Sunday, July 9, 2017

இறைவன் சொல்கிறான்... - part 2


Image result for bahauddin walad

பஹாவுத்தீன் வலத் (ரஹ்...) எழுதிய, அடியேன் பதிவேற்றிய வாசகங்களின் தஃப்சீரி (விரிவுரை) அர்த்தங்களைக் கொஞ்சம் சொல்கிறேன். அதை நான் எப்படிப் புரிந்துகொண்டேன் என்பதை அது உங்களுக்கு உணர்த்தலாம்.

      இவ்வுலகம் என்னும் அழகிய அன்பளிப்பைப் பார்.

      இவ்வுலகைக் கூர்ந்து அவதானிக்கும் படியான இந்தக் கட்டளை பின்வரும் குர்ஆனிய வசனங்களின் கருத்தினைப் பிரதிபலிக்கின்றது:

      ”அதிவிரைவில் நாம் இவர்களுக்கு நம் சான்றுகளை அனைத்துத் திசைகளிலும் அவர்களுக்கு உள்ளேயும் காண்பிப்போம்” (41:53).

      ”ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா, அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று?; மேலும் வானத்தை, அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது என்று?; மேலும் மலைகளை, அவை எவ்வாறு நடப்பட்டுள்ளன என்று?; மேலும் பூமியை, அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது என்று?” (88: 17-20).

      இங்கேயொரு விளக்கம் தேவைப்படுகிறது. பெரும்பான்மையான முஸ்லிம்கள் குழப்பத்திற்கு ஆளாகும் ஒரு மனப்பிசகு இங்கே நேர்ந்துவிடலாம். ’இவ்வுலகம் என்னும் அழகிய அன்பளிப்பைப் பார்’ என்பதை வாசிக்கையில் உலகம் என்னும் சொல் வாசிப்பவனின் மனத்தில் கிளர்த்தும் அர்த்தம் என்ன என்பதே இவ்வரியை அவன் எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறான் என்பதைத் தீர்மானிக்கின்றது. உலகம் என்று இங்கே சொல்லப்படுவதை வானங்கள் மற்றும் பூமி என்பதாக, பிரபஞ்சம் (ஆலம்) என்பதாக விளங்கினால் மேலே காட்டியுள்ள திருவசனக் கருத்துக்களை நோக்கி அது நகரும். ஆனால், உலகம் என்பதை ’துன்யா’ (Material World) என்பதாக விளங்கினால் ”இவ்வுலகமும் அதில் உள்ளவையும் சபிக்கப்பட்டவை”, “இவ்வுலகமொரு பிணம். இதைத் தேடுகின்றவன் ஒரு நாய்” முதலிய நபிமொழிக் கருத்துக்களை நோக்கியே சிந்தனை நகரும். அப்படி நகரும்போது, உலகம் ஓர் அழகிய அன்பளிப்பு என்று சொல்லும் பஹாவுத்தீன் வலதை இஸ்லாத்திற்கு மாற்றமான கருத்தைச் சொல்பவராகவே, அதன் எதிரியாகவே உணரும். பெருஞ் சூஃபி ஞானிகள் பலர் இத்தகைய விமரிசனங்களுக்கு ஆளாகியுள்ளார்கள்.

      நீ அதனை இலகுவாக எடுத்துக்கொள்கிறாய்.

      இவ்வுலகெங்கும் இறைவன் அள்ளிச் சொரிந்திருக்கும் அருட்கொடைகளை மிக லேசாக மதிப்பிட்டுவிடுவதை இவ்வரி சுட்டிக்காட்டுகிறது என்று கொள்ளலாம். அந்நிலையில், “ஓ ஜின்களே! மனிதர்களே! உங்கள் ரட்சகனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?” என்னும் வசனக் கருத்தினை இவ்வரி பிரதிபலிக்கிறது.

      அல்லது, உலகை எவ்வித எதிர்ப்புமின்றி மனித மனம் ஏற்றுக்கொள்ளும் நிலையை இது சொல்வதாகக் கொண்டால், “இன்னும், நிச்சயமாக அவன் செல்வத்தின் மீது பெருமோகம் கொண்டிருக்கிறான்” (100:8) என்னும் வசனத்தையும், ”செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை மறதியில் ஆழ்த்திவிட்டது, நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை” (102:1,2) ஆகிய வசனக் கருத்துக்களைப் பிரதிபலிக்கின்றது.

      ஆனால், எவர் வழியாக நான் எனது வார்த்தைகளை அனுப்புகிறேனோ அவரை?

