Saturday, January 5, 2013

மீண்டும் துளிக்கதைகள்


இன்று (4.1.2013) காலை பேராசிரியர்.வ.மு.யூனுஸ் துளிக்கதைகள் பற்றிய பதிவு பற்றி அடியேனுடன் பேசினார். ‘நீ சொல்லாமல் விட்டுவிட்ட ஒரு கதை இருக்கிறது, அதையும் சேர்த்துக்கொள்’ என்றார். சுஜாதாவின் ஒரு துளிக்கதை அது. தலைப்பையும் கதையையும் நீங்களே பாருங்கள்:
கரடி வேடமிட்ட மனிதனின் கடைசி வார்த்தைகள்:
“ஐயோ, சுட்டுடாத!”

கேட்டுவிட்டு எக்ஸெல்லெண்ட் என்று சொன்னேன். இதுபோல் கச்சிதமாக எல்லா நேரங்களிலும் எழுத முடியுமா என்பது ஐயம்தான். இதைக்காண சற்றே பெரிய துளி ஒன்று தோன்றியது எனக்கு
:
அதிர்ச்சி
போஸ்ட் மார்ட்டம் முடிந்து வீட்டிற்கு வந்தது உடல். அமுதன், வயது 8. ஊமை. தாய் கதறினாள். தந்தை வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்.  சக மாணவர்கள் கசிந்து அழுதார்கள். “பஸ் மோதப் போறப்ப அம்மான்னு கத்தினான் மாமா” என்றான் ஒரு பையன்.

மைக்ரோ ஃபிக்‌ஷன் / ஃப்ளாஷ் ஃபிக்‌ஷன் எழுதுவது ஒரு கலை. அரிசியில் சிற்பம் செதுக்குகிறார்களே அது மாதிரி. என்னதான் வெண் மார்பிளில் மாஸ்டர் பீசஸ் செதுக்கிய மைக்கேல் ஏஞ்சலோ போல் மேதைமைச் சிற்பி என்று சொல்ல முடியாவிட்டாலும் அரிசிச் சிற்பம் செய்பவனின் விரலிலும் கலைத்திறன் இருக்கத்தானே செய்கிறது?
துளிக்கதைகளைக் கொண்டாட ஒரு நாளே குறித்துவிட்டார்கள். மே16 “flash fiction day” என்று அறிவித்திருக்கிறார்கள். ஐ.நா சபையோ ஏதேனும் நாட்டின் அரசோ அல்ல, இவ்வகை இலக்கியத்தின்மீது தீரா மோகம் கொண்ட ரசிகர்கள் பலர் சேர்ந்துதான். கொண்டாட்டம் என்றால் எல்லோரும் சேர்ந்து இணையத்தின் வழி ஃப்ளாஷ் கதைகளைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு இணைய கார்னிவல். அந்தக் கொண்டாட்டத்திற்கு வடிவம் கொடுத்த துளிக்கதை வல்லுநரான டேவிட் கஃப்னே எழுதிய ஒரு கதை:
“ஒருமுறை நான் என் கதை ஒன்றின் கடைசி இரண்டு வரிகளை நீக்கிவிட்டு அனுப்பினேன், வெற்றுத் தாள்!”

