Tuesday, July 23, 2013

மனதில் (3) உறுதி வேண்டும் - part 1


இறை நம்பிக்கை என்றால் என்ன?

இதற்குப் பல கோணங்களில் பல விடைகள் இருக்கலாம். உள்ளம் சம்பந்தப்பட்டு இதற்கோர் ஆழமான விடையை நபி(ஸல்) அவர்களின் வாக்கில் காண்கிறோம்.

‘அல்-ஈமானு ஹுவல் யகீன்’ என்கிறார்கள் அவர்கள்.

‘இறைநம்பிக்கை என்பது நிச்சயமாக ’யகீன்’தான்’ என்பது அதன் பொருள்.

யகீன் என்பதை ஆங்கிலத்தில் Conviction, Certainty, Certitude என்றெல்லாம் மொழிபெயர்க்கிறார்கள்.

தமிழில் உறுதி என்றும் தெளிவு என்றும் பொருள் தரப்படுகிறது.

யகீன் என்பது இந்த இரண்டுமே சேர்ந்ததாகும்.

யகீன் = தெளிவு+உறுதி.

ஒரு விஷயத்தைப் பற்றி மனத்தில் உண்டாகும் தெளிவினால் விளையும் மனவுறுதி என்று இதனைக் கூறலாம். ’மனத்திட்பம்’ என்பது இன்னும் அருமையான சொல்லாக இருக்கும்.

சமஸ்கிருதத்தில் ‘பிரத்யக்‌ஷம்’ என்னும் வார்த்தை யகீன் என்பதற்குப் பொருந்தும் என்று கருதுகிறேன். ஊர்ஜிதம் என்பது புழக்க பாஷையில் உள்ளது. அதுவும் ஓகேவாகலாம்.

உள்ளத்தில் தெளிவு எந்தெந்த வகையில் உண்டாகும் என்று கேட்டால் அடியேன் மூன்று என்று முத்திரை காட்டிவிடுவேன்.

[அடடே! சின்முத்திரைக்குப் புதுப்பொருள்: மூன்று தெளிவுகள் உன்னுள் உண்டானால் உன் ஆன்மா இறைவனை அடையும்!]

மூன்று என்று நான் சொல்லும் வரையறை திருக்குர்ஆன் தருவது. ஆம், யகீன் எதனடியாக விளையுமோ அதை வைத்து யகீனை அது மூன்றாக வகைப்படுத்துகிறது.

இல்முல் யகீன்: அறிவால் (கல்வியால்) உண்டாகும் மனத்திட்பம்.
ஐனுல் யகீன்: காட்சியால் உண்டாகும் மனத்திட்பம்
ஹக்குல் யகீன்: அனுபவத்தால் உண்டாகும் மனத்திட்பம்.

இந்த மூன்று யகீன்களும் சூஃபிகளின் வட்டத்தில் மரபாக ஒரு உவமானம் சொல்லி விளக்கப்படுகின்றன.

புகை தெரிகின்றதை வைத்து அங்கே நெருப்பு இருக்கின்றது என்று உறுதி கொள்வது. நெருப்பின்றிப் புகையாது என்னும் அறிவு இங்கே உறுதியின் அடிப்படையாகிறது.

புகை வரும் இடத்தை நோக்கி ஒருவன் செல்கிறான். அங்கே நெருப்பு எரிந்து கொண்டிருப்பதைக் கண்களால் பார்க்கிறான். இங்கே காட்சி என்பது உறுதியின் அடிப்படையாகின்றது.

இன்னும் அருகில் நெருங்குகிறான். நெருப்பின் கதகதப்பை உணர்கிறான். இன்னும் நெருங்குகிறான். அதன் உஷ்ணத்தை, அனலை உணர்கிறான். இங்கே அனுபவம் என்பது உறுதியின் அடிப்படையாகிறது.

இன்னொரு உவமானம். பாரசீக சூஃபிக் கவிஞர் ஃபரீதுத்தீன் அத்தார் (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்:

சில விட்டில்கள் ஒன்றுகூடிப் பேசின. அரசனின் மாளிகையில் விளக்கு ஒன்று இருப்பதாகவும். அதனுள் பிரகாசமான சுடர் ஒன்று இருப்பதாகவும் அவற்றின் வேத நூலில் எழுதப்பட்டிருப்பதை அறிகின்றன. இந்த ‘அறிவு’ சில விட்டில்களின் இதயங்களில் உணர்வைத் தூண்டுகிறது. எப்படியேனும் அந்த விளக்கை தரிசித்துவிட வேண்டும் என்று அவை முடிவெடுக்கின்றன. அந்த அரண்மனைக்குப் புறப்பட்டுச் செல்கின்றன.

அரண்மனையில் உள்ள ஓர் அறையின் நடுவில் அந்த பிரகாசமான விளக்கை அவை காண்கின்றன. அந்த விளக்கின் காட்சியில் தம்மையே மறந்து பேரானந்தம் அடைகின்றன. ஒரு விட்டில் அந்த விளக்கைப் பற்றி மிகப்பெரிய காவியம் பாடுகின்றது. இன்னொரு விட்டில் அந்த விளக்கின் அழகை தாம் படித்திருந்த வேதத்தின் செய்திகளுடன் ஒப்பிட்டு வருணித்து உரைநூல் ஒன்று வரைகிறது.