      உலகை ஆசையோடு தழுவி ஏற்கும் மனநிலை இறைத்தூதரை ஏற்பதை விட்டும் மனிதனைத் தடுக்கிறது என்று இவ்வரி சொல்கிறது. உண்மைதானே? இறைவனின் வார்த்தைகளான வேதம் ‘குர்ஆன்’ யார் வழியாக அருளப்படுகிறதோ அந்த முஹம்மது (ஸல்…) இறைவன் தரும் அன்பளிப்புக்களில் எல்லாம் பெரிய அன்பளிப்பல்லவா?  சிறிய அன்பளிப்பான உலகை ஏற்றுக்கொள்ளும் நீ மகத்தான அன்பளிப்பான இறைத்தூதரை முழுமையாக ஏற்கத் தயக்கம் காட்டுவது ஏன்? என்று இவ்வரி கேட்கிறது. ஆம், இறைத்தூதர் முஹம்மது (ஸல்...) அவர்கள் நம்பிக்கையாளர்களுக்கு மாபெரும் அருட்கொடை (மின்னத்துல் அக்பர்) ஆவார்கள். “நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்கள் மீது பேரருள் புரிந்தான், அவர்களிலிருந்தே அவர்களுக்கு ஓர் இறைத்தூதரை அனுப்பியபோது” (3:164).

      இக்கதவின் அருகில் நின்று அற்புதங்களைக் கவனி.

Related image

      எந்தக் கதவின் அருகில்? இதற்கு முன் சொல்லப்பட்ட வரியில் குர்ஆன் மற்றும் இறைத்தூதரைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. எனவே, இங்கே கதவு என்று சொல்லப்படுவது இம்மைக்கும் மறுமைக்கும் இடையில், அல்லது இறைவனுக்கும் படைப்புக்களுக்கும் இடையில் இருக்கின்ற பர்ஸஃகுல் குப்ரா என்னும் திரையான முஹம்மது (ஸல்...) அவர்களையே என்று, அல்லது அவர்கள் வழியாக வந்த மாபெரும் அற்புதமான (முஃஜிஸாத்துல் அக்பர்) குர்ஆன் என்று விளங்கலாம். குர்ஆனின் ஒளியில் காணும்போதுதான் இறைவன் நம்மீது அருட்கொடைகளை இடையறாது பொழிந்துகொண்டிருப்பதை விளங்க முடியும்; “ஒவ்வொரு கணமும் அவன் ஒரு புதிய மாட்சியில் இருக்கிறான்” (’குல்ல யவ்மின் ஹுவ ஃபீ ஷஃன்’; 55:29) என்னும் திருவசனத்தை நிதர்சனமாக கிரகிக்க முடியும்.

      இவ்வரியில் பஹாவுத்தீன் கதவைப் பற்றிச் சொல்லியிருப்பது மிக அழகான ஆழமான அமைப்பாகப் படுகிறது. ஏனெனில் கதவு என்பது அகத்திற்கும் புறத்திற்கும் இடையில் அமைவது. இவ்வரிக்கு முன் சொல்லப்பட்டவை குர்ஆனின் தஃப்ஸீரி (விரிவுரை) விளக்கங்களின் அடிப்படையில் அமைந்தவை. இவ்வரிக்குப் பின் சொல்லப்படுவது குர்ஆனின் தப்ஸீரி (அகப்பார்வை) அடிப்படையில் உள்ளவை. அதாவது ழாஹிர் என்னும் வெளிப்படைக்கும் பாத்தின் என்னும் அந்தரங்கத்திற்கும் இடையில், ஆஃபாக் (வெளியுலகம்) என்பதற்கும் அன்ஃபுஸ் (அகவுலகம்) என்பதற்கும் இடையில் அமைந்த கதவை இது சுட்டிக்காட்டுகிறது. அக்கதவு மனிதனில் உண்டாகும் ஆன்மிக மாற்றத்திற்கான மனநிலையை, ‘threshold’ நிலையைக் குறிக்கிறது.