அருமையான துளிக்கதைகள் எழுதுவதற்கு அவர் நமக்குச் சில டிப்ஸ் சொல்லித் தருகிறார்:
1.   கதையை நடுவில் ஆரம்பிக்கவும்.
(இந்தப் பாய்ண்ட்டைக் கேட்டபோது எனக்கு ஒரு பேட்டி நியாபகம் வந்தது. இயக்குநர் அமீர் எடுத்த ”ராம்” திரைப்படம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. மக்களுக்கு அதன் பல அம்சங்கள் புரியவே இல்லை என்றாலும் ஏதோ ஓர் ஈர்ப்பினால் பார்த்தார்கள். “அவன் ஏன் அப்படி சைக்கோவாக இருக்கிறான்? உங்கள் படத்தின் கதை பாதியில் ஆரம்பிப்பதைப் போல் இருக்கிறதே?” என்று ஒரு பேட்டியில் கேட்டிருந்தார்கள். அதாவது ஃப்ளாஷ் ஃபிக்‌ஷன் போல் அவர் கையாண்டிருந்த கதையில் ஃப்ளாஷ் பேக் இருந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். என்னத்த சொல்றது?)
2.   அதிகமான கதாபாத்திரங்களைப் பயன்படுத்தாதீர்கள்.
(அதாவது, துளிக்கதை என்பது ஒரு கோப்பைத் தேநீர் போல. தேநீர் போடுவதற்கு பிரியாணி தயாரிப்பது போன்ற சாமான்கள், முஸ்தீபுகள் தேவை இல்லை. ஆரம்பத்தில் கொஞ்சம் பக்கத்த காணோம் என்பது போல் ஃப்ளாஷ் கதைகள் நடுவில் ஆரம்பிக்குமாதலால் அதற்கு அதற்கு அதிக பட்சம் நாலு பேர் இருந்தாலே போதும்.)
3.   முடிவு கதையின் கடைசியில் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
(லொல்லுதானே இதெல்லாம்? கதையை நடுவுல ஆரம்பிக்கணுமாம், இதுல முடிவு கடைசியில் இருக்கக்கூடாதாம். இந்த ஆளு வீடு கட்டுணா எப்படிக் கட்டுவாரு? ’வாசல் வீட்டுக்கு நடுவுல இருக்கணுமுங்க. கொல்லப்பக்கம் அடுப்பங்கறைக்கு முன்னாடியே இருக்கணும்’ அப்படீன்னு சொல்லுவாரோ?)
4.   உயிரோட்டமுள்ள தலைப்பை வைக்கவும்
(தப்பாகப் புரிந்து கொண்டு சினிமா பாணியில் “இதயம்” என்றோ ”உயிரே” என்றோ வைத்துவிடாதீர்கள். அதே சமயம், for your eyes only என்னும் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்திற்கு “உங்கள் கண்களுக்கு விருந்து” என்று விளம்பரம் செய்தது போலவோ, 36 Chambers of Shaolin என்னும் படத்தை ’முப்பத்தாறு மொட்டைகளின் அட்டகாசங்கள்’ என்று சொன்னது போலவோ வைப்பதும் சரியாக இருக்காது. இதுக்கெல்லாம் சட்டத்தை விளக்க முடியாது. நாம பாத்து நல்ல பேரா வச்சிக்க வேண்டியதுதான்.)
5.   கதையின் கடைசி வரியில் படிப்பவர் மனத்தில் ஒரு மின்னல் வீச வேண்டும். (அல்லது பல்பு எரிய வேண்டும்).
(அதாவது, கதையின் நடுவில் – என்னங்கய்யா இது, தண்ணீர்த் துளியில் தலை எது? வால் எது? என்று மௌலானா ரூமி கேட்பது போல், நாலு வரி கதைக்கு இப்படியெல்லாம் அனாட்டமி பேசினால் நியாயமா? – சொல்லப்பட்ட கதை முடிவு வாசகனுக்குப் புலப்படாமல் மர்மமாக இருந்து அதைக் கடைசி வரி வெளிச்சமிட்டுக் காட்டுவதாக இருக்க வேண்டும்.)
6.   முதலில் கதையைப் பெரிதாக எழுதிக் கொண்டு பிறகு வேண்டாத பகுதிகளை நீக்கி நீக்கி அதைச் சின்னதாக்கவும். கல்லைச் செதுக்கிச் சிற்பம் ஆக்குவது போல்.
(அதற்காக கம்பராமாயணம் அளவுக்கு எழுதி அதை ஹைகூவாக மாற்றுகிறேன் என்று சில எழுத்தாளர்கள் முனையக் கூடும். சிலரிடம் நேரம் ரொம்ப ஓவராகவே இருக்கிறது ஐயா)

சற்றே பெரிய துளிகளை கவனிப்போம். டோ லாங் என்பவர் உள்ளங்கை அளவு கதைகள் எழுதித் தொகுத்து ஒரு நூல் வெளியிட்டிருக்கிறார். “The fool who invented kissing” (முத்தத்தைக் கண்டறிந்த முட்டாள்) என்பது அந்நூலின் தலைப்பு! அதிலிருந்து ஒரு சாம்ப்பிள்:

பண்ணை வீடு
முன்பு ஒரு பெரிய குடும்பத்தின் ஐந்து தலைமுறையினர் வாழ்ந்து மறைந்த பண்ணை வீடு அது. அவர்களின் கல்லறைகள் அந்தப் பண்ணையில் உள்ள குளக்கரையில்தான் இருக்கின்றன.
வாங்கிய பின் நானும் மேரியும் அந்தப் பண்ணை வீட்டின் சமையலறையை மராமத்துச் செய்துகொண்டிருந்தோம். மூன்று ஆவி உருவங்கள் மிதந்து வந்து முன்னால் நின்றன. “வரவேற்கிறோம். வேலையைத் தொடருங்கள்” என்று சொல்லிவிட்டு மிதந்து சென்று சுவரின் வழியே மறைந்தன.
பயத்தில் படபடத்து என் கைகளை இறுகப் பற்றியிருந்த மேரி என்னிடம் கேட்டாள், “செய்யவில்லைன்னா?”

