Monday, June 9, 2025

மணமகன் ஆகி வந்தார்

                அண்மையில் முகநூல் பார்த்துக் கொண்டிருந்தபோது திருமண நிகழ்வு ஒன்றின் காணொளி என் கண்ணையும் காதையும் கருத்தையும் கவர்ந்தது. ஹைதரபாத் மாநகரில் நிகழ்ந்த ஒரு திருமண நிகழ்வு அது.

            நான் சார்ந்திருக்கும் ஆன்மிகப் பாதையின் மாபெரும் இறைநேசரான சய்யிதுனா நூரீ ஷாஹ் சிஷ்தியுல் காதிரி (ரஹ்) அவர்களின் பேரப் பிள்ளையும், சய்யிதுனா ஆரிஃபுத்தீன் ஜீலானீ சிஷ்தியுல் காதிரி (ரஹ்) அவர்களின் மகனுமான ஹஜ்ரத் மவ்லானா சய்யித் ஷம்சுத்தீன் ஜீலானீ அலீ பாஷா சாஹிப் (ஹஃபிழஹுல்லாஹ்) அவர்களின் திருமணம் அது.

பூமாலையும் மகுடமும் சூடிய மணமகனை ஊர்வலமாக அழைத்து வரும் காட்சியில் இருந்து திருமண மேடையில் ஏறும் வரையிலான காட்சிகளை அந்தக் காணொளி காட்டிற்று. அதன் பின்னணியில் ஒலித்த கவ்வாலிதான் என் காதையும் கருத்தையும் கவர்ந்தது.

கடந்த முப்பது ஆண்டுகளாக கவ்வாலி கேட்டு வருகிறேன். ஆனால் இந்தப் பாடலை இப்போதுதான் முதன் முறையாகக் கேட்டேன். அது எனக்கு மிகவும் சிலிர்ப்பாக இருந்தது. எளிமையான மெட்டு, பாடகரின் குரலில் ஒரு பாமரத் தன்மை, மெருகின்மை. நுட்பமில்லாத தாளக் கட்டு. ஆனால், இவை எல்லாம் சேர்ந்து அந்தப் பாடலை வேறொரு தளத்திற்குத் தூக்கிச் சென்றுவிட்ட அற்புதம் அதில் நிகழ்ந்திருந்தது. மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டிக் கொண்டே இருந்தது.




அந்தப் பாடல், திருமண நிகழ்வில் மணமகனை வரவேற்பதாக அமைந்துள்ளது. ஆனால் அது ஆன்மிகக் குறியீட்டுப் பாடலாகவும் அமைந்துள்ளது. இறைநேசர் ஆன தன் குருநாதரை சீடர்கள் கூடி வரவேற்பது போன்றும் அதனை அர்த்தப்படுத்த முடிகிறது. அப்படித்தான் கவிஞர் அதனை எழுதியிருக்கிறார். அந்தப் பாடல் “ஹரியாலா பன்னா ஆயா” என்னும் பாடலாகும். அதனை வார்ஸி பிரதர்ஸ் (நஜீர் அஹ்மத் ஃகான் வார்ஸி மற்றும் நஸீர் அஹ்மத் ஃகான் வார்ஸி) பாடியுள்ளனர். அதன் வரிகளின் தமிழாக்கம் பின்வருமாறு:

வந்து பார், என் தோழியே! - யார்

வந்துள்ளான் என்று நீயே பார்.

என் காதலன் வந்துள்ளான் பார் -என்

அழகு இளம் காதலன் வந்துள்ளான்! – பசுங்

கொழுந்து போன்ற காதலன் வந்துள்ளான்! – அரசன்

மணமகனாய் இங்கே வந்துள்ளான்!

 

தன் குலத்தின் செல்வன் வந்துள்ளான்

மணமகனாக இங்கே வந்துள்ளான் – முகத்தில்

பூத்திரை அணிந்து வந்துள்ளான்

சுவனக் கன்னியர் பாடுகின்றார் – மகிழ்ந்து

வானவரும் போற்றிப் பாடுகின்றார்!

 

தோற்றம் முஸ்தஃபாவின் தோற்றம்

பிரகாசம் முர்தழாவின் பிரகாசம்

அனைவர் மீதும் இறைவனின் நிழல்!

அனைவர் மீதும் இறைவனின் நிழல்!

 

கேட்க வேண்டும் என்று வந்தோர் – தம்

மனத்தின் நாட்டத்தை அடைந்துவிட்டார்!

இறைவா! இதெல்லாம் உன் அருளே!

உன் அருளே! இறைவா! உன் அருளே! – இதோ

என் அழகு இளம் காதலன் வந்துவிட்டான்! – அரசன்

மணமகனாய் இங்கே வந்துவிட்டான்!

 

உடலையும் உயிரையும் அர்ப்பணிப்பேன்

எது வந்தாலும் அவனுக்காக ஏற்பேன்

இந்த நாள் இறைவன் உவந்த நாள் – பசுங்

கொழுந்து போன்ற காதலன் வந்துள்ளான்! - அரசன்

மணமகனாய் இங்கே வந்துவிட்டான்!

 

கண்களில் அவன் இருக்கிறான் – இனி

கண்களைக் கவர்பவர் எவருமில்லை

இதயத்தில் அவன் இருக்கிறான் – இனி

இதயத்தை ஈர்ப்பவர் எவருமில்லை

என் குருநாதர் எனக்கு வாய்த்துவிட்டார் - நான்

அருந்திய மது வெளியே எங்கும் கிடைப்பதில்லை!

இப்படி ஓர் அழகு, இறைவன் மீது சத்தியமாக

வேறு எங்குமே இல்லை!

எனக்குக் கிடைத்த அழகுச் சிலை போல்

அவனியில் எங்குமே சிலை இல்லை!

இரு கண்களில் அள்ளிக் கொண்டேன் – அழகு

முகத்தை நானும் அடைந்து கொண்டேன்! – பசுங்

கொழுந்து போன்ற காதலன் வந்துள்ளான்!

மணமகனாய் இங்கே வந்துவிட்டான்!

 

அவன் முகத்தில் பொங்கும் ஒளிச்சுடரில் - முழு

உலகமும் கொண்டாட்டம் காண்கிறதே! - பசுங்

கொழுந்து போன்ற காதலன் வந்துள்ளான்!

மணமகனாய் இங்கே வந்துவிட்டான்!





தீஷான் ஜான்பாஸ் என்பவரால் தற்போது இயற்றி இயக்கப்பட்டு வரும் “தெக்கன் நைட்ஸ்” என்னும் திரைப்படத்தில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது. ஹைதரபாதின் பண்பாட்டு அம்சங்களைப் புலப்படுத்தும் விதமாக உருவாக்கப்படும் இப்படத்தில் இப்பாடல் ஒரு திருமண நிகழ்வில் இடம் பெறுவதாக வைக்கப்பட்டுள்ளது.

இதனை எழுதியவர் யார் என்று தேடிப் பார்த்தபோது, இதற்கே ஒரு மூலப்பாடல் இருப்பதும் அதன் வரிகளைச் சற்றே மாற்றித்தான் கவ்வாலியில் பாடியுள்ளனர் என்றும் தெரிய வந்தது! அதனை எழுதியவர் ஹஜ்ரத் முஹம்மத் அப்துல் கதீர் ஸித்தீக்கி (ரஹ்) என்பவராவார். அவர் எழுதிய பாடல் நபி (ஸல்) அவர்களை வரவேற்பது போல் அமைந்திருக்கிறது.