      குர்ஆனைக் குறிப்பிட்டு, ‘அக்கதவின் அருகிலேயே நில்’ என்று சொல்வதானது, குர்ஆனில் மூழ்கிப் போ என்று சொல்வதாகும். அது ஓர் சூஃபித்துவப் பயிற்சி. பஹாவுத்தீன் வலத் ஆகட்டும் அவரது மகன் மௌலானா ரூமி ஆகட்டும் இருவருமே குர்ஆனை முழுவதுமாக மனனம் செய்த ஹாஃபிஸ்கள். அதன் திருவசனங்களால் மனவெழுச்சியும் அகவிழிப்பும் பெற்றவர்கள். அப்படிப்பட்ட சூஃபிகள் பலர் இருந்திருக்கிறார்கள், இன்றும் இருக்கிறார்கள். ”சூஃபித்துவம் என்றால் என்ன?” என்னும் நூலில் மார்ட்டின் லிங்ஸ் (அபூபக்கர் சிராஜுத்தீன்) “இஸ்திக்ராக் ஃபில் குர்ஆன்” (குர்ஆனில் மூழ்குதல்) என்னும் சூஃபிப் பயிற்சி பற்றிப் பேசுகிறார். “சில சூஃபிகளுக்கு குர்ஆனை ஓதுவதே தங்கள் வாழ்நாள் முழுவதும் இறைவன் மீது கவனம் குவிப்பதற்குரிய பிரதான வழியாக விளங்கியுள்ளது. அதாவது, எல்லா ஆன்மிகப் பாதைகளுக்கும் உள்ள அந்தக் கருவுக்கு வழியாக விளங்கியுள்ளது” (அத்தியாயம் மூன்று: ’இறைவேதம்’) என்று அவர் சொல்கிறார். பஹாவுத்தீன் வலத் (ரஹ்...) அத்தகையோருள் ஒருவர்.

Image result for bab aziz movie

      முகபாவனைகள், நரை முடி, அதில் கறுப்பு. நீ ருசிக்கும் எவ்வொரு மங்கிய சுவையும் இறைவனின் உள்ளமையிலிருந்து நேரடியாக வருவதே!”

      இது அகப்பார்வையின் வெளிப்பாடாக எழுதப்பட்டுள்ள வரி. தப்ஸீரி வெளிப்பாடு. அகப்பார்வை கொண்டவர்களுக்கு இதை விளங்குவதில் எவ்விதச் சிரமமும் இருக்காது. அஃதிலார்க்கு இவ்வரி பெருஞ்சிக்கலாகவே இருக்கும். மிக எளிதாக அவர்களால் செய்ய முடிவதெல்லாம் இதனை உடனே முற்றாக நிராகரிப்பதுதான். இது உளறல், இது அபத்தம் என்று தொடங்கி இது வழிகேடு, இது இணைவைப்பு என்பது வரையிலான நிராகரிப்புக்கள்.

      இந்த தப்ஸீருக்கு இபாரத்துன் நஸ்ஸு (குர்ஆன் ஆதாரம்) தரவேண்டும் எனில், உஜூது பற்றிக் குறிப்புக் காட்டும் திருவசனங்களையே சொல்ல வேண்டும்:

      ”நீங்கள் எத்திசையில் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகமே இருக்கின்றது” (ஃப-ஐனமா துவல்லூ ஃபஸம்ம வஜ்ஹுல்லாஹ்; 2:115).

      ”அவனே ஆதி, அவனே அந்தம், அவனே வெளிப்படை, அவனே அந்தரங்கம்” (ஹுவல் அவ்வலு வல் ஆஃகிறு வல் ழாஹிரு வல் பாத்தின்; 57:3).

      இந்தத் திருவசனத்தின் ஒளியில் நபி (ஸல்...) அவர்கள், உறங்கச் செல்லும்போது அல்லாஹ்விடம் கேட்ட பிரார்த்தனை ஒன்றில் வரும் ஞான விளக்கங்களும் இங்கே கவனிக்கத் தக்கது: “அல்லாஹ்வே! நீயே ஆதி. நிச்சயமாக, உனக்கு முன்னர் எப்பொருளும் இல்லை (அன் த்தல் அவ்வலு ஃபலைச கப்லக ஷைஉன்); மேலும், நீயே அந்தம். நிச்சயமாக உனக்குப் பின்னர் எப்பொருளும் இல்லை (வ அன் த்தல் ஆஃகிரு ஃபலைச பஃதக ஷைஉன்); மேலும், நீயே வெளிப்படை. நிச்சயமாக உனக்கு மேலே (வெளியே) எப்பொருளும் இல்லை (வ அன்த்தல் ழாஹிரு ஃபலைச ஃபவ்க்கக ஷைஉன்); மேலும், நீயே அந்தரங்கம். நிச்சயமாக உனக்குக் கீழே (உள்ளே) எப்பொருளும் இல்லை (வ அன் த்தல் பாத்தினு ஃபலைச தூனக்க ஷைஉன்)” (நூல்: சஹீஹ் அதபல் முஃப்ரத் அல் புஃகாரீ, அத்தியாயம்: 50 ’உறங்கச் செல்லுதல் பற்றிய பாடம்’ ஹதீஸ் எண்: 1212).

