Thursday, July 15, 2021

தங்காத தங்கம்

 

வாழ்க்கை நிரந்தரம் இல்லை, வாழ்வில் எதுவும் நிலைப்பதில்லை என்னும் சிந்தனை எழாத மனிதன் இருக்க முடியாது. அதைப் பாடாத கவிஞனும் இருக்க முடியாது.

நிலையாமை பற்றி எத்தனையோ கவிதைகள் உள்ளன. அந்தச் சிந்தனையை வெளிப்படுத்தும் கவிதை மிக எளிதில் எதிர்மறைத் தொனியைப் பெற்றுவிடலாம். அதில் ஒரு சோர்வும் சோகமும் சுலபமாகச் சேர்ந்துவிடும்.

நிலையாமை பற்றிப் பேசும் கவிதை ஒன்று தன் அழகால் நம்மை வசீகரிக்கிறது என்பது மிகவும் அரிதானது. ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் ஃபிராஸ்ட் அத்தகைய கவிதை ஒன்றை எழுதியுள்ளார். “Nothing gold can stay” என்னும் கடைசி வரியே அதன் தலைப்பாக இடப்படுகிறது.

அது மிகவும் சிறிய கவிதை. எட்டு வரிகள் மட்டுமே. ஒவ்வொரு வரியும் மிக நிதானமாக நகரும் கவிதை அது. ஆம், அந்தக் கவிதையை நாம் அவசரமாக வாசிக்க முடியாது. அதன் அகத்திலேயே ஓர் உள்ளார்ந்த நிதானம் இருக்கின்றது.

நிலையாமை என்பது காலத்தால் உணரப்படும் ஒன்று. ’நேற்று இருந்தவன் இன்று இல்லை’ என்பதே இந்த உலகத்தின் பெருமை என்கிறார் திருவள்ளுவர்.

நிலையாமையைப் பேச வரும் ராபர்ட் ஃபிராஸ்ட் காலத்தையே கையில் எடுக்கிறார்:

            இயற்கையின் முதற்பசுமை

            தூய தங்கம்;

            தக்க வைக்கக் கடினமானது

            அவளின் இந்நிறம்.

விடியலில் எல்லாம் பொன்னிறமாகப் பொலிகின்றன. இயற்கையின் முதற் பசுமை மீது மஞ்சள் வெயில் விழுந்து அதைத் தங்கமாகப் பிரகாசிக்கச் செய்கிறது.

இயற்கை என்பது இங்கே வாழ்க்கை என்பதன் குறியீடு என்று விமர்சகர்கள் விளக்கம் தருகின்றனர். முதற்பசுமை என்பது இளமைப் பருவம். தங்கம் என்பது வாழ்வின் மதிப்பு. தங்கமே உலோகங்களில் மதிப்பு மிக்கது. அதுபோல் இளமைப் பருவமே வாழ்வில் மிகவும் மதிப்புடைய காலம்.

வைகறைப் பொழுதில் சேவல் கூவும் காட்சியை வருணிக்கும் வள்ளலார் “பொற்கோழி கூவிற்று” என்கிறார். கோழி என்பது சேவலைக் குறிக்கும் பொதுப் பெயர். அது என்ன பொற்கோழி? அதிகாலையில் பொன்னிற வெயில் தன் மேல் விழுவதால் சேவல் தங்கத்தால் ஆனது போல் தோன்றுகிறதாம். அதனால் அது பொற்கோழி!

இந்த வரியைத் தலைப்பாக வைத்து ஒரு தனிக் கட்டுரை எழுதியுள்ள திருலோக சீதாராம் இதற்கு ஒரு நயமான விளக்கம் நவில்கிறார். பொன் என்பது பணத்தை, செல்வத்தைக் குறிக்கும். காலை விடிந்ததும் மனிதர்களில் பலரையும் எழுப்பிவிடுவது அவர்கள் மனத்தில் உள்ள பணம் சேர்க்கும் ஆசைதான். பொன் என்னும் கோழியே அவர்களின் உள்ளத்தில் கூவி எழுப்புகிறது என்கிறார் அவர்.

ஆனால், அதிகாலையின் அந்தப் பொன்னிறம் வெகு நேரம் நீடிப்பதில்லை. அதுபோல் இளமைப் பருவம் என்பதும் சீக்கிரமே போய்விடுகிறது.

இயற்கையின் வண்ணங்களிலேயே இந்த விடியற் பொழுதின் தங்க நிறம்தான் தக்க வைக்க மிகவும் கடினமானது என்கிறார் ராபர்ட் ஃபிராஸ்ட். ஏன் இதைச் சொல்ல வேண்டும்? காரணம் உண்டு. தம் வாழ்வின் பருவங்களில் மனிதர்கள் தக்க வைக்க நினைப்பது இளமைப் பருவத்தையே. பிள்ளைப் பருவத்தில் இருக்கும்போது எப்போது வளர்ந்து வாலிபர் ஆவோம் என்று ஆசைப்படுகிறார்கள். முதுமை எட்டிப் பார்க்கும் வயதில் இளமையை இழுத்துப் பிடித்து வைக்க என்னென்ன வழிகள் என்று எண்ணுகிறார்கள்.

அடுத்து ஃபிராஸ்ட் சொல்கிறார்:

                    அவளின்


    கொழுந்து இலை


    ஒரு மலர்;


    ஆனால் அது

    சொற்ப நேரமே.

விடியலின் பொற்கதிர்கள் செய்யும் ஜாலத்தால் கொழுந்து இலையே ஒரு மலரைப் போல் காட்சி தருகிறது. எத்தனை அழகான காட்சிப் பிழை! புலன்களை ஏய்க்கும் மாய மயக்கு.

இளமைப் பருவம் என்பது எல்லாருக்குமே உண்மையான மலராக இருப்பதில்லை. இளமையில் எல்லாருக்குமே தம் வாழ்க்கை மலர்ந்து மணம் வீசப் போகிறது என்பது போன்ற உணர்வு எழத்தான் செய்கிறது. ஆனால், அரிதாக ஒரு சிலரின் வாழ்க்கை மட்டுமே மலர்கிறது. பலரின் வாழ்க்கை வெறும் இலையாகவே இருந்துவிடுகிறது.

            பிறகு

            இலையாகத் தணிகிறது

            இலை.

நான் பூ இல்லை, வெறும் இலைதான் என்று வாழ்க்கை ஒத்துக்கொள்ள வைத்துவிடுகிறது. ஆ! எத்தனை வேதனையான ஒப்புதல்!

            அப்படித்தான்

            ஏதேன் தோட்டம்

            சோகத்தில் மூழ்கியது.

ஒவ்வொரு இளைஞனும் ஆதம், ஒவ்வொரு இளைஞியும் ஏவாள். இளமைப் பருவம் அவர்களுக்கு சொர்க்கத்தின் ருசியைக் காட்டுகிறது. அப்போது அவர்களின் வாழ்க்கை ஏதேன் தோட்டமாகவே இருக்கிறது. ஆனால் அது நிலைப்பதில்லை. வாழ்வின் கனியை சுவைத்துக் கொண்டிருக்கும்போதே அது மறைந்து விடுகிறது. சொர்க்க இழப்பின் சோகம் கவிந்து விடுகிறது.

            அப்படித்தான்

            பகலாகி விடுகிறது

            விடியல் விரைவில்;

            நிலைப்பதில்லை

            பொன்னான எதுவும்.

என்று தன் கவிதையை முடிக்கிறார் ராபர்ட் ஃபிராஸ்ட்.

நாள் என்பது வாழ்வின் குறியீடு என்றால், விடியல் என்பது இளமைப் பருவம், அந்தி என்பது மரணம். வாழ்க்கை நிலையாமை பற்றிப் பேசியிருந்தால் அவர் அந்தி நேரத்தைச் சுட்டிக் காட்டியிருப்பார். இளமை நிலையாமை பற்றிப் பேசுவதால் விடியற் பொழுதைப் பாடுகிறார்.

ஒரு நாள் முடிவதில் இல்லாத சோகத்தை அதிகாலையின் பொன்னிற அழகு மாறிப்போவதில் உணர்கிறது கவியின் உள்ளம்.

 

 

Tuesday, January 26, 2021

தேநீர்க் கடையிலொரு ஆட்டுக்குட்டி

 


(’தட்டப்பாறை’ நாவல் பற்றி)

முஹம்மது யூசுஃப் அவர்களின் மூன்றாம் நாவலான “தட்டப்பாறை” நூலினை யாவரும் பதிப்பகத்தார் அனுப்பி வைத்திருந்தனர். 09 ஜனவரி 2021-இல் தூதஞ்சலில் வரப் பெற்றேன். நான்கு நாட்களில் சுடச்சுடப் படித்து முடித்து வாசிப்பனுபவத்தை எழுதியிருக்க வேண்டும். சூழல் இடம் தரவில்லை. இத்தனை நாட்கள் ஆகிவிட்டது.

            ”தட்டப்பாறை”-யை எழுதிக் கொண்டிருக்கும்போதே பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கிவிட்டார் யூசுஃப். தாய்த் தெய்வ வழிபாட்டு மரபு குறித்தும் கான் வாழ்வியல் பற்றியும் பரக்க வாசித்துக் கொண்டிருப்பதாக அவர் முகநூல் இடுகைகள் இட்டபோது நானும் அசட்டுத்தனமாக ஏதேதோ சொல்லி வைத்தேன். நாவலைப் படித்தபோது வாயடைத்துப் போய்விட்டது. அசுர முயற்சி இது.

            நாவல் வரப்பெற்ற அன்று ஆறாம் அத்தியாயம் வரை படித்தேன். அப்போதே யூசுஃபுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்: “72 பக்கங்கள் வாசித்திருக்கிறேன். உள்ளே இழுத்துக் கொண்டது. இதுதான் நீங்கள் எழுதிய மூன்றில் எனக்கு நம்பர் ஒன். ஏனெனில், இது என் மண், உடல், அகநிலம் பற்றியது.”

            ஆம். “வாழ்வின் மீதான தீவிரத்தேடல் உள்ள ஒருவனுக்கு இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்தும் அவனுடைய நிலத்தின் ஆதாரம்” என்று முஹம்மது யூசுஃபும் கூறுகிறார்.

            காடு என்னும் பொருண்மையின் மீது எனக்குத் தனி ஈர்ப்பு எப்போதுமே உண்டு. குறிப்பாக மலைக்காடுகள். காடுகளைக் களமாக வைத்து புதினம் புனைவதாக யூசுஃப் சொன்னபோது ஜெயமோகன் எழுதிய ”காடு” நாவலை நான் சுட்டியிருந்தேன். ஆனால் இது வேறு என்று யூசுஃப் சொல்லிவிட்டார். உண்மைதான்.

            எவ்வளவோ நாவல்கள் வாசித்ததில் ‘காடு’ என் மனத்தில் ஒரு தனியிடம் பிடித்துக் கொண்ட ஒன்று. அதில் ஒருவித ’ரொமாண்டிசிசம்’ உண்டு. குறிஞ்சித் திணையின் பழங்குடிப் பெண்ணைக் காதலித்த சங்கக் கவிஞன் கபிலனின் மனநிலையை நம்மில் கொண்டு வந்துவிடும் மாய வித்தையை அந்நாவல் செய்யும். ஆனால், யூசுஃபின் “தட்டப்பாறை” தரும் கானகச் சித்திரம் வேறு.

            அது காட்டின் அக ஒளி. இது காட்டின் அக வலி.

            இந்த நாவல் உணர்த்தும் செய்தியைச் சுருக்கமாக எப்படிச் சொல்லலாம் என்று யோசித்தபோது ஒன்று தோன்றியது:

            காட்டு வேடனான, பழங்குடி இனக்குழுத் தலைவனான குகனை இரவிக் குலத் தோன்றல் இராமன் ஆரத் தழுவி அணைக்கும் இடத்தில் கம்பனின் கவி மேதைமை வரைந்த வரி இது:

            ”வேறுள குழுவை எல்லாம் மானுடம் வென்றதம்மா”

            முஹம்மது யூசுஃபின் “தட்டப்பாறை” அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது: “மானுடம் இன்னும் வெல்லவில்லை.”

            நாகரிகத்தின் பெயரால் வேறுள குழுக்கள் யாவும் ஆதி மானுடனான கானகனை அடிமை செய்ததில், செய்து வருவதில் மானுடம் தோற்கிறது.

