Wednesday, January 9, 2013

வெயில் விழும் முற்றம்


”பாண்டிய மன்னனின் டைனோசர்” கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களில் சொர்ணமித்ரன் பின்வருமாறு கேட்டிருந்தார்: “மனிதர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும் என்று எப்போதும் தியானத்தில் இருந்ததால் வெளிப்பட்ட ஆழ்மனப் படிவம்தான் திருக்குர்ஆன் ஆக இருக்குமோ?”
இதற்கு உடனடியாக இரண்டு வரிகளில் பதில் எழுதிவிடலாம் என்று எண்ணியபோது மேலும் மேலும் தொடர்ந்து வந்த சிந்தனைகள் ஒரு தனி பதிவே எழுதிவிடத் தூண்டியது. உடனடியாக என் மனத்தில் இதே மாதிரி இரண்டு பேர் ஏற்கனவே சொன்ன பளிச்சிட்டன.

அந்த இருவரில் ஒருவர் கவிஞர் பழமலய். என் மாணவன் (பழனிச்சாமி) ஒருவனின் கவிதை நூல் ஒன்றினை (’பல காதல் கடிதங்களும் ஒரு கல்யாணப் பத்திரிகையும்’) வெளியிடுவதற்காக எங்கள் கல்லூரிக்கு வந்திருந்தார். அப்போது மேடையில் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார், “நபிகள் நாயகம் ஹிரா என்னும் குகையில் தனிமையில் இருந்து சிந்தித்தார்கள். அப்போது மனித குலத்துக்கு வழிகாட்டும் சிந்தனைகளை அவர்கள் தந்தார்கள். அதுதான் திருக்குர்ஆன் என்று நாங்கள் பார்க்கிறோம். ஆமாம், எங்களைப் போன்ற பகுத்தறிவாளர்கள் அப்படித்தான் பார்க்கிறோம். ஒரு நல்ல மனிதரின் சிந்தனையின் வெளிப்பாடுதான் திருக்குர்ஆன் என்பதுதான் எங்களின் பார்வை.”

இன்னொருவர் ஓஷோ. அவர் ஓரிடத்தில் இவ்வாறு சொல்கிறார்: “நபியின் மனத்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதியுடன் பேசியது. அதுதான் இறைவெளிப்பாடு என்று அவரால் புரிந்துகொள்ளப்பட்டு வேதம் என்று முன்வைக்கப்பட்டது.”

இவ்விரு கருத்துக்களைத்தான் சொர்ணமித்ரனின் கருத்தும் பிரதிபலிக்கிறது என்று காண்கிறேன். மனவியல் பற்றி ஆழமாகச் சென்றால்தான் இதனைப் பற்றிய உரையாடல் சாத்தியம். பழமலய் அவர்களின் கருத்து மேம்போக்கான மனத்தளத்தை (தர்க ரீதியான பகுத்தறிவு) மட்டுமே ஏற்கும் ஒருவரின் கருத்தாகும். அந்த வகையில் சொர்ணமித்ரனின் கருத்து அதைவிட ஆழமானது என்று நான் காண்கிறேன். ஏனெனில் அவர் ஆழ்மனம் என்னும் தளத்தை ஏற்றுப் பேசுகிறார். ஓஷோவின் இக்கருத்து அவருடைய ஆயிரம் முரண்களில் ஒன்று. (I consistently contradict myself – ”நான் வேண்டுமென்றே எனக்கே முரண்படுகிறேன்” என்று சொன்னவர் அவர். அது ஏன் என்பதை அவரின் ஒவ்வொரு நூலின் தனிப்போக்கையும் அவதானித்தால்தான் தெரியும். கிருஷ்ணாவைப் பற்றிப் பேசுகையில் புத்தரும் ஏசுவும் முழுமையல்ல என்பார். புத்தரைப் பற்றிப் பேசுகையில் அவரே ஆன்மிகத்தின் சிகரம் என்பார். ஏசுவைப் பற்றிப் பேசுகையில் அவரே உச்சம் என்பார்.) அவர் பேசிய பல உரைகளில் இருந்தே அவரின் இக்கருத்தை உடைப்பதற்கான அல்லது தாண்டுவதற்கான பார்வைகளை எடுத்துக் கொள்ள முடியும். ஏனெனில், மனத்தின் பல அடுக்குகளைப் பற்றி உளவியல் ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் அவர் மிக விரிவாகப் பேசியிருக்கிறார்.

சிக்மண்ட் ஃப்ராய்ட் மனித மனத்தைப் பகுத்தாய்ந்து பிரதானமாக மூன்று அடுக்குகளைப் பற்றியே பேசினார். நினைவு, உபநினைவு மற்றும் நினைவிலி (consciuous, sub-conscious and un-conscious). இவற்றிலும் அவர் அதிக அழுத்தம் கொடுத்துப் பேசியது நினைவிலி மன அடுக்கு பற்றித்தான். அதன் செயல்பாடாக அவர் கனவு என்பதை ஆராய்ந்தார். ”கனவுகளில்தான் மனிதன் உண்மையாளனாக இருக்கிறான்” என்று அவர் சொன்னார்.

