Friday, May 31, 2019

மகத்தான இரவு





கவ்ஸுல் அஃழம் பீரானே பீர் சய்யிதினா 
முஹய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரஹ்)
























(அல்-குன்யா லி தாலிபி தரீக்குல் ஹக்கு என்னும் நூலிலிருந்து… ‘பஹாரே மதீனா.காம்’-இன் ஆங்கில மொழிபெயர்ப்பு வழித் தமிழாக்கம்: ரமீஸ் பிலாலி)

1
மகத்தான இரவின் தனித்தன்மைகள்

மேலான அல்லாஹ்வுடைய சொற்களின் தாத்பரியத்தின் மீது கவனம் செலுத்துவோம்:

      ”நிச்சயமாக நாமே அதனை மகத்தான இரவில் இறக்கி வைத்தோம்” (இன்னா அன்ஸல்னாஹு ஃபீ லைலத்தில் கத்ரி).
      
 ”மகத்தான இரவு யாதென உம்மை அறியச் செய்தது எது?” (வ மா அத்ராக்க மா லைலத்துல் கத்ரி)
    
  ”மகத்தான இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது” (லைலத்துல் கத்ரி ஃகைரும் மின் அல்ஃபி ஷஹ்ரின்)
    
  ”அதில் வானவர்களும் பரிசுத்த உயிரும் தமது ரட்சகனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர்” (தனஸ்ஸலுல் மலாஇக்கத்து வர்ரூஹு ஃபீஹா பி இத்னி றப்பிஹிம் மின் குல்லி அம்ரின்)
     
 ”வைகறை விடியல் வரை அது பேரமைதியாகும்” (சலாமுன் ஹிய ஹத்தா மத்லஇல் ஃபஜ்ரி) (குர்ஆன்: 97:1-5)
    
  நாம் முதலில் கவனிக்க வேண்டும், “அன்ஸல்னாஹு” (நாம் அதனை இறக்கினோம்) என்பதில் உள்ள ’ஹு’ என்னும் விகுதி குர்ஆனைக் குறிக்கும். மேலான அல்லாஹ் அதனை, பாதுகாக்கப்பட்ட பலகையில் (லவ்ஹுல் மஹ்ஃபூழ்) இருந்து கீழுலகின் வானத்திற்கு – அதனை வானவர்களில் எழுத்தர்களான (அஸ்-சஃபரா) வானவர்களிடம் இறக்கி அனுப்பினான். இவ்வாறு அது, பலகையிலிருந்து வானத்திற்கு, அடுத்த ஓராண்டு காலம் ஜிப்றீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கின்ற பகுதியளவு இறக்கப்பட்டது. அதே செயல்முறை தொடரும் ஆண்டும் நிகழ்த்த்ப்படும், அப்படியாக முழுக் குர்ஆனும் ரமலான் மாதத்தில் லைலத்துல் கத்ரு இரவில் இவ்வுலகின் வானத்திற்கு இறக்கப்பட்டது.
     
 ”நிச்சயமாக நாமே அதனை மகத்தான இரவில் இறக்கி வைத்தோம்” (இன்னா அன்ஸல்னாஹு ஃபீ லைலத்தில் கத்ரி)
     
 என்னும் திருவசனத்திற்கு சய்யிதினா இப்னு அப்பாஸ் (ரலி-மா) அவர்கள் ஒரு விரிவுரையைத் தருகின்றார்கள். அக்கருத்தினைப் பிற மார்க்க மேதைகளும் நவின்றுள்ளனர்: “இதன் பொருள்: நாம் ஜிப்றீலை இந்த அத்தியாயத்துடனும் முழுக் குர்ஆனுடனும், லைலத்துல் கத்ரில், பதிவு செய்யும் வானவர்களிடம் அனுப்பினோம். அதன் பிறகு அது தவணை முறையில் (நஜ்மன் நஜ்மா) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் இருபத்துமூன்று ஆண்டுக் காலம் எல்லா மாதங்களிலும் இரவுகளிலும் பகல்களிலும் தருணங்களிலும் இறங்கி வந்தது.”
     
