Thursday, December 27, 2012

துளிக்கதைகள்



ஒரு கதை எந்த அளவு இருக்கவேண்டும்? காவியம் என்று எழுதப்பட்டதெல்லாம் ஆயிரக்கணக்கான பக்கங்களில் இருந்தன. சிறுகதை என்று ஒன்று வந்தபின் சில பக்கங்களில் இருந்து நாற்பது ஐம்பது பக்கங்கள் வரை கதைகள் சொல்லப்பட்டன. குழந்தைகளுக்கான கதைகள் இன்னும் சுருக்கமாக இருந்தன. ஈசாப்பின் நீதிக்கதைகள் ஒவ்வொன்றும் அரை பக்கம் அல்லது ஒரு பக்கம் அளவில்தான் இருந்தது. அந்த அளவில் உள்ளதைக் குறுங்கதை என்று அழைக்கலாம்.

சுருக்கம் என்பது சுவாரஸ்யத்தின் அடையாளம் ஆன நவீன உலகில் இன்னும் சிறிய கதைகளைச் சொல்லிப் பார்க்க ஆர்வம் உண்டானபோது ஒற்றை வரியில் கதை சொல்லமுடியுமா? என்று முயன்று பார்த்திருக்கிறார்கள். இது பற்றித் தமிழில் முதலில் அறிமுகம் செய்தவர் சுஜாதா. மேற்கில் எழுதப்பட்ட மிகச் சுருக்கமான அறிவியல் புனைகதைகளில் தனக்குப் பிடித்தவை என்று பின்வரும் இரண்டு கதைகளை அவர் சொல்லியிருந்தார்:

விண்வெளியின் எல்லை வரை சென்றபோது அங்கே எழுதப்பட்டிருந்தது, “பிரபஞ்சம் இங்கே முடிவடைகிறது” என்று, தலைகீழாக!

அந்த அறையில் உலகின் கடைசி மனிதன் அமர்ந்திருந்தான். கதவு தட்டப்பட்டது.

இவ்வகையில் எழுதப்படும் கதைகளை மைக்ரோ ஃபிக்‌ஷன் (நுண் புனைவு?), ஃப்ளாஷ் ஃபிக்‌ஷன் (மின்னல் புனைவு), போஸ்ட்கார்ட் ஸ்டோரி (அஞ்சலட்டைக் கதை) முதலிய பெயர்களால் அழைக்கிறார்கள்.

கவிதைகளில் ஆகச் சிறிய வடிவமான ’ஹைகூ’வைத் தமிழில் வாமனக் கவிதை, துளிப்பா என்றெல்லாம் அழைப்பது போல் இவ்வகைக் கதையை வாமனக் கதை என்றும் துளிக்கதை என்றும் அழைக்கலாம்.

ஒருபக்கம் முதல் ஒருவரி வரை சுருக்கமாக எழுதப்படுபவை இந்த வகையில் சேரும் என்று வைத்திருக்கிறார்கள். ஆயிரம் சொற்கள் மிகாமல், ஐநூறு சொற்கள் மிகாமல், இருநூறு சொற்கள் மிகாமல், நூறு சொற்கள் மிகாமல் என்று இப்படியே தேர்வில் விடை எழுதச் சொல்வது போல் குறுகிய எல்லைகள் கொடுத்து எழுதிப் பார்க்கிறார்கள். ஆறு சொற்களில் ஒரு கதை என்றெல்லாம்கூட சோதனை செய்து பார்க்கிறார்கள்.

இந்த மாதிரி எழுதுவதற்கு மிகவும் இலகுவான களமாக அறிவியல் புனைவு திகழ்கிறது. க்ரைம் என்னும் களத்திலும் ஓரளவு இலகுவாக எழுத முடியும். காதல் கதையை இத்தனைச் சுருக்கமாக எழுத முனைந்தால் அது கவிதை ஆகிவிடும், கதையாக இருக்காது. கவிதை போல் தொனிக்கக்கூடாது என்பது முக்கியம்.

மேஜிக்கல் ரியலிசம் என்ற எழுத்துமுறை கைவந்தால் துளிக்கதை எழுதுவது மிக எளிது. ஒரு உதாரணம்:
“பாட்டிலின் விளிம்பிலிருந்து சொட்டிய துளியில் மூழ்கித் தத்தளித்தான்.”

குழந்தைகளுக்கான கதைகளில் ஃபேண்ட்டஸி நிறைய இருக்கும் என்பதால் அந்த முறையிலும் இவ்வகைக் கதைகளைச் சொல்லிப் பார்க்கலாம். கதைகள் எழுதுவது எப்படி என்று எங்களுக்கு வகுப்பெடுத்த பேராசிரியர்.யூனுஸ் ஒருமுறை சொன்னார், “பழமொழிகளை அப்படியே கதையாக மாற்றினால்கூட அற்புதமாக வரும். ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்’ என்னும் பழமொழியை அப்படியே எதார்த்தமாக எடுத்துக் கொண்டு ‘பறக்கும் அம்மி’ என்று ஒரு கதை எழுதினால் குழந்தைகள் மிக வியப்பாகக் கேட்பார்கள்.”

பிள்ளைகள் விளையாட்டாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு-வரிக் கதைகளில்கூட சுவாரஸ்யத்திற்கான ஆரம்பப் புள்ளி இருப்பதைக் காணலாம். உதாரணமாக, “ஒரு ஊர்ல ஒரு நரியாம், அத்தோட கதை சரியாம்” என்று சொல்லிச் சிரிப்பார்கள். இது ஒரு பயங்கரமான முடிவு! ஏன் அத்துடன் சரியாம் என்னும் கேள்வியை எழுப்பக்கூடியது. ஆனால் அதை பற்றிச் சிறுவர்களுக்கு என்ன கவலை?

இதே கதையைச் சற்று மாற்றிச் சொன்னான் என் மகன்: “ஒரு ஊர்ல ஒரு நரியாம், அது உடம்பெல்லாம் ஒரே சொரியாம்.” இதிலும் ஒரு திகில் இருக்கிறது. ஏன் அப்படி என்னும் கேள்வியை எழுப்புகிறது. இதே கதையை நான் வேறு வடிவத்திற்கு மாற்றி அமைத்துப் பார்த்தேன்: “ஒரு ஊர்ல ஒரு நரியாம். இன்னொரு ஊர்ல இன்னொரு நரியாம். இப்படியே, ஒவ்வொரு ஊர்லயும் ஒரு நரி மட்டும் இருந்ததாம்!” கதை அவ்வளவுதான் என்றாலும் ஒரு மர்ம சூழலை உருவாக்கிக் கேள்விகளை எழுப்பிவிடுகிறது. ஏன் அப்படி என்னுக் கேள்விக்குக் கதையில் விடைகள் இல்லை. அது நம் கற்பனை முன்னகர்வதற்கான பாதையை விரிக்கின்றது.

ஹெமிங்க்வே ஒரு முறை ஆறே சொற்களில் கதை ஒன்று எழுதி அதுவே தன் சிறந்த படைப்பு என்று சொன்னார் என்பதாக இலக்கிய உலகில் ஒரு கிசுகிசு உண்டு. அந்தக் கதை: "For sale: baby shoes, never worn."

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் பலராலும் தங்களின் ஆதர்ச எழுத்தாளர் என்று கொண்டாடப்பட்ட ஆர்தர்.சி.க்ளார்க் எழுதிய மிகச் சிறிய அறிவியல் புனைகதை இது: “God said, 'Cancel Program GENESIS.' The universe ceased to exist."

குய்தமாலா தேசத்தின் எழுத்தாளரான அகஸ்தோ மாண்டெர்ராசோ 1959-ல் எழுதிய “எல் டைனொசாரியோ” என்னும் தலைப்பில் அமைந்த கதைதான் உலகின் மிகச்சிறிய கதை என்று கருதுகின்றவர்களும் உண்டு. “குவாந்தோ தெஸ்பர்ட்டோ, எல் டைனொசாரியோ டொதாவியா எஸ்தபா அல்லி” என்னும் அந்தத் துளிக்கதையின் பொருள்: “அவன் கண்விழித்தபோது, அந்த டைனொசர் இன்னமும் அங்கே இருந்தது.”

ஒரு-வரிக் கதைகள் என்னும் பெயரில் எழுதப்படும் பல கதைகள் உண்மையில் சிறுகதைகான ஆரம்பம் போலவே தெரிகின்றன. ஒரு தீப்பொறி போல். அவ்வளவுதான். வாசகன் அதை ஊதி வளர்த்தெடுத்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுகிறார்கள். இப்படி எழுதலாம் என்னும் பட்சத்தில் குப்பைகள் அதிகமாகக் குவியத்தொடங்குவதில் ஆச்சரியம் இல்லை. ஹைகூ என்ற மகத்தான கவிதை வடிவத்திற்கு நேர்ந்த கதி அதுதான். ஹைகூ எழுதுவது மிகவும் கடினம் என்பது உண்மையாக இருக்க இங்கே என்னடா என்றால் ஹைகூ எழுதுவது மிகவும் எளிது என்னும் பார்வையிலிருந்தே புற்றீசல்கள் போல் ஹைகூக்கள் புறப்பட்டன. துளிக்கதைகளுக்கும் இது பொருந்தும். சுவாரஸ்யமான சில துளிக்கதைகள்:

குட்-பை சொல்கிறேன், இரத்தம் வழியும் கைகளால்
(ஃப்ரான்க் மில்லர்)

கல்லறை வாசகம்: மட மானிடர்கள், பூமியிலிருந்து தப்பிக்கவே இல்லை.
(வென்ரார் விஞ்ச்)

குழந்தையின் குருதி-வகை? மனிதம், பெரும்பாலும்.
(ஆர்சன் ஸ்காட் கார்ட்)

”கிர்பி இதற்கு முன் விரல்கள் சாப்பிட்டதில்லை”
(கெவின் ஸ்மித்)

மழை பெய்தது, பெய்தது… நிற்கவே இல்லை
(ஹொவர்ட் வால்ட்ராப்)

மனிதகுலத்தைக் காப்பாற்ற அவன் மீண்டும் இறந்தான்
(பென் போவா)

கால எந்திரம் எதிர்காலத்திற்குச் சென்றது. யாருமே இல்லை.
(ஹாரி ஹாரிசன்)

வானம் விழுந்தது. விவரம் பதினோரு மணிக்கு.
(ரொபர்ட் ஜோர்தான்)

ஹைட்ரஜன் குண்டுகள் வீசப்பட்டன. நாங்கள் அனைவரும் இறந்தோம்.
(ஹொவர்ட் வால்ட்ராப்)

அவன் மிகவும் குழப்பத்துடன் படித்தான், தன் இறப்புச் செய்தியை.
(ஸ்டீவன் மெரட்ஸ்கி)

அடடே இது நல்லாயிருக்கே என்று தோன்ற கற்பனையை முடுக்கிவிட்டதில் சில துளிக்கதைகள் தோன்றின. மேஜிக்கல் ரியலிசம், சைஃபை போன்ற வகைகளின் சாயல் உள்ள துளிகளாக அவை தெரிகின்றன. ஒவ்வொன்றுக்கும் தலைப்பும் கொடுத்துவிட்டேன் (இங்கே ஹைகூ கவிதைக்குத் தலைப்புக் கொடுப்பது போல.)

நடை
அந்த எட்டு வயதுச் சிறுவன்
வேகமாக நடந்து போய்க்கொண்டிருந்தான்,
கடலின் ஆழத்தில்.

மிர்ரர்
கண்ணாடியின் முன் வந்து நின்ற ஜாக் சிரித்தான். பிம்பம் சிரிக்காமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது.

தேகம்
அறைக்குள் வந்து கதவை மூடித் தாளிட்டவள் புழுக்கம் தாங்காமல் ஆடைகளைக் களைந்தாள். ஃபேன் காற்று வெண்ணிறமாய் மின்னிய எலும்புகளைத் தழுவியது.

அவள்
முகத்தைச் சேலையால் மூடி மறைத்தபடி சாலையில் விரைந்தவளைச் சுட்டிக் காட்டிக் கிசுகிசுத்தார்கள் எல்லோரும் “மனித இனத்தைச் சேர்ந்தவள்!”

மீட்டிங்
தலைவர் எதிர்பார்த்தபடியே கூட்டத்திற்கு அறுபது பேர்தான் வந்திருந்தார்கள், ஐந்து மனிதர்களையும் சேர்த்து.

