Monday, December 24, 2012

4 கவிதைகள்



களிறு

நைந்து பிரி விடும்
வார்த்தைத் தாம்பு
கொண்டு வருகிறாய்

கட்டிப் போட
இதுதானா கிடைத்ததுனக்கு?

உன்மத்தம் கொண்டு
ஊன்காடு மேயும்
ஜென்மத்தின் களிறு

பிளிறற் பேரோசையில்
மூழ்கி மறையும்
உன் மந்திர முணுமுணுப்பு

a
  


உயிர்ப்பு

கிளையமர் பறவையினும்
சிறகடிக்கும் பறவைதான்
அதிக உயிராமோ?

கூழாங்கல் என்பது
அமர்ந்திருக்கும் பறவை

a



மழைச் சுடர்

மழை பெய்தது
மண்வாசம் கமழ்ந்தது
மனம்
மௌனம் ஆனது

உள்ளுக்குள்
சட்டென்று விழித்துக்கொண்டு
நிறைந்திருந்தது
இக்கவித்துவத்தை
எந்த மொழியிலும்
கவிதை ஆக்கலாகாது
என்னும் பிரக்ஞை

a



வரைதல்

வட்டம் வரைகிறேன்
சதுரமாகின்றது

சதுரமெனில்
வட்டம் அல்லது
வேறெதுவும்

முக்கோணம்
பல கோணமாகும்

பறவையை நினைப்பேன்
புல்லாகும்

விருட்சத்தைக் கற்பனிப்பேன்
விரலின் அசைவில்
சிலந்தியின் வலை
விரிந்து வரும்

வைத்த புள்ளி
கோடு கொள்ளும்

நீளும் கோடு
நிற்குமொரு புள்ளியாய்

இப்படியாய்
நான் வரைய நாடும் எதுவும்
நாடியபடி வருவதில்லை என்பதில்
வரைந்து கொண்டே இருக்கிறேன்
என்றபோதும்
எதையுமே வரைந்ததில்லை நான்.

a


No comments:

Post a Comment