பெயரை மட்டும் சொன்னால் அன்னாரின் ஆளுமை பற்றி ஒன்றும் தெரியாமல் போய்விடும். ஒரு சிறு அறிமுகமாவது தர வேண்டும். ஹஜ்ரத் முஹம்மத் அப்துல் கதீர் ஸித்தீக்கி (ரஹ்) (1871–1962) அவர்கள் ”பஹ்ருல் உலூம்” (கல்விப் பெருங்கடல்) என்று போற்றப்பட்டவர் ஆவார். இருபத்தெட்டு தலைமுறைகளுக்கு முன் அவரின் தந்தைத் தரப்பிலான குடும்பக் கொடிவழி ஹஜ்ரத் அபூபக்ரு அஸ்-ஸித்தீக் (ரலி) அவர்களுடன் இணைகிறது [அதனால்தான் ஸித்தீக்கி என்று பெயரில் குறிப்பிடப்படுகிறது]; அதுவே தாயின் தரப்பில் முப்பத்திரண்டாம் தலைமுறையில் சய்யிதுனா இமாம் ஹுசைன் (ரலி) அவர்களுடன் இணைந்து அவ்வழியில் அன்னாரின் பாட்டனாரான நபி முஹம்மத் (ஸல்) அவர்களில் இணைகிறது.

பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் அறபி மொழியில் மவ்லவி ஃபாஜில் பட்டமும் ஃபார்சி மொழியில் முன்ஷி ஃபாஜில் பட்டமும் பெற்று முதல் இடத்திற்கான தங்கப் பதக்கங்களும் பெற்றவர். பின்னர் சிறிது காலம் ஹைதராபாதில் “தாருல் உலூம் கல்லூரி”யில் பேராசிரியராகப் பணியாற்றினார். அது, முதலில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிப் பின்னர் உஸ்மானிய்யா பல்கலைக்கழகம் என்று ஆயிற்று. அப்படி அது தனிப்பட்ட பல்கலைக்கழகம் ஆனபோது இறையியல் துறையின் முதல் தலைவராகப் பொறுப்பேற்றார். இருபது ஆண்டுகள் அப்பதவியில் பணியாற்றிய பின்னர் 1932-இல் ஓய்வு பெற்றார்.

தன் தாய்மாமன் ஆன ஹஜ்ரத் சையத் ஃகாஜா முஹம்மத் ஸித்தீக் மஹ்பூபுல்லாஹ் (ரஹ்) அவர்களைத் தன் ஆன்மிக குருவாகக் கொண்டு ஸூஃபி நெறியில் பயணித்தவர். தன் குருவின் மறைவைத் தொடர்ந்து தன் இருபத்து நான்காம் வயதில் குருவாகப் பொறுப்பேற்று, அதன் பின்னரும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று பல்வேறு குருமார்களிடம் ஞானப் பயிற்சிகள் பெற்றுத் தன்னைச் செம்மை ஆக்கிக் கொண்டவர். இவரின் சீடர்களும் கொடிவழியினரும் தங்களை “கதீரி”கள் என்று அழைக்கின்றனர்.

குர்’ஆனுக்கு அவர் எழுதிய விரிவுரையான “தஃப்சீரே ஸித்தீக்கி” என்பது ஆறு பாகங்களாக அமைந்துள்ளது. இவை அன்றி அல்-தவ்ஹீத், ஹிக்மத்தே இஸ்லாமிய்யா, அல்-இர்ஃபான், தஃப்ஹீமாத்தே ஸித்தீக்கி, ஹகீக்கத்தே பைஅத், ஹகீக்கத்தே மிஃ’ராஜ், அல்-ம’ஆரிஃப், சமாஃ முதலிய ஐம்பது நூல்களை எழுதியுள்ளார். இவரின் கஜல் கவிதைகள் “குல்லிய்யாத்தே ஹஸ்ரத்” என்னும் தொகுப்பு நூலாக உள்ளது. 1962-இல் இறந்த இவரின் அடக்கத்தலம் ஹைதராதின் பஹதூர்புரா என்னும் பகுதியில் உள்ள “குல்ஷனே சித்தீக்கி” என்னுமிடத்தில் உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஷவ்வால் 17-ஆம் தேதி அன்னாரின் உரூஸ் என்னும் ஆண்டு வைபவம் நிகழ்த்தப் படுகிறது.












இவர் ”ஹஸ்ரத்” என்னும் புனை பெயரில் கவிதைகள் எழுதியிருக்கிறார். அதில் ஒன்றுதான் கவ்வாலியாகப் பாடப்படும் “ஹரியாலா பன்னா ஆயா” என்னும் பாடலாகும். இது ஹிந்தி மொழியில் எழுதப்பட்டதாகும். [1966-இல் (ஹிஜ்ரி 1386-இல்) ஜனாப் கர்னல் ஹபீப் அலீ ஸாஹிப் கதீரி என்பவரால் பதிப்பிக்கப்பட்ட “குல்லிய்யாத்தே ஹஸ்ரத்” என்னும் நூலில் ‘ஹிந்தி கலாம்’ என்னும் பகுதியில் இப்பாடல் 149-ஆம் பக்கத்தில் அமைந்துள்ளது]. இது தக்கணப் பகுதியில் மிகப் பிரபலமான ஒரு பாடலாக இன்றும் பாடப்பட்டு வருகிறது. தில்லி அரசியாக இருந்த ரஜியா சுல்தானாவின் கதை 1983-இல் இந்தியில் திரைப் படமாக எடுக்கப்பட்டபோது ”ஹரியாலா பன்னா ஆயா” என்னும் முதலடி மட்டும் பல்லவியாக எடுத்தாளப்பட்டு வேறொரு பாடல் எழுதப்பட்டு அப்படத்தில் இடம் பெற்றது. இந்தப் பாடல் எவ்வளவு பிரபலமான ஒன்று என்பதற்கு இது ஒரு சான்று.

 இனி, “ஹஸ்ரத்” எழுதிய “ஹரியாலா பன்னா ஆயா” என்னும் பாடலைக் காண்போம்.

”பசுமையான காதலர் வந்தார்

பெரும் ஆரவாரத்துடன் வைகறையில்”

(ஹரியாலா பன்னா தூம் கஜர் சே ஆயா)

என்று இப்பாடல் தொடங்குகிறது. ”கஜர்” என்பது விடியல் பொழுதில் உறங்கிக் கொண்டிருப்போரை எழுப்பும் பேரொலி ஆகும். காதலனின் வருகை உள்ளத்தின் உறக்கத்தைக் கலைத்து விழிப்பூட்டுவதாக இருக்கிறது. அதாவது, நபியின் வருகை மனித குலத்திற்கு அகக் கண்ணைத் திறப்பதாக உள்ளது.

            ”பெரும் ஆரவாரத்துடன் வந்தாரம்மா

             பசுமையான அழகுக் காதலர்!

             வெகு தூரத்திலிருந்து வந்தாரம்மா - அவர்

            விண்ணேற்றம் முடித்துத் திரும்பி வந்தார்!

