Sunday, February 16, 2025

இமாம் சஃ’தி - ஓர் அறிமுகம்

 ஃபார்சி மொழியில் அற இலக்கியங்கள் எழுதிய முக்கியமான ஸூஃபி ஞானக் கவிஞர் இமாம் சஃதி (ரஹ்) அவர்கள். அன்னார் எழுதிய ஒரு சிறிய கவிதை நூல் ”பந்த் நாமா” (அறிவுரைப் பனுவல்). இது கரீமாயே சஃதி என்றும் அழைக்கப் படுகிறது. இந்நூலினை நான் ஃபார்சியில் இருந்து தமிழில் பெயர்த்து வருகிறேன். பார்வைக்காக, 1906-ஆம் ஆண்டு ஆர்தர் நெய்லர் வல்லாஸ்டன் செய்த ஆங்கிலப் பெயர்ப்பை வைத்திருக்கிறேன். அதில் இமாம் சஃ’தி ஷீராஸி (ரஹ்) அவர்களைப் பற்றிய அழகான ஓர் அறிமுக உரையை அவர் எழுதியுள்ளார். அதன் தமிழாக்கத்தை இங்கே தருகிறேன்.


பெரிதும் கொண்டாடப்படும் ஃபார்சி மொழிக் கவிஞரான ஷைஃகு முஸ்லிஹுத்தீன் சஃ’தி அவர்கள் ஷீராஸ் என்னும் ஊரில் பொ.ஆ 1175 மற்றும் 1193 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பிறந்தார். அவரின் தந்தை பெயர் அப்துல்லாஹ். அவர் பாரசீக நாட்டின் அதாபக் மன்னரான சஃ’த் இப்னு ஜங்கி (பொ.ஆ 1195 – 1226) என்பாரின் அவையில் ஒரு சிறிய பதவியில் பணியாற்றினார் என்று கருதப்படுகிறது. அந்த மன்னரின் பெயரில் இருந்தே ஷைஃகு அவர்கள் தன் புனைபெயரான சஃ’தி என்பதை வரித்துக் கொண்டார்.

            அவர் தன் தொடக்கக் கல்வியைத் தன் சொந்த ஊரிலேயே பெற்றார். சில காலத்துக்குப் பின்னர், பாக்தாதில் உள்ள இஸ்லாமியக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே அவர் ஓர் இளம் மாணவராக இருந்தபோது, அவரின் தேவைகளை அறிந்த நல்லுள்ளம் கொண்ட செல்வந்தர் ஒருவர் அவரிடம் நட்பு கொண்டு உதவினார். மேலும், கல்லூரியின் பேராசிரியர் ஒருவரும் சஃ’திக்கு உதவிகள் புரிந்தார். அதன் பின்னர் அவர் ஆழ்நிலை தியானத்தில் ஈடுபடுவதற்காக தனிமையில் ஒதுங்கி இறை ரகசியங்களை தியானித்தார். அவரின் பயபக்தியான உணர்ச்சிகள் அவரை மக்கா நகருக்கு யாத்திரை செய்யத் தூண்டின – அவர் அந்த ஹஜ் என்னும் புனிதப் பயணத்தை பதினான்கு முறை காலால் நடந்தே நிறைவேற்றியுள்ளார். சமய நற்குணங்கள் குடிகொண்டவரான சஃ’தி  விரைவிலேயே தன் ஆன்மிக நிலைக்காகப் பிரபலம் ஆகிவிட்டார். அஃது அவருக்கு ஷைஃகு (கண்ணியமும் அந்தஸ்த்தும் உள்ள ஒருவர்) என்னும் பட்டத்தினைப் பெற்றுத் தந்தது. அதன் பின்னர் அவர் அப்படியே அழைக்கப்பட்டார்.

தன் வாழ்வில் பல்லாண்டுகளை அவர் பயணங்களில் கழித்தார். இதை அவர் சொல்லும் வார்த்தைகளைக் கொண்டே நாம் அறியலாம்: “நான் உலகின் பல பகுதிகளுக்கும் பயணித்திருக்கிறேன். எங்கே போனாலும் அந்த ஊரின் மக்களுடன் மிக சகஜமாகப் பழகுவேன். ஒவ்வொரு மூலையிலும் ஏதோ ஒன்றை நான் அடைந்திருக்கிறேன். ஒவ்வொரு அறுவடையில் இருந்தும் எனக்கான தானியத்தைச் சேகரித்திருக்கிறேன்.”1

            இன்னொரு சம்பவத்தில் இருந்து நாம் அறிவதாவது, அவர் குஜராத்தின் சோம்நாத் ஆலயத்தில் நிகழ்த்தப்படும் காட்டுமிராண்டித் தனமான சடங்குகளைப் பார்த்து வெகுண்டு உணர்ச்சி வசப்பட்டு அதன் பூசாரியைத் தூக்கித் தலைகீழாகக் கிணற்றுக்குள் போட்டுவிட்டார்.

            அவரே குறிப்பிடும் இன்னொரு சம்பவம் அவரது வாழ்வின் அடுத்த முக்கியமான நிகழ்வைக் காட்டுகிறது: “திமிஷ்கில் என் நண்பர்களின் சகவாசம் அலுப்பூட்டியதால் நான் ஜெருசலேமின் பாழ்நிலப் பகுதிகளுக்குச் சென்று அங்கிருந்த பாமரர்களுடன் சேர்ந்துகொண்டேன். அப்போது ஒருநாள் பரங்கியர்கள்2 என்னைக் கைது செய்து திரிபோலியில் கோட்டைக் கொத்தளங்கள் கட்டும் பணியில் யூதர்களுடன் சேர்ந்து களி மண் தோண்டும் வேலையில் என்னைப் போட்டுவிட்டார்கள். என் முற்கால நண்பனான ஒருவன் அந்த வழியே போக நேர்ந்தது. அவன் என்னைப் பார்த்து அடையாளம் கண்டு கொண்டான். அவன் அலெப்போவின் பிரமுகர்களில் ஒருவன். அவன் என்னைப் பார்த்து, ‘நீ என்ன இந்த நிலைக்கு ஆகிவிட்டாய்? நீ எப்படி இருக்கிறாய்?’ என்று கேட்டான். நான் சொன்னேன், ‘நான் இறைவன் மீது மட்டுமே பரஞ்சாட்ட வேண்டும் என்று எண்ணி மனிதர்களின் சகவாசத்தைத் துறந்து மலைகளிலும் காடுகளிலும் அலைந்தேன். ஆனால் இப்போது நீயே என் நிலையை முடிவு செய்துகொள். மனிதர்கள் என்று சொல்வதற்கே தகுதி இல்லாத ஆட்களுடன் நான் கொட்டகையில் அடைபட்டுக் கிடக்கிறேன். ஏதிலாருடன் பூங்காவில் சுதந்திரமாக நடப்பதை விட நண்பர்களுடன் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டுக் கிடப்பது மேலானது.’ அவன் என் இழி நிலை மீது இரக்கம் கொண்டான். பத்து தீனார்கள் கொடுத்து என்னைப் பரங்கியரிடம் இருந்து விடுவித்தான். என்னை அவனுடன் அலெப்போவுக்குக் கூட்டிக்கொண்டு போனான். என் நண்பனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவளை அவன் எனக்குத் திருமணம் முடித்து வைத்தான். நான் அவளுக்கு மஹர் (திருமணக் கொடை) தருவதற்காக அவனே எனக்கு ஒரு நூறு தீனார்கள்3 பரிசளித்தான். சில காலம் கழித்து என் மனைவி தன் சுபாவத்தை வெளிப்படுத்தினாள். அவள் சிடுமூஞ்சியாகவும், வாக்குவாதம் செய்பவளாகவும், பிடிவாதக்காரியாகவும், ஏசுபவளாகவும் இருந்தாள். எனவே என் வாழ்வின் மகிழ்ச்சி காணாமல் போய்விட்டது. ‘சான்றோன் ஒருவனின் வீட்டில் இருக்கும் தீய பெண் இந்த உலகத்திலேயே ஒரு நரகமாக இருக்கிறாள்’ என்று சும்மாவா சொன்னார்கள்? தீய பெண் ஒருத்தியுடன் நீ எப்படி உறவாடுகிறாய் என்பதில் எச்சரிக்கையாக இரு. இறைவா! இந்தத் தீய சோதனையை விட்டும் எம்மைக் காப்பாயாக!”

            சாதுரியமாக பதில் சொல்வதில் சஃதி கெட்டிக்காரர். இரண்டு சம்பவங்கள் சொல்லப் போதுமானவை. ஒருமுறை அவரின் மனைவி அவரை இப்படித் திட்டினாள்: “பரங்கியருக்குப் பத்து தீனார்கள் கொடுத்து என் தந்தை விடுதலை செய்த ஆள்தானே நீங்கள்?” சஃதி நிதானமாக பதில் சொன்னார்: “ஆம். உண்மைதான். பத்து தீனார்களுக்கு அவர்களிடம் இருந்து விடுதலை செய்து நூறு தீனார்களுக்கு உன்னிடம் சிக்க வைத்துவிட்டார்!”

            இன்னொரு தருணத்தில், சஃதியைத் தன் போட்டியாளராக எண்ணிய தப்ரேஸின் புலவன் ஒருவன், சஃ’தி தன் விடயத்தில் தலையிடுவதாகச் சினந்து அவரிடம் வெடுக்கென்று கேட்டான்: “ஓய், எங்கிருந்துய்யா வர்ற?” அதற்கு சஃ’தி, “ஷீராஸ் என்னும் இன்பமயமான ஊரிலிருந்து” என்று பதிலளித்தார். அந்தப் புலவன் மிகவும் நக்கலாகச் சொன்னான்: “தப்ரேஸில் ஷீராஸிகள் நாய்களை விட அதிகம்.” சஃ’தி கொஞ்சமும் யோசிக்காமல் சட்டென்று பதிலடி கொடுத்தார், “எங்க ஊர் நிலை அப்படியே தலைகீழ். அங்கே தப்ரேஸிகள் நாய்களை விடக் கம்மி!” ஆனால், அத்துடன் ஏட்டிக்குப் போட்டி முடிந்துவிடவில்லை. சஃ’தியின் தலை வழுக்கையாக இருப்பதை அந்தப் புலவன் கிண்டல் செய்தான். தன் கையில் இருந்த பாத்திரம் ஒன்றை கவிழ்த்துக் காட்டி, “ஷீராஸிகளின் மண்டை எப்போதும் இந்தச் சட்டியின் அடிப்பக்கம் மாதிரி வழுக்கையாக இருக்கிறதே எப்படி?” என்று கேட்டான். சஃ’தி சளைக்காமல் உடனே சுடச்சுட பதிலடி கொடுத்தார்: “அதே நியதிப்படி, தப்ரேஸிகளின் மண்டை அந்தச் சட்டியின் உள் பக்கம் மாதிரி காலியாகவே இருக்கிறதே எப்படி?”