அவரின் மாணவரான கார்ல் குஸ்தாவ் யுங் தன் ஆசிரியரின் மன-அடுக்குகளுக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுத்தார். ஆசிரியரின் பார்வை மனித மனம் தனியே இருப்பதாக பாவித்தது என்றால் யுங் அதனை மறுத்து மனித மனம் தனியே இல்லை, அது ஒரு கூட்டமைப்பின் பாகம்தான் என்று சொன்னார். ஒவ்வொரு மனமும் கூட்டு நினைவு மற்றும் கூட்டு நினைவிலி (collective consciousness and collective unconsciousness) ஆகிய தன்மைகளைப் பின்னணியில் கொண்டு இயங்குகிறது என்று அவர் சொன்னார். கீழைத்தேய ஞான மரபுகளில் (இந்துமதம் மற்றும் பௌத்தம்) ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தவர் யுங் என்பது முக்கியமானது.

இருபதாம் நூற்றாண்டில் உளவியலை ஒரு மருத்துவமாக வடிவமைத்து மனித வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய இவ்விருவரும் மனித மனம் பற்றி முன்வைத்த சிந்தனைகளை விடவும் இன்னும் ஆழமாகச் செல்கிறது கீழைத்தேய ஞான மரபு. மனிதப் பிரக்ஞையின் மூன்று நிலைகளாக மண்டூக்ய உபநிஷத் குறிப்பிடுவன: ஜாக்ரத் (விழிப்பு), ஸ்வப்னம் (கனவு) மற்றும் சுஷுப்தி (கனவற்ற உறக்கம்). இம்மூன்றும் முறையே சிக்மண்ட் ஃப்ராய்டு குறிப்பிட்ட நினைவு, உபநினைவு மற்றும் நினைவிலி ஆகிய மூன்று நிலைகளைக் குறிபபதாகச் சொல்பவர்கள் உண்டு.

இந்த மூன்று நிலைகளும் சராசரியான எல்லா மனிதர்களிடமும் இருப்பதுதான் என்றும் யோகிகள் இம்மூன்று நிலைகளுக்கு அப்பால் தங்கள் பிரக்ஞையைக் கொண்டு சென்று அதில் நிலைத்திருப்பவர்கள் என்றும் மேடம் ப்ளவாட்ஸ்கி கூறுகிறார். “நான் சாதாரண மனிதர்களைப் பற்றிப் பேசுகிறேன். மேதை, குரு, யோகி, புத்தன் – இவர்கள் ஒவ்வொருவரும் இந்த மண்ணில் வாழும்போதே இந்த மூன்று நிலைகளுக்கும் மேலான நிலையில் அதே சமயம் இம்மூன்று நிலைகளையும் குறித்த முழுமையான சுதாரிப்புடன் வாழ்கின்றார்கள். ஆனால் சாதாரண மனிதனுக்கு முதல் நிலையில் (ஜாக்ரத்) மட்டுமே சுதாரிப்பு இருக்கின்றது. இம்மூன்று நிலைகளையும் முழுமையாக அறிவதன் முக்கியத்தை உணர்ந்த ஆத்ம சாதகன் ஒவ்வொருவனும் ஸ்வப்ன நிலையில் சுஷுப்தியின் அனுபவத்தையும் ஜாக்ரத் நிலையில் ஸ்வப்னத்தின் அனுபவத்தையும் (இவற்றிற்கு எதிர்திசையிலும்) இழக்காமல் இருப்பது எப்படி என்றும் அறிவது அவசியம்.” (THE THREE PLANES OF HUMAN LIFE: JAGRATA, SWAPNA, SUSHUPTI: WAKING, DREAMING, DREAMLESS SLEEP.)

இந்த மூன்று நிலைகளிலும் சத்தியம் (மெய்ம்மை) அறியப்படுவது இல்லை என்றும் இம்மூன்று நிலைகளில் ஏற்படுவது என்னவெனில் சத்தியத்தை அறியாமையும் சத்தியத்தை மாற்றி அறியும் தவறுமே ஆகும் என்று ”மண்டூக்ய காரிகை”யில் கௌடபாதர் சொல்கிறார்.
இம்மூன்று நிலைகளையும் கடந்தவையான இரண்டு நிலைகளைப் பற்றி இரண்டாம் நிலையிலான உபநிஷத்கள் பேசுகின்றன. அவை: துரியம் மற்றும் துரியாதீதம். துரியம் என்னும் நிலையே விளக்க மிகவும் கடினமானது என்பதை அதன் பெயரே காட்டுகின்றது. துரியம் என்றால் ‘நான்காவது’ என்று மட்டுமே பொருள். விழிப்பு கனவு உறக்கம் என்பதைப் போல் இதற்கு அனுபவத்தைக் குறிக்கும் பெயர் இல்லை. துரியாதீதம் என்பது ’நான்காவதைக் கடந்தது’ என்று அர்த்தமாகிறது.

இவ்வைந்து நிலைகளும் ’மண்டல ப்ராஹ்மண உபநிஷத்’ என்னும் சிறு உபநிஷத்தில் சொல்லப்பட்டுள்ளன. இவை ஆத்மாவின் அவஸ்தைகள் (நிலைகள்) என்று கூறப்படுகின்றன.
“ஐந்து அவஸ்தைகள் உள்ளன: ஜாக்ரத், ஸ்வப்னா, சுஷுப்தி, துரியம், துரியாதீதம். துரியத்தைக் கடந்து முழுமையாய் இருக்கும் பிரம்மத்தை அறிந்தவனே யோகி.” (2:4,5)

இந்த ஐந்து நிலைகளையும் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் ரமண மகரிஷி விளக்கிப் பேசியுள்ளார். முதல் மூன்று நிலைகளும் தற்காலிகமானவை என்றும் அடுத்த இரண்டு நிலைகளும் இம்மூன்றுக்கும் அடித்தளமாக இருப்பதோடு நிரந்தரமான சத்திய நிலைகள் என்றும் சொல்லியிருக்கிறார். துரியமும் துரியாதீதமும் அவ்வளவாக வேறுபடுத்திக் காணவியலாத நிலைகள் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