 ”மகத்தான இரவில்…” (ஃபீ லைலத்தில் கத்ரி…) என்னும் திருவசனப் பகுதியின் பொருளாவது: ’மிக உன்னதமான மிகக் கண்ணியமான இரவில் (லைலத்துல் அழீமா)’ என்பதாகும். அல்லது, சிலர் சொல்லியிருப்பது போல், ”இறைக் கட்டளையின் இரவில்” (லைலத்துல் ஹுக்மு) என்பதாகும். அவ்விரவின் அளப்பரிய ஆற்றலை (கத்ரு), சக்தியைப் பறைசாற்றவே அஃது லைலத்துல் கத்ரு (மகத்தான இரவு) எனப்பட்டது. ஏனெனில், மேலான அல்லாஹ் அதில்தான் இன்னும் ஓராண்டுக்கு, அதே இரவு அடுத்த ஆண்டில் மீண்டும் வரும் நாள் வரை, பொருட்கள் விஷயங்கள் எப்படி இருக்கப் போகின்றன என்பதை நிர்ணயிக்கிறான் (யுகத்திரு).
     
 அதன் பின் அவன் அருளியிருக்கிறான்: “”மகத்தான இரவு யாதென உம்மை அறியச் செய்தது எது?” (வ மா அத்ராக்க மா லைலத்துல் கத்ரி)
     
 அதாவது, “முஹம்மதே! அதன் பிரம்மாண்டமான முக்கியத்துவத்தை அல்லாஹ் உம்மை அறியும்படிச் செய்திருக்காவிடில் (நீங்கள் எப்படி அதனை அறிந்திருக்க முடியும்?)” இது ஏனென்றால், குர்ஆனில் கேள்வியானது இறந்தகாலத்தில் –”வ மா அத்ராக்க” (எது உம்மை அறியச் செய்தது?)- கேட்கப்படும் ஒவ்வொரு முறையும், அல்லாஹ் ஏற்கனவே போதிய அறிவை நபிக்கு வழங்கிவிட்டான் என்பதைக் காட்டுகிறது. மாறாக அக்கேள்வி எதிர்காலத்தைக் குறித்ததாக ”வ மா யுத்ரீக்க” (எது உம்மை அறியச் செய்யும்?) என்று எழுப்பப் படுமெனில் அவ்விசயத்தை இதுவரை அல்லாஹ் தன் தூதருக்கு அறிவிக்கவில்லை, இனிமேல்தான் அது பற்றி அறிவிக்கப் போகிறான் என்று பொருள். [குர்ஆன் வசனங்கள் 42:17, 80:3 ஆகியவற்றைப் பார்க்கவும் – மொ.பெ-ர்]
    
   லைலத்துல் கத்ரு (மகத்தான இரவு) என்று இறைவன் அறிவித்திருக்கும் இரவினைப் பற்றி இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்: அஃது வலுப்பமான கண்ணியமும் ஞானமும் உள்ள இரவு (லைலத்துல் அழ்மத்து வல் ஹிக்மத்து). மேதைகள் சிலரின் கருத்துப்படி பின் வரும் திருவசனங்கள் இவ்விரவையே குறிக்கின்றன:

     ”நிச்சியமாக நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக நாம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றோம். அவ்விரவில்தான் ஒவ்வொரு காரியமும் விவேகத்துடன் நிர்ணயிக்கப்படுகின்றது. (இன்னா அன்ஸல்னாஹு ஃபீ லைலத்தின் முபாரக்கத்தின் இன்னா குன்னா முன்திரீன்; ஃபீஹா யுஃப்ரக்கு குல்லு அம்ரின் ஹகீமின் – குர்ஆன்: 44:3-4)”

     அடுத்து, அவன் சொல்லியிருக்கிறான்: “”மகத்தான இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது” (லைலத்துல் கத்ரி ஃகைரும் மின் அல்ஃபி ஷஹ்ரின்)”

     அதாவது, அவ்விரவில் செய்யப்படுகின்ற நற்செயல்கள் அவ்விரவு இல்லாத ஆயிரம் மாதங்களில் செய்யப்படுகின்ற நற்செயல்களை விடவும் சிறந்தவை.

