரிவாக வாசித்து அளந்திருக்கிறான் என்பது “பூமிதனில் யாங்ஙனுமே” என்பதில் வெளிப்படுகிறது.

            இதிலிருந்தே கவிதைக்கும் அதன் விமர்சனத்துக்குமான கோட்பாடு ஒன்றினை வரைந்து கொள்ள முடிகிறது. ’மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்’ என்று கவிதைக்கு பாரதி ஏற்கனவே கோட்பாடு தந்திருக்கிறான். செறிவும் சுருக்கமும் மந்திர லட்சணம். இவ்வழியில், ‘சூத்திரம் போல் வேண்டுமடா விமர்சனம்’ என்று ஒரு கோட்பாடு என் எண்ணத்தில் எழுகிறது.

            வேதங்களுக்கு விளக்கவுரை செய்வதற்கும் இந்த நியதியை அவன் சமிக்ஞை காட்டியிருக்கிறான்: “வேதத் திருவிழியாள், அதில் மிக்க பல்லுரை எனும் கரு மை இட்டாள்.”

            ’வேதம் விழி போன்றது. அதற்கான உரை கண்ணுக்குத் தீட்டும் மை போன்றது. மையை அதிகமாக அள்ளி அப்பக் கூடாது. அது கண்ணுக்கு அழகு நல்காது. அது கண்ணுக்குக் கேடாகிவிடும். மையைக் குறைவாகவே தீட்ட வேண்டும். அதுபோல், வேதத்துக்கு கொஞ்சமாகவே விளக்கம் உரைக்க வேண்டும்’ என்று பாரதி கூறுவதாக இதன் உட்பொருளை தி.ந.இராமச்சந்திரன் அவர்கள் பேசிக் கேட்டிருக்கிறேன்.

             மதிப்பீடுகள் உரைத்தால் இப்படி இருக்க வேண்டும். சிலர் அதை வார்த்தை விளையாட்டாக மாற்றி விடுவது உண்டு. உடன் என் நினைவுக்கு வரும் உதாரணங்கள் இரண்டு:

  1. “தமிழுக்கு கதி கம்பனும் திருவள்ளுவனும்” [பாரதி சொன்ன மூவரில் இங்கே இளங்கோவுக்கு இடம் இல்லை. காரணம் ’கதி’ என்னும் சொல்லில் இகரம் இல்லை. இது ஓர் இலக்கிய மதிப்பீடா? அப்படியானால் தமிழுக்கு விதி? என்று கேட்டால் வில்லிப்புத்தூராரும் திருவள்ளுவரும் என்பார்களா?]
  2. “மேத்தா புதுக்கவிதையின் தாத்தா” என்று முன்பெல்லாம் பிதற்றிக் கொண்டிருந்தார்கள். பேராசிரியன்மார் கூட வகுப்பறைகளில் இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். பேச்சுப் போட்டிகளில் கிள்ளைகள் இதை அப்படியே ஒப்பிக்கின்ற தொல்லைகள் உண்டு. [மு.மேத்தா ஒருவேளை பெண்ணாக இருந்திருந்தால் ‘புதுக்கவிதையின் ஆத்தா’ என்றிருப்பார்கள்.]

பாரதி சொன்ன பாணியில் நானும் ஃபார்சி மொழியின் மகாகவிகளுக்கு ஒரு தர வரிசை இட்டிருக்கிறேன்:

“யாமறிந்த கவிஞரிலே ரூமியைப் போல்

            அத்தார் போல் சனாயீ போல்

பூமிதனில் யாங்ஙனுமே பிறந்ததில்லை

            உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.”

ஹாஃபிழ் ஷீராஜி, இமாம் சஃ’தி, நிஜாமி என்று இந்தத் தர வரிசை தொடரும். உலகப் புகழ் பெற்ற உமர் கய்யாம் அதில் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பார். இந்த வரிசையை உருவாக்க நான் நூறு நூற்களையாவது படித்திருக்கிறேன்.

குறிப்பிட்ட ஆளுமை ஒருவரைப் பற்றி அவரின் சாராம்சத்தையே ஒற்றை வரியில் காட்டுவது போல் மதிப்பீடு செய்து சூத்திரம் உரைப்பது அத்தனை எளிதல்ல. அந்த விதத்தில் என்னை வியக்க வைத்தவர் பி.டி.மெஹத்தா. இந்தியாவின் மாபெரும் ஆன்மிக ஆளுமைகள் இருவரைப் பற்றி அவரிடம் கருத்து கேட்கப்பட்டது. அரவிந்தர் பற்றி அவர் சொன்னார்: “ஒரு வலிய இருப்பு” (A mighty existence). ரமண மகரிஷி பற்றி அவர் சொன்னார்: “ஒரு வலிய இருப்பின்மை” (A mighty non-existence).

தமிழில் இருபதாம் நூற்றாண்டில் பாரதியில் புதுமை காட்டிய மரபுக் கவிதை என்னவெல்லாம் ஆகி வந்தது என்பது பற்றி க.நா.சு உரைத்த மதிப்பீடு புருவம் உயர்த்த வைத்தது:

“பாரதிக்குப் பின் தமிழ்க் கவிதை பாரதிதாசனில் வேகம் காட்டியது. தேசிக விநாயகம் பிள்ளையின் கவிதையில் எளிமை காட்டியது; ச.து.சு.யோகியாரின் கவிதையில் அலங்காரம் காட்டியது. நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் கவிதையில் வசனமேயாகிவிட்டது என்று சொல்லலாம்.”

அதேபோல், சிறுகதை என்னும் இலக்கிய வகைமை தமிழில் எப்படிப் பரிணமித்து வந்தது என்பது பற்றி பிரபஞ்சன் மதிப்பிட்டு உரைக்கிறார் இப்படி: “பாரதி முயன்றார், ஐயர் எழுதினார், புதுமைப்பித்தன் சாதித்தார்.”

தமிழ்ப் புதுக்கவிதையில் மூவர் பற்றிய என் அவதானத்தை ரத்தினச் சுருக்கமாக நான் குறிப்பிடுவது உண்டு. மரபுக் கவிதையின் தொடை உத்திகள் மூன்று, அந்த மூவரிடம் ஆளுக்கு ஒன்றாகச் சிறப்படைந்துள்ளன. அதை நான் இப்படிச் சொல்வேன்: “முரணுக்கு அப்துல் ரகுமான்; மோனைக்கு வைரமுத்து; இயைபுக்கு வாலி.”

