Wednesday, September 18, 2013

முழு நிலா



இதயம்போல் யாருக்காக
இரண்டு துண்டாய் உடைந்தாயோ
அவரின் முகம் போல்
அழகாய் ஒளிர்கின்றாய் நீ.

உன் பேரின்பத்தின் மீது
படர்ந்துள்ளது
பூமியின் மீதான கவலை.

முழுமையாய் நீ
முகம் காட்டும் நாள் இது

நாளை முதல் தேய்வாய்
நாளும் நாளும்
வெவ்வேறு வடிவங்கள்
காட்டியபடி

அவரின் நெற்றியைப் போல்
அவரின் போர்வாளினைப் போல்
அவரின் புன்னகையைப் போல்

அதன் பின்
யாரும் காணாமல்
மறைந்திடுவாய் நீ

இறைவனுடன்
அவருக்கே உள்ள
அந்தரங்க நேரம் போல்.



Wednesday, September 11, 2013

கவிதைச் சதுரங்கம்


”எட்டாத உயரத்தில்
நிலவை வைத்தவன் யாரு?
கையோடு சிக்காமல்
காற்றை வைத்தவன் யாரு?
இதை எண்ணி எண்ணி
இயற்கையை வியக்கிறேன்”

வைரமுத்து எழுதிய பாடலொன்றில் வரும் இந்த வரிகளைப் பலமுறை வகுப்புக்களில் சொல்லிக் காட்டி மாணவர்களிடம் கருத்துக் கேட்டிருக்கிறேன். “இயற்கையைப் பற்றிக் கவிஞர் அற்புதமாகப் பாடியிருக்கிறார்” என்றுதான் எல்லோரும் சொக்கிப் போய் சொல்வார்கள்.

“இல்லை. இந்தக் கவிதையை நான் எழுதியிருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டேன். வைரமுத்து நாத்திகர் (முல்ஹித்). எனவே ’இயற்கையை வியக்கிறேன்’ என்று எழுதியிருக்கிறார். நான் ஏகத்துவன் (முவஹ்ஹித்). எனவே நான் எழுதியிருந்தால் ‘இதை எண்ணி எண்ணி இறைவனை வியக்கிறேன்’ என்று எழுதியிருப்பேன்” – கவிதைச் சதுரங்கத்தில் நான் நகர்த்துவது குதிரையா? ராணியா? ராஜாவா? என்று கவனிப்பார்கள் மாணவர்கள்.

“இறைவன் மனிதனுக்குத் தந்துள்ள படித்தரம் மிக உயர்வானது. நிலவை எட்டிப் பிடித்து அதில் காலடி பதித்துவிட்டான் மனிதன். காற்றைச் சிக்க வைத்து அதில் சிக்கெடுத்து ஆக்ஸிஜனை சிலிண்டருக்குள் அடைத்துவிட்டான் மனிதன். அந்த ஆக்ஸிஜன் சிலிண்டரை மாட்டிக் கொண்டுதானே காற்றில்லாத நிலவில் உலவி வந்தான்! எனவே மனிதன் இப்படிப் பாடலாம்:

எட்டாத நிலவினிலே
என்னை நடக்க வைத்தான்
சிக்காத காற்றினையும்
சிமிழில் அடைக்க வைத்தான்
இதை எண்ணி எண்ணி
இறைவனை வியக்கிறேன்”

அதே மெட்டில் என் இதயத்தின் வரிகள் இழையோடும்.

இப்படிக் கவிதைச் சதுரங்கம் ஆடுவது கவியுலகில் ஒன்றும் புதிதல்ல. எசப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டுப் பாடுவது எப்போதுமே வசப்பாட்டாய் இருக்க வேண்டும் என்பது நியதி அல்ல. அதில் சில நேரங்களில் அற்புதமான தரிசனங்கள் வசப்பட்டு வரலாம். உருதுக் கவியுலகில் இருந்து உதாரணம் ஒன்று தருகிறேன். அது ஐந்து பேர் விளையாடிய சதுரங்கம்!

இந்தக் கவிதைச் சதுரங்கத்தைத் தொடங்கி வைத்தவர் உருதுக் கவியுலகின் சிகரங்களில் ஒருவரான மீர்ஸா காலிப். அவர் ஆத்திகர்தான் ஆனால் மதவாதி அல்ல. பழக்கத்திலோ அவர் ஒரு மதுவாதி. அதில் மிதவாதி அல்ல! ‘மிதப்பில்’ அவர் ஒரு தத்துவக் கவிதை சொல்கிறார்:

“மஸ்ஜிதில் அமர்ந்து கொண்டு
மது அருந்த விடு
இல்லையேல் சொல் எனக்கு
இறைவன் இல்லாத இடம் எது?”
(ஷராப் பீனே தே மஸ்ஜித் மேன் பேட் கர்
யா ஓ ஜகா பதா ஜஹான் ஃகுதா நஹீன்)

இந்தக் கவிதைக்கு மகாகவி இக்பால் இப்படி பதில் சொல்கிறார்:

“மஸ்ஜித் இறைவனின் இல்லம்
குடிக்கும் இடம் அல்ல அது
நிராகரிப்பாளனின் இதயத்திற்குள் போ
அங்கே இறைவன் இல்லை”
(மஸ்ஜித் ஃகுதா கா கர் ஹே பீனே கீ ஜகா நஹீன்
காஃபிர் கெ தில் மேன் ஜா வஹான் ஃகுதா நஹீன்)

இக்பாலின் இந்தக் கவிதைக்குப் பதில் சொல்ல இன்னொரு கவிஞர் வந்தார். அவரும் காலிபைப் போலவே ஒரு மதுவாதிதான். அஹ்மத் ஃபராஸ் சொல்கிறார்:

”நிராகரிப்பாளனின் இதயத்திலிருந்து வருகின்றேன்
நான் இதைப் பார்த்துவிட்டு
அங்கும் இருக்கிறான் இறைவன்
ஆனால் அவனுக்கது தெரியவில்லை”
(காஃபிர் கெ தில் சே ஆயா ஹூன் மெய்ன் யெ தேக் கர்
ஃகுதா மவ்ஜூத் ஹே வஹான் பர் உஸே பதா நஹீன்)

ஃபராஸைத் தொடர்ந்து வந்தார் ஒரு கவிஞர்: வஸீ ஷாஹ். அவர் சொல்லும் கவிதை இக்பாலின் குரல் போல் ஒலிக்கின்றது:

“உலகில் ஒவ்வொரு இடத்திலும்
இருக்கத்தான் செய்கிறான் இறைவன்
நீ சொர்க்கத்திற்குச் செல் அங்கே
மது அருந்தத் தடை இல்லை”
(ஃகுதா தொ மவ்ஜூத் துன்யா மேன் ஹர் ஜகா
தூ ஜன்னத் மேன் ஜா வஹான் பீனா மனஃ நஹீன்)

இது முத்தாய்ப்பாக இருக்கிறதே. ஆட்டத்தை முடித்துவிடலாமே என்று நினைக்கும் போது அதிரடியாக அடுத்த கவிதையுடன் ஆஜர் ஆகிவிட்டார் சாகீ. அவர் சொல்கிறார்:

“உலகின் துன்பங்களை மறப்பதற்காகவே
மது அருந்துகின்றேன் சாகீ!
சொர்க்கத்தில் எவ்வகையான துன்பம் உள்ளது?
அங்கே அருந்துவதில் ஏதும் இன்பம் இல்லை!”
(பீதா ஹூன் கமே துன்யா புலானே கே லியே சாகீ
ஜன்னத் மேன் கோன்ஸா கம் ஹே வஹான் பீனே மேன் மஸா நஹீன்)

கவிதைச் சதுரங்கத்தில் இது ஒரு ’செக்மேட்’ நகர்வு என்றே சொல்ல வேண்டும். இந்த சாகீ என்பவர் மதுவாதிகளின் சார்பில் தெளிவான ஒரு வாதத்தை வைத்திருக்கிறார். அதற்கு அடியேன் பதில் கூற எத்தனிக்கிறேன்.

