Wednesday, July 15, 2015

ரமலான்’2015 part-1

{இவ்வருடத்தின் புனித ரமலான் மாதத்தில் ஏற்பட்ட சிந்தனைகள் பல. அவற்றில் இந்தப் பதிவுகள் சில.}


இரண்டு மாதங்களாக நாம் எதிர்பார்த்த புனித மாதமான ரமலான் வந்திருக்கிறது. இன்னொரு விதத்தில் இந்தப் புனித மாதத்திற்கு நாம் வந்து சேர்ந்திருக்கிறோம்.

ரமலான் மாதம் நம்மை நோக்கி வந்ததா? நாம் ரமலான் மாதத்தை நோக்கி வந்தோமா? அதாவது, காலம் நம்மை நோக்கிப் பயணிக்கிறதா? அல்லது நாம் காலத்தை நோக்கிப் பயணிக்கிறோமா? இது சிந்தனைக்கு உரியது. இரண்டு விதமாகவுமே பார்க்க முடியும்.

ரஜப் மாதத்தின் பிறை தோன்றி விட்டால் நபி(ஸல்) அவர்கள் பின் வருமாறு பிரார்த்தனை செய்வார்கள்:

”அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீ ரஜப வ ஷஃபான வ பல்லிக்னா ரமலான்” (நூற்கள்: தபரானி, அஹ்மத்)

”அல்லாஹ்வே! ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் எங்களுக்கு அபிவிருத்தி அருள்வாயாக! மேலும், ரமலான் மாதத்தை நாங்கள் அடையச் செய்வாயாக.”

இதில், ரமலானை நோக்கிய நமது நகர்வு சுட்டப்படுகிறது. காலத்தின் கட்டங்களுக்குள் நாம் பயணிக்கிறோம்.

ரமலான் மாதத்தை அடைந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு தம் தோழர்களிடம் சொன்னார்கள்:

”அதா(க்)கும் ரமலானு ஷஹ்ருன் முபார(க்)குன்...” (நஸாயீ:2106)

“புனித மாதமான ரமலான் உங்களிடம் வந்துள்ளது...”

இதில், நம்மை நோக்கிய ரமலானின் நகர்வு சுட்டப்பட்டுள்ளது. காலம் நம்மில் பயணிக்கிறது!

நாம் காலத்தில் பயணிக்கிறோம்; காலம் நம்மில் பயணிக்கிறது.

கடலில் மீன் நீந்தித் திரிகிறது; கடலும் தன்னுள் பல நீரலைகளாகச் சுழன்று கொண்டிருக்கிறது.

நம்மில் காலம் வெளிப்படுகிறது; காலத்தில் நாம் வெளிப்படுகிறோம். ரமலானில் நாம், நம்மில் ரமலான் என்று ஆகிறோம்.

”ஃபமன் ஷஹித மின்குமுஷ் ஷஹ்ர ஃபல்யஸும்ஹு” (2:185) என்று அல்லாஹ் சொல்வதைக் கவனியுங்கள். இத்திருவசனப் பகுதியில் உள்ள ஷஹித என்னும் சொல்லைக் கொண்டு பலவிதமான மொழிபெயர்ப்புக்கள் செய்யப்பட்டுள்ளன.


”எவர் அந்த மாதத்தை தரிசிக்கிறாரோ அவர் அதில் நோற்கட்டும்” என்கிறது sahih international மொ.பெ. ஷஹித என்னும் சொல்லை அது ‘sight’ என்று அர்த்தப் படுத்துகிறது. எனவே, ”எவர் அந்த மாதத்தை (அதில் பிறையை) தரிசிக்கிறாரோ அவர் அதில் நோற்கட்டும்” என்று அடைப்புக் குறியிட்டு, பிறை பார்த்தல் என்பதாக பாவிக்கிறது.

இன்னொரு மொழிபெயர்ப்பு: “உங்களில் எவர் அதில் பிரசன்னமாகிறாரோ அவர் அதில் நோற்கட்டும்” (’And whosoever of you is present, let him fast the month’ tr. Muhammad Marmaduke Pikthall).

இதில் ஷஹித என்னும் சொல் பிரசன்னம் (presence) என்று பாவிக்கப் பட்டுள்ளது.