            முதல் திருமணம் கசப்பான அனுபவங்களையே தந்தது என்றாலும், அதனால் மனம் தளர்ந்துவிடாத சஃ’தி, அரேபியாவில் தான் பயணித்தபோது இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண்ணுடன் அவர் அன்பாகவும் அமைதியாகவும் வாழ்ந்தார் என்று ஊகிக்கலாம். அந்த உறவில் பிறந்த குழந்தை ஒன்று சிறு பிராயத்திலேயே இறந்துவிட்டதை அவர் மனவேதனையுடன் எழுதியிருப்பதில் இருந்து அதனை நாம் அறிகிறோம்.

            எனினும், சஃதி இல்லற இன்பத்தை நிறைவாக அனுபவித்தாரா என்பது ஐயமே. ஏனெனில், அவர் தன் கவிதை ஒன்றில் இப்படி அறிவுரை சொல்கிறார்: “ஒவ்வொரு இளவேனிலிலும், புத்தாண்டு நாளில், ஒரு புதிய மனைவியைத் தேர்ந்தெடு. ஏனெனில் கடந்த ஆண்டின் பஞ்சாங்கம் இந்த ஆண்டு உதவாது!”

            சஃ’தியின் விருந்தோம்பல் மிகவும் பிரசித்தியானது. அவர் மிக தடபுடலாக விருந்தளிப்பதில் விருப்பம் கொண்டவர். ஒரு தருணத்தில், தன் போட்டிப் புலவன் ஒருவனுக்கு அவர் ராஜபோக விருந்து கொடுத்ததில் அவன் வியந்துபோய், அது போல் தாரளமாகத் தன்னால் திருப்பிச் செய்ய இயலாது என்பதை உணர்ந்தான். சஃ’தி அவன் வீட்டுக்கு விருந்தாளியாக வந்த போது அந்தப் பேரறிஞரின் முன் மிக எளிமையான உணவுகளைப் பரத்தி வைத்தான். தான் அப்படி விருந்து கொடுப்பதை அவன் மிக அழகான முறையில் விளக்கிச் சொன்னான்:

            ”நான் உங்களிடம் மூன்று நாட்கள் தங்கியிருந்து மகிழ்ந்த போது உங்களின் விருந்து மேஜையில் நீங்கள் எனக்கு அளித்த உபசரிப்பைப் போல் என்னால் ஒரு நாள் கூட தர முடியாது. ஆனால், இந்த மாதிரியான எனது சிக்கனமான உபசரிப்பால் நான் செலவைப் பற்றிக் கவலைப் படாமல் உங்களை உபசரித்தபடி உங்களுடன் இருக்கும் மகிழ்ச்சியைப் பல ஆண்டுகள் பெற முடியும்!”

            சஃ’தி தன் வாழ்வின் கடைசிக் காலத்தில் ஷீராஸுக்கு அருகில் ஒரு குடிலில் ஒதுங்கி இருந்தார். அங்கே தன் நேரத்தை அவர் இறை வழிபாட்டிலும் அந்த நாட்டின் மேன் மக்களின் வருகையை ஏற்பதிலும் கழித்தார்.

            சர் கோர் ஔஸ்லி சொல்கிறார்: “அவரின் சால்பு மிக்க சந்திப்பாளர்களே அவருக்கு வேண்டிய உணவுகளையும் வேறு பொருட்களையும் கொண்டு வந்து தருவது வழக்கமாக இருந்தது. அவர்களுடன் சேர்ந்து தானும் உண்டது போக மீதமுள்ள உணவுகளை எல்லாம் அவர் தன் ஜன்னலில் தொங்க விட்டிருந்த பை ஒன்றில் போட்டு வைப்பார். ஷீராஸின் மரவெட்டியர் தினமும் அவரின் குடில் வழியே கடந்து போவார்கள். அவர்களில் எவரேனும் பசியோடு இருந்தால் அந்த உணவை எடுத்துக் கொள்வார்கள். இந்தச் சூழலில் நடந்த ஒரு நிகழ்வாக பாரசீகர்கள் நம்பும் ஒரு நிகழ்வு உண்டு. அதாவது, ஒருநாள், மரவெட்டி போல் மாறுவேடம் அணிந்த மனிதன் ஒருவன் சஃ’தி தொங்க விட்டிருந்த உணவுக் கூடையை அணுகினான். அதைத் திருட வேண்டும் என்பது அவனின் நோக்கமாக இருந்தது. ஆனால் அவன் அதிலிருந்து கையில் எடுத்தபோது அவனின் கை காய்ந்து பட்டுப் போய்விட்டது. அது ஷைஃகு செய்யும் கராமத் (அற்புதம்) என்று கருதிய அவன் அவரின் உதவி கோரிக் கதறினான். அந்த ஞானி அவனிடம் எரிச்சலான குரலில் வினவினார்: ’யோவ், நிஜமாகவே நீ ஒரு மரவெட்டி என்றால், உன் கையில் சிலாம்பு ஏறிய தழும்புகள் எங்கே? உன் கை காப்புக் காய்த்துப் போயிருக்க வேண்டுமே, அது எங்கே? இல்லை நீ ஒரு திருடன் என்றால், ஒன்னுடைய கன்னக்கோலும் கயிறும் எங்கே? இப்படி அழுது புலம்புவதை விட்டும் உன்னைத் தடுக்கும் உன் தைரியமும் மனவுறுதியும் எங்கே?’ இப்படி அவனைக் கடிந்து கொண்டாலும், அவன் மீது இரக்கம் கொண்டு அவனின் கை மீண்டும் நலம் பெற வேண்டும் என்று துஆ (பிரார்த்தனை) செய்தார். அவனுக்கு எச்சரிக்கையும் அறிவுரையும் சொல்லி, அவன் திருடிக் கொண்டு போக நினைத்த பொருட்களில் ஒரு பகுதியை அவனுக்குத் தந்தார்.”

            பொ.ஆ 1256-இல் பாரசீகத்தின் முகலாய சாம்ராஜ்யத்தை அதாபக்குகளின் கைக்கு மாறியபோது ஒரு சம்பவம் நடந்தது. ஷீராஸின் ராணுவத் தளபதி அந்த ஊரின் காய்கறி வியாபாரிகளுக்கும் சந்தைக் கடைக்காரர்களுக்கும் ஒரு நிபந்தனை விதித்தார். மிக மலிவான விலை உள்ள பேரீச்சம் பழங்களை அதிகமான விலைக்கு அவர்கள் அரசிடம் இருந்து வாங்க வேண்டும் என்பதே அது. இந்த விடயம் ஷைஃகு சஃ’தியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அவர் முகலாய ஆளுநருக்கு கவிதை நடையில் ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்: “என் சகோதரன் அணிய கீழாடை கூட இல்லை; அவன் பேரீச்சம் பழங்களை அதிக விலைக்கு வாங்க வேண்டும் என்று தொல்லை! இதை விட ஒரு மனிதனுக்கு இருக்க முடியாது ஓர் அவல நிலை!” சஃ’தியின் கவிதை மக்களுக்குச் சாதகமாக வேலை செய்தது. ஷைஃகின் வறுமைப்பட்ட சகோதரனுக்கு இலவசமாகவே பேரீச்சம் பழங்கள் வழங்கப்பட்டதுடன், “அவன் அத்தனை வறுமையில் வாடுகிறான் என்பதை அறிந்ததற்காக” அவனுக்கு ஒரு “சிறிய தொகை”யும் உதவியாக வழங்கப்பட்டது.

            பொ.ஆ. 1265-இல் பாரசீகத்தில் இரண்டாம் முறையாக முகலாயர்கள் ஆட்சியில் அமர்ந்தபோது அரசன் ஒருநாள் தன் அமைச்சர்களுடன் சஃதியைச் சந்திக்க வந்தான். தான் ஒரு அரசனாக இருந்தபோதும் அமைச்சர்கள் அனைவரும் சஃ’தியை அரசனை விட அதிக மதிப்புடன் நடத்துவதைப் பார்த்து வியந்தான். அந்த வினோதமான சூழலுக்கு என்ன காரணம் என்று அவன் கேட்டபோது, உலகமெங்கும் தன் கவிதைகளால் பெயர் அறியப்பட்டுள்ள ஞானியான ஷைஃகு பற்றி அரசன் கேள்விப்பட்டதில்லையா என்று அவர்கள் திருப்பிக் கேட்டனர். அதன் விளைவாக, ஷைஃகு தன் அரண்மனைக்கு வந்து தனக்கு “ஏதேனும் அறிவுரை” வழங்க வேண்டும் என்று சஃ’தி அழைக்கப்பட்டார். “நீ இந்த உலகத்தில் இருந்து எதையுமே மறுமைக்கு எடுத்துச் செல்ல முடியாது. ஒரு நற்கூலி அல்லது ஒரு தண்டனை மட்டுமே உனக்குக் கிடைக்கும். இப்போது, எதைத் தேர்ந்தெடுப்பது என்பது உன் கையில் உள்ளது” என்று அவர் அறிவுரை கூறினார். அரசன் தான் அவமானப் பட்டதாக உணர்ந்தான். அதை சஃ’தி அறிந்து கொண்டார். எனவே, தான் அங்கிருந்து கிளம்பும்போது அவனின் காதில் பின்வரும் கவிதையைச் சொன்னார்:

            அரசன் இறைவனின் நிழல் ஆவான்

            நிழல் தன் மூலத்தை நெருங்கியிருக்க வேண்டும்.

            வாள் ஆட்சி புரியவில்லை என்றால்

            கீழ்களின் மனம் நன்மை செய்ய இயலாது.

            உலகில் தோன்றும் நீர்மைகள் யாவும்

            அரசனின் நேர்மைக்குக் கட்டியம் கூறும்;

            ஒவ்வொரு எண்ணமும் பிசகாய் உள்ளோனிடம்

            எவ்வாறு நாடு நன்மைகளை அடையும்?

            அதே ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களில் ஒருவர் சஃ’தியிடம் ஐந்து வினாக்களை முன்வைத்து விடை கோரினார்.

(1)    யார் சிறந்தவர் – மனிதனா? அசுரனா?

(2)    என் பகைவன் என்னிடம் சமரசம் அடையவிடில் நான் என்ன செய்ய வேண்டும்?

(3)    மக்காவுக்குப் பயணம் செல்பவன் அந்தக் கடமையை விட்டவனை விட மேலானவன் அல்லனா?

(4)    ஹழ்ரத் அலீ1-யின் வமிசக்காரன் பிறரை விட மேலானவனா?