     ”ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது (ஃகைரும் மின் அல்ஃபி ஷஹ்ரின்)” என்று அல்லாஹ் சொல்லியிருப்பதை விட வேறு எதற்கும் நபித் தோழர்கள் (சஹாபாக்கள்) அத்தனை மகிழ்ச்சி அடைந்ததில்லை என்று சொல்லப்பட்டுள்ளது. அது பற்றிய வரலாறு பின்வருமாறு:

     ஒரு நாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தமது சஹாபாக்களிடம் பனீ இஸ்ராயீலின் நான்கு நல்லடியார்கள் பற்றியும், அவர்கள் எப்படி எண்பது ஆண்டுகள் அல்லாஹ்வை வழிபட்டார்கள் என்பது பற்றியும், அந்தக் காலம் முழுவதும் கண்ணிமைக்கும் நேரம் கூட அவர்கள் அவனுக்கு மாறு செய்யாமல் இருந்தது பற்றியும் விளக்கிக் கொண்டிருந்தார்கள். அய்யூப், ஜகரிய்யா, ஹிஸ்கீல் மற்றும் யூஷப்னு நூன் (அலைஹிமுஸ் சலாம்) ஆகியோரே அந்நால்வர். (குறிப்பு: ஹிஸ்கீல் மற்றும் யூஷப்னு நூன் ஆகியோரின் பெயர்கள் குர்ஆனில் குறிப்பிடப்படவில்லை. யூஷப்னு நூன் என்பவர் குர்ஆன் 18:60-ஆம் திருவசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூசா நபியின் பணியாளர் ஆவார் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.)

     சஹாபாக்கள் இதனைக் கேட்டு மிகவும் வியப்படைந்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து இறைத்தூதரிடம் சொன்னார்கள், “முஹம்மதே! இந்த நல்லடியார்கள் எண்பது ஆண்டு காலத்தில் கண்ணிமைக்கும் நேரம் கூட அல்லாஹ்வுக்கு மாறு செய்யாமல் முழுமையாக வணங்கி வழிபட்டார்கள் என்பது உமக்கும் உமது சகாக்களுக்கும் வியப்பளிபப்தாகத் தெரிகிறது. எனவே இப்போது அல்லாஹ் உமக்கு அதை விடவும் சிறந்த ஒன்றை அருளியிருக்கிறான்!” பிறகு அவர்கள் சூரத்துல் கத்ரு (குர்ஆன் 97:1-7) அத்தியாயத்தை ஓதிக் காட்டினார்கள்.

     பிறகு இறைத்தூதரிடம் ஜிப்ரீல் (அலை) சொன்னார்கள், “நீங்களும் உமது சகாக்களும் வியந்ததை விடவும் இது இன்னும் அற்புதமானது.” இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இதனால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

     யஹ்யா பின் நஜீஹ் தெரிவிக்கிறார்: ”முன்னொரு காலத்தில், பனீ இஸ்ராயீல் கூட்டத்தில் ஒரு மனிதர் இருந்தார். அவர் அல்லாஹ்வின் பாதையில் (ஃபீ சபீலில்லாஹ்) தனது ஆயுதத்தை ஆயிரம் மாதங்கள் செயற்படுத்தினார். அக்காலக் கட்டத்தில் ஒரு முறை கூட அவர் தனது ஆயுதத்தைக் கீழே வைக்கவே இல்லை. இறைத்தூதர் (ஸல்) இச்சரித்திரத்தைத் தனது சகாக்களுக்குச் சொன்னபோது அவர்கள் பெரிதும் வியப்படைந்தார்கள். அப்போதுதான் அல்லாஹ்,

     ”மகத்தான இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது” (லைலத்துல் கத்ரி ஃகைரும் மின் அல்ஃபி ஷஹ்ரின்)

என்னும் திருவசனத்தை அருளினான். அதாவது, “ஒரு முறை கூட கீழே வைக்காமல் அம்மனிதன் அல்லாஹ்வின் பாதையில் (ஃபீ சபீலில்லாஹ்) ஆயுதம் ஏந்திய அந்த ஆயிரம் மாதங்களை விடவும் இவ்விரவு சிறந்தது” என்னும் அர்த்தத்தில்.