அவற்றில் மிகச்சில விட்டில்கள் அந்த விளக்கின் அழகால் ஈர்க்கப்படுகின்றன. பாய்ந்து சென்று அந்த விளக்கின் ஜுவாலைக்குள் தன்னையே அர்ப்பணிக்கின்றன. மறுபக்கம் அவை தீயின் பொறியாய்க் கனன்றுகொண்டு வந்து விழுகின்றன. ஏனைய விட்டில்கள் அவற்றைப் பரிதாபமாகப் பார்க்கின்றன. ஆனால் அவற்றால் அந்த விட்டில்களின் பக்கத்தில் நெருங்க முடியவில்லை. விளக்கில் எரிந்த விட்டில்களின் அருகில் இருந்தபடி விளக்குச் சுடரின் அனலை அவை கொஞ்சம் அனுபவித்துக் கொள்கின்றன. தாமும் விளக்கை அனுபவித்துவிட்டதாக அவை மகிழ்கின்றன.

இன்னொரு உவமானம்.
இளைஞன் ஒருவனுக்கு அவனின் பெற்றோர்கள் பெண் பார்க்கிறார்கள். இன்னார் வீட்டில் ஒரு பெண் இருக்கின்றாள். நல்ல அழகி என்று பேசிக்கொள்கிறார்கள். அப்பெண்ணின் லட்சணங்களை அவன் கேள்விப்படுகிறான். பார்த்தவர்கள் சொன்னதிலிருந்து அவனுக்கு ஒரு மனக்கருத்து உண்டாகிறது. ஆனால் இந்த மனப்பிம்பம் அவளின் அசலான உருவமாக இருக்க முடியுமா?

நிச்சயமும் செய்தாகிவிடுகிறது. மணப்பெண்ணை அவன் ஒருமுறை நேரில் பார்க்க அனுமதிக்கின்றார்கள். பார்க்கிறான். தன் கற்பனையை எண்ணி வெட்கப்படுகிறான்.

திருமணம் நடந்தது. அவளை அனுபவித்து இன்பம் அடைகின்றான். அந்த அனுபவம் அவனுக்கே உரியதுதான். யாரும் யாருக்கும் சொல்லிக்கொள்ள முடியாத, உயிர்கள் அனைத்தும் அறிந்த ரகசியம் அது.

இந்த மூன்று யகீன்களும் மூன்று வகை மனிதர்களை உருவாக்குகின்றன.

அறிவிலிருந்து யகீன் அடைந்தவர் ஆலிம் (அறிஞர்)
காட்சியிலிருந்து யகீன் அடைந்தவர் ஆரிஃப் (ஞானி)
அனுபவத்திலிருந்து யகீன் அடைந்தவர் ஆஷிக் (காதலர்)

இப்லீஸ் (ஷைத்தான்) இறைவனை அறிந்த ஆலிமாகவும், இறைவனைக் கண்ட ஆரிஃபாகவும் இருந்தான். ஆனால் இறைவனை அனுபவித்த ஆஷிக்காக இல்லை.

மனிதன் இந்த நிலையில் அனைத்துப் படைப்பினங்களை விடவும் மேலான நிலையில் வைக்கப்பட்டான். ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட நிலையை அல்லாஹ் சொல்கிறான்:

”அவரை நான் செவ்வையாக உருவாக்கி என் உயிரிலிருந்து அவருக்குள் ஊதியபோது, ‘அவருக்குச் சிரம் பணியுங்கள் என்றேன்.” (15:29; 38:72)

இறைவன் தன் உயிரிலிருந்து ஊதியது அவர் உடலெல்லாம் பரவியது. அந்த நிலையில் ஆதம் (அலை) சொன்ன வாசகம் ‘அல்ஹம்துலில்லாஹ்’ – எல்லாப் புகழும் இறைவனுக்கே!

அந்த வாசகமே திருக்குர்ஆனின் திறப்பாக (ஃபாத்திஹா) முதல் திருவசனமாக அமைக்கப்பட்டுள்ளது: “அல்ஹம்து லில்லாஹி றப்பில் ஆலமீன்” – அகிலங்கள் அனைத்தின் ரட்சகனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். மனிதன் பிரபஞ்சத்தின் குறியீடாக இருக்கிறான்.

அதன்பின் ஆதம் (அலை) தன் ரட்சகனைக் கண்டார்கள். அதன்பின் இறைவன் அவர்களுக்குக் கற்பித்தான்.

“அவனே மனிதனைப் படைத்தான்
அவனே அவருக்கு விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்”
(55:3,4)

”எல்லாப் பெயர்களையும் ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான்” (2:31)

எனவே, மனிதனின் உயர்வு என்னவெனில், அவன் முதலில் ஆஷிக்காக இருந்து பின்பு ஆரிஃபாகி அதன் பின் ஆலிம் ஆனவன்.

ஆதம் (அலை) அவர்கள் இறைவன் தன் உயிரிலிருந்து தமக்குள் ஊதியதை முதலில் அனுபவித்தார். அதன் பின்னர்தான் தன் விலாவிலிருந்து தனக்காகப் படைக்கப்பட்ட பெண்ணான ஹவ்வா (அலை) அவர்களை அனுபவித்தார்.

பேரின்பத்தின் சாயலாக அவருக்குச் சிற்றின்பம் தரப்பட்டது.

‘உயிர் ஊதுதல் என்னும் அந்த மூல நிகழ்வின் நினைவு கூர்தலாகவே ஆண் பெண்ணுடன் இணைதல் இருக்கிறது’ என்பது இப்னுல் அரபி (ரஹ்) அவர்களின் கருத்து. இந்த நியாபகமூட்டலில் நிகழாத தாம்பத்யம் அதன் ஆன்மிக நோக்கத்தை எட்டாது.