வகுப்பு
போர்டில் எழுதுவதற்கு டீச்சர் திரும்பியவுடன் கடைசி பென்ச்சில் இருந்த சிறுவர்கள் அவசரமாக மாற்றிக் கொண்டார்கள், தலைகளை.

இவ்வளவு சுருக்கமாக இருப்பதில் ஒரு சிக்கல் என்ன என்றால், கதை ’படித்த’ உணர்வே ஏற்படுவதில்லை என்பதுதான். குறைந்தது ஐந்து நிமிடங்களாவது படிப்பது போல் இருக்க வேண்டாமா? இவை இருக்கும் அளவுக்கு “நொடிக் கதைகள்” என்று ஒரு பெயரும் சூட்டிவிடலாம் போலிருக்கிறது. அதாவது ஒரு நிமிட நேரத்திற்குள் படித்து முடிக்கக்கூடிய கதைகள் இவை. மைக்ரோ கதைகள் என்னும் வகையில் சற்றே பெரிய கதைகளும் உண்டு. “உள்ளங்கைக் கதைகள்” என்று அவற்றை அழைக்கிறார்கள். உள்ளங்கை ஸைசில் உள்ள அந்தக் கதைகள் நம் உள்ளத்தின் உணர்வுகளை உள்ளங்கை நெல்லிக்கனி போல் உணர்த்திக் காட்ட வல்லவை. இதற்கு ஒரு சாம்பிள், மானுவல் கொன்ஸாலஸ் என்பவரின் “Miniature Wife and other stories” என்னும் நூலிலிருந்து ”FIVE THINGS” என்னும் துளிக்கதை:

ஐந்து விஷயங்கள்
அவள் பிரிந்து செல்லும் முன், அவள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான ஐந்து விஷயங்களை அவளிடம் சொல்லிவிட விரும்புகிறேன். ஆனால் நாங்கள் காலையிலிருந்தே பேசிக்கொள்ளவில்லை.

கேட்கப்படாமலே நான் காஃபி போட்டுக் கொடுத்தேன். அவளும் அப்படியே அதை எடுத்துக் கொண்டாள்.

ஐந்து விஷயங்கள் என்கிறேன். ஆனால் அதிகமாகவும் இருக்கலாம்.

நிச்சயம் அதிக விஷயங்கள் உள்ளன. ஆனால் ஐந்து என்பது ஒரு நல்ல எண் என்று நினைக்கிறேன், சரிதானே? போதுமானது ஆனால் அதிகமானது அல்ல. அவள் அதிகமாகச் சுமந்து செல்ல வேண்டாம். ஐந்துக்கு மேல் அவள் கேட்கவும் மாட்டாள்.

அவள் மீது ஒரு மௌனம் கவிந்துள்ளது. நான் ஐந்து விஷயங்கள் என்கிறேன், ஆனால் உண்மையில் ஒரே ஒரு விஷயம்தான் இருக்கிறது, அவளிடம் சொல்வதற்கான ஒரே ஒரு விஷயம், ‘போகாதே’.
ஃ ஃ ஃ

வாசகர்களுக்கான ஒரு பயிற்சியும் வைத்திருக்கிறார்கள். மேலே உள்ள துளிக்கதை ஏதோ ஒரு நாவலின் இடையே வரும் பீஸ் மாதிரி தொனிக்கிறது அல்லவா? ஆனாலும் இது தன்னளவில் முழுமையான ஒரு துளிக்கதைதான் என்றும் சொல்ல முடிகிறது. இப்படியாக, நாம் வாசிக்கும் நாவல்களில் இருந்து துளிக்கதை எனத்தக்க பகுதிகளைக் கட் செய்து சேகரித்து வைத்து நூலாக வெளியிடலாம் என்கிறார்கள். (அந்தந்தக் கதைக்குரிய ஆசிரியரின் பெயரைச் சுட்டிவிட வேண்டும். நம் பெயரில் சுட்டுவிடக் கூடாது. ஆனால், தொகுப்பாசிரியர் என்று நம் பெயரைப் போட்டுக் கொள்ளலாம்.)

ஒரு பக்க அளவில் கதை எழுதுகிறார்கள் என்று சொன்னேன் அல்லவா? அதையும் ஒரு கை பார்த்துவிடுவோம் என்று முயன்றபோது, அடியேனின் மனத்தில் நடுச்சாமத்தில் பின்வரும் கதை உதித்தது:

தர்பார்
இரவெல்லாம் ராணியுடன் ஊடல். பிறகு வைகறைப் பொழுதில் ஒரு கூடல். எனவே, அக்பரால் அன்று அரசவையில் சுரத்தாக அமர்ந்திருக்க முடியவில்லை. கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. சமாளித்துக் கொண்டிருந்தார். ஒருமுறை சொக்கித் தலையை உதறி விழித்துப் பார்த்தபோது கம்பம் பஸ் ஸ்டாண்டில் அமர்ந்திருந்தார். அருகே தேநீர்க் கடையிலிருந்த ரேடியோவில் “ராசாவே உன்னை விட மாட்டேன்…” என்று குயில் குரலில் ஒரு பெண் பாடிக் கொண்டிருந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தார். அப்பக்கமாக வந்த கண்டக்டர் ஒருவர் இவரின் ராஜ உடைகளைப் பார்த்துவிட்டு, “அடடே இப்பவும் ராஜா நாடகம்லாம் போடுறீங்களா? எந்த ஊரு? மதுரையா?” என்று கேட்டுவிட்டுப் பதிலுக்குக் காத்திராமல் போய்விட்டார். இதற்குள் அக்பருக்குக் கை காலெல்லாம் லேசாக நடுக்கம் கண்டுவிட்டது. தூக்கத்தின் பிரம்மையாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவராகக் கண்களை இடுக்கி முகத்தை உதறி உதறி மீண்டும் மீண்டும் திறந்து பார்த்தார். உத்தி பலன் தரவில்லை. அதே பஸ் ஸ்டாண்டில்தான் அமர்ந்திருந்தார். இதைக் கவனித்த ஒருவன் “சர்தான், இது கோட்டி புடிச்ச கேஸ்ப்பா” என்று டீக்கடைக்காரரிடம் சொன்னான். பேருந்துகள் அவருக்குள் அநியாயத்துக்குப் பீதியைக் கிளப்பின. சுற்றி இருக்கும் உயிரினங்கள் பார்ப்பதற்குத் தன்னைப்போல் மனிதர்களாகத் தெரிந்தாலும் உடைகளெல்லாம் வேறு மாதிரியும் பாஷை அந்நியமாகவும் இருப்பது கண்டு ஏதோ துஷ்ட ஜின்களின் உலகம் என்ற முடிவுக்கு வந்திருந்தார். உள்ளூற மரணபயம் திரளத் தொடங்கியிருந்தது. டவுசரிலிருந்து புகையிலைப் பாக்கெட்டை எடுத்தபடி ஒருத்தர் அக்பரின் அருகில் வந்து அமர்ந்தார். “ஃபாரின் செண்ட்டா, இப்படித் தூக்குதுங்களே?” என்றார். அவருடைய கண்களில் இருந்த ஒருவித கனிவு சற்று ஆசுவாசம் தரவே அவரிடம் கேட்டுப்பார்க்கலாம் என்ற எண்ணத்தை உருவாக்கிற்று. நடுக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, வரளும் நாவை அசைத்து, அழுகை வரும் தருணத்தில் சிறு குழந்தையின் கீழுதடு நெளிவது போன்ற பாவனையை மறைக்க முடியாதவராய், சன்னமான குரலில் அக்பர் அவரிடம் கேட்டார், “முரா தர்பார் குஜாஸ்த்?” (என் அரசவை எங்கே இருக்கிறது?). ஃபார்சி அந்த ஆளுக்கு ஏதோ சூனிய மந்திரம் போல் தோன்றவே எழுந்து கொண்டு எதிரே நின்ற பஸ்ஸைக் காட்டினார், “இந்த பஸ் தேனீ வரய்க்கும் போவுது. ஏறிக்கங்க. அங்கிருந்து மாறிக்கலாம்.”


Monday, December 24, 2012

பாண்டிய மன்னனின் டைனோசர் -part 3


இனி “யாளி” நாவல் யாளியைப் பற்றிச் சொல்லும் கருத்துக்களுக்கு வருவோம். தும்பிக்கை வைத்த யாளி, நாக்கு நீண்ட யாளி, இறக்கை வைத்த யாளி, நீரில் வாழும் யாளி (மீன் போன்றது) ஆகிய நான்கு வகை யாளிகளின் சிற்பங்கள் கோயில்களில் காணப்படுகின்றன. அவை நான்குமே பலகோடி ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உண்மையில் வாழ்ந்தவையே என்னும் கருத்தினடியாக எழுதப்பட்டுள்ள இந்நாவலில் கதாநாயகர்கள் அந்த யாளிகளில் முதல் இரு வகை யாளிகளை இன்றைய குற்றாலத்திற்கும் களக்காட்டுக்கும் இடையில் உள்ள திருஅழகர்குடி என்னும் ஊரில் உள்ள கோவிலின் பின்புறமுள்ள காட்டிற்குள் நேரில் காண்கிறார்கள்! (இப்படி ஓர் ஊர் உண்மையில் இருக்கிறதா? இருப்பின் அறுபது அடி உயர சுவர் கொண்ட கோயில் உண்மையில் இருக்கிறதா?)

யாளியின் சிலைகள் எல்லாம் கீழே ஒரு யானையை வைத்தே காட்டப் பட்டிருக்கின்றன என்பதை அவதானிக்கும் பெக்மன் அதற்கான காரணத்தைச் சொல்கிறான்: யாளியின் அளவை யானையின் அளவுடன் ஒப்பிட்டுக் காட்டி நாம் அனுமானித்துக் கொள்ளுமாறு விட்டிருக்கிறார்கள். யானையின் உயரம் பத்து அடிகள் எனில் யாளியின் உயரம் நாற்பது அடிகள். (சில கோயில்களில் உள்ள சிலைகளில் யாளி யானைக்குப் பக்கத்தில் நிற்காமல் அதன் முதுகின் மீது ஏறி நிற்கிறது. அதன் பாரத்தைத் தாங்காமல் யானை பின்னங்கால்களை மடித்து அமர்ந்திருக்கிறது.) இங்கே எனக்கொரு சந்தேகம்: யாளி உண்மையிலேயே இருந்தது, அதன் சைஸ் என்ன என்று காட்டுவதற்காகத்தான் இந்தச் சிற்பம் யானைக்கு அருகில் வைத்துச் செதுக்கப்பட்டுள்ளது எனில் தர்க்கத்தை வேறு சிற்பங்களுக்கும் பயன்படுத்தலாகுமா? உதாரணமாக, சில கோயில்களில் குதிரைகள் நிற்பது போன்றும் அவற்றுக்குக் கீழே மனிதர்கள் நிற்பது போன்றும் சிலைகள் உண்டு. அதாவது குதிரையுடைய வயிற்றின் அடிபாகம் மனிதனின் தலைக்கு மேலே இருக்கிறது. எனில், அத்தனை உயராமான குதிரைகள் அந்தக்காலத்தில் இருந்தன என்று சொல்லி அதன் தொல்படிவங்கள் எங்காவது சிக்குகிறதா என்று தேடலாமா?

சிலைகள் எல்லாமே எதார்த்தமாக இருந்தவைதான் என்று சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் ம.த.குமாருக்கு ஏற்பட்டுவிட்டதால், மனிதனும் யாளியும் இணைந்த வடிவிலான சிற்பமும் நிஜமாகவே வாழ்ந்த யாளி-மனிதன் என்னும் வகையினரின் சிற்பமே என்று சொல்கிறார். அவர்கள் ஒருவகைச் சித்தர்கள் என்றும் குறிப்பிடுகிறார். திருஅழகர்குடியின் கோயிலுக்குப் பின்னால் உள்ள யாளிகள் சரணாலயத்திற்குள் ரகசியமாக நுழைந்து சரவணனும் பெக்மனும் சுற்றி வரும்போது ஒரு பழைய கோயில் மண்டபத்திற்குள்ளிருந்து பிரணவ நாதம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால் அங்கே ஆள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அங்கே செல்லும் பெக்மன் அந்த மண்டபத்திற்குள் கால்பந்து சைஸில் முட்டைகள் வைக்கப் பட்டிருப்பதைக் காண்கிறான். அப்போது அவன் காணும் ஒரு காட்சி அவன் முதுகெலும்பில் மின்சாரம் பாய்ந்தது போல் உணரச்செய்கிறது: யாளி-மனிதர்! அரைக்கு மேலே மனித உடல், கீழே யாளியுடல். அவர்தான் ப்ரணவ நாதம் எழுப்பி தியானம் செய்தபடி இருக்கிறார். தான் கண்ட காட்சியை பெக்மன் அந்தக் கோயிலின் அறங்காவலர்களிடம் சொல்லும்போது அவர்கள் அதிசயிக்கிறார்கள். அவர்களே அந்த சித்தரைப் பார்த்ததில்லை என்றும் ப்ராப்தமுள்ள ஒருவருக்குத்தான் அந்த வாய்ப்புக் கிடைக்க்மென்றும் சொல்கிறார்கள். யாளியைப் பாதுகாத்து வரும் தலைமுறையினருக்குக் கிடைக்காத பேறு, வெளிநாட்டுக்காரனுக்குக் கிடைத்திருப்பது அவர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது. ஆனால் கதை கச்சிதமாக அமைந்துவிட்டது. மித்தாலஜிக்கலான – தொன்மமான உருவங்களெல்லாம் ப்ராப்தம் உள்ளவர்களின் கண்களுக்கு மட்டுமே காட்சி தரும் என்று அறிவாளால் கோடு போட்டுவிட்ட பின் வாயைத் திறக்க இடமே இல்லை!