      பனீ இஸ்ராயீல் மக்களிடம் அந்நபர் எப்பெயரால் அறியப்பட்டார் என்பது பற்றிச் சொல்பவர்களில் சிலர் அவரின் பெயர் நல்லடியார் ஷம்வூன் (ஷம்ஊனல் ஆபித் – Simon the worshipful servant) என்றும் வேறு சிலர் அவரின் பெயர் ஷம்ஸூன் (Samson) என்றும் சொல்கிறார்கள்.

      இனி, கத்ரு அத்தியாயத்தின் நான்கு மற்றும் ஐந்தாம் திருவசனங்களின் தாத்பரியங்கள் பற்றிக் கவனிப்போம்:

      ”அதில் வானவர்களும் பரிசுத்த உயிரும் தமது ரட்சகனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர்” (தனஸ்ஸலுல் மலாஇக்கத்து வர்ரூஹு ஃபீஹா பி இத்னி றப்பிஹிம் மின் குல்லி அம்ரின்)

      ”வைகறை விடியல் வரை அது பேரமைதியாகும்” (சலாமுன் ஹிய ஹத்தா மத்லஇல் ஃபஜ்ரி)

      1) தனஸ்ஸலுல் மலாஇக்கத்து – வானவர்கள் இறங்குகின்றார்கள் என்பதன் பொருளாவது, சூரியன் அஸ்த்தமித்த நேரத்திலிருந்து அது மீண்டும் உதயமாகும் நேரம் வரை வானவர்கள் தொடர்ச்சியாக பூமிக்கு இறங்குகின்றனர்.

      2) ”அர்-ரூஹ்” (உயிர்) என்பது ஜிப்ரீல் (அலை) அவர்களைக் குறிக்கும்.

      அத்-தஹ்ஹாக் அவர்களின் அறிவிப்பின்படி, இப்னு அப்பாஸ் (றலி) அவர்கள் சொல்கிறார்கள்: “அர்ரூஹ் என்பவர் மனித வடிவத்தில் மிக ஆஜானுபாகுவான உடற் கட்டமைப்புடன் இருப்பார். ’[நபியே!] ரூஹைப் பற்றி [யூதர்களாகிய] அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள்’ (யஸ்அலூனக்க அனிர் ரூஹ் - 17:85) என்னும் திருவசனத்தில் அல்லாஹ் இவரைப் பற்றியே பிரஸ்தாபிக்கிறான்.

      ’உயிர்த்தெழுப்பப்படும் நாளில்’ (யவ்முல் கியாமா) வானவர்களுடன் வரிசையில் நிற்கின்ற ஒரு வானவர் இவர். ஆனால் இவர் தனக்கென்று ஒரு தனிப் படித்தரத்துடன் நிற்பார்.

      அல்-முகாத்தில் அவர்களின் கருத்துப்படி, “அல்லாஹ்வின் பார்வையில் அவரே வானவர்களில் மிகவும் சங்கை மிக்கவர் ஆவார்.”

      வேறோரு அறிஞர் சொல்லியிருக்கிறார்: “ரூஹ் என்னும் அந்த வானவர் மனித முகமும் பிற வானவர்களைப் போன்ற உடலும் கொண்டவர் ஆவார். அர்ஷுக்குக் கீழே உள்ள படைப்புக்கள் அனைத்திலும் மிக பிரம்மாண்டமான படைப்பு அவரே. பிற வானவர்கள் எல்லாம் வரிசையில் நிற்கும்போது அவர் ஒருவர் மட்டுமே ஒரு வரிசையாகப் பிரத்யேகமாக நிற்பார்.” இக்கருத்தின் இறுதிப் பகுதி பின்வரும் திருவசனத்தைச் சுட்டிக் காட்டுகிறது:

      ”ரூஹும் வானவர்களும் அணிவகுத்து நிற்கும் அந்நாளில்...” (யவ்ம யகூமுர் ரூஹு வல் மலாஇக்கத்து சஃப்ஃபா – 78:38).