      படைக்கப்பட்ட பொருள்கள் யாவும் இறையுள்ளமையிலிருந்தே வருகின்றன என்பதற்கான விளக்கத்தைப் பெற இந்தக் குறிப்புக்கள் போதுமானவை. அகத்திறப்பு கொண்டார்க்கு விளங்குதல் எளிது, அல்லார்க்கு எவ்வளவு விளக்கினும் ஏறாது என்பதால் இதில் இன்னும் நீட்டிக்கொண்டிருக்கத் தேவையில்லை.

      சரி, இவற்றையெல்லாம் நினைத்துத்தான் பஹாவுத்தீன் வலத் எழுதினார் என்பதற்கு என்ன அத்தாட்சி? விமரிசகன் ஏதாவது விளக்கத்தைச் சொல்லிக் கொண்டிருப்பான். எழுதியவன் அதையெல்லாம் எண்ணித்தான் எழுதினான் என்று எப்படி நம்புவது? என்று நீங்கள் கேட்கலாம். நல்ல கேள்விதான். இதற்கு உளவியல் சார்ந்த பதிலையே தரமுடியும்.

      ”மஃனவுஷ் ஷாயிரு அலா பத்னிஹி” (கவிஞனின் அர்த்தம் அவனின் வயிற்றில் / அந்தரங்கத்தில்) என்றொரு அரபி முதுமொழி உண்டு. ஒரு கவிதையை நாம் உள்வாங்குதல் என்பதற்கு அதை எழுதியவனின் மனநிலையுடனான ஒத்திசைவு நமக்கு இருக்க வேண்டும். நெடுங்காலக் கவிதை வாசிப்புப் பயிற்சியின் வழியாகவே அந்த நிலையை நாம் அடைய முடியும். ஒவ்வொரு மனநிலைக்கும் அதற்கேயான அலைவரிசை உண்டு. ஒரு வானொலிப்பெட்டியில் அதன் புலன் எந்த அலைவரிசையை நோக்கியுள்ளதோ அந்த அலைவரிசையில் மிதந்து வரும் செய்திகளே அதில் கேட்கலாகும். அதுபோலவே, எந்தச் சிந்தனையில் உங்களின் மனம் அமைவு கொண்டுள்ளதோ அந்த அலைவரிசையிலான எழுத்துக்களையே நீங்கள் இயல்பாக விளங்கிக்கொள்ள முடியும். ஒரு குறியீடாக மன அலைவரிசை என்பதை “நறுமணம்” என்று சொன்னால், ஒவ்வொரு மனவெளிப்பாட்டிற்கும் ஒரு தனித்த நறுமணம் உண்டு என்றாகிறது. ஒரு சிந்தனையாளரின் வெளிப்பாடு, அது உரைநடையாகவோ அல்லது கவிதையாகவோ இருக்கட்டும், உரைநடை கவிதை என்பதெல்லாம் வெளிப்பாட்டு உத்திகள்தானே தவிர அவையே உள்ளடக்கம் அல்ல, என்ன நறுமணம் கொண்டிருக்கிறது என்பதை அவரவர் ’அகமூக்கு’ நுகர்ந்துகொள்ள வேண்டும். ஒரு சிந்தனையின் நறுமணம் உங்களது அலைவரிசைக்கேற்ப அது நறுமணமாக இருக்கலாம் அல்லது துர்நாற்றமாக இருக்கலாம். “ரோஜாப் பன்னீரின் நறுமணம் மலவண்டிற்கு துர்நாற்றமாகவே தெரியும். அதை முகர்ந்து கொண்டிருந்தால் அது செத்துவிடும்” என்கிறார் இமாம் கஸ்ஸாலி (ரஹ்...).

      ஒன்று செய்யுங்கள். நபி (ஸல்...) அவர்களின் ஆஸ்தான கவிஞரான சய்யிதினா ஹஸ்ஸானிப்னு ஸாபித் (ரலி...) அவர்களின் கவிதைகளை (மஸ்ஜிதுந் நபவியின் மிம்பரில் ஏறி நின்று அவர்கள் இறைத்தூதரின் முன்னிலையில் அரங்கேற்றிய கவிதைகள் உட்பட), கஅப் (ரலி…) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவியபோது மஸ்ஜிதுந்நபவியில் இறைத்தூதரின் முன்னிலையில் பாடி அவர்களின் பாராட்டைப் பெற்ற “கஸீதத்துல் பானத் சுஆத்” என்னும் காவியத்தை (இதுவே கஸீதத்துல் புர்தா, சுப்ஹான் மவ்லிது, பர்ஸஞ்சி மவ்லித் போன்ற பிற்காலக் காவியங்களுக்கு நபிவழியிலான முன்னோடி), இதர நபித்தோழர்கள் இயற்றிய கவிதைகளை, அந்த நபிவழி மரபில் தொடர்ந்து அடுத்தடுத்த தலைமுறைகளில் இயற்றப்பட்ட கவிதைகளை ஆழ்ந்து படியுங்கள். அவற்றின் பரிணாம வளர்ச்சி என்ன என்பதை அறியுங்கள். போதிய மனப்பயிற்சி இல்லை எனில் ஆன்மிகக் கவிதைகளை, கவித்துவமான உரைநடைகளை நீங்கள் விளங்கிக்கொள்ள முடியாது.

