Wednesday, October 23, 2013

அழகின் முகவரி


ஒப்பனை ஏதும் இன்றியே குழந்தைகள் அழகாக இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா?
வளர்ந்த பின் அந்த இயல்பான அழகிற்கு என்ன ஆகிறது?

விலங்குகள் ஒப்பனை செய்து கொள்வதில்லை. மனிதனிடம்தான் இது ஒரு கலையாக வாய்த்தது. ஒப்பனை வேடமாகவும் பரிணமித்தது.

வேடத்திற்கும் ஒப்பனைக்கும் இடையிலான கோடு தேய்ந்து வருகிறது; மனிதனுக்கும் மிருகத்திற்குமான கோடும்தான்.

அழகு பற்றிய தவறான தத்துவங்களால் அகில உலகும் அலங்கோலமாகிக் கிடக்கிறது.

காஸ்மெடிக்ஸை காயகல்பம் என்று மூளைச் சலவை செய்து வருகின்றன விளம்பரங்கள். மக்கள் மனங்களோ விளம்பரங்கள் சுழற்றும் பம்பரங்கள்.

புற அழகிற்கு ஆராதனை காட்டும் அரிதார நெருப்பு அக அழகிற்குக் கொல்லி வைக்கிறது. அது புற-அழகு மட்டுமே வாழ்க்கைக்குத் துருப்புச் சீட்டு என்று சொல்லி வைக்கிறது.


’அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’

இதயத்தில் தீபம் ஏற்றும் இந்த வாசகம் கிழக்கின் ஞானத்திற்குச் சொந்த வாசகம். கிழக்கு கண்ட அழகின் முகவரி இதுதான்.

மேற்கு என்பது அறிவியல், கிழக்கு என்பது ஆன்மிகம் என்று பார்க்கப்படுவதில் நியாயம் உண்டு என்று ஓர்ந்திருக்கிறேன். ஓஷோ, இக்பால் ஆகியோரிடம் இருந்து இக்கருத்தைத் தேர்ந்திருக்கிறேன். கிழக்கு தன்னை மெல்ல மெல்ல மேற்கில் தொலைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து வேதனைப்பட நேர்ந்திருக்கிறேன்.

அதன் அடிப்படையில் ஒரு கருத்தை அடியேன் நவில்கிறேன்:
மனிதனை ஒளியால் அலங்கரிப்பது கிழக்கின் வழிமுறை; மனிதனை மண்ணால் அலங்கரிப்பது மேற்கின் வழிமுறை.

தியானமே நமது அலங்காரமாக இருந்தது; இன்றோ ஒப்பனையே பலரின் தியானம் ஆகிவிட்டது.

காயாக இருக்கையில் ’பச்சை’யாய்  இருக்கும் ஆப்பிள் கனிந்து கனிந்துதான் சிவப்பாக வேண்டும். ஆப்பிள்-காய் மீது சிவப்புச் சாயம் பூசி விட்டால் அது ஆப்பிள்-பழம் ஆகிவிடாது.

அழகு எப்படி இருக்க வேண்டும்? இயல்பாக இருக்க வேண்டும் என்பதுதான் இதற்குச் சரியான பதிலாக அமையும் என்று நினைக்கிறேன்.

இயல்பு என்பது தோற்றத்திலும் பண்பிலும்.

அழகு என்பது சீதை போல் இயற்கையாக இயல்பாக இருப்பது. ஒப்பனையோ ராமனை மயக்க வந்த சூர்ப்பனகை.

பெண்ணின் அழகைப் பேரழகு ஆக்குவது தன் அழகைப் பற்றிய அவளின் பிரக்ஞையின்மையே என்னும் கருத்துப்பட அல்லாமா இக்பால் பின்வருமாறு சொல்கிறார்:
“சுயப்பிரக்ஞை இல்லாத, பேரழகு நிறைந்த பெண்ணே இறைவனின் இவ்வுலகில் எனக்கு மிகவும் வசீகரமான பொருள்”

“அழகானதொரு பொருள் நிரந்தர ஆனந்தம்” என்று கீட்ஸ் பாடியதும் இத்தகைய அழகைப் பற்றித்தான் என்று சொல்லலாம்.