      3) அதில் (ஃபீ-ஹா) என்பதன் பொருள் மகத்தான இரவில் (ஃபீ லைலத்துல் கத்ரி) என்பதுதான்.

      4) ”தம் இரட்சகனின் அனுமதியுடன்” (பி இத்னி றப்பிஹிம்) என்பதன் பொருள் தம் இரட்சகனின் கட்டளையுடன் (பி அம்ரி றப்பிஹிம்) என்பதாகும்.

      5) ”ஒவ்வொரு காரியத்தின் மீதும்…” (மின் குல்லி அம்ரு) என்பது ’ஒவ்வொர் நற்காரியத்தின் மீதும்” என்று சொல்லும் ஒரு முறையாகும்.

      6) ”பேரமைதி அது” (சலாமுன் ஹிய) என்பதன் பொருள் ‘அது பேரமையானது’ (ஹிய சலாமுன்) என்பதேதான். இஃது, அவ்விரவு மிகவும் பாதுகாப்பானதும் ரம்மியமானதும் (சலீமா) ஆகும் என்று உணர்த்துகின்றது. அவ்விரவில் உபாதையோ பிணியோ கிளம்பாது. மேலும், எவ்விதமான அமளி துமளிகளாலும் (கஹானா) அவ்விரவை இடையூறு செய்ய இயலாது.

      ’சலாமுன்’ என்பது அமைதியின் நன்மாராயம் சொல்லுதல் என்றும், வானவர்கள் அவ்விரவில் பூமியில் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கு முகமன் சொல்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது (சலாமுல் மலாஇக்கத்தி அலல் முஃமினீன்). அவர்கள் நல்லடியார்களை நோக்கிச் சொல்கிறார்கள்: “சலாமுன் சலாமுன் ஹத்தா மத்லஇல் ஃபஜ்ரி.”

      7) “மத்லஇல் ஃபஜ்ரி” என்னும் சொற்றொடரில் நாம் அறபி மொழி அனுமதிக்கும் இன்னொரு வகையான வாசிப்பையும் கவனிக்க வேண்டும். அதாவது “மத்லஃ” என்னும் சொல்லில் “பி கஸ்ரில் லாம்” செய்தால், அதாவது ’லாம்’ என்னும் எழுத்தில் அகர ஒலிக்குறிப்பாக்கும் உள்ள ஃபத்ஹாவை (ஜபரை) இகர ஒலிக்குறிப்பாக்கும் கஸ்றாவாக (ஜேராக) உச்சரித்தால் ”மத்லிஃ” என்றாகும். விடியலின் மத்லிஃ என்பது உதிப்பை (அல்-துலூஃ) குறிக்கும். ஆனால், மத்லிஃ என்பது அவ்வுதிப்பு நிகழும் இடத்தை அல்லது புள்ளியை (யத்லுஃ) குறிக்கும்.

      (குறிப்பு: அ) “ஹிய ஹத்தா மத்லஇல் ஃபஜ்ரி” என்று ஓதுவதை “ஹிய ஹத்தா மத்லிஇல் ஃபஜ்ரி” என்று ஓதும் மரபும் உண்டு. அது ஓர் அனுமதிக்கப்பட்ட பகரமாகும். ஷைகு ஜலாலுத்தீனுல் மஹல்லி (இறப்பு: ஹிஜ்ரி 864) அவர்களால் முற்பாதியும், ஷைகு ஜலாலுத்தீனுஸ் சுயூத்தி (இறப்பு: ஹிஜ்ரி 911) அவர்களால் பிற்பாதியும் எழுதப்பட்ட தஃப்ஸீர் ஜலாலைன் என்னும் திருமறை விரிவுரை காண்க.