(5)    ஞானக் கவிஞரே! நீங்கள் வளர்க்கும் பறவைகளைப் பேணுவதற்காக ஒரு தலைப்பாகையும் 500 தீனார்களும் கொண்ட அன்பளிப்பை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

அந்தச் செய்தியை சஃ’தியிடம் கொண்டு போன தூதுவன் தன்னையே அவரின் ”பறவை”களில் ஒன்றாகக் கருதி தன் பைக்குள் 150 தீனார்களைப் போட்டுக் கொண்டு மீதம் 350 தீனார்களை சஃ’தியிடம் கொடுத்தான். அவன் களவாடியதைக் கண்டுபிடித்துவிட்ட சஃ’தி அதனை சமிக்ஞை செய்து பின்வருமாறு பதில் எழுதினார்:

கண்ணியமான அன்பளிப்பும் பணமும்

எனக்கு அனுப்பி வைத்தீர்.

நும் செல்வம் பெருகட்டும்,

நும் பகைவர் நும் பாதத்தின் கீழே உருளட்டும்!

ஒவ்வொரு தீனாருக்கும் நும் ஆயுளில் ஆண்டு ஒன்று கூடட்டும்,

அப்படியாக இந்த உலகில் நீவிர்

முந்நூற்று ஐம்பது வயது வாழ்வீர்!

ஞானியின் கவிமடலை வாசித்ததும் அவருக்குக் கருவூலத்தில் இருந்து பத்தாயிரம் தீனார்கள் பரிசு அனுப்பி வைக்கும்படி அமைச்சர் அறிவித்தார். ஆனால் அப்போது கருவூலக் காப்பாளர் இறந்து போனார். அதனால் பரிசுத் தொகை வழங்கப்படாமல் இருந்தது. சிறிது காலம் சென்றதும் அதை அமைச்சருக்கு சஃ’தி கவனத்தில் கொண்டு வந்தார். நடந்ததை அறிந்த அமைச்சர் சஃ’திக்கு ஐம்பதாயிரம் தீனார்கள் பரிசளிக்கும்படி உத்தரவிட்டார். ஷீராஸில் கட்டப்பட்டு வரும் ”முசாஃபிர் ஃகானா” (பயணியர் விடுதி)க்கு அதன் ஒரு பகுதியை ஒதுக்குமாறு அவர் வேண்டுகோளும் விடுத்தார். சஃ’தி எழுதிய முதல் நான்கு விடைகளுக்கு என்ன சன்மானம் அளிக்கப்பட்டது என்று தெரியவில்லை.


ஷைஃகு சஃதி பொ.ஆ.1291-இல் ஷீராஸில் தன் முதிய வயதில் மரணம் அடைந்தார். அவரின் கவிதை வரிகள் பொறிக்கப்பட்டுள்ள அவரின் அடக்கத்தலம் மிகுந்த கண்ணியத்துடன் போற்றப்பட்டு வந்தது. பின்னாளில் அது கைவிடப்பட்ட நிலையில் பாழடைந்து விட்டது. எனினும் பாரசீகத்தின் மிக மேன்மையான கவிஞர்கள் மற்றும் அறிஞர்களில் ஒருவரின் ஓய்விடம் என்று அடையாளம் காணும் வகையில் அதன் எஞ்சிய பகுதிகள் நல்ல நிலையில் இருக்கின்றன.

 உள்ளூர் நாட்குறிப்பாளர் ஒருவர் அவரின் உருவத்தை இப்படி வருணிக்கிறார்: “சஃ’தி குள்ளமானவர். லட்சணமானவர் அல்லர். அவரின் தலை நீளமாக இருந்தது. அது ஆழ்ந்த சிந்தனை மற்றும் ஞானத்தைக் காட்டுவதாக இருந்தது. அவரின் ஆடை மிக எளிமையாகவும் அதே சமயம் சிறப்பாகவும் இருந்தது. ஒரு தலைப்பாகை, ஜுப்பாவின் மீது அணியப்பட்ட நீளமான நீல நிற அங்கி, கையில் ஒரு அஸா (கைத்தடி). இந்த கண்ணியமிக்க பாணரின் பண்பு மிக உயர்வானதாகவும் அவர் ஒரு பேராளுமை என்று காட்டுவதாகவும் இருந்தது. அவர் மிகவும் இங்கிதமானவராக, நண்பர்களுக்கு இணக்கமானவராக, பகைவருக்கும் தாராளமானவராக இருந்தார். விகடத்தில் தன் காலத்தின் அறிவன்மார் அனைவரையும் விஞ்சுபவராக இருந்தார். அவரின் நகைச்சுவை எந்த அளவுக்கு ஆற்றல் உடையதாக இருந்தது என்றால் அதைக் கேட்டால் எத்தகைய கடுமயான உம்மணாமூஞ்சிக் காரனும் கலகலவென்று சிரித்துவிடுவான். அனுபவமிக்க இளைஞர்களின் வட்டத்தில் அவர் ஒரு சின்னப் பையனாகவும், மனிதப் புனிதர்களின் சமூகத்தில் ஒரு ஞானியாகவும் இருந்தார். சுருக்கமாகச் சொன்னால், அவர் ஒரு நிறைவான அறிஞர், செவ்விய ஃபார்சி மொழிப் புலமை கொண்ட உன்னதமான குரு, இறையியலில் ஒரு தெளிவான வழிகாட்டி, வாழ்க்கை மற்றும் நல்லறம் பற்றி சொல்லோவியம் தீட்டிய இலக்கியவாதி.”

“ஆயிரம் பாடல்களின் அருங்குயில்” என்று அழைக்கப்படும் ஷைஃகு சஃ’தி அவர்கள் எழுதியதாக நன்கு அறியப்படும் பனுவல்கள்:


அ) பூஸ்தான் (கனித் தோட்டம்) – அறக் கருத்துக்களும் வாழ்க்கை நியதிகளும் பொதிந்த அற்புதமான கவிதை நூல்.

ஆ) குலிஸ்தான் (ரோஜா வனம்) – ஃபார்சி இலக்கியத்தில் அதிகம் படிக்கப்படும் நூல் என்று இதனைக் கருதலாம். இந்த அழகான நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிடும்போது ஈஸ்ட்விக் எழுதினார்: “பள்ளி மாணவன் தன் முதல் பாடங்களை இதில் கற்கிறான். கல்வி நிறைந்த அறிஞன் இதனை மேற்கோள் காட்டுகிறான். இதில் உள்ள அடிகள் பலவும் பழமொழிகள் ஆகிவிட்டன. இஃது எழுதப்பட்ட காலத்தை நாம் கருதினால் – பதின்மூன்றாம் நூற்றாண்டின் முதல் பாதியில் – ஐரோப்பாவின் மீது காரிருள் படர்ந்திருந்தது – அந்தோ! குறைந்தபட்சம் அது உணரப்படாத ஓர் இருள் என்று ஒப்ப வேண்டும் – அத்தகைய காலத்தில் இந்த நூலில் எழுதப்பட்டுள்ள கருத்துக்கள் பலவும், அதில் இருக்கும் இறைப் பண்புகள் குறித்த ஒளிமிகு பார்வைகளும் நிச்சயமாக அற்புதமானவையே.”

இ) பந்த் நாமா அல்லது அறிவுச் சுருள் (கரீமா)4 -  இருபதாம் நூற்றாண்டின் தத்துவச் சூழலுக்கும் பொருந்தி வருகின்ற கருத்துக்கள் பொதிந்த சிறிய கவிதை நூல். செறிவும் நேர்த்தியும் கொண்ட இந்நூல் ஃபார்சி மொழியறிந்த கிழக்குலகு நெடுகிலும் மிகப் பிரபலமான ஒன்றாகத் திகழ்கிறது. இந்நூல் அழகான சொற்கோவை கொண்டிருப்பதுடன் அச்சொற்கள் மனத்தில் பதியும்படி மிகச் சரளமாகச் சொல்லக்கூடிய சந்தத்தில் அமைந்திருப்பதும் இதற்குக் காரணம் எனலாம். எனவே இதன் அடிகள் மனனம் செய்யப்படும் வழக்கம் இருக்கிறது. வேறெந்த ஃபார்சி மொழி நூலை விடவும் இந்நூல் அந்தப் பேறு பெற்றுள்ளது. பைரன் எழுதிய “Lover’s Last Adieu” என்னும் கவிதையின் சந்தத்தை சஃ’தியின் பந்த் நாமா என்னும் அறிவுச்சுருளில் உள்ள சந்தத்துடன் ஒப்பிடலாம். இரண்டிலிருந்தும் அடிகளை அருகருகே வைத்துப் பார்த்தால் இதை உணரலாம்:

“The roses of love glad the garden of life”

“கரீமா ப-பஃக்ஷாயே பர் ஹாலே மா”

இன்னும் ஒரு விடயம் மட்டும் சொல்வதற்கு உள்ளது. அதாவது, இந்த நாட்டில் கடந்த நூறு ஆண்டுகளில் பந்த் நாமா என்னும் அறிவுச்சுருளின் எவ்வொரு மொழி பெயர்ப்பும் பதிக்கப்படவில்லை (தன்னளவில் பூர்த்தியாகாத கிளாட்வினின் பிரதி 1801-இல் பிற்சேர்க்கையான மொழிபெயர்ப்புடன் வெளியிடப்பட்டது.) எனினும், பம்பாயில் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அறிஞர் ஒருவர் அதனை ஆங்கிலத்தில் பெயர்த்தார் என்று தெரிகிறது. அவ்விரண்டு நூற்களுமே இப்போது அச்சில் இல்லை. நடைமுறையில் அந்த மொழிபெயர்ப்புப் பிரதிகள் இப்போது ஆங்கிலேயப் பொது மக்களுக்குக் கிடைப்பதாக இல்லை என்று சொல்லலாம். எனவே, இந்தப் பிரதியை வெளியிடுவதில் தடை ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

                                                                                                ஆர்தன் என். வல்லாஸ்டன்.

க்ளென் ஹில், வால்மர்

மே 6, 1906.

  ________________________________________

1 இதை அவர் சிறிய ஆசியா, பார்பரி, அபிசீனியா, எகிப்து, சிரியா, ஃபலஸ்தீன், அர்மேனியா, அரேபியா, ஈரானின் பல்வேறு மாகாணங்கள், மற்றும் இந்தியாவின் சில பகுதிகள் ஆகிய இடங்களுக்குப் பயணித்த பின்னர் எழுதியிருக்க வேண்டும். இந்த அலைவுகளின் காலத்திலும்கூட அவரின் பெயர் அனைவராலும் அறியப்படாமல் இல்லை.

2 அதாவது சிலுவைப் போராளிகள்.