            கம்பனின் கவியுளம் உணர்வெழுச்சியில் உரைத்த வரியாகலாம் அது. ஆனால் எதார்த்தத்தில் மானுடம் வெல்வதற்கு அது போதாது.

            வரலாற்றின் கசப்பை அந்தக் கற்கண்டின் சிறுதுண்டு மாற்றி விடாது.

            இன்று (25-01-2021) முகநூலில் முஹம்மது யூசுஃப் தன் இடுகையில் தான் எழுதிய மூன்று நாவல்களின் ஊற்றுக் கண்ணாக அமைந்த தருணங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். “விமர்சனம் எழுதிய யாருமே இன்னமும் கதையைச் சொல்லலை” என்று அங்கலாய்த்திருக்கிறார். நியாயமே இல்லை!

            அப்படி ஒரு பத்துப் பத்திகளில் நாவலின் கதையைச் சொல்லிவிட முடியும் என்றால் அது எப்படி நாவலின் வெற்றியாகும்? ஐம்பது அறுபது பக்கங்களில் கூட இதன் கதையைச் சொல்ல முடியாது என்பதுதானே இதன் வெற்றியே? நாவலின் கதை என்ன என்று கேட்போர்க்கு ஒன்று சொல்வேன்: நாவலை வாசியுங்கள்.

            நாவல் நெடுகிலும் நம் சிந்தனையைத் தூண்டுகின்ற தகவல்கள் நிறைய உண்டு. அதில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

            இது என்ன வகையான நாவல்? என்னும் கேள்விக்கு டாக்கு ஃபிக்‌ஷன் (Docufiction) என்று பதில் தருகிறார் யூசுஃப். தமிழில் ’ஆவணப் புனைவு’ என்று சொல்லலாம். இக்கதையின் தலைமை மாந்தருள் ஒருவனான டானியல் இந்தியாவின்,  குறிப்பாகத் தென்னகத்தின் மலைவாழ் பழங்குடியினர் குறித்து ஆவணப் படம் எடுக்கும் பணியில் முயல்பவனாகவே வருகிறான். (இங்கே இன்னொன்றையும் சொல்லிவிடுதல் நலம். இந்நாவலை எழுதியவர் முஹம்மது யூசுஃப் என்னும் முஸ்லிம்தான். ஆனால் இது இஸ்லாமிய நாவல் அல்ல. அவர் எழுதிய முதலிரண்டு நாவல்களிலும் முதன்மைக் கதாப்பாத்திரங்கள் முஸ்லிம்களே. கதைப் பின்னணியும் சவூதி அரேபியா, வளைகுடா நாடுகள் என்று அமைந்தன. ஆனால் இந்நாவலில் முஸ்லிம் சமூகப் பின்னணி கிடையாது. அபு என்றொரு கதாப்பாத்திரம். அவனிடமும் பெரிதாக இஸ்லாமியச் சமய வெளிப்பாடுகளை எதிர்பார்த்து இந்நாவலைக் கையில் தூக்க வேண்டாம். இதில் வரும் கதாப் பாத்திரங்களில் முதன்மை நிலை வகிக்கும் தேவசகாயமும் டானியலும் கிறித்துவர்கள். அவர்கள் இருவரும் கிறித்துவ மிஷனரியில் வளர்க்கப் பட்டவர்கள். நாவலின் திருப்புமுனையாக வரும் இருளன் ஒரு தீவிர கம்யூனிஸ்ட். ஆனாலும், யூசுஃப் எழுதிய மூன்று நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்திருப்பது இதுதான். சஹ்ருதயர்கள் இதனைப் புரிந்து கொள்ளலாம். சொல்லித் தெரிவதற்கில்லை.)



            இந்த நாவல் நம்மிடம் பல்துறை சார்ந்த கண்ணோட்டத்தைக் கோருகிறது. இந்நாவலை நீங்கள் புரிந்து கொள்ள சூழலியல் (Ecology), இனவரைவியல் (ethnography), பண்பாட்டு மானுடவியல் (Cultural Anthropology), இலக்கிய மானுடவியல் (Literature Anthropology), சமயத் தொன்மவியல் (Religious Mythology), மூல மொழியியல் (Nostratic Studies) ஆகிய துறைகளின் அறிவு என்பதினும் உணர்வு தேவைப்படும். ஆம், இவ்வத் துறைகள் சார்ந்த கணக்கெடுப்புகள், விவரச் சேகரிப்புகள், ஆராய்ச்சிகள் என்பதெல்லாம் மலையளவு கடலளவு நடைபெற்றே வந்திருக்கின்றன. அறிவு உள்ளது, உணர்வு (Consciousness) இல்லை என்பதுதான் குறை. என்ன உணர்வு தேவை? நாவல் கிடைத்தவுடன் அதன் முகப்புப் பக்கத்தில் வழக்கம் போல் என் பெயரையும், தேதியையும் கிழமையையும் எழுதி வைத்தேன். அத்துடன் இன்னொன்றும்: “யாதும் ஊரே யாவரும் கேளிர்” – கணியன் பூங்குன்றனார்.

            கணியன் பூங்குன்றன் என்பதுதான் அந்த மூதாதையின் பெயரா? கணியன் என்றால் கணித்துச் சொல்லும் சோதிடனா? அப்படியும் சொல்கிறார்கள். கணியன் என்பது பழங்குடிப் பெயர் என்றும் பகரலாம், புரிந்து கொள்ளலாம். பூங்குன்றம் என்பது அவன் வாழ்ந்த ஊரின் பெயர். (மகிபாலன்பட்டி?). ‘ஆர்’ என்று பின்னொட்டி அழைக்கிறோமே அதில் இருக்கிறது அந்தப் பழங்குடி மூதாதைக்கு நாம் தரும் மரியாதை. “உலகில் உள்ள இலங்கையைச் சார்ந்த மலைவாழ் இந்தியத் தமிழர்களுக்கும், என் தமிழ் சொந்தங்களுக்கும் இந்த நூல் சமர்ப்பணம்” என்று எழுதியுள்ளார் முஹம்மது யூசுஃப்.

            இந்த நாவலின் ஒட்டு மொத்தச் செய்திகளையும் ஒரு புள்ளியில் குவித்துச் சுட்டிக்காட்ட முடியுமா? அப்படி ஏதாவது குறிப்பு இந்த நாவலுக்குள் இருக்கிறதா? என்று கேட்டால். முயலலாம். நாவலின் 31-ஆம் அத்தியாயத்தின் இறுதியில் (423-ஆம் பக்கத்தில்) கிடைக்கிறது விடை: “செப்புச் சாமானும் மரப்பாச்சி பொம்மைகளும் வரையாடும்.” இந்த மூன்றையும் தமிழகம் தொடங்கி உலகம் முழுவதும் நிலம் சார்ந்து விரித்துச் சென்றால் இந்த நாவலின் கதையாக மலரும் என்று படுகிறது. செம்பு என்பதுடன் மரகதமும் தங்கமும் வைரமும் இத்தியாதி உலோகச் செல்வங்களும் விரிவடையும். மரப்பாச்சி என்பதுடன் ஈத்தல், வன்னி, பனை என்று பற்பல மரங்கள் விரிவடையும். வரையாடு என்பதுடன் குறும்பாடு, கன்னி, கொடி, மோளை, பள்ளை, செம்போரை என்று ஆட்டின் பல்வேறு வகைகளும் விரிவடையும். இவற்றுடன் இந்த இயற்கை வளங்களுடன் இயைந்து வாழ்ந்த பல்வேறு பழங்குடிகள் வந்து நிற்பர். அவர்களை அடிமைகளாக்கிய ஆதிக்க அரசியல். அதை நிகழ்த்தியவர்களிடம் இருக்கும் சாதியம் என்னும் கட்டமைப்பு என்று விரிகின்றது இந்நாவலின் கதை.

            நாவலை வாசிக்கையில் மேலதிகமாக என் சிந்தனையில் பட்டவை, நான் எழுதி வைத்த குறிப்புகள் ஆகிய்வற்றில் சிலவற்றை சொல்ல நினைக்கிறேன்.

            இருளர் சமூகம் வாழ்ந்த பெருங்காடு கார்ப்பரேட் சாமியாரிடம் சிக்கிக் கொள்கிறது. இருளர்கள் வேறிடத்திற்குத் துரத்திவிடப் படுகின்றனர். அச்சூழலில், அழுகின்ற தன் குழந்தைக்குக் கதை சொல்கிறாள் பழங்குடித் தாய். அவ்விடத்தில் யூசுஃப் எழுதுகிறார்: “அவளுக்கு அமெரிக்கா ஆஸ்திரேலியா எல்லாம் சொல்லத் தெரியாது. எட்டுத் திசையில இருந்து ஆளுங்க வந்தாங்கன்னு சொல்லுவா.” இப்படித்தான் அமெரிகாவில் கொலம்பசின் கப்பல் வந்து இறங்கியபோது அங்கிருந்த செவ்விந்தியப் பழங்குடிகள் உணர்ந்திருப்பார்கள். மெல் கிப்சன் இயக்கிய “அபோகேலிப்டோ” திரைப்படத்தில் வரும் இறுதிக் காட்சியை இவ்வரி எனக்கு நினைவூட்டிற்று. கொலம்பஸும் அவரது ஆட்களும் வந்திரங்கிய கப்பலைச் சுட்டிக்காட்டி அது என்ன என்று பழங்குடிப் பெண் தன் கணவனிடம் கேட்கிறாள். “அது என்னன்னு தெரியல. அது ஆட்களை இங்க கொண்டு வருது” என்று அவன் சொல்கிறான். உலகெங்கிலும் பழங்குடியினர் ஒன்றுதான்.


            
ஏரலுக்கு அருகில் இருக்கும் மொட்டச்சி குடியிருப்பு என்னும் கிராமத்தில் புல்லாங்குழல் செய்யும் கலைஞர் பற்றி ஆறாம் அத்தியாயத்தில் பேசுகிறார் யூசுஃப். தஞ்சாவூர்ப் பகுத்யிலும் புல்லாங்குழல் செய்கிறார்கள் என்பது என் பால்ய காலத்து நினைவு. சரி, ஒரு முக்கியமான குறிப்பு. “திருநெல்வேலிக்கு பழைய பேரு ’வேணுவனம்’-தான்.” இதனினும் பழைய பெயர் இருந்திருக்க வேண்டும் என்றே நான் ஊகிக்கிறேன். மூங்கில் வனம்? இருக்கலாம். வேணுவனம் மற்றும் திருநெல்வேலி ஆகிய பெயர்களே தம்முள் ஒரு நெடிய வரலாற்றை வைத்திருக்கின்றன. வேணுவனம் என்பது வேட்டுவப் பழங்குடி வாழ்ந்த காலத்துப் பெயராகவும் பிறகு அது மருதத் திணையின் நாகரிகம் ஏற்பட்டதும் நெல்லையூர் ஆகி அதன் பின் வருண வர்க்க கட்டமைப்புகள் இறுகிய நிலையில் திரு-நெல்-வேலி (திரு- பிராமணீயம் / புரோகிதம்; நெல் – வேளாளர் – விவசாயம்; வேலி – உரிமையாளர் – பண்ணையார்) என்றாகியிருக்க வேண்டும். அதேபோன்று, மான் கூட்டம் – மரை – மேய்ந்திருந்த இயற்கையான வனப்பகுதி ‘மரைக்காடு’ என்பது ‘மறைக்காடு’ என்றாகித் திரு என்பதும் இடப்பட்டுப் பின்னர் ‘திருமறைக்காடு’ என்பதும் வடமொழியில் பெயர்க்கப்பட்டு “வேதாரண்யம்” ஆகிவிட்டது. இதுபோல் எத்தனை எத்தனை ஊர்ப்பெயர்கள் மாறினவோ? அவை எல்லாம் பழங்குடியினரிடம் இருந்து நிலங்கள் ஆதிக்க சக்திகளின் கைக்கு சென்று சேர்ந்த வன்முறை வரலாற்றின் அடையாளங்கள்.