      இவ்விரு விதமான ஓதுதல்களிலும் நாடப்படும் நோக்கம் ஒன்றுதான். அதாவது, ‘இலா வக்தில் துலூஇஹி’ – “அது உதயமாகும் நேரம் வரை” என்பதுதான் என்று தஃப்ஸீர் ஜலாலைனில் குறிப்பிடப்படுகிறது.)

(தொடரும்...)

Thursday, May 9, 2019

அல்லாஹ் யார்?



     






   அமெரிக்காவில் இருக்கும் எனது தம்பி தனது மகனுக்காக இஸ்லாமிய சிறுவர் நூற்கள் (ஆங்கிலத்தில்) ஏதேனும் வாங்கி அனுப்பும்படிக் கேட்டிருந்தார். ”Goodword” பதிப்பக நூற்கள்தான் சட்டென்று நினைவுக்கு வந்தன. மூன்று நூற்கள் வாங்கி அனுப்பி வைத்தேன். அவற்றுள் மிகச் சிறிய நூல் “Who is Allah?” என்பது. பாட்டி ஒருவர் தனது பேரன் மற்றும் பேத்தி இருவருக்கும் இறைவனை அறிமுகப் படுத்துவதுதான் நூலின் உள்ளடக்கம். மிக எளிதான ஆங்கிலத்தில் சல்மா உம்மு ஜைனப் என்பார் எழுதியிருக்கிறார். குர்மீத் என்பவர் அழகிய சித்திரங்கள் தீட்டியுள்ளார். மூன்று முதல் ஆறு வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான நூல் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் இதிலுள்ள சில செய்திகள் கிரகித்துக் கொள்வதற்கு ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டுவன. மெய்ஞ்ஞானத்திற்கு அடிப்படியாக அமையும் சில புரிதல்களை வெளிப்படுத்துவன. நூலின் இறுதியில் “அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்” தொன்னூற்று ஒன்பதின் ஆங்கில பொருள் பட்டியலிடப் பட்டுள்ளது. அவை நீங்கலாக நூலின் சாராம்சமான பகுதியை இங்கே தமிழில் தருகிறேன்:


அல்லாஹ்வின் பெயரால் தொடங்குகிறோம்
அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.




















உன்னைச் சுற்றிலும் பார்…
என்ன காண்கிறாய்?

நிறைய பொருட்கள் – சிறிதும் பெரிதும்
தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிறைய பொருட்கள் பிரபஞ்சத்தில் உள்ளன.
கற்று அறிய வேண்டிய நிறைய பொருட்கள் உலகில் உள்ளன.

இவை எப்படி வேறுபட்டு உள்ளன என்பதை நீ பார்.
ஆனால் அவை எல்லாம் ஒன்றுதான்.
எப்படி என்று உனக்குத் தெரியுமா?

அவை எல்லாம் ஜடத்தால் உண்டானவை.
அவற்றுக்கு அளவும் இடவெளியும் எடையும் உள்ளன.
அவை எல்லாம் அளக்க முடிந்தவை.
அவை எல்லாவற்றுக்கும் ஆரம்பமும் முடிவும் உள்ளன.

அவை ஒவ்வொன்றும் இருப்பதற்கு மற்ற பொருள்கள் தேவைப் படுகின்றன.
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உண்ண உணவும், குடிக்க நீரும், மூச்சுவிடக் காற்றும் தேவை.
செடிகளுக்கு மண்ணும் நீரும் சூரியனும் தேவை.

எதுவும் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ள முடியாது.
எதுவும் தன் தானே இருக்க முடியாது.
எனில், எல்லாம் எப்படி ஆரம்பம் ஆயின?
இல்லாமையில் இருந்து ஏதாவது தானே வெளிவர முடியுமா?
அவை எல்லாம் எங்கிருந்து வந்தன?

கூறுங்கள்: அல்லாஹ்.
அவன் மகத்தானவன், உயர்வானவன்.