’அவரை நான் செவ்வையாக்கி அவருக்குள் என் உயிரிலிருந்து ஊதிய போது...’
உயிர் ஊதப்படும் முன் உடல் செவ்வையாக்கப் பட்டதன் சாயலும் பெண்ணை நேசிப்பதில் ஆண் செய்ய வேண்டிய கடமை ஆகிறது.

’மனைவியுடன் கூடும் முன் கணவன் அவளுக்குத் தூது அனுப்பவும்’ என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். தூது அனுப்புவது என்றால் என்ன? என்று நபித்தோழர்கள் வினவினார்கள். ‘முத்தங்கள் பொழிவது’ என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (’திப்புன் நபவி’ – இப்னு கய்யிம் அல்-ஜவ்ஸிய்யா) இந்தக் குறிப்பைச் சிந்தித்துக் கொள்க.

‘உலகில் நீ எப்படிக் காதலிக்கின்றாயோ
அதற்குத் தகுமாறே
மறுமையில் இறைவன்
உன்னிடம் நடந்துகொள்வான்’
என்கிறார் மௌலானா ரூமி (ரஹ்).


ஆதம் (அலை) உயிரூட்டப்பட்டதன் சாயலாய் உள்ள ஆண் பெண் இணைவு நிகழ்வின் வழியாகவே மனித சந்ததிகள் தோன்றுகின்றன. எனவே, ’மனிதன் இறைவனின் ரகசியம் ஆவான்’ என்னும் கருத்தின்படி நாமெல்லாம் இறை-ரகசியத்தின் பிரதிகளாக இருக்கிறோம்.

(to be continued...)

Sunday, June 2, 2013

மணலின் கதை



வெகு தொலைவில் உள்ள மலை முகடுகளில் புறப்பட்ட நதியொன்று பலவகை நிலங்களின் வழியே ஓடி வந்து குறுகிய நீரோடையாகிப் பாலைவனத்தின் மணல்களைத் தொட்டது. இதுவரை கடந்து வந்தது போன்றே இந்தத் தடையையும் கடந்து பாய்ந்தோடி விடலாம் என்று நினைத்தது. ஆனால், எவ்வளவு வேகமாக அது பாலையின் மணலில் மோதியதோ அவ்வளவு வேகமாக உறிஞ்சப்பட்டுக் காணாமல் போனது.

[நதி என்பது நான் என்னும் தன்னுணர்வைக் குறிக்கும். சுயத்தைக் குறிக்கும். நதி என்பது நீரோட்டம். அது நிலையாக நிற்கும் ஒன்றல்ல. பாய்ந்து ஓடிக்கொண்டிருப்பது. நிற்பது அதற்கு மரணமாகும். ஒவ்வொரு கணமும் நமது சுயவுணர்வு – ‘நான்’ என்னும் உணர்வு வந்துகொண்டே இருக்கிறது. இதனை உள்ளம் என்றும் சொல்லலாம். கல்பு என்னும் அரபிப் பதத்திற்குப் புரளக்கூடியது என்று பொருள்.

மூணாறு ; ஒளியோவியர் : சையத் இப்ராஹீம் பிலாலி 

இந்த நான் பல கட்டங்களைக் கடந்து வந்துவிட்டது, பிள்ளைப்பருவம் விடலைப்பருவம் வாலிபப்பருவம் இப்படியாக. அப்பருவங்களில் இந்த உலகம் தரும் பல்வகை இன்பங்களை சுவைத்துக் கிரகித்தபடி வந்துவிட்டது. ஆனால் உலகம் அதைக் கிரகித்து அழித்துவிடக்கூடிய கட்டம் ஒன்று வருகிறது. அதுவே பாலை. அதற்கு மேல் உலக இன்பங்களில் முன்பு கண்ட சுவை உள்ளத்திற்கு வாய்ப்பதில்லை. பாலை என்பது வெறுமை. ‘வீரான்’ என்று சொல்வர். பழைய புலனின்பப் பயணத்தைத் தொடர உள்ளம் முனைகிறது. ஆனால் உலகம் தன்னை அழிப்பதை அது உணர்கிறது.]

எனினும், இந்தப் பாலைவனத்தைக் கடந்து செல்வதே தன் விதி என்றும் அதை மாற்ற வேறு வழி இல்லை என்றும் அது தெளிவாகக் கண்டது. பாலையிலிருந்து ஒரு ரகசியக் குரல் அதன் செவிகளில் ஒலித்தது: “காற்று பாலையைக் கடக்கின்றது. நீரோடையாலும் அது முடியும்”

[மண்ணில் சிக்காமல் பறந்து போய்விடும் காற்று. உலக இச்சைகளில் சிக்காமல் சென்றுவிடும் ஆன்மிகத்தின் மூச்சு. ‘அன்ஃபாசே ஈசா’ – இயேசுவின் மூச்சுகள் என்று சூஃபிகள் குறிப்பிடுவது அதனையே.]

நீரோடை மறுத்தது: “நான் மணல்களுடன் மோதிப் பார்க்கிறேன். ஆனால் அது என்னை உறிஞ்சி விடுகிறது. காற்று பறக்கிறது, எனவேதான் இந்தப் பாலையைக் கடக்க அதனால் முடிகிறது.”