“ஆத்மா என்றும் இதயத்தில் உள்ளது. ஜாக்ரத் (விழிப்பு) நிலையில் இதயம் சலனமுறாதபோது எண்ணங்கள் நிற்கின்றன. அந்நிலையே துரியம். ஆத்மா பரம்பொருளில் மூழ்கும் நிலையே துரியாதீதம். தாவர இனம் எப்போதும் சுஷுப்தி நிலையில் உள்ளது. விலங்கினத்துக்கு சுஷுப்தியும் ஸ்வப்னமும் உண்டு. தேவர்கள் எப்போதும் ஜாக்ரத் என்னும் நிலையிலேயே இருக்கின்றனர். மனிதனுக்கு மூன்று நிலைகளும் உண்டு. ஆனால், விழிப்படைந்த யோகி எப்போதும் துரிய நிலையில் இருக்கிறார். மேலான யோகியோ துரியாதீத நிலையில் உறைபவராகிறார். முதல் மூன்று நிலைகல் சராசரி மனிதனில் மாறி மாறி அனிச்சையாகவே உண்டாகின்றன. ஆனால் துரியமும் துரியாதீதமும் பயிற்சிகளால் வருவனவாகவும் விடுதலைக்கான வழிகளாகவும் உள்ளன. முதல் மூன்று நிலைகளில் ஒவ்வொன்றும் மற்றதிலிருந்து வேறுபட்டதாகவும் கால-இடப் பரிமாணங்களால் கட்டுண்டதாகவும் உள்ளன. எனவே அவை பொய்யானவை.” (Talks with Ramana Maharishi, talk #617, 23rd-28th January, 1938.)

இந்த ஐந்து நிலைகளையும் தமிழகச் சூழலில் வள்ளலாரிடம் காணலாம். அவருக்கும் முன்பே தாயுமானவரிடம் காணலாம். அவருக்கும் முன்னரே திருமூலரிடம் காணலாம். சித்தர்களின் பாடல்களிலும் குணங்குடி மஸ்தான் சாகிபு உள்ளிட்ட தமிழக சூஃபிகளிடமும் இந்தக் கருத்தாக்கங்களைக் காணமுடிகிறது.

சூஃபித்துவத்தில் பேசப்படும் பிரக்ஞை நிலைளான முராக்கபா, முஷாஹதா, ஃபனா, பகா போன்றவற்றுடன் இவற்றை ஒப்பிட்டுப் பேச இடமுள்ளது. உதாரணமாக, மேலே ரமண மகரிஷி சொன்னதில் ஒரு கருத்தை அவதானிப்போம்: “தேவர்கள் எப்போதும் ஜாக்ரத் நிலையிலேயே இருக்கிறார்கள்”. சூஃபித்துவ ஜார்கனில் தேவர்கள் என்றால் மலாஇக் (வானவர்கள்) என்று கொள்ளலாம். வானவர்களுக்கு உறக்கமில்லை என்றாகிறது. அதாவது, உறங்கா நிலை என்பது மலக்கானியத் என்னும் நிலை. இன்னொரு கருத்து “ஆத்மா எப்போதும் இதயத்தில் உறைகிறது”. இதை சூஃபி வெர்ஷன் ஆக்கினால், “ரூஹ் எப்போதும் கல்பில் உறைகிறது” என்றாகும். சரி, இப்போது நபிகள் நாயகம் (ஸல்) தன்னுடைய நிலையைப் பற்றிச் சொன்ன ஒரு நபிமொழி வாசகத்தைக் கவனிப்போம்: “என்னுடைய கண்கள்தான் உறங்குகின்றன, ஆனால் என்னுடைய இதயம் உறங்குவது இல்லை”. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), புகாரி ஷரீஃப், கிதாபுத் தராவீஹ்.)

ஆனால் நான் இந்த நிலைகளை எல்லாம் சுட்டிக் காட்டிப் பேசிக்கொண்டிருப்பதன் நோக்கம் – நாம் இந்நிலைகளில் எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்பதை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும் என்பதுதான்.

சட்டென்று ஒரு நூல் இங்கே நியாபகத்தில் குறுக்கிடுகிறது. ஸ்காட் ஆடம்ஸ் எழுதிய “God’s Debris”. அதில் அவர் விழிப்புணர்வின் ஐந்து நிலைகளைக் குறிப்பிடுகிறார். அதில் வரும் ஒரு முதியவர் ஐந்தாம் நிலை விழிப்புணர்வில் வாழ்பவர். தனக்கு அடுத்ததாக அந்த நிலைக்கு ஒரு மனிதனைத் தூக்கிவிட அவர் செயல்படுகிறார். அவர் தேர்ந்தெடுக்கும் ஒருவன் கூரியர்காரன்! நாவலின் கடைசி அத்தியாயத்தின் தலைப்பு ”Fifth Level” (ஐந்தாம் நிலை). அதில் அந்த முதியவரை நோக்கி அவர் மனிதர்தானா என்னும் கேள்வியை அந்தக் கூரியர்மேன் கேட்கிறான். பின்வரும் உரையாடல் பகுதி அப்போது நிகழ்வது:
“எனக்குப் புரிகிறது. ஆம், நான் மனிதன்தான். நானொரு ஐந்தாம் நிலை மனிதன். அவதார்”
“ஐந்தாம் நிலைன்னா?”
“மக்கள் வெவ்வேறு விழிப்புணர்வு நிலைகளில் வாழ்கின்றனர். அவதார் என்பவர் அதன் ஐந்தாம் நிலையில் வாழ்பவர்.”
“விழிப்புணர்வு என்பது நுண்ணறிவு மாதிரியா?” – நான் கேட்டேன். (Is awareness like intelligence? I asked.)
“இல்லை. நுண்ணறிவு என்பது ஒருவர் தனது விழிப்புணர்வு நிலையில் எந்த அளவு திறமையாக இயங்குகிறார் என்பதற்கான மதிப்பீடு. உன் வாழ்நாளில் உன் நுண்ணறிவு என்பது அதே நிலையில்தான் பெரும்பாலும் இருந்துவிடும். ஆனால் விழிப்புணர்வு என்பது நுண்ணறிவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. விழிப்புணர்வு என்பது உன்னுடைய மயக்கங்களை நீ அடையாளம் காண்பது சம்பந்தப்பட்டது. பெரும்பாலும் மனிதர்களின் விழிப்புணர்வு அவர்களின் ஒரு வாழ்நாளில் ஒன்று அல்லது இரண்டு நிலைகள் மேலுயரக் கூடும்.”