அனைத்தையும் ஆரம்பிக்க அல்லாஹ்வுக்கு மட்டுமே ஆற்றல் உண்டு.
அனைத்தையும் முடிக்க அல்லாஹ்வுக்கு மட்டுமே ஆற்றல் உண்டு.
அனைத்தையும் கட்டுப்படுத்த அல்லாஹ்வுக்கு மட்டுமே ஆற்றல் உண்டு.

அல்லாஹ்வை மட்டுமே அளக்க முடியாது.
அல்லாஹ்வுக்கு மட்டுமே ஆரம்பமும் முடிவும் இல்லை.
அல்லாஹ்வுக்கு மட்டுமே வேறு எதன் தேவையும் இல்லை.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக்கும் ஆரம்பமும் முடிவும் எல்லைகளும் தேவைகளும் உள்ளன.
எனவே, ஆரம்பமும் முடிவும் எல்லைகளும் தேவைகளும் இல்லாத, பிரபஞ்சத்திற்கு அப்பாலான ஒரு மூலத்தில் இருந்தே பிரபஞ்சம் வந்துள்ளது என்று நாம் அறிகிறோம்.

அந்த மூலத்தை நாம் அறபியில் ”அல்லாஹ்” என்றும் ஆங்கிலத்தில் “காட்”(“GOD”) என்றும் அழைக்கிறோம்.

அல்லாஹ் மகத்தானவன் மேலானவன். அவனுக்கு நாம் உருவப் படங்களை வரைய முடியாது.

அல்லாஹ் மகத்தானவன் மேலானவன். அவனுக்கு நாம் சிலைகள் வடிக்க முடியாது.

நாம் பார்க்கும் எதை விடவும் அல்லாஹ் மகத்தானவன்.
நாம் அறிய முடிந்த எதனை விடவும் அல்லாஹ் மகத்தானவன்.
நாம் கற்பனை செய்ய முடிந்த எதனை விடவும் அல்லாஹ் மகத்தானவன்.
எனவே நாம் சொல்கிறோம்: அல்லாஹு அக்பர்.
அல்லாஹ் மகத்தானவன்!

நாம் நமது உலகத்தைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ளலாம்.
அதை ஆராயவும் கற்றுக் கொள்ளவும் நமது புலன்களைப் பயன்படுத்தலாம்.
ஆனால், நமது புலன்களும் நமது உலகமும் மகத்தானவனும் மேலானவனுமான அல்லாஹ்வைப் பற்றி நமக்குச் சொல்ல முடிந்ததெல்லாம் அல்லாஹ் இருக்கிறான், அல்லாஹ் மகத்தானவன் என்பது மட்டுமே.

அதனால்தான் மகத்தான மேலான அல்லாஹ்வைப் பற்றி நமக்குச் சொல்ல அவன் நம்மிடம் தூதர்களை அனுப்பினான் (அவர்கள் மீது அமைதி இருப்பதாக). 




















மகத்தான மேலான அல்லாஹ் அளித்த இறுதியான செய்தி நமக்குச் சொல்கிறது: அல்லாஹ் ஒரு பொருளைப் படைக்க நாடினால் அவனது கட்டளை “ஆகு” என்பதே. அது ஆகிவிடுகிறது! குர்ஆன் அப்படித்தான் சொல்கிறது.




















இறுதித் தூதர் (அருளும் அமைதியும் அவர்மீது இருப்பதாக) நமக்குச் சொல்கிறார்கள்: அல்லாஹ்வுக்குத் தொன்னூற்று ஒன்பது பெயர்கள் உள்ளன.
அவன் அல்லாஹ்.
வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வை அன்றி வேறு எதுவும் / எவரும் இல்லை.