சரி, அந்த முட்டைகள். ஜுராஸ்ஸிக் பார்க்கில் வரும் முட்டை போல இது ஏகப்பட்ட முட்டைகள். பறவை போன்ற யாளி ஒன்று உண்டல்லவா? அவற்றின் முட்டைகள். ஆனால் அந்த இனத்தில் இப்போது ஒன்றுகூட உயிருடன் இல்லை.

ஆரம்பத்திலிருந்தே யாளியின் உடலமைப்பை பெக்மன் அலசிக்கொண்டே வருகிறான். யாளிக்கு முன்னிரு கால்களும் / கைகளும் சின்னதாக இருக்கின்றன. எனவே அது எலி அணிலெல்லாம் நிற்பது போல் நிற்கிறது. ஆனால் அதன் பின்னங்கால்கள் நீளமாக உள்ளன. டைனோசர்களுக்கும் இப்படித்தான் இருக்கும். யாளிகள் டைனோசர் இனத்தைச் சேர்ந்தவை என்று நாவலின் பிற்பகுதியில் ஒரு கோட்பாட்டுக்கு வந்து சேர இந்த அவதானிப்புக்கள் உதவுகின்றன. ஆனால் அந்த அவதானிப்புக்கள் போதுமான அறிவியல் பார்வை இன்றி ஒரே தாவாக யூகமாகி முடிகின்றபோது நாவலின் தோல்வியாகிவிடுகிறது. அந்த இடைவெளியை அறிவியல் தரவுகளைத் திரட்டி ஆராய்ந்து பயன்படுத்தி எழுதியிருப்பாரேயானால் அருமையானதொரு நாவலாகியிருக்கும். இதனால்தான் இக்கதை டான் ப்ரவ்னின் நாவலைப் போல் உருவாகியிருக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் சொன்னேன்.

யாளியை முன்வைத்துப் பேசும் ம.த.குமார் இன்று டைனோசர் பற்றி அறிவியல் ஆய்வாளர்கள் முன்வைத்திருக்கும் கருத்துக்களுக்கு எதிராக இரண்டு பட்டாசுகளை டமார் டமார் என்று வெடிக்கிறார். அந்த இரண்டு கருத்துக்களை டைனோசர் ஆய்வாளர்கள் கவனிக்க வேண்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

பட்டாசு நெ.1: டைனோசரின் உருவமாக மேற்கத்திய அறிவியலாளர்கள் வரைந்து தந்திருப்பது தவறானது. டைனோசரின் உண்மையான உருவம் நம் கோயில் சிற்பங்களில் காணப்படும் தும்பிக்கை வைத்த யாளியின் உருவமே.

இதற்கு அவர் சொல்லும் ருஜு என்னவெனில், யானை இறந்த பின் புதைந்து போனால் அதன் துதிக்கையில் எலும்புகள் இல்லாத காரணத்தால் முற்றிலுமாக மக்கிவிடும். எனவே யானையையே பார்த்திராத ஒருவன் பின்னாளில் தோண்டியெடுக்கப்படும் அதன் எலும்புக்கூடுகளை மட்டும் வைத்துக்கொண்டு அதன் உருவத்தைத் தீர்மானிப்பான் எனில் யானையைத் தும்பிக்கை இல்லாத ஒரு விலங்காகத்தான் வரைவான். அப்படித்தான் டைனொசரையும் தும்பிக்கை இல்லாததாக மேற்கின் அறிவியலாளர்கள் என்னும் கேணைகள் ‘தவறாக’ வரைந்திருக்கிறார்கள். அவர்கள் நம் ஊர் யாளிச் சிற்பங்களைப் பார்த்திருப்பார்கள் எனில் இந்தத் தவறைச் செய்திருக்க மாட்டார்கள்!

அது சரி, இன்று பசுமாடு அல்லது எருமை மாட்டின் எலும்புக்கூடு கிடைத்தால், அந்த விலங்கை முன்னர் பார்த்தேயிராத ஒருவன் அதற்கு proboscis என்னும் தும்பிக்கை இருப்பதாகக் கற்பனை செய்தால்தான் சரியா? ஏனெனில் அப்போது நம் யாளியின் உருவம் சார்ந்து சரியாகக் (?) கற்பனை செய்த அறிவாளிகள் ஆகிவிடுவோம் அல்லவா?

பட்டாசு நெ.2: டைனோசர்கள் “reptiles” என்று மேற்கத்திய விஞ்ஞானிகள் சொல்வதும் தவறு. டைனோசர்கள் எல்லாம் குட்டி ஈன்று பால் புகட்டும் பாலூட்டிகள் (mammals).

இதற்கு அவர் சொல்லும் ருஜு என்னவெனில், அத்தனை உயரமாக இருக்கும் டைனோசர் முட்டை போட்டால் அவ்வளவு உயரத்தில் இருந்து தரையில் விழும் முட்டை ஒடிந்து விடாதா? (தர்க்க நீட்சி: இப்படி எல்லா முட்டைகளும் உடைந்துவிட்டால் டைனோசர் இனமே அழிந்துவிடாதா?)

இந்த வாதத்தைப் பார்த்தவுடன் என்னையும் அறியாமல் “என்னைப் படைத்த றப்பே, நான் என்ன பாவம் செய்தேன்?” என்று அலறிவிட்டேன். ஒரு வாதத்துக்காக ம.த.குமார் சொல்வதை ஏற்றுக்கொண்டாலும் நின்றபடியே முட்டை போட டைனோசர்கள் என்ன கூமுட்டைகளா? நாமும்தான் ஓரளவு உயரமாக இருக்கிறோம். என்ன நின்றுகொண்டேவா… சரி வேண்டாம். கோழி கூட அதன் உயரத்திற்கு அப்படியே முட்டையிட்டால் உடைந்துதான் போகும். அது அமர்ந்து முட்டை ‘இடுவது’ போல் டைனோசர்கள் செய்யாதா என்ன? மேலும் அத்தனை எடையுள்ள டைனோசர் அடை காக்க அமர்ந்தாலும் முட்டை புட்டுக்குமாம். என்னே ஓர் அறிவியல் பார்வை! இதற்குச் சப்பைக்கட்டாக யானையை வேறு இழுக்கிறார். (யாளியுடன் சேர்த்து அதைத்தானே செதுக்கி வைத்திருக்கிறார்கள்.) இந்தக் காரணத்திற்காகத்தான் யானை முட்டை போடாமல் குட்டி போடுகிறதாம்! எனவே, ம.த.குமாரின் லாஜிக்படி இரண்டடிக்கு மேல் உயரம் கொண்ட எந்த உயிரினமும் முட்டை போடாது, குட்டிதான் போடும்!

ஆனால் யாளியில் அவர் இரண்டு வகை இருப்பதாகச் சொல்கிறார். சிறகுகள் வைத்திருக்கும் யாளிகள் பறவை இனத்தின்பாற் பட்டவை. அவை முட்டைதான் போடும். (பறந்துகொண்டே அவசரத்தில் போட்டுவிட்டால் முட்டை உடைந்துவிடுமே ஐயா?) துதிக்கை வைத்த யாளியும் நாக்கு நீண்ட யாளியும் குட்டிதான் போடும்.

உயிரினப் பாகுபாடுகள் பற்றிய ஆழ்ந்த அறிவு இல்லாததால் இப்படிப்பட்ட காமெடி ட்ராக்குகளை அறிவியல் ஆய்வுகள் போல் சொல்லி அதற்கெல்லாம் அத்தாரிட்டி நாங்கள்தான் என்றொரு ’பித்ருக்கள் பஜனை’ பாடியிருக்கிறார் ஆசிரியர். வெளிக்கோலத்தை வைத்து மட்டுமே இவ்விலங்கு இந்த வகையைச் சேர்ந்தது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. தும்பிக்கை வைத்த யாளி என்பது யானை வகையைச் சேர்ந்தது எனில் யானை பன்றி எலி சுண்டெலி போன்றவை எல்லாம் ஒரே வகுப்பைச் சேர்ந்தவை. நாக்கு நீண்ட யாளி என்பது சிங்கம் வகையைச் சேர்ந்தது எனில் சிங்கம் என்பது நாய் வகுப்பைச் சேர்ந்தது. (புலி சிறுத்தை போன்றவை எல்லாம் பூனை வகுப்பைச் சேர்ந்தவை) எனவே யாளி என்பது ஒரு வகையே அல்ல. சிங்கத்திற்குத் துதிக்கை இருந்தது போன்ற ஒரு கற்பனை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. நாக்கு நீண்டு அதை வைத்து இரையை (எருமை மாடுகள்!) சுழற்றியெடுத்து வாய்க்குள் போடும் யாளிகள் எனில் அவற்றை நாம் பச்சோந்தி வகுப்பில் வைத்துத்தான் பார்க்க முடியும். ஆனால், பல்லி பச்சோந்தியெல்லாம் முட்டை போடும் இனம் என்பது இங்கே ம.த.குமாரின் கோட்பாட்டில் இடிக்கும்.

டைனோசர்கள் எல்லாமே பல்லி இனத்தைச் சேர்ந்தவை என்று விஞ்ஞானிகள் முடிவு செய்திருப்பது எந்தெந்த அளவுகோல்களை வைத்து என்று அறிந்துகொள்ளாமல் அவர்கள் ஏதோ அம்புலிமாமா யூகங்களை வைத்துச் சொல்கிறார்கள் என்பது போல் நாமும் நம் பங்குக்கு ஜீபூம்பா யூகங்களை அவிழ்த்து விடக்கூடாது. டைனோசர்களின் முட்டைகள் பல இடங்களில் கிடைத்திருக்கின்றன என்பது அவை ஊர்வன வகையைச் சேர்ந்தவை என்னும் பார்வைக்கு ஒரு வலுவான ஆதாரமாகிறது. இது போல் பல விஷயங்களை மெள்ள மெள்ள அலசிப் பார்த்துத்தான் டைனோசரின் உருவத்தை யூகித்திருக்கிறார்கள். டைனோசர்களுக்குத் தும்பிக்கை இருப்பதாக யூகிக்கக்கூடாது என்பது அறிவியலில் ‘ஹராம்’ ஆக்கப்பட்ட விஷயம் அல்ல. சரியான முகாந்திரம் இருந்தால் அப்படியும் சிந்திப்பார்கள், ஏற்றுக் கொள்வார்கள்.