இதயம் எனது கோப்பை.
இறையொளி எனது மது.
ஞானம் எனது போதை.
இறைக் காதல் எனது பாதை.

மௌலானா ரூமி (ரஹ்) அவர்களின் சூஃபி நிலை பற்றி சுல்தான் வலத் சொன்னார், “அவர் அருந்தியது திராட்சை-மது அல்ல. இறைவனின் ஒளி-மது. அதனைக் கொண்டே அவரின் ஞான போதை அமைந்திருந்தது. சூஃபிகளின் மது அதுவே”

ஒளி மதுவே எனது பழ-மது (ஷராபெ கதீம்).

இதோ சதுரங்கத்தில் என் நகர்வுக் கவிதை:

”வேண்டாம் என்று நீ சொன்னால்
வேண்டாம் மது எனக்கு.
துன்பமே நீ தரும் கோப்பை எனில்
வேண்டும் அது எனக்கு.
நீயே எனக்கு எல்லாம்
இங்காகட்டும் அங்காகட்டும்,
மதுவாவது கோப்பையாவது
தேவை வேறு எது எனக்கு?”






Monday, August 12, 2013

ஏசுவின் பறவைகள்

ஏசுநாதரைப் பற்றி சூஃபிகளிடம் உள்ள கதைகளில் இதுவும் ஒன்று. சூஃபிகளின் நூற்களில் அவரின் பெயர் ’ஈசா’ என்றும் அவரின் புனிதத் தாயாரின் பெயர் ’மர்யம்’ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். இனி சூஃபிகள் சொல்லும் கதையைக் கவனிப்போம்.


மர்யமின் மகனான ஈசா சிறுவராக இருந்தபோது ஒருநாள் களிமண்ணில் பறவைகள் செய்து விளையாடிக் கொண்டிருந்தார். அவர் செய்தது போல் செய்ய முடியாத மற்ற பிள்ளைகள் ஓடிச் சென்று பெரியவர்களிடம் பல அவதூறுகளைக் கூறினார்கள். அன்றைய தினம் ’சப்பாத்’தாக (வாராந்திரப் பெருநாள். வழிபாட்டுக்கு மட்டுமே உரிய விடுமுறை தினம். யூதர்களுக்கு அது பிரதி சனிக்கிழமை ஆகும்) இருந்தபடியால் பெரியவர்கள் சொன்னார்கள், “இன்றைய தினம் எந்த வேலையும் அனுமதிக்கப் பட்டதல்ல. நாம் அவரைத் தடுக்க வேண்டும்.”

மர்யமின் மகனான ஈசா ஒரு குளத்தின் அருகில் அமர்ந்திருந்தார். மக்கள் திரண்டு அங்கே வந்து அவர் செய்த பறவைகள் எங்கே என்று அவரிடம் கேட்டார்கள். சிறிது தூரத்தில் இருந்த பறவைகளை அவர் சுட்டிக் காட்டினார். அவை உயிருள்ள பட்சிகளாகப் பறந்து சென்றன.

”பறக்கும் பறவைகளைச் செய்வது இயலாத காரியம். எனவே இது சப்பாத் பெருநாளை முறித்ததாக ஆகாது” என்று ஒரு முதியவர் கூறினார்.

”நான் இந்தக் கலையைக் கற்றுக் கொள்வேன்” என்றார் இன்னொருவர்.

”இது ஒரு கலை அல்ல. இது ஏமாற்று வித்தையே அன்றி வேறல்ல” என்றார் இன்னொருவர்.

எனவே சப்பாத் பெருநாளும் முறிக்கப் படவில்லை, அந்தக் கலையும் கற்பிக்கப் படவில்லை. ’ஏமாற்று வித்தை’ என்பதைப் பொருத்த வரை அந்த மக்கள் - சிறியவர்களும் பெரியவர்களும் – தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டார்கள். ஏனெனில் பறவைகளை வடிவமைத்து உயிரூட்டுவதின் தாத்பரியம் என்ன என்பதை அவர்கள் அறியவில்லை.

சனிக்கிழமையில் உலக வேலைகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டியது ஏன் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். எது ஏமாற்று வித்தை எது அல்ல என்பது பற்றி அந்த முதியவர்களுக்கே தெளிவு இல்லை. கலையின் ஆரம்பம் மற்றும் செயலின் முடிவு பற்றிய அறிவு அவர்களிடம் இல்லை. பலகையை நீட்டுவித்தது பற்றிய செய்தியும் இப்படித்தான்.
அந்த நிகழ்வு யாதெனில், மர்யமின் மகனான ஈசா, தச்சரான யூசுஃபின் கடையில் இருந்தார். தேவைப்பட்டதை விடவும் நீளம் குறைவாக இருந்த ஒரு மரப்பலகையைத் தன் கைகளால் அவர் இழுத்தார். அந்தப் பலகை நீளமாகிவிட்டது!

இந்த நிகழ்ச்சி மக்களிடம் பரவிய போது சிலர் சொன்னார்கள், “இது ஓர் அற்புதம். எனவே அந்தப் பையன் ஒரு ஞானியாக இருக்கவேண்டும்”

வேறு சிலர் சொன்னார்கள், “நாங்கள் இந்தக் கட்டுக்கதையை நம்பமாட்டோம். மீண்டும் செய்யச் சொல்லுங்கள் பார்க்கலாம்”

இன்னும் சிலர் சொன்னார்கள், “இது உண்மையாக இருக்க முடியாது. எனவே இதையெல்லாம் நூற்களில் எழுதி வைக்காதீர்கள்”

இந்த மூன்று சாராரிடமும் வெவ்வேறு உணர்வுகள் இருந்தாலும் அவர்களில் எவரும் அந்த அற்புதத்தின் சாராம்சத்தை அடைந்துகொள்ளவே இல்லை. “அவர் ஒரு மரப்பலகையை நீளமாக்கினார்” என்னும் வாசகத்தின் உட்பொருள் என்ன என்பதை அவர்கள் விளங்கவே இல்லை.

இந்த எளிமையான சூஃபிக் கதையின் சூக்குமங்களை இனி கவனிப்போம்:

மர்யமின் மகனான ஈசா சிறுவராக இருந்தபோது ஒருநாள் களிமண்ணில் பறவைகள் செய்து விளையாடிக் கொண்டிருந்தார். அவர் செய்தது போல் செய்ய முடியாத மற்ற பிள்ளைகள் ஓடிச் சென்று பெரியவர்களிடம் பல அவதூறுகளைக் கூறினார்கள்.

இந்த அற்புதத்தை அல்லாஹ்வின் அனுமதி கொண்டு ஈசா (அலைஹிஸ்ஸலாம்) நிகழ்த்தியதாகத் திருக்குர்ஆனில் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (காண்க: 3:49 மற்றும் 5:110).