இதையும் மேற்சொன்ன நோக்கத்துடன் சேர்த்துக்கொள்ளவும். அதாவது நாம் எந்தப் படியில் நின்றுகொண்டிருக்கிறோம் என்று நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

கனவு நிலை என்பதை சுஷுப்தி என்னும் ஒற்றை நிலையாகக் குறிப்பிட்டுப் பேசினோம். ஆனால் அதிலும் உள்நிலைகள் பலவுண்டு என்பதை அவதானிக்கும் போது விஷயம் இன்னும் சிக்கலாகிறது.

கனவு ஐந்து வகைப்படும் என்று பிரித்து விளக்குகிறார் சிக்மண்டு ஃப்ராய்டு:
1.Displacement, 2. Projection, 3. Symbolization, 4. Condensation and 5. Rationalization.

இந்த ஐந்து வகைக் கனவுகளுக்குமே அடிப்படையாக அவர் கொண்டது நிறைவேறாத ஆசைகளையும் பாலியலையும் மட்டுமே. இந்த ஐந்து வகைக்கனவுகள் சராசரி மனிதர்கள் அனைவருக்கும் உண்டாகுபவை. சிக்மண்டு ஃப்ராய்டின் உளவியல் பகுப்பாய்வின் மிகப்பெரிய குறைபாடு என்னவெனில் அவர் சராசரி நிலையை விட்டும் கீழ்நிலைக்கு வீழ்ந்த (பிறழ்ந்த) மனிதர்களையே ஆய்வுக்கு உட்படுத்திச் சோதனை செய்தார் என்பதுதான் என்கிறார் ஓஷோ. அவருடைய நினைவு, உபநினைவு மற்றும் நினைவிலி என்னும் மூன்று மன அடுக்குகளும் மேலிருந்து கீழே இறங்குபவையாக உள்ளதைச் சுட்டிக் காட்டி அதிநினைவு (super- consciousness) என்னும் நிலை பற்றி அவர் கண்டுகொள்ளாதது அவருடைய உளவியல் ஆய்வு முழுமையற்றது என்பதைக் காட்டுவதாகச் சொன்னார். ஃப்ராய்டுக்குத் தெரிந்ததெல்லாம் மனப்பிறழ்வு நிலை கொண்ட அ-இயல்பான (abnormal) மனிதனைத்தான். அந்நிலையிலிருந்துதான் அதற்கு எதிரானதான இயல்பான (normal) மனிதனை அவர் வரையறுக்க முனைந்தார். ஆனால் சராசரி மனித நிலைக்கு மேலே செல்லக்கூடிய ஆன்மிக நிலையிலான அதிமனிதனை (super normal; அரவிந்தரின் மொழியில் சொன்னால் super-human) அவர் பேசவே இல்லை.

”நமக்கு ஏழுவகை உடல்கள் உள்ளன. ஒவ்வொரு உடலுக்கும் ஒருவகைக் கனவு உண்டு” என்று சொல்கிறார் ஓஷோ. We have seven bodies – the physical, the etheric, the astral, the mental, the spiritual, the cosmic and the nirvanic – so there is the possibility of seven types of dreams என்று அவர் சொல்லி மேலும் அவற்றை விளக்கிச் செல்லும்போது ஃப்ராய்டின் அணுகுமுறை எவ்வளவு மேம்போக்கானது என்பதை நாம் உணர முடிகிறது. ஃப்ராய்டின் உழைப்பு சாதாரணமானதா? என்ன இப்படிச் சொல்கிறீர்கள் என்று கோபிக்க வேண்டாம். தலையணை சைஸ்களில் அவர் எழுதிக் குவித்திருந்தாலும் அவரின் பணி மேம்போக்கானதுதான். இதை அவரின் முதன்மை மாணவரான கார்ல் குஸ்தாவ் யுங்கே உணர்ந்திருந்த காரணத்தால்தான் அவர் தன் ஆசானைப் பிரிந்து கிழக்கத்திய ஆன்மிகத்தின் பக்கம் வந்தார். ஃப்ராய்டின் பணியை இப்படிச் சொல்லலாம்: ஒருவர் சாணி பற்றி பி.எச்டி ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கலாம். ஆனால் அது பசுவைப் பற்றிய உண்மைகளை முழுமையாக வெளிப்படுத்த முடியாது! முடியவே முடியாது! ஏனெனில், சாணி என்பது பசுவிலிருந்து வந்ததாக இருந்தாலும் அதுவே பசு அல்ல! அதுபோல் ஃப்ராய்டு ஆராய்ந்த மனிதமனம் சராசரிகளின் மனம்தான். அதி மனிதர்களின் பிரக்ஞை நிலைகள் பற்றிய பகுப்பாய்வை அவர் நிகழ்த்தவில்லை.