விலங்குகளின் வெளியுருவத்தை வைத்து மட்டுமே அது இன்ன வகையைச் சேர்ந்தது என்று சொல்ல முடியாது என்றபோது இன்னொரு பாய்ண்ட் ஞாபகம் வந்தது. டைனோசரின் உருவத்தை ஒட்டகச்சிவிங்கி மற்றும் கங்காரூ ஆகியவற்றுடன் ஒப்பிட்டு அலசுவார்கள் பெக்மனும் சரவணனும். கங்காரூவிற்கு பின்னங்கால் மட்டும் மிகவும் நீண்டது. அது தாவவும் அமரவும் குனியவும் இடமளிப்பது. ஆனால் யாளிக்கு அப்படியான பின்னங்கால்கள் இல்லை. எனவே அது குனிந்தால் குப்புற வீழ்ந்து மூஞ்சியில் சிராய்த்துக் கொள்ளும். (ஏனெனில் அதன் முன்னங்கால்கள் சிறியவை.) ஆனால் ஒட்டகச்சிவிங்கி அத்தனை உயரம் இருந்தாலும் அதன் நான்கு கால்களும் சம உயரமுடையவை ப்ளஸ் அதன் கழுத்து நீண்டது. எனவேதான் அவ்வளவு உயரமானதும் முன்னங்கால்கள் சிறிதானதும் கங்காரூவின் பின்னங்கால்கள் போல் அமைப்பற்றதுமான யாளிக்கு தும்பிக்கை இருக்கிறது அல்லது பல அடிகள் நீளமான நாக்கு இருக்கிறது. ஆனால் டைனோசர்களுக்கு நீண்ட கழுத்தும் கிடையாது, கங்காரூவினது போன்ற பின்னங்கால்களும் கிடையாது, முன்னங்கால்களும் சிறியன என்னும் போது அவை குப்புற விழாமல் இரை தின்னவும் நீரருந்தவும் ஒரே வழி அவற்றுக்குத் தும்பிக்கையோ நீண்ட நாவோ இருக்க வேண்டும் என்பதுதான். இவை ம.த.குமார் வைக்கும் பார்வைகள். இதனடியாகத்தான் யாளிகள் என்பவை டைனோசர்களே என்றும், அவை பாலூட்டிகள் என்றும் டைனோசர் பற்றி இன்றைய அறிவியலாளர்கள் அளிக்கும் சித்திரங்கள் தவறானவை என்றும் அவர் முடிவுக்கு வருகிறார்.

இந்தக் கங்காரூ ஒப்பீட்டைப் பார்க்கும் போது எனக்குச் சிறிய விலங்கு ஒன்று மனக்கண்ணில் தோன்றியது. அதன் பெயர் கங்காரூ எலி (kangaroo rat). வட அமெரிக்கப் பாலைவனங்களில் இவை வாழ்கின்றன. உண்மையில் இந்த எலிக்கும் கங்காரூவுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. இது எலியில் ஒரு வகைதான். ஆனால் இதன் பின்னங்கால்கள் கங்காரூவின் கால்களைப் போலவே வடிவம் கொண்டுள்ளன. அதனால் இந்த எலியால் அநாயசமாகத் தாவிச் செல்ல முடிகிறது. அனிமல் ப்ளானட்டின் கவுண்ட் டவுனில் தாவும் மிருகங்களில் இதற்கு ஐந்தாவது இடம் கிடைத்தது. தன் உடலின் அளவை விடவும் நாற்பது மடங்கு நீளத்தை ஒரே தாவில் தாவிவிடும். துரத்தும் எதிரிக்கு டிமிக்கி கொடுப்பதற்கு இதனிடம் உள்ள இன்னொரு திறன் என்னவெனில் தாவியபின் தன் வாலை அசைப்பதன்மூலம் அந்தரத்திலேயே திசையை மாற்றிக்கொண்டு வேறு இடத்தில் போய் லேண்டிங் ஆகி அங்கிருந்து மீண்டும் ஒரு தவ்வு தவ்விப் பாய்ந்துவிடும். இதன் இரண்டு கன்னங்களும் இரண்டு பைகளாக (pouches) இருக்கின்றன. பாலைவனச் செடிகளைப் பீறாய்ந்து சேகரிக்கும் ஐநூறு கதிர்மணிகள் வரை இப்பைகளில் குதப்பிக்கொண்டு போய் தன் பொந்தினுள் துப்பி மண் போட்டு மூடி வைத்துக் கொண்டு பசிக்கும் போது சாவகாசமாக எடுத்து எடுத்துச் சாப்பிடுகிறது. ஆனால் கங்காரூ போல் இதற்கு வயிற்றிலே பை கிடையாது. இதற்கு இருப்பது போல் கங்காரூவுக்கு வாயில் பை கிடையாது. இது ஒரு எலி, அவ்வளவே. வேறு வகையைச் சேர்ந்த ஏதாவது விலங்குக்கு இதற்கு இருப்பது போல் வாயில் பை இருக்கக்கூடும். பெலிக்கன் பறவைக்கு அப்படி இருக்கிறது. அதற்காக பெலிக்கன் என்பது பறவையே அல்ல, பொந்தில் வாழும் ஒருவகைப் பாலூட்டி என்று சொல்ல முடியுமா என்ன?

யாளிகள் என்பவை அந்தக் காலத்தில் வாழ்ந்த டைனோசர்கள்தான் என்று முடிவு செய்த பின் இன்னுமொரு ஜிலீர் தகவலை ஊகிக்கிறார் ம.த.குமார். அந்த டைனோசர்களான யாளிகள் லெமூரியாக் கண்டத்தில் வாழ்ந்தவை! அப்போது  தமிழரின் ஆதித் தாய்நிலமான லெமூரியாக் கண்டம் என்பது கீழே அண்டார்டிகா வரையும் கிழக்கே அவுஸ்திரேலியா (Australia) வரையிலும் மேற்கே மடாகாஸ்கர் (Madagascar) வரையிலும் பரந்து விரிந்து கிடந்தது. அந்நிலத்தைப் பாண்டிய மன்னர்கள் ஆண்டு வந்தனர். (நாவலில் இதற்கு ஒரு வரைபடமே தந்திருக்கிறார். அந்நிலம் பச்சை நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளதன் பொருள் அத்தனை வளமானது என்று காட்டத்தான். லெமூரியா முஸ்லிம் நாடாக இருந்தது என்று யாராவது இஸ்லாமிய ஆய்வாளர் கண்டறியாமல் இருப்பாராக!) அப்போது பஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்தைக் கடல்கோள் (சுனாமி) மூழ்கடித்தபோது தன் மக்களுடன் தப்பித்து வந்த பாண்டிய மன்னன் சில யாளிகளைத் தன்னுடன் கொண்டு வந்து திருஅழகர்குடியில் சரணாலயமும் கோயிலும் கட்டி ரகசியமாக வைத்து, அவன் கட்டிய பல கோயில்களில் அதன் சிலைகளையும் செதுக்கச் செய்தான் என்று கதையை அளந்திருக்கிறார் ம.த.குமார்.

சங்க காலத்தில் இருந்த சேர சோழ பாண்டியர்களின் கட்டடக் கலை வேறு பிற்காலச் சேர சோழ பாண்டியரின் கட்டடக் கலை வேறு என்பதை வசதியாக மறந்துவிட்டு யாளிக் கனவில் மிதந்திருக்கிறார் அவர். குமரிக்கண்டம் மூழ்கிய காலத்தில் கட்டப்பட்ட எந்தக் கோயில் இந்த மண்ணில் இருக்கிறது? அப்படி ஏதேனும் இருந்து அதில் யாளி சிற்பமும் இருந்தால் அவரின் அனுமானத்திற்கு அர்த்தம் இருக்கலாம். அப்படி இல்லை என்பதால் பாண்டிய மன்னனின் டைனோசர் என்பது என் இனிய தமிழன் ஒருவன் எனக்குச் சொல்லிய நல்ல ஜோக்காகவே எஞ்சுகிறது!


ம.த.குமார் தொடாத இன்னொரு கோணமும் இருக்கிறது. சமயவியலை அடிப்படையாகக் கொண்ட நாவல் என்று சொல்லி எழுதும் அவர் அதை அவசியம் தொட்டிருக்க்க வேண்டும். தொடாமல் விட்டது பெரிய குறை என்று சொன்னால் தப்பில்லை. அந்தக் கோணம் ஆன்மிகக் கோணம்! தொன்மம் மட்டுமே ஆன்மிகம் ஆகிவிடாது. யாளி என்னும் தொன்மம் கற்பனை அல்ல வரலாறு என்று நிறுவுவதிலேயே அவரின் முழுக்கவனமும் சென்று விட்டபடியால் ஆன்மிகக் கோணத்தை அவர் தொடவே இல்லை. யாளி என்பது தியானத்தில் கண்டறியப்பட்ட ஓர் ஆழ்மனப் படிமம் என்பதாகப் பார்க்க இடம் இருக்கிறது. சமயப்பிரதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆழ்மனப் படிமங்களை உளவியல் ரீதியாக ஆய்வதிலேயே கார்ல் குஸ்தவ் யுங் தன் வாழ்வின் செம்பாகத்தைக் கழித்தார். எனினும் அவரின் உளவியல் பார்வையில் ஆழ்மனப் படிமங்கள் எல்லாம் மனிதகுலத்தின் தொகுப்பு நினைவிலியில் (collective unconsciousness) பதியப்பட்டுள்ள கற்பனையே ஆகும். தியானத்தில் ஒருவரின் பிரக்ஞை அந்தத் தொகுப்பு நினைவிலியைத் தீண்டியறியும்போது அவரின் நினைவு-மனப் பரப்பிற்கு எழுந்து வரும் ஏதேனும் ஒரு படிமத்தை அவர் காண்கிறார். அதுபோல் காணப்பட்ட ஓர் ஆழ்மனப் படிமமே யாளி என்று கொள்ளலாம்.

இவ்வாறு சொல்லும்போது ஒரு கேள்வி எழக்கூடும். யாளிச் சிலை நூற்றுக்கணக்கில் உள்ளன. அவற்றை நூற்றுக்கணக்கான சிற்பிகள் செதுக்கியிருப்பார்கள். அவர்கள் அனைவருமேவா தியானத்தில் அதனைக் கண்டிருப்பார்கள்? அதற்கு அவசியமில்லை. ஆன்மிக ஆளுமையாக மக்களால் நம்பப்படும் ஒருவர் தியானத்தில் தான் தரிசித்ததாக ஓர் உருவத்தை முன்வைப்பார் எனில் அதை மனிதர்களின் பொது நினைவு மனம் அட்டியின்றி ஏற்றுக்கொண்டுவிடும். உதாரணமாக, ஸ்வாமிஜி நித்தி தான் தியானத்தில் கண்டதாக ஓர் உருவத்தை அவரே வரைந்து காட்டுகிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒருவேளை அவர் ட்ராயிங்கில் வீக்காக இருந்து அது ஹம்ப்டி டம்ப்டி போன்ற கேலியான உருவமாக இருந்தாலும்கூட பக்தகோடிகள் அதனைப் புல்லரிப்புடன் ஏற்று லட்சக்கணக்கான பிரதிகள் போட்டுப் பாரெங்கும் பரப்பிவிடுவார்கள். ஆன்மிக மறைவுலகங்கள் என்பவை சிலருக்கே அன்றி ஏறத்தாழ அனைவருக்குமே uncharted territory என்பதால் அதை ஐயுறவோ அல்லது நிராகரிக்கவோ இயலாது. அந்தப் படிமத்தைப் பொய் என்று நிராகரிப்பது அந்த ஆன்மிக ஆளுமையையே நிராகரிப்பதாக ஆகிவிடும். எனவே அந்தப் படிமம் ஒரு mass craze-உடன் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகிவிடும். அப்படித்தான் யாளியும் ஆன்மிக குருமார்கள் தங்கள் ஆழ்மனத்தில் கண்டடைந்த படிமகாக, அவர்களிடமிருந்து ஸ்தபதிகளும் மக்களும் ஏற்றுக்கொண்ட படிமமாக இருக்கக்கூடும்.

கார்ல் குஸ்தவ் யுங்கின் உளவியல் கோணம் ஆன்மிக மற்றும் புராண நூல்களில் இருந்தும் தியான ஆய்வுகளில் இருந்தும் உருவாக்கப்பட்டதுதான். ஆனால் ஆழ்மனப் படிமங்கள் எல்லாம் தமக்கென்று reality (மெய்ம்மை / ஹகீக்கத்) அற்றவை என்று அவர் கருதுகிறார். அவை வெறும் கற்பனைகளே. ஆன்மிக ரீதியாக இந்தக் கோணத்தை இன்னும் முன்னகர்த்திச் சென்றால் வேறொரு பார்வை கிடைக்கிறது. தியானத்தில் ஆழும் பிரக்ஞை இந்தப் படிமங்களைக் கண்டடையும் ’இடம்’, ஆழ்மனப் பரப்பு என்று சொல்லப்படும் அந்த இடம் தன்னளவில் ரியாலிட்டி கொண்ட வேறொரு உலகம் என்று பார்த்தால் எப்படியிருக்கும்? அதாவது மனிதனின் பிரக்ஞை தியானம் என்னும் முறைமையின் வழியே வேறொரு பரிமாணத்தில் உள்ள வேறொரு உலகிற்குச் செல்கிறது. அங்கு காணும் உருவங்கள் அந்த உலகின் பிரஜைகள். அவற்றுக்கு இந்த உலகில் காணும் உயிரினங்களின் உருவங்களுடன் தொடர்பு இருக்கலாம். சற்றே மாறியிருக்கலாம். சில சமயங்களில் இங்குள்ள மாதிரியேவும் இருக்கலாம். இப்படிச் சாத்தியக்கூறுகள் விரியும். ஆக, அந்தப் படிமங்கள் மெய்ம்மை அற்ற வெறும் கற்பனை உருவங்கள் அல்ல.