விளையாட வேண்டும் என்னும் ஆர்வம் சிறுவர்களுக்கு இருப்பது இயற்கை. அதனால்தான் அறபியில் ஒரு பழமொழி சொல்லப்படுகிறது: அஸ்ஸபிய்யு ஸபிய்யன் லவ்கான நபிய்யன் – இறைத்தூதராகவே இருப்பினும் சிறுவர் சிறுவர்தான். ஆனால் இறைத்தூதரின் விளையாட்டும்கூட இறைவனின் அத்தாட்சி ஆகிவிடுகிறது. அந்நபிய்யு நபிய்யன் லவ்கான ஸபிய்யன் – சிறுவராகவே இருப்பினும் இறைத்தூதர் இறைத்தூதர்தான் (மற்ற பிள்ளைகளைப் போல் அல்ல) என்று சொல்வதுதான் சரி.

அன்றைய தினம் ’சப்பாத்’தாக (வாராந்திரப் பெருநாள். வழிபாட்டுக்கு மட்டுமே உரிய விடுமுறை தினம். யூதர்களுக்கு அது பிரதி சனிக்கிழமை ஆகும்) இருந்தபடியால் பெரியவர்கள் சொன்னார்கள், “இன்றைய தினம் எந்த வேலையும் அனுமதிக்கப் பட்டதல்ல. நாம் அவரைத் தடுக்க வேண்டும்.”

பொது மக்களின் கண்களுக்கு ஆன்மிகம் ஒரு வியாபாரமாகத் தெரிகின்றது. அதுவும் இதைச் சொல்பவர்கள் யார்? இறை இல்லத்தை வட்டி வசூலிக்கும் இடமாகவும் சந்தைக் கடையாகவும் மாற்றி வைத்திருந்த யூதர்கள்!

நல்ல பணம் இருப்பதைப் போலவே கள்ளப் பணமும் இருக்கிறது. கள்ளப் பணத்தின் புழக்கம் ஜாஸ்தியாகும் போது நல்ல பணமெல்லாம் கள்ளப்பணமாகவே சந்தேகிக்கப் படுகின்ற நிலை வந்துவிடுகிறது. போலி ஆன்மிகவாதிகள் பெருகிப் போன அந்த யூத சமூகத்தில் ஈசா (அலை) அவர்களையும் மக்கள் ஒரு ஆன்மிக வியாபாரியாகவே எண்ணியதில் ஆச்சரியம் இல்லை.

யூத மனம் வியாபாரத்திலும் வட்டியிலும் ஊறிப்போன ஒன்று. அதனால்தான் அவர்களுக்கு வாரம் ஒரு நாள் வியாபாரமே கூடாது என்ற மாபெரும் சோதனை வைக்கப்பட்டது. அவர்கள் அந்த வியாபார மனநிலை வழியாகவே இறைத்தூதரையும் பார்க்கிறார்கள்.

மர்யமின் மகனான ஈசா ஒரு குளத்தின் அருகில் அமர்ந்திருந்தார். மக்கள் திரண்டு அங்கே வந்து அவர் செய்த பறவைகள் எங்கே என்று அவரிடம் கேட்டார்கள். சிறிது தூரத்தில் இருந்த பறவைகளை அவர் சுட்டிக் காட்டினார். அவை உயிருள்ள பட்சிகளாகப் பறந்து சென்றன.

குளம் என்பது ஜீவனின் குறியீடு. ’மாவுல் ஹயாத்’ என்னும் ஜீவநீரூற்று கொண்டு மக்களின் இதயங்களை உயிர்ப்பித்தவர் ஈசா (அலை). ஜீவனைக் கொண்டு ஞான ஸ்நானம் தந்தார்கள் என்பதன் கருத்து அதுவே.

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களான “அல்-ஹய்யு” (ஜீவனுள்ளவன்) மற்றும் “அல்-முஹ்யு” (ஜீவனளிப்பவன்) ஆகிய இரண்டின் சுடர்கள் ஈசா (அலை) அவர்களில் அபரிதமாக வெளிப்பட்டிருந்தன (ஜுஹூர்). எனவே அவர்களின் அமைப்பிலேயே அல்லாஹ்வின் படைப்பாம்சம் இலங்கிக் கொண்டிருந்தது. திருக்குர்ஆன் அவர்களைச் சிறப்பித்து ரூஹுல்லாஹ் (அல்லாஹ்வின் ஆன்மா) என்றும் கலிமத்துல்லாஹ் (அல்லாஹ்வின் வாக்கு) என்றும் (உடைமைப் பொருளில்) கூறுகின்றது:

”மர்யமின் மகனான சொஸ்த்தக்காரர் ஈசா
அல்லாஹ்வின் தூதரும் அவனின் வாக்கும் ஆவார்
அதை அவன் மர்யமிடம் வெளிப்படுத்தினான்;
மேலும் அவனிடமிருந்தான உயிரும் ஆவார்”
(4:171)

”மர்யமின் மகனான ஈசா ஒரு குளத்தின் அருகில் அமர்ந்திருந்தார்.” என்பது அவர்களின் இந்த ஆன்மிகத் தன்மையைக் குறிப்பதாகும். ஏனெனில் நீர் என்பது உயிரூட்டலின் குறியீடாகும்:

”உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரிலிருந்தே வெளியாக்கினோம்” (21:30)

கதையைத் தொடர்ந்து பார்ப்போம்:

”பறக்கும் பறவைகளைச் செய்வது இயலாத காரியம். எனவே இது சப்பாத் பெருநாளை முறித்ததாக ஆகாது” என்று ஒரு முதியவர் கூறினார்.

சடங்குகளின் பிடியில் உறைந்து போய்விட்ட மனநிலை இது. கண் முன்னால் நடக்கும் அற்புதம் அந்த உள்ளத்தில் உணரப்படவே இல்லை. அவருடைய கவலை எல்லாம் கட்டிக் காக்கப்பட்டு வந்த மரபு உடைந்துவிடக் கூடாது என்பதுதான். மார்க்கத்தைப் பின்பற்றுவோருள் பெரும்பான்மையானோரின் மனநிலை இதுவே.

”நான் இந்தக் கலையைக் கற்றுக் கொள்வேன்” என்றார் இன்னொருவர்.

ஆன்மிகத்தைப் பற்றிய தவறான புரிதல் கொண்ட ஒருவரின் பார்வை இது. ஆன்மிகம் என்பது ஒரு கலை அல்ல. ஆன்மிகத்தில் கலை ஓர் அம்சமாக இருக்கலாம். அல்லது கலையின் அம்சங்கள் ஆன்மிகத்தில் இருக்கலாம். ஆனால் அது வெறும் கலையாக மட்டும் சுருங்கிவிட்டால் ஆன்மிகமாக இருக்காது.

இதைச் சொன்னவர் ஏற்கனவே ஒரு கலைஞராக இருக்கவேண்டும். இசை, சிற்பம், ஓவியம் போன்ற ஏதேனும் ஒரு கலையில் திறமை மிக்கவராக இருக்க வேண்டும். புல்லாங்குழல் வாசிக்கக் கற்றுக் கொள்வது போல், நடனம் ஆடுவதற்குக் கற்றுக் கொள்வது போல் ஆன்மிகத்தையும் கற்றுக்கொள்ளலாம் என்று அவர் நினைக்கிறார். ஆன்மிகம் ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையும் மாற்றி அமைப்பதை வேண்டி நிற்கிறது. அதை ஒருவர் பகுதி நேரப் பயிற்சியாகக் கற்றுக் கொள்ள இயலாது. கலைக்கும் ஆன்மிகத்திற்கும் உள்ள முக்கியமான வேறுபாடு இது. கலை முழுமை கொள்ளும்போது ஆன்மிகமாகப் பரிணமிக்க முடியும். ஆனால் ஆன்மிகம் கலையாக மட்டும் ஜீவிக்க முடியாது.