”தேடாதே” என்று ஒரு நூல். உளவியல் மருத்துவர் டாக்டர் ருத்ரன் எழுதியது. அந்நூலின் பிற்பகுதியில் நோயசிஸ் மற்றும் யூனியோ மிஸ்டிகா என்னும் இரண்டு விழிப்புணர்வு நிலைகள் பற்றி அவர் அலசுகிறார். அந்த நிலைகளை விளக்க இப்போது மேற்குலகம் உருவாக்கி வைத்திருக்கும் உளவியல் கோட்பாடுகள் போதுமானதாக இல்லை என்பதை அவர் அழுத்தமாகச் சொல்கிறார்.

கனவு பற்றிச் சொல்கையில் இன்னொரு விஷயம் நியாபகம் வந்தது. இறைத்தூதர்களின் கனவும் இறைவெளிப்பாடுதான் என்னும் கோட்பாடு, நம்பிக்கை இஸ்லாத்தில் உண்டு. நபி (ஸல்) தனக்கு ஆரம்பகால இறைவெளிப்பாடுகள் பெருமாலும் கனவுகளாகவே வெளிப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல வண்டின் ரீங்காரம் போன்றும் மணி ஓசை போன்றும் இறைவெளிப்பாடுகள் (வேதத்தின் வசனங்கள்) வந்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். இவ்வாறு சராசரி மனிதனுக்குக் கேட்பது வேறு; இறைத்தூதர்களுக்குக் கேட்பது வேறு என்றுதான் நானும் நம்புகிறேன். ஃப்ராய்டிய உளவியல் அளவுகோலைப் பயன்படுத்தி அலசினால் இவை மனநோய்க்கூறுகள் என்றுதான் அது சொல்லும். ஆனால் அந்த அளவுகோல்கள் தயாரிக்கப்பட்டதே அ-இயல்பு மனிதர்களை வைத்துத்தான் என்பதைக் கவனிக்க அந்த அளவுகோல்களின் நம்பகத்தன்மையே அடிபட்டுப் போய்விடுகிறது!

இப்றாஹீம் நபிக்குக் கனவில் வந்த இறைக்கட்டளைதான் அவர் தன் மகனான இஸ்மாயீல் நபியை அறுத்துப் பலியிட வேண்டும் என்பது. அவர்கள் அதனைச் செயல்படுத்த முனைந்தார்கள். கனவாயிற்றே என்று தயங்கவில்லை. ஏனெனில், சராசரி மனிதர்களின் கனவுகள் ஆழ்மனப் படிவங்களின் வெளிப்பாடாக இருக்கலாம்; ஆனால் இறைத்தூதர்களின் கனவுகளின் மூலம் அந்த நிலையைத் தாண்டியது, அது பரம்பொருளிடமிருந்து வருகிறது என்பது ஓர் இறைத்தூதருக்கு மிகத் தெளிவாகவே தெரியும். ஆனால் அவர்களின் விழிப்புணர்வு நிலையில் இல்லாத நாம் அதை அளவிடவே முடியாது.

மேனிலைகள் இன்னும் பூடகமாகவே இருக்கின்றன என்பது உண்மைதான். அதனால்தான் அவற்றை விளக்க குறியீடுகளையும் படிமங்களையும் கையாண்டு பேசியிருக்கிறார்கள். வேறு வழி இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஆழ்மனப் படிவங்கள் என்று பேசும்போது நம்முடைய ஆழ்மனம் பற்றியும் படிம பாஷையில் ஒரு விளக்கத்தைத் தர நாடுகிறேன்.

ஆழ்மனம் என்பது படிமங்கள் கொட்டிக்கிடக்கும் ஒரு இடம். அதாவது ஆழ்மனத்தில் படிமங்கள் திரையாகத் தொங்குகின்றன. ஆனால் அந்தத் திரைகளை அசைத்தபடி உள்ளே பாயும் காற்று அந்தத் திரைகளுக்கு அப்பால் இருந்து வருகிறது. காற்று அந்தத் திரைகளில் உற்பத்தி ஆகி வருகிறது என்று சொல்வது மடத்தனம். இறைத்தூதருக்கு அருளப்பட்ட வேத வெளிப்பாடுகள் ஆழ்மனப் பதிவுகளின் வெளிப்பாடாக இருக்கலாமல்லவா என்று கேட்பதும் வீசும் இக்காற்று திரையில் பிறந்ததாக இருக்கலாம் அல்லவா என்று கேட்பதும் ஒன்றுதான்!