மூன்றுக்கும் சான்றுகள் காட்டட்டுமா?


அ) முரணுக்கு அப்துல் ரகுமான்:

1.      “புத்தகங்களே! சமர்த்தாய் இருங்கள். குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்!”

2.      “அவள் கண்ணைப் பார்க்கிறேன். வெள்ளை வானில் கறுப்பு நிலா.”

3.      ”சகுந்தலை நோக்கினாள். துஷ்யந்தனின் மனதில் மலர் தைத்தது.”

 ஆ) மோனைக்கு வைரமுத்து:

1. “நிலாத் தட்டு / நட்சத்திரச் சோறு / கைகழுவக் கடல் / கைதுடைக்க மேகம் / கனவின் விழிப்பில் / கக்கத்தில் நீ…. // மூங்கில் தோட்டம் / மூலிகை வாசம் / பிரம்பு நாற்காலி / பிரபஞ்ச ஞானம் / நிறைந்த மௌனம் / நீ பாடும் கீதம்.”

2. ”உன்னோடு நானிருந்த / ஒவ்வோர் மணித்துளியும் / மரணப் படுக்கையிலும் / மறக்காது கண்மணியே! / இன்று நினைத்தாலும் / இதயம் கனக்கிறதே /  அந்த நினைவுகளின் / அலைவந்து அடிக்கிறதே.”


இ) இயைபுக்கு வாலி:

1. ”வாலில்லை என்பதனால் வாலியாகக் கூடாதா?

     காலில்லை என்பதனால் கடிகாரம் ஓடாதா?”

2.”மாண்புமிகு மழையே! / உனக்கொரு மடல்! – நீ / எவ்வளவு பெய்தாலும் / ஏற்க வல்லது / கடல் கொண்ட குடல் / ஏற்க ஏலாதது / குடல் கொண்ட உடல்! / நீ பெய்யலாம் நூறு அங்குலம் / அன்னணம் நீ பெய்தால் / என்னணம் பிழைக்கும் எங்குலம்? / … / அளவோடு பெய்தால் உன் பேர் மழை / அளவின்றிப் பெய்தால் உன் பேர் பிழை /… / மழைக்கே தாகமா? / எமனுக்கு இன்னொரு பெயர் மேகமா?”

ஆளுமைகள் பற்றி ஆளுமைகளே அளந்து சொல்லும் மதிப்பீடுகள் இந்த வகையில் அமைவது உண்டு. கண்ணதாசனைப் பற்றிக் கவிக்கோ அப்துல் ரகுமான் செய்த மதிப்பீடு: “மீன் விற்கும் சந்தையில் விண்மீன்கள் விற்றவர்.” இந்த ஒற்றை வரி கண்ணதாசனை இரவெல்லாம் உறங்க விடவில்லையாம்.

கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றி க.பஞ்சாங்கம் ஒரு நூல் எழுதினார். கவிக்கோவின் ஆளுமையைக் காட்டும் சுடர்மிகு சூத்திரம் ஒன்றை அதன் தலைப்பிலேயே குறிப்பிட்டிருந்தார்: “கவிதைக் கனியால் உண்ணப் பட்டவர்.”

அடடா! எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார்! இதை விளங்க வேண்டும் எனில் “பால்வீதி” என்னும் நூலில் மெழுகுவத்தி பற்றிக் கவிக்கோ எழுதிய இந்தக் கவிதை தெரிந்திருக்க வேண்டும்:

 தீப மரத்தின்

 தீக்கனி உண்ண

 விட்டில் வந்தது;

 கனியோ

 விட்டிலை உண்டது.

 

அர்த்தமற்ற சொற்கள் ஆயிரம் உரைப்பதை விட அர்த்தமுள்ள சில சொற்களால் பெரிய கருத்துக்களைப் பேசிவிடலாம். மனமே! வார்த்தை வலைகளுக்குள் சிக்காத அர்த்தங்களை நீ சிக்கனச் சொற்களால் சிக்கெனப் பிடி!

 

 

Wednesday, July 9, 2025

யா(தே) ஹுசைன் - 2

 


            கர்பலா களத்தில் இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் மரணத்தைப் புன்முறுவலுடன் வரவேற்றார்கள். இறைவனின் விதிப்புக்குத் தன்னை ஒப்படைத்துக் கொள்வதில் அத்தனை தெளிவும் உறுதியும் இன்பமும் இறைத் தூதர்களுக்கும் இறை நேசர்களுக்கும் மட்டுமே சாத்தியமாகும். அவர்களின் உடல் பகைவரின் அம்புகளால் துளைக்கப் பட்டிருக்கலாம். ஆன்மாவோ மிக ஆனந்தத்துடன் அல்லாஹ்வின் சந்நிதிக்குச் சென்றுவிட்டது.

            (மறுமை நாளில் நல்லடியார்களிடம் சொல்லப்படும்)

            நிம்மதியடைந்த ஆத்மாவே!

            நீ உன் இறைவனிடம் மீளுவாயாக,

            அவன் திருப்தியுற்ற நிலையிலும்

            அவன் உன் மீது திருப்தியுற்ற நிலையிலும்.

            நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக

            என் சொர்க்கத்திலும் நுழைந்துவிடுவாயாக!

            (யா அய்யுஹன் நஃப்சுல் முத்ம’இன்னா,

             இர்ஜி’ஈ இலா றப்பிக்கி ராளியத்தம் மர்ளிய்யா

             ஃபத்ஃகுலீ ஃபீ இபாதீ, வத்ஃகுலீ ஜன்னத்தீ – 89:27-30)

            இந்தத் திருவசனத்திற்கும் ஓர் எடுத்துக்காட்டாக இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் திகழ்கிறார்கள் என்று இறைநேசர்கள் உணர்ந்துள்ளனர். அந்த விளக்கத்தின் அடிப்படையில் முஹ்சின் நக்வி பாடுகிறார்:

            ’சாந்தியடைந்த ஆன்மாவே!’ என்று

            குர்’ஆன் எவரை அழைத்ததோ,

            இறைவனின் பார்வையில் அந்தப் படித்தரம்

            இமாம் ஹுசைனுக்கு உரியதாகும்!