                        (படீ தூம் சே ஆயா மா(ன்) ஹரியாலா பன்னா /

                               படீ தூர் சே ஆயா மா(ன்) மிஃராஜி பன்னா)

            நபியின் எதார்த்தம் (ஹகீக்கத்) இறைவனுக்கு மிக நெருக்கமாக இருப்பதாகும். அது படிப்படியாக அனைத்து இறைத்தூதர்களிலும் வெளிப்பட்டு முழுமையான வெளிப்பாடாக முஹம்மத் (ஸல்) அவர்கள் இம்மண்ணில் மனிதராகப் பிறந்தார்கள். எனவேதான் அவர்கள் இறுதி இறைத்தூதராக வந்தார்கள். “தேர் ஆமத் கெ அஸ் தூர் ஆமத்” (தாமதமாக வந்தார்கள், ஏனெனில் வெகு தொலைவில் இருந்து வந்தார்கள்) என்று இதனைச் சொல்வதுண்டு. இவ்வரிகளில், நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் என்னும் விண்ணேற்றம் சென்று வந்த நிகழ்வைக் கவிஞர் பாடுகிறார். இறைவனை தரிசித்த பின் உம்மத் என்னும் தன் சமுதாயத்தின் மீது கொண்ட பாசத்தால் நபி (ஸல்) இம்மண்ணுலகிற்குத் திரும்பி வந்துவிட்டார்கள். இதைப் பற்றி மகாகவி அல்லாமா இக்பால் (ரஹ்) சொல்லும்போது, மாபெரும் ஸூஃபி கவிஞர்களுள் ஒருவரான அப்துல் குத்தூஸ் கங்கோஹி (ரஹ்) அவர்களை மேற்கோள் காட்டுகிறார்: “அறபியான முஹம்மத் (ஸல்) உச்சமான வானத்திற்குச் சென்று திரும்பி வந்துவிட்டார்கள்; இறைவனின் மீது சத்தியம்! அந்த இடத்திற்கு நான் சென்றிருந்தால் ஒருபோதும் திரும்பி வந்திருக்க மாட்டேன்!” இதனை அல்லாமா இக்பால் (ரஹ்) இப்படி விளக்குகிறார்கள்: “ஸூஃபி இலக்கியப் பரப்பு முழுவதிலும், இறைத்தூது (நுபுவ்வத்) மற்றும் இறைநேசம் (விலாயத்) ஆகியவற்றின் பிரக்ஞைகளுக்கு இடையிலான உளவியல் வித்தியாசத்தை வெளிப்படுத்தும் இவ்வளவு கூர்மையான பார்வையைக் காண்பது அரிதாகும்.” (”Six Lectures on the Reconstruction of Religious Thought in Islam”, Lecture-V ‘The Spirit of Muslim Culture’, p.173, The Kapur Art, Lahore, 1930). நபி (ஸல்) அவர்களை, “ரஹ்மத்துல்லில் ஆலமீன்” (அகிலங்கள் அனைத்துக்கும் பேரருள்) என்று இறைவன் வருணிக்கிறான் (குர்’ஆன் 21:107). மிஃராஜ் பயணத்தில் இருந்து நபி (ஸல்) திரும்பி வந்த நிகழ்வும் அதனை உறுதிப்படுத்திவிட்டது. எனவே அது இறை விசுவாசிகள் கொண்டாடும் மகிழ்ச்சியான நிகழ்வாகிவிட்டது.

            ”மக்களே! பாருங்கள் எத்தகைய ஆரவாரம்!

             இங்கே மத்தளம் இப்படி ஒலிப்பதும் ஏன்?

             பாருங்கள்! பாருங்கள்! யார் வந்துள்ளார் என்று;

             இறைநேசர்கள் ஜெய பேரிகை கொட்டுகிறார்!

 பசுமையான காதலர் வந்தார்

             பெரும் ஆரவாரத்துடன் வைகறையில்”

                        (லோகோ! தேக் ஷோர் ஹே கெய்சா / க்யூன் பிகஹ்தா ஹே யான் நக்காரா // தேக்கோ தேக்கோ கோன் ஹே ஆயா / அலீ வலீ நே நஃ’ரா மாரா // ஹரியாலா பன்னா தூமே கஜர் சே ஆயா.)

 

            ”சத்திய இறைவனின் பிரியமான மன்னர் மணமகன்

             சமுதாயத் தலைவர், அனைவருக்கும் வழிகாட்டி,

             என் இதயக் கனி, என் இனிய எஜமான்!

             இறைவனின் அருநிழல், இன்னும் என்ன சொல்ல?

 பசுமையான காதலர் வந்தார்

             பெரும் ஆரவாரத்துடன் வைகறையில்”

                        (ஹக் கா ப்யாரா ராஜ் துலாரா / உம்மத் வாலா சப் கா சஹாரா // மேரா தாலீ மேரா ஆக்கா / க்யா கெஹ்னா ஹே ழில் ஃகுதா கா // ஹரியாலா பன்னா தூமே கஜர் சே ஆயா.)

 

            ”மகத்துவத்தின் மாட்சியாம், கண்ணியத்தின் இருப்பிடமாம்,

             வல்லமையின் ஊடககமாம், பேரருள் உடையவராம்,

             பேரொளியின் திருவுருவாம், நேசத்திற்குரிய நல்வாழ்வாம்,

             அனைவரினும் சிறந்தவராம், அனைவரினும் உயர்ந்தவராம்,

 பசுமையான காதலர் வந்தார்

             பெரும் ஆரவாரத்துடன் வைகறையில்”

                        (ஷானே அழ்மத் மர்கஸே இஜ்ஜத் / மழ்ஹரே குத்ரத் ஸாஹிபே ரஹ்மத் // நூர் கீ ஸூரத் ப்யாரீ சீரத் / சப் சே அஃப்ழல் சப் சே அஃ’லா // ஹரியாலா பன்னா தூமே கஜர் சே ஆயா.)

 

            ”நிச்சயமாக நான்… என்பதன் ஒளியைக் காட்டினார்

             அடியார் ஆகி வந்து இறைவனை நேசித்தார்

             அனைத்தையும் இழந்து அனைத்தையும் அடைந்தார்

             சமுதாயத்தின் தலைவர், அனைவரையும் ஏற்றுக்கொண்டார்!

 பசுமையான காதலர் வந்தார்

             பெரும் ஆரவாரத்துடன் வைகறையில்”

                        (இன்னீ அனா கா ஜல்வா திகாயா / பந்தா பன் கர் ரப் கோ பாயா / சப் குச் கோ கர் சப் குச் பாயா / உம்மத் வாலா சப் கோ சுஹாயா // ஹரியாலா பன்னா தூமே கஜர் சே ஆயா.)

             இந்தப் பாடல் நாயக நாயகி பாவனையில் எழுதப்பட்டுள்ளது. ஒரு கிராமத்துப் பெண்ணின் குரலில் ஒலிக்கிறது. அதுவும், வடநாட்டில் ஹிந்தி பேசும் ஒரு பெண்ணின் குரலில். அதனால்தான் இதில் ’கஜர்’ போன்ற சம்ஸ்கிருத மூலம் கொண்ட சொற்களும் எழுதப்பட்டுள்ளன. இப்படி நபி (ஸல்) அவர்களின் புகழைப் பாடுவதில் இஷ்கே றசூல் என்னும் நபிக்காதல் இந்தியாவுக்கே உரிய பக்தி மரபின் சுவையுடன் அனுபவமாகிறது.