புன்னகையைத் தவிர வேறு நகையேதும் அணியாத அன்னை ஆயிஷா (ரலி) – நபிகள் நாயகத்தின் இளைய மனைவி – ஒருநாள் தன் கைகளில் இரண்டு வெள்ளி வளையல்களை அணிந்து கொண்டார்கள். வீடு வந்த நபிகள் நாயகம் “என்ன இது?” என்று கேட்டார். “தங்களுக்காக என்னை அலங்கரித்துக் கொண்டேன்” என்று நவின்றார் ஆயிஷா. “இந்த அலங்காரம் வேண்டாம். அவற்றைக் கழற்றிவிடு” என்று நபிகள் நாயகம் சொல்லிவிட்டார்கள்.

ஆன்மிகத்தின் கண்கள் இயல்பானவற்றில்தான் இறைவனின் அழகை தரிசிக்கின்றன. ஆன்மிக ஒளி கொண்ட கண்கள் உள்ள ஆண் தனது பெண் இயற்கையான அழகுடன் இருப்பதையே விரும்புவான்.

காமோஷ் கஸியாபூரி என்று ஒரு கஸல் கவிஞர். தன் காதலியிடம் வினயமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறார் இப்படி:

கன்னங்களும் உதடுகளும்
இயல்பாகவே இருக்க விடு...
வண்ணங்கள் பூசாதே
தாஜ்மகாலின் மீது

(ஆரிஸ்-ஒ-லப் சாதா ரெஹனே தோ
தாஜ்மஹல் பெ ரங் ந டாலோ)



Tuesday, October 15, 2013

பக்ரீத் (2013)


தேகமெங்கும் பனித்துளிகள் மின்னும்
இந்த நனைந்த ரோஜா
என்ன சொல்கிறது?

செம்மறியின் தியாக ரத்தத்தில்
இஸ்மாயீல் நபியின் கண்ணீர்த் துளிகள்!

இந்த தியாகத் திருநாளில்
அந்தச் செம்மறியின் தியாகத்தை
நினைவு கூர்கிறேன் 

இஸ்மாயில் நபியின்
இதயம் பேசுவதைக் கேட்கிறேன்:

“முஹம்மதின் வருகைக்காகவே
உயிருடன் இருக்க வேண்டும் நான்!
முஹம்மதின் வருகைக்காகவே
உயிரை அர்ப்பணித்திருக்கிறாய் நீ!”


கஸல் துளிகள்




உன் பார்வையின்
பரவசத்தில்
நான் பேசியது
ஒருவருக்கும் புரியவில்லை
உன்னைப் பார்க்கும்
பரவசத்தில்
நான் பேசுவது
எனக்கே புரியவில்லை
*

ஒன்றை
வேறொன்றாய்க் காட்டும்
மதுவின் போதை
என்கிறார்…
உன் போதையில்
கேட்டுக் கொண்டேன்
‘ஒன்று’தானே இருக்கிறது
’வேறொன்று’ எங்கே?
*

நிலா உனக்கு
நிகரில்லை நெஞ்சே!
தழும்பு தென்படுவதில்லை
தீ இன்னும் அணையாதபோது
*

இறைவா!
உன்னிடம் நான் கொண்டுவந்ததெல்லாம்
கிழிந்து போன செல்லாத பணம் மட்டுமே
எனினும், 
கொண்டுவந்ததில்லை நான்
கள்ளப்பணத்தை ஒருபோதும்
*

பாலைகள் கடந்து
சோலைகள் கடந்து
வந்தேன் உன் முன்னால்

நிறைய இருந்தன சொற்கள்
நின்றது ஒன்று மட்டும்

கண்ணீரில் நனைந்த
உன் பெயர்
*

வயிறெனும் மண்ணறை மீது
வாழ்வைத் தொடங்குகிறான் மனிதன்

உயிருடன் புதைபட்டுப் போன
உள்ளங்கள் எத்தனையோ!

வயிறெனும் ஒருசாண் கயிறு
கட்டியுள்ளது கால்களை...