[உள்ளம் தன் இயற்கைத் தன்மையை எடுத்துக்காட்டி சாக்கு சொல்கிறது. ‘ஆண்டவன் கண்ணைத் தந்து பார்வையையும் கொடுத்திருக்கிறான். பார்த்து ரசிக்காமல் என்ன செய்ய?’ என்பது போல்... எச்சரிக்கை. ‘தீயை அணைக்கிறேன் என்று மேலும் மேலும் அதன்மீது தீயை அள்ளி வீசாதே’ என்று மௌலானா ரூமி (ரஹ்) சொல்வதைக் கேள்.]

”உன் பழைய வழிமுறையில் நீ இந்தப் பாலையைக் கடக்க முடியாது. அப்படிச் செய்ய நினைத்தால் நீ மறைந்து விடுவாய் அல்லது சேறாகிவிடுவாய். உன் இலக்கிற்குச் சுமந்து செல்லும்படிக் காற்றிடம் உன்னை ஒப்படைத்துவிடு.”

[ஆன்மிகம் என்பது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடும். சடங்குகளை நிறைவேற்றி வந்தது போல் இதில் செயல்பட முடியாது. ’ஃகிலாஃபே ஆதத்’ – பழக்க வழக்கங்களைப் புரட்டுதல் என்று சூஃபிகள் சொல்கிறார்கள்.]

”அது எப்படி?”

“நீ ஆவியாகிக் காற்றில் கலந்துவிட வேண்டும்”

[ஆவியாதல் ’ஃபனா’ என்னும் தன்னுணர்வின் அழிவு. ‘நான்’ என்னும் அகந்தையின் அழிவு. இறைக்காதல் என்னும் நெருப்பு இச்சைகளின் ஈரத்தை ஆவியாக்கி விடுகிறது. காற்றில் கலத்தல் – ஆன்மிக மூச்சில் உன் உள்ளத்தைக் கரைத்துவிடு. அல்லாஹு அல்லாஹ் என்று ஒவ்வொரு மூச்சும் இறைநாமத்தின் நாதம் ஆகிவிட வேண்டும். இதனை ‘பாஸே அன்ஃபாஸ்’ (மூச்சுக்களைப் பாதுகாத்தல்) என்று சூஃபிகள் சொல்கின்றனர்.]

இந்தச் சிந்தனை நீரோடைக்கு ஏற்புடையதாக இல்லை. அதுவரை, எதிலும் அது தன்னைப் பறிகொடுத்தது இல்லை. அது தன் சுயத்தன்மையை இழக்க விரும்பவில்லை. மேலும், அதனை ஒருமுறை இழந்துவிட்டால் அதை மீண்டும் அடைய முடியுமா இல்லையா என்று யாருக்குத் தெரியும்?

மணல் சொன்னது: “காற்று இவ்வாறு வேலை செய்கிறது. அது நீராவியை அள்ளியெடுத்து உயரத்திற்குக் கொண்டு செல்கிறது. பாலைவனத்திற்கு அப்பால் கொண்டு போய் கீழே விழச் செய்கிறது. மழையாகப் பொழிந்து, அந்த நீர் மீண்டும் ஓடையாகி விடுகிறது.”

[நீரோடை இதுவரை நீராகவே இருந்து வந்துள்ளது. அது வந்த வழியில் பல தோட்டங்களையும் தோப்புத் துரவுகளையும் செழிப்பாக்கி வந்திருக்கலாம். மக்களும் மாக்களும் தாகம் தணிப்பதற்குத் தண்ணீர் தந்து சேவை செய்திருக்கலாம். ஆனால் அது இன்னும் நீராகவேதான் இருக்கின்றது. அதாவது ’நான்’ என்பது உலகில் பல நிலைகளில் உதவியாகவும் இருக்கின்றது என்பது உண்மைதான். இதுவரை வழிபாட்டுச் சடங்குகளை வண்டி வண்டியாகச் செய்து வளமாக்கி வந்திருக்கலாம். சமூக சேவைகள் சகோதரத்துவப் பணிகள் என்றெல்லாம் செய்து வந்திருக்கலாம். ஆனால் உனது ‘நான்’ என்பது இன்னும் அப்படியே இருக்கிறது. இப்போது காலடி எடுத்து வைத்திருப்பது ஆன்மிகம் என்னும் களத்தில். இங்கே ’நான்’ என்னும் நீரோடை ஆவியாக்கப்பட வேண்டும்.

‘அந்த நீர் மீண்டும் ஓடையாகி விடுகிறது’ – நான் என்பது மீண்டும் நான் ஆகிவிடுகிறது. ஆனால் ஃபனா என்னும் அழிவின் பின் மீண்டும் அருளப்படும் நான் என்பது முற்றிலும் தன்மையால் வேறுபட்டது. Transformed Self என்று சொல்வது இதைத்தான். Trans – ஆவியாகிப் பாலையைக் கடத்தல். Formed – பழைய வடிவத்தை ஒத்ததாகப் புதிய வடிவம் கொடுக்கப்படுதல். முன்பு பல்கீஸ் அரசியின் நாட்டில் இருந்த அதே சிம்மாசனம் இப்போது சுலைமான் நபியின் அவையை அலங்கரிக்கின்றது. இப்போது அதன் மதிப்பே வேறு. ‘வேதத்தின் ஞானம் கொடுக்கப்பட்ட ஒருவர் அதனை இங்கே கொண்டு வந்தார்’ என்று குர்ஆனில் சொல்லப் பட்டுள்ளதைச் சிந்திக்கவும். நான் என்னும் சிம்மாசனத்தை இம்மையிலிருது மறுமைக்கு எடுத்துச் செல்ல ஒரு ஞானகுரு வேண்டும். அந்த ’நான்’ – பேரமைதி மிக்க இதயமாக (கல்புன் சலீம்) இருக்கும்.