3 இன்றைய பண மதிப்பின்படி நூறு தீனார்கள் என்பது இங்கிலாந்துப் பணத்தில் ஒரு பென்னி மதிப்பு வரும். ஆனால் சஃ’தியின் காலத்தில் ஒரு தீனார் என்பது ஏழு அல்லது எட்டு ஷில்லிங் மதிப்பு இருந்திருக்கும்.

[குறிப்பு: ஷில்லிங் என்னும் நாணயம் 1960-களில் வழக்கொழிந்துவிட்டது. அப்போது அது ஒரு பவுண்டில் இருபதில் ஒரு பங்கு மதிப்பாக இருந்தது. அதாவது, 20 ஷில்லிங் = 1 பவுண்ட். இன்று ஒரு பவுண்ட் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக 109 ரூபாய் ஆகும். எனவே ஒரு ஷில்லிங் என்பது 109 / 20 = 5.45 ரூபாய் ஆகும். ஆக, 1 தீனார் =  8 ஷில்லிங் = 5.45 x 8 = 43.6 ரூபாய் ஆகும். எனவே, 100 தீனார் என்பது 43.6 x 100 = 4360 ரூபாய் ஆகும். இதுவே, சஃ’தி வழங்கிய மஹர் என்னும் திருமணக் கொடையின் தொகை – ரமீஸ் பிலாலி]

4 தொல் கையெழுத்துப் பிரதிகளில் இந்தப் பனுவல் காணப்படவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். இது பொ.ஆ.1438 வாக்கில்தான் முதன் முதலாக சஃ’தி எழுதியதாகச் சொல்லப்பட்டது.


1906-இல் வல்லாஸ்டன் இதை எழுதியபோது இமாம் சஃ’தியின் அடக்கத்தலம் பாழ்நிலையில் இருந்திருக்கலாம். ஆனால் பின்னர் அது மராமத்துச் செய்யப்பட்டு இன்று வரை அழகிய வடிவில் பேணப்படுகிறது. ஸூஃபித்துவ சாதகர்கள் வருகை நல்கும் தலமாக அமைந்திருக்கிறது.

 





Friday, September 13, 2024

அல்-ஹாரிஸ் இப்னு மிதாதின் தேசப் பிரஷ்டம்

 (இஸ்லாமுக்கு முற்பட்ட அறபு நாட்டு மரபுக் கதை)

அறபக மக்களின் பல்வேறு இனக்குழுக்கள் அல்லது குடிகளின் கால்வழித் தொடர்ச்சி என்பது வரலாற்று நோக்கிலும் பண்பாட்டு மானுடவியல் நோக்கிலும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அதனைப்பற்றிய ஆராய்ச்சிக்கான மூலப் பிரதிகளாக அறபிச் செவ்வியல் கதைகள் இருக்கின்றன. அவற்றுள் இக்கதை முக்கியமான ஒன்றாகும். நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் பூவுலக வருகை குறித்த முன்னறிவிப்புகள் இஸ்லாமுக்கு முந்தைய அறபகத்திலும் இருந்துள்ளன என்பதற்கான ஒரு குறிப்பு இக்கதையில் இருக்கிறது. எனவே, இக்கதையை இந்த ஆண்டு மீலாதுந் நபி தினத்துக்கான இடுகையாக இங்கே தருகிறேன். அனைவருக்கும் இனிய மீலாதுந்நபி வாழ்த்துக்கள். - ரமீஸ் பிலாலி.


கிதாபுல் திஜன் ஃபீ முலூக்கில் ஹிம்யார் (ஹிம்யாரின் அரசர்கள் குறித்த மகுடங்களின் நூல்) என்பதிலிருந்து.

[பழங்கதை ஒன்றின்படி, இஸ்ரவேலின் புதல்வர்கள் தாவூது (டேவிட்) மற்றும் சுலைமான் (சாலமோன்) ஆகியோரின் இறைக்கொள்கையைப் புறக்கணித்ததுடன் தாவூதுக்கு இறைவன் அருளியிருந்த அல்-ஜபூர் என்னும் வேதத்தின் வார்த்தைகளை மாற்றிவிட்டனர். விலைமதிப்பற்ற புனிதப் பிரதிகள் சிலவற்றை உள்ளடக்கிய பேழை ஒன்றைத் தம்முடன் வைத்திருந்த இஸ்ரவேலின் புதல்வர்கள் மக்காவின் மீது ராணுவத் தாக்குதல் நடத்தினர். அக்காலத்தில் மக்காவின் அரசராக இருந்த அல்-ஹாரிஸ் இப்னு மிதாதுல் ஜுர்ஹுமி என்பார் அவர்களைத் தோற்கடித்ததும் அவர்கள் அப்பேழையைக் கைவிட்டுப் போயினர். ஜுர்ஹும் மற்றும் இம்லாக் குடியினர் அப்பேழையை மக்கா நகரின் சாணிக் குவியல்களில் ஒன்றிற்கு அடியில் புதைத்துவிட்டனர். ஆனால் அதனுள் இருந்த கிரந்தங்களின் மதிப்பை உணர்ந்த அல்-ஹாரிஸிப்னு மிதாத் அவற்றைப் புதைப்பதற்கு எதிர்ப்புக் காட்டி, அந்தப் பேழையை இரவில் எரித்துவிட வேண்டும் என்று சொன்னார். ஜுர்ஹும் மற்றும் இம்லாக்கின் மக்கள் அப்பேழையின் உள்ளிருந்த புனித கிரந்தங்களை அவமதித்த காரணத்தினால் அதன் பிறகு அழிந்து போயினர். பெருந்துயர் உற்ற அல்-ஹாரிஸிப்னு மிதாத் தன்னைத் தானே முந்நூறு ஆண்டுகளுக்கு தேசப் பிரஷ்டம் செய்து கொண்டார். ‘அல்-ஹாரிஸிப்னு மிதாதின் தேசப் பிரஷ்டம்’ என்பது அறபியில் ஒரு முதுமொழி ஆகிவிட்டது.]

இயாதிப்னு நிஜாரிப்னு ம’அத்திடமிருந்து அறிவிக்கப்படுகிறதாவது, அவரின் செல்வச் செழிப்பைப் பற்றி வினவப்பட்டபோது அவர் பின்வரும் கதையைச் சொன்னார்:

 

            என் அத்தா நிஜார் இறந்தப்ப, அவருக்குப் பின்னால என்னோட சேத்து என்னோட தம்பிங்க முளரு, ராபி’ஆ, அம்மார்னு மூனு பேத்தையும் விட்டுட்டுப் போனாரு. நாந்தான் அவருக்கு மூத்த மவங்றதால அவுங்கள எம் பொருப்புல ஒப்படைச்சாரு. சொத்துப் பிரிக்கிறதுல என்னமாச்சும் கொழப்பங் கிழப்பம் வந்திச்சுன்னா நஜ்ரானின்1 நாகம்னு பேரெடுத்த குல்மூஸுங்ற அறிவாளிகிட்ட போயி ஆலோசனக் கேட்டுக்கடான்னு சொல்லீட்டுக் கண்ணெ மூடிட்டாரு.  நாங்க அவரப் பாக்கப் போனப்ப, ஒட்டகங்களும் செம்மறிகளும் எனக்கு, வீடு முளருக்கு, பொட்டக் குதிர ராபி’ஆவுக்கு, நெல்புலம் அம்மாருக்குன்னு பங்கு வச்சாரு.

 

            கொஞ்ச நாளுக்கப்புறம் பெரிய பஞ்சம் ஒன்னு எங்களத் தாக்குச்சு. பத்து ஒட்டகங்களத் தவுத்து என்னோட எல்லாச் சொத்தையும் எழந்துட்டேன். எங் குடும்பத்துக்குக் கஞ்சி ஊத்தியாவணுமே? பத்து ஒட்டகங்களையும் வாடகைக்கு விட ஆரம்பிச்சேன். ஒரு நா, என்னோட ஒட்டகங்கள வாடகைக்கு விட்டேன், எந் தம்பிகளும் அதவே செஞ்சாங்க. நானும் ஒரு ஒட்டகத்துல திமிஷ்குக்குப் போய்ட்டு மதீனாவுக்குத் திரும்பி வந்தேன். அங்கேர்ந்து என் ஒட்டகங்கள மக்காவுக்குப் போவ வாடகைக்கு எடுக்க ஆளே வர்ல. பயணக்குழு மக்யா நாக் காலைல கெளம்புது. ரெண்டு ஊருகளுக்கும் எடைல பத்து நிறுத்தங்க இருந்துச்சு.


திடீர்னு, என்னோட சங்கடமான நெலமைல, யாரோ ஒருத்தரோட கொரலு எனக்குக் கேட்டுச்சு:

 

            “மக்களே! திருத்தலத்துக்குப் போவ எனக்கு யாராச்சும் ஒட்டகந் தர்றீளா? தந்தீங்கன்னா ஒட்டகச் சவாரிக்கு நான் குடுக்குற வாடகைய கேட்டுக்கங்க, ஒங்க ஒட்டகம் எம்புட்டு சொமக்க முடியுமோ அம்புட்டுக்கு முத்தும் மாணிக்கமும் தங்கமுமாத் தருவேன்!”

 

            ஆனா, யாருமே அந்த ஆளக் கண்டுக்கல. எல்லோரும் அவுங்கவுங்க வேலையில மும்முரமா இருந்தாங்க. ‘நாம ஏன் ஒரு ஒட்டகத்தக் குடுக்ககூடாது?’ன்னு எனக்கு நானே யோசிச்சேன், ’அவரு சொல்றது உண்மையான இருந்தா நான் பணக்காரனாயிருவேன், அவரு சொல்றது பொய்யாயிருந்தா அதுனால எனக்கு நட்டம் ஒன்னும் வரப்போறதில்ல.’ கூவுனவுரத் தேடிப் பாத்தேன். பனமரம் மாதிரி நெட்டையா ஒரு தாத்தா. கண்ணு வேற பொட்ட. அவரோட தாடி மொழங்காலு வரய்க்குந் தொங்குச்சு. அவரோட உருவமே வித்தியாசமா இருந்தாலும் பேசித்தான் பாப்பமேன்னு அவருகிட்ட போனேன்.

 

            ’ஏ தாத்தா, நீங்க தேடுறது எங்கிட்ட இருக்கு’ன்னேன்.

 

            ’கிட்ட வா மகனே!’ என்று அவர் அழைத்தார்.

 

            நான் அவருகிட்ட போனதும் கைய என்னோட தோளு மேல வச்சாரு. மலையத் தூக்கி வச்ச மாதிரி கனமா இருந்துச்சு.

 

            ’இயாதிப்னு நிஜார்தானே நீயி?’ன்னு அவரு கேட்டாரு.

 

            ’ஆமா, எம்பேரு ஒங்களுக்கெப்படித் தெரியும்?’னு நான் ஆச்சரியமாக் கேட்டேன்.