      இன்றைய முஸ்லிம் சமூகம், உலகளாவிய நிலையில், மரபார்ந்த ஆன்மிகச் சிந்தனைப் பயிற்சியை இழந்து நிற்கிறது. சீர்திருத்தம் என்ற பெயரில் வஹ்ஹாபியக் கடுங்கோட்பாடுகள் பிரச்சாரம் செய்யப்பட்டு அதன் விளைவாக நாளுக்கு நாள் மேலும் சீரழிந்து வருகிறது. முன்னர் இச்சமூகத்தில் பள்ளிக் கல்வி பெற்றவர்கள் குறைவாகவே இருந்தபோதும் அவர்கள் உள்ளுணர்வின் ஊற்றுக்கண் திறக்கப்பெற்ற பாமர மேதைகளாக இருந்தார்கள். இப்போது படிப்பறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை ஏறியிருந்த போதும் உள்ளுணர்வின் பாதையை இழந்துவிட்ட படித்த முட்டாள்களாக இருக்கிறார்கள். தமது அகச் செல்வங்களை இழந்து விட்டு மாற்றுச் சமயத்தவரின், குறிப்பாக மேற்குலகின் புற அறிவியற் புலங்களிலான சாதனைகளையே தமது எதிர்கால இலக்குகளாக்கி இயங்கி வருகிறார்கள். குர்ஆனுக்கு அறிவியல் ரீதியில் விளக்கம் அளித்தல் என்பது போன்ற செயல்பாடுகள் அதிலிருந்தே பிறக்கின்றன. உண்மையில் அது குர்ஆனின் கருத்துப் புலத்தை வெளியுலகு என்னும் ஒற்றைப் பரிமாணத்தில் குறுக்குவதே ஆகும். அதன் விளைவாக, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மார்க்க வீச்சுள்ள மகாகவியாகத் தன் சிந்தனைகளால் உலகப் புகழ் பெற்ற அல்லாமா இக்பாலுக்குப் பிறகு இன்று வரை அந்தத் தகுதிப்பாட்டில் ஒரு சிந்தனைக் கவிஞனை முஸ்லிம் சமுதாயம் உருவாக்க முடியவில்லை.
Related image
allama iqbal (rahmathullaahi alaihi).