            செமித்தியச் சமயங்கள் என்று குறிப்பிடப்படும் யூதம் கிறித்துவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மூன்றும் உலக மனிதர்கள் அனைவருக்கும் ஒரே மூதாதை இணையரையே சுட்டுகின்றன: ஆதம் – ஹவ்வா (ஆதாம் ஏவாள் – Adam and Eve.) சொர்க்கத்தில் இருந்து ஆதம் நபி இறக்கப்படட இடம் சிரந்தீப் என்று அழைக்கப்படும் இலங்கை (ஈழம்) என்று இஸ்லாமியச் சமய மரபு கூறுகிறது. எனில், உலகின் முதல் மாந்தர் தமிழராதல் வேண்டும் என்னும் கோட்பாட்டுடன் ஆதி மனிதன் குறித்த தேடல்களை நாம் நிகழ்த்துவதில் தமிழன் என்கிற முறையில் தனி ஈடுபாடு எனக்குண்டு. அந்த ஈடுபாடு முஹம்மது யூசுஃபுக்கும் இருப்பதை இந்த நாவல் நெடுகிலும் பார்க்க முடிகிறது. அந்தக் குறிப்புக்களை எல்லாம் திரட்டி மேலாய்வு செய்து பார்க்க வேண்டும்.

            உகாய் என்றொரு மரம். அதற்கு “உவா” என்றும் பெயருள்ளது. பிலு என்கிறது மகாபாரதம். அறபிகள் அதனை அராக், மிஸ்வாக் என்னும் பெயர்களால் அழைக்கின்றனர். தமிழகத்தில் இருக்கும் அந்த மரம் அரேபியாவிலும் இருக்கிறது. நபிகள் நாயகத்தின் வாழ்வியல் பதிவில் அந்த மரம் இடம் பெற்றுள்ளது (புகாரி: 3406) என்னும் செய்திகளை யூசுஃப் தருகிறார். “உவா” என்பது பாலை நில மரம். தமிழ் மரபில் பாலைத் திணையின் தெய்வம் கொற்றவை. எனில், உவா என்பது ஹவ்வா என்னும் முதற்பெண்ணைக் குறிப்பதாகலாம். ஹவ்வா என்பது அறபி உச்சரிப்பு. தமிழில் அது அவ்வை / அவ்வா. ஆங்கிலத்தில் Eve. ஆங்கிலத்தில் இருந்து மீண்டும் தமிழுக்கு ஒலிபெயர்த்து ஏவாள் என்று ஆக்கியுள்ளார்கள். இது ஒரு தொடர்புத் துலக்கம். இப்படி பன்னூறு சொற்களுக்கு இடையிலான தொடர்புகள் ஒவ்வொன்றாகத் துலங்கி அவை யாவும் ஒரே சித்திரத்தை வரைந்து காட்டும்போது ஏற்படும் உணர்வு அற்புதமானது.

            ”ஆதம் – ஏவாள் – பாம்பு (சாத்தான்) – விலக்கப்பட்ட கனி” என்பது ஆதி மனித இணை குறித்த யூத கிறித்துவ இஸ்லாமியத் தொன்மக் கதையின் குறிப்புக்கள் (சாத்தான் பாம்புருவம் கொண்டிருந்ததாக இஸ்லாமியப் பிரதியில் குறிப்பில்லை.) இது பற்றி இன்னொரு இடத்தில் யூசுஃப் எழுதுகிறார்: “Python வார்த்தைக்கு அரபி அர்த்தம் ‘அல் சஅபன்’. Sapan மருவி செர்பன் (லத்தீன்) ஆனது. பின் அது வழக்கில் serpent ஆனது. ஆக, மலையும் மலை சார்ந்த “பூமித்தாயின் முதல் கருவறை” என கருதும் இலங்கையில் ஆதம் மலை உள்ளது. ஊவா மாகாணமும் உள்ளது.” (ப.97). இலங்கையின் இந்தப் பகுதிகளில் அதிகமாக ”விளா” மரங்கள் உள்ளன. விளாம்பழத்தை ஆங்கிலத்தில் Wood Apple என்றே அழைக்கிறார்கள். “இனி மீதம் இருப்பது ஆப்பிள் மட்டுமே. நான் அந்த ஆதிக் கதைக்கு விளாம்பழத்தை (Wood Apple) சாட்சியாக முன்வைக்கிறேன் இப்படியும் இருக்கலாம் என்ற அதீத ஆசையில்.” (ப.97) என்கிறார் யூசுஃப்.

            நாவலின் பத்தாம் அத்தியாயத்திற்கு இலங்கையின் நுவரெலியா (அறபியில் நுவரா எலியா என்றால் ‘வசந்த காலத்தில் பூக்கும் முதல் பூ’ என்று அர்த்தமாம்) என்னும் பெருங்காடுதான் களம். அங்கே, ‘உலகப் பிரசித்திப் பெற்ற ஆதி அனாதை’ என்று யூசுஃப் குறிப்பிடும் ஏவாள் தன் முதல் பிள்ளையைப் பெற்றெடுக்கிறாள். கருவுற்றது முதல் உடலில் ஏற்படும் மாற்றங்களை அவள் எதிர்கொள்வதும் பேறுவலி ஏற்பட்டு - ‘சுயப் பிரசவம்’ என்று ’கருவாச்சி காவிய’த்தில் வைரமுத்து சொல்வது போல் – பிள்ளை பெற்றெடுப்பதுமான காட்சிகள் அடிவயிற்றில் பந்துருள வைக்கின்றன. (பிரசவத்தின் போது ஆதி பிதா ஆதம் நபி அங்கே அருகில் இருக்கவில்லையா? என்று யோசிக்க வேண்டியுள்ளது.)

            உலகின் முதல் பெண் ஆப்ரிகாவைச் சேர்ந்த கறுப்பினப் பெண்தான் என்று மரபணு ஆய்வு ஒன்று கண்டறிந்திருப்பதாக நாளிதழில் வந்த செய்தி ஒன்றை முன்பு கண்டிருக்கிறேன். “மைட்டோகாண்ட்ரியா (Mitochondrial Eve) எனும் விஞ்ஞான கூற்றுப்படி அவள் ஒரு கறுப்பு நிறப் பெண். மேற்கு தொடர்ச்சி மலை வழியாக அவள் நடந்து சென்று சேர்ந்த இடம் கிழக்கு ஆஃப்ரிக்காவின் பாலே மலைக்குன்றின் (Bale mountain – Harenna forest) ஹரென்னா காடு” (ப.140) என்று எழுதுகிறார் யூசுஃப். இது தொடர்பாக இன்னொரு முக்கியமான செய்தியையும் தருகிறார். ஃபிரான்ஸிஸ் புருட்டன் என்பவர் மரபணு அடிப்படையில் மனித குலப் பரவலை ஆராய்ந்து ஒன்று சொல்கிறார்: “ஆப்பிரிக்க மரபணு ஆப்பிரிக்கா முழுவதும் இல்லை.” பின்னாளில், இத்தாலிய மரபணு ஆராய்ச்சியாளர் லூகாகவாலி சக்போர்ஸா ஆப்பிரிகாவிலும் ஆஸ்திரேலியாவிலும் ஆராய்ந்த பின் தமிழகத்தில் தனது ஆராய்ச்சியை நிகழ்த்தினார். தேனி மாவட்டம் உசிலம்பட்டியில் ஜோதிமாணிக்கம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த ’விருமாண்டி’ என்பவரை ஆய்வுக்குட்படுத்தினார். கச்சிதமாகப் பொருந்தியது. “ரிச்சர்ட் பிரான்ஸிஸ் புருட்டன் இன்று இருந்திருந்தால் அவர் எத்தியோப்பிய ஹராராவில் தங்கி இருந்ததற்குப் பதில் தமிழகத்தில் தேனியைச் சுற்றி அலைந்திருப்பார்.” (ப.178) என்கிறார் யூசுஃப். இது போன்ற ஆய்வுச் செய்திகளை எழுதுவதற்கு அவர் ஒரு பயோமெடிக்கல் இஞ்சினியர் என்பது கை கொடுக்கிறது. மொழி ஆய்வென்று இந்தியாவுக்கு வந்தவர்கள் வடநாட்டில் மட்டுமே கூடாரம் போட்டுவிட்டு இந்தியாவில் அனைத்துக்கும் மூல ஊற்று சமற்கிருதமே என்று முடிவு கட்டிக்கொண்டு போய்விட்டார்கள். தமிழகத்தின் மீது ஆய்வுப் பார்வை விழவும் உண்மை உலகுக்குச் சொல்லப்படவும் போராட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. மானுடவியல் ஆய்விலும் இதுதான் நிலை.

            தமிழரின் தோற்றமும் பரவலும் என்று ஆய்வு செய்யப் புகுந்தால் நான்கைந்து கோட்பாடுகள் ஆதாரங்களின் பலத்துடன் நம் முன் வந்து நிற்கும். குமரிக்கண்டம் (லெமூரியா) என்னும் கோட்பாடு மிகப் பிரசித்த்மான ஒன்று. இந்தியா முழுவதும் தமிழர்கள் பரவியிருந்தனர், பின்னர் ஆரியரின் ‘வருகை’யால் கீழ் நோக்கி அடைபட்டனர் என்பதொரு பார்வை. அண்மையில் இரா.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்கள் செய்திருக்கும் ஆய்வுகள் சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமே என்று நவீன செயற்கைக்கோள் தொழில்நுட்ப உதவியுடன் உறுதிப்படுத்துகிறது. துறைமுகப் பொறியாளர் பா.பிரபாகரன் அவர்கள் செய்திருக்கும் ஆய்வு (’குமரிக்கண்டமா?சுமேரியமா?) தமிழரின் ஆதிநிலம் சுமேரியா என்றும், மெசப்பொட்டோமியாவில் இருந்த யூஃப்ரேட்ஸ் மற்றும் டைக்ரிஸ் நதிகள்தாம் பழந்தமிழிலக்கியம் குறிப்பிடும் குமரியாறும் பஃறுளியாறும் ஆகும் என்றும், கிரெட்டெ (Crete) தீவுகளில் தமிழர் வாழ்ந்த தொல்லியல் சான்றுகள் இருக்கின்றன என்றும், அதன் முன்பு ஆட்களே இல்லாத நிலையில் இந்தியாவிற்குள் முதன் முதலில் குடியேறியவர்கள் சுமேரியத்திலிருந்து வந்த தமிழரே என்றும் காட்டுகின்றது. இவையெல்லாம் இன்னும் தொகுத்து முடிக்கப்படாத பெருங்கதை ஒன்றின் சிறு சிறு பகுதிகள் என்றே கருதுகிறேன். அந்த ஒற்றைப் பெருங்கதையை மீண்டும் மீண்டும் பல்வேறு கோணங்களில் வாசித்துப் பார்ப்பதற்கு வசதி நல்கும் நூல்களில் முஹம்மது யூசுஃபின் இந்த நாவலும் ஒன்றாகிறது.

            உலகில் மருதத் திணையின் விவசாய நாகரிகத்தை முதன் முதலில் உண்டாக்கியவர்கள் தமிழர்களே என்று ஏற்றால், தமிழர்கள் பாரசீகப் பகுதிகளில் இருந்தனர் என்பதையும் ஏற்க வேண்டும். “வேட்டையாடி விவசாயகுடியா மாறுன நிலம் பாரசீகம்தான்.  … … … விவசாயம்னு வரலாற்றில் எதைத் தேடுனாலும் மெசபடோமியா, யூப்ரடிஸ், டைகிரிஸ்னு வளைகுடா மண்ணைத்தான் சாட்சியா காட்டும்” (ப.193) என்கிறார் யூசுஃப்.

            ஆதமுக்கும் ஏவாளுக்கும் வெவ்வேறு மரபுகளில் உள்ள வெவ்வேறு பெயர்கள் யாவை? இந்நாவலில் விடைகள் உள்ளன. அத்தகைய பெயர்களை எல்லாம் திரட்டி மேலாய்வு செய்யலாம். “உலகின் ஆதி அனாதையான ஆதமின் மனைவி சுசாவின் காலடி சுமக்கும் நினைவுத் துகள்கள்” (ப.204) என்று யூசுஃப் தரும் குறிப்பு ஓர் உதாரணம். ஆதிப் பெண்ணுக்குத் தமிழில் எத்தனைப் பெயர்eeகள் இருக்கலாம், மூதாதையின் மீதான மதிப்பு என்பது காலப்போக்கில் தெய்வமாக்குதல் (deification) என்னும் நிலையை எட்டி அதன் மீது தத்துவக் குறியீட்டாக்கங்களும் தொன்மங்களும் ஏற்றப்பட்ட பிறகு அது என்னென்னெ பரிணாமங்களை அடைந்திருக்கும் என்றெல்லாம் ஆய்வு செய்யும்போது இலங்கை மற்றும் தமிழகத்து ஊர்ப்பெயர்களே ஆதன் என்னும் ஆதம் (திரிபு: ஆதாம்) மற்றும் அவரது மனைவியான அவ்வை என்னும் ஹவ்வா ஆகியோரின் அடையாளங்களை நமக்குச் சுட்டுவதைக் காணலாம். பாய் நெசவுக்குப் பெயர் போன பத்தமடை என்னும் ஊரினருகே இருக்கிறது ‘மூலச்சி’ என்னும் சிற்றூர். ‘மூலச்சி’ என்பதே முதற் பெண்ணைக் குறிக்கும் சொல் அல்லவா?