”இது ஒரு கலை அல்ல. இது ஏமாற்று வித்தையே அன்றி வேறல்ல” என்றார் இன்னொருவர்.

மூன்றாவது வகையான மனநிலை இங்கே வெளிப்படுகின்றது.

மனித மூளையின் செயல்பாடுகள் பற்றி அறிந்து கொள்வது இங்கே அவசியம். மூளை வலது இடது என்று இரண்டு பாகங்களாக உள்ளன. Right and Left Hemispheres. வலது பக்க மூளை உணர்ச்சிகளின் செயல்பாடுகள் கொண்டது. கற்பனை உள்ளுணர்வு போன்றவை அதன் இயக்கம். அது கலைப்பகுதி. இடது பக்க மூளை தர்க்கம் பகுத்தறிவு கணிதம் போன்ற செயல்பாடுகள் கொண்டது.

முதியவரின் பேச்சில் வெளிப்பட்டது முற்றிலும் உறைந்து போய்விட்ட மனநிலை. அதில் கலையுணர்வும் இல்லை, பகுத்தறிவும் இல்லை.

கலைஞனின் பேச்சில் வெளிப்பட்டது வலதுபக்க மூளையின் செயல்பாடு. அதன் பார்வையில் ஆன்மிகம் ஓர் அழகியல் மட்டுமே.

இப்போது பேசுவது இடதுபக்க மூளை. அறிவுஜீவிகள் என்று சொல்லப்படும் முட்டாள்களின் தர்க்கவியலும் பகுத்தறிவும் கொண்ட அணுகுமுறை. அது சொல்கிறது, ‘இது ஒரு கலை அல்ல’. உண்மைதான்! ஆனால், ஆன்மிக விஷயங்களில் பகுத்தறிவு அரை உண்மையைத்தான் பேசும். லா இலாஹ – ’கடவுள் இல்லை’ என்பது அரை மந்திரம்தானே? அதன் மீதிப்பகுதியான இல்லல்லாஹ் – ’அல்லாஹ்வை அன்றி’ என்பதற்கு அது வந்து சேராது. எனவே, அற்புதத்தை அது வெறும் ஏமாற்று வித்தையாகவே காண்கிறது.

நபி (ஸல்) அவர்கள் நிலவைப் பிளந்து காட்டினார்கள். அந்த பேரற்புதம் சில மனிதர்களுக்கு வெறும் சூனியமாகவே பட்டது. அவர்கள் நபியை நிராகரித்துவிட்டுப் போனார்கள்.

எனவே சப்பாத் பெருநாளும் முறிக்கப் படவில்லை, அந்தக் கலையும் கற்பிக்கப் படவில்லை. ’ஏமாற்று வித்தை’ என்பதைப் பொருத்த வரை அந்த மக்கள் - சிறியவர்களும் பெரியவர்களும் – தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டார்கள். ஏனெனில் பறவைகளை வடிவமைத்து உயிரூட்டுவதின் தாத்பரியம் என்ன என்பதை அவர்கள் அறியவில்லை.
சனிக்கிழமையில் உலக வேலைகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டியது ஏன் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள்.

வாராந்திரப் பெருநாள் என்பது தன் உயிர்த்தன்மையை இழந்துவிட்டது. அது ஓர் உறைந்த பிணம் போல் ஆகிவிட்டது. ’அன்ஃபாஸே ஈசா’ அதாவது ஈசா நபியைப் போன்ற ஓர் ஆன்மிக வாதியின் மூச்சுத்தான் அதற்கு மீண்டும் உயிரூட்ட வேண்டும். அவர்கள்தான் முஹய்யுத்தீன் – சன்மார்க்கத்திற்கு உயிரூட்டுபவர்கள். ஆனால் மக்கள் அத்தகைய ஆன்மிக வாதிகளை நிராகரித்து விடுகிறார்கள். தங்கள் பிணத்திற்கு – உயிரற்ற சடங்குகளுக்கு ஆடை அலங்காரம் செய்து அத்தர் பூசி அழகு பார்த்து மகிழ்கிறார்கள்.
மனம் குறுக்கு வழிகளைக் கண்டுபிடித்து விடுகிறது. தாளெடுத்து பேனாவால் எழுதிக் கணக்கு வழக்கு பார்த்தால்தானே அது கூடாத காரியம்? மனக்கணக்கு போட்டுப் பார்த்தால் ஆயிற்று. இப்படியாக இறைவனின் தியானத்தில் மூழ்க வேண்டிய மனம் அன்று உலக விஷயங்களில் இரட்டிப்பு வேலை செய்கிறது! அல்லது வெட்டிப் பொழுது போக்குகளில் மூழ்கிவிடுகிறது. ஆன்மிகப் பிரசங்கம் (ஃகுத்பா) ஒன்றேகால் மணிக்கு என்றால் 1:14:55 வரை உலகக் காரியங்களில், வியாபாரத் தந்திரங்களில் ஈடுபடுகின்றது.

ஆன்மிகம் காதலைப் போல் என்பதும் தொழுகை அதன் தாம்பத்யம் என்பதையும் மனிதர்கள் விளங்கவில்லை. ‘விலங்குகளைப் போல் மனைவியின் மேல் விழாதீர்கள். வீடு கூடும் முன் அவளுக்குத் தூது அனுப்புங்கள். அதுதான் முத்தங்கள்’ என்பது ஒரு நபிமொழியின் கருத்து. பலரின் ஆன்மிக வாழ்வில் Foreplay என்பதையே காணவில்லை!

எது ஏமாற்று வித்தை எது அல்ல என்பது பற்றி அந்த முதியவர்களுக்கே தெளிவு இல்லை. கலையின் ஆரம்பம் மற்றும் செயலின் முடிவு பற்றிய அறிவு அவர்களிடம் இல்லை.

இறைத்தூதர்களின் அற்புதங்களும் கண்கட்டி வித்தைகளான சூனியங்களும் வெளிப்படையில் ஒன்று போலவே காட்சி தரக்கூடும். அதன் அகமியத்தைத் தரிசிக்கும் ஆற்றப் அகக்கண் திறந்தவர்களுக்கே சாத்தியம். இதைத் திருக்குர்ஆன் நபி மூசா (அலை) அவர்களின் கைத்தடி (அஸா) நிகழ்ச்சியை வைத்து விளக்குகின்றது.

ஃபிர்அவ்னுடைய சபையின் மாந்திரீகவாதிகள் தங்கள் கைத்தடிகளைக் கீழே போட்டார்கள். அவை குட்டிப் பாம்புகளாகி நெளிந்தன. மூசா (அலை) அவர்களும் தன் கைத்தடியைக் கீழே போட்டார்கள். அதுவும் ஒரு பெரிய பாம்பானது. (மாறாக அது ஒரு கீரிப்பிள்ளை ஆகவில்லை.) அது அந்தக் குட்டிப் பாம்புகளை எல்லாம் விழுங்கி விட்டது. பிறகு மீண்டும் கைத்தடியாகி விட்டது. ’அஸா’தாரணமான அற்புதம்!

ஒரே செயலாக இருந்தாலும் மாந்திரீகவாதிகள் செய்தது சிஹ்ரு (மாயவித்தை, மேஜிக்) என்றும் மூசா (அலை) செய்தது இறையற்புதம் (முஃஜிஸா) என்றும் திருமறை தீர்ப்பளிக்கின்றது.