 

            ’எங்க அத்தா எனக்குச் சொன்னாங்க. அவருக்கு அவுங்க அத்தா சொன்னாங்க, இயாதிப்னு நிஜாருதான் அல்-ஹாரிஸிப்னு மிதாத் அல்-ஜுர்ஹுமிய தேசப் பிரஷ்டம் முடிஞ்சப்றம் மக்காவுக்குத் திருப்பிக் கூட்டீட்டு வருவான்னு. சரி, ஒங்கிட்ட எத்தினி ஒட்டகம் இருக்கு?’

 

            ’பத்து’ன்னு நான் பதிலுரச்சேன்.

 

            ’ஆங், அது போதும்,’னு அவரு திருப்தியாச் சொன்னாரு.

 

            ’ஒங்க கூட மத்தவுங்களும் இருக்காங்களா?’ன்னு கேட்டேன்.

 

            ’இல்லெ. நான் ஒவ்வொரு நாளும் ஒரு ஒட்டகத்துமேல உக்காந்து வருவேன். அப்புறம் அது மொடமப் போயிரும்.’

 

            எனக்கு அவரு சொன்னது அதிர்ச்சியா இருந்தாலும், சொன்ன சொல்லுல நிக்கணுமேன்னு நான் ஒத்துக்கிட்டேன்.

 

            அவரு அன்னிக்கி ராத்திரி எங்கூடதான் தங்குனாரு. மக்யா நா காலைல சனங்க மக்காவுக்குப் பொறப்புட்டப்ப நானும் அவுங்களோட சேந்துக்கிட்டேன். கெழவனையும் கூட அழச்சிக்கிட்டுப் போனேன். பொழுது சாயுற வரய்க்கும் நாளு பூராவும் பயணம் பண்ணுனோம். அவரு உக்காந்து வந்த ஒட்டகம் காலு வெளங்காமப் போயிருச்சு. அடுத்த நா காலைல் அவருக்கு இன்னோரு ஒட்டகத்தக் குடுத்தேன். அன்னிக்கி சாயந்தரம் அந்த ஒட்டகமும் மொடமாயிருச்சு. இப்பிடியே ஒவ்வொரு ஒட்டகமா ஒவ்வொரு நாளும் சாஞ்சுக்கிட்டு வந்துச்சு. கடசீல ஒரு வளியா மக்கவுக்குப் போயி சேந்துட்டோம். மதாபிஃக் மலெ மேல இருந்தோம்.

 

            ’மகனே, ஒட்டகம் மேல இளுக்குறாப்ல இருக்கே, மதாபிஃக் மலய்க்கு வந்துட்டமா?’ன்னு குருட்டுத் தாத்தா கேட்டாரு.

 

            ’ஆமாம்’னேன்.

 

            ’நாம் பேசுறதக் கேக்குறாப்ல பக்கத்துல வேற யாரும் இருக்காங்களா?’ன்னு கேட்டாரு.

 

            ’பக்கத்துல யாருமில்லெ. நமக்கு மின்னாடியும் பின்னாடியும் கொஞ்சம்பேரு இருக்காங்க’ன்னேன்.

 

            அப்புறம் அவரு கேட்டாரு: ‘நான் யார்னு ஒனக்குத் தெரியுமா?’

 

            ’இல்ல’ன்னேன்.

 

            ’நாந்தான் அல்-ஹாரிஸிப்னு மிதாத் இப்னு அப்துல் மசீஹ் இப்னு நுஃபைலா … இப்னு ஜுர்ஹும் இப்னு கஹ்தான். நான் மக்காவோட அரசனா இருந்தேன்… எனக்கு மின்னெ என் அண்ணாரு அம்ரிப்னு மிதாத் அரசனா இருந்தாரு. நாங்கள்லாம் முடிசூட்டிக்கிடா ராசாங்க. திரும்பியும் ஒருநா இல்ல மருநா நாங்க எங்க தலய்ல மகுடம் சூடுவோம். கொஞ்ச நாளு போவட்டும், எங்க மகுடத்த [மக்காவிலிருக்கும்] பைத்துல் அத்தீக்கோட2 வாசக்கதவுல தொங்க விடப்போறேன். அப்பொ என்ன நடந்துச்சுன்னா, இசுரவேலோட சந்ததீல ஒருத்தன் முத்தும் மாணிக்கமும் விக்கிறேன்னு சொல்லிக்கிட்டு மக்காவுக்கு வந்தான். அவங்கிட்ட இருந்த சரக்கு முழுசையும் அம்ரு ராசா வாங்கீட்டாரு. அதுகளத் தன்னோட்ட மகுடத்துல பதிச்சு அதெ ஒரு கேடயம் மாதிரி மாத்தீட்டாரு. ஆனா, அந்த இஸ்ரேலிப்பய ராசாகிட்ட வித்தத விட ஒசத்தியான மணிகள மறச்சு வச்சு மித்தவுங்கள்ட்ட வித்துப்புட்டான். இந்த விசயம் ராசாவுக்குத் தெரிஞ்சதும் அவனெ புடிச்சிட்டு வந்து தம் முன்னால நிக்க வச்சாரு.


’ஒசத்தியான மணிகள நீ எங்கிட்ட மறச்சியாமே? மாத்து கொறஞ்ச மணிகளத்தான் எனக்கு வித்தியாமே? நாங் கேள்விப்பட்டது உண்மையா? ஒங்கிட்ட நான் ஆக சிறப்பானதுதான் வேணும்னு கேக்கல?’ என்று ராசா கேட்டாரு.

 

            ’ஆமாங்க ராஜா’ன்னு அவன் நடுங்கிகிட்டே சொன்னான்.

 

            ’அப்புறம் ஏன் அப்படிப் பண்ணுன?’ன்னு ராசா கேட்டாரு.

 

            ’சரக்கு என்னோடது ராசா. நான் விரும்புனத விக்யவும் விரும்புனத மறச்சு வக்யவும் எனக்கு உரிம இருக்குல்ல?’ன்னு அவன் திருப்பிக் கேட்டான்.

 

            ”ராசாவுக்கு ஆத்திரம் தலைக்கேறிருச்சு. அவங்கிட்ட இருந்த கொஞ்ச நஞ்ச மணிகளையும் பறிமுதல் செய்ய ஆணையிட்டாரு. ஆனா அந்த இஸ்ரேலி தன்னோட தலைய வெட்ட வந்தவன கொலை பண்ணீட்டு, பைத்துல் அத்தீக்ல தொங்க விட்டிருந்த மகுடத்த எடுத்துக்கிட்டு பலமான ஒரு ஒட்டகத்துல ஏறி அங்கேர்ந்து சிட்டாப் பறந்துட்டான். அடுத்த நாளு, விசயம் வெளிச்சத்துக்கு வந்தப்ப அத செஞ்சவன் யாருன்னு ஒருத்தராலயும் கண்டுபுடிக்க முடியல. கொஞ்ச நாளுக்கப்புறம் ஜெருசலேம்ல இருந்து சேதி வந்துச்சு. அம்ரு ராசா இஸ்ரவேலருங்களுக்குச் சொல்லி அனுப்புனாரு. அப்போ அவுங்களோட ராசாவ இருந்தவனுக்கு ஃபாரான் இப்னு யாகூபு இப்னு சிப்து இப்னு யமீன்-னு பேரு. மகுடத்த திருப்பி அனுப்பணும், அத்தொட்ட, கொல செஞ்சதுக்கான ரத்த பணமும் அனுப்பனும்னும் கொலக் குத்தத்த அவுங்க ஆளுதான் பண்ணுனான்னு ஒத்துக்கிட்டு அதுக்கு உரிய வகைல மன்னிப்புக் கேக்கணும்னும் அவருகிட்ட சொல்லப்பட்டுச்சு… ஆனா, ஃபாரான் அத ஏத்துக்க மறுத்துட்டான்.

 

            ’அப்புறம் அம்ரு ராசா அவனுக்கு ஒரு கடிதாசு எழுதுனாரு. மக்காவோட புனித அல்-பைத்துல் அத்தீக்கோட கதவுலதான் எப்பவும் மகுடம் தொங்கவிடப்படணும். இது வரய்க்கும் யாரும் அத பலத்தாலயோ சூழ்ச்சியாலயோ எடுத்துக்கிட்டுப் போனதா சரித்திரம் இல்ல. இதுக்கு ஃபாரான் என்ன பதிலு சொன்னாந் தெரியுமா? மகுடத்த நான் ஜெருசலேம்ல தொங்க வுட்டுக்குறேன்னு சொல்லீட்டான். அம்ரு திரும்பவும் எழுதுனாரு, ‘இறைவன் செல்வந்தன். அவனோட ஒரு வூட்ட அலங்கரிக்கிறதுக்காவ இன்னொரு வூட்ல எப்படித் திருடலாம்? இப்படி சூழ்ச்சி பண்ணியா கடவுளுக்கு கண்ணியம் பண்றது?’ ஃபாரான் அதுக்கும் முரண்டு பண்ணிக்கிட்டு ஒரு பதிலு போட்டான்: ‘நாங்கள்லாம் விசுவாசிங்க. எங்களுக்கு ஒரு புனித வேதம் இருக்கு. கடவுளப் பத்தி ஒங்கள விட எங்களுக்கு நல்லாவே தெரியும்.’ அம்ரு ராசா அதுக்கும் பதிலு சொன்னாரு: ‘கடவுள்ளு எவங் கட்டுப்படுறானோ அவனுக்குத்தான் கடவுள நல்லாத் தெரியும். இது கடவுளோட ஒரு வூட்டுக்காக இன்னொரு வூட்டத் திருடுறதில்ல. ஒரு ராசா இன்னொரு ராசாகிட்ட திருடுறது.’

 

            ’அதுனால நாங்க ஜெருசலேம் மேல போர் தொடுத்தோம். ஜுர்ஹும் குடியிலேர்ந்து நூறாயிரம் பேரு. கூட, இம்லாக் குடியிலேர்ந்து ஒரு நூறாயிரம் பேரு. குதா’ஆ இப்னு ஹிம்யார் குலத்தோட ஒரு கெளயான அப்தூது இப்னு குலைபுக் குடியச் சேர்ந்த அல்-அஹ்வாஸ் இப்னு அம்ருல் அப்தூதி எங்களுக்குப் பக்க பலமா ஒரு அம்பதாயிரம் பேத்த அனுப்பியிருந்தாரு. ஃபாரான் இப்னு யாகூபு அவனோட கூட்டணீல இருந்த பைஜாந்திகள்ட்ட ஒதவி கேட்டான். ஷுனைஃபு இப்னு ஹிராக்கில்-ங்றவந்தான் அப்போ பைஜாந்திகளோட தலைவனா இருந்தான். அவன் நூறாயிரம் பேருள்ள ஒரு படைய ஒதவிக்கு அனுப்பி வச்சான். இஸ்ரவேலு சந்ததிகள்லேர்ந்து இன்னொரு நூறாயிரம் பேருக்கு ஃபாரானே தலமெ தாங்குனான். அல்-ஷாம் [சிரியா] நாட்லேர்ந்து இன்னொரு நூறாயிரம் பேரு அவனுக்குத் தொணையா வந்தாங்க. இந்த மதாபிஃக் மலய்லதான் ஃபாரான் வந்து பாளையம் எறங்குனான். நாங்களும் அப்டியே செஞ்சோம். அந்த மலய்க்கு இந்தப் பேரு எப்டி வந்துச்சுன்னு ஒனக்குத் தெரியுமா?’ன்னு ஒரு வரலாறே சொல்லி முடிச்சாரு கெழவனாரு.