      ”ஆமாம், மேற்கோள் குறிப்புக் கொடுங்கள். ஆதாரமற்ற மேற்கோள் குறிப்பற்ற பல விஷயங்கள் பரப்பப்படுகின்றன.” என்று பதறுகிறார் மிஸ்டர் இம்தியாஸ். இது என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. இப்படி கேட்க வேண்டும் என்பதான மனநிலையை மெல்ல மெல்ல வஹ்ஹாபிகள் வளர்த்தெடுத்திருக்கிறார்கள். ’இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அடைதல்’ என்பதற்கான இன்றியமையாத செயல்முறையாக இந்த ஆதாரம் கேட்டல் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதன் பின்னணியில் அரசியல் அராஜகம் ஒன்றுள்ளது. பழங்கிரந்தங்களை எல்லாம் அவற்றின் அசல் வடிவங்களை மாற்றித் தணிக்கை செய்து வருகின்றார்கள். நான் மேற்கோளே காட்டினாலும் அவர்கள் தனிக்கைச் செய்து வைத்திருக்கும் நூலில் அந்த எண்ணில் அந்த ஹதீஸ் இருக்காது. அல்லது ஸஹீஹ் என்று அந்நூற்களின் மூல ஆசிரியரால் பதிவு செய்யப்பட்ட ஒன்றை இவர்கள் ளயீஃப் (பலஹீனமான செய்தி) என்பதாக முடிவுகட்டி பதிப்பித்திருப்பார்கள். இப்படித்தான், சவூதி அரசாங்கம் தனது புரிதல் சார்ந்த முடிவுகளுக்கேற்ப ஆதாரங்களைத் திரித்து மாற்றும் வேளையை முக்கால் நூற்றாண்டு காலமாகச் செய்து வருகின்றது. இமாம் புஃகாரீ (ரஹ்...) அவர்கள் சஹீஹ் என்று முடிவு கண்டு பதிவு செய்து வைத்த ஹதீஸ்கள் பலவற்றை, அதே நூலை எடுத்து வைத்துக்கொண்டு அல்பானீ என்பவர் மறுக்கிறார், ஜாகிர் நாயக் மறுக்கிறார், பி.ஜெ என்பவர் மறுக்கிறார், பிலால் ஃபிலிப்ஸ் என்பவர் மறுக்கிறார். எல்லாம் உழப்பல்கள். தன் அறிவுக்கெட்டாத விஷயங்களை எல்லாம் அடித்து நொறுக்கும் அராஜகம். மூல நூற்களில் தணிக்கை செய்து மாற்றும் உரிமையை உனக்கு யார் கொடுத்தது?  குர்ஆனிலும் கூட இவர்கள் கைவரிசை அரங்கேறும் காலம் வெகு தொலைவில் இல்லை! ஏனெனில், குர்ஆனில் இஃராபு (ஃபத்ஹா, ளம்மா, ஃகஸ்ரா, மத்த், ஷத்த் போன்ற ஒலிக்குறிகள்) என்பது நபி(ஸல்...) அவர்களின் காலத்திலோ அல்லது நபித்தோழர்களின் காலத்திலோ செய்யப்பட்டிருக்கவில்லை. அவர்களுக்குப் பின் வந்த தலைமுறையின் அறிஞர்களால செய்யப்பட்டது. இதனை ஒரு வாகான வாய்ப்பாக வஹ்ஹாபிகள் கையில் எடுத்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை. இஃறாபுகள் மாறினால் அர்த்தமும் மாறும். எனவே தமது புத்தியின் விளங்குதலுக்கேற்ப அர்த்தங்கள் தொனிக்கும்படி இஃறாபுகளை அவர்கள் மாற்றி வெளியிடத் தயங்கமாட்டார்கள் என்பது திண்ணம்.

மிஸ்டர் இம்தியாஸ் எழுதிய பின்னூட்டத்தைப் படித்தபோது, இப்படி ஆதாரம் கோருவதன் பின்னணி உளவியல் என்ன என்பது பற்றி நான் சிந்தித்தேன். ஓர் ஒப்புமையாக குறுங்கதை ஒன்றை வைத்து விளக்க நினைக்கிறேன். அடிப்படைக் கணிதமான அரித்மெட்டிக் கூட கைவராத ஒரு மாணவன் இருக்கிறான். ஆசிரியர் மிகவும் கடினமான சிக்கலான கணக்கு ஒன்றை பரீட்சையில் கேட்டுவிட்டார். அது அவனது பாட நூலில் இல்லாத கணக்கு. அவனோ கணக்குகளைக் கூட ஒருவாறு உருப்போட்டு ’மக் அப்’ செய்து எழுதக்கூடியவன். 3+5=? என்று கேட்டால் அதன் விடை 8 என்பது அவனுக்கு மனப்பாடம். அதையே 5+3=? என்று கேட்டுவிட்டால் ‘பாடநூலில் இல்லாத கணக்கு’ என்று பிலாக்கணம் வைப்பான். அப்படியொரு அறிவாளி! பரீட்சையில் கேட்கப்பட்டதோ மிகவும் சிக்கலான கணிதத்துறை சார்ந்த ஒரு கணக்கு. அவன் கேட்கிறான், ”இது என் பாடநூலில் எங்கே இருக்கிறது? ரெஃபரன்ஸ் என்ன? எந்தப் பாடத்தில், எத்தனாம் பக்கத்தில், எத்தனையாவது கேள்வி இது? எண்களைச் சொல்லுங்கள்”. ஒருவேளை அது அவனது பாடநூலிலேயே இருந்தாலும் அதனால் அவனுக்கு என்ன பயன்? அவனால் அதை விளங்கிக்கொள்ள முடியுமா? பாடநூற் கணக்குகளை, அவற்றின் கோட்பாடுகளைத் தெளிவாக விளங்கிக்கொண்ட ஒருவனுக்கு அப்பாடநூலில் இல்லாத கணக்கு கொடுக்கப்பட்டாலும் அதனால் என்ன சிரமம்? அதனை அவன் ’சால்வ்’ செய்து மதிப்பெண்களைப் பெற்றுக்கொள்வான். இன்று முஸ்லிம் சமூகத்தில் இது ஒரு நோயாகவே வளர்ந்து முற்றி வருகிறது. ஆதாரம் கோரல், அதை வைத்து ஏதோ இவர்களால் விளங்க முடியும் என்பது போல்.