            (குர்’ஆன் நே புகாரா ஜிசே நஃப்சே முத்ம’ஈன்

              ஃகாலிக் கீ நழர் மேன் ஹே யெ தரஜா ஹுசைன் கா)

            குர்’ஆன் என்னும் திருமறையை ஓதுவோர் பலர். ஆனால், குர்’ஆன் நபியை ஓதுகிறது, நபியின் குடும்பத்தாரை ஓதுகிறது. இந்த விளக்கங்கள் எத்தனை பேருக்கு எட்டுகிறது? முஹ்சின் நக்வி சொல்கிறார்:

            கடைவீதியின் கும்பலிடம் சொல்லுங்கள்

            வாய் மூடி மௌனமாய் இருப்பீராக;

            இதோ ஹுசைனை ஓதுகிறது குர்’ஆன்!

            (பஜார் கெ ஹுஜூம் செ கெஹ் தோ கெ ச்சுப் ரஹே

             குர்’ஆன் கர் ரஹா ஹே திலாவத் ஹுசைன் கீ)

            கர்பலா களத்தில் இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் தன் உயிரை நீத்து ஏகத்துவ உணர்வுக்கு உயிரூட்டினார்கள். கொடுங்கோல் ஆட்சி அதிகாரத்திற்கு அடிபணிவது என்பதும் ஒருவகையான சிலை வணக்கம்தான் என்று அவர்கள் கண்டார்கள். எனவே அதை எதிர்த்து நின்றார்கள். முஹ்சின் நக்வி சொல்கிறார்:

            வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கை வராமல் போயிருக்கும்,

            சிலை வழிபாடு மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கும்,

            ஹுசைன் இப்னு அலீ தன் தலையைத் தந்திருக்காவிடில்

            இந்த உலகம் முழுவதும் யஜீதாக மாறியிருக்கும்.

            (ஜிந்தகீ ந உம்மீத் ஹோ ஜாத்தீ

             புத் பரஸ்த்தி ஜதீத் ஹோ ஜாத்தீ

              சர் ந தேத்தே ஹுசைன் இப்னே அலீ அகர்

              சாரி துன்யா யஜீத் ஹோ ஜாத்தீ)

            இன்றும் யஜீதுகள் இருக்கின்றனர். உலக ஆதாயத்துக்காக மார்க்கத்தை விற்கும் ஒவ்வொருவனும் ஒரு யஜீதுதான். அநீதம் புரியும் ஒவ்வொருவனும் ஒரு யஜீதுதான். அவர்களுக்கு எதிராக தலை நிமிர்ந்து நிற்கும் ஒவ்வொருவரும் ஒரு ஹுசைன்தான். முஹ்சின் நக்வி சொல்கிறார்:

            அசத்தியத்தின் முன் ஒருவர் சிரம் பணியவில்லை என்றால்,

            புரிந்துகொள், அவரது அறிவின் எஜமான் ஹுசைன் ஆவார்!

            (பாத்தில் கே சாம்னே ந ஜுகாயே ஜோ அப்னா சர்

             சம்ஜோ கே உஸ்கே ஸெஹன் கா மாலிக் ஹுசைன் ஹே)


            
கர்பலா மைதானத்தின் அருகில்தான் ஃபுராத் நதி ஓடிக் கொண்டிருந்தது. அந்தத் தண்ணீரில் ஒரு சொட்டுக் கூட ஹுசைன் (ரலி) அவர்களின் குடும்பத்தினருக்குக் கிடைக்காமல் யஜீதின் படையினர் தடுத்துவிட்டனர். சுவனத் தடாகத்தின் இன்சுவைத் தண்ணீரை சொர்க்கவாசிகளுக்கெல்லாம் புகட்டுகின்ற நபியின் குடும்பத்தார் கர்பலாவில் கடும் தாகத்துடனேயே மடிய நேர்ந்தது. அப்போது அந்தத் தண்ணீரும் துடிதுடித்திருக்கும் என்று கற்பனை செய்கிறார் முஹ்சின் நக்வி:

            ஹுசைனின் நியாபகம் வந்தால்

            கண்கள் கலங்கி விடுகின்றன;

            ஓ! இப்போதும் ஹுசைனின் மீது

            நீருக்கு எவ்வளவு நேசம்!

            (திக்ரே ஹுசைன் ஆயா தோ ஆன்ஃகேன் ச்சலக் படீ

             பானீ கோ கித்னா பியார் ஹே அப் பீ ஹுசைன் சே)


            
இன்னொரு நுட்பமான நயமான கவிதை ஒன்றை நினைவு கூர்கிறேன். அதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் வரலாற்றைப் பற்றி அல்லாமா அலீமி ஷாஹ் ஆமிரி (தாமத் பரக்காத்துஹு) அவர்கள் ஆற்றிய பேருரை ஒன்றில் அதனை மேற்கோள் காட்டினார்கள். அது என் சிந்தையில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அவ்வப்போது நினைத்துப் பார்த்து நெகிழும் வரியாகிவிட்டது. கவிஞர் சொல்கிறார்:

            மருதாணி இலையைப் பார்த்தால்

            எனக்கு நிம்மதியே வருவதில்லை;

            அதன் வெளிரங்கம் ஹசனின் நியாபகம்

            அதன் அந்தரங்கம் ஹுசைனின் நியாபகம்.

             (பர்கே ஹினா கோ தேக் கர் ஆத்தா நஹீன் ஹே ச்சைன்

              ழாஹிர் யாதே ஹசன் தொ பாத்தின் யாதே ஹுசைன்)



            இந்தக் கவிதையை விளங்கிக் கொள்வதற்கான குறிப்புகளைத் தருகிறேன். நபிகள் நாயகத்தின் பேரப் பிள்ளைகளான இமாம் ஹசன் (ரலி) மற்றும் இமாம் ஹுசைன் (ரலி) இருவரும் பகைவர்களால் கொலை செய்யப்பட்டார்கள். இமாம் ஹசன் (ரலி) அவர்கள் உணவில் நஞ்சு வைத்துக் கொல்லப்பட்டார். இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் கர்பலா களத்தில் அம்புகள், ஈட்டிகள், வாட்கள் ஆகிய கருவிகளால் தாக்கப்பட்டு ரத்தம் தோய்ந்த நிலையில் உயிர் நீத்தார். மருதாணி இலை பச்சை நிறமாக உள்ளது. அது நஞ்சின் நிறம். மருதாணியை அரைத்துப் பூசினால் சிவப்பு நிறம் தருகிறது. அது ரத்தத்தின் நிறம். இப்போது மீண்டும் கவிதையை வாசித்துப் பாருங்கள். கவிஞர் எத்தனை ஆழமான அவதானத்தோடு அதை எழுதியிருக்கிறார் என்பது புரியும்.