தமிழில் இந்த வசனப் பகுதி இவ்வாறு மொழிபெயர்க்கப் படுகிறது: “உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோற்கட்டும்”. (முஹம்மத் ஜான் ட்ரஸ்ட்)

இம்மூன்று அர்த்தங்களுமே ஒன்றுதான்: தரிசித்தல், இருத்தல், அடைதல். இந்த மூன்று பண்புகளும் இதயத்துடன் தொடர்புள்ளவை. இந்தப் பண்புகள் எந்த மனிதனின் இதயத்தில் உள்ளதோ அத்தகைய மனிதனே நோன்பின் நோக்கத்தை நிறைவேற்ற முடியும். 

அதாவது, நோன்பின் நோக்கத்தை ஒருவன் அடைய வேண்டும் எனில் அவனிடம் இருக்க வேண்டிய தகுதிகள் இவை. அவனுடைய உள்ளம் அகப்பார்வை (பஸாரத்) கொண்டதாக, பிரசன்னம் (ஹள்ரத்) உள்ளதாக, அடைதல் (வஜ்த், ஷுகல்) உள்ளதாக இருக்க வேண்டும். மொத்தமாகச் சொல்வதெனில், அவன் ’ஷாஹித்’ (சாட்சியாளன், witness) ஆக இருக்க வேண்டும்.

நோன்பின் நோக்கம் என்ன? அதைப் பின்வரும் திருவசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்:
“யா அய்யுஹல்லதீன ஆமனூ குதிப அலைக்குமுஸ் ஸியாமு கமா குதிப அலல்லதீன மின் கப்லி(க்)கும் லஅல்ல(க்)கும் தத்தகூன்”

“நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மீது நோன்பு கடமை ஆக்கப் பட்டிருக்கிறது, உங்களுக்கு முன் இருந்தோரின் மீது கடமை ஆக்கப் பட்டதைப் போலவே, நீங்கள் தக்வா அடைவதற்காக” (2:183)

நோன்பு கடமை ஆக்கப் பட்டதில் இந்த நோக்கத்தை வைத்துத்தான் முன் இருந்த சமூகங்களுக்கும் நமக்குமான நோன்பின் ஒப்புமை. அதாவது, அவர்களுக்கும் ரமலான் மாதம் முழுவதும் வைகறை முதல் அந்தி வரை என்னும் அமைப்பில் நோன்பு விதிக்கப் பட்டிருந்ததாக அர்த்தம் அல்ல. நோன்பின் அமைப்பு எப்படியாக இருந்தாலும் சரி, எல்லாச் சமூகங்களுக்கும் நோன்பின் நோக்கம் ஒன்றுதான். அதுதான் தக்வா. அதை அடைவதற்காகவே நோன்பு கடமை ஆக்கப்பட்டது.

நோன்பின் நோக்கம் ’தக்வா’ என்று இவ்வசனம் தெளிவாகக் காட்டுகிறது. ஆனால் தக்வா என்பது என்ன என்பதில்தான் தெளிவு இல்லாமல் சமுதாயம் குழம்புகிறது!

மேற்சொன்ன திருவசனத்தில் ”ல-அல்ல(க்)கும் தத்தகூன்” – “நீங்கள் தக்வா அடைவதற்காக” என்னும் பகுதியை எவ்வாறு அர்த்தப் படுத்தி மொழி பெயர்த்திருக்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் கவனிப்போம்.

”நீங்கள் நேர்மையாளர் ஆவதற்காக” - that you may become righteous என்கிறது சஹீஹ் இண்டர்னேஷனல் மொ.பெ.

”நீங்கள் (தீமைகளைத்) தவிர்த்துக் கொள்வதற்காக” – that ye may ward off (evil) என்கிறது பிக்தாலின் மொ.பெ.

”நீங்கள் சுயக் கட்டுப்பாடு கொள்வதற்காக” - that ye may (learn) self-restraint என்கிறது யூசுஃப் அலிய்யின் மொ.பெ.

இந்த மொழிபெயர்ப்புக்கள் எல்லாமே தோராயமாகவும் பூடகமாகவுமே உள்ளன. இவற்றின் அர்த்த நீட்சிகளை நாம் கண்டறிய வேண்டிய தேவை ஏற்படுகிறது. இல்லை எனில் தக்வா என்னும் கோட்பாட்டை நாம் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் தக்வா என்பதோ மிகவும் முக்கியமான ஒன்றாக, நோன்பின் நோக்கமாக இருக்கிறது.