மக்கள் புறக்கண்களை நம்பியிருக்கிறார்கள். அவர்களின் அகக்கண்களோ குருடாகிக் கிடக்கின்றன. எனவே உண்மைக்கும் பொய்க்குமான வேறுபாடு அவர்களுக்குத் தெரிவதில்லை. கவர்ச்சியான போலிகளிடம் கவிழ்ந்து விடுகிறார்கள்.

உண்மையான ஏகத்துவம் (தவ்ஹீத்) எது, போலித் தவ்ஹீத் எது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.

உள்ளமையின் கவனிப்பில் (இஃதிபாரெ உஜூத்) ஏகத்துவம் (தவ்ஹீத்) எது ஷிர்க் (இணைவைப்பு) எது என்பதிலும் அவர்களுக்குத் தெளிவு இல்லை. இதை அதுவாகவும் அதை இதுவாகவும் விளங்கி வழிகேட்டில் போய்விடுகிறார்கள்.

அத்தகையவர்கள்தான் இறைநேசர்களின் அற்புதச் செயல்களை (கராமாத்) நிராகரிக்கின்றார்கள். அது சாத்தியமே இல்லை என்று புத்தி பேதலித்துப் பிதற்றுகின்றார்கள். என்ன செய்வது, காய்ச்சலில் நாக்குக் கசந்து போனவனுக்கு டர்கிஷ் டிலைட், பஃக்லாவா, குலாப் ஜாமூன் என்று எதைக் கொடுத்தாலும் அவனுக்கு ’உவ்வே’ என்று குமட்டிக் கொண்டுதானே வரும்?

உண்மையில் ’முஃஜிஸா’ என்பது தாய் என்றால் கராமத் என்பது அதன் குழந்தை. ’மார்க்க அறிஞர்கள் இறைத்தூதர்களின் வாரிசுகள்’ (அல்-உலமாஉ வரஸத்துல் அன்பியா) என்றார்கள் நபி (ஸல்). தாயின் ஜாடையும் பண்பும் குழந்தையிடம் இருக்கத்தானே வேண்டும்?

ஈசா (அலை) அவர்கள் இறந்தவரை உயிர்த்தெழ வைத்தார்கள் என்பது முஃஜிஸா. அதே அற்புதத்தை முஹய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரலி) அவர்கள் நிகழ்த்தினார்கள் என்பது கராமத்.

முஃஜிஸாக்களை ஒப்புக்கொண்டிருக்கிறோம் என்று சொல்லுகின்ற பேர்வழிகள் கராமாத்துக்களை நிராகரித்துப் பேசுவது விசித்திரமாக இருக்கின்றது. ’அல்ஜீப்ரா கணக்குப் புரிகின்றது அரித்மெட்டிக்தான் புரியவே இல்லை’ என்று ஒருவன் சொன்னால் எப்படி இருக்கும்? அவனுக்கு அல்ஜீப்ராவும் புரியவில்லை என்பதற்கு அது ஆதாரமாகும்.

கராமாத்துக்களை ஒருவனால் புரிந்துகொள்ள இயலவில்லை என்றால் அவனுக்கு முஃஜிஸாத்துக்களும் நிச்சயமாக விளங்காது. வஹீ மற்றும் இல்ஹாம் பற்றிய நிலையும் இப்படித்தான். வலிமார்களான இறைநேசர்களுக்கு இறைவனிடமிருந்து வரும் இல்ஹாம் பற்றிய புரிதல் இல்லாதவனால் ஒருபோதும் நபிமார்களுக்கு இறைவனிடமிருந்து வரும் வஹீ பற்றியும் புரிந்துகொள்ள முடியாது.

பலகையை நீட்டுவித்தது பற்றிய செய்தியும் இப்படித்தான்.
அந்த நிகழ்வு யாதெனில், மர்யமின் மகனான ஈசா, தச்சரான யூசுஃபின் கடையில் இருந்தார். தேவைப்பட்டதை விடவும் நீளம் குறைவாக இருந்த ஒரு மரப்பலகையைத் தன் கைகளால் அவர் இழுத்தார். அந்தப் பலகை நீளமாகிவிட்டது!

ஒரு செடி பல வருடங்களில் பெரிய மரமாக வளர்கிறது. ஒரு கன்றுக்குட்டி சில வருடங்களில் பெரிய பசுவாகிறது. குழந்தை வளர்ந்து வாலிபத்தை அடைகிறது. அந்த பௌதிக வளர்ச்சி எங்கிருந்து வருகின்றது. ஆகாரம் தண்ணீர் என்று பல இடைக் காரணங்கள் நம் அகக் கண்களை மறைக்கின்றன. ஒன்று மற்றொன்றாக எப்படி மாறுகின்றது. அது இறைவனின் ஞானத்தில் அவனின் கற்பனையில் எப்படிப் பார்க்கப் படுகின்றதோ அப்படி ஆகின்றது.

ஈசா (அலை) அவர்களின் கைகள் அங்கே இறையாற்றலின் கருவிகளாக இருந்தன. இறைநேசரின் விவரிப்பில் அல்லாஹ் சொல்கிறான் “அவரின் கையாக நான் ஆகிவிடுகிறேன். அதைக் கொண்டு அவர் பற்றுகிறார்” (ஹதீஸ் குத்ஸி. நூல்: புகாரி). அப்படிப்பட்ட கையின் வழியே அமானுஷ்யமான செயல்கள் நிகழ்வதில் தடை என்ன?
தாவூத் நபியின் குளுமையான கையின் தீண்டலில் இரும்பு மெழுகைப் போல் இளகிவிட்டதே!

நபி (ஸல்) அவர்களின் கைகளை அல்லாஹ் தன் கைகள் என்று சொன்னதன் அடிப்படையும் இதுதான்: “(நபியே! எதிரிகள் மீது பொடிக் கற்களை) நீங்கள் எறிந்த போது நீங்கள் எறியவில்லை. ஆனால் அல்லாஹ்தான் எறிந்தான்” (8:17)

வெளிப்பார்வைக்கு அது நபியின் செயல். எதார்த்தத்தில் (ஹகீகத்தில்) அது அல்லாஹ்வின் செயல்தான்.

படைப்புக்களின் சுயங்கள் (ஜவாத்) அவனுடைய உள்ளமையில் (உஜூத்) அவனால் வெளிப்படுத்திக் காட்டப்படுபவையே. அதை அவன் எப்படி நாடுகின்றானோ அப்படி வெளிப்படுத்துவான். அந்த வெளிப்பாடு கால தேச பரிமானங்களில் ஒரு முறைப்படி வெளிப்படுத்தப் படுகின்றன என்றாலும் அந்தப் பரிமானங்களுக்கு இறைவனின் கற்பனை கட்டுப்பட்டதல்ல. ஏனெனில் அந்தப் பரிமானங்களே அவனின் அறிவில் (இல்ம்) அறியப்பட்டவையாக (மஃலூம்) உள்ளவைதான்.

எனவே, ஒரு கைத்தடி ஒரு நொடியில் பாம்பாக மாறிவிடுவது அசாத்தியம் அல்ல. சந்திரன் இரு துண்டுகளாகப் பிளந்துபோவது அசாத்தியம் அல்ல. மலைப்பாறை பிளந்து அதிலிருந்து ஓர் சினை ஒட்டகை வெளிப்பட்டுக் குட்டியை ஈனுவது அசாத்தியம் அல்ல. சமைத்த உணவு நூறு வருடங்கள் கெடாமல் இருப்பது அசாத்தியம் அல்ல. ஓர் இரவுக்குள் மக்களின் உடல்கள் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மாறிப்போவது அசாத்தியம் அல்ல. வானளாவி எரியும் தீயின் மையம் பூஞ்சோலையாக மாறிவிடுவது அசாத்தியம் அல்ல. சிறிய ஊசியின் காது வழியே பெரிய ஒட்டகை நுழைந்து வெளியேறுவது அசாத்தியம் அல்ல. இறைத்தூதர்கள் மற்றும் இறைநேசர்களின் புதைக்கப்பட்ட புனித உடல்கள் காலா காலத்துக்கும் அணுவும் அழியாமல் அப்படியே இருப்பது அசாத்தியம் அல்ல.

