Thursday, December 20, 2012

மாயாண்டி காலண்டர் / MAYAN de CALENDAR



திசம்பர் 21, கி.பி.2012 உலகம் அழியப்போகிறது என்னும் புரளி ஒரு தொத்து வியாதியைப் போல் எங்கும் வியாபித்து எல்லோர் வாயிலும் இதே அருள்வாக்கு ஜெபிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எங்கே வானவர்கள் இவர்களின் நச்சரிப்புத் தாங்காமல் ஆமீன் கூறி உண்மையாகவே உலகம் அழிந்துவிடுமோ என்று தோன்றிற்று. ஏற்கனவே கேன்ஸரில் செத்துக் கொண்டிருக்கும் ஓல்ட் மேன் போலிருக்கும் நம் உலகத்திற்கு மாஸ்ஸிவ் ஹார்ட் அட்டாக் வேறு வரவேண்டுமா?

”வெள்ளிக்கிழமை உலகம் அழிந்து விடுமாமே சார்?” – இன்றுகூட ஒரு மாணவன் கேட்டான். ஏதோ புதுப்படம் ரீலீஸ் ஆகப்போவதைக் கேட்பது போன்று இருந்தது தொனி. ”என்ன தம்பி இப்படிச் சொல்றீங்க? அப்புறம் நம்ம ஏபிஜே அப்துல் கலாம் கண்ட கனவு பலிக்க வேண்டாமா?” என்று கேட்டேன். (கி.பி.2020-ல் இந்தியா வல்லரசாகுமாமே?)
”யார் சொன்னது?” என்றும் கேட்டேன். “எல்லோரும் சொல்லிக்கிறாங்க” என்ற பதிலைத் தொடர்ந்து சில சலசலப்பிற்குப் பின் ஒரு செமிநெர்டிடம் இருந்து பதில் வந்தது “மாயன் காலண்டர் கணக்கு சார்” என்று. பக்கத்தில் இருந்தவன் அவனை ஏதோ விநோத ஜந்துவைப் போல் பார்த்து “அது என்னடா மாயாண்டி காலண்டர்?” என்று வினவினான்.

எனக்கும் மாயன்/ மாயா நாகரிகம் பற்றி மேம்போக்காகத்தான் தெரியும். அது மெஹிகோ (Mexico) நாட்டின் தொன்மையான நாகரிகம். மத்திய அமெரிக்கப் பகுதி முழுக்கப் பரவியிருந்தது. இன்றைய குய்தமாலா, எல்-சல்வதோர், ஹொண்டுராஸ் போன்ற நாடுகள் எல்லாம் பழங்கால மாயன் நாகரிக நிலங்களாக இருந்தவை. மாயன் தொல்குடி அழிந்து மறைந்துவிடவில்லை. அந்த இனத்தவர்கள் இன்றும் மெஹிகோ நிலப்பரப்பெங்கும் வாழ்கிறார்கள். ஸ்பானிஷ் படையெடுப்பும் காலனியாக்கமும் அவர்களை அடிமை கொண்டாலும் அந்தப் பூர்வகுடி மக்கள் தங்களின் நாகரிக அடையாளங்களை முற்றாக இழந்துவிட வில்லை. பெரும்பான்மையான மக்கள் எஸ்பஞோல் பேசுபவர்கள் ஆகிவிட்டாலும் அவர்களுடைய பூர்விக மொழிகளில் ஒன்றும்கூட (Achi) இன்னமும் புழக்கத்தில் உள்ளது.

அவர்களுடைய தொன்மையான் நாகரிகச் சின்னங்களாக இன்று காணக் கிடைக்கும் பிரம்மாண்டமான கட்டிடங்கள் மிகவும் வியப்பூட்டுகின்றன. அரண்மனை, ஆலயங்கள், அரங்குகள் போன்ற அவை வானத்தை நோட்டமிடும் ஆய்வுக்கூடங்களாகவும் இருந்துள்ளன. இவற்றின் காலம் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே தொடங்குகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். உலகின் முதல் நாகரிகம் நாங்கள்தான் என்று அவரவரும் மார்தட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழில் நமக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான செவ்விலக்கியப் பிரதிகள் கிடைக்கின்றன. அந்தப் பிரதிகளில் காணலாகும் வானியல் குறிப்புக்கள் இங்கேயும் வானியல் ஆராய்ச்சிகள் மிகவும் நுட்பமாக நடந்துள்ளதைக் காட்டுகின்றன.