Wednesday, June 4, 2025

ஹோஷ் தர் தம்

 தற்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் ஆன்மிக நூல் ஒன்றின் முதல் அத்தியாயம் இது. ஸூஃபிகள் மேற்கொள்ளும் மூச்சுப் பயிற்சி பற்றிய ஒரு விளக்கம்.











ஹோஷ் தர் தம்

(சுவாசத்தில் சுதாரிப்பாக இருத்தல்)

            ஃபார்சி மொழியில் ”ஹோஷ்” என்றால் சுதாரிப்பு, “தம்” என்றால் மூச்சு. “ஹோஷ் தர் தம்” என்றால் ’மூச்சில் சுதாரிப்பு’ என்று பொருள்.

            உலகில் தோன்றிய ஆன்மிக நெறிகள் அனைத்துமே ஆன்மிகத்தின் அடைப்படை என்று மூச்சையே சுட்டிக் காட்டியுள்ளன. ஆன்மிகத்தில் ஈடுபடும் ஆர்வம் உள்ள ஒவ்வொருவரும் மூச்சின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.

            மூச்சே உயிரின் அடையாளமாக இருக்கிறது. மனித உடலுக்குள் ”ரூஹ்” என்னும் உயிர் இறைவனின் மூச்சாகவே உள்ளே நுழைந்தது என்று குர்’ஆன் உணர்த்துகிறது:

மனிதனை நான் செவ்வையாக்கி அவருக்குள் எனது உயிரில் இருந்து ஊதியதும் நீவிர் அனைவரும் அவருக்குச் சிரம் பணிவீராக!  (குர்’ஆன்: 15:29)

            எனவே, மூச்சு என்பது உயிருடன் இருப்பதன் அடையாளமாக நிகழ்ந்து வருகிறது. உயிர் வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு படைப்பிலும் மூச்சின் இயக்கம் இருக்கிறது.

            மனிதனின் அடிப்படைத் தேவைகள் உணவு உடை உறையுள் என்று மூன்றைச் சொல்கிறோம். ஆனால் இவை மூன்றையும்விட மூச்சே அடிப்படை என்பது உண்மை.

            அடிப்படைத் தேவைகளின் அவசியத்தின் அளவை மதிப்பிட்டால், உறைவிடத்தை விட உடையும், உடையை விட உணவும் மிக அவசியம் என்றாகும்.

பனி மலைகளிலும் புல்வெளிகளிலும் பாலைவனங்களிலும் உலவித் திரிந்த நாடோடி மக்களுக்கு வீடுகள் இல்லை, ஆனால் ஆடைகள் தேவைப்பட்டன. உயிருள்ள தாவர, விலங்கு இனங்களுக்கு ஆடைகள் இல்லை, ஆனால் உணவு தேவைப்படுகிறது. எனவே உணவே ஏனைய இரண்டை விட அதிக அவசியம் என்று அறிகிறோம்.

ஆனால், உண்ண உணவும் குடிக்கத் தண்ணீரும் இல்லாத நிலையில்கூட ஒருவரின் / ஒன்றின் உயிர் சட்டென்று போய்விடாது. மூச்சு ஓடிக் கொண்டிருக்கும் வரை உயிரும் இருக்கிறது.

மூச்சு என்பது ரூஹ் என்னும் உயிருடன் மட்டுமல்லாது நஃப்ஸ் என்னும் மனத்துடனும் தொடர்பு கொண்டுள்ளது. அதையே நாம் ஆன்மா என்றும் அழைக்கிறோம். மனத்தைத் தூய்மையாக்கி வெற்றி பெறுவதே ஆன்மிகம். மனத்தை உயர் நிலைக்குக் கொண்டு போவதே ஆன்மிகம்.

மனத்தைத் தூய்மையாக்கி உயர் நிலை எய்தச் செய்ய மூச்சு என்னும் கருவியை முறைப்படிக் கையாள வேண்டியுள்ளது. இதில் இருந்தே ஆன்மிகத்தில் மூச்சு இன்றியமையாத இடம் பெறுகிறது.

அறபியில் ‘நஃப்ஸ்’ என்னும் சொல் மனத்தையும் ‘நஃபஸ்’ என்னும் சொல் மூச்சையும் குறிக்கிறது. ஒரே வேரில் இருந்தே இவ்விரு சொற்களும் வருகின்றன. இதில் இருந்தே இவ்விரண்டும் தொடர்பு உடையவை என்பதை அறியலாம்.

”காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்று தமிழில் ஒரு பழமொழி உள்ளது. இது ஒரு ஞான வாசகம் ஆகும். வயல்களில் அறுவடை முடிந்து நெல் மணிகளில் இருந்து பதர்களைப் பிரிப்பதற்காக முறத்தில் இட்டுப் புடைப்பார்கள். காற்று வீசும்போதுதான் அதைச் செய்ய முடியும். அதையே இப்பழமொழி குறிக்கிறது என்று பொதுவாக எண்ணுகிறோம். சூழ்நிலை சாதகமாக இருக்கும்போதே ஒரு காரியத்தைச் சாதித்துவிட வேண்டும் என்பதைக் குறிப்பதாகக் கருதுகிறோம். ஆனால் இதில் ஆழ்ந்த பொருள் உள்ளது. “உன் உடலில் மூச்சு ஓடிக் கொண்டிருக்கும்போதே அதில் பயிற்சி செய்யும் முறையை ஒரு குருவிடம் கற்று அதன்படி பயிற்சி செய்து உன் மனத்தைத் தூய்மை ஆக்கிக் கொள்” என்பதே அதன் பொருள் என்று ஸூஃபி மகான் ‘தில்நவாஸ்’ ஃபைஜி ஷாஹ் நூரீ (கத்தசல்லாஹு சிர்ரஹுல் அஜீஸ்) அவர்கள் சொல்கிறார்கள்.







 

ஒவ்வொரு மூச்சிலும் இறைவனை நினைவு கூர்வதை ஸூஃபி நெறியின் புழக்க பாஷையில் (இஸ்திலாஹில்), “பாசே அன்ஃபாஸ்” என்று குறிப்பிடுகிறார்கள். இது ஒரு ஃபார்சி சொற்றொடர் ஆகும். இதன் பொருள் “மூச்சுக்களைப் பாதுகாத்தல்” என்பதாகும். [இதனைப் பாமர வழக்கில் பாசன்பாஸ் என்று கூறுவதும் உண்டு.]

மூச்சு என்பது இறைவனின் மிகப் பெரிய அருட்கொடைகளில் ஒன்றாகும். அதனை வீணாக்காமல் இருப்பதும், அதற்கு நன்றி செலுத்துவதும் மனிதனின் மீது கடமையாக இருக்கிறது. “குலிஸ்தான்” என்னும் நூலின் தொடக்கத்தில் இமாம் சஃ’தி ஷீராஸி (ரஹ்) சொல்கிறார்கள்:

”உள்ளே செல்லும் மூச்சு வாழ்வை அதிகப்படுத்துவதாக உள்ளது. வெளியே வரும் மூச்சு ஜீவனுக்கு சுகம் அளிக்கிறது. எனவே ஒவ்வொரு மூச்சிலும் இரண்டு அருட்கொடைகள் உள்ளன. ஒவ்வொரு அருட்கொடைக்கும் நன்றி செலுத்துவது கடமையாக உள்ளது.”

இந்த நன்றியறிதல் ஒவ்வொரு மூச்சிலும் இறைவனை நினைவு கூர்வதாலேயே நிறைவேற்றப்பட முடியும் என்று ஸூஃபிகள் சொல்கின்றனர்.