இவையெல்லாம் அசாத்திய நிகழ்வுகள் அல்ல. ஆனால் அரிய நிகழ்வுகள்.
படைப்புக்களின் சுயங்கள் அல்லாஹ்வின் அறிவில் தரிப்பட்டுள்ளன. அவற்றை அவன் தன் உள்ளமையில் வெளிப்படுத்திக் காட்டுகின்றான். அவற்றை இறைத்தூதர் நாடியபடிக்கு வெளிப்படுத்திக் காட்டுவது அந்த இரைத்தூதரின் மீது அவன் கொண்டுள்ள நேசத்தின் அடையாளமாக இருக்கின்றது.

”உம் ரட்சகனின் பக்கம் நீர் பார்க்கவில்லையா,
நிழலை அவன் எப்படி நீட்டுகிறான் என்பதை?”
(25:45)

நிழல் (ழில்) என்று இங்கே குறிப்பிடப்பட்டிருப்பதன் உட்பொருள் படைப்புக்களின் சுயங்களைத்தான் என்று சூஃபிகள் விளக்குகின்றார்கள். ஈசா (அலை) அவர்களின் கைகள் இழுத்தபோது இறைவனே பலகையைத் தன் உள்ளமையில் நீட்டித்து வெளிப்படுத்தி (ஜுஹூர் ஆக்கித்) தந்தான்.

இந்த நிகழ்ச்சி மக்களிடம் பரவிய போது சிலர் சொன்னார்கள், “இது ஓர் அற்புதம். எனவே அந்தப் பையன் ஒரு ஞானியாக இருக்கவேண்டும்”

வேறு சிலர் சொன்னார்கள், “நாங்கள் இந்தக் கட்டுக்கதையை நம்பமாட்டோம். மீண்டும் செய்யச் சொல்லுங்கள் பார்க்கலாம்”

இன்னும் சிலர் சொன்னார்கள், “இது உண்மையாக இருக்க முடியாது. எனவே இதையெல்லாம் நூற்களில் எழுதி வைக்காதீர்கள்”

முன்பு சொன்ன அதே மூன்று மனநிலைகள் இங்கே எதிர் வரிசையில் சொல்லப் படுகின்றன. கலையுணர்வு கொண்டவர்கள் அந்த அற்புத நிகழ்ச்சியை வியந்து போற்றுகின்றார்கள். பகுத்தறிவுவாதிகள் அதை சந்தேகிக்கின்றார்கள். மீண்டும் நிகழ்த்திக் காட்டுமாறு கேட்கிறார்கள். இது அறிவியல் அணுகுமுறை. அற்புதங்கள் தன் இஷ்டப்படி ஞானிகளால் நிகழ்த்தப்படுவன அல்ல. அவர்களின் வழியாக இறைவன் நிகழ்த்துவன. மீண்டும் மீண்டும் செய்து பார்க்க அவை விஞ்ஞானச் சோதனைகள் அல்ல. இது அந்த அறிவுஜீவிகளுக்குப் புரியவில்லை. மூடிய மனநிலை உள்ளவர்கள் அந்த அற்புதத்தை அறவே ஏற்க மறுக்கிறார்கள்.

கலை ஆராதிக்கிறது, அறிவியல் ஆராய்கிறது, மூடிய மனம் நிராகரிக்கிறது.
இந்த மூன்று சாராரிடமும் வெவ்வேறு உணர்வுகள் இருந்தாலும் அவர்களில் எவரும் அந்த அற்புதத்தின் சாராம்சத்தை அடைந்துகொள்ளவே இல்லை. “அவர் ஒரு மரப்பலகையை நீளமாக்கினார்” என்னும் வாசகத்தின் உட்பொருள் என்ன என்பதை அவர்கள் விளங்கவே இல்லை.

மூன்று மனநிலைகளுமே ஆன்மிகத்திற்குப் போதுமானவை அல்ல. மனம் ஒரு வீடு என்றால் கலை அதன் முன்வாசல், அறிவியல் அதன் பின்வாசல். (மூடிய மனமோ இரண்டு கதவுகளையும் அடைத்துக் கொண்டது.) ஆனால் ஆன்மிகமோ அந்த வீட்டின் கூரையைப் பிய்த்தெறிந்து விடுகின்றது.

இதனை விளக்க மௌலானா ரூமி (ரஹ்) அவர்கள் சொல்லும் ஒரு குறியீடு:
”மழை பெய்து கொண்டிருந்தது. சிங்கம் ஒன்று அதில் நனைந்தபடி கம்பீரமாக நடந்து போய்க் கொண்டிருந்தது. கொடாப்புக்குள் கூனிக் குறுகி அமர்ந்திருந்த கோழி ஒன்று அந்தச் சிங்கத்தைப் பார்த்து இரக்கப்பட்டது. ‘சிங்கமே! மழைல நனஞ்சீன்னா ஒனக்கு ஜல்ப்பு புடிச்சுக்கும், காய்ச்சல் வந்துரும். இப்படி உள்ள வா. மழ விட்டப்புறம் போகலாம்’ என்று அழைப்பு விடுத்தது. சிங்கம் அந்தக் கோழியின் அன்பான அழைப்பை ஏற்றுக் கொண்டது! கொடாப்பையும் காணவில்லை, கோழியையும் காணவில்லை!

அன்பர்களே! பிரபஞ்சமெங்கும் பொழிந்து கொண்டிருக்கும் இறையருள் என்னும் மழையில் ஆனந்தமாக நனைந்தபடி நடைபோடும் சிங்கம்தான் ஆன்மிகம். மனித மனமோ கொடாப்புக்குள் ஆசைகளை அடைகாத்தபடி படுத்திருக்கும் கோழியாக உள்ளது.
சிங்கத்திற்கு அழைப்பு விடுப்போம். அந்தச் சிங்கத்திற்குள் நாம் இருப்போம்!
     
இந்தக் கதைக்கு இத்ரீஸ் ஷாஹ் எழுதிய பின்குறிப்பு:

ஏசுநாதரை ஆன்மிகப் பாதையின் ஒரு குருவாக சூஃபி ஆசிரியர்கள் அடிக்கடி குறிப்பிடுகின்றார்கள். அவரைப் பற்றி வாய்மொழியாக வழங்கப்பட்டு வருகின்ற ஏராளமான மரபுக் கதைகள் மத்திய நாடுகளில் உள்ளன. திறமை மிக்க தொகுப்பாளருக்காக அவை காத்திருக்கின்றன. இந்தக் கதை பல்வேறு வடிவங்களில் பல சூஃபிப் பிரதிகளில் காணப்படுகின்றது. பைபிளில் ஏசுவுக்கு வழங்கப்படும் பல பெயர்கள், ‘தச்சனின் மகன்’ போன்றவை, குறியீடான ஆன்மிகப் பெயர்களே அன்றி வரலாற்று ரீதியானவை அல்ல என்று சூஃபிகள் சொல்கிறார்கள்.