ஒரு மலைத்தொடரைக் கற்பனை செய்யுங்கள். அடுக்கடுக்காக மலைகள். ஒன்றை விடவும் அடுத்தது இன்னும் உயரமானது என்னும்படியாக அமைந்த ஏழு மலைகள். முதல் ஆறு மலைகளுக்குப் பாதைகளும் படிகளும் இருக்கின்றன. ஏழாவது மலைக்குச் செல்ல படிகள் இல்லை. சிலர் முதல் மலையிலேயே வசித்து வருகிறார்கள். அவர்களில் சிலர் இரண்டாம் மலைக்கு அவ்வப்போது சென்று வருவது உண்டு. இரண்டாம் மலையிலேயே வாழ்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் அவ்வப்போது முதலாம் மலைக்கு வந்துவிட்டுப் போவார்கள்.
இப்படியாக முதல் மலையில் உள்ளவர்களுக்கு இரண்டாம் மலையைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. இரண்டாம் மலையில் உள்ள சிலர் அவ்வப்போது மூன்றாம் மலைக்குச் சென்று வருவதுண்டு. மூன்றாம் மலையிலும் வசிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் அவ்வப்போது இரண்டாம் மலைக்கும் முதலாம் மலைக்கும் வந்து செல்வதுண்டு. இவ்வாறு மூன்றாம் மலையைப் பற்றிய செய்தி இரண்டாம் மலையினருக்கும் முதலாம் மலையினருக்கும் கிடைக்கிறது. இதே போல் ஆறு மலைகளிலும் வசிப்பவர்கள் இருக்கிறார்கள், வந்து போகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஏழாம் மலையில் வசிப்பவர்கள் தனி வகையினர். ஆறாம் மலையிலிருந்து ஏழாம் மலைக்குச் செல்ல பாதைகள் ஏதுமில்லை. போகத் தடையும் இருக்கிறது. ஏழாம் மலைவாழ் நபர்கள் சிலர் கீழுள்ள மலைகளுக்கு வந்து செல்வது உண்டு. அப்படியாக ஏழாம் மலையைப் பற்றிய செய்திகள் பிற மலைவாழ் மக்களுக்குக் கிடைக்கின்றன. எனினும் ஏழாம் மலையைப் பற்றிய செய்திகளை ஆறாவது மலையில் உள்ளவர்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு அவர்களுக்குக் கீழே உள்ளவர்களால் விளங்கிக்கொள்ள இயலாது என்பது தெளிவு. ஏழாம் மலையின் வாசமும் தட்பவெப்பமும் ஆறாம் மலையினருக்கு உணரலாகும் வகையில் முதலாம் மலையினருக்குக் கிடைக்குமா சொல்லுங்கள்?

இந்த குறியீட்டுச் சித்திரம் இஸ்லாம் முன்வைக்கும் பிரக்ஞை நிலைகளை விளக்குவதற்காகச் சொல்லப்பட்டது. முஸ்லிம் முஃமின் முஹ்ஸின் முத்தகீ முவஹ்ஹித் என்னும் நிலைகளாகட்டும், அல்லது சாலீஹீன்கள், ஷுஹதாக்கள், சித்தீக்கீன்கள், அன்பியாக்கள் என்னும் நிலைகளாகட்டும் – இந்த உவமை அதற்கு விளக்கமாகும். இறைநேசர்கள் ஆறாம் மலையில் வாழ்பவர்கள் என்றும் இறைத்தூதர்கள் ஏழாம் மலையில் வாழ்பவர்கள் என்றும் புரிந்துகொள்ளுங்கள். முதல் மலையிலிருந்து ஆறாம் மலை வரை பாதைகள் உண்டு. அணுகல் (Access) இருவழியில் உண்டு. ஆனால் ஏழாம் மலைக்குப் போக கீழிருந்து அணுகல் இல்லை. மேலிருந்து கீழாக உண்டு. ஒரு மனிதன் இறைநேசர் என்னும் நிலை வரை முன்னேற ஆன்மிகத்தில் பயிற்சிகளும் முயற்சிகளும் இடமளிக்கின்றன. ஆனால் எவ்வளவு பயிற்சியும் முயற்சியும் ஒருவரை இறைத்தூதராக்க முடியாது என்பதே இஸ்லாமியக் கொள்கை. இறைத்தூதர் என்னும் ஸ்தானம் இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்டோருக்கு வழங்கப் படுவது.

இந்துமதத்தில் உள்ள வேறுபாடு என்னவெனில் ஆறாம் மலையிலிருந்து ஏழாம் மலைக்கும் பாதைகள் உள்ளன என்பதாகும். மட்டுமல்ல அதற்கு அப்பாலும் போய்க் கரைந்துவிடலாம் என்பதும் ஏற்கப்படுகிறது. ஆனால் படைப்பு ஒருபோதும் பரம்பொருளாக முடியாது என்பதே இஸ்லாத்தின் பார்வை. மனிதர்களிலும், இறைத்தூதர்களாவது நம் முயற்சியில் அல்ல என்பதும், எந்த மனிதரும் இறைநேசர் என்னும் நிலை வரை எட்ட வாய்ப்புள்ளது என்பதும் மட்டுமே ஏற்கப்படுகிறது.

இங்கே இன்னொன்றையும் சொல்ல வேண்டும். புலன்களுக்கு அப்பாற்பட்ட ஞானம், பகுத்தறிவு – தர்க்கம் இவற்றுக்கு அப்பாலான உள்ளுணர்வு என்றெல்லாம் பேசுகின்றபோது இஸ்லாத்தில் வலியுறுத்தப்படுவது என்னவெனில் இருவகையான உதிப்புக்கள் உள்ளன என்பதாகும். அவை, வஹீ என்னும் இறைவெளிப்பாடும் இல்ஹாம் என்னும் அகவுதிப்புமாகும். வஹீ என்னும் இறைச்செய்தி இறைத்தூதர்களுக்கு மட்டுமே வருவது. ஆனால் இல்ஹாம் என்னும் அகஉதிப்பு மட்டுமே ஏனைய மனிதர்களில் இறைநேசம் (விலாயத்) என்னும் நிலையை அடைந்தவர்களுக்கு உண்டாவதாகும். இறைத்தூதர்களை அன்றி வேறு எவருக்கும் இறைச்செய்தி வெளிப்பாடு என்னும் வஹீ அருளப்படுவதில்லை. (எனினும் அல்லாஹ் திருக்குர்ஆனில் இரண்டு இடங்களில் அகவுதிப்பை வஹீ என்னும் சொல்லால் கண்ணியம் கருதிப் பயன்படுத்தியிருக்கிறான்: தேனீக்கும் மூசா நபியின் தாய்க்கும்.)