சமீபத்தில் ”சக்கரவாளக்கோட்டம்” என்னும் ஒரு நூலைப் படித்தேன். குணா என்பவர் எழுதியுள்ள அந்த நூலுக்கு ஒரு முனைவர் பட்டமே வழங்கலாம் என்று சொல்லும் வகையில் பழந்தமிழரின் வானியல் ஆய்வுகளை அதில் அலசியிருந்தார். மட்டுமல்லாது பண்டைய எகிப்து நாகரிகத்தில் இருந்த வானியல் ஆய்வுகள், இங்கிலாந்தில் உள்ள ஸ்டோன்ஹென்ஜ் என்னும் தொல் வானியலாய்வுக் கூடம், புதிர் வட்டங்கள், மாயன் நாகரிகத்தின் வானியல் அவதானிப்புக்கள் ஆகியவற்றுடன் எல்லாம் ஒப்பிட்டு விளக்கி அசத்தியிருந்தார். அவர் ஒரு தமிழ்த்தேசியக் கொள்கையாளர். தமிழின மீட்சி பற்றிப் பேசிவருபவர். பழந்தமிழரின் வானியல் ஆய்வுக் கண்டறிதல்களை ஆரியர்கள் குறியீடுகளாக மாற்றி அதன் வழி அவர்களின் மதத்தை வடிவமைத்துத் தமிழரிடையே பரப்பி அடிமை கொண்டார்கள் என்பது அவரின் வாதம். ஐயனார் வழிபாடு சிறுதெய்வ வழிபாடாக மாற்றப்பட்டதும், இந்திர வழிபாடு ஒழிக்கப்பட்டதும் ஆரியரின் சூழ்ச்சி என்னும் கருத்துக்கு அவர் வானியல் ஆய்வுகளை வைத்துப் புராணத்தைக் கட்டுடைப்புச் செய்து விளக்குகிறார். தமிழரின் தாய்த்தெய்வ வழிபாட்டில் குறுக்கிட்டு முக்கண்ணியாய் இருந்த கொற்றவையின் அடையாளங்களை எல்லாம் பறித்து சிவன் என்னும் ஆணாக்கி அவளை அவனின் ஒரு பாகமாய்க் குறுக்கியது ஆரியம் என்னும் குற்றச்சாட்டுக்குச் சங்க இலக்கியங்களில் இருந்தும் சிலப்பதிகாரத்திலிருந்தும் ஆதாரங்கள் காட்டியிருந்தார். பூம்புகாரில் இருந்ததாகச் சிலப்பதிகாரம் உரைக்கும் சக்கரவாளக்கோட்டம் என்பது பண்டைய தமிழரின் வானியல் ஆராய்ச்சிக் கூடமே என்பது அந்நூலின் மையக் கருத்து. எண்பது பக்கங்கள் அளவிலான அந்த ஒல்லி நூலுக்குள் வரிக்கு வரி ஆச்சரியங்கள் கொட்டிக்கிடந்தன.

அந்நூலில் விரவிக்கிடக்கும் ஆச்சரியமான தகவல்களில் ஒன்று அப்பர் என்றழைக்கப்படும் திருநாவுக்கரசரை அவர் அகோரி என்று சொல்லியிருப்பது! கபாலத்தில் ஊனுணவு பெற்றுத் தின்பவர் அவர் என்று குணா குறிப்பிடும் செய்தி அப்பர் பற்றி அதுவரை இருந்த மனப்பிம்பத்துடன் பலமாக மோதிற்று. அப்பர் என்றால் நெகிழ்ச்சி மிகுந்த ஒரு கிழவர் என்னும் தோற்றம்தான் நியாபகம் வரும். (திருவருட்செல்வர் திரைப்படத்தில் அப்படித்தானே depict செய்திருக்கிறார்கள்). அப்படிப் பார்த்த அப்பரை ஒரு அகோரியாக ‘நான் கடவுள்’ படத்தில் வரும் ஆர்யாவின் பாத்திரம் எடுத்த கோலத்தில் கற்பனை செய்து பார்த்தால் எப்படி இருக்கும்? பயங்கரம் ஐயா.

தமிழர்கள் வானில் உடுக்கள் மீன்கள் ஓரைகள் ஆகியவற்றின் இயக்கங்களையும் அமைப்பையும் அவதானித்து அவற்றைப் பதிவுசெய்து வைத்தனர். பருவநிலை மாற்றங்களுடன் அவற்றுக்குள்ள தொடர்பை ஆய்ந்தனர். விண்மீன் கூட்டங்களை (அண்டங்கள் / உடுத்திரள் / விண்மீன் திரள் / Galaxy) அவதானித்து அவற்றிற்குக் குறியீடுகளாகப் படங்களை வரைந்து வைத்தனர். சூரியக் குடும்பத்தைச் சுற்றி அவதானிக்கப்பட்ட விண்மீன் கூட்டங்களின் தொகுப்பை ஓரை மண்டலம் (Zodiac) என்று அழைக்கிறோம். அவ்வாறு உலகெங்கிலும் பல இடங்களில் அவதானிக்கப்பட்ட ஓரை மண்டலத்தில் பன்னிரு உடுத்திரள்களுக்குப் பன்னிரு அடையாளங்கள் இட்டு அழைத்தார்கள். அவை:
Aries – மேஷம் (கிடா ஆடு)
Taurus – ரிஷபம் (காளை)
Gemini – மிதுனம் (இரட்டையர்)
Cancer – கடகம் (நண்டு)
Leo – சிம்மம் (அரிமா)
Virgo – கன்னி (குமரி)
Libra – துலாம் (தராசு)
Scorpio – வ்ருட்சிகம் (தேள்)
Sagittarius – தனுஷ் (வில்(வீரன்))
Capricorn – மகரம் (முதலை)
Aquarius – கும்பம் (குடம்)
Pisces – மீனம் (மீன்)

விண்மீன் திரளை நியாபகம் வைத்தல் எளிதாக இருக்கும் பொருட்டு இவ்வாறு குறியீட்டுப் படங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. குணா தன் ஆய்வில் சொல்வது என்னவெனில் ஆரியர்கள் இவ்வாறான தமிழரின் வானியல் ஆய்வுத் தரவுகளை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு உடுத்திரளுக்கும் ஒரு வடமொழிப் பெயரைச் சூட்டித் தமது கண்டுபிடிப்பாகத் தம்பட்டம் அடித்துக்கொண்டார்கள். அது மட்டுமல்லாது அவற்றின் குறியீட்டுப் படங்களை வைத்துப் புராணக்கதைகளை உருவாக்கிக் கொண்டார்கள். (அப்படித்தான் சிம்மம் பராசக்திக்கு வாகனமாகவும் ரிஷபம் சிவனுக்கு வாகனமாகவும் கொடுக்கப்பட்டதாம்). பின்னர் இவற்றை ராசிகள் என்று சொல்லி ஜாதக அமைப்புக்கேற்ப ஒருவனுக்கு இன்ன ராசி என்று உண்டாக்கி ராசி பலன் சொல்லும் ஜோதிடக் கலையை உருவாக்கினார்கள் என்றும் இதன் நீட்சியாக நாம் விளங்கிக் கொள்ளலாம்.