இதில் ஒரு நுட்பமும் உண்டு. அருட்கொடை என்பது இறைவன் தன் கருணையால் நமக்கு அருள்வதாகும். அது நம் உழைப்பால் உண்டாவது அல்ல. அவ்விதத்தில், மூச்சு என்பது முழுமையான ஓர் அருட்கொடையே. ஏனெனில், மூச்சு நம் முயற்சி இல்லாமலேயே இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. இதைச் சுட்டிக் காட்டி என் ஷைஃகு நாயகம் அல்லாமா பிலாலி ஷாஹ் ஜுஹூரி (தாமத் பரக்காத்துஹும்) அவர்கள் சொல்கிறார்கள்:

“இரவில் நீ உறங்கும்போது நீயா மூச்சு விடுகிறாய்? நீயே உன்னை மறந்து உறங்கிக் கொண்டிருக்கிறாய்? பிறகு எப்படி நீ மூச்சு விடுவதாகச் சொல்ல முடியும்? உன்னை மூச்சை இயக்குபவன் அல்லாஹ். அவன்தான் காற்றை உள்ளே செலுத்துகிறான், பின்னர் வெளியேறவும் செய்கிறான். இரவில் உன் மூச்சை இயக்குபவன் அல்லாஹ் என்றால், அந்த உன் தேவையை பகலில் உனக்கு நிறைவேற்ற வேறு ஒருவரையா வைப்பான்? அல்லது நீயே நிறைவேற்றிக் கொள் என்றா சொல்வான்? பகலிலும் அந்தத் தேவையை அவனேதான் உனக்கு நிறைவேற்றுவான். எனவே, இருபத்து நான்கு மணி நேரமும் உன்னை மூச்சு விட வைப்பவன் அல்லாஹ்தான். அதனால், ஒவ்வொரு மூச்சிலும் அவனை நீ திக்ரு (தியானம்) செய். விழித்திருக்கும்போது நீ உன் மூச்சில் அவனை திக்ரு செய்தால், நீ தூங்கும்போது உன் மூச்சில் அவனே திக்ரை நடத்தி அதன் பலனை உனக்கு எழுதிவிடுவான்!”

பாசே அன்ஃபாஸ் என்னும் இந்த மூச்சு திக்ரு ஆன்மிகப் பயிற்சியின் அடிப்படை ஆகும். இது செம்மை ஆகாமல் வேறு பயிற்சிகள் நடக்காது. மவ்லானா ரூமி (ரஹ்) கணிச்சி / குந்தாலி (pickaxe) என்னும் கருவியைக் குறியீடாகக் கொண்டு இந்த மூச்சு பயிற்சியை விளக்கியுள்ளார்.[அன்ஃபாஸ் = மூச்சுகள்; ஃபாஸ் = கணிச்சி என்னும் நிலக் கோடரி]. அவர் சொல்கிறார்:

“உன் வீட்டின் அடித்தளத்தில் ஒரு பொக்கிஷம் மறைந்துள்ளது.

எழு, கையில் கணிச்சியை எடுத்துக்கொண்டு வேலையில் இறங்கு.

உன் இந்த பழுதுபட்ட வீட்டின் தரையைப் பெயர்த்து எடு,

உள்ளே மறைந்து கிடக்கும் பொக்கிஷத்தை அடைந்துகொள்.

அந்த மாணிக்கக் கற்களைக் கொண்டு செல்வந்தன் ஆகிவிடு.

இது போல் ஆயிரம் வீடுகளை அது உனக்குப் பெற்றுத் தருமே!

இன்னும் நீ ஏன் இந்த அற்ப வீட்டில் வாழ்கிறாய் என் அன்பே!

கூடிய விரைவில் இவ்வீடு தானகவே விழத்தான் போகிறது;

அப்போது இந்த பொக்கிஷம் வெளிப்பட்டால் அது உனதாய் இராது

நீ இவ்வீட்டை இடிக்கும் வேலையைத் தொடங்கு இக்கணமே

அந்தப் பொக்கிஷம் உன் உழைப்புக்கான சன்மானமே

பிய்ந்து போகும் கூரைக்கு ஒட்டுப் போடுவதையும்

இடிந்து விழும் சுவருக்குப் பூசுவதையும் விட்டுவிடு இப்போதே.

சீக்கிரம்! குந்தாலியைக் கையில் எடுத்து தரையைத் தோண்டு!

ஒட்டுப் போடுதலும் பூச்சு வேலையும் என்பதென்ன?

உண்பதும் குடிப்பதும் ஆகும்.

உன் இந்த உடல் எனும் அங்கி அவ்வப்போது கிழிகிறது,

உணவாலும் இழி மனத்தின் திருப்திகளாலும்

அதை நீ அன்றாடம் ஒட்டுத் தைப்பதில் மூழ்கியுள்ளாய்;

நிலக் கோடரியால் அடித்தளத்தில் ஓரிடத்தைப் பிளந்து பார்,

உன் நிலத்தினுள் மாணிக்கம் ஒன்று சுடர் விடுவதைப் பார்!”

                                                                        (மஸ்னவி ஷரீஃப்)

”அல்லாஹ்” என்னும் திருநாமத்தைக் கொண்டே ஸூஃபிகள் இந்த மூச்சு திக்ரு என்னும் பயிற்சியைச் செய்கின்றனர். “அல்லாஹு அல்லாஹ்” அல்லது “அல்லாஹ் அல்லாஹ்” என்று ஒரு மூச்சு சுழற்சியில் (அதாவது உள்மூச்சு + வெளிமூச்சு) உள்ளத்தால் உச்சரித்து மூச்சை லயப்படுத்தி நிதானமாகச் செய்வதே பாசே அன்ஃபாஸ் என்னும் மூச்சுப் பயிற்சி ஆகும். இதன் தொடர்பாக இரண்டு ஹதீஸ்கள் கவனத்திற்குரியன:

”உலகில் அல்லாஹு அல்லாஹு என்று சொல்லப்படாமல் ஆகும் வரை உலக முடிவு நிகழாது (லா தகூமுஸ் ஸாஅத்து ஹத்தா லா யுகால ஃபில் அர்ளி அல்லாஹு அல்லாஹு).” (சஹீஹ் முஸ்லிம் #148-அ)

”அல்லாஹு அல்லாஹு என்று ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் உலகமுடிவு ஏற்படாது (லா தகூமுஸ் ஸாஅத்து அலா அஹதின்ய் யகூலு அல்லாஹு அல்லாஹு).” (சஹீஹ் முஸ்லிம் #148-ஆ)

இந்த ஹதீஸில் குறிப்பிடப்படுவது வெறுமனே நாவால் அல்லாஹ் அல்லாஹ் என்று உச்சரித்துக் கொண்டிருப்பதை அல்ல, ஒருவரின் உடலும் உள்ளமும் உயிரும் இறைவனின் திக்ரில் ஊறியிருப்பதைக் குறிக்கும் என்றும் அதற்கான பயிற்சியே மூச்சு திக்ரு என்றும் ஸூஃபிகள் கூறுகின்றனர்.