இந்தக் கோணம் ஏறத்தாழ எல்லா மதங்களிலும் உள்ளது. மேலோகம் கீழுலகம் என்றும் இம்மை மறுமை திரையுலகம் என்றும் அன்ன பிற ரீதியிலும் பேசப்படுபவை இப்போதே இவ்வுலகிற்கு அப்பாலான வேறு பரிமாணத்தில் உள்ள வேறு உலகங்களைத்தான். அவ்வுலகின் பிரஜைகள் இங்கும் இவ்வுலகின் பிரஜைகள் அங்கும் சென்று வர இயலும் என்று மதங்கள் சொல்கின்றன. தேவர்கள் என்பவர்கள் அப்படியானவர்கள்தான். இந்து மதத்தில் ஏறத்தாழ இப்பூமியில் காணலாகும் எல்லா உயிரினத்திற்குமே அப்படியான ஆழ்மனப் படிமம் (archetypes) வரைந்து வைக்கப்பட்டுள்ளன அல்லது வருணிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் யாளியும் ஒன்று.

இதே ரீதியில், இராமன் கிருஷ்ணன் போன்ற ஆன்மிக ஆளுமைகள் இங்கே இவ்வுலகில் மற்ற மனிதர்களைப் போன்ற உருவத்தில்தான் இருந்திருப்பார்கள். ஆனால் தியானத்தின் ஆழத்தில் வேறொரு பரிமாணத்திலான உலகில் அவர்களைக் கண்டவர்கள் அவ்வுலகில் அவர்களுக்குரிய நீல நிறமுடையவர்களாகக் கண்டிருக்கக் கூடும். கிருஷ்ணனுக்குமே கூட ஒற்றை நிறம் சொல்லப்படவில்லை. சில சமயம் நீலம், சில சமயம் பச்சை, சில சமயம் கறுப்பு. இந்நிறங்களின் கலவையும் கூட அவனுக்கு உரியது. ஒருவர் தன் ஆழ்நிலை தியானத்தில் கிருஷ்ணனை மஞ்சள் நிறத்தவனாகவோ ரோஸ் நிறத்தவனாகவோ கண்டதாக அறிவித்தால் இந்து மதம் அவரின் கூற்றை நிராகரிக்காது. அதற்கான சாத்தியக்கூறு உண்டுதான் என்று ஏற்கவே செய்யும்!

இதே கோணத்தில் சிந்தித்துச் செல்லும்போது, பூமிக்கு வரும் வேற்று கிரக வாசிகள் என்று சொல்லப்படுபவர்கள் (சூரிய பகவான் குந்தி தேவியிடம் வந்தது) அவ்வாறு நாம் தியானத்தின் வழி (சில நேரங்களில் நோய்ப்பட்ட நிலையிலான மனப்பிசகு, போதையில் ஏற்படும் மனப்பிசகு – altered states of mind –களில்) எட்டும் அக உலகங்களில் இருந்து இவ்வுலகிற்கு வந்தவர்களாய் இருக்கக்கூடும். சூஃபித்துவத்தில் திரையுலகம் என்று பேசப்படும் வானவர் உலகத்தில் (ஆலமுல் மலக்கூத்) இருந்து இவ்வுலகில் வானவர்கள் தோன்றுவதுண்டு. அப்படி அவர்கள் வரும்போது இவ்வுலகிற்குரிய தோற்றம் கொண்டோ அவர்களின் உலகிற்கு உரிய தோற்றத்திலோ வருவார்கள். நபிமார்களின் முன் ஆஜராகும் ஜிப்ரயீல் இவ்வுலக மனித வடிவத்தில் வந்து சென்றுள்ளார்கள். ஏசுவின் அன்னையான மரியம் (அலை) அவர்களின் முன் ஓர் இளைஞனாகத் தோன்றினார்கள்.

இன்று அறிவியலில் parallel universes என்று ஒரு கோட்பாடு பேசப்படுவதும் கவனத்திற்குரியது. இந்த உலகம் மட்டும்தான் இருக்கிறது என்று சொல்வது மூடநம்பிக்கை. இதே கணத்தில் வேறு பரிமாணங்களில் வேறு பல உலகங்கள் இருக்கின்றன என்று சொல்ல இடமுள்ளது என்று விஞ்ஞானிகள் சிந்திக்கின்றனர். அவர்கள் அறிவியல் பேசுவதெல்லாம் ஏதோ சித்தர்கள் பேசுவது போல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது!

யாளியை இப்படியான ஓர் விலங்காகக் காணலாம். அதாவது யாளி இந்த பூமிக்கு உரிய விலங்கல்ல. அது வேறு பரிமாணத்தில் உள்ள உலகின் விலங்கு. அது இந்த உலகுக்கு அவ்வப்போது வந்து சென்றிருக்கக் கூடும். அதனை ஞானியர்கள் தம் தியான நிலைகளில் அவ்வுலகின் பரிமாணத்திற்கான திறப்பின் மூலம் அணுகிக் கண்டிருக்கவும் கூடும்.

இவ்வாறு நான் இந்தக் கோணத்தில் சிந்தித்துக் கொண்டிருந்த போது என் மனத்தில் இந்த இலக்கணங்களின் படியான வேறொரு விலங்கு வந்து நின்றது. அவ்விலங்கிற்குச் சிறகுகள் உண்டு. அதிவேகமாகச் செல்லும் அந்த விலங்கு நபிகள் நாயகத்தைச் சுமந்து இரவுப் பயணத்தில் மக்காவிலிருந்து பறந்து சென்று பாலஸ்தீனில் உள்ள பைத்துல் முகத்தஸ் என்னும் இடத்தில் இறக்கிவிட்டது. அவ்விலங்கு இந்த உலகைச் சேர்ந்தது இல்லை. வேறு உலகிலிருந்து அந்த இரவில் இவ்வுலகிற்குக் கொண்டு வரப்பட்டது. அதன் பெயர் ’புராக்’. வேறொரு தருணத்தில் புராக் பற்றிப் பேசுவோம்.

4 கவிதைகள்



களிறு

நைந்து பிரி விடும்
வார்த்தைத் தாம்பு
கொண்டு வருகிறாய்

கட்டிப் போட
இதுதானா கிடைத்ததுனக்கு?

உன்மத்தம் கொண்டு
ஊன்காடு மேயும்
ஜென்மத்தின் களிறு

பிளிறற் பேரோசையில்
மூழ்கி மறையும்
உன் மந்திர முணுமுணுப்பு

a
  


உயிர்ப்பு

கிளையமர் பறவையினும்
சிறகடிக்கும் பறவைதான்
அதிக உயிராமோ?

கூழாங்கல் என்பது
அமர்ந்திருக்கும் பறவை

a



மழைச் சுடர்

மழை பெய்தது
மண்வாசம் கமழ்ந்தது
மனம்
மௌனம் ஆனது

உள்ளுக்குள்
சட்டென்று விழித்துக்கொண்டு
நிறைந்திருந்தது
இக்கவித்துவத்தை
எந்த மொழியிலும்
கவிதை ஆக்கலாகாது
என்னும் பிரக்ஞை

a



வரைதல்

வட்டம் வரைகிறேன்
சதுரமாகின்றது

சதுரமெனில்
வட்டம் அல்லது
வேறெதுவும்

முக்கோணம்
பல கோணமாகும்

பறவையை நினைப்பேன்
புல்லாகும்

விருட்சத்தைக் கற்பனிப்பேன்
விரலின் அசைவில்
சிலந்தியின் வலை
விரிந்து வரும்

வைத்த புள்ளி
கோடு கொள்ளும்

நீளும் கோடு
நிற்குமொரு புள்ளியாய்

இப்படியாய்
நான் வரைய நாடும் எதுவும்
நாடியபடி வருவதில்லை என்பதில்
வரைந்து கொண்டே இருக்கிறேன்
என்றபோதும்
எதையுமே வரைந்ததில்லை நான்.

a


Thursday, December 20, 2012

மாயாண்டி காலண்டர் / MAYAN de CALENDAR



திசம்பர் 21, கி.பி.2012 உலகம் அழியப்போகிறது என்னும் புரளி ஒரு தொத்து வியாதியைப் போல் எங்கும் வியாபித்து எல்லோர் வாயிலும் இதே அருள்வாக்கு ஜெபிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எங்கே வானவர்கள் இவர்களின் நச்சரிப்புத் தாங்காமல் ஆமீன் கூறி உண்மையாகவே உலகம் அழிந்துவிடுமோ என்று தோன்றிற்று. ஏற்கனவே கேன்ஸரில் செத்துக் கொண்டிருக்கும் ஓல்ட் மேன் போலிருக்கும் நம் உலகத்திற்கு மாஸ்ஸிவ் ஹார்ட் அட்டாக் வேறு வரவேண்டுமா?

”வெள்ளிக்கிழமை உலகம் அழிந்து விடுமாமே சார்?” – இன்றுகூட ஒரு மாணவன் கேட்டான். ஏதோ புதுப்படம் ரீலீஸ் ஆகப்போவதைக் கேட்பது போன்று இருந்தது தொனி. ”என்ன தம்பி இப்படிச் சொல்றீங்க? அப்புறம் நம்ம ஏபிஜே அப்துல் கலாம் கண்ட கனவு பலிக்க வேண்டாமா?” என்று கேட்டேன். (கி.பி.2020-ல் இந்தியா வல்லரசாகுமாமே?)
”யார் சொன்னது?” என்றும் கேட்டேன். “எல்லோரும் சொல்லிக்கிறாங்க” என்ற பதிலைத் தொடர்ந்து சில சலசலப்பிற்குப் பின் ஒரு செமிநெர்டிடம் இருந்து பதில் வந்தது “மாயன் காலண்டர் கணக்கு சார்” என்று. பக்கத்தில் இருந்தவன் அவனை ஏதோ விநோத ஜந்துவைப் போல் பார்த்து “அது என்னடா மாயாண்டி காலண்டர்?” என்று வினவினான்.

எனக்கும் மாயன்/ மாயா நாகரிகம் பற்றி மேம்போக்காகத்தான் தெரியும். அது மெஹிகோ (Mexico) நாட்டின் தொன்மையான நாகரிகம். மத்திய அமெரிக்கப் பகுதி முழுக்கப் பரவியிருந்தது. இன்றைய குய்தமாலா, எல்-சல்வதோர், ஹொண்டுராஸ் போன்ற நாடுகள் எல்லாம் பழங்கால மாயன் நாகரிக நிலங்களாக இருந்தவை. மாயன் தொல்குடி அழிந்து மறைந்துவிடவில்லை. அந்த இனத்தவர்கள் இன்றும் மெஹிகோ நிலப்பரப்பெங்கும் வாழ்கிறார்கள். ஸ்பானிஷ் படையெடுப்பும் காலனியாக்கமும் அவர்களை அடிமை கொண்டாலும் அந்தப் பூர்வகுடி மக்கள் தங்களின் நாகரிக அடையாளங்களை முற்றாக இழந்துவிட வில்லை. பெரும்பான்மையான மக்கள் எஸ்பஞோல் பேசுபவர்கள் ஆகிவிட்டாலும் அவர்களுடைய பூர்விக மொழிகளில் ஒன்றும்கூட (Achi) இன்னமும் புழக்கத்தில் உள்ளது.

அவர்களுடைய தொன்மையான் நாகரிகச் சின்னங்களாக இன்று காணக் கிடைக்கும் பிரம்மாண்டமான கட்டிடங்கள் மிகவும் வியப்பூட்டுகின்றன. அரண்மனை, ஆலயங்கள், அரங்குகள் போன்ற அவை வானத்தை நோட்டமிடும் ஆய்வுக்கூடங்களாகவும் இருந்துள்ளன. இவற்றின் காலம் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே தொடங்குகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். உலகின் முதல் நாகரிகம் நாங்கள்தான் என்று அவரவரும் மார்தட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழில் நமக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான செவ்விலக்கியப் பிரதிகள் கிடைக்கின்றன. அந்தப் பிரதிகளில் காணலாகும் வானியல் குறிப்புக்கள் இங்கேயும் வானியல் ஆராய்ச்சிகள் மிகவும் நுட்பமாக நடந்துள்ளதைக் காட்டுகின்றன.