இல்லையெனில்
இதயப் பறவை
ஏழு வானங்களுக்கு அப்பால்
எப்போதும் பறந்திருக்கும்
*

பறவைக்குக் கூடு
மனிதனுக்கு வீடு

சிறகுகள் விரிக்கப்
பறவைக்கு வானம்
உன் சிறகுகள் விரியும்
வானம் எது?

வீடு என்பது
கனவு காணும் இடம்

வீடே கனவல்ல எனக்கு
*


கல்லைத் துளைக்கும் கூர்மை
கண்களில் ஏன் வைத்திருக்கிறாய்?
மெழுகை விடவும்
மென்மையாகத்தானே
என் உள்ளம் இருக்கிறது?

a


Sunday, October 13, 2013

ஹுசைன் (ரலி)


அடியேனின் மனதில்
அலைகள் அடித்தது
இக்பாலின் இதயவரி:
ஹுசைனின் படுகொலை உண்மையில்
யஸீதின் மரணமே!
ஒவ்வொரு கர்பலாவிற்குப் பின்னும்
உயிர்த்தெழுகின்றது இஸ்லாம்

இஸ்மாயீலின் கழுத்தில் நிறுத்தப்பட்டது
ஹுசைனின் கழுத்தில் நிறைவேறிவிட்டது!

”திண்ணமாய் எனது
தொழுகையும் தியாகமும்
வாழ்வும் மரணமும்
அகிலங்கள் அனைத்தின் ரட்சகனுக்கே”
என்னும்
ஆயத்தின் விரிவுரை
ஆனார் ஹுசைன்

அது ரணம் அல்ல, இரணம்!
அது மரணம் அல்ல, மணம்!

உம்மத்தின்
உயர்வுக்காகத்
தலை கொடுக்கத்
தயாராய் இருப்பவனே
தலைவன் என்னும்
தத்துவத்திற்கு
உமர் முதற்பிறை
உஸ்மான் வளர்பிறை
அலீ முழுநிலா
அதன் பிரகாசம் ஹுசைன்!

முஹம்மதின் வாளின் நிழல் அலீ!
அந்த நிழலின் நிம்மதி ஹுசைன்!

முஹம்மதின் நினைவில்
மூழ்கியிருந்தேன்
உள்ளத்தில் குரலொன்று
உரக்க உரைத்தது:
‘என் உம்மத்தின் ரத்தவகை
ஹுசைன் பாசிடிவ்!’


a


Wednesday, October 9, 2013

சூரியனும் பனித்துளியும்


”சூரியன் வந்து வா எனும்போது
என்ன செய்யும் பனியின் துளி?”

காதலில் தன் நிலையைப் பெண்ணொருத்தி பாடுவது போல் வைரமுத்து எழுதிய வரிகள் இவை.

இந்த வரிகளுக்கு நதிமூலம் ஏதேனும் உண்டா என்று யோசித்தால் கம்பனுக்கு அடி எடுத்துக் கொடுத்த ஏற்றப் பாட்டுக்காரனின் வரிகளே பலருக்கும் ஞாபகம் வரக்கூடும்.

“மூங்கில் இலை மேலே
தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை
வாங்கும் கதிரோனே”

என்பது அந்தப் பாடல். வயலுக்கு ஏற்றம் இரைத்தவனின் கிராமத்துப் பாடல்-வரிகள் எழுப்பும் அர்த்த அலைகள் மிகவும் அழகானவை.

மூங்கில் இலை மீதுள்ள பனி நீரைக் குறிப்பிடுகிறான் அவன். மண்ணில் விழுந்திருந்தால் பனிநீர் மண்ணால் உறிஞ்சப்பட்டிருக்கும். அதன் பின் அது பனித்துளி என்னும் பெயருக்கு ஏற்றதன்று. மூங்கில் இலை மீதுள்ள பனிநீர் தூய்மையானது.

மூங்கில் இலை மேல் தூங்கும் பனிநீர் என்பது உடலுக்குள் வந்திருக்கும் ஆன்மாவுக்குக் குறியீடு.