’அல்லாஹ்’ என்பது இறைவனின் சுயநாமம் (இஸ்மே ஜாத்) ஆகும். முச்சு என்பது உயிருள்ள ஒருவரின் ஜாத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. எனவே, இறைவனின் சுயநாமத்தைக் கொண்டு திக்ரு செய்யும் சாதகனின் ஜாத் (சுயம், being) வரை அது தாக்கம் ஏற்படுத்துகிறது. அந்நிலையை அடைந்த ஒருவரின் அசைவிலும் அந்த லயம் வெளிப்படுகிறது. அவர் நிதானமாகவும் அமைதியாகவும் இருக்கிறார்.

நக்‌ஷ்பந்திய்யா நெறியின் பதினோரு அடிப்படைக் கோட்பாடுகளுள் முதல் எட்டுக் கோட்பாடுகளை வரையறுத்த ஷைஃகு அப்துல் ஃகாலிக் அல்-குஜ்தவானி (ரஹ்) சொல்கிறார்: “விவேகமான சாதகன் தன் உள்ளே சென்று வெளியேறும் தன் மூச்சை அலட்சியத்தை விட்டும் பாதுகாப்பதன் மூலம் தன் இதயத்தை எப்போதும் இறைவனின் பிரசன்னத்திலேயே வைத்திருக்க வேண்டும். வழிபாடுகளாலும் சேவைகளாலும் தன் மூச்சுக்கு அவன் உயிரூட்ட வேண்டும். இந்த வழிபாட்டை அவன் தன் ரட்ச்கனுக்கு முழு ஜீவனுடன் சமர்ப்பிக்க வேண்டும். ஏனெனில் இறை நினைவுடன் உள்ளே இழுக்கப்படும், வெளியே விடப்படும் ஒவ்வொரு முச்சும் உயிருள்ளதும் இறைவனுடன் தொடர்புடையதும் ஆகும். அலட்சியமாக உள்வாங்கவும் வெளியிடவும் படுகின்ற ஒவ்வொரு மூச்சும் செத்ததும், இறைவனுடன் தொடர்பற்றதும் ஆகும்.”

மகானின் கருத்துக்கு அடிப்படையாக ஹதீஸ் ஒன்று அமைந்துள்ளது: நபி (ஸல்) சொன்னார்கள்: ”தன் ரட்சகனை தியானிக்கும் ஒருவருக்கும் தியானிக்காத ஒருவருக்கும் உதாரணமாவது உயிருள்ளவரும் செத்தவரும் போன்றதாகும்.” (ஸஹீஹுல் புஃகாரி #6407).

நக்‌ஷ்பந்திய்யா ஆன்மிக நெறியின் முதல்வரான ஃகாஜா பஹாவுத்தீன் ஷாஹ் நக்‌ஷ்பந்த் (ரஹ்) சொல்கிறார்கள்: ”நம் நெறி மூச்சை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. ஒவ்வொரு உள்மூச்சையும் வெளிமூச்சையும் கவனித்துப் பேணுவது அவசியம் ஆகும். மேலும், உள்மூச்சுக்கும் வெளிமூச்சுக்குமான இடைவெளியையும் பாதுகாக்க வேண்டும்.”

ஷைஃகு உபைதுல்லாஹ் அஹ்ரார் (ரஹ்) சொல்கிறார்: “இந்த நெறியில் ஈடுபடும் சாதகனின் மிக முக்கியமான பணியே தன் மூச்சைப் பாதுகாப்பதுதான். தன் மூச்சை எவனால் பாதுகாக்க முடியவில்லையோ ’அவன் தன்னையே தொலைத்துவிட்டான்’ என்று சொல்லப்படும்.”

மவ்லானா சஃ’துத்தீன் காஷ்கரீ (ரஹ்) சொல்கிறார்கள்: “ஹோஷ் தர் தம் என்பது அலட்சியத்திற்கு அல்லது மறதிக்கு இடம் தராமல் இறைவன் தன்னுடன் இருக்கிறான் என்ற பிரக்ஞையுடன் ஒரு மூச்சில் இருந்து இன்னொரு மூச்சுக்கு நகர்வதாகும். அப்படியாக, நம் ஒவ்வொரு மூச்சிலும் ஹக்கின் நியாபகம் இருப்பதாகும்.”

ஷைஃகு நஜ்முத்தீன் குப்ரா (ரஹ்) தனது ஃபவாத்திஹுல் ஜமால் என்னும் நூலில் எழுதியுள்ளதாவது: “உயிரினம் ஒவ்வொன்றின் உடலிலும் அவற்றின் மூச்சினால் திக்ரு ஓடிக் கொண்டே இருக்கிறது, அவை நாடாமலேயே. அது அவற்றின் அடிபணிதலின் ஓர் அடையாளம் ஆகும். அது அவை படைக்கப்பட்டதன் ஓர் அம்சமாகும். தம் மூச்சால், அல்லாஹ் என்னும் திருநாமத்தின் “ஹா” என்னும் எழுத்தின் ஓசை ஒவ்வொரு உள்மூச்சிலும் வெளிமூச்சிலும் செய்யப்படுகிறது. அது, மறைவான சுயம் இறைவனின் தனித்தன்மையை வலியுறுத்துவதன் அடையாளம் ஆகும். எனவே படைத்தவனின் சுயத்தை உணர அந்த மூச்சுடன் நாம் சுதாரிப்பாக இருக்க வேண்டியது அவசியம்.”

”இல் ஸூஃபிஸ்மோ” என்னும் தன் நூலில் நக்‌ஷ்பந்திய்யா குருவான ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன் மிக நுட்பமான சில அவதானங்களை நமக்குச் சொல்கிறார்: “அக விழிப்படைந்த எந்த ஷைஃகும் ஒரே ஒரு மூச்சைக் கூட பேணாமல் இல்லை. அது அனைத்து குருநாதர்களையும் அனைத்து ஆன்மிக நெறிகளையும் (தரீக்காக்களையும்) இணைக்கின்ற மெல்லிய இழை ஆகும். அது நம் சுயங்களை நம் சில்சிலாவின் (கொடிவழியின்) முன்னோர்களுடன் இணைத்து வைக்கிறது. … … ’ஒரே ஒரு மூச்சைக்கூட தவறவிட்டுவிடாதே’. இதுதான் திறவுகோல்.”

ஆன்மிகத்தின் அடிப்படையான ஒரு பயிற்சிக்கு மூச்சு ஏன் தேர்ந்து வைக்கப் பட்டுள்ளது என்பதற்கு ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன் அழகான காரணம் ஒன்றைச் சொல்கிறார்: “நக்‌ஷ்பந்தி நெறியின் பயணம் மிக இலகுவான, துரிதமான, அனைவருக்கும் கிடைக்கக் கூடிய பொதுவான விடயங்களில் இருந்து ஆரம்பிக்கிறது. அது உங்கள் வாழ்வின் அடிப்படையான இயக்கங்களின் மீது கவனம் குவிக்குமாறு அழைக்கிறது.”

இறை தியானம் பண்ணாத சராசரி மனிதருக்கு, ஒரு மூச்சுக்கு மூன்று நொடிகள் என்று கணக்கு வைத்தால் ஒரு நிமிடத்திற்கு இருபது மூச்சுகளும், ஒரு மணிநேரத்திற்கு 1200 மூச்சுகளும், நாள் ஒன்றுக்கு 28,800 மூச்சுகளும் ஆகின்றன. மூச்சு திக்ரில் ஈடுபடுவோரின் மூச்சு ஆழமாகி நிதானமாகி வரும்போது இந்த எண்ணிக்கை குறையும். ஆனால், இறை நினைவில் கழிக்கப்பட்ட மூச்சு மட்டுமே மனிதனை அவன் படைக்கப்பட்டதன் லட்சியத்தை நோக்கி முன்னேற்றும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே, ஸூஃபி நெறியில் செல்லும் சாதகன் அதிகம் மௌனமாக இருக்கிறான். பேசினால் அவசியம் கருதி சில சொற்கள் மட்டுமே பேசுகிறான். “பேச்சை சுருக்கு, மூச்சைப் பெருக்கு” என்பதை அவன் கடைப்பிடிக்கிறான்.