சமீபத்தில் ”சக்கரவாளக்கோட்டம்” என்னும் ஒரு நூலைப் படித்தேன். குணா என்பவர் எழுதியுள்ள அந்த நூலுக்கு ஒரு முனைவர் பட்டமே வழங்கலாம் என்று சொல்லும் வகையில் பழந்தமிழரின் வானியல் ஆய்வுகளை அதில் அலசியிருந்தார். மட்டுமல்லாது பண்டைய எகிப்து நாகரிகத்தில் இருந்த வானியல் ஆய்வுகள், இங்கிலாந்தில் உள்ள ஸ்டோன்ஹென்ஜ் என்னும் தொல் வானியலாய்வுக் கூடம், புதிர் வட்டங்கள், மாயன் நாகரிகத்தின் வானியல் அவதானிப்புக்கள் ஆகியவற்றுடன் எல்லாம் ஒப்பிட்டு விளக்கி அசத்தியிருந்தார். அவர் ஒரு தமிழ்த்தேசியக் கொள்கையாளர். தமிழின மீட்சி பற்றிப் பேசிவருபவர். பழந்தமிழரின் வானியல் ஆய்வுக் கண்டறிதல்களை ஆரியர்கள் குறியீடுகளாக மாற்றி அதன் வழி அவர்களின் மதத்தை வடிவமைத்துத் தமிழரிடையே பரப்பி அடிமை கொண்டார்கள் என்பது அவரின் வாதம். ஐயனார் வழிபாடு சிறுதெய்வ வழிபாடாக மாற்றப்பட்டதும், இந்திர வழிபாடு ஒழிக்கப்பட்டதும் ஆரியரின் சூழ்ச்சி என்னும் கருத்துக்கு அவர் வானியல் ஆய்வுகளை வைத்துப் புராணத்தைக் கட்டுடைப்புச் செய்து விளக்குகிறார். தமிழரின் தாய்த்தெய்வ வழிபாட்டில் குறுக்கிட்டு முக்கண்ணியாய் இருந்த கொற்றவையின் அடையாளங்களை எல்லாம் பறித்து சிவன் என்னும் ஆணாக்கி அவளை அவனின் ஒரு பாகமாய்க் குறுக்கியது ஆரியம் என்னும் குற்றச்சாட்டுக்குச் சங்க இலக்கியங்களில் இருந்தும் சிலப்பதிகாரத்திலிருந்தும் ஆதாரங்கள் காட்டியிருந்தார். பூம்புகாரில் இருந்ததாகச் சிலப்பதிகாரம் உரைக்கும் சக்கரவாளக்கோட்டம் என்பது பண்டைய தமிழரின் வானியல் ஆராய்ச்சிக் கூடமே என்பது அந்நூலின் மையக் கருத்து. எண்பது பக்கங்கள் அளவிலான அந்த ஒல்லி நூலுக்குள் வரிக்கு வரி ஆச்சரியங்கள் கொட்டிக்கிடந்தன.

அந்நூலில் விரவிக்கிடக்கும் ஆச்சரியமான தகவல்களில் ஒன்று அப்பர் என்றழைக்கப்படும் திருநாவுக்கரசரை அவர் அகோரி என்று சொல்லியிருப்பது! கபாலத்தில் ஊனுணவு பெற்றுத் தின்பவர் அவர் என்று குணா குறிப்பிடும் செய்தி அப்பர் பற்றி அதுவரை இருந்த மனப்பிம்பத்துடன் பலமாக மோதிற்று. அப்பர் என்றால் நெகிழ்ச்சி மிகுந்த ஒரு கிழவர் என்னும் தோற்றம்தான் நியாபகம் வரும். (திருவருட்செல்வர் திரைப்படத்தில் அப்படித்தானே depict செய்திருக்கிறார்கள்). அப்படிப் பார்த்த அப்பரை ஒரு அகோரியாக ‘நான் கடவுள்’ படத்தில் வரும் ஆர்யாவின் பாத்திரம் எடுத்த கோலத்தில் கற்பனை செய்து பார்த்தால் எப்படி இருக்கும்? பயங்கரம் ஐயா.

தமிழர்கள் வானில் உடுக்கள் மீன்கள் ஓரைகள் ஆகியவற்றின் இயக்கங்களையும் அமைப்பையும் அவதானித்து அவற்றைப் பதிவுசெய்து வைத்தனர். பருவநிலை மாற்றங்களுடன் அவற்றுக்குள்ள தொடர்பை ஆய்ந்தனர். விண்மீன் கூட்டங்களை (அண்டங்கள் / உடுத்திரள் / விண்மீன் திரள் / Galaxy) அவதானித்து அவற்றிற்குக் குறியீடுகளாகப் படங்களை வரைந்து வைத்தனர். சூரியக் குடும்பத்தைச் சுற்றி அவதானிக்கப்பட்ட விண்மீன் கூட்டங்களின் தொகுப்பை ஓரை மண்டலம் (Zodiac) என்று அழைக்கிறோம். அவ்வாறு உலகெங்கிலும் பல இடங்களில் அவதானிக்கப்பட்ட ஓரை மண்டலத்தில் பன்னிரு உடுத்திரள்களுக்குப் பன்னிரு அடையாளங்கள் இட்டு அழைத்தார்கள். அவை:
Aries – மேஷம் (கிடா ஆடு)
Taurus – ரிஷபம் (காளை)
Gemini – மிதுனம் (இரட்டையர்)
Cancer – கடகம் (நண்டு)
Leo – சிம்மம் (அரிமா)
Virgo – கன்னி (குமரி)
Libra – துலாம் (தராசு)
Scorpio – வ்ருட்சிகம் (தேள்)
Sagittarius – தனுஷ் (வில்(வீரன்))
Capricorn – மகரம் (முதலை)
Aquarius – கும்பம் (குடம்)
Pisces – மீனம் (மீன்)

விண்மீன் திரளை நியாபகம் வைத்தல் எளிதாக இருக்கும் பொருட்டு இவ்வாறு குறியீட்டுப் படங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. குணா தன் ஆய்வில் சொல்வது என்னவெனில் ஆரியர்கள் இவ்வாறான தமிழரின் வானியல் ஆய்வுத் தரவுகளை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு உடுத்திரளுக்கும் ஒரு வடமொழிப் பெயரைச் சூட்டித் தமது கண்டுபிடிப்பாகத் தம்பட்டம் அடித்துக்கொண்டார்கள். அது மட்டுமல்லாது அவற்றின் குறியீட்டுப் படங்களை வைத்துப் புராணக்கதைகளை உருவாக்கிக் கொண்டார்கள். (அப்படித்தான் சிம்மம் பராசக்திக்கு வாகனமாகவும் ரிஷபம் சிவனுக்கு வாகனமாகவும் கொடுக்கப்பட்டதாம்). பின்னர் இவற்றை ராசிகள் என்று சொல்லி ஜாதக அமைப்புக்கேற்ப ஒருவனுக்கு இன்ன ராசி என்று உண்டாக்கி ராசி பலன் சொல்லும் ஜோதிடக் கலையை உருவாக்கினார்கள் என்றும் இதன் நீட்சியாக நாம் விளங்கிக் கொள்ளலாம்.

இதையெல்லாம் பின்னணியாக வைத்துத்தான் காலண்டர்களை உருவாக்கினார்கள். பூமிக்கான காலண்டர் நமக்குத் தெரியும். பூமி தன்னைத் தானே சுற்றிக்கொள்ளும் காலம் ஒரு நாள் (அது 24 மணிநேரம்) என்பதிலிருந்து பூமி சூரியனைச் சுற்றி வரத் தோராயமாக 365 நாட்கள். அது ஓர் ஆண்டு. இதே போல் ஒவ்வொரு கிரகத்திற்கும் அதனதன் அளவுக்கேற்பவும் சுழற்சி வேகத்திற்கேற்பவும் நாள் கணக்கும் ஆண்டுக் கணக்கும் பூமியின் கால வர்த்தமானத்தை அளவுகோலாகக் கொண்டு கணிக்கப்பட்டன. அவர்க்ளின் பார்வை இத்துடன் நிற்கவில்லை. பிற உடுத்திரள்களின் இயக்கத்திற்கும் காலக் கணிப்புச் செய்ய முனைந்திருக்கிறார்கள். சூரியனின் சுழற்சியையும் நீள்வட்டத்தில் அது சுற்றுவதையும் அவதானித்து அதற்கான காலக்கணக்கையும் அளந்துள்ளார்கள். அப்படித்தான் சூரிய ஆண்டு என்னும் கணக்கும் யுகம் என்னும் கோட்பாடும் உண்டானது.

நிலா, பூமி, பிற கோளங்கள், சூரியன், விண்மீன் திரள்கள் ஆகியவற்றின் இயக்கங்களை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு இந்தக் காலக் கணக்குகள் உருவாக்கப்பட்டன. பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியன் நடுப்பகலில் தொடுவானத்திற்கு மேல் எவ்வளவு உயரக்கோணத்தில் இருக்கிறது என்பதை ஆராயும்போது அது ஒரே உயரக்கோணத்தில் நில்லாமல் மேலேருவதும் கீழிறங்குவதுமாக இருப்பதைக் கண்டனர். அவ்வாறு இறைங்கிக்கொண்டே வரும் சூரியன் வருடத்தில் ஒருநாள் அதன் கீழிறக்க எல்லையை எட்டுகிறது. அந்த நாளில் தொடுவானத்திலிருந்து சற்றே மேலெழுந்தது போல் மட்டும் சூரியன் தென்படும். அந்த நாளை குளிர்காலக் கதிர்த்திருப்பம் (Winter Solstice) என்று சொல்கிறார்கள். இந்நாளில்தான் அவ்வருடத்தின் மிகக் குறைவான பகற்பொழுது நிகழ்கிறது. இதே போல் கோடை காலத்தில் ஒருநாளில் அவ்வருடத்தின் மிக நீண்ட பகற்பொழுது இருக்கும். அதனைக் கோடைக் கதிர்த்திருப்பம் (Summer Solstice) என்கிறார்கள்.

யுகக் கணக்கு என்று சொன்னேன் அல்லவா? அதைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். இந்து மதத்தில் நான்கு யுகங்கள் குறிப்பிடப்படுகின்றன. இந்துப் பிரபஞ்சவியலின்படி இந்தப் பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து அழியும் (ஒடுங்கும்) வரை உள்ள காலச் சுழற்சி நான்கு யுகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: சத்ய யுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம். நாம் இப்போது கலியுகத்தில் வாழ்கிறோம். (கலி என்றால் இருள் என்று பொருள்). நான்கு யுகங்களும் சேர்ந்து பிரம்மனின் ஒரு நாள். பிரம்மன் தன் ஒவ்வொரு நாளிலும் பிரபஞ்சத்தை வெளிப்படுத்திப் பின் மீண்டும் தன்னுள் ஒடுக்கிக் கொள்கிறார் எனப்படுகிறது. இது மனிதனின் கற்பனைப் புலனை அதன் எல்லைக்குக் கொண்டு செல்வதை ஒருவர் உணரலாம். பிரபஞ்சம் எத்தனைப் பெரியது என்று இன்னும் அளந்துபார்க்க எவராலும் இயலவில்லை. அந்தப் பிரபஞ்சமே பிரம்மனின் ஒரு மூச்சுதான்! எனில், பிரம்மன் எத்தனைப் பெரியன். அவன் அமர்ந்திருப்பது ஒரு தாமரையில் எனில் அது எத்தனைப் பெரிது. அந்தத் தாமரையின் தண்டு முளைத்து நிற்பது விஷ்ணுவின் நாபிக்குழியிலிருந்து என்னும் போது விஷ்ணு எத்தனைப் பெரியன். அவன் அறிதுயில் கொண்டு படுத்திருக்கும் அந்தப் பாற்கடல் என்பது எத்தனைப் பெரிது? அது எது? என்று கற்பனையை விரிவாக்கிக் கொண்டே போகும்.