      இனி, இத்தகையோர் விளங்க முடியாத அறிவுப்புலங்கள் பல இருக்கின்றன. உள்ளுணர்வு (intuition) என்பது அதில் ஒன்று. ஆனால் மார்க்கத்தின் மேலான அறிவுகள் யாவும் உள்ளுணர்வினால் மட்டுமே எய்த முடிந்தவை. பகுத்தறிவுச் சிந்தனையால் அந்தப் புலங்களுக்குள் நுழையவே முடியாது. அதற்கு இலக்கியப் பயிற்சியும் ஆன்மிகப் பயிற்சியும் தேவை. ஆனால் மண்டூக மண்டையர்கள் அவை எதுவும் இஸ்லாத்தில் இல்லை என்பதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து பரப்புகின்றார்கள். அதனால் முஸ்லிம் சமூகம் அடைந்து வருகின்ற சரிவு அதிகம். குர்ஆன் மற்றும் ஹதீசைச் சார்ந்து, ஆன்மிகப் பயிற்சிகளால் அடையப் பெறுகின்ற  இல்ஹாம் என்னும் உள்ளுதிப்புக் கொண்டு பல இறைநேசர்கள் கவித்துவ நடையில் தமது கண்டடைதல்களை, ஞான விளக்கங்களை எழுதி வைத்திருக்கிறார்கள்.

      நபித்தோழர்கள் தொட்டு இற்றை நாள் வரை எழுந்த இஸ்லாமியக் கவிதைகளை வாசித்துப் பாருங்கள், இலக்கியச் சிந்தனைப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள் என்று நான் மேலே சொன்னேன். அதற்குக் காரணம், அதனெதிர் நிலையாக வஹ்ஹாபிகள் ‘கவிதை என்பதே முற்றிலும் ஹராம். அதற்கு இஸ்லாத்தில் இடமே இல்லை’ என்பது போன்ற பார்வையை ஊட்டி வருகிறார்கள் என்பதற்குத்தான். ஒருவர் எல்லாக் கவிதைகளுமே நறுமணம் வீசுகின்றன என்று சொன்னால் அது எப்படி வழிகேடோ அதே போல் ஒருவர் எல்லாக் கவிதைகளுமே துர்நாற்றம் வீசுகின்றன என்று சொன்னால் அதுவும் வழிகேடுதான். இரண்டு பேருக்குமே மூக்கு மரணித்துக் கிடக்கிறது என்பது ருஜுவாகிறது. உன் அகமூக்கில் ஆரோக்கியம் இருந்தால் நறுமணத்தையும் துர்நாற்றத்தையும் பிரித்துக் கண்டுகொள்வாய்.

      மீண்டும், இக்கட்டுரையின் மையப் பொருண்மைக்குத் திரும்புகிறேன். ’இறைவன் சொல்கிறான்…’ என்று தொடங்கி ஒருவர் பேசும்போது அல்லது கவிதையிலோ கட்டுரையிலோ எழுதும்போது அது தரும் மேற்கோள் செய்தி ஒன்று குர்ஆனின் நேரிட்ட மொழிபெயர்ப்பாக இருக்கலாம், அல்லது அதன் தழுவல் மொழிபெயர்ப்பாக இருக்கலாம், அல்லது அது தரும் கருத்தின் வெளிப்பாடாக இருக்க்கலாம், அல்லது ஏதேனுமொரு ஹதீசை வைத்து மேற்சொன்ன மூன்று நிலைகளில் அமையலாம், அல்லது அந்த ஆளுமையின் இதயத்தில் உள்ளுதிப்பாக (இல்ஹாம்) இறைவனால் உணர்த்தப்பட்ட ஞான விளக்கமாக இருக்கலாம். (இதனை இல்மெ லதுன்னீ (காண்க: குர்ஆன்: 18:65) என்றும் தப்ஸீர் (அகப்பார்வைக் காட்சி) என்றும் சொல்வர். இக்கட்டுரையில் இப்போது இப்பொருண்மைகளைத் தொட்டு விளக்க இடமில்லை. இணையத்தில் ஏராளமான விளக்கங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் கண்டுகொள்க. இறைவன் உங்களுக்கு நாடியபடி அதன் உடன்பாட்டு விளக்கங்களையோ அல்லது அதற்கு எதிர்மறையான விளக்கங்களையோ அடைவீர்கள்.) இதில் எப்படி அமைந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ளாமல் ’அது தவறு முற்றிலும் பொய்யானது, அந்த வார்த்தைகள் குர்ஆனிலேயே இல்லை’ என்று மறுப்பது நியாயமாகாது.