இதையெல்லாம் பின்னணியாக வைத்துத்தான் காலண்டர்களை உருவாக்கினார்கள். பூமிக்கான காலண்டர் நமக்குத் தெரியும். பூமி தன்னைத் தானே சுற்றிக்கொள்ளும் காலம் ஒரு நாள் (அது 24 மணிநேரம்) என்பதிலிருந்து பூமி சூரியனைச் சுற்றி வரத் தோராயமாக 365 நாட்கள். அது ஓர் ஆண்டு. இதே போல் ஒவ்வொரு கிரகத்திற்கும் அதனதன் அளவுக்கேற்பவும் சுழற்சி வேகத்திற்கேற்பவும் நாள் கணக்கும் ஆண்டுக் கணக்கும் பூமியின் கால வர்த்தமானத்தை அளவுகோலாகக் கொண்டு கணிக்கப்பட்டன. அவர்க்ளின் பார்வை இத்துடன் நிற்கவில்லை. பிற உடுத்திரள்களின் இயக்கத்திற்கும் காலக் கணிப்புச் செய்ய முனைந்திருக்கிறார்கள். சூரியனின் சுழற்சியையும் நீள்வட்டத்தில் அது சுற்றுவதையும் அவதானித்து அதற்கான காலக்கணக்கையும் அளந்துள்ளார்கள். அப்படித்தான் சூரிய ஆண்டு என்னும் கணக்கும் யுகம் என்னும் கோட்பாடும் உண்டானது.

நிலா, பூமி, பிற கோளங்கள், சூரியன், விண்மீன் திரள்கள் ஆகியவற்றின் இயக்கங்களை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு இந்தக் காலக் கணக்குகள் உருவாக்கப்பட்டன. பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியன் நடுப்பகலில் தொடுவானத்திற்கு மேல் எவ்வளவு உயரக்கோணத்தில் இருக்கிறது என்பதை ஆராயும்போது அது ஒரே உயரக்கோணத்தில் நில்லாமல் மேலேருவதும் கீழிறங்குவதுமாக இருப்பதைக் கண்டனர். அவ்வாறு இறைங்கிக்கொண்டே வரும் சூரியன் வருடத்தில் ஒருநாள் அதன் கீழிறக்க எல்லையை எட்டுகிறது. அந்த நாளில் தொடுவானத்திலிருந்து சற்றே மேலெழுந்தது போல் மட்டும் சூரியன் தென்படும். அந்த நாளை குளிர்காலக் கதிர்த்திருப்பம் (Winter Solstice) என்று சொல்கிறார்கள். இந்நாளில்தான் அவ்வருடத்தின் மிகக் குறைவான பகற்பொழுது நிகழ்கிறது. இதே போல் கோடை காலத்தில் ஒருநாளில் அவ்வருடத்தின் மிக நீண்ட பகற்பொழுது இருக்கும். அதனைக் கோடைக் கதிர்த்திருப்பம் (Summer Solstice) என்கிறார்கள்.

யுகக் கணக்கு என்று சொன்னேன் அல்லவா? அதைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். இந்து மதத்தில் நான்கு யுகங்கள் குறிப்பிடப்படுகின்றன. இந்துப் பிரபஞ்சவியலின்படி இந்தப் பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து அழியும் (ஒடுங்கும்) வரை உள்ள காலச் சுழற்சி நான்கு யுகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: சத்ய யுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம். நாம் இப்போது கலியுகத்தில் வாழ்கிறோம். (கலி என்றால் இருள் என்று பொருள்). நான்கு யுகங்களும் சேர்ந்து பிரம்மனின் ஒரு நாள். பிரம்மன் தன் ஒவ்வொரு நாளிலும் பிரபஞ்சத்தை வெளிப்படுத்திப் பின் மீண்டும் தன்னுள் ஒடுக்கிக் கொள்கிறார் எனப்படுகிறது. இது மனிதனின் கற்பனைப் புலனை அதன் எல்லைக்குக் கொண்டு செல்வதை ஒருவர் உணரலாம். பிரபஞ்சம் எத்தனைப் பெரியது என்று இன்னும் அளந்துபார்க்க எவராலும் இயலவில்லை. அந்தப் பிரபஞ்சமே பிரம்மனின் ஒரு மூச்சுதான்! எனில், பிரம்மன் எத்தனைப் பெரியன். அவன் அமர்ந்திருப்பது ஒரு தாமரையில் எனில் அது எத்தனைப் பெரிது. அந்தத் தாமரையின் தண்டு முளைத்து நிற்பது விஷ்ணுவின் நாபிக்குழியிலிருந்து என்னும் போது விஷ்ணு எத்தனைப் பெரியன். அவன் அறிதுயில் கொண்டு படுத்திருக்கும் அந்தப் பாற்கடல் என்பது எத்தனைப் பெரிது? அது எது? என்று கற்பனையை விரிவாக்கிக் கொண்டே போகும்.

பிரம்மம் (பிரம்மன் அல்ல) இந்தப் பிரபஞ்சத்தைப் படைக்கும் செயல் பற்றி முண்டக உபநிஷதம் பேசும்போது சிலந்தியை உதாரணம் காட்டுகிறது. அது தன் வலையைப் பின்னுவதற்குத் தன் வயிற்றுக்குள்ளிருந்தே இழையை எடுக்கிறது. பிறகு அந்த இழையை மீண்டும் தன் வயிற்றுக்குள்ளேயே ஒடுக்கிக் கொள்கிறது. அது போல் இந்தப் பிரபஞ்சம் பிரம்மத்திலிருந்து வெளிப்பட்டு பிரம்மத்திற்குள்ளேயே ஒடுங்கி விடுகிறது.