மூங்கில் இலை எங்கிருந்து வந்திருக்கிறது? மண்ணில் இருந்துதான் அல்லவா? ஆனால் அது மண்ணைப் போல் இல்லை. உடல் மண்ணிலிருந்து வந்திருக்கிறது. ஆனால் அது மண்ணைப் போன்றது அல்ல.

பனித்துளி வானத்தில் இருந்து வந்துள்ளது. அது மீண்டும் வானத்திற்கே போயாக வேண்டும். ஆனமா இறைவனிடமிருந்து வந்துள்ளது. அது மீண்டும் இறைவனிடமே சென்றாக வேண்டும்.

’தூங்கும் பனி நீர்’ என்னும் வாக்கியத்தைக் கவனியுங்கள். அது இயக்கமற்று இருக்கிறது. அதனால் அசைய இயலாது. பனித்துளி தன்னைத் தானே ஆவியாக்கிக் கொள்ள முடியாது. சூரியனின் சுடர்கள்தான் அதனை ஆவியாக்க வேண்டும். இங்கே நம்மை அனுப்பிய அந்த இறைவனேதான் மீண்டும் தன்னிடம் நம்மை அழைத்துக் கொள்ள வேண்டும்.

தூங்கும் பனித்துளியைப் போல் மனிதனின் நிலையும் இருக்கிறது. “மனிதர்கள் உறக்கத்தில் இருக்கிறார்கள்” என்பது நபிமொழி.

”வாங்கும் கதிரோன்” என்பதில் தொனிக்கும் வாஞ்சையை உங்களால் உணரமுடிகிறது அல்லவா? அதிகாலையில் சூரியனின் ஒளிக்கதிர் அத்தனை சூடாக இருக்காது அல்லவா? அது கருணையின் கதகதப்புடன் பனித்துளியைத் தொட்டுத் தூக்கிக் கொள்கிறது.

அதிகாலைச் சூரியனின் ஒளிக்கதிர் பட்டவுடனே தாமதிக்காமல் பனித்துளி ஆவியாகிவிடுகிறது. முதல் அழைப்பிலேயே அது தன் காதலனிடம் சென்றுவிடுகிறது. பக்தனின் மனநிலை இது.

”சூரியன் வந்து வா எனும்போது”...

பனித்துளி ஒன்றும் செய்யாது. சூரியன் வந்து அதனை வாங்கிக் கொள்கிறது.

இந்த வரிகளுக்கு இன்னொரு நதிமூலம் தெரிகிறது எனக்கு. வைரமுத்துவின் மனக்காட்டில் அந்தப் பனித்துளி வேறொரு திசையிலிருந்து வீசிய பருவக்காற்றில் கொண்டு வரப்பட்டிருக்கலாம்.


மிர்ஸா காலிப் எழுதிய ஒரு கஸல் பாடலில் உள்ள கண்ணி இது:

’பார்க்கவில்லை சூரியன்
பனித்துளியை இன்னும்
இல்லையெனில் நானும்
தலைமுதல் பாதம் வரை
வழிபாட்டின் சுவையை
வேண்டிக் கிடப்பவனே

(ஃகூர் ஷப்னம்-ஆஷ்னா ந ஹுவா வர்னா மெய்(ன்) அஸத்
சர்-தா-கதம் குஜாரிஷெ ஸௌகெ சுஜூத் தா)

ஆவியாக வேண்டும் என்னும் ஆசை பனித்துளியிடம் இருந்தால் மட்டும் போதுமா? சூரியன் பனித்துளியைப் பார்க்கும் போதுதான் பனித்துளி அதனிடம் அர்ப்பணமாக முடியும்.

தரையில் தலைசாய்த்து வழிபடுவதின் இனபத்திற்கு நானும் கோரிக்கை வைத்தபடிதான் இருக்கிறேன். ஆனால் இறைவன் அதற்கு என்னை நாடாவிட்டால் அதை நான் எப்படி அடைய முடியும்?

சூரியன் பார்க்கும் பனித்துளி சூரியனிடம் கிளம்பி விடுகிறது. இறைவன் யாரைத் தனதாகப் பார்க்கிறானோ அவர்தான் ஆன்மிகப் பயணத்தில் கிளம்ப முடியும்.