நீரோடை பல நிலங்களில் ஓடி வந்ததில் அதன் நீர் தூய்மையை இழந்துவிட்டது. இப்போது முற்றிலும் சேறாக மாறிவிடும் நிலைக்கு வந்திருக்கிறது. ஆனால் அது ஆவியாகிக் காற்றில் பறந்து மலைகளின் உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு மீண்டும் நீராகும்போது அது அழுக்குகளை விட்டும் விடுதலை அடைந்ததாக – மீண்டும் அதன் ஆதி நிலையில் இருந்தபடியே தூய்மையானதாக ஆகிவிடுகிறது. ‘குழந்தை போல் ஆதல்’ என்பது இதுதான். உள்ளம் வெள்ளை ஆகிவிட வேண்டும். மாசு மறுவற்ற தன்மை – மாசூமிய்யத் – உண்டாகிவிடுவது.

ஃபனா என்னும் அழிவு – இறைக்காதலில் அடைந்த அகமரணம் ’மவ்த்தே இஃக்தியாரி’ என்று சூஃபிகள் சொல்வது – மீண்டும் உயிர்த்தெழும் உள்ளம் இறைவனைக் கொண்டு வாழ்வதாகிறது. அந்நிலை ’பகா’ என்று சொல்லப்படுகிறது. (’பாகீ பில்லாஹ்’ – ’இறைவனைக் கொண்டு தரிப்பட்டிருப்பவர்’ என்னும் பெயரில் ஒரு சூஃபி மகான் இருந்தார்கள்.)

’காற்று இவ்வாறு வேலை செய்கிறது. அது நீராவியை அள்ளியெடுத்து உயரத்திற்குக் கொண்டு செல்கிறது’ – அதாவது ஆன்மிகத்தின் பயிற்சிகள் அகமாற்றத்தைத் தந்து படித்தரங்களை உயர்த்துகின்றன. (’தரஜாத்’ ‘மகாம்’ என்று சொல்லப்படுபவை.) சடங்கு வழிபாடுகள் எவ்வளவு எண்ணிக்கையில் இருப்பினும் அவற்றால் படித்தர உயர்வு உண்டாகாது. ‘ஞானம் (இல்ம்) இல்லாத மனிதனின் வழிபாடு செக்கு மாடு சுற்றுவதைப் போல்’ என்பது நபிமொழி ஒன்றின் கருத்து. அதாவது வருஷக் கணக்காக அந்த மாடு நடக்கிறது. ஆனால் இருந்த இடத்தை விட்டு ஒரு இன்ச் கூட அது அப்பால் நகர்ந்திருக்காது!

நான் மீண்டும் நான் ஆகிவிடுவதை பற்றி ஒரு கவிதை. பீர் கௌஸீ ஷாஹ் (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்:
“நான் என்பதைப் புரட்டு
நான் என்று ஆகும்...
மூலமந்திரம் சொல்லும்
தெளிவான முகவரி இதுவே”
(அனா கோ பல்ட்டோ அனா ஹீ ஹே
யெஹீ ஹே சாஃப் பதா லா இலாஹ இல்லல்லாஹ்) 

அறபியில் நான் என்பதற்கு ‘அனா’ என்று சொல்லப்படும். அலிஃப்-நூன்-அலிஃப் என்னும் மூன்றெழுத்து. புரட்டிப் படித்தாலும் அதேதான். ANA. புரட்டினாலும் ANA. தமிழிலும் ’நான்’ என்பது அப்படி அமைந்துள்ளது எனலாம். Palindrome. NAAN. புரட்டினால் மீண்டும் NAAN. ஆங்கிலத்தில் அது ஒற்றை எழுத்துப் பாலிண்ட்ரோம். I என்பதை பக்கத்திலோ தலைகீழாகவோ புரட்டினாலும் மீண்டும் I வருகிறது. உருதுவில் சற்று வேறு மாதிரி. மைய்ன் (மீம்-யா-அலிஃப்). புரட்டினால் ‘னயம்’ – ‘நான் இல்லை’ என்று வரும்! அதனால்தான் பீர் கௌஸீ ஷாஹ் (ரஹ்) தன் உருதுக் கவிதையில் அனா என்னும் அறபிப் பதத்தைப் பயன்படுத்தி விஷயத்தை விளக்குகிறார்கள்.]

”இது உண்மைதான் என்று நான் எப்படி நம்புவது?”

”அது அப்படித்தான். நீ நம்பவில்லை எனில் ஒரு புதைமணலாகத்தான் ஆவாய். அதுவும்கூட பல ஆண்டுகள் எடுக்கும். ஆனால் ஒரு நீரோடையாக நீ இருப்பதைப் போல் அது இருக்காது.”

”இன்று நான் இருக்கும் இதே நீரோடையாகவே நான் இருந்துவிட முடியாதா?”

”இரண்டு நிலைகளிலுமே நீ இப்படியே இருப்பது சாத்தியமில்லை. உன்னுடைய சாரம்சங்கள் எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் ஒரு நீரோடை உருவாகிவிடும். இப்போது நீ என்னவாக அழைக்கப்படுகிறாயோ இந்நிலை எப்படி வந்தது? நீ உன் சாராம்சம் என்னவென்று அறிவாயா?”