            மூலச்சி என்னும் ஊரைப் பற்றிப் புவிசார் குறிப்பு ஒன்றை யூசுஃப் தருகிறார்: “அகத்திய மலைக்கும் மாஞ்சோலைக்கும் இடையில் உள்ள ஊர் என்பதால் வாலில் வெண்ணிற பட்டை கொண்ட பெரிய செதில்களை உடைய பனை வீரியன் பாம்பு தலை தூக்கி செங்குத்து வாக்கில் கண் விழித்தபடி அவுரிக்காட்டின் வாசலில் இருந்து மூலச்சி ஊரையே பார்த்துக் கொண்டிருந்தது” (ப.241). இந்த வரிக்கு அருகில் நான் எழுதி வைத்திருக்கும் குறிப்புகள் இவை: ”அகத்தி – வீட்டுக்காரி (மனைவி) – அகத்திலிருந்து (விலா எலும்பிலிருந்து) வெளிப்பட்டவள் – ஹவ்வா (மூலச்சி – Eve) – அகத்தியன் = ஆதம் – மாஞ்சோலை = பெருஞ்சோலை (ஏதேன்) - பனை வீரியன் (பாம்பு – Serpent) – பனை (நுங்கு – Ice Apple) – மூலச்சி = மூத்தவள் = ஜித்தா (பாட்டி)”  சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு இறக்கப்பட்டபோது ஆதம் நபி இலங்கையிலும் (ஆதம் மலை = சிவனடிபாத மலை) ஹவ்வா எனும் ஏவாள் ஜித்தாவிலும் இறக்கப் பட்டனர் என்பது இஸ்லாமியச் சமயம் தரும் செய்தி. அறபகத்தில் இன்று ஜித்தா என்றொரு நகரம் இருக்கிறது. ஜித்தா என்றால் மூதாட்டி (கிழவி, பாட்டி) என்று பொருள். இப்பொருள் ஹவ்வா என்னும் பெயரின் ஒலிக்கு அருகில் வர வேண்டுமெனில் தமிழில்தான் வரும். அவ்வா என்றால் பாட்டி என்று பொருள். மூலச்சி என்னும் ஊரே அவ்வா இறக்கப்பட்ட ஊராக ஏன் இருக்கக் கூடாது? அதனை அறபியில் ஜித்தா என்று குறிப்பிட்டிருக்கலாம். அதே பெயர் பின்னர் அறபகத்தில் உள்ள ஒரு ஊருக்கும் இடப்பட்டிருக்க வேண்டும். ஆதாமும் ஏவாளும் அருகருகில்தான் இறங்கியிருக்க வேண்டும். சொல்லப்போனால் ஒரே இடத்தில் இறங்கினார்கள் என்று கருதுவதே பொருத்தம். ஆதம் மலைக்கும் மூலச்சி ஊருக்குமே கூட இடைவெளி அதிகம்தான்.  இதை இன்னும் ஆராய வேண்டும்.

            இந்தியாவில் 645 பழங்குடிகள் இருப்பதாகப் பதிவாகியுள்ளது என்கிறார் யூசுஃப். அவற்றில் ஒரு நூறு பெயர்களையாவது இந்த நாவலில் சுட்டியிருப்பார் என்று கருதுகிறேன். அதே போல், பழங்குடியினர் வாழும் ஊர்ப்பெயர்கள் என்று குறைந்தது நூறு ஊர்களாவது இதில் சுட்டப்பட்டிருக்கலாம். அவை அனைத்தையும் இங்கே திரட்டி விமரிசனம் எழுதினால் அது ஒர் தனி நூலாக விரிந்துவிடும். அது ஒரு பேராய்வுக்கான களம். பழங்குடியினரைப் பற்றியும் கொஞ்சம் சொல்லலாம் என்று எண்ணி மானுடவியல் அறிஞர் பக்தவச்சல பாரதி மற்றும் ஆ.சிவசுப்பிரமணியம் ஆகியோரின் நூற்களை எடுத்த்ப் புரட்டினால் தலை சுற்றுகிறது. ஓரிரு நாட்கள் படித்துவிட்டுச் சில பக்கங்களில் சொல்லி முடிக்க வேண்டிய செய்திகள் அல்ல.



            நாவலில் ஓரிடத்தில் ‘பைம்பொழில்’ என்னும் கிராமத்தில் ஒரு தேநீர்க்கடையில் வரையாட்டுக் குட்டி ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. அது டானியலுடன் கை குலுக்குகிறது. ஆடு என்பது ஆதி மனிதனின் வாழ்வியல் சாட்சியங்களில் ஒன்று. அதனைப் பொன்னிழையின் ஒரு முனையாகப் பிடித்துக் கொண்டு தேடலை நிகழ்த்தி உலகெங்கிலும் உள்ள ஆட்டு வகைகளில் வழியே மானுட வரலாற்றைப் பற்றிய புதிய திறப்புக்களை டானியல் கண்டடைகிறான். வாசிப்புச் சுகம் (Pleasure of the text) பொழுது போக்கு என்றெல்லாம் சொல்லித்தான் நீங்கள் நாவல் வாசிப்பீர்கள் எனில் இந்த நாவல் தேநீர்க் கடையில் உங்களுடன் கை குலுக்கும் வரையாட்டுக் குட்டி என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதன் வழியாக நீங்கள் அறியவும் உணரவும் வேண்டியவை இன்னும் ஏராளம்.

            ’மணல் பூத்த காடு’ குறித்து முன்பு நான் எழுதிய விமரிசனக் கட்டுரையை ஆய்விதழ் ஒன்றுக்காக ஆராய்ச்சிக் கட்டுரையாக மாற்றியமைத்தபோது அதன் முடிவுரையில் ஒரு கருத்தினை எழுதினேன். அதை இங்கே குறிப்பிட்டு நிறைவு செய்கிறேன்:

            நவீனத் தமிழிலக்கிய உலகில் முஸ்லிம் புனைகதையாளர்கள் என்று போற்றப்படும் தோப்பில் முகம்மது மீரான், அர்ஷியா, மீரான் மைதீன் முதலியோரின் வரிசையில் குறிப்பிடத்தக்க இடம் ஒன்றை முஹம்மது யூசுஃப் பெறுவார் என்னும் நம்பிக்கையை நல்குகிறது “மணல் பூத்த காடு” என்னும் அவரது முதல் நாவல். முதல் நாவலின் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் போன எழுத்தாளர்கள் உண்டு. ஆனால், முஹம்மது யூசுஃப் தொடர்ந்து வெளியிட்ட “கடற் காகம்” மற்றும் “தட்டப்பாறை” ஆகிய நாவல்கள் எதிர்பார்ப்பு ஓரளவு நிறைவேறிவிட்டது என்றே சொல்ல வைக்கின்றன. அதிலும், முஸ்லிம் சமூக வாழ்வியல் குறித்து இதுகாறும் சொல்லப்படாத கூறுகளைக் கையாளவதும் அதற்குத் தனது பரந்து பட்ட வாசிப்பின் பேருழைப்பை ஒரு துணைக் கருவியாகக் கொள்வதும் அவருக்குத் தனித்தன்மையை வழங்குகின்றன. அவ்வகையில், அவருக்கு முன்னோடி என்று சொல்லத் தக்கார் யாருமில்லை. அவர் ஒரு முதன்மையர் எனலாம்.




Sunday, September 6, 2020

இப்னுல் அறபி எழுதிய கடிதம்

 



 

 

 

 

 

 

 

 

ஆங்கிலக் கட்டுரை: முஹம்மது ருஸ்தம்

தமிழாக்கம்: ரமீஸ் பிலாலி

தோரணவாயில்: கட்டுரை அறிமுகம்

இது சூஃபி மகான் இப்னுல் அறபி (ரஹ்) அவர்கள் தமது காலத்தில் நுண்ணறிவுத் திறனுக்கும் சிந்தனைக்கும் பெரும் பேர் பெற்ற சமயப் பேரறிஞரும், திருமறையாம் குர்ஆனுக்கு இதுகாறும் எழுதப்பட்ட விரிவுரைகளுள் அளவால் மிகப் பெரிது என்று நிற்கும் ”தஃப்சீர் கபீர்” என்னும் விரிவுரையின் ஆசிரியரும் ஆன இமாம் ஃபக்ருத்தீன் ராஸி (ரஹ்) அவர்களுக்கு எழுதிய கடிதம்.

இப்னுல் அறபி அவர்கள் அறபு மொழியில் எழுதிய இக்கடிதத்தின் மொழி பெயர்ப்புக்கென்று தனியொரு சிறு வரலாறு உண்டு. ஏறத்தாழ ஐம்பதாண்டுகட்கு முன் இக்கடிதம் மிசெல் வால்சன் என்பாரால் ஃபிரெஞ்சு மொழியிற் பெயர்க்கப்பட்டது. அதன் பின் இருமுறை ஃபார்சி மொழிக்குப் பெயர்க்கப்பட்ட இக்கடிதம் வில்லியம் சித்திக், ஃபிரான்ஸ் ரோசந்தால், நஸ்ருல்லாஹ் புர்ஜவ்வாதி மற்றும் ஐமன் ஷிஹாதா ஆகியோரால் முழுமையாகவும் பகுதிகளாகவும் ஆராய்ந்து அலசப் பட்டுள்ளது என்று ஆங்கிலத்தில் இதனைப் பெயர்த்திருக்கும் முஹம்மது ருஸ்தம் குறிப்பிடுகிறார். (இத்தமிழ்ப் பெயர்ப்பு அவ்வாங்கிலக் கட்டுரையை மூலமாகக் கொண்டதே. மேலும், ருஸ்தம் எழுதியுள்ள அடிக்குறிப்புக்களில் இன்றியமையாதன என்று யான் கருதுபவற்றையும் தமிழிற் பெயர்த்துள்ளேன்.)

MIAS (Muhyuddin Ibn Arabi Society) என்னும் அமைப்பின் தரவுக் களஞ்சியத்திலிருந்து இப்னுல் அரபி அவர்களால் எழுதப்பட்ட மூல ஆவணங்களின் படிகள் பலவற்றை ருஸ்தம் சேகரித்துள்ளார். அக்கடிதப் பிரதிகளுமே பல காலங்கள் சூஃபி நெறியினரால் படியெடுக்கப் பட்டவை. அவ்வண்ணம் பொ.ஆ.1291 (ஹிஜ்ரி 690)  முதல் பொ.ஆ.1543 (ஹி.950) வரை எழுதப்பட்ட ஆவணங்களின் படிகள் அவரிடம் உள்ளனவாம். அச்சேகரத்துள் இக்கடிதமும் ஒன்று. இதன் பல பிரதிகளை நோக்க அவற்றில் பாடபேதங்கள் அதிகமில்லை என்கிறார் ருஸ்தம். பரவலாகக் கிடைக்கின்ற மஹ்மூது குராப் என்பாரின் பிரதியையே ருஸ்தம் ஆங்கிலத்தில் பெயர்த்துள்ளார். (குறிப்பு: ருஸ்தம் இக்கட்டுரையை முதன் முதலில் ”ஃபக்ருத்தீன் அல்-ராஸிக்கு இப்னு அறபியின் கடிதம்” (Ibn Arabi’s Letter to Fakhruddin al-Razi) என்னும் தலைப்பில்  பெருந்திட்டம் ஒன்றின் பகுதியாக எழுதி Oxford Journal of Islamic Studies (25, No.2 (2014) 113-37) என்னும் ஆய்விதழில் வெளியிட்டார். இக்கட்டுரை அதன் செம்மையாக்கப்பட்ட வடிவமாகும்.) அதற்கு மூத்தவையான மூன்று பிரதிகளையும் ஒப்பிட்டு பொருட்படுத்தத் தக்க பாடவேறுபாடுகளையும் அவர் அடிக்குறிப்பில் கவனப்படுத்தியுள்ளார். ருஸ்தம் செய்த ஆங்கிலக் கட்டுரை நான் கூடுதல் விளக்கம் ஏதுமின்றி இங்கே தமிழ் ஆக்கியுள்ளேன்.