            இப்படி பல நூற்றாண்டுகளாக, பல்லாயிரம் கவிஞர்களின் பல்லாயிரம் சிந்தனைகளை இந்த தியாக வரலாறு மீட்டிக் கொண்டே இருக்கிறது. இஸ்லாமிற்காக உயிர்த் தியாகம் செய்யும் ஒவ்வொரு நபருக்கும் கர்பலா வரலாறு ஏகத்துவத்தின் ஒளியைப் பாய்ச்சும் ஒரு கலங்கரை விளக்காகத் திகழ்கிறது. இறைஞான ரகசியங்கள் பலவற்றைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் இந்த வரலாற்றின் முக்கியத்துவம் பற்றி முத்தாய்ப்பாகச் சொல்ல வேண்டும் எனில் மவ்லானா முஹம்மத் அலீ ஜவ்ஹர் (ரஹ்) அவர்களின் வரிகளைத்தான் மேற்கோள் காட்ட வேண்டும்:

            ஹுசைனின் படுகொலை

            எதார்த்தத்தில்

            யஜீதின் மரணமே ஆகும்;

            இஸ்லாம் புத்துயிர் பெறுகிறது

            ஒவ்வொரு கர்பலாவுக்குப் பிறகும்!

            (கத்லே ஹுசைன் அஸ்ல் மேன் மர்கே யஜீத் ஹே

             இஸ்லாம் ஜிந்தா ஹோத்தா ஹே ஹர் கர்பலா கே பஅத்)

Monday, July 7, 2025

யா(தே) ஹுசைன் - 1


இஸ்லாமிய வரலாற்றில் தியாகத்தின் ரத்தத்தால் எழுதப்பட்ட பக்கங்கள் எத்தனையோ இருக்கலாம். ஆனால், ரத்தத்தின் ஈரம் இன்னமும் காயாத ஒரு பக்கம் உண்டு என்றால் அது நபி (ஸல்) அவர்களின் திருப்பேரரான இமாம் ஹுசைன் (ரலி) அவர்களும் அன்னாரின் பரிசுத்தக் குடும்பத்தினரும் பகைவர்களால் – யஜீதின் படையினரால் – படுகொலை செய்யப்பட்ட “கர்பலா” நிகழ்வே ஆகும். இது முஹர்ரம் 10, ஹிஜ்ரி 61-ஆம் அண்டில் (10 அக்டோபர் 680 பொ.ஆ) நிகழ்ந்தது.

            ஆட்சியும் பதவியும் தனக்கே உரியன என்று யஜீது கோரியபோது அதை இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் மறுத்தார்கள். உலக இச்சை மிகைத்தவனான யஜீதின் கையில் உடன்படிக்கை செய்ய முடியாது என்று உறுதியாக நின்றார்கள். யஜீதின் படை அவர்களைக் கொலை செய்யத் தேடியபோது முஹர்ரம் 2-ஆம் நாள் ’கர்பலா’ என்னும் பொட்டல் வெளியில் கூடாரம் அடித்துத் தனது குடும்பத்தாருடன் தங்கினார்கள்.

யஜீதின் படையினர் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் கூடாரங்களைச் சுற்றி வளைத்தனர். அவ்விடத்தின் அருகில் ஃபுராத் (யூஃப்ரேட்ஸ்) நதி ஓடிக் கொண்டிருந்தது. அதன் தண்ணீர் இமாமுக்குக் கிடைக்காமல் தடுத்துவிட்டனர். இப்படியே நாட்கள் நகர்ந்தன. ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் தண்ணீர் இன்றித் தவித்தனர். பச்சிளம் குழவியைக் காட்டி நீர் கேட்டால் பாதகரின் மனம் இரக்கம் காட்டும் என்ற நம்பிக்கையும் பொய்த்தது.

இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் மீது பகைவர்கள் தாக்குதல் நடத்தினர். அவர்கள் ஐயாயிரம் பேர் இருந்தனர். இமாம் அவர்களின் தரப்பில் போரிட்டு மடிந்தோரின் எண்ணிக்கை எழுபத்திரண்டு. பெண்களும் ஒரே ஒரு குழந்தையான இமாம் ஜைனுல் ஆபிதீன் (ரலி) அவர்களும் மட்டும் உயிருடன் விடப்பட்டனர்.

இது ஒரு நெடிய வரலாற்று நிகழ்வு. இக்கட்டுரைக்கான பின்னணியை நினைவில் நிறுத்த வேண்டி மிகச் சுருக்கமாகத் தந்திருக்கிறேன்.

இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் இறைவனுக்காக உள்ளத்தில் உறுதியுடன் மரணத்தை வரவேற்ற மகத்தான நிகழ்வு அது. அந்நிகழ்வுக்கு வித்திட்ட பல்வேறு தருணங்களில் சத்தியத்தின் சார்பில் நின்று, சற்றும் சறுகாமல் இமாம் அவர்கள் சாற்றிய சொற்கள் சரித்திரத்தில் சுடர் விட்டுப் பிறங்குகின்றன. அவற்றுள் சில:

            ”உண்மைக்காக மரணிப்பது என்பது எனக்கு இன்பமே அன்றி வேறில்லை; கொடுங்கோலரின் கீழ் அடங்கி வாழ்வது நரகமே அன்றி வேறில்லை”

            ”இறைவனின் மீது சத்தியமாக, நான் ஒருபோதும் இழிவடைந்த ஒருவனாக என் பகைவரிடம் சரணடைய மாட்டேன்; அடிமைகளைப் போல் ஒருபோதும் பகைவரிடம் உடன்படிக்கை செய்ய மாட்டேன்.”