ஆனால் நான்கு யுகங்களின் கால அளவு எவ்வளவு என்பதில் ஒருமித்த கருத்து இல்லை. மனுசாஸ்திரம், ஸ்ரீமத் பாகவதம் போன்றவற்றில் சொல்லப்பட்டிருக்கும் கால அளவுகள் மிகவும் வேறுபட்டுள்ளன. சத்ய யுகம் என்பது நாற்பத்து நான்கு லட்சம் வருடங்கள் என்றும் பதினேழு லட்சம் வருடங்கள் என்றும் குறிப்புக்கள் உள்ளன. கலியுகத்திற்கு நான்கு லட்சம் வருடம் முதல் சில ஆயிரம் வருடங்கள் என்பது வரை வேறுபாடான கணக்குகள் சொல்லப்படுகின்றன. எதை வைத்துக் கணக்கிட்டார்களோ அவர்களுக்குத்தான் வெளிச்சம். நான்கு யுகங்களுக்கும் ஒரே காலக் கணக்குத்தான், ஒவ்வொன்றுக்கும் ஒருலட்சத்து இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் என்று ஏதோ ஒரு நூலில் படித்திருக்கிறேன். இக்கணக்கு பரவாயில்லை என்று தோன்றுகிறது!

இந்து மரபில் உள்ளது மாதிரி மாயன் காலண்டரிலும் யுகம் பற்றிய குறிப்பு உள்ளது. ஒரு நாளை அவர்கள் கின் என்று அழைத்தனர். ஏழு நாட்கள் என்பது ஒரு வாரம் அல்லது முப்பது நாட்கள் என்பது ஒரு மாதம் என்பதைப்போல் இருபது நாட்கள் (20 கின்கள்) என்பது ஒரு வினால். 360 நாட்கள் = 18 வினால் = 1 டுன் (அதாவது ஒரு சூரிய ஆண்டு) இருபது சூரிய ஆண்டுகள் (7200 நாட்கள்) என்பது ஒரு கடுன். 394 ஆண்டுகள் (20 கடுன் = 1,44,000 நாட்கள்) என்பது ஒரு பக்துன். 7885 ஆண்டுகள் (20 பக்துன் = 28,80,000 நாட்கள்) என்பது ஒரு பிக்துன். 1,57,704 ஆண்டுகள் (20 பிக்துன் = 1,76,00,000 நாட்கள்) என்பது ஒரு கலப்துன். 31,54,071 ஆண்டுகள் (20 கலப்துன் = 1,15,20,00,000 நாட்கள்) என்பது ஒரு கின்ச்சில்துன். 6,30,81,429 ஆண்டுகள் (20 கின்ச்சில்துன் = 23,04,00,00,000 நாட்கள்) என்பது ஒரு அலவ்துன். இதுதான் மாயன் நாகரிகத்தினர் வகுத்து வைத்த காலக் கணக்கு.

மாயன் நாகரிகத்தினரின் காலண்டர் கணக்கு நிலவின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. Lunar Calendar. அரபிகளின் காலண்டரும் சங்க காலத் தமிழரின் காலண்டரும் நிலாக் காலண்டர்களே.

சூரியன் உடுத்திரளின் மையப்புள்ளியில் பொருந்தும் நிகழ்வு என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மீண்டும் மீண்டும் நிகழும். அந்தக் காலகட்டத்தை மாயன் நாகரிகம் 5125 ஆண்டுகள் என்று கணக்கிட்டது. இதனை ஒரு சூரிய சுழற்சி என்று சொல்கிறார்கள். மாயன் வானியலறிஞர்கள் இந்தக் காலகட்டத்திற்கு முன் நான்கு சூரிய சுழற்சிகள் நடந்திருப்பதாக நம்பினார்கள். இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பது சூரியனின் ஐந்தாம் சுழற்சிப் பயணம். இந்த சுழற்சி தொடங்கியது கி.மு.3114-ல் என்பது மாயன் கணக்கு. அவ்வருடத்திலிருந்து ஆரம்பிக்கிறது மாயன் காலண்டர். அதன்படி ஐந்தாம் சூரிய சுழற்சியின் முடிவு 21, டிசம்பர் 2012 வெள்ளிக்கிழமை அன்று நிகழ்கிறது. 22 டிசம்பர் 2012-ல் இருந்து சூரியனின் ஆறாம் சுழற்சி தொடங்குகிறது. இது ஒரு யுகம் முடிந்து புதிய யுகம் பிறப்பதைக் குறிக்கிறது. (சனிக்கிழமையில் ஆரம்பிப்பதால் ‘ஐயோ உலகத்துக்கே சனி பிடிக்கிறது!’ என்று யாரேனும் பதறினால் ஒன்றும் சொல்வதற்கில்லை)

