Saturday, May 11, 2013

வார்த்தை வாசல்




‘உன்னை
அறிந்ததால் காதலித்தேனா?
காதலித்ததால் அறிந்தேனா?’
என்றேன்

’உன்னிரு கண்களில்
எந்தக் கண்ணால்
என்னை முதலில் பார்த்தாய்?’
என்றாள்
*

புலம்புவதில்லை
புல்லாங்குழல்
மௌனமாய்க் கிடப்பதற்கு.

வருத்தப்படுவதில்லை
வாசிக்கப் படுகின்றபோதும்.
*
என் சிறு குடில்
உன் அரண்மனை ஆனது
நான் இறந்த போது
*

கவிதையை அழித்தாய்
பேச்சையும் அழித்தாய்
என் காதலே!
மௌனத்தையும் அழித்துவிடு
*

உன் கிளைகள்
பூக்களைத் தூவிக்கொண்டிருந்த சாலையில்
நடந்திருந்தேன்
கலங்கிய கண்களுடன்

இத்தனை நினைவூட்டல்களை
யார்தான் தாங்கிக்கொள்ள முடியும்?
*

காட்சியைப் பற்றிய உன் சிந்தனையே
திரையை நெய்து கொண்டிருக்கிறது
காதலின் தீயை
அதில் பற்ற வைத்துப் பார்
*

அறிவின்
ஐநூறு சிறகுகள்
எரிந்துபோகும்
எல்லைக்கு அப்பால்
காதலின் கால்தடம்
கண்டேன்
*

எரிவது துன்பம்
எரிவது இன்பம்
விட்டிலுக்கு...

விளக்கின்றி முன்னது
விளக்கில் பின்னது
*

வார்த்தைச் சாளரம்
வழியே
பொருள்
எத்தனை தொலைவில்?

அர்த்தங்களின் சோலைக்கு
வெளியேறிச் செல்ல
வார்த்தைகளில் எங்கே
வாசல்?
*

No comments:

Post a Comment