            ”இழிவான வாழ்க்கையை விட கண்ணியமிக்க மரணம் மேலானது”

            ”மக்கள் இந்த உலகத்தின் அடிமைகளாக உள்ளனர். அவர்கள் சொல்வதெல்லாம் மார்க்கம் என்றாகிவிட்டது. அவர்களுக்கு வாழ்வாதாரம் தரும்வரை மட்டுமே மார்க்கத்தைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் சோதிக்கப்படும்போது, உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் வெகு சிலரே எஞ்சுகின்றனர்.”

            இனி, இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் நினைவின் நிமித்தம் உள்ளத்தை உருக்கும் கவிதை வரிகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

            இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் உயிர்த் தியாகத்தை நினைவு கூர்ந்து பாடப்படும் இரங்கற் பாக்கள் உருது மொழியில் ஒரு தனி இலக்கிய வகைமையாகவே உருவாகி உள்ளன. அது ”மர்ஸியா” எனப்படுகிறது. மர்ஸியா என்பது பொதுவாக ஒருவரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துப் பாடப்படும் கவிதையைக் குறிக்கிறது என்றாலும், குறிப்பாக அது இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் இறப்பிற்காகப் பாடப்படும் இலக்கியமாகவே அடையாளம் பெற்றுள்ளது. இந்தக் கவிதை கஜல் அல்லது கஸீதா வடிவத்தில்தான் பாடப்படுகிறது. அதன் உள்ளடக்கமே, பாடுபொருளே அதனை மர்ஸியா ஆக்குகிறது.

இதன் காரணத்தால், மர்ஸியா இரண்டு வகைப்படும் என்று பிரித்திருக்கிறார்கள்:

1) ரிவாயத்தி மர்ஸியா: இது கர்பலா களத்தில் இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் மற்றும் அன்னாரின் பரிசுத்தக் குடும்பத்தார் உற்ற உயிர் தியாகத்தை நினைவு கூர்ந்து எழுதப்படும் இரங்கற் பாக்களைக் குறிக்கும்.

2) ஷக்ஸி மர்ஸியா: உர்து மொழியில் ஷக்ஸ் என்றால் நபர் என்று பொருள். எனவே யாரேனும் ஒருவரின் இறப்பிற்காகப் பாடப்படும் இரங்கற் கவிதை ஷக்ஸி மர்சியா எனப்படுகிறது. இது பொதுவானது.

மர்ஸியாக்கள் பெரும்பாலும் ஷி’ஆ பிரிவினரால் இயற்றப்படுகின்றன. எனினும், ’அஹ்லுல் பைத்’ என்னும் நபிக்குடும்பத்தார் மீது நேசம் வைப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும் என்பதாலும், நபி (ஸல்) அவர்களை நேசிப்பதில் ’அஹ்லுல் பைத்’தின் நேசம் இன்றியமையாத ஒரு பகுதியாகும் என்பதாலும் சுன்னத் வல் ஜமாஅத் தரப்பின் கவிஞர்களும் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் புகழையும், கர்பலா துயர் நிகழ்வின் இரங்கலையும் பாடியிருக்கிறார்கள்.


            
இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் ஆன்மிக ஆளுமையை ஃகாஜா முயீனுத்தீன் சிஷ்தி அஜ்மீரி (ரஹ்) அவர்கள் பாடிய நான்கு வரிகள் முத்தாய்ப்பாக வருணித்துக் காட்டுகின்றன:

            ஹுசைன் அரசராவார்; ஹுசைன் பேரசரர் ஆவார்;

            ஹுசைன் மார்க்கம் ஆவார்; ஹுசைன் மார்க்கத்தின் பாதுகாவல் ஆவார்;           

            தலையைக் கொடுத்தார்; யஜீதின் கையில் கையைக் கொடுக்கவில்லை;

            சத்தியமாக, [‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்னும் திருக்கலிமாவில்

            பொய்த் தெய்வங்களை நிராகரிக்கும் நஃபீ என்னும் முற்பகுதியான]

            ’லா இலாஹ’ என்பதன் அடித்தளமாக இருக்கிறார் ஹுசைன்!

          (ஷாஹஸ்த் ஹுசைன் பாத்ஷாஹஸ்த் ஹுசைன் 

           தீனஸ்த் ஹுசைன் தீன் பனாஹஸ்த் ஹுசைன் 

           சர் தாத் ந தாத் தஸ்த் தர் தஸ்த்தே யஜீத்

           ஹக்கா கெ பினாயே லா இலாஹஸ்த் ஹுசைன்.)

            இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் உயிர் தியாகம் குர்’ஆனில் சுட்டப்பட்டுள்ளது என்ற அவதானமும் உண்டு.  இதை அறிய இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) அவர்களின் சரித்திரத்தைக் காண வேண்டும்.

            இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு வெகு காலமாகப் பிள்ளைப்பேறு இல்லை. அவர்களின் கனிந்த முதுமையில் அவர்களுக்கு இறைவன் அளித்த அருட்கொடையாக இறைத்தூதர் இஸ்மாயில் (அலை) அவர்கள் பிறந்தார்கள். அவர் அழகான ஒரு சிறுவனாக வளரந்து வந்தபோது இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு இறைவன் ஒரு சோதனை வைத்தான். இளம் சிறுவரான இஸ்மாயில் (அலை) அவர்களைத் தனக்காக அறுத்துப் பலியிடச் சொன்னான். அதற்கு இஸ்மாயில் (அலை) அவர்களும் தன்னை உடனே ஒப்படைத்தார்கள். பையனின் கழுத்தில் கத்தியை ஓட்டியபோது அது இறை ஆணையால் அறுக்க மறுத்தது. அப்போது, இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) அவர்களின் இறைபக்தியைத் தான் ஏற்றுக்கொண்டதாக இறைவனிடம் இருந்து செய்தி வந்தது. வானவர்கோன் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் இறைவன் சொர்க்கத்தின் செம்மறியாடு ஒன்றை அனுப்பியிருந்தான். அதை அறுத்துப் பலியிடுமாறு இப்றாஹீம் (அலை) அவர்கள் பணிக்கப்பட்டார்கள்.