மேற்சொன்ன மூன்று மொழி பெயர்ப்புக்கள் தரும் அர்த்தங்கள் அனைத்துமே தக்வா என்னும் சொல் உணர்த்தும் பண்பின் பரிமாணங்களைக் காட்டுபவைதான். இம்மூன்றும் ஒன்று சேரும் புள்ளி தக்வா எனலாம். இவை எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பதை நாம் காண வேண்டும்.

நேர்மை, தவிர்தல், சுயக் கட்டுப்பாடு ஆகிய மூன்றும் எப்போது தக்வாவை உருவாக்கும்?
“இத்தகூ ஃபிராஸத்தல் முஃமின்” என்று ஒரு ஹதீஸில் வருகிறது. அதாவது, “இறை நம்பிக்கையாளனின் அகப்பார்வையைத் தவிர்த்துக் கொள்”.

மேற்சொன்ன மொ.பெயர்ப்புக்களில் “நீங்கள் (தீமைகளைத்) தவிர்த்துக் கொள்வதற்காக” என்று யூசுஃப் அலி அவர்கள் தரும் மொழி பெயர்ப்பு ’ஷரீஅத்’ என்னும் நிலையில் நின்று பேசுகிறது. ஆனால் தக்வா என்பதன் தத்துவ விளக்கம் அந்த நிலையோடு மட்டும் நின்று விடுவதில்லை. அதன் அந்தரங்க நிலைகளை நோக்கி நாம் நகர்ந்தாக வேண்டும்.

திருக்குர்ஆனில் தக்வா என்பது இறைவனுடன் தொடர்பு படுத்திப் பேசப்படுகிறது.

”ஃபத்த(க்)குல்லாஹ்” – “நிச்சயமாக அல்லாஹ்வைத் தக்வா செய்யுங்கள்” (3:50; 3:123; 5:100; 8:1; 11:78; 26:108,110,126,131,144,150,163,179; 43:63; 64:16; 65:10)

”யா அய்யுஹல்லதீன ஆமனூ இத்த(க்)குல்லாஹ வ கூனூ ம-அஸ் ஸாதி(க்)கீன்” -  ”நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வைத் தக்வா செய்யுங்கள். மேலும், சத்தியவான்களுடன் ஆகிவிடுங்கள்” (9:119)

”வத்த(க்)குல்லாஹ ரப்ப(க்)கும்” – “உங்கள் ரட்சகனாகிய அல்லாஹ்வைத் தக்வா செய்யுங்கள்” (65:1)

இந்தத் திருவசனங்களில் எல்லாம் தக்வா என்பது “அல்லாஹ்வை அஞ்சுங்கள்” “fear Allah” என்பதாகவே மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. தக்வா என்றால் இறையச்சம் என்பதாகவே பரவலாகப் பொருள் செய்யப்படுகின்றது. அவாம் என்னும் பொது மக்களின் நிலையைப் பொருத்த வரை இந்த அர்த்தம் சரியானதாக இருக்கலாம். ஆனால் ஆன்மிகத்தில் இது ஆரம்ப நிலை மட்டுமே. இறையச்சம் என்பது ’தக்வா’வின் பிள்ளைப் பருவம். சிறு பிள்ளைகளிடம் வளர்ந்தவர்களும் அவர்களின் பாஷையிலேயே பேசவேண்டி இருக்கிறது. ஆனால், வளர்ந்தவர்களுக்கு ’தக்வா’வின் அடுத்தடுத்த கட்டங்கள் தேவையாகின்றன.  

உண்மையில் (இறை) அச்சம் என்பதைக் குறிக்க வேறு அறபிச் சொற்கள் இருக்கின்றன. ஃகவ்ஃப் மற்றும் ஃகஷ்யா.