பிரம்மம் (பிரம்மன் அல்ல) இந்தப் பிரபஞ்சத்தைப் படைக்கும் செயல் பற்றி முண்டக உபநிஷதம் பேசும்போது சிலந்தியை உதாரணம் காட்டுகிறது. அது தன் வலையைப் பின்னுவதற்குத் தன் வயிற்றுக்குள்ளிருந்தே இழையை எடுக்கிறது. பிறகு அந்த இழையை மீண்டும் தன் வயிற்றுக்குள்ளேயே ஒடுக்கிக் கொள்கிறது. அது போல் இந்தப் பிரபஞ்சம் பிரம்மத்திலிருந்து வெளிப்பட்டு பிரம்மத்திற்குள்ளேயே ஒடுங்கி விடுகிறது.

ஆனால் நான்கு யுகங்களின் கால அளவு எவ்வளவு என்பதில் ஒருமித்த கருத்து இல்லை. மனுசாஸ்திரம், ஸ்ரீமத் பாகவதம் போன்றவற்றில் சொல்லப்பட்டிருக்கும் கால அளவுகள் மிகவும் வேறுபட்டுள்ளன. சத்ய யுகம் என்பது நாற்பத்து நான்கு லட்சம் வருடங்கள் என்றும் பதினேழு லட்சம் வருடங்கள் என்றும் குறிப்புக்கள் உள்ளன. கலியுகத்திற்கு நான்கு லட்சம் வருடம் முதல் சில ஆயிரம் வருடங்கள் என்பது வரை வேறுபாடான கணக்குகள் சொல்லப்படுகின்றன. எதை வைத்துக் கணக்கிட்டார்களோ அவர்களுக்குத்தான் வெளிச்சம். நான்கு யுகங்களுக்கும் ஒரே காலக் கணக்குத்தான், ஒவ்வொன்றுக்கும் ஒருலட்சத்து இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் என்று ஏதோ ஒரு நூலில் படித்திருக்கிறேன். இக்கணக்கு பரவாயில்லை என்று தோன்றுகிறது!

இந்து மரபில் உள்ளது மாதிரி மாயன் காலண்டரிலும் யுகம் பற்றிய குறிப்பு உள்ளது. ஒரு நாளை அவர்கள் கின் என்று அழைத்தனர். ஏழு நாட்கள் என்பது ஒரு வாரம் அல்லது முப்பது நாட்கள் என்பது ஒரு மாதம் என்பதைப்போல் இருபது நாட்கள் (20 கின்கள்) என்பது ஒரு வினால். 360 நாட்கள் = 18 வினால் = 1 டுன் (அதாவது ஒரு சூரிய ஆண்டு) இருபது சூரிய ஆண்டுகள் (7200 நாட்கள்) என்பது ஒரு கடுன். 394 ஆண்டுகள் (20 கடுன் = 1,44,000 நாட்கள்) என்பது ஒரு பக்துன். 7885 ஆண்டுகள் (20 பக்துன் = 28,80,000 நாட்கள்) என்பது ஒரு பிக்துன். 1,57,704 ஆண்டுகள் (20 பிக்துன் = 1,76,00,000 நாட்கள்) என்பது ஒரு கலப்துன். 31,54,071 ஆண்டுகள் (20 கலப்துன் = 1,15,20,00,000 நாட்கள்) என்பது ஒரு கின்ச்சில்துன். 6,30,81,429 ஆண்டுகள் (20 கின்ச்சில்துன் = 23,04,00,00,000 நாட்கள்) என்பது ஒரு அலவ்துன். இதுதான் மாயன் நாகரிகத்தினர் வகுத்து வைத்த காலக் கணக்கு.

மாயன் நாகரிகத்தினரின் காலண்டர் கணக்கு நிலவின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. Lunar Calendar. அரபிகளின் காலண்டரும் சங்க காலத் தமிழரின் காலண்டரும் நிலாக் காலண்டர்களே.

சூரியன் உடுத்திரளின் மையப்புள்ளியில் பொருந்தும் நிகழ்வு என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மீண்டும் மீண்டும் நிகழும். அந்தக் காலகட்டத்தை மாயன் நாகரிகம் 5125 ஆண்டுகள் என்று கணக்கிட்டது. இதனை ஒரு சூரிய சுழற்சி என்று சொல்கிறார்கள். மாயன் வானியலறிஞர்கள் இந்தக் காலகட்டத்திற்கு முன் நான்கு சூரிய சுழற்சிகள் நடந்திருப்பதாக நம்பினார்கள். இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பது சூரியனின் ஐந்தாம் சுழற்சிப் பயணம். இந்த சுழற்சி தொடங்கியது கி.மு.3114-ல் என்பது மாயன் கணக்கு. அவ்வருடத்திலிருந்து ஆரம்பிக்கிறது மாயன் காலண்டர். அதன்படி ஐந்தாம் சூரிய சுழற்சியின் முடிவு 21, டிசம்பர் 2012 வெள்ளிக்கிழமை அன்று நிகழ்கிறது. 22 டிசம்பர் 2012-ல் இருந்து சூரியனின் ஆறாம் சுழற்சி தொடங்குகிறது. இது ஒரு யுகம் முடிந்து புதிய யுகம் பிறப்பதைக் குறிக்கிறது. (சனிக்கிழமையில் ஆரம்பிப்பதால் ‘ஐயோ உலகத்துக்கே சனி பிடிக்கிறது!’ என்று யாரேனும் பதறினால் ஒன்றும் சொல்வதற்கில்லை)

புதிய யுகம் பிறப்பதை மகிழ்ச்சியாக வரவேற்கலாம். கி.பி.2000 வருடப்பிறப்பில் – புத்தாயிரம் பிறக்கிறது என்று ஒரே கூச்சலாக இருந்தது – ஏதோ ஒரு தொலைகாட்சியில் என் பாட்டிகூட டைட்டானிக் பார்த்து புத்தாயிரத்தை வரவேற்று மகிழ்ந்தார்! நான் நிம்மதியாக உறங்கி வரவேற்றேன். (அப்போது எனக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லை). அதைப் போல் ஏதாவது செய்யலாம். நல்ல காஃபி குடிக்கலாம். இனிய இசை கேட்கலாம். தியானத்தில் இருக்கலாம். இப்படி ஏதாவது நல்ல காரியங்களில் ஈடுபடலாம். (ஆனால் நம் ஆட்கள் கேட்க மாட்டார்கள். டாஸ்மாக்கில் ஃபுல் ஏற்றிக்கொண்டு நடுரோட்டில் ரகளை செய்வது. போலீசிடம் வம்பிழுத்து ஜட்டியுடன் லாக்கப்பில் பம்மி அமர்ந்தபடி லத்தியடி வாங்குவது. ரோட்டில் பைக் ஸ்ட்ண்ட்ஸ் செய்து விபத்தாகி எலும்பை முறித்துக் கொண்டு தினத்தந்தியின் லோக்கல் பக்கத்தில் டப்பா செய்தி ஆவது. இப்படித்தான் ஏதாவது செய்ய நாடுகிறார்கள். ’தமிழர் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு’ – சும்மாவா சொன்னார், தமிழ்நாட்டின் முதல் ஜால்ரா கவிஞர்?)

இவ்வாறான ஒரு வானியல் நிகழ்வின் மீது மனிதர்கள் ஏகப்பட்ட அறுதி விளைவியல் நம்பிக்கைகளை (eschatological beliefs) உருவாக்கிவிட்டார்கள். உலகம் அழியப்போகிறது. பூமியின் மீது நிபுரு என்றொரு விண்கல் மோதி அழிக்கப் போகிறது. யுக மாற்றத்தால் மனிதர்களிடம் அதிரடியான உடலியல் மற்றும் ஆன்மிக மாற்றங்கள் உண்டாகப் போகின்றன. (என்ன கொம்போ வாலோ முளைத்துவிடுமா? நாம் வைத்திருக்கும் ஆடைகளெல்லாம் பொருந்தாமல் போய்விட்டால் என்னாவது? அல்லது அரவிந்தர் சொன்னது போல் நாமெல்லாம் அதிமனிதர்கள் ஆகிவிடுவோமா?) இம்மாதிரியான வதந்திகள் உண்டாக்கும் குறுகிய கால பரபரப்பில் நிறைய பிசினஸ் செய்துவிடலாம், குறிப்பாக பொழுதுபோக்கு, ஆன்மிகம், ஜோதிடம் ஆகிய துறைகளில். பிறகு ஒன்றுமே நிகழாமல் போனதும் சிரித்துக் கொண்டே அடுத்த பரபரப்பிற்கு நகரலாம். சென்ற ஞாயிறு அன்று சகதர்மினி மற்றும் பிள்ளைகளுடன் மதுரை விஷால்-டி மாலில் 7D தியேட்டரில் மாய எதார்த்த படம் பார்த்தேன். பதினைந்து நிமிட சாகசப் பயணப் படம் முடிந்து பாதுகாப்பு பெல்ட்டை அவிழ்த்துக் கொண்டு சீட்டிலிருந்து இறங்கி ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்தபடி அடுத்து டாஷிங் கார்  என்று நகர்ந்து சென்றோம். அதுதான் இங்கே உலகளாவிய நிலையில் நடந்து கொண்டிருக்கிறது. பிரபஞ்சமே பரம்பொருளின் திருமேனி என்று பார்க்கக் கற்றுத்தந்தது வைணவம். பிரபஞ்சமே இறைவனின் வெளிப்பாட்டுத் தளம் என்பது சூஃபிப் பார்வை. இன்று பிரபஞ்சமே ஒரு பொழுதுபோக்குத் தியேட்டராகிவிட்டது.

உலகில் தொன்மையான நாகரிகங்களின் வானியல் ஆய்வுகளைப் பார்க்கும்போது, அதில் என்னை வியப்பில் ஆழ்த்தும் ஒரு விஷயம் அவர்களின் பார்வை சூரியக் குடும்பம் என்னும் எல்லையையும் தாண்டி ஓரைகளின் இயக்கம் வரை போயிருப்பதுதான். அவற்றின்மீது புராணக் கற்பனைகளும் ஜோதிட நம்பிக்கைகளும் ஏற்றப்பட்டிருக்கலாம். அவற்றை விலக்கி அந்த வானியல் அவதானங்களை நான் பெருமதிப்புடன்தான் பார்க்கிறேன். ஆனால் இதை இங்கே யாரிடமாவது பேசிப் பகிர்ந்துகொள்ள முடிகிறதா? அதற்கான ஆள் கிடைப்பது அபூர்வம்.

பேராசிரியர் ஒருவர் சொன்னார், ’21-ஆம் தேதி உலகம் அழியும் என்பது வெத்துப் புரளி. அதன் உண்மையான காரணம் என்னவென்று நான் அறிந்துகொண்டேன். மாயன் என்பவர் காலண்டரை கணித்து எழுதிக்கொண்டு வந்தார். 21 டிசம்பர் 2012 வரைக்கும் எழுதிவிட்டார். அந்த நிலையில் அவர் மரணித்துவிட்டார். (வேறென்ன, மாஸ்ஸிவ் ஹார்ட் அட்டாக்காக இருக்கும். அவர் செய்த வேலைக்கு வரவேண்டியதுதான்!) எனவே அந்தக் காலண்டர் அந்த தேதியுடன் பாதியில் நின்று போய்விட்டது. அதனால் அன்று உலகம் அழியப்போகிறது என்று திரித்துக் கூறிவிட்டார்கள்.” இந்தக் கதை கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருந்ததால் நான் அந்த நண்பரிடம் எதுவும் மறுத்துச் சொல்லவில்லை. அவர் சொன்ன கதைக்கு “கடைசியில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம் மச்சி” என்று பெயர் சூட்டி என் நினைவில் பதித்துக் கொண்டேன்.