      இவ்விளக்கங்களை எல்லாம் தாண்டி, நீ என்னதான் சொல்லு, இது தவறுதான். இறைவனிடமிருந்து இல்ஹாம் என்னும் உள்ளுதிப்பெல்லாம் யாருக்கும் வராது. அதெல்லாம் வழிகேடுதான். எனவே இப்படி எழுதுபவர்கள் எல்லாம் காஃபிர்கள்தான் (நிராகரிப்பாளர்கள்), அல்லது முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்)தான் என்று சொல்வீர்களானால் அது உங்கள் உரிமை ஐயா. தாராளமாக அழைத்துக்கொள்ளுங்கள். அப்படி அழைக்கப்பட்ட ஒரு ஞானக் கவிஞர் சமீபத்தில் மறைந்தார். கவிக்கோ அப்துல் ரகுமான். அவரின் கவிதை நூற்களில் ஒன்றான ‘ஆலாபனை’ என்பதிலிருந்து ஒரு கவிதையை நான் நினைவு கூர்ந்தேன். நீளமான அந்தக் கவிதையின் ஆரம்பத்தை மட்டும் இங்கே தருகிறேன்.
      ”ஆலாபனையைப் போல்
            மேலே வானத்தில்
ஆனந்தமாகப் பறக்கும்
      பறவைகளைப் பார்த்துப்
            பெருமூச்சு விட்ட
            மனிதன் கேட்டான்:
      இறைவா!
      உன் படைப்பின் உச்சி என்று
            என்னைப் பாராட்டுகிறாய்
            ஆனால் எனக்குச்
      சிறகுகளைத் தரவில்லையே நீ?
      இறைவன் சொன்னான்:
      என் செல்லப் பறவையே!
            உனக்குத் தெரிவதில்லை
            உனக்குத்தான்
      எத்தனை சிறகுகளைத்
            தந்திருக்கிறேன்!
      உன் சிறகுகள்
            இறகுகளால் ஆனவை
            அல்ல”
Image result for kaviko abdul rahman
kavikko abdul rahman.     

 இப்படித் தொடங்கி அந்தக் கவிதை இன்னும் இரண்டரைப் பக்கங்களுக்கு நீள்கிறது. அனைத்தும் ’இறைவன் சொன்னான்:’ என்பதன் கீழ், இறைவன் மனிதனிடம் பேசுபவையாக, அதாவது அல்லாஹ் அப்துல் ரகுமானிடம் பேசுபவையாக அமைகின்றன. அப்துல் மாலிக்கும் இம்தியாஸும் ஒருவேளை அப்துல் ரகுமானிடம் ரெஃபரன்ஸ் தரும்படிக் கேட்டிருந்தால் அவர் என்ன சொல்லியிருப்பார் என்று வியப்புடன் யோசித்தேன். அதே நூலில் அப்துல் ரகுமான் எழுதிய இன்னொரு கவிதை நியாபகம் வந்தது. அதன் ஆரம்பம் இது:

      ”தற்செயலாய் ஒருநாள் தொலைபேசியில்
            தவறான எண்ணில் சிக்கினான்
                  இறைவன்

      ’என்ன ஆச்சரியம்! இறைவனா?
      நீ தேடினால் கிடைப்பதில்லை
            இப்படித்தான் எதிர்பாராத வகையில்
            சிக்கிக்கொள்கிறாய்
      தொலைபேசியை வைத்துவிடாதே
      பல நாட்களாகவே
            என் இதயத்தைக் குடையும்
            சில கேள்விகளை
      உன்னிடம் கேட்கவேண்டும்’ என்றேன்”

      இப்படித்  தொடங்கும் அந்தக் கவிதையில், தொடர்ந்து இறைவனிடம் கவிஞர் பல கேள்விகளை கேட்கிறார். கேள்விகளின் முடிவில் கவிதை இப்படி முற்றுப் பெறுகிறது:
      ”’ராங் நம்பர்’ என்ற பதிலோடு
      இணைப்பு துண்டிக்கப்பட்டது”


      இதே பதிலைத்தான் அப்துல் ரகுமானும் சொல்லியிருக்கக் கூடும் என்று நினைத்துக்கொண்டேன். என் பதிவேற்றத்தைப் பற்றி அதே பதிலைத்தான் நானும் இப்போது சொல்லியாக வேண்டும். ’மன்னிக்கவும், தவறான எண்’.

the end.

No comments:

Post a Comment