”ஏழாம் மலையின் வாசமும் தட்பவெப்பமும் ஆறாம் மலையினருக்கு உணரலாகும் வகையில் முதலாம் மலையினருக்குக் கிடைக்குமா சொல்லுங்கள்?” என்று கேட்டேனல்லவா? அக்கருத்து இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களுடைய கருத்தின் பிரதிபலிப்பு. “அல்முன்கித் மினழ் ழலால்” (பிழையில் இருந்து விடுதலை) என்னும் நூலில் பல்வேறு அறிவுத் துறைகளை அலசி ஆராய்ந்து விளக்கியும் விலக்கியும் முடித்த பின்னர் இறுதியாகத் தான் சூஃபித்துவப் பாதைக்கு வந்தது ஏன் என்பதை அவர்கள் விளக்குகின்றார்கள். அதில் ஒரு புள்ளி இது: ”அகவுதிப்பின் (இல்ஹாம்) அனுபவத்தை அறிந்த ஒருவருக்குத்தான் இறைவெளிப்பாட்டின் (வஹீ) அனுபவம் எத்தகையதாக இருக்கும் என்பதை விளங்க முடியும்.” அதாவது, இல்ஹாம் என்பதை அனுபவித்த இறைநேசருக்கு வஹீ என்பதன் தாத்பரியத்தை விளங்கிக்கொள்வது எளிது. ஆனால் சிந்திப்பதே சிரமமாய் இருக்கும் சராசரி மண்டைக்கு வஹி என்பது நம்பிக்கை என்னும் அளவில் ஒரு கருத்துருவமாய் இருக்குமே அன்றி அதை விளங்குவது என்பதெல்லாம் சாத்தியமே இல்லை. எனவேதான் அகவிழிப்புணர்வு நிலைகளில் முன்னேறுவதற்கான பயிற்சிகளில் கவனம் செலுத்தி முயலுமாறு சூஃபித்துவம் கூறுகிறது.

நாம் முதல் மலையில் டீக்கடை பெஞ்ச்சில் அமர்ந்தபடி ஏழாம் மலையைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம்!

ஆனால் ஆறாவது மலையில் வசிப்பவர்களான இறைநேசர்கள் ஏழாம் மலையான நபித்துவம் பற்றி மிக கண்ணியமாகவும் பூடகமாகவும் பேசுகின்றார்கள்.

எந்த சூஃபி ஞானியும் தன்னை நபி என்று சொல்லிக் கொள்ளவில்லை. மாறாக அனைவருமே தங்களை நபி (ஸல்) அவர்களின் காலடித் தூசு என்றே சொல்லிக் கொண்டார்கள்!

நீங்களே எங்கள் இறைத்தூதர் என்று மௌலானா ரூமியிடம் சில பாமர ஜனங்கள் சொன்னபோது அதை அவர்கள் முற்றாக மறுத்து அவர்களுக்கு விளக்கிச் சொன்னார்கள். “மன் ஃகாக்கே ராஹே முஹம்மது முஃக்தாரம்” – ‘தேர்ந்தெடுக்கப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்களுடைய பாதையில் ஒரு தூசு நான்’ என்று குறிப்பிட்டார்கள்.

இன்னொரு படிமமும் தோன்றிற்று:
தலைக்குக் குளித்துவிட்டுத் துவட்டியபடி வந்த நான் கட்டிலின் மீதே துவாலையை விரித்துப் போட்டேன். அதைக் காயப்போடுங்கள் என்றாள் என் சகதர்மினி. எடுத்துக் கொண்டு வந்து ஹாலில் இருந்த நாற்காலிமீது போட்டேன். ’வெளியே வெயில் அடிக்கிறதே அங்கே போடுங்கள்’ என்றாள். சரிதான் என்று எடுத்துக் கொண்டுபோய் முற்றத்தில் இருந்த ஸ்டாண்டில் துவாலையைத் தொங்கவிட்டேன். வெயில் அதன்மீது படர்ந்து விழுந்தது.

இறைத்தூதரின் ஆழ்மனம் என்பதும் பரம்பொருள் என்னும் சூரியனின் ஞான வெயில் பாயும் முற்றம்தான்.

வெயில் என்பது முற்றத்திற்கு உரியது அல்ல; அது சூரியனுக்கு உரியது. ஆனால் அது அந்த வேளையில் முற்றத்தில் பாய்ச்சப் பட்டிருந்தது.

இறைத்தூதரின் மனமென்னும் முற்றத்தில் பாய்ந்தாலும் அந்த ஞானவெயில் இறைவனின் வாக்குதான்.

மட்டுமல்ல, ஒரு கண்ணாடியை வைத்து அந்த வெயிலை உள்ளே பாய்ச்சினால் அது உள்ளறைக்கும் வருமல்லவா? அப்போதும் அது சூரியனின் வெயில்தான். ஆனால் கண்ணாடியிலிருந்து பிரதிபலிப்பது.

சொல்லப்போனால், இறைத்தூதர் என்பவர் கண்ணாடி மாளிகையாக இருக்கிறார். அவரின் அனைத்து அம்சங்களிலும் சூரியனின் ஒளி ஊடுறுவிப் பாய்கின்றது.