            இந்தச் சரித்திரத்தைச் சொல்லும் குர்’ஆன், இஸ்மாயில் (அலை) அவர்களுக்கு ஒரு மாபெரும் பலியினைப் பகரமாக்கியதாகச் சொல்கிறது: “வ ஃபதைனாஹு பி-திப்ஹின் அழீம்” – ”ஆகவே மகத்தானதொரு பலியை அவருக்குப் பகரமாக்கினோம்” (37:107)

            இந்த ”மகத்தான பலி” (திப்ஹின் அழீம்) என்பது இமாம் ஹுசைன் (ரலி) அவர்களையே குறிக்கும் என்று விளக்கம் சொல்லப்படுவதும் உண்டு. ஏனெனில், நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அப்போது இஸ்மாயில் (அலை) அவர்களில் ஒளியாக இருந்தார்கள். அன்னாரின் சந்ததியில்தான் அவர்கள் வந்துதிப்பார்கள் என்று நிர்ணயம் ஆகியிருந்தது. எனவே அவர்கள் சிறுவனாகக் கொல்லப்படக் கூடாது. அன்னாரின் வமிச வழி இவ்வுலகில் தொடர வேண்டியது அவசியமானது. எனவே, இஸ்மாயில் (அலை) அவர்களுக்குப் பகரமான ’மகத்தான பலி’ நபி (ஸல்) அவர்களின் சந்ததியில் இருந்து கொடுக்கப்பட்டது. அந்தப் பலியே இமாம் ஹுசைன் (ரலி) ஆவார்.


            இக்கருத்தினைக் கவிஞர்கள் பலரும் பன்முறை பாடியிருக்கிறார்கள். உலக மகாகவியாகத் திகழ்ந்த அல்லாமா இக்பால் (ரஹ்) அவர்கள் புதிய வீச்சுடன் இக்கருத்தினைப் பாடினார்கள். “பாலே ஜிப்ரீல்” (வானவர் கோனின் சிறகு) என்னும் நூலில் சொல்கிறார்கள்:

            அரிதானது, எளிமையானது, வண்ணமயமானது

            ஆதி இறையில்லத்தின் அற்புதக் கதை;

            அதன் அந்தி எல்லை ஹுசைன்,

            அதன் ஆரம்பப் புள்ளி இஸ்மாயில்!                    

                        (கரீப் ஒ ஸாதா ஒ ரங்கீன் ஹே தாஸ்த்தானே ஹரம்

                               நிஹாயத் இஸ்கீ ஹுசைன் இப்திதா ஹே இஸ்மாயீல்)

               இறை வேதமாம் குர்’ஆனின் அத்தியாயங்களுக்குத் திறப்பு வாசகமாக அமைந்திருப்பது ”பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்பதாகும். இதன் பொருள்: “அருளாளனும் அன்பாளனுமான அல்லாஹ்வின் திருநாமத்தால்.” இந்த வாசகம் “பா” என்னும் எழுத்தால் தொடங்குகிறது. அது ஒரு வளை கோட்டின் கீழ் ஒரு புள்ளி வைத்த வடிவமுடையது. அப்புள்ளி (நுக்தா) இறை வேதத்தின் ரகசியங்களை எல்லாம் தன்னுள் அடக்கியது என்று ஞானியர் கூறுவர். மேலும், அது இறைவனிடம் முழுமையாகச் சரணாகதி அடைந்துவிட்ட நிலையைக் குறிக்கிறது என்பர். இமாம் அலீ (ரலி) அவர்கள் அத்தகைய உன்னத நிலையை எய்தி இருந்தார்கள். எனவே, தன்னை பிஸ்மில்லாஹ்வின் பா என்னும் எழுத்தாக அவர்கள் குறிப்பிட்டார்கள். இக்கருத்தையும் இணைத்து “அஸ்ராரே ஃகுதி” (சுயத்தின் ரகசியங்கள்) என்னும் நூலில் அல்லாமா இக்பால் (ரஹ்) சொல்கிறார்கள்:

            இறைவா! இறைவா! என்னே அதிசயம்!

            தந்தையோ பிஸ்மில்லாஹ்வின்

            ’பா’ என்னும் எழுத்தாக இருக்கிறார்;

            மகனோ, ’மகத்தான பலி’

            என்பதன் அர்த்தமாக வந்தார்!                                                                  

                        (அல்லாஹ் அல்லாஹ் பாயே பிஸ்மில்லாஹ் பிதர்

                               மஃ’னியே ழிப்ஹே அழீம் ஆமத் பிசர்)

            மேலும், “ருமூஸே பேஃகுதி” (தன்னை இழத்தலின் மர்மங்கள்) என்னும் நூலில் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களைப் பற்றி அல்லாமா இக்பால் (ரஹ்) சொல்கிறார்கள்:

            அவர் இப்றாஹீம் மற்றும் இஸ்மாயில் ஆகிய

            இறைத்தூதர்களின் ரகசியம் ஆனார்;

            அதவாது அவ்விருவரும் சாராம்சம்

            இவரோ அதற்கு விரிவுரை!

                        (சிர்ரே இப்றாஹீம் ஒ இஸ்மாயீல் பூத்

                               யஃ’னீ ஆன் இஜ்மால் ரா தஃப்ஸீல் பூத்)

            இந்த முஹம்மதிய சமுதாயத்தில் – ’உம்மத்தே முஹம்மதிய்யா’வில் எத்தனையோ உயிர்த் தியாகியர் வந்துள்ளனர். எத்தனையோ நல்லடியார்களும் இறைநேசர்களும் வந்துள்ளனர். ஆனால், இமாம் ஹுசைன் (ரலி) அவர்களைப் போன்ற இன்னொருவரைச் சுட்டிக்காட்ட முடியாது. அன்னாரின் உன்னத நிலையை உணர்த்த வந்த அல்லாமா இக்பால் (ரஹ்) மேற்சொன்ன நூலில் ஓரிடத்தில் இமாம் அவர்களை இப்படி வருணிக்கிறார்:

            இந்தச் சமுதாயத்தின் நடுவில்

            அந்தப் பிரபஞ்ச ஆளுமை

            இறைவேதத்தில் ’குல் ஹுவல்லாஹ்’

            இருப்பதைப் போன்றவர்!