சூரியன் பனித்துளியைப் பார்க்கும் கணத்தில் சூரியனே அந்தப் பனித்துளியில் பிரதிபலிக்கிறது. ஆன்மாவின் வழிபாடு இதுதான். அதாவது, ஆன்மா இறைவனைப் பிரதிபலிக்க வேண்டும். ஆன்மாவின் ’சஜ்தா’ இதுதான்! அதை அடைவதற்குத்தான் மிர்ஸா காலிப் ஏங்குகிறார்.

ஏகத்திற்கான ஏக்கம் இந்த வரிகளில் வெளிப்படுகிறது. ஏகத்திற்கான தாகத்திற்கு அவனின் பார்வைதான் பானம். அதுவே ’ஸௌகெ சுஜூத்’ தலை சாய்த்தலின் சுவை என்று சொல்லப்பட்டுள்ளது. அந்தப் பேரின்பத்தையே சூஃபி ஞானி கலீமி ஷாஹ் நூரி (ரஹ்) அவர்களின் கவிதை நூலின் தலைப்பு “மஹ்வெ சுஜூத்’ தலைசாய்த்தலின் போதை என்று குறிப்பிடுகிறது.

இஹ்சான் என்று நபி (ஸல்) கற்றுத்தந்த நிலை இந்தப் பிரதிபலிப்புத்தான். “அல்லாஹ்வைப் பார்ப்பது போல் அவனை வணங்கு; அவ்வாறு இயலவில்லை எனில் அவன் உன்னை நிச்சயமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான்” என்பது அவர்களின் வாக்கு.

இறைவனைப் பார்ப்பது போல் எனில் எங்கே? தன்னில்தான்! பனித்துளி சூரியனைத் தன்னில் பிரதிபலிப்பது போல். நீயும் ஓர் திரவக் கண்ணாடியாய் மாறிப் பார்!


இன்னொரு கட்டம் நகர்ந்தாக வேண்டும். இன்னொரு கதவு திறந்தாக வேண்டும். அதை இன்னொரு மகாகவி செய்யட்டும். ”தீர்க்கதரிசியின் தோட்டம்” (The Garden of the Prophet) என்னும் நூலில் லெபனான் தேசம் தந்த மகாகவி கலீல் ஜிப்ரான் சொல்வதைக் கேளுங்கள்:

“சிறிது நேரம் கழித்து அல்-முஸ்தஃபா தன் விரலால் சுட்டிக் காட்டிச் சொன்னார், ‘பனித்துளியில் உள்ள காலைச் சூரியனின் பிரதிபிம்பம் சூரியனை விடவும் குறைந்ததல்ல. வாழ்வு உங்கள் ஆன்மாவில் பிரதிபலிப்பது வாழ்வை விடவும் குறைவானதல்ல.”


அன்பர்களே! சூரியன் போ என்று சொன்னாலும் என்னதான் செய்யும் பனியின் துளி?

Saturday, October 5, 2013

முச்சுடர்

(முனாஜாத்: இறைவனுடன் உரையாடல்)



இறைவா!
உன் மறையில் உரைத்தாய்:
“அந்நாளில் சில முகங்கள் பிரகாசிக்கும்
தம் இறைவனின் தரிசனத்தில்”

இறைவா!
தெய்வீகச் செய்தியில்
தெரியப்படுத்தினாய்:
“முஹம்மதே!
நீவிர் இல்லை எனில் நீவிர் இல்லை எனில்
வானங்களைப் படைத்திருக்க மாட்டேன்,
நீவிரில்லை எனில் வெளியிட்டிருக்க மாட்டேன்
என் ரட்சகத்தன்மையை”

திருமறையில் உன் நேசம்
திறந்து உரைத்தாய்:
”முஹம்மதே!
'சொர்க்கத்தின் தடாகத்தை உமக்கே தந்தோம்!'
'விரைவில் உம் ரட்சகன்
வழங்குவான் உமக்கு,
திருப்தி அடைவீர்கள்'”

இறைவா!
உன்னிடம் உரைத்தார்கள்
உத்தமத் திருநபி:
”நம்பிக்கையாளன் ஒருவனேனும்
நரகத்தில் இருப்பான் எனில்
நீ தரும் சொர்க்கத்தில்
திருப்தி இல்லை எனக்கு”

இந்தச் செய்திகளில்
இதயம் கிளர்ந்திருந்தது
இரவெல்லாம்...