Friday, May 30, 2025

ஸூஃபித்துவமும் இறைஞானமும்

அன்பர்களே! நீண்ட இடைவேளை எடுத்துக் கொண்டுவிட்டேன். ஒருசில நூல்களை மொழி பெயர்த்து முடித்திருக்கிறேன். அவற்றில் இருந்து சில பகுதிகளை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

துருக்கி நாட்டைச் சேர்ந்த ஸூஃபி ஞானியும் குருவுமான ஹாஜி மூசா தோப்பாஷ் எஃபந்தி என்பார் எழுதிய “தஸவ்வுஃப் வ மஃ’ரிஃபா” என்னும் நூலினை “ஸூஃபித்துவமும் இறைஞானமும்” என்று தமிழாக்கம் செய்திருக்கிறேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே!

அதிலிருந்து...



ஸூஃபித்துவம் அல்லது தஸவ்வுஃப் என்பது கரை இல்லாத கடல் ஆகும். அது பிரபஞ்சம் முழுவதையும் வளைத்து அடக்கியுள்ள இறைவனின் பேரறிவு ஆகும்.

            ஸூஃபித்துவம் என்பது மஃ’ரிஃபா – அல்லாஹ்வைப் பற்றிய ஞானம்.

            இது விளக்கி உரைக்க முடியாதது. எனினும், ஒவ்வொருவரும் தமது புரிதிறனுக்கும் ஆன்மிக நிலைக்கும் ஏற்ப இதைப் பற்றிப் பேசுகின்றனர்.

            பிரபஞ்சத்தின் பெருமிதமான இறைத்தூதர் நபி (ஸல்) நவின்றார்கள்:

            ”என் ரட்சகனே! நான் எப்படி உன்னைப் புகழ முடியும்! நீ உன்னை நீயே புகழ்ந்துகொண்டபடி இருக்கிறாய்!”

            மேலான அல்லாஹ்வின் அறிவுடன் ஒப்பிடும்போது இறைத்தூதரின் அறிவு என்பது அந்தக் கடலில் ஒரு துளிதான். ஏனைய பெரும் இறைத்தூதர்களின் அறிவோ நபி (ஸல்) அவர்களின் அறிவுடன் ஒப்பிடும்போது கடலில் ஒரு துளிதான்! இறைநேசர்களின் அறிவோ நபி (ஸல்) தவிர உள்ள பெரும் இறைத்தூதர்களின் அறிவுடன் ஒப்பிடும்போது கடலில் ஒரு துளிதான். இதிலிருந்து, ஸூஃபித்துவம் என்பது முடிவோ எல்லையோ வரம்போ இல்லாத தெய்வீக அறிவு என்று உணர்கிறோம்.

            இந்த முடிவிலியில் இருந்து ஒவ்வொருவரும் தமது பங்குக்கு ஏற்ப அடைந்து கொள்கின்றனர். அடையப்பட்ட இந்த அறிவு என்பது கடலில் ஒரு துளி அளவு கூட தேராது என்பதால் ஸூஃபித்துவ உலகில் அல்லாஹ்வின் அடியார் ஒவ்வொருவரும் அவன் அவருக்கு அருள்கின்ற அறிவின் அளவுக்கே அவனை அவதானிக்கவும் அடையவும் இயலும்.

            எனவே, தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அறிவின் அளவுக்கே ஸூஃபிகள் பேச முடியும். மேலோனான அல்லாஹ்வின் ஆன்மிகக் கருவூலம் ஒரு சிலருக்கே திறக்கும் என்றாலும், சிறப்பான சில இறைஞானிகளுக்கு அவனின் அருள் விசாலமாகவும் ஆழமாகவும் உள்ளது.

            வாஜிபுல் உஜூது என்னும் அவசிய உள்ளமை ஆன இறைவனுக்கு கோடானு கோடி அடியார்கள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவனின் வெளிப்பாடு வேறுபடுகிறது. இந்த நோக்கில், கோடிக் கணக்கான மக்களின் அறிவும் நம்பிக்கையும் சமம் அல்ல. அவை அதேதான் என்று தோன்றலாம், ஆனால் வெவ்வேறானவை.

            இறை அறிவின் வெளிப்பாடும் போகப் போக மாறுகிறது. நேற்று வரை அவன் வெளிப்படுத்தாத ஓர் அறிவை இன்று நாம் கண்டு கொள்ளலாம், நாளை அதனினும் வேறான ஓர் அறிவைக் கொண்டு நாம் போஷிக்கப்படலாம்.

            சுருக்கமாகச் சொன்னால், அது முடிவிலியான ஓர் அறிவாகும். அதன் அம்சத்தை  பேனாக்களும் நுண்ணோக்கிகளும், தொலை நோக்கிகளும், புறவயமான அறிவுத் துறைகள் அனைத்தும் அளந்துவிட முடியாது.

            வானவர் மீக்காயீல் பிரபஞ்சத்தில் பயணிக்க விரும்பினார். அவர் பத்து ஆண்டுகள் பறந்தார். ஆனால் எந்த ஓர் அறிவையும் அடைய முடியவில்லை (இத்தனைக்கும் வானவரின் வேகத்துடன் ஒப்பிட்டால் ஒளியின் வேகம் என்பது மாட்டு வண்டியின் வேகமாகவே இருக்கும்!) அவர் மேலும் ஒரு பத்து ஆண்டுகள் அவகாசம் கேட்டார். அது அவருக்கு வழங்கப்பட்டது. மீண்டும் அவர் தோல்வி அடைந்தார். அவரின் சிறகுகள் தீப்பற்றிக் கொண்டன. அதன் பின்னர், அல்லாஹ்வின் வல்லமையின் முன்னே சிரம் சாய்க்க வேண்டும் என்று அவர் உணர்ந்தார். உடனே சஜ்தா செய்து, “சுப்ஹான றப்பியல் அஃ’லா” (மிக உயர்வான என் ரட்சகன் பரிசுத்தமானவன்) என்று ஓதினார்.



              

அனுபவ ரீதியான இறைஞானத்தின் பரந்து விரிந்த இந்தக் களத்தில் தம் இயலாமை மற்றும் பலகீனத்தைப் புரிந்து கொள்கின்ற அடியார்கள் சிலர் இருக்கின்றனர். அல்-ஹக்கின் மகத்துவத்தின் முன்னால் அவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

            வேறு சிலர் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தவனை வியப்புடன் அவதானிக்கின்றனர்.

            வேறு சிலர் தெய்வீக வல்லமையின் முன்னால் வாயடைத்து நா எழாமல் மௌனம் ஆகிவிடுகின்றனர்.

            வேறு சிலருக்கோ பேச்சாற்றல் மீண்டும் தரப்படுகிறது. அவர்கள் மேலான அல்லாஹ்வையும் அவனின் அருள்களையும் உதவிகளையும் தாராளத்தையும் அவதானித்து அவற்றைப் பற்றி ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கின்றனர்.