 

            ’தெரியலியே பூட்டா’ன்னேன்.

 

            இன்னொரு வரலாற சொல்ல ஆரம்பிச்சிட்டாரு: ‘ஃபாரானும் ஷுனைஃபும் இந்த மலயோட கெழக்குப் பக்கம் பாசற் போட்டுத் தங்குனப்ப நெருப்பு மூட்டி சமச்சானுங்க. நாங்க எங்க பங்குக்கு மலயோட மேக்குப் பக்கம் கூடாரம் அடிச்சு, தீ மூட்டி சமச்சோம். அதுனாலதான் இந்த மலய்க்கு ஜபலுல் மதாபிஃக் [அடுமலை]ன்னு பேரு வந்திச்சு… ரெண்டு படையும் ஒன்னெ ஒன்னு எதுத்து நின்னப்ப என் அண்ணாரு அம்ரு ராசா எங்கிட்ட வந்து ‘ஹாரிஸு, எனக்குப் பொறவு நீதாண்டா என் வாரிசு’ன்னாரு. அப்புறம் அவரு எதிரிப் படெ கிட்ட போயி, ‘ஒங்க ராசா யாரு? இந்தா, அம்ரிப்னு மிதாத் வந்திருக்கேன்’ன்னாரு. ஷுனைஃபு எந்திரிச்சு நின்னப்ப அவங்கிட்ட சொன்னாரு: ‘ஒனக்கும் எனக்குமா எதுக்கு சனங்க கெடந்து சாவணும்? வா, நாம ஒத்தக்கி ஒத்த பாத்துருவோம். நீ என்னெ கொன்னுட்டீன்னா எம் மக்க ஒனக்கு அடங்கியிருப்பாங்க; நான் ஒன்னெ கொன்னுட்டேன்னா ஒம் மக்க எனக்கு அடங்கீருக்கணும்.’ ஷுனைஃபு இதுக்கு ஒத்துக்கிட்டான். முடிவு என்னாச்சுன்னா, அம்ரு அவனெ கொன்னுட்டாரு… ஷுனைஃபும் தானும் பேசி ஒத்துக்கிட்ட மாதிரி நடக்கணும்னு அம்ரு கேட்டப்ப அதுக்கு ஃபாரான் மறுத்துப் பேசுனான். தான் மக்காவக் கைப்பத்துன பொறவு அந்த மக்களோட செல்வத்துலேர்ந்து பங்கு தர்றேன்னு சொன்னான். அதக் கேட்ட அம்ரு அவனுக்குச் சேதி அனுப்புனாரு; ஏற்கனவே பண்ணுன மாதிரி இப்பவும் நீ வாக்குக்கு மாத்தமா மரியாத கொறவா நடந்துக்குற. நாளய்க்கு நான் ஒங்கூட சண்டெ போடுவேன்.’

 

‘போர் ஆரம்பிக்கிறதுக்கு மிந்தி, அல்-அஹ்வாஸ் அம்ருல் அப்தூதி அவரோட குடிமக்கள்ட்ட பேசுனாரு: ‘என் இனிய அறபி மக்களே! நான் சொல்றத நல்லாக் கேட்டுக்கங்க. நெலம இன்னிக்கு இருக்குற மாதிரியே நாளய்க்கும் இருக்கும்னு சொல்ல முடியாது. எல்லா நலவுக்கும் ஊத்துக்கண்ணா இருக்குற அந்த இறைவனுக்கு நன்றி காட்டுங்க, ஒங்க புனிதத் தலத்த பாதுகாப்புப் பண்ணுங்க, நல்ல நடத்தைகள கடப்பிடிச்சி வாழுங்க, நீங்க அடுத்தவுங்களுக்கு செஞ்ச ஒதவி ஒத்தாசைகளச் சொல்லிக் காட்டாதீங்க, வீர தீரமா இருங்க, அதுதான் கண்ணியத்துக்குண்டான சாராம்சம், சுயநாசத்துக்கு வழி பண்ற கழிவிரக்கத்த விட்டொழிங்க. போருக்கு முந்தாதீங்க, அது அநியாயமா ஏகப்பட்ட உசுருகள அழிச்சுப்புடுது, ஆனா, ஒங்க நாட்டத்துக்கு மாத்தமா நீங்க தாக்கப்பட்டா உறுதியோட அத எதுத்துப் போராடுங்க, நிச்சயமில்லாத விசயங்கள நம்பி ஏமாந்துறாதீங்க, ஏன்னா போர்ல ஏகப்பட்ட நிச்சயமில்லாத விசயங்களும் ஆசைகளும் இருக்கு, அது மனுசனோட கண்ண குருடாக்கீரும். போர்களோட சூழ்ச்சிய பத்தி எச்சரிக்கையா இருங்க, அது ஒங்களோட அதிகாரத்த நாசமாக்கி ஒங்களோட பேரையும் புகழையும் மண்ணாக்கி ஓச்சுரும். நீங்க பெரிய சாம்ராஜ்யங்களோட பரம்பர. இந்த நெனப்ப ஒழிச்சிராதீங்க. நீங்க போர்க் கலைல வல்லமயான ஆளுங்கன்றத மறந்துறாதீங்க. ஆனா, இஸ்ரவேலு ஆளுங்களும் பைஜாந்தியனுங்களும் ராஜியத்தையும் போர் வரமொறங்யளையும் மீறுர பயலுங்க. நீங்க போர்ல தோத்தீங்கன்னா ஒங்க பழைய சாம்ராஜ்யம் அழிஞ்சுப் போயிரும். அது எப்ப விழுந்து போவுதோ அந்த நொடியே நம்ம குடி சுத்தமா அழிஞ்சு போயிரும். நெலச்சு நில்லுங்க மக்களே! ஆண்டவன் ஒங்களுக்கு ஆயுச நீட்டித் தருவான்!’

 

’இப்டிப் பேசுனதுக்கப்புறம் அம்ரு ராசா எங்க படையோட போயி அவனுங்களத் தாக்குனாரு. அவனுங்க எங்களத் தாக்குனானுங்க. ரொம்ப நேரம் சண்டெ போய்க்கிட்டே இருந்துச்சு. எங்க வாளு அவனுங்கள நார் நாராக் கிழிச்சுப் போட்டுச்சு. அந்தப் போர்ல நாங்க ஜெயிச்சோம். அந்த நாளத்தான் ’ஷுனைஃபுடைய நாள்’னு சொல்றோம். அம்ரு ராசா மலெ மேல ஃபாரான் இப்னு யாகூபைப் புடிச்சுக் கொல பண்ணுனாரு. அப்போலேர்ந்து அந்த மலைக்கு ’ஜபலே ஃபாரான்’ [ஃபாரானின் மலை]னு பேரு வந்திருச்சு… அதுக்கப்புறம் அவனுங்களத் தொரத்திக்கிட்டே அம்ரு ராசா ஜெருசலேம் வரய்க்கும் போனாரு. கடசீல அவுங்க அவுருக்கு அடபணிஞ்சு தங்களோட விசுவாசத்த அறிவிச்சாங்க. எங்க சாம்ராஜ்யத்தோட மகுடத்தையும் திருப்பிக் குடுத்துட்டாங்க.

 

‘அவுங்க நாட்ல ’பர்ராஹ் பின்த் ஷம்வூன்’னு ஒருத்தி இருந்தா. பேரழகி. யூசுஃப் இப்னு யாகூப் [ஜேக்கபின் மகன் ஜோசஃப்] வம்சத்துல அவளுக்குச் சமமா இன்னொரு அழகி யாருமே கெடையாது. ஒசத்தியான ஆடையும் நகநட்டும் உடுத்தி அவள அம்ரு ராசாகிட்ட அனுப்பி வச்சானுங்க. அவ மேல மொதப் பார்வ வுளுந்ததுமே கிறங்கிப் போயிட்டாரு. கொஞ்சமும் யோசிக்காம ஒடனே அவள கல்யாணம் பண்ணிகிட்டாரு. ஆனா அது அம்ரு ராசாவ ஒழிக்கிறதுக்கு இஸ்ரேவலுக்காரனுங்க தீட்டுன சதித்திட்டந்தான். 