புதிய யுகம் பிறப்பதை மகிழ்ச்சியாக வரவேற்கலாம். கி.பி.2000 வருடப்பிறப்பில் – புத்தாயிரம் பிறக்கிறது என்று ஒரே கூச்சலாக இருந்தது – ஏதோ ஒரு தொலைகாட்சியில் என் பாட்டிகூட டைட்டானிக் பார்த்து புத்தாயிரத்தை வரவேற்று மகிழ்ந்தார்! நான் நிம்மதியாக உறங்கி வரவேற்றேன். (அப்போது எனக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லை). அதைப் போல் ஏதாவது செய்யலாம். நல்ல காஃபி குடிக்கலாம். இனிய இசை கேட்கலாம். தியானத்தில் இருக்கலாம். இப்படி ஏதாவது நல்ல காரியங்களில் ஈடுபடலாம். (ஆனால் நம் ஆட்கள் கேட்க மாட்டார்கள். டாஸ்மாக்கில் ஃபுல் ஏற்றிக்கொண்டு நடுரோட்டில் ரகளை செய்வது. போலீசிடம் வம்பிழுத்து ஜட்டியுடன் லாக்கப்பில் பம்மி அமர்ந்தபடி லத்தியடி வாங்குவது. ரோட்டில் பைக் ஸ்ட்ண்ட்ஸ் செய்து விபத்தாகி எலும்பை முறித்துக் கொண்டு தினத்தந்தியின் லோக்கல் பக்கத்தில் டப்பா செய்தி ஆவது. இப்படித்தான் ஏதாவது செய்ய நாடுகிறார்கள். ’தமிழர் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு’ – சும்மாவா சொன்னார், தமிழ்நாட்டின் முதல் ஜால்ரா கவிஞர்?)

இவ்வாறான ஒரு வானியல் நிகழ்வின் மீது மனிதர்கள் ஏகப்பட்ட அறுதி விளைவியல் நம்பிக்கைகளை (eschatological beliefs) உருவாக்கிவிட்டார்கள். உலகம் அழியப்போகிறது. பூமியின் மீது நிபுரு என்றொரு விண்கல் மோதி அழிக்கப் போகிறது. யுக மாற்றத்தால் மனிதர்களிடம் அதிரடியான உடலியல் மற்றும் ஆன்மிக மாற்றங்கள் உண்டாகப் போகின்றன. (என்ன கொம்போ வாலோ முளைத்துவிடுமா? நாம் வைத்திருக்கும் ஆடைகளெல்லாம் பொருந்தாமல் போய்விட்டால் என்னாவது? அல்லது அரவிந்தர் சொன்னது போல் நாமெல்லாம் அதிமனிதர்கள் ஆகிவிடுவோமா?) இம்மாதிரியான வதந்திகள் உண்டாக்கும் குறுகிய கால பரபரப்பில் நிறைய பிசினஸ் செய்துவிடலாம், குறிப்பாக பொழுதுபோக்கு, ஆன்மிகம், ஜோதிடம் ஆகிய துறைகளில். பிறகு ஒன்றுமே நிகழாமல் போனதும் சிரித்துக் கொண்டே அடுத்த பரபரப்பிற்கு நகரலாம். சென்ற ஞாயிறு அன்று சகதர்மினி மற்றும் பிள்ளைகளுடன் மதுரை விஷால்-டி மாலில் 7D தியேட்டரில் மாய எதார்த்த படம் பார்த்தேன். பதினைந்து நிமிட சாகசப் பயணப் படம் முடிந்து பாதுகாப்பு பெல்ட்டை அவிழ்த்துக் கொண்டு சீட்டிலிருந்து இறங்கி ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்தபடி அடுத்து டாஷிங் கார்  என்று நகர்ந்து சென்றோம். அதுதான் இங்கே உலகளாவிய நிலையில் நடந்து கொண்டிருக்கிறது. பிரபஞ்சமே பரம்பொருளின் திருமேனி என்று பார்க்கக் கற்றுத்தந்தது வைணவம். பிரபஞ்சமே இறைவனின் வெளிப்பாட்டுத் தளம் என்பது சூஃபிப் பார்வை. இன்று பிரபஞ்சமே ஒரு பொழுதுபோக்குத் தியேட்டராகிவிட்டது.

உலகில் தொன்மையான நாகரிகங்களின் வானியல் ஆய்வுகளைப் பார்க்கும்போது, அதில் என்னை வியப்பில் ஆழ்த்தும் ஒரு விஷயம் அவர்களின் பார்வை சூரியக் குடும்பம் என்னும் எல்லையையும் தாண்டி ஓரைகளின் இயக்கம் வரை போயிருப்பதுதான். அவற்றின்மீது புராணக் கற்பனைகளும் ஜோதிட நம்பிக்கைகளும் ஏற்றப்பட்டிருக்கலாம். அவற்றை விலக்கி அந்த வானியல் அவதானங்களை நான் பெருமதிப்புடன்தான் பார்க்கிறேன். ஆனால் இதை இங்கே யாரிடமாவது பேசிப் பகிர்ந்துகொள்ள முடிகிறதா? அதற்கான ஆள் கிடைப்பது அபூர்வம்.

பேராசிரியர் ஒருவர் சொன்னார், ’21-ஆம் தேதி உலகம் அழியும் என்பது வெத்துப் புரளி. அதன் உண்மையான காரணம் என்னவென்று நான் அறிந்துகொண்டேன். மாயன் என்பவர் காலண்டரை கணித்து எழுதிக்கொண்டு வந்தார். 21 டிசம்பர் 2012 வரைக்கும் எழுதிவிட்டார். அந்த நிலையில் அவர் மரணித்துவிட்டார். (வேறென்ன, மாஸ்ஸிவ் ஹார்ட் அட்டாக்காக இருக்கும். அவர் செய்த வேலைக்கு வரவேண்டியதுதான்!) எனவே அந்தக் காலண்டர் அந்த தேதியுடன் பாதியில் நின்று போய்விட்டது. அதனால் அன்று உலகம் அழியப்போகிறது என்று திரித்துக் கூறிவிட்டார்கள்.” இந்தக் கதை கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருந்ததால் நான் அந்த நண்பரிடம் எதுவும் மறுத்துச் சொல்லவில்லை. அவர் சொன்ன கதைக்கு “கடைசியில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம் மச்சி” என்று பெயர் சூட்டி என் நினைவில் பதித்துக் கொண்டேன்.