”இறைவா! என் இறைவா!
முஹம்மத் இல்லை எனில்
சொர்க்கம் சொர்க்கமல்ல உனக்கு

இறைவா! என் இறைவா!
உன் தரிசனமும்
உன் முஹம்மதின் சகவாசமும்
இல்லை எனில்
சொர்க்கம் சொர்க்கமல்ல எனக்கு

இறைவா! என் இறைவா!
நானங்கு இல்லை என்றானால்
சொர்க்கம் சொர்க்கமல்ல
உன் முஹம்மதுக்கு!”

Thursday, October 3, 2013

ஹாஃபிழ் தோட்டத்து ரோஜாக்கள் (part-1)


(14-ஆம் நூற்றாண்டில் மத்திய இரானில் உள்ள ஷிராஸ் நகரில் வாழ்ந்த சூஃபிக் கவிஞர் ஷம்சுத்தீன் ஹாஃபிழ் அவர்களின் கவிதை வரிகள்)


இத்தனைக்குப் பிறகும்
சொல்வதில்லை வானம் பூமியை நோக்கி
‘கடன்பட்டுள்ளாய் எனக்கு நீ’ என்று

அத்தகைய காதலால்
ஆவதைக் கவனி
வானம் முழுவதிலும்
வெளிச்சமிடுகிறது அது!


சூரியன் ஒப்புக்கொண்டது ஒருநாள்
‘நான் வெறும் நிழலே!
ஒளிமிக்க என் உருவத்தை
வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்
அந்த முடிவற்ற பேரொளியை
உனக்கும் காட்ட ஆசைதான் எனக்கு

தனிமையிலோ அல்லது இருளிலோ
நீ இருக்கும்போது
உன் சுயத்தின் ஒளியை
உன்னிடம் காட்ட ஆசைதான் எனக்கு!


ஏசுவின் மூச்சு
நுழைந்து செல்லும்
புல்லாங்குழலில்
ஒரு துளை நான்
இந்த இசையைக் கேள்



புரிந்துகொள்ள இதுதான் நேரம்
நன்மை தீமை பற்றிய
உன் கருத்துக்கள் எல்லாம்
சிறுபிள்ளைகளின் நடைவண்டிகளே!
ஓரத்தில் வைத்துவிட்டு வா,
சத்தியத்திலும் காதலிலும்
வாழ முடியும் உன்னால்


எனக்குத் தெரிந்ததெல்லாம்
காதல் மட்டுமே

என் இதயத்தைக் காண்கிறேன்
எல்லைகள் அற்றதாய்
எல்லா இடத்திலும் உள்ளதாய்


இதயம் என்பது
ஆயிரம் தந்தி வீணை
காதல் மட்டுமே
சுருதி கூட்ட முடியும் அதில்!


இப்போது நீ இருக்கும்
இந்த இடம்...
வரைபடத்தில்
வட்டமிட்டு வைத்தான்
இறைவன் உனக்காக!


இவ்வுலகின் அழகாய்
இறைவன் சந்திக்கின்றான்
நம்மை


முன்னொரு காலம்
உன்னுயிரும் என்னுயிரும்
ஒன்றாய் அமர்ந்திருந்தன
ஒருவருக்கொருவர்
பாதங்கள் தொட்டபடி

உன் இதயமும் என் இதயமும்
மிகப் பழைய தோழிகள் அன்பே!


பொறாமையும்
உன் துன்பங்களும் எல்லாம்
இறைவனை விடவும் உனக்குத் தெரியும்
என்ற உன் நினைப்பில் இருந்தே.


வாழ்விற்கான நன்றியின்
தூய வசந்தத்தில்
வா, என்னுடன் சேர்ந்துகொள்!