(அறிமுகம் முற்றும்)

#=========#==========#

அருளன் அன்பன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

இக்கடிதம் எம் ஆசான் எம் தலைவர், அறிவில் நன்கு வேர் ஊன்றியோர், அவரைப் போல்வார் வேறெவரும் இலார், மெய் நோக்குநர் (முஹக்கிக்), மெய்ம்மையின் திரை திறப்போர் (காஷிஃபல் ஹகீகா), சமுதாய மற்றும் சமயத்தின் உயிர்ப் புதுக்குநர், அபூ அப்துல்லாஹ் முஹம்மத் இப்னு அலீ இப்னுல் அரபி அத்தாயி அல்-உந்துலூசி அல்-மக்ரிபி (அல்லாஹ் அவரின் ஆன்மாவை புனிதப்படுத்துவானாக!) அவர்கள், தலைவரும் அறிஞரும் வல்லுநரும் முனைவரும் சமுதாய மற்றும் சமயப் பெருமிதரும் ஆன முஹம்மத் இப்னு உமருல் ஃகத்தாப் அர்-ராஸி (அல்லாஹ் அவருக்கு அமைதி அருளி வீடு பேறு வழங்குவானாக!) அவர்களுக்கு எழுதியது.

(இனி வருவது இப்னுல் அரபி அவர்கள் எழுதிய கடிதம்)

இறைவனுக்கே புகழெல்லாம். அவனின் தேர்ந்த அடியார்கள் மற்றும் எனது இனிய இறையன்பரான ஃபக்ருத்தீன் (அல்லாஹ் அவரது முனைப்பை (ஹிம்மா) உயர்த்தி அவனது அருளையும் ஆசிகளையும் அவர்மீது பொழிவானாக) ஆகியோர் மீது அமைதி பிறங்கட்டும்.

இனி, எடுத்தது நுவல்வாம். நுமது முன்னிலையில் இறைவனைப் புகழ்கிறேன். அவனை அன்றி வேறு தெய்வம் இல்லை. இறைத்தூதர் (ஸல்) சொன்னார்கள்: “உங்களில் ஒருவர் தமது சகோதரனை நேசித்தால் அதனை அவர் அறியும்படிச் செய்க”[1] யான் உம்மை நேசிக்கிறேன். அல்லாஹ் சொல்கிறான்: “ஒருவருக் கொருவர் உண்மை கொண்டு உய்ப்பீர்” (103:3).

நுமது சில எழுத்துக்களை யான் படித்துள்ளேன். உம்மை உறுதிப்படுத்தி இறைவன் அருளியுள்ள கற்பனைத் திறனையும் (அல்-குவ்வத்துல் மு(த்)தஃகய்யிலா) அஃது வெளிப்படுத்தும் சிந்தனையாற்றலையும் ஓர்ந்துளேன். ஓர் உயிர் தன் ஈட்டல் (கசபு) கொண்டே ஊட்டம் தேடுங்கால் வண்மை (ஜூது) மற்றும் கொடைமை (வஹ்பு)[2] ஆகிவற்றின் இனிமையை அது அடைவதில்லை. தம் அடியிலிருந்தே தாம் புசிப்போரில் அது அமைந்து விடுகிறது. ஆனால், ஆன்மிகர் ஒருவர் (ரஜுல்)[3] எப்போதும் தனக்கு மேலிருந்தே பெற்றுப் புசிக்கிறார், “தவ்ராத், இஞ்சீல் மற்றும் தம் புரப்பாளனிடமிருந்து அவர்களுக்கு அருளப்பட்டவை ஆகியவற்றை அவர்கள் பேணினால் மட்டுமே தமக்கு மேலிருந்தும் தமது பாதத்திற்குக் கீழிருந்தும் அவர்கள் புசித்திருப்பர்.” (5:66)

”அறிஞர்கள் இறைத்தூதர்களின் வாரிசுகள்”[4] என்பதால் முழு பாத்தியம் (அல்-விராஸத்துல் காமிலா) என்பது அனைத்து அம்சங்களிலும் நிகழ்வதே அன்றி ஒரு சில அம்சங்களில் மட்டுமன்று என்பதை எனது நண்பர் (அல்லாஹ் அவருக்கு ஈடேற்றம் அருள்வானாக!) அறிந்து கொள்ளட்டும். நுண்ணறிவாளன் (ஆ(க்)கில்) ஒவ்வொரு அம்சத்திலும் வாரிசாக இருப்பதற்கு முயல வேண்டும். அதில் உள்ளுணர்வு குறைதல் கூடாத. மனித நுட்ப மெய்ம்மை (அல்-ல(த்)தீஃபத்துல் இன்சானிய்யா) என்பது அது தன்னில் பெற்றுள்ள தெய்வ மெய்யறிவு (அல்-மஃரிஃபத்துல் இலாஹிய்யா) என்பதைக் கொண்டே அடையப்படும் என்பதையும் அதன் எதிர்நிலையே அதன் அழகின்மை என்பதையும் எனது நண்பர் (அல்லாஹ் அவருக்கு ஈடேற்றம் அருள்வானாக!) அறியக் கடவது.

உயர்வுள்ளல் (ஆலியுல் ஹிம்மா) உள்ளோன் நிலையற்ற புதுமைகளிலும் (முஹ்தஸாத்)[5] அவற்றின் வேடிக்கைகளிலும் தனது வாழ்வை வீணடித்தல் கூடாது. ஏனெனில், இறைவனிடம் தனது பங்கினை இழப்பான். தனது சிந்தனையின் (ஃபிக்ரு) ஆள்கையை விட்டும் அவன் விடுதலையாகி நிற்றல் வேண்டும். ஏனெனில் சிந்தனை என்பது தனது கோணத்தில் இருந்து மட்டுமே ஒன்றை அறியும். ஆனால் நாம் தேடும் மெய்ப்பொருள் அத்தகையது அன்று.

இறை அறிவு என்பது இறை உள்ளமையின் அறிவுக்கு முரணியது. கூர் மதி (அக்லு) இறைவன் இருக்கிறான் என்று அறிவதெல்லாம் மறுத்தல் (சல்பு) வழியிலே அன்றி நிறுத்தல் (இத்பாத்) வழியிலே அன்று.

இக்கூற்று, கூர்த்த மதியினர் (உ(க்)கலா) என்றும் சமயவியலறிஞர் (மு(த்)தகல்லிமீன்) என்றும் சொல்லப்படும் பெரும்பான்மையோரின் பார்வைக்கு முரண்பட்டதே, நமது ஆசான் அபூ ஹாமித் (அல்லாஹ் அவரின் ஆன்மாவைப் புனிதப்படுத்துவானாக!)[6] அவர்களைத் தவிர. அன்னாருக்கு நமது இக்கருத்தில் உடன்பாடு உண்டு.[7]

நுண்ணறிவின் சிந்தனை ஆற்றல் மற்றும் பகுத்தறிவுப் பார்வை (நழர்) ஆகியவற்றால் அறியப்படுவதை விட்டும் அல்லாஹ் மேலானவன். எனவே, அகக்காட்சி (முஷாஹதா)[8] கொண்டு அவனை அறிய அவாவும் அறிவாளன் தனது இதயத்தை எண்ணங்கள் அற்றதாய் ஆக்க வேண்டும். உயர்ந்த ஊக்கம் உள்ளோன் இக்கலையைக் கற்பனையுலகில் (ஆலமுல் ஃகயால்)[9] இருந்து கற்பது கூடாது. ஏனெனில் அவ்வுலகம் தமக்கு அப்பால் உள்ள அர்த்தங்களைச் சுட்டுகின்ற பருப்பொருளின் ஒளிச்சுடர்களால் (அல்-அன்வாருல் மு(த்)தஜஸ்ஸதா) ஆனது. மேலும், கற்பனைத் திறன் என்பது நுண்ணறிவின் அர்த்தங்களை (அல்-மஆனியுல் அக்லிய்யா) கட்புல வடிவங்களினுள் (அல்-கவாலிபுல் ஹிஸ்ஸிய்யா)[10] இறங்கும்படிச் செய்துவிடுகிறது, அறிவு என்பது பாலின்[11] வடிவத்திலும், குர்ஆன் என்பது கயிற்றின்[12] வடிவத்திலும் சமயம் என்பது சங்கிலித் தளையின்[13] வடிவத்திலும் காட்டப்பட்டது போன்று.

இரவலனிடம் (ஃபகீர்) இருந்து எவரும் பொருள் கொள்வது இல்லை என்பதைப் போன்று, உயர்ந்தெழ அவாவும் ஆன்மிகச் சாதகன் ஒருவன் பிரபஞ்ச உள்ளம் (அல்-நஃப்சுல் குல்லிய்யா)[14] என்பதிடம் இருந்து எடுத்துக் கொள்கின்ற பெண்மையைத் (முஅன்னஸ்) தனது வழிகாட்டியாக ஏற்றல் இல்லை. தான் அல்லாத ஒன்றைக் கொண்டு நிறைவு காணும் எதுவுமே இரவலன்தான் (ஃபகீர்). இறைவன் அல்லாத அனைத்தின் நிலையும் இஃதே.[15] இன்னனம், திறப்பு (கஷ்ஃப்)[16] என்பதன் வழியே இறைவனிடம் இருந்தே ஞானத்தை அடைவதற்கு உனது முனைப்பை உயர்த்து.

மெய்யோரின் (முஹக்கிகீன்)[17] கருத்துப்படி இறைவனை அன்றி வினைஞன் (ஃபாஇல்) இல்லை; இக்காரணம் பற்றி அவர்கள் இறைவனிடமிருந்தே எடுத்துக் கொள்கின்றனர். எனினும் அவர்கள் திறப்பு / அவிழ்ப்பு (கஷ்ஃப்) என்னும் நிலையில் அடைவதற்கு மாறாக மூடல் / முடிச்சு (அக்து)[18] என்னும் நிலையிலேயே பெறுகின்றனர். ஆனால், ”அற்றன்று, திண்ணமான அறிவால் நீவிர் அறிந்தால் மட்டுமே” (102:5) என்னும் நிலைக்கண் நின்றுவிட ஒப்பாத இறை மாந்தர் (”அஹ்லுல்லாஹ்”) அதற்கும் அப்பால் ஏகி “பின்னர் நீவிர் அதனை திண்ணமான விழிகளால் காண்பீர்” (102:7)[19] என்னும் நிலையை அடைந்தே தமது இலக்கினை எய்துகின்றனர்.

அறிக! சிந்தனையாளர்கள் தமது இறுதி இலக்கினை அடையும்போது அவர்களின் சிந்தனை அவர்களைச் செவிட்டுத் பாசாங்கிககளாக ஆக்கிவிட்டிருக்கும். சிந்தனையில் நின்றுவிடும் அளவு காரிசம் சிறியதன்று; சிந்தனைக்கு வெகு மேலே உயர்ந்துள்ளது அது. சிந்தனை என்பது இருக்கும் வரை ஒருவரால் பேரமைதி கண்டு ஓய்வில் இருப்பது சாத்தியம் இல்லை. இறைவன் தனக்கு ஈவதை [மட்டுமே] பெற்றுக்கொள்ளும் தன்மையது என்பதால் தனது சிந்தனை ஆற்றலில் சோர்ந்து நின்றுவிடும் ஓர் எல்லை எப்போதும் அறிவுக்கு உண்டு. எனவே, அறிவர் எப்போதும் தெய்வ வண்மையின் மூச்சுக்களுக்குத் (நஃபஹாத்துல் ஜூது)[20] தம்மைத் திறந்து வைத்திருத்தல் வேண்டும்; தமது பகுத்தறிவுத் திறன் மற்றும் கற்றல் (கசபு) ஆகிய சங்கிலிகளால் தளைப்பட்டிருத்தல் தகாது. ஏனெனில் அவை ஐயத்தில் (ஷுப்ஹா) ஆழ்த்திவிடும்.