இதைக் கேட்டதும் அந்த நீரோடையின் நினைவில் சில எதிரொலிகள் எழுந்தன. முன்பு எப்போதோ ஒரு காற்றின் கைகளில் தான் அல்லது தன்னின் ஏதோ ஒன்று இருந்தது நிழலோட்டம் போல் ஞாபகம் வந்தது. மீண்டும் அந்நிலையை அடைவதே செய்யவேண்டிய உண்மையான காரியம் என்பதை அது உணர்ந்தது.

[’அதமிய்யத்’ (இல்லாமை) என்பதுதான் படைப்புக்களின் எதார்த்த நிலை ஆகும்.

‘நிரந்தரத்தில் இருந்து
மனிதனின் மீது ஒரு நிலை இருக்கவில்லையா?
(அப்போது) அவன்
நினைக்கப்படும் ஒரு பொருளாகவே இல்லை’
(ஹல் அதா அலல் இன்சானி ஹீனும் மினத் தஹ்ரி
லம் யகுன் ஷைஅம் மத்கூரா – அல்குர்ஆன் 76:1)

”ஒரு பொருளாக இல்லாதிருந்த மனிதனை
முன்னம் நாமே படைத்தோம் என்பதை
அவன் நினைவுகூர வேண்டாமா?”
(அவலா யத்குருல் இன்சானு அன்னா ஃகலக்னாஹு
மின் கப்லு வலம் யகு ஷைஆ – அல்குர்ஆன் 19:67)

இறைவன் தன் உள்ளமையில் படைப்புக்களை வெளியாக்கினான். அவ்வாறு அவன் அவற்றின் ரட்சகன் ஆனான். அந்த ஞாபகம் தூண்டப்பட வேண்டும்.]

அந்த நீரோடை ஆவியாகித் தன்னைக் காற்றின் கைகளில் ஒப்படைத்தது. காற்று அதனை அள்ளி எடுத்து பல மைல்களுக்கு அப்பால் கொண்டு சென்றது. மேலே மேலே தூக்கிக் கொண்டு போய் ஒரு மலைச் சிகரத்தின் சாரலில் மழையாகப் பொழிந்தது. முன்பு அந்த நீரோடையின் உள்ளத்தில் ஐயங்கள் இருந்தது. இந்த அனுபவத்தை அது துல்லியமாகப் பதிவு செய்துகொண்டது. இப்போது அது சொன்னது, “இப்போது நான் என் உண்மையான அடையாளத்தை அறிந்து கொண்டேன்.”

அந்த நீரோடை கற்றுக் கொண்டிருந்தது. ஆனால் அந்தப் பாலையின் மணல் சொன்னது, “நாம் அறிவோம், ஏனெனில் அன்றாடம் இது நடைபெருவதை நாம் காண்கிறோம். இப்பக்கத்தில் இருந்து அப்பக்கம் அந்த மலைச்சாரல் வரை நாமே பரந்து கிடக்கிறோம்.”

”வாழ்வின் நீரோடை தன் பயணத்தில் தொடர்ந்து செல்ல வேண்டிய பாதை மணலில் எழுதப்பட்டுள்ளது” என்று சூஃபிகள் சொல்வதன் பொருள் இதுவே.

இக்கதை குறித்து இத்ரீஸ் ஷாஹ் எழுதியிருக்கும் குறிப்பு:

“இந்த அழகிய கதை பல மொழிகளில் பேச்சு வழக்கில் உள்ளது. குறிப்பாக தர்வேஷ்களிடமும் அவர்களின் மாணவர்களிடமும் புழக்கத்தில் உள்ளது. சர் ஃபேர்ஃபாக்ஸ் கார்ட்ரைட் 1899-ல் இங்கிலாந்தில் வெளியிட்ட “Mystic Rose from the Garden of the King” என்னும் நூலில் இக்கதை இடம்பெற்றுள்ளது. இங்கே நாம் கேட்ட இக்கதைப் பிரதி 1870-ல் இறந்த அவாத் அஃபீஃபீ தூனிஸி அவர்கள் சொன்னது.”  

Friday, May 24, 2013

ஈர மை




’கரையில் நின்ற
காதலை
அழித்துப் போனது
அலை’
என்றேன்

‘அழைத்துப் போனது
அலை’
என்றாள்
*

சிகிச்சை பலனின்றி
மீண்டும் மீண்டும்
பிழைத்துக் கொள்கிறது
மனம்
*

‘எதற்காகக் கொண்டுவந்தாய்
என்னை?’ என்றேன்

‘நீ இல்லாதிருந்ததை
நினைப்பதற்காக’
என்றாய்
*

காதலின் யாத்திரையில்
உன்னிடம் வரும் பாதையும்
உன்னிடம் வரும் பயணி
*

உன் வேதனைப் புலம்பல்கள்
தெய்வீக கீதமல்ல...
குழலாகும் மூங்கில்
சப்தமிடுவதில்லை
துளை செய்யும்போது
*

கண்கள் போதிக்கும்
காதல் ரகசியங்கள்
புத்தகங்களில்
புலப்படுவதில்லை...

காகிதத்தில்
காய்ந்துபோய்விடும் மை
கண்களில் இருக்கின்றது
ஈரமாக
*

நறுமணம் உன்னில்
வார்த்தைகளாகி
வருகின்றபோது
பனித்துளிகள்
என்
கண்களின் காணிக்கை
*

விடியலுக்காகப்
பிரார்த்தனை செய்தது
விளக்கு
இரவெல்லாம்...