”வ லிமன் ஃகாஃப மகாம றப்பிஹி ஜன்ன(த்)தான்” – “தன் ரட்சகனின் நிலையை அஞ்சியவனுக்கு இரண்டு சுவர்க்கங்கள் உண்டு” (55:46)

இன்னொரு திருவசனம் அச்சம் (ஃகஷ்யா) என்பதையும் தக்வா என்பதையும் வேறுபடுத்திக் காட்டுகிறது:

“வ ம(ன்)ய்யுதி-இல்லாஹ வ ரசூலஹு வ யஃக்‌ஷல்லாஹ வ யத்தக்ஹி ஃப-உலா-இக ஹுமுல் ஃபா-இஸூன்” – “எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனின் தூதருக்கும் கீழ்ப்படிந்து அல்லாஹ்வை அஞ்சி மேலும் அவனைத் தக்வா செய்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள்” (24:52)

இவ்வசனத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்று கவனிக்கத் தக்கது:

“And whoever obeys Allah and His Messenger and fears Allah and is conscious of Him - it is those who are the attainers.” (மொழிபெயர்ப்பு: Sahih International)

இங்கே தக்வா என்பது அல்லாஹ்வைப் பற்றிய பிரக்ஞை – God-consciousness என்பதாக அர்த்தம் செய்யப்பட்டுள்ளது. தக்வா என்பதன் மிகச் சரியான விளக்கம் இதுதான்.

தமிழில் இவ்வசனத்தின் மொழிபெயர்ப்பு ஒன்றில், ஃகஷ்யா மற்றும் தக்வா ஆகிய இரண்டையும் ஒற்றைச் சொல்லாக ’பயபக்தி’ என்று தந்திருக்கிறார்கள்:

“இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்” (ஹாஜி முஹம்மது ஜான் ட்ரஸ்ட்)

பயபக்தி என்பதில் பயம் என்பது ஃகஷ்யா, பக்தி என்பது தக்வா.

பக்தி என்றால் என்ன என்னும் கேள்விக்கு விளக்கம் ’ஒவ்வொரு கணமும் இறைவனைப் பற்றிய பிரக்ஞையுடன் இருப்பது’ – to be God-conscious every moment என்பதே.

இந்த இறைப் பிரக்ஞையை அடைவது எப்படி? அதற்கான முறைகளை அறிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

”யா அய்யுஹல்லதீன ஆமனூ இத்த(க்)குல்லாஹ ஹக்க து(க்)காத்திஹி” – “விசுவாசம் கொண்டோரே! அல்லாஹ்வைத் தக்வா செய்யுங்கள், அவனது தக்வாவிற்கான முறைப்படி” (3:102)

அவனது தக்வாவிற்கான முறை, அவனது பிரக்ஞைக்கான முறை என்பது தனித்தன்மையான ஒன்று என்பதை இதனால் விளங்கலாம். அப்படித்தானே இருக்க முடியும்? படைப்புக்களைப் பற்றிய பிரக்ஞையும் படைத்தவனைப் பற்றிய பிரக்ஞையும் எப்படி ஒரே மாதிரி இருக்க முடியும்?

 படைப்புக்களைப் பற்றிய பிரக்ஞை மாயைகளால் உண்டாகிறது.

வ மல் ஹயாத்துத் துன்யா இல்லா ம(த்)தா-உல் குரூர்” - “இவ்வுலக வாழ்க்கை மாய சுகமே அன்றி வேறில்லை” (57:20)

படைத்தவனைப் பற்றிய பிரக்ஞை என்பது அந்த மாயைகளைக் களைவதால் உண்டாகும் ஒன்று. எனவே அதற்கான வழிமுறைகள் தனித்தன்மை கொண்டதாகத்தான் இருக்க முடியும். சூஃபி ஆன்மிகப் பள்ளிகள் (தரீக்கா) அந்த வழிமுறைகளைச் சொல்லித் தருகின்றன.

இறைவன் எங்கோ படைப்புக்களை விட்டும் தனித்து இருக்கிறான் என்றால் அவனைப் பிரக்ஞை கொள்வது என்பது ’இங்கே’ சாத்தியமில்லாமல் போய்விடும். பிரக்ஞை கொள்வது என்பது இருப்பை உணர்வது என்பதாகும்.


இங்கே இறைவனைப் பிரக்ஞை கொள்வது என்பதன் பொருள் இங்கே அவனது இருப்பை உணர்வதுதான். சிருஷ்டியில் இறைவனை அறிவதும் உணர்வதும் அடைவதும் தக்வா ஆகும்.

No comments:

Post a Comment