உமது சகோதரர்களில் ஒருவரிடமிருந்து நான் அறிந்துள்ளேன் – அவர் உம் மீது நேர்மையான அக்கறையும் அன்பும் கொண்டவர் என்று நான் நம்புகிறேன் – ஒருநாள் நீவிர் அழுதுகொண்டிருப்பதை அவர் பார்த்தார். அவரும் வேறு சிலரும் உம்மிடம் உமது அழுகைக்கான காரணத்தை வினவினர். கடந்த முப்பது ஆண்டுகளாக நான் பேணி வந்த ஒரு நிலையைப் பற்றிய தெளிவை இப்போது நான் அடைந்தேன், சற்று முன்தான் அதனைப் பற்றிய ஆதாரம் எனக்கு வெளிச்சமானது. ஆனால் நான் முன்பு கருதியதற்கு மாற்றமாக இந்தத் தெளிவு இருக்கின்றது. எனவே நான் அழுதபடி எனக்கே சொல்லிக் கொண்டேன் ‘இப்போது எனக்கு வந்திருக்கும் இந்தத் தெளிவும்கூட முந்தைய நிலையைப் போன்றதே என்றால் நான் என்செய்வேன்?’” என்று நீவிர் அவர்களிடம் சொன்னீர்.

நுண்ணறிவு மற்றும் சிந்தனையின் படித்தரம் (மர்தபா) கொண்டு அறிபவன் அமைதி அடைவது என்பது சாத்தியம் இல்லை, குறிப்பாக, இறைவனைப் பற்றிய அறிதலில். தர்க்கச் சிந்தனை வழியில் ஒருவர் தனது எதார்த்தத்தை (மாஹிய்யத்) அறிதல் சாத்தியம் அன்று. எனவே, என் சகோதரா!, தரீக்கா என்னும் ஞானப் பாதையுள் நுழைந்து சுயப்பயிற்சி (ரியாளத்), அக முயற்சி (முஜாஹதா) மற்றும் தனிமை (ஃகல்வத்) ஆகிய, இறைத்தூதர் காட்டித் தந்த நெறிகளில் ஈடுபடுவதை விட்டும் உம்மைத் தடுக்கின்ற கேடுதான் என்ன? ”நம் அடியார்களுள் ஒருவர். அவருக்கு நம்மிடமிருந்து அருளை வழங்கி நம்மிடமிருந்தே நேரடியான ஞானத்தை அருளினோம்” (குர்ஆன்:18:65)[21] என்று ஒருவரைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றானே, அவர் அடைந்ததை நீவிரும் அடைவதற்கான வழிமுறைகள் அல்லவா அவை? நும்மைப் போன்றோரே இந்த மேலான வலுப்பமான உயர் படித்தரத்தை அடைய வைக்கும் பணியை ஆற்ற வேண்டும்.

இருக்கும் பொருள் ஒவ்வொன்றும் (மவ்ஜூத்) ஏதேனுமொரு காரணம் (சபப்) பற்றியே இருக்கின்றது என்பதை எனது நண்பர் (அல்லாஹ் அவருக்கு ஈடேற்றம் அருள்வானாக!) அறிய வேண்டும். அப்பொருளினைப் போன்றே அக்காரணமும் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்றுதான் (முஹ்தஸ்). இதில் இரண்டு அம்சங்கள் உள்ளன: தனது காரணத்தை முன்னோக்கும் அம்சம் ஒன்று; தன்னை உள்ளதாக்கி வைத்தோன் (மூஜித்) ஆன இறைவனை முன்னோக்கும் அம்சம் மற்றொன்று. பொது மக்களும் தத்துவவாதிகளும் பொருட்களின் காரணங்களை நோக்குகின்றனர். இறைவனுக்கு உரியோரான (அஹ்லுல்லாஹ்) சிறந்தோருள் இறைத்தூதர்கள் (அன்பியா), இறைநேசர்கள் (அவ்லியா) மற்றும் வானவர்கள் (அவ்லியா) ஆகியோர் அன்னனம் நோக்குவதில்லை. பொருட்களின் காரணங்களைப் பற்றிய அறிவு நிரம்பப் பெற்றிருந்தபோதும் அவர்கள் ஒவ்வொரு பொருளிலும் அதனை உள்ளதாக்கி வைப்போன் (மூஜித்) ஆன இறைவனையே நோக்குகின்றனர்.

      அவருட் சிலர் இறைவன் இயற்றிய காரணத்தின் கண்ணோட்டத்தில் நோக்குகின்றனரே அன்றி இறைவனின் கண்ணோட்டத்தில் நோக்குவதில்லை. எனவேதான் அவர் “என் ரட்சகனிடம் இருந்து எனது இதயம் அறிவித்தது” என்று சொல்கிறார் [22]. அனால் பூரணர் (காமில்) ஆன மற்றவர் சொல்கிறார், “எனக்கு என் ரட்சகன் அறிவித்தான்” [23]. இதனைப் பற்றியே நமது ஆன்மிகத் தோழர் பகர்ந்தார், “நீங்கள் உமது அறிவை உயிரற்றதில் இருந்து உயிரற்ற தடயங்களாக எடுத்துக் கொள்கின்றீர். யாமோ இறப்பே இல்லாத என்றும் உயிருள்ளோனாகிய ஒருவனிடம் இருந்தே அறிவை அடைகிறோம்” [24]. இதன்படி, தனது இருப்பை தான் அல்லாத இன்னொன்றிலிருந்து அடைந்து கொள்ளும் எதுவும் ‘இன்மை’தான் (அதம்). எனவே, இறைஞானியைப் பொருத்த வரை இறைவன் ஒருவனைத் தவிர தான் சார்ந்து இருப்பதற்கு வேறு எவரும் எதுவும் இல்லை.

      இறைவன் ஒருவனே எனினும் அவன் நம் பக்கம் திருப்பியுள்ள முகங்கள் (உஜூஹ்) பல என்பதை எனது நண்பர் அறிய வேண்டும். எனவே, இறைவனைச் சந்திக்கும் இடங்கள் (அல்-மவாரிதாத்துல் இலாஹிய்யா) பற்றியும் அந்த முகங்களில் வெளிப்படும் ஒளிச்சுடர்கள் (தஜல்லியாத்) பற்றியும் எச்சரிக்கையாக இரு. உனது ரட்சகன் என்னும் நிலையில் அவனது ஆணை (ஹுக்மு) உனது பாதுகாவலன் என்னும் நிலையிலான அவனது ஆணையினின்றும் வேறுபட்டது; அருளாளன் என்னும் நிலையிலான அவனது ஆணையினும் பழி தீர்ப்போன் என்னும் நிலையிலான அவனது ஆணை வேறுபட்டது. அவனது அழகிய திருநாமங்கள் (அஸ்மா’) அனைத்தின் நிலையும் இஃதே [25].

      இறைவனின் திருமுகத்தை (உஜூது என்னும் உள்ளமையை)க் குறிக்கும் ”அல்லாஹ்” என்னும் திருநாமம் ரப்பு (ரட்சகன்), காதிர் (வல்லோன்), வாசி’ (விசாலன்) முதலிய அனைத்துத் திருநாமங்களையும் உள்ளடக்கிய ஒன்று என்பதை அறிக. அது நாமங்களின் நாமம் ஆகும் [26]. அனைத்து நாமங்களின் இத்தொகுப்பு என்பது அனைத்துத் திருப்பண்புகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் சுயம் (ஜாத்) என்பதைப் போன்றது. அல்லாஹ் என்னும் திருநாமம் அனைத்துத் திருநாமங்களையும் அடக்கிக்கொள்ளவும் அவை அனைத்தும் அத்திருநாமம் காட்சி அகிவிடாமல் காக்கின்றன. எனவே, அல்லாஹ் என்னும் திருநாமத்தை நீவிர் எவ்வகையிலும் தரிசிக்க இயலாது [27]. அனைத்தையும் தன்னுள் அடைக்கியதான (ஜாமிஆ) அல்லாஹ் என்னும் திருநாமத்தைக் கொண்டே அவன் உன்னை அணுகுகிறான் எனில் அவன் எவ்விதம் உன்னிடம் பேசுகிறான் என்பதையும் இந்த இணக்கமான உரையாடல் (முனாஜாத்) அல்லது தரிசனம் என்ன படித்தரத்தைக் (மகாம்)[28] கோருகிறது என்பதையும் கவனி. எனவே, எந்தத் திருநாமம் பார்க்கப்படுகிறது என்பதைக் கருத்தில் கொள். ஏனெனில், அத்திருநாமமே உன்னிடம் பேசுகிறது அல்லது உன்னால் பார்க்கப்படுகிறது [29]. உருவங்களின் மடைப்பிறழ்வில் (அத்தஹவ்வுல் ஃபிஸ்ஸூரா) வெளிப்படும் திருநாமம், மூழ்கிக்கொண்டிருப்போன் ’அல்லாஹ்’ என்று கத்தும்போது அச்சொல்லுக்கு “உதவியாளனே!” “காப்பாளனே” “ஈடேற்றுபவனே” என்று பொருள்; துன்பத்தில் துடிக்குமொருவன் ‘அல்லாஹ்’ என்று அழைக்கும்போது அத்திருநாமத்திற்கு ”மருத்துவனே!” “குணப்படுத்துவோனே!” என்று பொருள்.

      உருவங்களின் மடைப்பிறழ்வு என்று நான் கூறியிருப்பது இமாம் முஸ்லிம் (இறப்பு 261/875) அவர்கள் தனது சஹீஹில் (நபிமொழித் தொகுப்பு நூலில்) பதிவு செய்துள்ளதொரு நபிமொழியைச் சுட்டுகிறது. உயிர்த்தெழுப்பப்படும் நாளில் படைப்பாளன் (அல்-பாரிஃ) தன்னை அடியார்களிடம் வெளிப்படுத்துவான். அவர்கள் அஃது அவனல்லன் என்று மறுத்து அவனிடம் பாதுகாவல் தேடுவர். எனவே அவன் அவர்கள் தன்னை அடையாளம் கண்டறியத் தக்க வேறோர் உருவமேற்று வெளிப்படுவான். முன்பவனை மறுத்தோர் இப்போது அவனை ஏற்பர் [30]. இப்பொருண்மையில் “பார்த்தல் / தரிசித்தல்” என்றும் அணுக்க உரையாடல் என்றும் தெய்வீகப் பேச்சு (அல்-முஃகா(த்)தபாத்துர் றப்பானிய்யா) என்றும் சொல்லப்படுவதன் விளக்கம் இதுவே.

      தனது சுயத்தைச் செம்மையாக்கி, தான் கிளம்பும்போது தன்னுடன் எது வருமோ அதனையே அறிவாளி தேடல் வேண்டும். வண்மை (வஹ்பு) மற்றும் தரிசனம் ஆகியவற்றால் இறைவன் தரும் அறிவை அன்றி அஃது வேறில்லை. உதாரணமாக, மருத்துவம் பற்றிய உன்னுடைய அறிவு எவ்வுலகில் பிணியும் நோவும் உண்டோ அவ்வுலகில் மட்டுமே செல்லுபடியாகும். பிணியும் நோவும் அற்ற உலகொன்றிற்கு நீ சென்று சேருங்கால் உன் மருத்துவ அறிவைக்கொண்டு யாருக்கு நீ மருத்துவம் செய்வாய்? தனக்கு அதில் பயன் ஏதுமில்லை என்னும் நிலை இருப்பின் எவ்வொரு அறிவையும் அறிவாளி தேட மாட்டான். ஆனால், இறைத்தூதர்களுக்கு மருத்துவ அறிவு (திப்ப்) அருளப்பட்டது போல் வண்மையால் (வஹ்பு) இவ்வுலக அறிவு ஒருவருக்கு அருளப்படும் எனில் அவர் அதில் அம்மட்டோடு நின்றுவிடக் கூடாது. மாறாக, அவர் இறையறிவைத் தேட வேண்டும். வடிவக்கணித அறிவின் நிலையும் அவ்வாறே. மேற்பரப்புகள் (மிஸாஹா) உள்ள பருவுலகில் மட்டுமே அதன் பயன்பாடு. இவ்வுலகை விட்டுச் செல்லும் போது அதனையும் விட்டுவிட்டு ஆன்மா ஒன்றுமில்லாமல் வெறுங்கையோடுதான் (சாதிஜா) செல்லும். மறுவுலகிற்கு (ஆலமுல் ஆஃகிறா) ஏகும்போது ஆன்மாக்கள் இவ்வாறே இவ்வுலகின் ஒவ்வொரு அறிவையும் விட்டுவிட்டுச் செல்ல்லும்.

