Wednesday, November 27, 2013

கஸல் துளிகள்


விரல்கள் ரணமாக அவிழ்த்தேன்
காதல் மர்மங்களின் முடிச்சு ஒன்றை
நொடியில் தோன்றி நின்றன
நூறு முடிச்சுக்கள் இன்னும்
*

கண்ணாடி ஓவியம் நான்
’நான்’ இல்லாதுபோகும் இடமெல்லாம்
ஊடுருவிப் பாய்கிறது
உன் ஒளி
*
தேனீயைப் போல் சுறுசுறுப்பானவள்
தேனைப் போல் இனிமையானவள்
நெஞ்சே! மறந்துவிடாதே
விஷமுள்ள கொடுக்கும் இருக்கிறது!
*

உடல் வேறொரு காலத்தில்
உள்ளம் வேறொரு காலத்தில்
உயிர் முறுவல் பூக்கிறது
காலாதீதத்தில்

மூச்சு வேறொரு தாளத்தில்
பேச்சு வேறொரு தாளத்தில்
தியானம் மெல்ல சிரிக்கிறது
மௌன ராகத்தில்
*

மணமே அறிவித்துவிடுகின்றது
மலர்ந்த ரோஜாவை

புல்புலின்
புகழ்ப் பாடல்களால்
புல்புலையே அறிவிக்கிறது ரோஜா!

லைலாவின் அழகைச் சொல்கிறதாம்
மஜ்னூனின் அலங்கோலம்

லைலாவின் அழகு இல்லை எனில்
கயஸ்
மஜ்னூன் ஆவதெங்கே?
*

ஆதலினால் செய்யப்படுவதல்ல
காதல்

காதலினால் ஆகின்றன
எல்லாம்

*

No comments:

Post a Comment