Saturday, October 6, 2012

வீடுகதை




பால்ய பருவத்தில்
கற்பனித்ததுண்டு
அணில்கள் விளையாடும்
தென்னை மரத் தலையில்
என் வீடு

எறும்பின் கூட்டிற்குள்
என் வீடு இருப்பதாய்
எண்ணிச் சிலிர்த்தேன்

கோழிகள் அடைகாக்கும்
கொடாப்பின் மாய இருள்
உள்ளத்தை அடைகாத்து
உயிர்த்தேன்

கரையான் புற்றெனும்
காலனியில்
பாதாளப் பிரிவின்
பத்தாம் அடுக்கில்
வாடகை கொடுத்து
வசித்திருந்தேன்

மேகத் திரள்கள்
மலை அடுக்குகளாய் மாற
உச்சியில் குடில் கொண்டு
ரசித்திருக்கின்றேன்

கானக மரமொன்றில்
கதவு வைத்த
கார்டூன் வீடுகளே
பிரதிபலித்தன என்
கனவு இல்லத்தை

வீட்டில் ஒரு நூலகம்
வைத்த நாட்களில்
ஒவ்வொரு நூலும்
என் வீடாய் இருந்தது

என் வீடு என்னும்
எண்ணத்திலும் இருந்ததில்லை
எனது என்னும் த்வனி

அப்படியாய் அது
பிரபஞ்சத்தினும் சிறிதாகாமல்
இருந்தது

நதிக்கரையில் கிடக்கும்
கல் வீடு
மழைக்காலம் வளர்க்கும்
புல் வீடு
விளக்கிட்டது போன்ற
பூ வீடு

நிலா என்னும்
பால் வீடு – என்
நெஞ்சுக்கு வாய்த்த
மேல் வீடு

நாளும் புதுப்புது
பிரதேசங்கள்
நடத்தியிருந்தேன்
கிரகப் பிரவேசங்கள்

இப்படியாய்
எப்பொருளும்
இறையில்லமாய்
இருந்தன எனக்கு

முத்தும் பவழமும்
முற்றிழைத்த
சொத்து வீடுகள் எனும்
சொர்க்கத்து வருணனைகள்
ஈர்த்ததில்லை என்
இதயத்தை ஒருபோதும்

அப்போது தொட்டே
அறிந்ததில்லை
மனிதர்கள் வீடு கட்டும்
கதைகளையும் நான்


a

No comments:

Post a Comment