“பண்டைய கால நாகரிகங்களில் வானியல் ஆய்வுகள் தொடர்ச்சியாக நிகழ்ந்திருக்கின்றன. பன்னிரண்டு ராஷிகள் என்னும் ஓரைகள்...” என்று பேசத்தொடங்கினால் சிலரின் முகத்தில் பொங்கும் எகத்தாளத்தைப் பார்க்கவேண்டுமே, நான் ஏதோ மூடநம்பிக்கைகள் மூழ்கிப்போய்ப் பேத்திக் கொண்டிருக்கிறேன் என்பது போல் பார்ப்பார்கள். “ராசியாவது மண்ணாங்கட்டியாவது. அதெல்லாம் சுத்தப் பேத்தல் சார். இப்படிப் பேசினால் ஈமான் (இறைநம்பிக்கை) போய்விடும்” என்று ஒருமுறை எதிர்வினையே வந்தது. நான் பேசிக்கொண்டிருப்பது தூய வானியல்; அவன் அதை சோதிடம் பேசுகிறேன் என்று விளங்கிக்கொண்டு அப்படிக் கூறினான். கோளாறுகள்தான் நம்முடைய வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்ற மூடநம்பிக்கை எனக்கும் இல்லைதான். அதற்காக வானியலையும் அதைக் கண்டறிந்த ஓர் அறிவார்ந்த மரபையும் நான் முற்றாக நிராகரிக்க மாட்டேன். (கோளாறு என்னும் சொல்லே சோதிடச் சொல்தான். கோள்+ஆறு அதாவது கோளின் வழி. ஸ்கூட்டர் கிளம்பவில்லை. இப்படியும் அப்படியும் சாய்த்துப் பார்த்தும் குலுக்கிப் பார்த்தும் ஸ்டார்ட் ஆகவில்லை. இதைப் பார்க்கும் ஒருவர் “என்ன சார், வண்டி கோளாறா?” என்று கேட்கிறார் எனில், கிரகங்களின் இயக்க விளைவால்தான் இங்கே ஸ்கூட்டர் கிளம்ப மறுக்கிறது என்று அர்த்தம்!)

கோள் ஆறுகளால், கிரக நிலைகளால் இயக்கங்களால் நம் வாழ்வு தீர்மானிக்கப் படுகிறது என்னும் நம்பிக்கை இந்து ஞானிகளிக்கேகூட கிடையாது. எல்லா நாட்களும் எல்லா நேரங்களுமே உண்மையான இறை அடியார்களுக்கு நல்ல நாளும் நேரங்களும்தான் என்று திருஞானசம்பந்தர் கூறுகிறார் (’ஆசறு நல்ல நல்ல அவை நல்ல அடியார்க்கு மிகவே’). “நாளும் கோளும் என் செய்யும்?” என்று நாஸ்திகனா கேட்டான்? பரம பக்தியில் பழுத்த ஆஸ்திகனின் அருள்வாக்கு அல்லவா?

சாதாரண மனிதன் கோள்களால் ஆளப்படுகிறான்
இறைநம்பிக்கையாளனோ கோள்களையே ஆள்கிறான்
என்கிறார் மௌலானா ரூமி.

இதுவரை நாம் பேசிவந்த வானியல் செய்திகள் சில குர்ஆன் வசனங்களை நான் விளங்கிக் கொள்வதற்கு மிகவும் உறுதுணையாக உள்ளவை.

“பாதைகள் உள்ள வானின் மீடு சத்தியமாக” (51:7)

“எல்லாம் தம் வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன” (36:40)

“சூரியன் தன் இலக்கிற்குச் சென்று கொண்டிருக்கிறது
இது மகத்தானவனும் யாவுமறிந்தோனுமாகிய
இறைவன் நிர்ணயித்து விதித்ததாகும்” (36:38)

குறிப்பாக, இறுதியாக நான் குறிப்பிட்டிருக்கும் வசனம் இதுவரை நாம் இக்கட்டுரையில் பேசிய செய்திகளுக்கு முத்தாய்ப்பாக இருப்பதைக் காணலாம். இன்று நவீன மோஸ்தர் பிரச்சாரகர்கள் எல்லாம் கோப்பர்னிகஸ் கலீலியோ போன்றோரின் ஆய்வுகளைக் கொண்டு திருக்குர்ஆனை விளக்கும் ஒரு ட்ரெண்டை உருவாக்கி அப்படிப் பேசுவதுதான் அறிவாளித்தனம் என்றொரு பார்வையை சமுதாயத்தில் உண்டாக்கி வருகிறார்கள். ஆனால் தொல் நாகரிகங்களின் வானியல் ஆய்வுகளைப் பற்றி அவர்கள் வாய்திறப்பதில்லை என்பது வருத்தத்திற்குரியது.

என்னுடைய முனைவர் பட்ட நெறியாளர் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார், ‘யாராவது Quranic Cosmology (குரானியப் பிரபஞ்சவியல்) பற்றி ஆய்வு செய்யவேண்டும். அது ஓர் அருமையான ஃபீல்ட்” என்று. நான் மெய்ஞ்ஞான இலக்கியங்களில் என் ஆய்வை முடித்தேன். அதில் ஒரு பகுதியாகக் குரானியப் பிரபஞ்சவியலைப் பேசவேண்டி வந்தது. குரானிக் காஸ்மாலஜி என்றதும் மிகத் தட்டையான ஒரு பார்வைதான் முஸ்லிம்களில் பெரும்பாலானோரிடம் இருக்கக் காணலாம் – பூமி, அதன்மேல் ஏழு வானங்கள், அதற்கு மேல் குர்ஸி, அதற்கு மேல் அர்ஷ், அதன்மீது அல்லாஹ்! ”பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே” என்று எளிமைப்படுத்தப் பட்ட பார்வையைப் போன்றதுதான் இதுவும். பிரார்த்தனக்கு இத்தகைய எளிமைப் படுத்தப்பட்ட வாசகங்கள் பேருதவியாகும். ஆனால் ஒருவரின் பிரபஞ்சப் பார்வையே அவ்வளவுதான் என்று சுருங்கிப் போகுமெனில் அது மிகவும் பரிதாபமான நிலை.

இப்படிப்பட்ட ஒருத்தனிடம்தான் நான் மாயன் காஸ்மாலஜி, இந்து காஸ்மாலஜி ஆகியவற்றுடன் திருக்குர்ஆன் வசனங்களை ஒப்பிட்டுப் பேச நினைத்து மேலே சொன்னபடியான ஓர் எதிர்வினையை அடைந்தேன். என்ன செய்வது ”கண் என்பது முகத்தில் உள்ள ஒரு பொந்தில் வைக்கப்பட்டுள்ளது. அதில் கறுப்பு முழியும் வெள்ளை முழியும் உள்ளன. அது பார்க்கிறது” –இவ்வளவுதான் ஒரு பாமரனுக்குக் கண்ணைப் பற்றிய அறிவாக இருக்கும். ஆனால் ‘ரெட்டினா என்பது கண்ணில் உள்ளது..” என்று பேச ஆரம்பிப்பவனைப் பார்த்து ‘மடையனே அதெல்லாம் கண்ணில் கிடையாது. உளறாதே’ என்று அவன் சொன்னால் அந்த வாதத்தை என்னவென்பது? 

அஜ்மீர் தர்கா உரூஸில் ஃபக்கீர்கள் பலரும் வருவார்கள். பல சித்து வேலைகளைச் செய்து காட்டிக் கொண்டிருப்பார்கள். அதில் ஒரு க்ரூப் என்ன செய்வார்கள் என்றால், கத்தியை எடுத்துக் கீழிமையில் வைத்து உள்ளே அழுத்தியபடி கண் அப்படியே வெளியே வந்து விழுவதைப் போல் காட்டிக்கொண்டே இன்னொரு கையை உங்களிடம் நீட்டி நியாஜ் (காணிக்கை) கேட்பார்கள். ஐந்தோ பத்தோ நூறோ ஆயிரமோ – உங்கள் வியப்பை அல்லது பயத்தைப் பொருத்து அந்தப் ஃபக்கீருக்கு நீங்கள் கொடுக்கலாம். என்ன, கண்ணில் அப்படியொரு சித்துவேலை செய்யும் அந்த ஃபக்கீருக்கு ஆப்தல்மாலஜிஸ்ட்டின் அறிவு இருக்குமென்றா நினைக்கிறீர்கள்? அவரிடம் போய் ‘பாபா, என் கண்ணில் நீர் கோர்த்திருக்கிறதாம். ஆபரேஷன் செய்யணும்கிறாங்க். நீங்களே செஞ்சுவிடுங்க பாபா” என்று சொல்வீர்களா? அந்தக் கத்தியை வைத்து அவர் பாணியில் ஆப்பரேஷன் செய்தால் என்ன கதியாகும் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? ஆனால் அவர் செய்யும் அந்தச் சித்து வேலையை எந்த ஆப்தால்மஜிஸ்டும் செய்ய மாட்டார். அதுபோல் உண்மையான ஆன்மிகவாதிகள் வெறும் ஜெஸ்டர்ஸோ எண்டர்டெய்னர்ஸோ அல்ல. ”அதிசயங்கள் செய்பவனைப் பார்த்து வியக்காதே. ஒருவர் இறைநேசரா இல்லையா என்பதை மஃரிஃபாவை (இறைஞானத்தை) வைத்து முடிவு செய்யுங்கள்” என்று என் குருநாதர் ஒருமுறை சொன்னார்கள்.

குரானியப் பிரபஞ்சவியல் என்றதும் தவிர்க்க முடியாமல் கவிக்கோ அப்துல் ரகுமானின் ஞாபகம் வருகிறது. இத்துறை சார்ந்து தொடர் கட்டுரை ஒன்றை அவர் சில வருடங்களுக்கு முன் ‘சிந்தனைச் சரம்’ பத்திரிகையில் எழுதிவந்தார். அதில் அவர் சொல்லியிருந்த ஒரு கருத்து படு அபத்தமாக இருந்ததை எண்ணி மிகவும் வியந்தேன். குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் ஏழு வானங்கள் என்பவை பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தின் ஏழு அடுக்குகள்தான் என்று சொல்லியிருந்தார்! ( Troposphere,  Stratosphere, Mesosphere, Thermosphere, Exosphere, Ionosphere and Magnetosphere என்று ஏழு அடுக்குகளைச் சொல்லும் முறையும் உள்ளது என்றாலும் பொதுவாக முதல் நான்கு அடுக்குகள்தான் குறிப்பிடப்படுகின்றன). ஆனால் கவிக்கோ.அ.ர-வின் இந்தக் கருத்து குர்ஆன் வசனங்களுக்கே எதிரானது! எப்படியெனில், ஏழு வானங்கள் என்று திருக்குர்ஆன் குறிப்பிடுவது வளிமண்டலத்தின் ஏழு அடுக்குகளைத்தான் என்று கொண்டால் சூரியனும் சந்திரனும் விண்மீங்களும் ஏனைய கிரகங்களும் எல்லாம் ஏழுவானங்களுக்கு அப்பால் இருக்கின்றன என்றாகிவிடும்! இது, பின்வரும் திருவசனங்களுக்கு உடன்படாத கருத்தாக இருப்பதைக் காணலாம்:

”நிச்சயமாக நாம் பூமிக்கு சமீபத்தில் இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அலங்கரித்திருக்கிறோம்” (37:6)
“நிச்சயமாக நாமே சமீபத்தில் இருக்கும் வானத்தை விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கிறோம்” (67:5)
“உங்களுக்கு மேல் பலமான ஏழு வானங்களையும் உண்டாக்கினோம்.
ஒளிவீசும் விளக்கையும் அமைத்தோம்” (78: 12,13. ஒளிவீசும் விளக்கு என்பது சூரியனைக் குறிக்கும்.)

மட்டுமல்ல, வளிமண்டலத்தின் அடுக்குகள்தான் ஏழு வானங்கள் என்பதற்கு ஒரு காரணமாக அவற்றுக்கு அப்பால் இருப்பது வெட்டவெளி / பாழ் = Space என்பதையும் கவிக்கோ.அ.ர சொல்லியிருந்தார். எனில் இக்கருத்தின்படி ஏழுக்கும் அப்பாலுள்ள அந்த ஸ்பேஸ்தான் குர்ஸி என்றோ அர்ஷு என்றோ சொல்லப்பட வேண்டியிருக்கும். இது இன்னும் பல சிக்கல்களை உண்டு பண்ணிவிடும். அதையெல்லாம் அலசித் தீர்ப்பதற்குள் உலகம் அழிகிறதோ இல்லையோ மண்டை காய்ந்து நாம் செத்துவிடுவோம் என்பது திண்ணம்.

வானியல், பிரபஞ்சவியல் என்பதெல்லாம் உட்டாலக்கடி வேலை அல்ல. இந்த மாயன் காலண்டரையே அதன் நுட்பங்களுடன் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் சில வருடங்களாவது சிரத்தையாகக் கற்க வேண்டியிருக்கும் போலும். உலகில் உண்டான அத்தனை வானியல் மரபுகளையும் அலசுவதற்கெல்லாம் ஆயுள் பரியந்தம் உழைக்க வேண்டும். அதை விட்டுவிட்டு “மூடநம்பிக்கை” என்னும் ரெடிமேட் முத்திரையைக் குத்துவதற்கெல்லாம் ஒரு வெங்காய அறிவும் தேவையில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.