அம்ரு ராசாவோட தனியா இருக்குறப்ப பர்ராஹ் அவருகிட்ட, ‘நான் ஒங்களுக்குத் திருப்தியா இருக்கேனா?’ன்னு கேட்டா. அவரு ‘ஆமா’ன்னாரு. ‘அப்ப என்னெத் திருப்தி படுத்துங்க’ன்னு அவ சொன்னா. ‘நான் ஒங் கையில. என்ன வேணும் ஒனக்கு’ன்னு அவரு கேட்டாரு. ‘எங்க சனங்கள நீங்க விடுதல பண்ணி எங்க நாட்ல வாழ விட்டுடணும். அவுங்களுக்கு ஒரு தீங்கும் பண்ணக்கூடாது. அவுங்களுக்காக நான் ஒங்கள்ட்ட பரிஞ்சு பேசணும்னு அவுங்க என்னெக் கேட்டுக்கிட்டாங்க’ன்னு அவ சொன்னா. ‘ஒன் விருப்ப்படியே குடுத்துட்டேன்’னு ராசா சொன்னாரு. அவனுங்கள அப்படியே விட்டுட்டு மக்காவுக்குத் திரும்பி வந்தாரு. ஆனா சும்மா வரல. இஸ்ரவேலுக்காரனுங்களோட சந்ததீலேர்ந்து ஓங்கு தாங்க வளந்த நூறு ஆம்பளைங்கள அவனுங்க பொண்டாடி புள்ளைகளோட கூட்டியாந்தாரு. அப்ப அம்ரு ராசாவோட புதுப் பொண்டாட்டி பர்ராஹ் பின்த் ஷம்வூன் தன்னெ திரும்பவும் ஜெருசலேமுக்குக் கூட்டீட்டுப் போறதுக்கு வலிமையான நூறு ஒட்டகங்களையும் ஆளுங்களையும் தயார் பண்ணி வச்சுக்கிட்டா. அப்புறம் அம்ரு ராசாவோட மெத்தக்குள்ள விசம் பாய்ச்சுன கத்தி ஒன்னெ நட்டக் குத்தலாப் பொருத்தி வச்சுட்டா. ராத்திரி அவ்ரு படுக்குறப்ப கத்தி முதுகுல சொருகி விசமேறி செத்துப் போயிட்டாரு. அத்தோட, பிணைக் கைதிங்களாப் புடிச்சு வச்சிருந்த நூறு பேரோட அவ அங்கேர்ந்து ஆளு சட்டுன்னு பறந்துட்டா. ஃபாரான் மலயக் கடந்துதான் அவுங்க போயாவணும், வேற வழி கெடையாதுன்னு தெரிஞ்ச நானு ஜுர்ஹும் இம்லாக்கோட குதிர வீரங்களக் கூட்டிக்கிட்டு அங்கெ போனேன். அவுங்க அங்க வந்ததும் எல்லாத்தையும் கைது பண்ணி திரும்பவும் மக்காவுக்கு இழுத்துட்டு வந்தேன். அங்கே நான் என் அண்ணாரு அம்ரு ராசாவ அடக்கம் பண்ணேன்… அப்புறம், கைதிங்களுக்கு மரண தண்டன நெறவேத்த ஆணையிட்டேன். இனிமே நாந்தான் ராசான்னு எனக்கு முடி சூட்டுனாங்க. அப்புறம் நான் இஸ்ரவேலனுங்க, பைஜாந்தியனுங்க, சிரியாவோட அஜமி [அறபியல்லாதாரு]ங்க அம்புட்டுப் பேரு மேலயும் படையெடுத்தேன். ஜுர்ஹும்லேர்ந்து நூறாயிரம் வீரர்ங்க, இம்லாக்குலேர்ந்து இன்னும் நூறாயிரம் வீரர்ங்க எங்கூட வந்தாங்க. நான் அவனுங்கள எதுத்துப் போராடி அம்புட்டுப் பயலுங்களையும் தோக்கடிச்சேன்… அதுக்கப்புறம் பர்ராஹ்வக் கொலை பண்ணீறனும்னு எனக்கு ஒரே யோசனையா இருந்துச்சு. ஆனா, அரசவையோட சூழ்ச்சியில தானே ஏமாத்தப்பட்டு நிக்கிறதா அவ சொன்னா. இஸ்ரவேலனுங்களோட தலைமை அமைச்சர்னு ஒரு ஆளு, மரண தண்டனைக்கு மொத ஆளா இருக்குறவன், அவந்தான் அவளுக்குத் தெரியாம ராசாகிட்ட வந்து செய்றதயெல்லாம் செஞ்சு முடிச்சவனாம். ‘என் வவுத்துல அவரோட புள்ளைய சொமந்துக்கிட்டிருக்குற நான் எப்படி அந்தக் காரியத்த செய்வேன்?’னு அவ ஆத்திரமும் அழுகையுமா சொன்னா. செவிலிகள வுட்டு அவள சோதிச்சுப் பாக்கச் சொன்னேன். அவ சொல்றது உண்மைதான்னு சொன்னாங்க. அம்ருக்கு ரெண்டு மகளுங்கதான் இருந்தாங்க. ஆம்பளப் புள்ளையே இல்ல. அதுனால, அவ சூலியா இருக்கான்னு தெரிஞ்சதும் அவ மேல எரக்கப்பட்டு அரண்மனைக்குள்ள அனுப்பி, கண்காணிப்புல வச்சிருந்தேன். பத்தாமாசம் ஒரு ஆம்பளப் புள்ளைய பெத்துப் போட்டா. அவனுக்கு ’மிதாத்’னு அவனோட தாத்தா பேரயே வச்சேன். அவன் இளந்தாரியா வளந்தப்ப அவன மாதிரி ஒரு அழகான வாலிபன யாருமே பாத்ததில்லேன்னு சொன்னாங்க. அப்பவும் ஒருக்கா எனக்கு யோசன வந்திச்சு, இப்ப பர்ராஹ்வ கொன்னுடலாமேன்னு. ஆனா அவளோட மவன் என்னெப் பழிவாங்குவான்னு பயமா இருந்துச்சு. பேசாம விசயத்த அவன் முடிவுக்கே வுட்டுருவோம்னு முடிவு பண்ணேன். தன் அத்தாவோட விசயத்துல தன் அம்மாவ என்ன பண்றதுன்னு அவனே பாத்துக்கட்டும்…’

 

            நாங்கள் மக்காவ அடஞ்சதும், நானு தங் கூட ஜைத்தூன் [ஒலிவ] தோட்டங்களுக்கு வரணும்னு பூட்டன் சொன்னார்.

 

            ’மகனே! யாராச்சும் ஒனக்கு ஒரு சேவ செஞ்சா அவுங்களுக்கு நீ நன்றி சொல்லணும். நீ எனக்கு ரொம்பப் பெரிய சேவ செஞ்சிருக்க. ஒனக்கு நான் நன்றி சொல்லிக்கிறேன். ஒனக்கு ஒரு சின்ன அறிவுரையும் சொல்றேன், கேட்டுக்க. ஒன்னெ எது காப்பாத்தும்னு நான் ஒனக்குச் சொல்றேன், மகனே! ஒனக்குச் செல்வத்தக் கொண்டாந்து சேக்குறத விட அறிவக் கொண்டாந்து சேக்குறதுதான் நல்லதுன்னு நீ புரிஞ்சுக்கணும். முளரோட சந்ததீல முஹம்மத்னு பேருள்ள ஒரு ஆண் பிள்ளை பொறந்திருக்கா?’

 

            நான், ’இல்லே’ன்னேன்.

 


            ’அப்படீன்னா சீக்கிரமே பொறக்கும். அவரோட காலம் வரும். அவரோட இறை நம்பிக்கெ ஒசந்து நிக்கும். அந்தக் காலத்துல நீ உசிரோட இருந்தீன்னா அவரு சொல்றத நீ உண்மையா நம்பணும். அவரோட ரெண்டு புஜங்களுக்கும் நடுவுல இருக்குற மச்சத்த நீ முத்தம் போடணும். அவர் மேல அமைதி உண்டாகட்டும். ‘வணக்கத்துக்குரிய ஏக இறைவனோட சத்தியக் கொள்கைய பிரகடனம் பண்றவரே! மனிதர்களில் சிறந்தவராகப் பிறந்தவரே!’ன்னு நீ அவருகிட்ட சொல்லணும்….’

 

            அப்புறம், நாங்க ரெட்ட ஒலிவ மரங்கள்ட்ட வந்துட்டமான்னு அல்-ஹாரிஸிப்னு மிதாத் எங்கிட்ட கேட்டாரு. வந்துட்டோம்னேன். தான் கீழ எறங்கவும் அந்த மரங்கள்ட்ட போவவும் ஒதவி பண்ணச் சொன்னாரு. அதுங்களுக்கிடையில நல்லா செதுக்கப்பட்ட பெரிய பாறாங்கல்லு ஒன்னு இருந்துச்சு, கன சதுர வடிவமா. அவரு அத சுத்தி சுத்தி வந்தாரு. அதோட எல்லாப் பக்கங்களையும் தொட்டாரு. அப்புறம் சொன்னாரு:

 

            ’மகனே! இந்த எடத்த மரணத்தோட எடம்னு சொல்லுவாங்க.’

 

            அப்புறம் அவரு தன்னோட மொகமும் தாடியும் நனையுற அளவுக்கு அழுதாரு.

 

            மக்யா நா காலைல தன் கூட நானும் வரணும்னு சொல்லி நடத்திக் கூட்டீட்டுப் போனாரு. போன எடத்துல ஒரு பாறாங்கல்லு மேல இன்னொரு பாராங்கல்ல தூக்கி வச்சிருந்திச்சு. அதுங்களுக்கு இடய்ல குறுகலா ஒரு தொறப்பு இருந்துச்சு. எங் கைய புடிச்சுக்கிட்டு அவரு அந்தப் பாறாங்கல்ல நவுத்துனாரு. பூமிக்கு அடீல ஒரு பாதெ இருக்குறதப் பாத்தேன். இடக்கவும் வலக்கவும் ஆடிக்கிட்டுப் பாம்புங்க சீறிக்கிட்டிருந்துச்சு. நாங்க அதுக்குள்ற நடந்தோம். அதே மாதிரி ஒரு பாறாங்கல்லு மேல இன்னொரு பாறாங்கல்ல வச்சு பாதைய அடச்சிருந்த எடத்த அடஞ்சோம். அவரு எந் தோளப் புடிச்சுக்கிட்டு உள்ளெ நொழஞ்சு பாறய்க்கு அடீல எடது கைய வச்சு அந்தப் பாறைய அப்படியே பொறட்டிப் போட்டாரு. அடீல இன்னொரு பாத இருந்துச்சு. நான் பயந்து ஓடிப்போயிறாம அவரு என் தோள கெட்டியாப் புடிச்சுக்கிட்டாரு. நாங்க அதுக்குள்ள போனோம். வெளிச்சமான அற ஒன்னு இருந்துச்சு. ஆனா எங்கேர்ந்து அந்த வெளிச்சம் வருதுன்னு என்னால சொல்ல முடீல.

             ’நீ பாக்குறத பயப்படாத. நீ பாதுகாப்பா வெளீல போவ. ஒஞ் சந்ததீலேர்ந்து பல குடிங்க இந்த பூமி மேல நடப்பாங்க’ன்னு அவரு எங்கிட்ட சொன்னாரு.

அப்போ அங்கெ கரும்பூதம் ஒன்னு வந்துச்சு. அதோட கண்ணு ரத்தச் செவப்பா தீக்கங்கு மாதிரி இருந்துச்சு. பெரிய மல ஒன்னு அசையுறாப்ல அது அறய்ல சுத்தி சுத்தி வந்துச்சு. நான் அறய்க்குள்ற போயி அங்கே நாலு கட்டிலுங்க இருந்ததப் பாத்தேன். முனுல மூனு பொணங்க கிடந்துச்சு. நாலாவது காலியா இருந்துச்சு. [அந்த மூனு செத்த ஆளுங்க பூட்டனோட அத்தாவும், தாத்தாவும், கொள்ளு தாத்தாவும். அந்த நாலாவது படுக்கெ அவருக்கு.] அந்த அறயோட மத்தீல முத்தும் மாணிக்கமும் தங்கமும் நெப்பி வச்ச ஒரு சாக்கு இருந்துச்சு.