சில கருத்துக்கள்:

இந்நூலின் உள்ள பல சொற்களுக்கு இணையான தெளிவான சுருக்கமான தமிழ் அல்லது வடமொழிப் பதங்கள் கொடுத்து மொழிபெயர்க்க முடியும். ஆனால் அப்படி உருவாகும் பிரதியைத் தமிழக முஸ்லிம்கள் உடன்பாடாக அணுகுவாரகளா என்று சொல்ல முடியாது. தமிழ் அல்லது வடமொழிப் பதங்கள் இந்து சமயம் சார்ந்தன என்பதான பொதுப்புத்தி இங்கே அமைந்திருப்பதே அதற்குக் காரணம். (சவ்ம் என்பதை நோன்பு என்றும் மஸ்ஜித் என்பதைப் பள்ளி என்றும் ஸலாத் என்பதைத் தொழுகை என்றும் சமணர்கள் புழங்கிய தமிழ்ச் சொற்களைக் கொண்டு தமிழக முஸ்லிம்கள் எந்தச் சிக்கலும் இல்லாது இலகுவாகப் புழங்கி வருகின்றனர். அதே போல் இன்னும் பல சமயச் சொல்லாடல்கள் புழக்கத்திற்கு வருவது நலம்)

//அவை ஒவ்வொன்றும் இருப்பதற்கு மற்ற பொருள்கள் தேவைப் படுகின்றன.// இது எதார்த்தம், நிதர்சனம், வெளிப்படை. இதனை யாரும் மறுக்க முடியாது. நாம் இறைவனிடமே தேவையாக இருக்கிறோம் என்பது மெய்ம்மை (ஹகீக்கத்). நாம் பொருட்களின் தேவையில் இருக்கிறோம் என்பதும் இறைவனின் தேவையில் இருக்கிறோம் என்பதும் ஒன்றுக்கு ஒன்று முரண்படாது ஒருங்கிணையும் பார்வையே ஏகத்துவ ஞானம்.

//அல்லாஹ்வுக்கு மட்டுமே ஆரம்பமும் முடிவும் இல்லை.// - அதாவது அவனுக்கு ஆதியும் இல்லை அந்தமும் இல்லை. (அனைத்துக்கும் அவனே ஆதி ஆனவன் அவனே அந்தம் ஆனவன். ஆனால் அவனுக்கு ஓர் ஆதி இல்லை அவனுக்கு ஓர் அந்தம் இல்லை). அதாவது அவன் அனாதி அவன் அனந்தன்.

//அந்த மூலத்தை நாம் அறபியில் ”அல்லாஹ்” என்றும் ஆங்கிலத்தில் “காட்”(“GOD”) என்றும் அழைக்கிறோம்.// - அந்த மூலமே முதலானது. அதாவது ஆதி மூலம். அல்லாஹ்வே ஆதிமூலம்! ஆங்கிலத்தில் ”காட்” என்று அழைத்தாலும் அவன் அவனே. வேறொன்றை அழைத்ததாக ஆகாது. அவனையே அழைத்ததாகும். தமிழில் அவனை இறைவன் என்றும் பரம்பொருள் என்று இன்னும் பல பெயர்களாலும் அழைக்கிறோம். மலையாள முஸ்லிம்கள் தம்புரானே! என்றழைத்து அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறார்கள். சம்ஸ்க்ருதத்தில் அந்த மூலத்தை பிரம்மம் என்று அழைக்கின்றனர். அதுவும் அவனையே குறிக்கிறது.

      //எனவே நாம் சொல்கிறோம்: அல்லாஹு அக்பர். அல்லாஹ் மகத்தானவன்!// - ஆங்கிலத்தில் “Allah is great!” என்று எழுதப்பட்டுள்ளது. கபீர் என்னும் அறபிச் சொல் பெரியது, மகத்தானது (Big, Great) என்று இரண்டு பொருளையுமே தரும். ஆனால் ஆங்கிலத்தில் Big / Bigger என்று சொல்லாமல் Great என்னும் சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுவே சரியானது. அல்லாஹு அக்பர் என்பதைத் தமிழில் பொதுவாக ‘அல்லாஹ் பெரியவன்’ என்று மொழிபெயர்க்கப் படுகிறது. அதனினும் ‘அல்லாஹ் மகத்தானவன்’ என்று மொழிபெயர்ப்பதே சரியெனப் படுகிறது. இறைவனே நன்கு அறிந்தவன்.