ஏற்றிவிட்டுப்
பிரிந்து சென்ற நீ
அணைப்பதற்காவது
வருவாய் என்று
*

உனக்கேதும்
உவமை சொன்னால்
கோபம் கொள்வாயோ?

உன்னைப் போல் இருக்கிறாய்
என்று சொல்லவும்
அஞ்சுகிறேன்

Saturday, May 11, 2013

வார்த்தை வாசல்




‘உன்னை
அறிந்ததால் காதலித்தேனா?
காதலித்ததால் அறிந்தேனா?’
என்றேன்

’உன்னிரு கண்களில்
எந்தக் கண்ணால்
என்னை முதலில் பார்த்தாய்?’
என்றாள்
*

புலம்புவதில்லை
புல்லாங்குழல்
மௌனமாய்க் கிடப்பதற்கு.

வருத்தப்படுவதில்லை
வாசிக்கப் படுகின்றபோதும்.
*
என் சிறு குடில்
உன் அரண்மனை ஆனது
நான் இறந்த போது
*

கவிதையை அழித்தாய்
பேச்சையும் அழித்தாய்
என் காதலே!
மௌனத்தையும் அழித்துவிடு
*

உன் கிளைகள்
பூக்களைத் தூவிக்கொண்டிருந்த சாலையில்
நடந்திருந்தேன்
கலங்கிய கண்களுடன்

இத்தனை நினைவூட்டல்களை
யார்தான் தாங்கிக்கொள்ள முடியும்?
*

காட்சியைப் பற்றிய உன் சிந்தனையே
திரையை நெய்து கொண்டிருக்கிறது
காதலின் தீயை
அதில் பற்ற வைத்துப் பார்
*

அறிவின்
ஐநூறு சிறகுகள்
எரிந்துபோகும்
எல்லைக்கு அப்பால்
காதலின் கால்தடம்
கண்டேன்
*

எரிவது துன்பம்
எரிவது இன்பம்
விட்டிலுக்கு...

விளக்கின்றி முன்னது
விளக்கில் பின்னது
*

வார்த்தைச் சாளரம்
வழியே
பொருள்
எத்தனை தொலைவில்?

அர்த்தங்களின் சோலைக்கு
வெளியேறிச் செல்ல
வார்த்தைகளில் எங்கே
வாசல்?
*

Monday, May 6, 2013

முதல் நேசம்



நான் உங்களின் ரட்சகன் அல்லவா?”
(அலஸ்து பி றப்பிகும் – 7:172)

ஆத்மாக்களைப் படைத்த இறைவன் அவற்றின் முன் தோன்றி அவற்றிடம் கேட்ட முதல் கேள்வி இது.

ஆத்மாக்கள் பதில் கூறின ‘ஆம், நாங்கள் சாட்சியாகிறோம்’ (காலூ பலா ஷஹித்னா). இதுவே மனித அத்மாக்களின் முதல் பேச்சு.

மனித ஆத்மாக்கள் முதன் முதலில் பார்த்தது இறைவனைத்தான். முதன் முதலில் கேட்டது அவனின் பேச்சைத்தான். முதன் முதலில் பேசியது அவனிடம்தான்.

எத்தகைய காட்சி! எத்தகைய கேள்வி! எத்தகைய உரையாடல்!

அவனே பார்ப்பவன் (ஹுவல் பஸீரு)
அவனே கேட்பவன் (ஹுவஸ் சமீஉ)
அவனே பேசுபவன் (ஹுவல் கலீமு)

அவனே ஆத்மாக்களுக்குப் பார்வையையும் கேள்வியையும் பேச்சையும் தந்தான்.

அவனின் பார்வையைக் கொண்டு அவை அவனைப் பார்த்தன; அவனின் கேள்வியைக் கொண்டு அவை அவனின் பேச்சைக் கேட்டன; அவனின் பேச்சைக் கொண்டு அவை அவனுடன் உரையாடின.

அவனது காட்சியின் பேரழகு. அவனது பேச்சின் இனிமை. அவனுடன் உரையாடும் இன்பம். அவன் மீது காதலாகாமல் எப்படி இருக்க முடியும்?

ஆத்மாக்கள் முதன் முதலில் அவனையே நேசித்தன. அந்த நேசமே அத்தனை நேசங்களுக்கும் ஆதாரம் ஆனது.

இறைக்காதல் என்னும் கடலுள் மூழ்கி மஸ்னவி என்னும் ஒளி முத்தைக் கொண்டு வந்த மவ்லானா ரூமி (ரஹ்) சொல்கிறார்கள், இறைவனின் அந்தப் பேச்சுதான் ஆத்மாக்கள் கேட்ட முதல் இசை. இறைநேசர்கள் இசை (ஸமா) கேட்கும்போது அவர்களின் ஆத்மாக்கள் அந்த ஆதி இசையின் நினைவில் மூழ்கித் திளைக்கின்றன.

ஆத்மாக்கள் சொன்ன பதில் அந்த ஆதி இசையின் முதல் எதிரொலிதான். ஒருவகையில் அவற்றைக் கருவியாக்கி அவனே மீட்டிய இசைதான் அது. அவனின் பேச்சைக் கொண்டுதான் (சிஃபத்தெ கலாம்) அவை பதில் அளித்தன.

