Monday, May 14, 2012

உன் வீதி




இதயம் ஆசிக்கிறது
கையில் கை
இதயத்தில் இதயம்
ஆகிவிட்ட பின்னும்

கண்ணோடு கண்
காணவும் வேண்டும்
ஒருவரில் ஒருவர்
ஒருவரை ஒருவர்

ஒன்று இரண்டு மூன்று…
எண்ணத் தெரிகிறது
எல்லோருக்கும்
என்னவென்று தெரியவில்லை
ஒருவருக்கும்!

உன் வீட்டைக்
கண்டதில் இருந்து
என் வீட்டில்
நாடோடி நான்

உப்பு உரமிட்டுக்
கனி விளைகிறது எனில்
இனிப்பும் கரிப்பும்
இணைதானே?
உன் பெயரைச் சொன்னால்
கலங்குகிறதே கண்கள்!


இசைத் திரைகள்
இட்டு மறைக்கிறேன்
உன் பெயரை

உன் பாதத்தின் கீழ்
உலகமே உனக்கொரு
வீதியாக இருக்கலாம்…
உன் வீதிதான்
உலகம் எனக்கு

இறைவனின் நினைவு
திருப்புகின்றது என்னை
உன்னிடம்
உன் நினைவு திருப்புகின்றது
இறைவனிடம்

உன் வருணனைகள் பாடிக்கொண்டிருந்தேன்
‘மௌனமாய் இரு’ என்று சமிக்ஞை செய்தாய்
உன் உதடுகள் மீது விரல் வைத்து…
இதயத்தில் ஆசை பொங்கியது
இந்த அழகையும் பாடு என்று.

காயம் ஆறிவிட்டது
வடுவும் மாறிவிட்டது
இப்போது இருப்பதெல்லாம்
வலியை இழந்துவிட்ட
வலி மட்டும்…
அன்பே! இன்னோரு முறை பார்.

No comments:

Post a Comment