ஸ்க்விட்ரிச் எழுதிய கதை:
மீளிணைவு
அவள் தன் கடைசி மூச்சை வெளியேற்றினாள். புதிய வாழ்க்கை தொடங்கியது.
அவளின் கண்கள் மெள்ள திறந்தன. ஒருகணம் வெளிச்சம் கூசிற்று. கண்களை இடுக்கித் திறந்தாள். குழப்பத்துடன் பார்த்தாள். அஃது அவளின் உடல் அல்ல. வலியும் இல்லை.
சற்றுத் தொலைவில் சிலர் வந்து கொண்டிருந்தனர். முகங்கள் அடையாளம் தெரிந்தது. அவளின் தந்தை, தாய், சகோதரன்... முன்னோர்கள்!

ஆலிஸ் ஆட்ரே என்பவர் எழுதியுள்ள ஃப்ளாஷ் கதைகள் பலவும் நன்றாக இருப்பதாக உணர்ந்தேன். நான்கு கதைகள் வெகுவாக என்னைக் கவர்ந்தன. தமிழுக்கு இட்டாந்துட்டேன்:

கூழாங்கல்
ஆற்றங்கரையில் கிடந்த கூழாங்கற்களில் ஒன்றை மெரிடித் தன் கையில் எடுத்தாள்.
”இது நமக்குப் பரிச்சயமான ஒன்றாகத் தெரிகிறது. இந்தக் கல் ஆற்றின் போக்கில் உருண்டு உருண்டு இப்படி வழவழப்பாக மாறியிருக்கிறது. கார்பன் டேட்டிங் செய்தால் இதன் வயதை அறியலாம். இதை மாதிரியான வேறு கற்களுடன் ஒப்பிட்டு இது எங்கிருந்து இங்கே வந்தது என்றும் கண்டுபிடிக்கலாம்” என்றாள் அவள்.
அருகிலிருந்த அவளின் சின்ன மகன் சட்டென்று சொன்னான், “எனக்குத் தெரியும் அம்மா, இது என் பெர்ரூமிலிருந்துதான் இங்கே வந்தது. நான்தான் இன்னிக்குக் காலைல இதை இங்க வீசி எறிந்தேன்!”

கட்டிலுக்கு அடியில்
அவனுக்குத் தூக்கம் வரவில்லை. சிறுவனாக இருக்கும்போது, கட்டிலுக்கு அடியில் ஒரு பேய் இருப்பதாகவும், தூக்கத்தில் அவனின் கையோ காலோ கட்டிலின் விளிம்பில் தொங்குவதற்காக அது காத்திருப்பதாகவும் அவன் கற்பனை செய்து பயந்தபடித் தூங்காமல் கிடப்பான். அப்படியும் சில நிமிடங்களில் தூக்கம் மிகைத்துவிடும். இப்போதோ, அவனைத் தூங்கவிடாமல் அலைகழிக்கும் பேய்கள் இன்னும் அதி பயங்கரமானவை: வியாபார நஷ்டம், வங்கிக்கடன், விவாகரத்து.
.
பூனைக்குட்டியின் சிறை
”பெட் ரெஸ்ட்” என்று சொன்னார் கால்நடை மருத்துவர்.
உடைந்த எலும்புகள் சேரும்வரை பூனைக்குட்டி அந்தக் கூண்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றார். ஆறு வாரங்கள் அசையாமல் படுத்திருக்க வேண்டுமாம். இதற்கு முன் தூங்கியதே இல்லை என்பது போல் கிடந்தது அது.
அதற்கான விடுதலை நாள் வந்து சேர்ந்தது. கூண்டின் கதவுகளைத் திறந்துவிட்டேன். ஆனால், நடப்பதையே மறந்துவிட்டது போல் அசைய மறுத்துப் படுத்துக்கிடந்தது என் பூனைக்குட்டி.

வலிமையாய் இரு

சிகிச்சைக்காக என்னிடம் வந்தான் அவன். சில நாள் சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதும், அவன் மகிழ்ச்சியாகவும் சகஜமாகவும் இன்னும் நன்றாகவும் இருப்பான் என்று நண்பர்கள் சொல்லியிருந்ததால் வந்திருந்தான்.
வினாப் படிவத்தை அவனிடம் தந்து குறிக்கச் சொன்னேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று காட்டியது. வேறு சில பயிற்சிகளும் அப்படியே தெரிவித்தன.
கை குலுக்கினேன். நன்றாகத்தான் இருக்கிறான். இருவரும் கேன்ட்டீனுக்கு வந்து அமர்ந்தோம். பேசத் தொடங்கியபோது உடைந்து அழ ஆரம்பித்தான்.

No comments:

Post a Comment