4 comments:

  1. அபாரம்...நாலுதடவை படித்துவிட்டேன்...மீண்டும் படிக்கணும்...

    ரமணர் படிநிலைகளே நம் மனபரிபாகத்துக்கு ஏற்றதுக்காக உருவாக்கப்பட்டவையே என்பார்.அப்படி இல்லேன்னா நான் 'அதை' அடைஞ்சிட்டேன் என்று சாமானிய மனம் எதையாவது நினைச்சு தொடக்கத்திலேயே இருக்கும் என்பதால்.

    உதாரணமாக யோகாவில் உள்ள சக்கரங்களை ஓஷோ அவை ஏழு மட்டுமல்ல...அந்த பாதையில் உள்ள ஒவ்வொரு புள்ளியுமே சக்கரம்தான்.ஆனா உடலின் முன்பகுதியில் உள்ள அடையாளத்தை (பிறப்புறுப்பு,தொப்புள்,நெஞ்சு,கழுத்து,நெற்றி,உச்சந்தலை) வைத்து ஆறு என்றோ ஏழு என்றோ சொன்னால் ஆரம்பம் நல்லாருக்குமே என்பார்.

    ரமணரும் அதை அவை மனதில் உருவாக்கப்பட்ட படிக்கட்டுக்கள்...ஆனா நேரா கேள்வி கேள் நான் யார் என்பார்.பக்தி மரபில் இந்த சக்கரங்களுக்கு ஒவ்வொரு தெய்வத்தை அடையாளமாக்குவதை கூடவே கூடாது என்றார்.

    ஆனால் மனதில் புரிதலில் மனிதர்களுக்குள் வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.உயிர்களெல்லாம் சமமே.ஆனால் மனபரிபாகம் சமமே இல்லை.அதனால் படிக்கட்டுகள் அவசியமாகிறது.

    ஆழ்மனம் என்று ஒன்றைப்பற்றி பேசுகிறோம்..ஆழ்மனத்தையும் தாண்டி இருக்கும் ஒரு நிலையிலிருந்து வருவது 'அவனின்' வார்த்தையாகத்தான் இருக்கும்...அப்போது மனிதன்-அவனின் மனம் எல்லாமே 'அதை' ஏந்தி வரும் container மட்டுமே

    மொத்தத்தில் பகுத்தறிவு என்பதே வாய்க்கால் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கும் தாமரை இலை போலத்தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். மேல் பொருக்கு மட்டும்தான்.ஆழம் போகும்போது தன்னிலை தவறி போகவே செய்யும்.அப்போது பகுத்தறிவு வைத்து ஒன்றும் செய்வதற்கில்லை...சுனாமி வரும்போது குழந்தை கடல் மணலில் தன் சிறிய கைகளால் தடுப்பு கட்ட முயற்சி செய்வதுபோலத்தான் போல..

    ReplyDelete
  2. நான் இதைப் படிக்கும் நேரம் இரவு 1.30. சாதாரணமாக பிரம்ம முகூர்த்தத்தில்
    எழுந்திருக்கும் நான் ஏதோ ஒன்றினால் உந்தப்பட்டு இதைப் படிக்க மிகவும் முன்னதாகவே வந்து அமர்ந்தேன்.

    அருமையான கட்டுரை.நீங்கள் சொல்லியுள்ள‌ அனைத்துக்கும் ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகளில் பல உதாரணங்களைச் சுட்டலாம்.
    நாரதர் போன்றவர்கள் தாங்கள் கண்டவைகளை மக்களுக்கு எடுத்துக்கூற
    கீழிறங்கி வந்தார்கள் என்று அடிக்கடி கூறுவார்.நாரதர் எல்லா லோகங்களிலும் சஞ்சாரம் செய்தார் என்பது ஒரு வேளை நீங்கள் சொல்லும் நிலைகள் தானோ?

    கேதார்நாத் கோவில் வரை சிரமப்ப‌ட்டு எல்லோரும் போக முடிகிறது.ஓரளவு வழித்தடம் உண்டு. அதற்குப் பின்னால் இருக்கும் பனிமலையில் சாதாரணர்கள் ஏற முயற்சிப்பது கூட இல்லை.ஆனால் அதனையும் கடந்து மேலே செல்பவர்களும் உண்டு.அவர்களில் திரும்பிவந்து அங்கேயுள்ளவற்றை
    சொல்பவர்கள் துர்லபம்.

    'உப்பு பொம்மை கடலை அளக்கச்சென்றது.திரும்பிவந்து ஆழத்தை அதனால் சொல்ல முடியுமா?'என்பார்.

    பிராணாயாம மந்திரத்தில் பூ:, புவ:, சுவ:,மக:,ஜன:,தப:,சத்யம் என்று ஏழு நிலைகள் பேசப்படுகின்றன.இவைகளை ஏழு லோகங்கள் என்று உருவகப்படுத்திக் கொண்டு முச்சு உள்ளே இழுக்கப்படும்.பூ என்பது இந்த பூமி. சத்யம் என்பது ஈஸ்ரவனின் இருப்பிடம்.பூமியில் இருந்து சத்யலோகத்திற்குச் சென்று அடையும் பயணமே ஒரு மானுடன் செய்ய வேண்டியது.

    கடினமான செய்தியையும் எளிமையாகச் சொல்லும் உங்கள் பணி சிறக்கட்டும்.
    நல்ல‌ சிந்தனைகளை வாசிக்கக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.















    ReplyDelete
  3. sinthikka theriyadha sarasari mandai enakku sariyana sammti adi

    ReplyDelete