Tuesday, August 6, 2013

நோன்பைத் திறந்து... part-3

நோன்பு நோற்றிருந்த அடியானில் அல்லாஹ் தன் நிலையை (ஹால்) அடியானில் பிரதிபலித்திருந்தான். இஃப்தார் செய்த பின் அந்தப் பிரதிபலிப்பு அடியானிலிருந்து மறைந்து விடுகிறதே தவிர அல்லாஹ்வின் நிலை அவனை விட்டும் எங்கும் நீங்காது, மாறாது. அல்லாஹ்வும் அடியானை விட்டும் நீங்குவதில்லை.

“அவன் உங்களுடன் இருக்கிறான், நீங்கள் எங்கிருந்த போதும்”
(வ ஹுவ மஅகும் அய்ன மா குன்தும் -57:4)

அல்லாஹ்வுக்கு உணவின் தேவை இல்லை. இஃது அவனுடைய சுயத்தின் நிலை ஆதலால் அவனுக்குப் பசியோ தாகமோ இல்லை. ஆனால் அடியானின் ஃபித்ரத் – இயற்கை இயல்பு, உணவின் தேவை உண்டு என்பதுதான். எனவேதான், நோன்பில் அல்லாஹ்வின் ஹால் (நிலை) அடியானில் பிரதிபலித்த போதும் அதன் அஸராத் (விளைவுகள்) அடியானுடைய இயல்புக்கு ஏற்ப உண்டாகி அவனுக்குப் பசியும் தாகமும் மிகைத்து விடுகின்றது.

இந்த இடத்தில், நோன்பு திறந்த பின் – இஃப்தாருக்குப் பின் நபி(ஸல்) அவர்கள் ஓதிய மந்திரத்தைக் கவனியுங்கள்:
“தாகம் போனது (தஹபழ் ழமாஉ)
நாளங்கள் நனைந்தன (வப்தல்லத்தில் உரூக்கு)
நற்கூலி உறுதிப்பட்டது (வ-ஸபத்தில் அஜ்ரு)
அல்லாஹ் நாடினால் (இன்ஷா அல்லாஹு)”
(நூல்: சுனன் அபூதாவூத்: கிதாபுஸ் ஸவ்ம்: 2350; தாருகுத்னி: 25)

உறுதிப்பட்ட அந்த நற்கூலி எது? மறுமையில் இறைவனின் சந்திப்பு (லிகா).

’தாகம் போயிற்று’ என்றுதான் நபி(ஸல்) கூறுகின்றார்கள். நோன்பு போயிற்று என்று அல்ல. அது அடியானுடன் இருக்கும் அல்லாஹ்விடம் நீங்காமல் இருக்கின்றது.

இப்படியாக, நோன்பு சம்மந்தப்பட்ட மூன்று மந்திரங்களுமே ’அபூதாவூத்’ என்னும் ஹதீஸ் கிரந்தத்தில் காணப்படுவதும் எனக்கு வியப்புத் தட்டிற்று. காரணம், நோன்பு என்னும் வணக்கத்திற்கும் நபி தாவூத் (அலை) அவர்களுக்கும் ஆழமான தொடர்பு உண்டு.

வருடம் முழுவதும் நோன்பு வைப்பேன் என்று சொன்ன அபூ சயீதுல் குத்ரீ (ரலி) அவர்களை நோக்கி நபி (ஸல்) சொன்ன அறிவுரை: “ஒர் நாள் நோன்பு வைத்து ஒரு நாள் விட்டு விடுக. இதுவே நபி தாவூத் (அலை) அவர்களின் நோன்பு. நோன்புகளில் மிகவும் சிறந்தது இதுவே.” (நூல்: ஸஹீஹுல் புகாரீ: 1840).

நோன்புடன் நபி தாவூத் (அலை) அவர்களுக்குள்ள தொடர்பு இது மட்டும்தானா? நோன்பின் அகமியங்களை விளங்குவதற்கு அன்னாரின் வாழ்க்கைக் குறிப்புக்கள் நமக்கு வழிகாட்டுகின்றன.

நபி தாவூத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த அற்புதங்களில் ஒன்று இரும்பினைக் கையால் மெழுகைப் போல் இலகுவாக உருக்கிக் கவசங்கள் தயாரித்தார்கள் என்பது.

அல்லாஹ் கூறுகிறான்:
“அவருக்கு நாம் இரும்பை மென்மையாக்கினோம்;
வலிமையான போர்க் கவசங்கள் செய்க
அவற்றின் கண்ணிகளை உறுதியாக்குக”
(வ அலன்னா லஹுல் ஹதீத்;
அனிஃமல் சாபிகாத்தின் வ கத்திர் பிஸ்சர்த் -34:10,11)

அல்லாஹ் கூறுகின்றான் (ஹதீஸ் குத்ஸி): “நோன்பு ஒரு கவசம்” (அஸ்ஸவ்மு ஜுன்னத்)
கவசம் தயாரிக்க நெருப்பு வேண்டுமே? ’ரமலான்’ என்றால் கரிப்பது என்று பொருள். பாவங்களைக் கரிக்கும் நெருப்பு அது.

இரும்பு எது? நம்முடைய ’நான்’ என்னும் தன்முனைப்பு (அனிய்யத்).

ரமலான் என்னும் நெருப்பில் தன்முனைப்பை உருக்கி நோன்பு என்னும் கவசம் செய்க. அதிகாலையில் அந்த நெருப்பில் உன் தன்முனைப்பு உருகத் தொடங்கட்டும். நோன்பு தொடங்கும் முன் உள்ள நேரம் ‘சஹர்’ எனப்படும். ’இரவு விழிப்பு’ என்பது அதன் பொருள். (இதன் உச்சரிப்பு: சீன்-ஹா-ரே)

இன்னொரு சஹர் இருக்கின்றது (உச்சரிப்பு: ஸாத்-ஹா-ரே). இதற்கு இரண்டு அர்த்தங்கள்: உருகுதல் மற்றும் திருமண உறவு.

நோன்பாளியே! நான் என்னும் தன்முனைப்பை ரமலானின் நெருப்பில் உருக்கிவிடு, உன் ரட்சகனின் சந்திப்பிற்காக.

“இரவின் விழிப்பில்
எழுந்த நெருப்பில்
உருகத் தொடங்கியது உள்ளம்
உன்னை அடைவதற்காக”

நோன்பு ஒரு கவசம். இஃப்தார் என்பது நோன்பு திறத்தல். கவசத்தைத் திறத்தல் என்பது கழற்றுதல். அரசன் எப்போது கவசத்தைக் கழற்றுவான்? வெற்றி (ஃபலாஹ், ஃபத்ஹ்) அடைந்ததும் அல்லவா?

அது என்ன போர்? அதன் வெற்றி எது? இந்தத் திருவசனத்தை கவனிக்கவும்:
“எவர் நம்மில் போர் செய்வாரோ
அவரை நம் வழிகளில் செலுத்துவோம்”
(வல்லதீன ஜாஹிதூ ஃபீனா
லனஹ்தியன்னஹும் சுபுலனா -29:69)

’ஜாஹிதூ ஃபீனா’ (நம்மில் போர்செய்வாரோ) என்பதன் கருத்து என்ன? அதன் வெளிப்படையான பொருள் (ழாஹிரி மஃனா) ’நமக்காகப் போர் செய்வாரோ’. அந்தரங்கப் பொருள் (பாத்தினி மஃனா) ‘வல்லதீன ஜாஹிதூ ஃபீ அனா’ – ‘எவர் ’நான்’ என்பதில் போர் செய்வாரோ’ அதாவது, தன்முனைப்புடன் போரிடுவாரோ அவரை இறைவன் தன்னை அடையும் பாதைகளில் அழைத்துச் செல்கிறான். இறைவனை அடைவதற்கான பல வழிமுறைகளை அவர் அறிந்துகொள்வார்.