      எனவே, ஒவ்வொரு அறிஞனும் தனக்கு இன்றியமையாத தேவை (அல்-ஹாஜ்ஜத்துல் ளரூரிய்யா) உள்ள அறிவை மட்டுமே தேடி அடைய வேண்டும். எனவே, இவ்வுலகை விட்டும் கிளப்பப்படும்போது அவன் எதனைக் கொண்டு செல்ல வேண்டுமோ அதனை மட்டுமே தேடட்டும். குறிப்பாகச் சொன்னால், இருவகையான அறிவுகளை அன்றி வேறு இல்லை: இறையறிவு மற்றும் மறுவுலகத் தங்குமிடங்கள் (மவாத்தீனுல் ஆஃகிறா)[31] மற்றும் அவற்றின் படித்தரங்கள் (மகாமாத்) கோருகின்ற அறிவு. இவ்வறிவுகளால் அங்கே அவன் எதனையும் மறுக்காமல் தனது சொந்த வீட்டில் நிம்மதியாக நடப்பது போல் நடப்பான். அவன் மெய்யறிவர் (ஆரிஃப்) குழாத்தில் ஒருவனாய் இருக்க வேண்டும், மறுப்போர் (நுக்ரான்) கூட்டத்தில் ஒருவனாகிவிடக் கூடாது. இம்மறுமை வீடுகள் அனைத்தும் தனித்துப் பிரிந்த (இம்தியாஸ்) வீடுகளே அன்றி பிழையாகும்படிக் கலந்துகிடக்கும் (இம்திஸாஜ்) வீடுகளல்ல. இறைவன் தம்முன் தோன்றும்போது அவனை மறுத்து “எமது ரட்சகனிடம் பாதுகாவல் வேட்கிறோம்! நீ எமது ரட்சகனல்லன். எம்மிடம் எமது ரட்சகன் வரும்வரை யாம் காத்திருப்போம்” எனக் கூறுவார்கள்; பின்னர் அவர்கள் அறியும்படியான உருவத்தில் அவன் தோன்றியவுடன் ஏற்றுக்கொள்வார்கள் என்று, முன்னம் குறிப்பிட்ட நபிமொழியிற் காணப்படுகின்ற அந்தக் கூட்டத்தில் நீ ஆகிவிடாதிருக்க (இந்த அறிவுகள்) வேண்டும். அந்த நிலையை விடப் பெரிதானதொரு குழப்ப நிலை (ஹைரா) வேறில்லை.

      தன்னொழுக்கம், அகமுயற்சி (முஜாஹதா) மற்றும் குறிப்பிட்ட நியதிகளுடன் (தரீக்கா மஷ்ரூத்தா) கூடிய ஆன்மிகத் தனித்திருப்பு ஆகியன கைக்கொண்டு அறிவன் ஒருவன் முன்பு நாம் உரைத்த இருவகை அறிவுகளையும் பெற வேண்டும். ஆன்மிகத் தனித்திருத்தல் குறித்துப் படிப்படியாக விரிவாக விளக்க வேண்டும் என்று விழைகிறேன் எனினும் தற்போதைய நேரம் (வக்த்) அதற்குத் தோதாயில்லை. நிகழ்காலம் (வக்த்) என்று இங்கே நான் குறிப்பிடுவது தாம் அறியாத அரும் பெரும் விடயங்களை எல்லாம் அடித்து மறுக்கின்ற தீய அறிஞர்களையே (உலமாவுஸ்ஸூ’). தமக்கு இறைநம்பிக்கை (ஈமான்) ஏற்றம் பெற்றதாக இல்லாத நிலையிலும் அவர்கள் தமது சமயப் பணிகளுக்காக பேரும் புகழும் பெற வேண்டும் என்னும் பேராசையாலும் மதவெறியாலும் பிணைக்கப்பட்டுள்ளார்கள்.

      இறைவனே போதுமானவன். முதலும் முடிவும் அகமும் புறமும் இலங்கு புகழ் யாவும் அவனதே! நன்றியிலும் நினைவிலும் யாம் இரப்பது அவனருள் எல்லாம் அவனது திருத்தூதர் மீதில் என்பதே!

அடிக்குறிப்புகள்

  1. நூல்: ஜாமிஉத் திர்மிதி, அத்தியாயம்: கிதாபுஸ் ஸுஹ்து, ஹதீஸ் எண்:54.
  2. ஆன்மிகப் படித்தரங்கள் (மகாமாத்) மனிதன் மேற்கொள்ளும் கடின உழைப்பால் ஈட்டப்படுகின்றன (மகாசிப்); ஆன்மிக அகநிலைகள் (அஹ்வால்) ஒருவர் மீது இறைவனால் அருளப்படுகின்றன (மவாஹிப்). இங்கே இப்னுல் அறபி இவ்வேறுபாட்டினை இறையறிவு குறித்தான அலசலுக்குப் பொதுவெளியில் கொண்டு வருகிறார். அதாவது, ஒருவர் தனது நுண்ணறிவின் கடின முயற்சிகளால் இறைவனை அறியலாம் அல்லது எவ்வித இடையீடுமின்றி இறைவனே தனது அடியானின் மீது தன்னைப் பற்றிய அறிவை அருளலாம். இப்னு அறபி அவர்கள் இக்கோணத்தில், கஷ்ஃப் (திறப்பு) என்றும் தவ்க் (சுவைப்பு) என்றும் சொல்லப்படுகின்ற, இறைவனால் அருளப்படும் அறிவையே இக்கடிதத்தின் வழியாக ஃபக்ருத்தீன் ராஸிக்கு உணர்த்த விழைகிறார். எனினும், இஃது மனித முயற்சிகளின் மதிப்பை மறுக்கவில்லை என்பதைத் தெளிக.
  3. இப்னுல் அறபிக்கும் மற்றும் முதன்மையான சூஃபிகள் பலருக்கும் ரஜுல் (நபர்; இலக்கணப்படி ஆண்பால்) என்னும் சொல் அல்லாஹ்வினர் (அஹ்லுல்லாஹ்) அல்லது சூஃபிகளை, அவர்களில் இருபாலரையும் குறிக்கும்படியே பயன்படுத்தப்படுகிறது.
  4. நூல்: ஜாமிஉத் திர்மிதி, அத்தியாயம்: கிதாபு ’இல்மு, ஹதீஸ் எண்:19
  5. இறையியல் மற்றும் தத்துவத் துறைகளின் படி முஹ்தஸாத் (முஹ்தஸ் என்பதன் பன்மை) என்னும் சொல் ”(புதிதாகத்)தோற்றுவிக்கப்பட்ட பொருள்கள்’ என்பதைக் குறிக்கும். தோற்றிய பொருட்கள் யாவும் நிலை இலாதன என்னும் தர்க்கத்தின்படி இங்கே நிலையற்ற புதுமைகள் என்று குறிக்கப்பட்டன.
  6. அபூ ஹாமித் என்னும் இயற்பெயர் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களைக் குறிக்கும்.
  7. ஒப்புமை: “இறைவனை அன்றி வேறெவரும் இறைவனை அறிவதில்லை” என்றார் அபூ சயீது ஃகர்ராஸ் (ரஹ்).
  8. ”திரை நீக்கம்” என்று நேரடிப் பொருட்படும் கஷ்ஃப் என்னும் சொல்லிற்கு நெருங்கிய பொருளிலேயே முஷாஹதா (சாட்சி) என்னும் சொல்லினை இப்னுல் அறபி பயன்படுத்துகிறார்.
  9. கற்பனைக்கு ஓர் உயரிய தகுதி இருப்பினும் இறைவனை அறிய முனைவோனுக்கு கற்பனையுருவங்கள் இடையூறு ஆகலாம். ராஸிக்கு இப்னுல் அறபி செய்யும் எச்சரிக்கையின் அடிப்படை இதுவே. இப்னுல் அறபி பின்வருமாறு எழுதுவதையும் ஓர்க: “அனைத்துப் பொருட்களின் மீதும் தமது தன்மைகளால் பரந்த நிலையை பாவிப்பதாயினும் கற்பனை என்பது பொருட்களின் எதார்த்த நிலைக்கு தொடர்பற்ற அர்த்தங்களை வரித்துக் கொள்ளும் தன்மையும் கற்பனைக்கு உள்ளது. எனவே, கற்பனை என்பது பரந்ததாயும் குறுகியதாயும் இருக்கிறது. ஆனால், இறைவன் முற்றும் ’விசாலம்’ ஆனவன் (பரிபூர்ண விசாலன்) என்றறிக.” (நூல்: ஃபுதூஹாத்தே மக்கிய்யா 3:361).
  10. கற்பனையின் தன்மைகளுள் ஒன்று யாதெனின் அஃது ஆன்மிக அர்த்தங்களை உருப்படுத்துகின்றது. அதேபோல், உருவங்களுக்கும் அன்மிக அர்த்தங்களை ஏற்றுகின்றது.
  11. நூல்: சஹீஹுல் புகாரி, அத்தியாயம்: கிதாபுத் தஃபீர், ஹதீஸ்:15 என்னும் நபிமொழியைக் குறிக்கிறது. அதில், கனவில் தனக்குத் தரப்பட்ட பாலினை நபிகள் நாயகம் (ஸல்) அறிவு என்று பொருள் சொல்கிறர்கள் (தானும் பருகி அதனை உமர் (ரலி) அவர்களுக்கும் தருகிறார்கள்).
  12. காண்க: குர்ஆன்:3:103: ”ஹப்லுல்லாஹ்” (அல்லாஹ்வின் கயிறு) என்பது குர்ஆனைக் குறிப்பது என்று கருதப்படுகிறது.
  13. நூல்: சஹீஹுல் புகாரி, அத்தியாயம்: கிதாபுத் தஃபீர், ஹதீஸ்:26 என்னும் நபிமொழியைக் குறிக்கிறது. அதில், கனவில் காட்டப்படும் சங்கிலி என்பது சமயத்தில் வேரூன்றி நிற்பதைக் குறிப்பதாக அர்த்தப்படுத்தப்படுகிறது.
  14. ’ரஜுல்’ என்னும் சொல் குறித்து முன்பே கூறியதை நினைவு கூர்க (அடிக்குறிப்பு எண்:3) இஸ்லாமிய புடவியியல் (பிரபஞ்சவியல்) நோக்கில் புடவியுள்ளம் (பிரபஞ்ச மனம்) என்பது செயப்படு பொருளாதலால் பெண்பால் ஆகும். ஆனால், அக்லு (நுண்ணறிவு) என்பது இயங்குபொருள் ஆதலால் அஃது ஆண்பால் ஆகும். இவ்விரு சொற்களும் பின்னாட்களில் சூஃபித்துவத்திலும் இஸ்லாமியத் தத்துவத்திலும் பெரிதும் பேசப்படுவதான ’பலகை’ (’லவ்ஹு’ – காண்க:குர்ஆன் 85:22) மற்றும் ’பேனா’ (’கலம்’ – காண்க: குர்ஆன்:68:1) (’பலகையின் மீது எழுதுகிறது பேனா’) ஆகியவற்றுடன் அர்த்தப்படுபவையாக உள்ளன. இங்கே இப்னுல் அறபி சொல்லவரும் கருத்து யாதெனில் இறைவனை அறிய அவாவுவோன் தனது அறிவையும் தீட்சையையும் செயற்படுகின்ற நிலையில் உள்ளவரான குருவிடமிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும், தான் பெற மட்டுமே முடிந்த அடுத்தவர்க்கு வழங்க இயலாத செயப்படு நிலையில் உள்ள நபரிடமிருந்து பெற முயலக்கூடாது.
  15. அனைத்துப் பண்புகளும் அடிப்படையில் இறைவனுக்கே உரியன என்பது இப்னுல் அறபியின் கருத்து (காண்க: ஃபுத்தூஹாத்துல் மக்கிய்யா 3:147). முழுமையான சுய உள்ளமை கொண்ட இறைவனைப் போலன்றி படைப்புக்களாகிய நமக்கு சார்பு உள்ளமையே உள்ளது. நமது சுயம் உள்ளமை அற்றது (அதம்).
  16. இச்சொற்றொடரின் வார்த்த்தைக்கு வார்த்தை நேரடி மொழிபெயர்ப்பு சொல்ல வரும் கருத்தினைச் சற்றே மழுக்கி விடுகிறது. கஷ்ஃப் (திரை நீக்கம் / திறப்பு) என்னும் சொல்லினைக் கொண்டு இப்னுல் அறபி அவர்கள் குறிப்பது யாதெனில் முயற்சிகளோ மனித இடையீடோ ஏதுமின்றி ஒருவர் இறைவனிடம் இருந்து பெருகின்ற மெய் அறிவையே. (இல்மு லதுன்னி குறித்த அடிக்குறிப்பு எண்:21 காண்க). இப்னுல் அறபி அவர்கள் நேரிட்டு அருளப்படும் இறையறிவையே பெரிதும் பேசுகின்றார். “கஷ்ஃப் இல்லானுக்கு அறிவு என்பதில்லை” என்னும் அவரது கூற்று சுப்ரஸித்தம்.
  17. வழமையாக, முஹக்கிக் என்னும் பதத்தினை இறைவனைப் பற்றிய தனது மெய்யறிவில் ஆழங்காற்பட்ட சூஃபியைக் குறிப்பதற்கே இப்னு அறபி பயன்படுத்துவார். எனினும், இங்கே அப்பதத்தினை அவர் நுண்ணறிவு கொண்டு சிந்தனைப் புலத்திலாவது அனைத்துப் பொருட்களையும் இறைவன் என்னும் மூலத்தில் சேர்த்துப் பார்க்கும் திறன் பெற்ற அறிஞரைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்.
  18. இறைவனே செயற்படுகிறான் அல்லது முதற் காரணன் (ஃபாஇல்) என்பதையும் அனைத்து இரண்டாம் நிலை நிகழ்வுகளின் மூல முதற் காரணம் அவனே என்பதையும் நுண்ணறிவாளர் புரிந்துகொள்கின்றார் எனினும் அவர்களது புரிதல் வெறுமனே சிந்தனை மட்டுமே. ஐன்–காஃப்-லாம் என்னும் மூன்றெழுத்து வேர்ச்சொல் சங்கிலியால் ஒட்டகத்தைப் பிணைப்பதைக் குறிக்கின்றது என்பதைக் கொண்டு அஃது அக்ல் என்னும் நுண்ணறிவின் மட்டுப்பட்ட நிலையைக் குறிப்பதாக இப்னுல் அறபி அவர்கள் காட்டுகிறார். நுண்ணறிவு தனது அறிதற் புலத்தினுள் வருகின்ற எதனையும் முடிச்சுப் போட்டுக் கட்டிவிடுகிறது (ஐன்–காஃப்-தால் என்னும் வேர்ச்சொல்லின் பொருள் முடிச்சு என்பதாகும்). எனவே அது தனது அறிதலில் மட்டுப்பட்டுள்ளது. அதாவது அல்லாஹ்வை அன்றி வேறு தெய்வம் இல்லை என்பதை நுண்ணறிவு அறிய வரலாம், ஆனால் தனது எல்லைகளால் மட்டுப்படுத்தப்பட்ட அறிவாகவே அது இருக்கும்.
  19. ஹக்குல் யகீன் (சத்திய உறுதி) என்பது பற்றியும் குர்ஆன் பேசுகிறது (காண்க: 56:95). பொதுவாக இம்மூன்று பதங்களும் இறைவனைப் பற்றிய திண்ணமான அறிதலின் படிநிலைகளைக் குறிக்கப் பயன்படுகின்றன. இல்முல் யகீன் என்பதற்கு உவமை நெருப்பைக் கேள்விப்படுவது; ஐனுல் யகீன் என்பதற்கு உவமை நெருப்பைக் காண்பது; ஹக்குல் யகீன் என்பதற்கு நெருப்பால் எரிக்கப்படுவது என்று விளக்கம் சொல்லப்படுகிறது. இந்தப் பத்தியில், இல்முல் யகீன் என்பதை நுண்ணறிவால் சிந்தித்து இறைவனை அறிவதற்கும், ஐனுல் யகீன் என்பதை கஷ்ஃப் என்னும் அகத்திறப்பால் இறைவனை அறிவதற்கும் இப்னுல் அறபி அவர்கள் பயன்படுத்துகிறார். (காண்க: ஃபுத்தூஹாத்துல் மக்கிய்யா 2:268).
  20. இத்தொடர் குறித்த ஹதீஸ் ஒன்றினை இப்னுல் அறபி பிறிதோரிடத்தில் மேற்கோள் காட்டியுள்ளார்: “உமது காலத்தின் நாட்களில் உமது ரட்சகன் நிச்சயமாக கருணையின் மூச்சுக்களை வைத்திருக்கிறான் – அவற்றுக்கு உன்னை ஆளாக்கு” இந்த ஹதீஸின் வேறொரு பாடத்தினை இப்னுல் அறபி எழுதிய “ரிசாலாத்துல் ரூஹுல் குத்ஸி” என்னும் நூலிற் காணலாம்.
  21. ”நம் பிரசன்னத்திலிருந்து சிறப்பான அறிவு” என்பதை ‘இல்மெ லதுன்னீ” என்று சூஃபிப் பனுவல்கள் குறிப்ப. குர்ஆன்:18:65-ஆம் திருவசனத்தின் மீதான தனது விரிவுரையில் (தஃப்சீர்) ஃபக்ருத்தீன் ராஸி அவர்கள், ‘சூஃபிகளுக்கு இஃது கஷ்ஃப் என்னும் அகத்திறப்புக்களால் பெறப்படும் அறிவுகளைக் குறிக்கும்” (அல்-உலூம் அல்-ஹாஸிலா பித்தரீக்கல் முகாஷஃபாத்) என்று குறிப்பிடுகிறார். பிறகு அவர் அறிவை இரண்டு வகைப்படுத்துகிறார்: தன்னாதாரமானதும் கற்கப்பட்டதுமான அறிவு ஒருபுறம், மற்றும் லதுன்னீ அறிவு மறுபுறம். பின்னர் இல்மெ லதுன்னீ என்றால் என்ன என்பதற்கு ராஸி தனது வரையறையைத் தருகிறார். ஒருவர் சுயக் கட்டுப்பாடுகள் மற்றும் அக முயற்சிகளால் (ரியாளாத் வல் முஜாஹதாத்) தனது புலனுகர்வு மற்றும் கற்பனைக் கருவிகளை வலிவிழக்கச் செய்கிறான். அவை மெலிந்ததும் நுண்ணறிவுத் திறன் (அல்-குவ்வத்துல் அக்லிய்யா) வலிமை ஓங்கி தெய்வீக ஒளிகள் (அல்-அன்வாருல் இலாஹிய்யா) அவரது நுண்ணறிவின் பொருளை (ஜவ்ஹர்) வெளிச்சமாக்குகின்றன. பின்னர், சிந்தித்தல் (தஃபக்குர்) மற்றும் கருதுதல் (தஅம்முல்) ஆகியவற்றால் செய்யப்படும் முயற்சி (சஃய் வ தலப்) ஏதுமின்றியே மெய்யறிவு (மஆரிஃப்) கிடைக்கப்பெறும், அறிவின் வடிவங்கள் யாவும் செம்மையுறும்” (ராஸி, தஃப்சீருல் கபீர், அல்-மத்ப’அவுல் பஹிய்யத்துல் மிஸ்ரிய்யா, கைரோ, 1934-8; 21:149-50). மேற்காணும் திருக்குர்ஆன் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த இறைநேசர் கிள்ரு (அலை) அவர்கள் ஆவார்.
  22. இவ்வாசகத்தை நவின்றவர் மாபெரும் சூஃபி ஞானி அபூ யஜீது பிஸ்தாமி (ரஹ்).