“பண்டைய கால நாகரிகங்களில் வானியல் ஆய்வுகள் தொடர்ச்சியாக நிகழ்ந்திருக்கின்றன. பன்னிரண்டு ராஷிகள் என்னும் ஓரைகள்...” என்று பேசத்தொடங்கினால் சிலரின் முகத்தில் பொங்கும் எகத்தாளத்தைப் பார்க்கவேண்டுமே, நான் ஏதோ மூடநம்பிக்கைகள் மூழ்கிப்போய்ப் பேத்திக் கொண்டிருக்கிறேன் என்பது போல் பார்ப்பார்கள். “ராசியாவது மண்ணாங்கட்டியாவது. அதெல்லாம் சுத்தப் பேத்தல் சார். இப்படிப் பேசினால் ஈமான் (இறைநம்பிக்கை) போய்விடும்” என்று ஒருமுறை எதிர்வினையே வந்தது. நான் பேசிக்கொண்டிருப்பது தூய வானியல்; அவன் அதை சோதிடம் பேசுகிறேன் என்று விளங்கிக்கொண்டு அப்படிக் கூறினான். கோளாறுகள்தான் நம்முடைய வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்ற மூடநம்பிக்கை எனக்கும் இல்லைதான். அதற்காக வானியலையும் அதைக் கண்டறிந்த ஓர் அறிவார்ந்த மரபையும் நான் முற்றாக நிராகரிக்க மாட்டேன். (கோளாறு என்னும் சொல்லே சோதிடச் சொல்தான். கோள்+ஆறு அதாவது கோளின் வழி. ஸ்கூட்டர் கிளம்பவில்லை. இப்படியும் அப்படியும் சாய்த்துப் பார்த்தும் குலுக்கிப் பார்த்தும் ஸ்டார்ட் ஆகவில்லை. இதைப் பார்க்கும் ஒருவர் “என்ன சார், வண்டி கோளாறா?” என்று கேட்கிறார் எனில், கிரகங்களின் இயக்க விளைவால்தான் இங்கே ஸ்கூட்டர் கிளம்ப மறுக்கிறது என்று அர்த்தம்!)

கோள் ஆறுகளால், கிரக நிலைகளால் இயக்கங்களால் நம் வாழ்வு தீர்மானிக்கப் படுகிறது என்னும் நம்பிக்கை இந்து ஞானிகளிக்கேகூட கிடையாது. எல்லா நாட்களும் எல்லா நேரங்களுமே உண்மையான இறை அடியார்களுக்கு நல்ல நாளும் நேரங்களும்தான் என்று திருஞானசம்பந்தர் கூறுகிறார் (’ஆசறு நல்ல நல்ல அவை நல்ல அடியார்க்கு மிகவே’). “நாளும் கோளும் என் செய்யும்?” என்று நாஸ்திகனா கேட்டான்? பரம பக்தியில் பழுத்த ஆஸ்திகனின் அருள்வாக்கு அல்லவா?

சாதாரண மனிதன் கோள்களால் ஆளப்படுகிறான்
இறைநம்பிக்கையாளனோ கோள்களையே ஆள்கிறான்
என்கிறார் மௌலானா ரூமி.

இதுவரை நாம் பேசிவந்த வானியல் செய்திகள் சில குர்ஆன் வசனங்களை நான் விளங்கிக் கொள்வதற்கு மிகவும் உறுதுணையாக உள்ளவை.

“பாதைகள் உள்ள வானின் மீடு சத்தியமாக” (51:7)

“எல்லாம் தம் வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன” (36:40)

“சூரியன் தன் இலக்கிற்குச் சென்று கொண்டிருக்கிறது
இது மகத்தானவனும் யாவுமறிந்தோனுமாகிய
இறைவன் நிர்ணயித்து விதித்ததாகும்” (36:38)

குறிப்பாக, இறுதியாக நான் குறிப்பிட்டிருக்கும் வசனம் இதுவரை நாம் இக்கட்டுரையில் பேசிய செய்திகளுக்கு முத்தாய்ப்பாக இருப்பதைக் காணலாம். இன்று நவீன மோஸ்தர் பிரச்சாரகர்கள் எல்லாம் கோப்பர்னிகஸ் கலீலியோ போன்றோரின் ஆய்வுகளைக் கொண்டு திருக்குர்ஆனை விளக்கும் ஒரு ட்ரெண்டை உருவாக்கி அப்படிப் பேசுவதுதான் அறிவாளித்தனம் என்றொரு பார்வையை சமுதாயத்தில் உண்டாக்கி வருகிறார்கள். ஆனால் தொல் நாகரிகங்களின் வானியல் ஆய்வுகளைப் பற்றி அவர்கள் வாய்திறப்பதில்லை என்பது வருத்தத்திற்குரியது.

என்னுடைய முனைவர் பட்ட நெறியாளர் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார், ‘யாராவது Quranic Cosmology (குரானியப் பிரபஞ்சவியல்) பற்றி ஆய்வு செய்யவேண்டும். அது ஓர் அருமையான ஃபீல்ட்” என்று. நான் மெய்ஞ்ஞான இலக்கியங்களில் என் ஆய்வை முடித்தேன். அதில் ஒரு பகுதியாகக் குரானியப் பிரபஞ்சவியலைப் பேசவேண்டி வந்தது. குரானிக் காஸ்மாலஜி என்றதும் மிகத் தட்டையான ஒரு பார்வைதான் முஸ்லிம்களில் பெரும்பாலானோரிடம் இருக்கக் காணலாம் – பூமி, அதன்மேல் ஏழு வானங்கள், அதற்கு மேல் குர்ஸி, அதற்கு மேல் அர்ஷ், அதன்மீது அல்லாஹ்! ”பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே” என்று எளிமைப்படுத்தப் பட்ட பார்வையைப் போன்றதுதான் இதுவும். பிரார்த்தனக்கு இத்தகைய எளிமைப் படுத்தப்பட்ட வாசகங்கள் பேருதவியாகும். ஆனால் ஒருவரின் பிரபஞ்சப் பார்வையே அவ்வளவுதான் என்று சுருங்கிப் போகுமெனில் அது மிகவும் பரிதாபமான நிலை.