‘புல்லாங்குழல் காத்துக் கிடப்பதெல்லாம்
உன் உதடுகள் தொடுவதற்கே
உன் மூச்சு இல்லை எனில்
அதன் இசை ஏது?’
என்கிறார் மவ்லானா ரூமி (ரஹ்)

நான் உங்களின் ரட்சகன் அல்லவா?”
(அலஸ்து பி றப்பிகும் – 7:172)

இந்தத் திருவசனத்திற்கு சூஃபி ஞானி ஒருவரின் அற்புதமான விளக்கத்தை அலீ அக்பருல் கலாபாதி (ரஹ்) அவர்கள் மேற்கோள் காட்டுகிறார்கள் (நூல்: கிதாபுத் தஅர்ருஃப் லி மத்ஹபி அஹ்லுத் தஸவ்வுஃப்):

“வெளிப்படுத்தப்பட்ட பருப்பொருட்கள் (முகவ்வனாத்) பகுத்தறிவின் வீச்சால் அறியப்பட முடியும். இறைவனோ பகுத்தறிவின் வீச்சு அவன்மீது படுவதை விட்டும் மேலானவன். அவனே நமது ரட்சகன் என்பதை அவனே நமக்குக் கற்றுத் தந்தான். அதாவது ‘நான் உங்களின் ரட்சகன் அல்லவா?’ (அலஸ்து பி றப்பிகும் – 7:172) என்று சொன்னானே அன்றி, பகுத்தறிவின் சிந்தனைக்கு வாய்ப்புக் கொடுக்கும் வண்ணம் ‘நான் யார்?’ என்று கேட்கவில்லை. இதுவே படைப்புக்களின் ஆசிரியனாக அவன் முதன் முதலில் வெளிப்பட்ட நிலையாகும். எனவே அவன் பகுத்தறிவைச் சாராதவனாகவும் அனுமானங்களுக்கு அப்பாற்பட்டவனாகவும் இருக்கின்றான்.”

நான் உங்களின் ரட்சகன் அல்லவா?”
(அலஸ்து பி றப்பிகும் – 7:172)

அதாவது, வினாவிலேயே விடையும் இருக்கிறது.

வினா தொடுத்தது, சிந்திப்பதற்காக.

வினாவிலேயே விடையை வைத்தது, சிந்தனையால் அவனை அறிய முடியாது என்பதற்காக!

அதவாவது, அவனை அறிவது அல்லது அவனைப் பற்றிய அறிவை அடைவது நம் சிந்தனையின் விளைவு அல்ல. மாறாக, சிந்திப்பவர்களுக்கு அவன் தன்னைப் பற்றிய அறிவை அருட்கொடையாக வழங்குகிறான்.

எனவே, சிந்திக்காதவர்கள் அவனை அறிய மாட்டார்கள். சிந்திப்பவர்கள் மட்டுமே அவனை அறிகின்றார்கள். ஆனால், சிந்தனையால் அவனை அறிகின்றார்கள் என்பதல்ல. ஏனேனில், அறியாத ஒன்றை ஒருவன் எப்படிச் சிந்திக்க முடியும்?

இதையே ஒரு சூஃபி மகான் ’தேடல்’ (சுலூக்) என்பதை வைத்து இப்படிச் சொல்கிறார்: “தேடுவதால் இறைவனை அடைய முடியாது. எனினும் தேடுபவர்கள் மட்டுமே அவனை அடைகிறார்கள்.”

இதை விளக்க ஓர் உதாரணம் (மிஸால்) என் உள்ளத்தில் உதிக்கிறது:
“குழந்தை அழுகின்றது. தாய் விரைந்து சென்று அதற்குப் பால் ஊட்டுகிறாள். அதன் வயிறு நிறைகின்றது. அது நிம்மதி அடைகின்றது. ‘அழுத பிள்ளை பால் குடிக்கும்’ என்பது முதுமொழி.”

பால் என்பது இறைஞானத்திற்குக் குறியீடாக நபிமொழி ஒன்றில் வந்துள்ளது. அப்படியே இந்த உதாரணத்திலும் காண்போம்.

அழுகையே பால் ஆகிவிடாது. சிந்தனையே இறைஞானம் ஆகிவிடாது.

கண்ணீர் பால் அல்ல. ஆனால் கண்ணீர் பாலுக்காக.
சிந்தனையே இறைஞானம் அல்ல. ஆனால் சிந்தனை இறைஞானத்திற்காக.

கண்ணீர் வெளியேறுவது பால் உள்ளே வரவேண்டும் என்பதற்காக.
சிந்தனை வெளியேற வேண்டும், இறைஞானம் உள்ளே வருவதற்காக.
கண்ணீரின் சுவை வேறு, பாலின் சுவை வேறு.
சிந்தனையின் சுவை வேறு, இறைஞானத்தின் சுவை வேறு.

கண்ணீர் துன்பம், பால் இன்பம்.
சிந்தனை துன்பம், இறைஞானம் இன்பம்.

திரவ வடிவத்தில் இருப்பதால் கண்ணீரும் பாலும் ஒன்று என்று சொல்ல முடியுமா?
வார்த்தை வடிவத்தில் இருப்பதால் சிந்தனையும் இறைஞானமும் ஒன்று என்று சொல்ல முடியுமா?

அழுகையே பசியை நீக்கி விடாது. பால் புகட்டப்பட வேண்டும்.
ஆன்மாவின் பசியை சிந்தனை திருப்தி செய்யாது. இறைஞானம் புகட்டப்பட வேண்டும்.

“காட்சியைப் பற்றிய உன் சிந்தனையே
திரையை நெய்து கொண்டிருக்கிறது
காதலின் தீயை
அதில் பற்ற வைத்துப் பார்”