  23. இப்னுல் அறபி இங்கே பூரணர் என்று சுட்டுவது நபிகள் நாயகத்தை ஆதல் வேண்டும். இது ஹதீஸ் குத்ஸி என்னும் இறைவாக்கருளும் நபி மொழியைக் குறிப்பதாகக் கருதலாம். அத்தகைய ஹதீஸ் குத்ஸிகளின் தொகுப்பு நூலொன்றை “மிஷ்காத்துல் அன்வார்” என்னும் தலைப்பில் இப்னு அறபி செய்துள்ளார்.
  24. அபூ யஜீது பிஸ்தாமி (ரஹ்) செப்பிய புகழ்பெற்ற வாசகங்களில் இதுவும் ஒன்று.
  25. இவ்வரிகளில் இப்னு அறபி உணர்த்த விழையும் கருத்து யாதெனில், இறைவன் ஒவ்வொரு கணமும் தனது அடியானுக்கு புதிய முறையில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறான் என்பதால் அத்தருணத்தில் அவனது திருமுகத்தின் எந்த அம்சம் வெளிப்படுகிறது என்பதற்குத் தக அடியான் இறைவனிடம் நடந்து கொள்ள வேண்டும் என்னும் கோரிக்கை இருக்கிறது என்பதே. இப்னுல் அறபியின் இந்த போதனை “லா தக்ரார் ஃபில் தஜல்லி” (சுய வெளிப்பாட்டில் முன்னதே மீண்டும் நிகழ்தல் இல்லை) என்னும் புகழ்பெற்ற சூஃபி வாக்கியத்துடன் பொருந்துகிறது.
  26. அல்லாஹ் என்பது அனைத்தையும் தொகுக்கும் நாமம் (இஸ்மு ஜாமிஃ) ஆதலால் அது அனைத்துத் திருநாமங்களையும் ஒன்றுபடுத்துகிறது. புடவி என்பது இறைத் திருநாமங்கள் அனைத்தும் வெளிப்படும் அம்பலம் / அரங்கம் ஆதலால் ஒவ்வொரு திருநாமமும் அல்லாஹ் என்னும் திருநாமத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை வெளிப்படுத்துகிறது என்றறிக.
  27. இன்னொரு வகையிற் சொல்வதெனில், புடவியில் அனைத்துத் திருநாமங்களும் வெளிப்படுகின்றன எனினும் அல்லாஹ் என்னும் திருநாமம் அவற்றைப் போல் வெளிப்படுவதும் பார்க்கப்படுவதும் இல்லை. ஒப்புமை: அடிக்குறிப்பு எண்:7-இல் அல்-ஃகர்ராஜ் கூறிய வாசகத்தைக் காண்க.
  28. ”மகாம்” என்பது பலரும் அறிந்ததொரு சூஃபிப் பதம். “நிற்குமிடம்” என்பதே அதன் நேரடிப் பொருள். ஒருவர் எப்படி நிற்றல் வேண்டும் என்னும் கருத்தில் இங்கே அஃத் படித்தரம் என்று மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. அதாவது, ஒருவரிடம் இறைவன் பேசுகையில் அல்லது இறைவனை அவர் தரிசிக்கையில் அவர் எவ்விதமாக இறைவனின் சுயவெளிப்பாட்டை அடைந்துகொள்வதில் தன்னை எவ்விதம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதாம்.
  29. இப்னுல் அறபியின் அறிவுரை இங்கே வெறும் சிந்தனைப் புள்ளி அன்று. மாறாக, அது சூஃபி நெறியின் அடிப்படைகளில் உள்ள ஒழுக்கம் (அதபு) என்னும் கருத்தியலுடன் தொடர்புள்ளது. இப்னுல் அறபியைப் பொருத்தவரை இறைவனின் சுய வெளிப்பாட்டைக் கிரகித்தல் என்பது மிக மிக இன்றியமையாத ஒன்று. இதனைக் கொண்டே ஒவ்வொரு சுய-வெளிப்பாடு கோருகின்ற ஒழுக்கத்தைப் பேண இயலும் (”ஒழுக்கமே சூஃபிநெறி முழுவதும்” என்னும் சொலவடையை இங்கே நினைவு கூர்க).
  30. நூல்: சஹீஹுல் முஸ்லிம், அத்தியாயம்: கிதாபுல் ஈமான், ஹதீஸ் எண்:83.
  31. இப்னுல் அறபி மற்றும் அவரை பின்பற்றுவோரின் எழுத்துக்களில் மவ்த்தீன் (பன்மை: மவாத்தீன்) என்பது மழ்ஹர் (வெளிப்பாட்டுத் தலம் / ஊடகம்) என்னும் பொருளில் கையாளப்படுகிறது.