                        (தர்மியானே உம்மத் ஆன் கைவான் ஜனாப்

                               ஹம்ச்சூ ஹர்ஃபே குல் ஹுவல்லாஹ் தர் கிதாப்)

            இதை இதயத்தால் முழுமையாக ஒப்புக் கொள்கிறோம். எம் நிலையோ – “ஸும்ம ரதத்னாஹு அஸ்ஃபல சாஃபிலீன்” – ‘இன்னும் அவனைக் கீழோரில் மிகக் கீழோன் ஆக்கினோம்’ (95:5) என்பதாக இருக்கிறது. இமாமுனா அல்-ஹுசைன் (ரலி) அவர்களோ ஏகத்துவ முழக்கமான “குல் ஹுவல்லாஹு அஹத்” (கூறுக: அல்லாஹ் அவன் ஏகன் – 112:1) ஆக இருக்கிறார்கள். அதைக் கர்பலாவில் நிரூபித்துவிட்டார்கள்.

            உருதுக் கவியுலகில், இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் மீது பாடப்படும் இரங்கற்பா வகையான மர்சியாவின் சிகரம் என்று போற்றப்படுபவர் மீப் பப்பர் அனீஸ். அவரின் கவிதைகளில் இருந்து சில வைர மணிகளை அள்ளித் தருகிறேன். அவர் சொல்கிறார்:

            ”கர்பலாவின் பாதையில் ஒரு புழுதி ஆகி விட்டேன்;

            என் மண்ணும் அப்போது ரசவாதம் ஆகிவிட்டது!”

                        (குபாரே ராஹே கர்பலா ஹோ கயீ

                               மேரீ ஃகாக் பீ கீமியா ஹோ கயீ)

            மர்சியா கவிதையுலகில் இக்காலத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்கும் கவிஞர் முஹ்சின் நக்வி என்பவர் ஆவார். அவரின் கவிதைகளில் இமாம் ஹுசைன் (ரலி) மீதான காதலுடன் அன்னாரைப் படுகொலை செய்த யஜீதின் தரப்பினர் மீதான அறச் சீற்றமும் பொங்கி வருகிறது. உதாரணங்கள் சில பார்க்கலாம்.

            முஹ்சினே! ஹுசைனை நியாபகம் ஊட்டியதும்

            எவன் எரிந்து கொதிக்கிறானோ

            மனித மொழியில் அவனைத்தான்

            யஜீத் எ(ன்று சொல்கிறார்கள்!

                        (திக்ரே ஹுசைன் சே ஜோ ஜல்த்தா ஹே முஹ்சின்

                              இன்சானியத் கீ ஜுபான் மேன் உஸ்கோ யஜீத் கெஹ்தே ஹேன்)

            இந்த இடத்தில், யஜீத் விடயத்தில் ’அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்’தின் நிலைப்பாடு பற்றி அறிந்து கொள்வது அவசியம் கருதுகிறேன். இரு தினங்களுக்கு முன் ஊடகங்களில் இது குறித்து மவ்லானா மவ்லவி சதீதுத்தீன் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் மிகத் தெளிவான விளக்கம் தந்திருந்தார்கள். அவர்கள் சொன்ன கருத்து இது:


            ”நான் இங்கே சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கை முடிவு ஒன்றைச் சொல்ல வேண்டும், கடைசியாய். ஹுசைன் (ரலி) அவர்களைக் கொன்ற அத்தனை பேரும் நாசமாக வேண்டும், (அவர்கள் மீது) அல்லாஹ்வுடைய சாபம் உண்டாக வேண்டும்: 1. கொலை செய்தவர்கள், 2. உடன் போனவர்கள், 3. உடந்தையாய் இருந்தவர்கள், 4. சைக்கினையால் சுட்டிக் காட்டியவர்கள், 5. கொல்லப்பட்டுவிட்டார் ஹுசைன் (ரலி) என்று தெரிந்தபோது மனதளவிலே பொருந்தியவர்கள், மகிழந்தவர்கள். இத்தனை கொடூரமானவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் எல்லாக் காலங்களிலும் உண்டாகட்டும் என்பதுதான் அஹ்லே சுன்னத் ஜமாஅத்தினுடைய தீர்க்கமான முடிவு.”

            மேலும், இமாம் ஹுசைன் (ரலி) அவர்களையும் யஜீதையும் வேறுபடுத்தித் தரம் பிரித்துக் காட்டும் உரை ஒன்றையும் நேற்று கேட்டேன். இமாம் அல்-ஹுசைன் (ரலி) அவர்களின் வமிச வழித்தோன்றலான இறைநேசர் சய்யிதுனா உமர் ஆமிர் கலீமிஷாஹ் நூரீ (ரஹ்) அவர்களின் திருமகனார் அல்லாமா பஸீரி ஷாஹ் ஆமிரி (தாமத் பரக்காத்துஹு) அவர்கள் பேசிய அந்த உரையின் ஒரு பகுதி:

            ”இன்று சில சபிக்கப்பட்ட யஜீதிகள் யஜீதை அமீருல் முஃமினீன் என்று சொல்கின்றனர். ஆம். அவன் அமீராக இருந்தான் என்பது உண்மைதான். அவன் அமீருல் ஃபாசிக்கீன் (பாவியரின் தலைவன்), அமீருல் காஃபிரீன் (நிராகரிப்பாளரின் தலைவன்), அமீருல் முஷ்ரிக்கீன் (இணைவைப்போரின் தலைவன்), அமீருல் முல்ஹிதீன் (இறை மறுப்பாளரின் தலைவன்), அமீருல் ஷயாத்தீன் (சாத்தான்களின் தலைவன்). என் ஹுசைன் (ரலி) அவர்களோ அமீருல் முஃமினீன் (இறை நம்பிக்கையாளரின் தலைவர்), அமீருல் முத்தகீன் (இறை பக்தர்களின் தலைவர்), அமீருல் முவஹ்ஹிதீன் (ஏகத்துவவாதிகளின் தலைவர்), அமீருஸ் ஸாலிஹீன் (நல்லடியார்களின் தலைவர்), அமீருல் அக்தாப் (குத்புமாரின் தலைவர்), அமீருல் அவ்லியா (இறை நேசர்களின் தலைவர்), அமீருல் அஃக்வாஸ் (சிறப்பானோரின் தலைவர்), அமீருல் மலாஇக்கா (வானவரின் தலைவர்). யஜீது யார்? பன்றி (ஃகின்ஸீர்). சொல்லுங்கள், அவன் ஒரு பன்றி (ஃகின்ஸீர்). யஜீது ஃபாசிக் (அசுத்தமானவன்), யஜீது ஃபாஜிர் (ஒழுக்கங்கெட்டவன்), யஜீது ஹராமி (தகாதவன்), யஜீது நாய்களின் போஷகன். ஒரு யஜீதைக் காட்டுங்கள் பார்க்கலாம். அவனின் வாரிசுகளில் ஒருவனை இன்று காட்டுங்கள் பார்க்கலாம். ‘இன்ன ஷஃ’னியக்க ஹுவல் அப்தர்’ – ’நபியே! நிச்சயமாக உம் பகைவன்தான் துண்டிக்கப்பட்டவன் (சந்ததியற்றவன்)’ (குர்’ஆன் 108:3). ‘ஹுசைனே! அவன் உங்களை வெட்ட நாடுகிறான். நான் அவனின் வமிசத்தை வெட்டிவிடுவேன்’. உம் பகைவர்கள் இல்லாமல் போனார்கள், இல்லாமல் போகிறார்கள், இல்லாமல் போவார்கள் (மிட் கயே மிட்தே ஹேன் மிட் ஜாயேங்கே அஃ’தா தேரே). யஜீது இல்லாமல் போனான. நஜ்திகள் இல்லாமல் போனார்கள், போகிறார்கள், போவார்கள். யஜீது என்னும் பெயர்கூட இன்றில்லை. யஜீது என்று பெயர் வைப்பது பாவம் என்று முஸ்லிம்கள் புரிந்து வைத்துள்ளனர்.  இந்தத் தெருவில் சென்று பாருங்கள். எத்தனையோ ஹுசைன்கள் கிடைப்பார்கள். தெருவுக்குத் தெரு ஹுசைன்கள் கிடைப்பார்கள். ஒரு யஜீதைக் காட்ட முடியுமா? ’இன்ன ஷஃ’னியக்க ஹுவல் அப்தர்’ ஆகிவிட்டது. ஆஹ்! ஹுசைனின் ஒரே ஒரு மகன் – ஒரே ஒரு நோய்ப்பட்ட மகன் – ‘ஆபிதே பீமார் சாஜிதே சஜ்ஜாத்’ இமாம் ஜைனுல் ஆபிதீன் (ரலி) – மட்டுமே பிழைத்தார்கள். அந்த ஒரு நோய்ப்பட்ட மகனின் நஸ்லு (ரத்த உறவு) உலகம் முழுவதும் பரவியுள்ளது. சாதாத்தே கிராம் (கண்ணியமிக்க நபி வமிசத்தார்) உலகம் முழுவதும் இருக்கிறார்கள். ஆனால், யஜீத் அரசனாக இருந்தான். அவனுக்குப் பதினான்கு மகன்கள். அந்தப் பன்றியின் ஒரு வாரிசு கூட இன்று உலகில் இல்லை. ஆனால், ஹுசைனின் நஸ்லு? இங்கே கிருஷ்ணாம்பேட்டையிலும் சாதாத்மார் இருக்கின்றனர். இந்த ஃபக்கீரின் உருவத்திலும் ஹுசைனின் குலாம் (அடியான்) அமர்ந்திருக்கிறேன். இதுதான், ‘இன்ன ஷஃனியக்க ஹுவல் அப்தர்’. பகைவர்கள் ஹுசைனை முடித்துவிட நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. அவர்கள்தாம் முடிந்து போவார்கள்.”

            இது உணர்ச்சி மிகுந்த பேச்சு என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? இந்த ரோஷ உணர்ச்சி ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உண்டாகும். எனில், நபியின் வமிசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எப்படி உண்டாகாமல் போகும்? இதுவும் குர்’ஆன் வசனத்தின் தஃப்ஸீர் (விளக்கவுரை)தான். வெறும் விளக்கம் அல்ல. உலக வரலாற்றில் உண்மையாக நடந்திருக்கும் விளக்கம். இது இறை ஞான ஒளியின் வெளிப்பாடு. இது நபியொளியின் – நூரே முஹம்மதிய்யாவின் – சுடர் வீச்சு.

            நபி (ஸல்) அவர்களை நோக்கி ’அஃலா ஹஜ்ரத்’ அஹ்மத் ரஜா ஃகான் பரேல்வி (ரஹ்) அவர்கள் பாடுகின்ற பசுமையான புகழ்ச்சி:

            நபியே! உங்கள் பரிசுத்தமான ரத்த உறவால்

            ஒவ்வொரு குழந்தையும் ஒளிமயம்!

            நீங்கள் ஒளியின் ஊற்றாக இருக்கின்றீர்,

            உம் குடும்பம் முழுவதும் ஒளிமயம்!

                        (தேரீ நஸ்லே பாக் மேன் ஹே பச்சா பச்சா நூர் கா

                         தூ ஹே ஐனே நூர் தேரா சப் கரானா நூர் கா)

            இந்தப் பேரொளியை ஒருவன் ஊதி அணைக்க நினைத்தால் அவனை விட வழிகேடன் யார்? அவனை விட மடையன் யார்? யஜீதின் கதி இதற்கொரு சான்று.

            அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களால்

            ஊதி அணைத்துவிட நாடுகின்றனர்;

            ஆனால், நிராகரிப்பாளர் வெறுத்தபோதிலும்

            அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.

                        (யுரீதூன லி’யுத்ஃபிஊ நூரல்லாஹி பி-அஃப்வாஹிஹிம்

                               வல்லாஹு முதிம்மு நூரிஹி வ லவ் கரிஹல் காஃபிரூன் – 61:8)

என்னும் திருவசனத்தின் நிதர்சனமான விளக்கத்தை வரலாற்றில் பாருங்கள். ஹுசைனை அழிக்க நினைத்த பகைவர்கள் அழிந்து போனார்கள். அல்லாஹ் தன் நபியின் வாரிசுகளை உலகமெங்கும் பரவச் செய்து பிரகாசிக்க வைத்திருக்கிறான். அஹ்லுல் பைத் என்னும் நபிக் குடும்பத்தாரில் பல்லாயிரம் பல்லாயிரம் இறைநேசர்கள் உருவாகி ஜொலிக்கிறார்கள்! உலக முடிவு நாள் வரை இந்த மகத்துவம் தொடரும். 

(தொடரும்...)