இப்படிப்பட்ட ஒருத்தனிடம்தான் நான் மாயன் காஸ்மாலஜி, இந்து காஸ்மாலஜி ஆகியவற்றுடன் திருக்குர்ஆன் வசனங்களை ஒப்பிட்டுப் பேச நினைத்து மேலே சொன்னபடியான ஓர் எதிர்வினையை அடைந்தேன். என்ன செய்வது ”கண் என்பது முகத்தில் உள்ள ஒரு பொந்தில் வைக்கப்பட்டுள்ளது. அதில் கறுப்பு முழியும் வெள்ளை முழியும் உள்ளன. அது பார்க்கிறது” –இவ்வளவுதான் ஒரு பாமரனுக்குக் கண்ணைப் பற்றிய அறிவாக இருக்கும். ஆனால் ‘ரெட்டினா என்பது கண்ணில் உள்ளது..” என்று பேச ஆரம்பிப்பவனைப் பார்த்து ‘மடையனே அதெல்லாம் கண்ணில் கிடையாது. உளறாதே’ என்று அவன் சொன்னால் அந்த வாதத்தை என்னவென்பது? 

அஜ்மீர் தர்கா உரூஸில் ஃபக்கீர்கள் பலரும் வருவார்கள். பல சித்து வேலைகளைச் செய்து காட்டிக் கொண்டிருப்பார்கள். அதில் ஒரு க்ரூப் என்ன செய்வார்கள் என்றால், கத்தியை எடுத்துக் கீழிமையில் வைத்து உள்ளே அழுத்தியபடி கண் அப்படியே வெளியே வந்து விழுவதைப் போல் காட்டிக்கொண்டே இன்னொரு கையை உங்களிடம் நீட்டி நியாஜ் (காணிக்கை) கேட்பார்கள். ஐந்தோ பத்தோ நூறோ ஆயிரமோ – உங்கள் வியப்பை அல்லது பயத்தைப் பொருத்து அந்தப் ஃபக்கீருக்கு நீங்கள் கொடுக்கலாம். என்ன, கண்ணில் அப்படியொரு சித்துவேலை செய்யும் அந்த ஃபக்கீருக்கு ஆப்தல்மாலஜிஸ்ட்டின் அறிவு இருக்குமென்றா நினைக்கிறீர்கள்? அவரிடம் போய் ‘பாபா, என் கண்ணில் நீர் கோர்த்திருக்கிறதாம். ஆபரேஷன் செய்யணும்கிறாங்க். நீங்களே செஞ்சுவிடுங்க பாபா” என்று சொல்வீர்களா? அந்தக் கத்தியை வைத்து அவர் பாணியில் ஆப்பரேஷன் செய்தால் என்ன கதியாகும் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? ஆனால் அவர் செய்யும் அந்தச் சித்து வேலையை எந்த ஆப்தால்மஜிஸ்டும் செய்ய மாட்டார். அதுபோல் உண்மையான ஆன்மிகவாதிகள் வெறும் ஜெஸ்டர்ஸோ எண்டர்டெய்னர்ஸோ அல்ல. ”அதிசயங்கள் செய்பவனைப் பார்த்து வியக்காதே. ஒருவர் இறைநேசரா இல்லையா என்பதை மஃரிஃபாவை (இறைஞானத்தை) வைத்து முடிவு செய்யுங்கள்” என்று என் குருநாதர் ஒருமுறை சொன்னார்கள்.

குரானியப் பிரபஞ்சவியல் என்றதும் தவிர்க்க முடியாமல் கவிக்கோ அப்துல் ரகுமானின் ஞாபகம் வருகிறது. இத்துறை சார்ந்து தொடர் கட்டுரை ஒன்றை அவர் சில வருடங்களுக்கு முன் ‘சிந்தனைச் சரம்’ பத்திரிகையில் எழுதிவந்தார். அதில் அவர் சொல்லியிருந்த ஒரு கருத்து படு அபத்தமாக இருந்ததை எண்ணி மிகவும் வியந்தேன். குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் ஏழு வானங்கள் என்பவை பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தின் ஏழு அடுக்குகள்தான் என்று சொல்லியிருந்தார்! ( Troposphere,  Stratosphere, Mesosphere, Thermosphere, Exosphere, Ionosphere and Magnetosphere என்று ஏழு அடுக்குகளைச் சொல்லும் முறையும் உள்ளது என்றாலும் பொதுவாக முதல் நான்கு அடுக்குகள்தான் குறிப்பிடப்படுகின்றன). ஆனால் கவிக்கோ.அ.ர-வின் இந்தக் கருத்து குர்ஆன் வசனங்களுக்கே எதிரானது! எப்படியெனில், ஏழு வானங்கள் என்று திருக்குர்ஆன் குறிப்பிடுவது வளிமண்டலத்தின் ஏழு அடுக்குகளைத்தான் என்று கொண்டால் சூரியனும் சந்திரனும் விண்மீங்களும் ஏனைய கிரகங்களும் எல்லாம் ஏழுவானங்களுக்கு அப்பால் இருக்கின்றன என்றாகிவிடும்! இது, பின்வரும் திருவசனங்களுக்கு உடன்படாத கருத்தாக இருப்பதைக் காணலாம்:

”நிச்சயமாக நாம் பூமிக்கு சமீபத்தில் இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அலங்கரித்திருக்கிறோம்” (37:6)
“நிச்சயமாக நாமே சமீபத்தில் இருக்கும் வானத்தை விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கிறோம்” (67:5)
“உங்களுக்கு மேல் பலமான ஏழு வானங்களையும் உண்டாக்கினோம்.
ஒளிவீசும் விளக்கையும் அமைத்தோம்” (78: 12,13. ஒளிவீசும் விளக்கு என்பது சூரியனைக் குறிக்கும்.)