            மலைகளும் சிகரங்களும் சமவெளிகளும்கூட சிலருக்குக் குறுகலாகி விடுகிறது.

            சிலர் ஒரு சிறிய குடிலுக்குள் புகுந்து அதிலேயே தம் வாழ்க்கையைக் கழிக்கின்றனர்.

            சிலர் நேசத்தால் முழுமையாக ஆட்கொள்ளப் படுகின்றனர். அவர்கள் செல்வம், உடைமைகள், சந்ததிகள், உலக வீடுகள் என்று எதையுமே வேண்டுவதில்லை. அவர்களின் ஆசை எல்லாம் ஏகனான அல்லாஹ் ஒருவனே.

            மாபெரும் இறைஞானியரின் பங்குகளும்கூட பல்வகைப் பட்டவை, வெவ்வேறு ஆனவை. ஒருவருக்கு அருளப்பட்டது இன்னொருவருக்கு அருளப்படுவது இல்லை. ஒருவர் அறிவதை இன்னொருவர் அறியார்.

            எனினும், அனுபவ அறிவால் கண்ணியப்படுத்தப்பட்ட ஒவ்வொருவரும் இறுதியில் மேலோனான அல்லாஹ்வை விளங்கி அடைந்து கொள்கிறார். தம் படைப்பு நோக்கத்தை நன்றாக அறிந்திருக்கும் அவர்கள் அல்லாஹ்வின் வல்லமையின் முன்னால் தம் மீது சுமத்தப்பட்டுள்ள கடமை என்ன என்பதைத் தெளிவாக அறிந்து அதனைப் பேரார்வத்துடனும் நேசத்துடனும் செய்கின்றனர்.

            மஃ’ரிஃபா என்னும் அறிவில் முன்னேற்றம் என்பது இதயத்தின் உலகம் எவ்வளவு ஒளிமயமாகவும் தூய்மையாகவும் இருக்கிறது என்பதைப் பொறுத்து அமைகிறது.

             சத்தியப் பாதையில் செல்லும் சாதகனிடம் நான்கு குணங்கள் இருக்கும்போது தெய்வீக உதிப்பு அதன் முழுமையான அருளுடனும் கருணையுடனும் இதயத்தின் உலகின் மீது இறங்குகிறது. அவை பின்வருமாறு:

            அ) தீவிரமான நேர்மை இருப்பது.

            ஆ) உறுதிப்பாடான (இஸ்திகாமா) நபர்களுடன் சேர்ந்திருப்பது.

            இ) சிரத்தையும் விடாமுயற்சியும்

            ஈ) முழுமையான சரணாகதி.

            நற்குணம், தாராளம், இரக்கம், பணிவு முதலிய நல்ல பண்புகள் ஸூஃபிகளுக்கு அருளப்படுகின்றன. ஒவ்வொருவருடனும் நன்றாக பழகிக்கொண்டு, அவர்கள் அகப்பார்வை மற்றும் சிரத்தையுடன் முன் நோக்குகின்றனர். அவர்களின் ஒவ்வொரு நடத்தையும் செய்கையும் குர்’ஆனின் கட்டளைகளுக்கு உடன்பட்டதாகவும் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களின் நடத்தை மற்றும் செயல் ஆகியவற்றுக்கு இயைந்ததாகவும் உள்ளது.

            அவர்கள் தூயவனான அல்லாஹ்வையும் அவனின் திருத்தூதரையும் தம் உயிர்கள், உடைமைகள், செல்வம், மற்றும் சந்ததிகள் அனைத்தையும் விட மேலாக நேசிக்கின்றனர்.

            நேசத்தின் கோப்பையில் இருந்து பருகும்படி அருளப்பட்டிருக்கவில்லை என்றால் அவர்களால் இந்த நுட்பமான அறிவையும் அந்தஸ்த்தையும் அடைந்திருக்க முடியாது.



               



ஸூஃபிகளின் செய்முறைகள் ஆரம்ப நிலையில் வேறுபடுவதாகத் தோன்றினாலும் வல்லமையும் செம்மையும் கொண்ட அல்லாஹ்வைப் பற்றிய அறிவு என்னும் புள்ளியில் அவை அனைத்தும் கடைசியில் ஒன்றாகின்றன.

            ஆனால், இதே பாதையில் தத்துவவாதிகள் செல்ல ஆரம்பிக்கும்போது அவர்களால் கருத்து உடன்பட முடிவதில்லை. இதற்குக் காரணம் அவர்களின் தன்முனைப்புகள் (egos) எப்போதும் அடங்காமல் ரகளை பண்ணுகின்றன. இந்த நபர்கள் மேலான அல்லாஹ்வைக் கண்டடைய முடியாது. எனவே அவர்கள் கடைசியில் ஒருவருக்கு ஒருவர் பகைவர்கள் ஆகி ஒருவரை ஒருவர் சபித்துக் கொண்டு முடிகின்றனர். அடிப்படை அற்ற பல்வேறு கருத்துக்களையும் கோட்பாடுகளையும் அவர்கள் முன் வைக்கின்றனர். தம் எதிர்பார்ப்புகளால் அவர்கள் சுருங்கிப் போகின்றனர்,

            இஸ்லாமும் தத்துவமும் ஒன்று கலக்காது. மவ்லானா ஜலாலுத்தீன் ரூமி மற்றும் இமாம் கஜ்ஜாலி போன்ற மாபெரும் இறை நேசர்களை முஸ்லிம் தத்துவவாதிகள் (Philosophers) என்று சொல்ல முடியாது. அவர்கள் ஸூஃபிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

            ஸூஃபித்துவம் என்பது குர்’ஆனின் கட்டளைகளுக்கும் இறைத்தூதரின் மேலான சுன்னாஹ்வுக்கும் (நபிவழிக்கும்) முற்றிலும் அடிபணிவதாகும்.

            குர்’ஆனின் கட்டளைகள் அல்லது ஷரீஆ என்பது ஒரு தொலி / ஓடு என்றால் தரீக்கா என்பது அதன் உள்ளிருக்கும் பருப்பு ஆகும். எனினும், தன் தொலி / ஓடு இல்லாத ஒரு பருப்பு இருக்கும் என்று நாம் யோசிக்க முடியாது. ஓடு அதன் சாராம்சத்துடன் இணைக்கப்படும்போது அதுவே பூரணத்துவத்தை (கமாலிய்யா) தேடுவோரின் பாதை ஆகும்.

            மேம்படுத்தப்பட்ட ஆன்மிகம் கொண்டுள்ள குருநாதர்கள் தமக்கு வழங்கப்படும் பானத்தை அருந்தும்போது அவர்கள் முன்னேறுகின்றனர். ஒரு கட்டத்தில் அவர்களின் சுதாரிப்பு அவர்களின் போதையை மிகைத்து விடுகிறது, அவர்களின் பணிவு மேலும் மேலும் அதிகமாகிறது. அவர்கள் அழிந்துவிடுகின்றனர். ஏக இறைவனுடன் சேர்வதே அவர்களின் ஒரே ஆசை ஆகிறது. அல்லாஹ்வின் ஏற்பையும் பொருத்தத்தையும் அடைவதைத் தவிர உள்ள ஆசைகள் அனைத்தும் இன்மை ஆக்கப்பட்டு அவர்கள் தம்மையே மறந்துவிட்டுள்ளனர்.