 

            ’ஒன் ஒட்டகம் சொமக்குற அளவுக்கு எடுத்துக்க. ஆனா அதுக்கு மேல எடுக்காத’ன்னு அல்-ஹாரிஸ் எங்கிட்ட சொன்னாரு. அவரு ஒரு ஹனஃபி. தன்னோட மூதாதைங்களான இபுறாஹீமு, இசுமாயிலு, இசுஹாக்கு [ஆண்டவென் அவுங்க மேல கருண பொழியட்டும்] போதிச்ச மதத்த நம்புனவுரு.

 

            [இயாத் சொன்னார்] நான் என் ஒட்டகம் சொமக்குற அளவுக்கு நல்ல தரமான முத்தும் மாணிக்கமும் தங்கமுமாப் பாத்துப் பொறுக்கி எடுத்துக்கிட்டேன். மிச்சத்த அங்கயே விட்டுட்டேன். அப்புறம் நான் வெளிய வந்துட்டேன்.


குறிப்புகள்:

1.       1. நஜ்ரான் என்பது யமன் நாட்டின் முக்கியமான தொல் நகரங்களில் ஒன்று. ‘நஜ்ரானின் நாகம்’ என்பது அந்தப் புரோகிதனின் கொண்டாடப்பட்ட ஞானத்தைக் குறிப்பதாகும். ஏனெனில் பாம்பு என்பது பண்டைய அறபியரிடம் ஞானத்திற்கான குறியீடாக இருந்தது.

2.       2. அல்-பைத்துல் அத்தீக் (பழைய வீடு) என்பது கஃ’பா என்னும் இறையில்லத்தைக் குறிக்கிறது. அது இப்போது முஸ்லிம்களின் வருடாந்திரப் புனித யாத்திரைக்கான மைய இடமாக உள்ளது. இறைவனை வழிபடுவதற்கான ஆலயமாக அது இப்றாஹீம் (ஆபிரகாம்) அவர்களால் கட்டப்பட்ட முதல் இறையில்லம் என்று கருதப்படுவதால் அன்னனம் அழைக்கப்படுகிறது.

 


Tuesday, August 6, 2024

வான்கா

 



            வீட்டின் மிக முக்கியமான புழங்கிடங்களில் ஒன்று மொட்டை மாடி என்றால் ஏற்பீர்களா? இங்கே பலருக்கும் அந்த உணர்வில்லை என்றே தோன்றுகிறது.

            தரையில் மாலை நடை செல்வதை மாற்றி மொட்டை மாடியில் உலவத் தொடங்கியபோது அது ஒரு புது உலகமாக இருந்தது. எங்கள் குடியிருப்புப் பகுதியே வேறொரு கோணத்தில் காட்சியானது. ஆங்கிலத்தில் Bird’s view என்பார்களே, அப்படி. அதை மிகச் சிறப்பாகத் தன் கதை ஒன்றில் பதிவு செய்தவர் யுவன் சந்திரசேகர் என்றே கருதுகிறேன். எனக்கு மிகவும் பிடித்த ‘விருந்தாளி’ என்னும் கதையில் அவர் எழுதுகிறார்:

            ”எங்கிருந்தோ ஒரு பெண்குரல் எழுந்து உயர்ந்தது. ‘கா…கா…கா…..’ காக்கை லேசாக மேலெழும்பிவிட்டு மீண்டும் அமர்ந்தது. நாலைந்து எட்டுக்கள் தத்தியது. என்னிடம் சொன்னது: ‘வேப்பமரத்து வீட்டம்மாள் கூப்பிடுகிறாள். அவள் பையன் சாப்பிடும் நேரம்.’

            ”காக்கையின் சொற்களின் வழி, என் தெரு கதவிலக்கங்களையும் வாசல் முகப்பின் அலங்கார அடையாளங்களையும் இழந்து, மரங்கள் அடர்ந்த கானகமாக உருக்கொள்வது போல் தென்பட்டது.”

            இது போல், என் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து எட்டுத் திசைகளிலும் முழு வட்டமாகப் பார்க்கையில் வானகமும் இளவெயிலும் மரச்செறிவும் தென்பட்டன.

            மொட்டை மாடியில் வீடு பேறு தரும் நிறைவு இருக்கிறது. மண்படு வாழ்வை விட்டு விடுதலை ஆகி வெகுவாக மேலே உயர்ந்து விண்ணமுதம் பருகும் ஓர் உயிராக மாறிவிட்டோம் என்று தோன்ற வைக்கிறது. அதுவும், எங்கள் வீட்டுப் பகுதி ஏர்போர்ட்டுக்கு அருகில் இருப்பதால் தரை தளமும் ஒன்றாம் தளமும் மட்டுமே கட்ட(ட) அனுமதியுண்டு. எனவே, பக்கத்தில் அடுக்குமாடிக் கட்டடங்கள் வளர்ந்து நின்று தம் நிழல் சாய்க்க வாய்ப்பில்லை. சுற்றும் முற்றும் பார்த்தபோது ஒரு வீட்டிலும் மொட்டை மாடியில் ஆட்களைக் காணவில்லை. பலருக்கும் இங்கே அது ஆடைகள் உலர்த்தப் போடும் இடம். இன்னும் சிலருக்கு அது வடகம் வற்றல் காய வைக்கும் இடம்.

            மொட்டை மாடியில் வீட்டாரை விட காக்காயும் குருவியும்தான் அதிகம் புழங்குகின்றன என்று கருதுகிறேன். “காக்கை குருவி எங்கள் ஜாதி” என்றான் பாரதி. இங்கே அவன் ‘எங்கள் ஜாதி’ என்று கவிஞர்களைத்தான் குறிப்பிடுகிறான் என்று சொல்லலாம். 



அக்கம் பக்கத்தில் இவ்வளவு மரங்களா என்று வியப்பாக இருந்தது. பறவைகளுக்கான உலகம் ஒன்று அதில் இயங்கிக் கொண்டிருந்தது. பக்கத்துக் காலி மனையில் ஓங்கி வளர்ந்து என் வீட்டை விடவும் உயரமாக நிற்கும் வேப்ப மரத்தில் அவ்வப்போது ஏதேனும் ஒரு பறவையைக் காணக் கிடைக்கும். குயில், செம்போத்து, மைனா, வல்லூறு. இன்று ஒரு ஜோடி கிளிகள். இது வேம்பு பழுக்கும் வேனிற் பருவம். அது தன் சிவப்பு அலகால் பொன் மஞ்சளாகப் பழுத்த வேப்பங்கனி ஒன்றைக் கவ்வி எடுத்து லாவகமாகப் புசித்த காட்சியை ரசித்தேன். குறுந்தொகையின் 67-ஆம் பாடலில் அள்ளூர் நன்முல்லையார் இந்தக் காட்சியைப் பதிவு செய்திருக்கிறார்:

            ”______________ _______________ _______________ கிள்ளை

            வளை வாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்

            புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப்

            பொலங்கல ஒருகா சேய்க்கும”

            காசு மாலை என்று ஒன்று இருக்கிறதே, அது இந்தத் தமிழ் மண்ணில் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் பழமையான டிசைன்! பெண்களுக்கு அதன் மீது தனி ஆர்வம் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. பொற்கொல்லன் ஒருவன், நீண்டு வளர்ந்து வளைந்த நகங்கள் உள்ள விரல்களால் தங்க இழை ஒன்றில் பொற் காசுகளைக் கோர்க்கிறான்.  அது போல் இருக்கிறதாம் சிவந்து வளைந்த அலகால் வேப்பம் பழத்தைக் கிளி உண்ணும் காட்சி.

            கீழே மரங்களிடை இட்ட கட்டடப் பரப்பு என்றால், மேலே? விழிகள் மலர விரிவானை நோக்கியிருந்தேன். வானத்தை நோக்கியிருந்தால் மனமும் விரியும் என்கிறது ஸூஃபி உளவியல். அரசர்கள் தினமும் சற்று நேரம் வானம் பார்க்க வேண்டும். அஃது அவர்தம் உள்ளத்தை விசாலமாக்கும் என்று இமாம் கஜ்ஜாலி எழுதியுள்ளார்கள். யான் அதை அனுபவித்தேன்.

            ’வானம் எனக்கொரு போதி மரம்’ என்னும் பாடல் வரி நினைவுக்கு வந்தது. ஒரு மரம் மட்டுமா அது? அது ஒரு நீலக் காடு அல்லவா? வான்கா!

            அந்த நீல வானக் காடு மண்ணின் காடு போல் உறைந்து உருச் சமைந்தது அன்று. அதில் களிற்று யானைகள் பையப் பைய மான்களாகவும் மாறும், மரங்களாகவும் ரூபிக்கும். மேகங்கள் வெள்ளியாய் மின்னி வெண் வண்ணம் காட்டி, சாம்பல் நிறமுற்று அப்பால் பொன் வண்ணமாகிப் பிறங்கும்.

            எமது மூதூரின் அடையாளமாகச் சொல்லப்படுவது மலைக்கோட்டை. மேலும், பொன்மலை, காஜா மலை ஆகிய இரண்டு குன்றுகளும் உண்டு. வானத்திலோ நூறு நூறு வெள்ளிப் பனிமலைகள், இமய வெற்புகள். வரி வரியாய், கட்புலனாகா நதிகளின் மணல் படுகைகள்.

அந்த மேக மலைகளின் மீது யாமும் கோட்டைகள் கட்டுகிறோம். மனக் கோட்டைகளா அவை? அல்ல, அல்ல. சிறுமிகளின் மனநிலை அடைந்து யாம் இழைக்கும் சிற்றில்கள். கூர்ந்து நோக்கினால் தெரியும், மனிதர்கள் தம் வாழ்வில் ‘தன்னைப் பிழிந்த தவம்’ போல் சிரமப்பட்டுத் தீட்டுகின்ற திட்டங்கள் யாவும் இறைவன் எழுதும் விதியின் காலுதைப்பில் பொசுக்கென்று உடைந்து போகும் மணல் வீடுகளே. மனிதர்கள் யாவரும் “முற்றில்லாத பிள்ளைகளோம் முலைகள் போந்திலோம்” என்னும் நிலையில் இருப்பதால், அவனும்கூட ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’யாக நடந்து கொள்கிறான். புட்கள் சிலம்பும் அரவம் கேட்டு விழித்தெழுவோருக்கே அவன் சற்குருவாக வாய்க்கிறான். இவை எல்லாம் குறியீடுகளின் உள்ளர்த்தங்கள்.

இதெல்லாம் இருக்கட்டும். மொட்டை மாடியிலேயே ஒருவர் வசித்துவிட முடியாது. எதார்த்த வாழ்வு கீழே அழைக்கும்போது இறங்கித்தான் ஆக வேண்டும். பாதத்தில் மண் தோய நடந்துதான் ஆக வேண்டும். என்ன, பாதத்தில் ஒட்டி உதிரும் மண் கண்ணில் விழாமல் பார்த்துக் கொண்டால் போதும்.