மட்டுமல்ல, வளிமண்டலத்தின் அடுக்குகள்தான் ஏழு வானங்கள் என்பதற்கு ஒரு காரணமாக அவற்றுக்கு அப்பால் இருப்பது வெட்டவெளி / பாழ் = Space என்பதையும் கவிக்கோ.அ.ர சொல்லியிருந்தார். எனில் இக்கருத்தின்படி ஏழுக்கும் அப்பாலுள்ள அந்த ஸ்பேஸ்தான் குர்ஸி என்றோ அர்ஷு என்றோ சொல்லப்பட வேண்டியிருக்கும். இது இன்னும் பல சிக்கல்களை உண்டு பண்ணிவிடும். அதையெல்லாம் அலசித் தீர்ப்பதற்குள் உலகம் அழிகிறதோ இல்லையோ மண்டை காய்ந்து நாம் செத்துவிடுவோம் என்பது திண்ணம்.

வானியல், பிரபஞ்சவியல் என்பதெல்லாம் உட்டாலக்கடி வேலை அல்ல. இந்த மாயன் காலண்டரையே அதன் நுட்பங்களுடன் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் சில வருடங்களாவது சிரத்தையாகக் கற்க வேண்டியிருக்கும் போலும். உலகில் உண்டான அத்தனை வானியல் மரபுகளையும் அலசுவதற்கெல்லாம் ஆயுள் பரியந்தம் உழைக்க வேண்டும். அதை விட்டுவிட்டு “மூடநம்பிக்கை” என்னும் ரெடிமேட் முத்திரையைக் குத்துவதற்கெல்லாம் ஒரு வெங்காய அறிவும் தேவையில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.



3 comments:

  1. தம்பி அ.தௌபீக் ரமீஸ் பிலாலி அவர்களே .....இது மிக மிக அருமையான பதிவு பல காரணங்களினால் ....
    ஏழு வானங்களையும் ஒளிவீசும் விளக்கையும் படைத்தோம் என்கிற குர்ஆன் வசனத்தைப் படிக்கும் போது ஏனோ ஏழு சக்கரங்களையும் அதில் ஒளி வீசும் சக்கரமான அஜ்னா சக்கரத்தையும் / pineal gland பற்றி என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை...அகக்கண் பற்றிய என்னுடைய நீண்டுகொண்டே போகும் தேடலின் விளைவாக இருக்கலாம்.

    ”அதிசயங்கள் செய்பவனைப் பார்த்து வியக்காதே. ஒருவர் இறைநேசரா இல்லையா என்பதை மஃரிஃபாவை (இறைஞானத்தை) வைத்து முடிவு செய்யுங்கள்” என்று உங்கள் குருநாதர் சொல்லி இருப்பதையும், ".....அந்த வானியல் அவதானங்களை நான் பெருமதிப்புடன்தான் பார்க்கிறேன். ஆனால் இதை இங்கே யாரிடமாவது பேசிப் பகிர்ந்துகொள்ள முடிகிறதா? அதற்கான ஆள் கிடைப்பது அபூர்வம்" என்கிற உங்கள் வரிகளையும் படிக்கும் போது ஏனோ உள்ளத்திலே ஒரு இனம்புரியாத வலி தோன்றி மறைந்தது. அது வியப்பான விசயங்களை எந்த வியப்பும் இன்றி விரிவாக பேசிக்கொள்ள ஒரு தோழமை இல்லையே என்கிற என்னுடைய வலியின் வெளிப்பாடாக இருக்கலாம்

    ஒரு நிகழ்வு, அது தொடர்பான பொது விஷயங்கள், அது தொடர்பான திருக்குர்ரான் வசனங்கள், அது தொடர்பான சூபியிச பார்வை என எத்தனை கோர்வையாக எழுதுகிறீர்கள் .....சந்தோசம்.

    பின்குறிப்பு:
    --------------
    1. ஏன் இன்று ஏதும் எழுதவில்லை?
    2. இந்த வாரம் த்கிர் நேரத்திற்கு வரமுடியாமல் போனதற்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  2. Salamalaikum, may i get your mobile number, 24th cming to Trichy, would like to talk to u, if u dont mind, pls send me to dulfiqar@gmail.com, thanks nd regards, AMIsmail

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    அப்பர் என்றழைக்கப்படும் திருநாவுக்கரசரை அவர் அகோரி என்று சொல்லியிருப்பது! கபாலத்தில் ஊனுணவு பெற்றுத் தின்பவர் அவர் என்று குணா குறிப்பிடும் செய்தி இப்படியும் இருக்கலாம் குண்டலினி யோகத்தில் ஞானம் பெற்றவர்களின் கபாலத்தின் வழியாக அமிர்தம் சுரக்கும் அதுவே உணவுக்கு மாற்றாக இருக்கும் உணவு இல்லாமல் வாழ முடியும் என்பது நம்பிக்கை அதை அவர் தவறாக விளங்கி இவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம்
    தங்களின் தளம் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
    வஸ்ஸலாம்
    இப்படிக்கு அப்துல்லாஹ் நிஜாமி

    ReplyDelete