இரும்பு வாள் கொண்டு செய்யும் போரினை நபி(ஸல்) அவர்கள் சிறிய போர் (ஜிஹாதுல் அஸ்கர்) என்றும் ’நான்’ என்னும் தன்முனைப்புடன் (மனோ இச்சைகளுடன்) செய்யும் போரினைப் ’பெரிய போர்’ (ஜிஹாதுல் அக்பர்) என்றும் குறிப்பிட்டார்கள். (நூல்: பைஹகீ)

சிறிய போர் வெளியில் நிகழ்கிறது. பெரிய போர் உள்ளில் நிகழ்கிறது. எனவே, மேற்காணும் திருவசனத்தின் வெளிப்பொருள் (இபாரத்துன் நஸ்ஸ்) சிறிய போரினையும் உட்பொருள் (இஷாரத்துன் நஸ்ஸ்) பெரிய போரினையும் சுட்டுகின்றன.

நபி தாவூத் (அலை) செய்த ’சிறிய போர்’ ஒன்று தன்முனைப்பை வீழ்த்துவதற்காகச் செய்யப்படும் ஆன்மிகமான பெரிய போருக்கு விளக்கமாக அமைகின்றது. அது, ஜாலூத்தின் (கோலியாத்தின்) படைகளுடன் நபி தாவூத் (அலை) அவர்களின் தலைமையிலான படை போரிட்டு வென்றதாகும். ’ஜாலூத்’ தன்முனைப்பின் குறியீடாவான். அது பற்றி அல்லாஹ் பின்வருமாறு சொல்கிறான்:

“தாவூது ஜாலூத்தைக் கொன்றார்
அல்லாஹ் ஆட்சியையும் ஞானத்தையும் தந்தான்
தான் விரும்பியதை எல்லாம்
அவருக்குக் கற்பித்தான்”
(வ கதல தாவூது ஜாலூத்த
வ ஆதாஹுல்லாஹுல் முல்க வல் ஹிக்மத
வ அல்லமஹு மிம்மா யஷாஉ -2:251)

ஜுன்னத் (கவசம்) என்பதில் உள்ள பேஷ் என்னும் முடிச்சைக் கழற்றினால் அது ஜன்னத் (சொர்க்கம்) ஆகிறது. ஜன்னத்தில் அடியான் அடையும் பேரின்பம் – நோன்பாளியின் இரண்டாம் இன்பம் – அல்லாஹ்வின் சந்திப்பு (லிகா) அல்லவா?

எனவே இஃப்தார் என்பது நோன்பு என்னும் ஜுன்னத்தைத் திறந்து ஜன்னத்தின் இன்பத்தை முன்மாதிரியாக இங்கே ரிஜ்கின் வழியே அடையும் சிறிய ’லிகா’ ஆகும்.

”போரின் முடிவில்
கவசத்தைக் கழற்றினேன்
சொர்க்கத்தில்
உன்னை தரிசிக்க”

நபி தாவூத் (அலை) அவர்களின் நோன்பு முறைதான் (ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு வைப்பதுதான்) நோன்புகளில் மிகவும் சிறந்தது என்று நபி(ஸல்) குறிப்பிட்ட ஹதீஸை முன்பு கண்டோம் அல்லவா? இங்கே இன்னொரு விஷயத்தின் பக்கம் கவனம் செலுத்துவோம்.

நோன்பு என்பது படைப்புக்களின் தொடர்பை விட்டும் நீங்கியிருத்தலின் நிலையை நம்மில் ஓரளவு கொண்டுவருவதாக உள்ளது. (உணவு பானம் தாம்பத்யம் ஆகியவற்றை விட்டும் நீங்கி இருப்பது)

’இஃப்தார்’ என்பது படைப்புக்களின் தொடர்பை (உண்ணுதல், குடித்தல், தாம்பத்ய உறவு) மீண்டும் அடியான் அடைந்து கொள்வதாக உள்ளது.

அல்லாஹ் படைப்புக்களை விட்டும் நீங்கித் தன்மயமாக இருக்கும் நிலைக்கு ’ஷஃனே தன்ஸீஹ்’ என்றும் அவன் தன் படைப்புக்களுக்குத் தான் ரட்சகனாய் இருந்து அவற்றில் வெளிப்படும் நிலைக்கு ’ஷஃனே தஷ்பீஹ்’ என்றும் சொல்லப்படும்.

நோன்பு ஷஃனே தன்ஸீஹின் பக்கம் காட்டக்கூடிய குறிப்பாகவும், இஃப்தார் ஷஃனே தஷ்பீஹின் பக்கம் காட்டக்கூடிய குறிப்பாகவும் இருக்கின்றன.

நபி தாவூத் (அலை) அவர்கள் நோன்பைச் சிறப்பாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். நபி முஹம்மத் (ஸல்) அவர்களோ தன்ஸீஹ் தஷ்பீஹ் ஆகிய இரண்டின் பக்கமும் மக்களை வழிநடத்தக் கூடியவர்களாக இருந்தார்கள். எனவே, தினமும் நோன்பு நோற்று வந்த அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்களை நோக்கிச் சொன்னார்கள், “சில நாட்கள் நோன்பு வையுங்கள், சில நாட்கள் விட்டு விடுங்கள்” (நூல்: புகாரி, முஸ்லிம், நசாயீ, திர்மிதி, இப்னு மாஜா)

மேலும் நபி(ஸல்) அவர்கள் நோன்பாளியின் இன்பம் நோன்பில் இருப்பதாகச் சொல்லவில்லை, நோன்பின் முடிவில் இஃப்தாரில் இருப்பதாகச் சொன்னார்கள்.
ஷஃனே தன்ஸீஹில் – அல்லாஹ் என்னை விட்டுப் பிரிந்து எனக்கு அப்பால் இருப்பதில் எனக்கு எப்படி இன்பமிருக்க முடியும்?

ஷஃனே தஷ்பீஹில் – அல்லாஹ் என்னுடன் இருப்பதில்தான் என் இன்பம் உள்ளது.
இந்தத் தன்மைகள் நபிமார்களின் பெயர்களிலேயே பிரதிபலிப்பதாக இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் விளக்குகின்றார்கள்:

”தாவூத் என்னும் பெயரில் உள்ள அனைத்து எழுத்துக்களும் (அரபியில்) ஒன்றோடொன்று ஒட்டாமல் பிரிந்து நிற்கின்றன. எனவே அவர்களில் ஷஃனே தன்ஸீஹின் ஞானம் அதிகமாக வெளிப்பட்டிருந்தது. முஹம்மத் என்னும் பெயரில் அனைத்து எழுத்துக்களும் ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றன. எனவே அவர்களில் ஷஃனே தஷ்பீஹின் ஞானம் அதிகமாக வெளிப்பட்டிருந்தது”

இது இறைவனின் மாபெரும் அருட்கொடை ஆகும். அந்த முஹம்மத் (ஸல்) அவர்கள் அகிலத்திற்கெல்லாம் அருட்கொகையாக (ரஹ்மத்தல்லில் ஆலமீன்) இருப்பதன் பொருள் அகிலங்கள் அனைத்தும் அவர்களைக் கொண்டு அல்ல்லாஹ்வுடன் ஷஃனே தஷ்பீஹில் தரிப்பாடாகியுள்ளது.


நாமும் அன்னாரின் ஆன்மிக வழியில் அல்லாஹ்வின் சந்திப்பை அடைவோமாக!