Monday, March 25, 2013

சமையல் வாசம்



மூன்று வரிகளில் ஒரு வாழ்க்கையை வருணித்துச் சொல்லிவிட முடியுமா? ‘பிறந்தார் வாழ்ந்தார் இறந்தார்’ என்று சொன்னால் அது பலரின் வாழ்க்கைக்குப் பொருத்தமாகத்தான் இருக்கும் போலும்!

ஹைகூ கவிதை போல், மூன்றே வரிகளில் இருந்தாலும் அர்த்தம் செறிந்ததாக, அழகாக ஒரு வாழ்க்கை வரலாறு இருக்க முடியுமா?

சூஃபி ஞானி மௌலானா ரூமி தன் வாழ்க்கையை அப்படித்தான் மூன்றே வரிகளில் சொல்லிச் செல்கிறார்கள்.

“மூன்று வரிகளில்
முடித்து விடலாம்
என் வாழ்வின் கதையை...
பச்சையாய் இருந்தேன்
சமைக்கப் பட்டேன்
சாப்பிடப் பட்டேன்”

யார் அவரைச் சமைத்தார்கள்? யார் சாப்பிட்டார்கள்? அது என்ன சமையல்?

பச்சையாய் இருப்பதைப் பக்குவப்படுத்தி மனிதன் சுவைத்து உண்பது போல் ஆக்கும் கலையைச் சமையல் என்கிறோம். மதம் என்பதற்குத் தமிழில் உள்ள அழகானதொரு பெயர் ’சமயம்’.

இறைவனின் சுவைக்குத் தகுந்த வண்ணம் மனிதனைப் பக்குவப் படுத்தும் கலையே சமயம்.

சமையல் என்றால் அடுப்பு மூட்ட நெருப்பு உண்டு அல்லவா? சூஃபிகள் சொல்கிறார்கள், ’உன் இதயமே அடுப்பு; இறைக்காதலே நெருப்பு’

சட்டி தானாகவே நெருப்பைப் பற்ற வைத்துக் கொள்வதில்லை. சமையல்காரன் / காரிதான் அதனைப் பற்ற வைக்கிறார். அவர்தான் குருநாதர். மௌலானா ரூமி குறிப்பிடும் சமையல்கார் அவரின் ஆன்மிக குருநாதர் ஷம்ஸுத்தீன் தப்ரேஸி அவர்கள்தான்.

ஷம்ஸ் என்றால் சூரியன் என்று பொருள். சூரியனே தேவைப்பட்ட அளவு ரூமியின் இதய அடுப்பும் அத்தனை பெரியதுதான்!

குருவுக்கும் சீடனுக்கும் உள்ள உறவை, ஆன்மிகச் சமையல் என்னும் பணியை அழகான ஒரு கவிதை வழி ரூமி நமக்கு உணர்த்துகிறார். பச்சைப் பட்டாணி ஒன்று சமையல்காரனிடம் புலம்புவதாக அந்தக் கவிதை அமைந்துள்ளது. அடியேனின் தமிழில் சற்றே அதை உங்களுக்குப் பரிமாறுகிறேன்:

“வேக வைக்கப்படும் சட்டியின் விளிம்புவரை
எம்பி குதிக்கிறது பச்சைப் பட்டாணி
‘எனக்கு ஏன் இதைச் செய்கிறீர்?’

சமையல்காரர் அதனைச்
சட்டாப்பையால் சாத்துகிறார்.

‘வெளியே குதித்தோட முயலாதே.
உன்னை நான் வேதனை செய்வதாய் நினைக்கிறாய்
நானோ உனக்குச் சுவையைத் தருகிறேன்,
சோறும் மசாலாவும் கொண்டு கலந்து
மனிதனின் உடலுக்கு நலம் ஆவாய் நீ.

தோட்டத்தில் மழைநீர் பருகினாயே
அந்தக் காலத்தை நினைவு கூர்வாயாக.
அஃது இதற்காகத்தான்!’

கருணை முதலில்.
காமத்தின் இன்பம்,
அதன் பின்
கொதிக்கும் புதிய வாழ்வு தொடங்குகிறது
அந்த உயர்ந்த நண்பன்
அருந்துவதற்கு மிகவும் சுவையாக
விஷயம் புரியும்போது
சமையல்காரரிடம் பட்டாணி சொல்கிறது
‘இன்னும் கொஞ்சம் என்னை வேக வையுங்கள்
உங்கள் கைக்கரண்டியால் என்னைக் கிளறுங்கள்
எனக்கு நானே இதைச் செய்துகொள்ள முடியாது!

நானோ
பாகனை மறந்துவிட்டு
இந்தியாவின் தோட்டங்களைக்
கனவு காணுமொரு யானையைப் போல் இருக்கிறேன்.

நீங்களே என் சமையல்காரர்
நீங்களே என் பாகன்
உள்ளமைக்கு என் வழி நீங்களே!
உங்கள் சமையலை நேசிக்கின்றேன்.’

அந்தச் சமையல்காரர் சொல்கிறார்:
’நானும் உன்னைப் போல்தான் இருந்தேன்,
மண்ணிலிருந்து புதிதாக, பச்சையாக.
பிறகு காலத்தில் வெந்தேன்
அதன் பின் உடலில் வெந்தேன்
உக்கிரமான இரண்டு வேகல்.

என் மிருக மனம் வலிமையுடன் வளர்ந்தது
பயிற்சிகளால் அதனைப் பக்குவம் செய்தேன்
மேலும் கொஞ்சம் வெந்தேன்
அதற்கு அப்பாலும் வெந்து முடித்தேன்,
உன்னுடைய குருவாய் ஆனேன்.”



2 comments:

  1. alhamdulillah,
    arputhummana villakam,
    Allah ungeleke rahmat seivannaha.
    inthe fakirrum veha
    shaib jadhavin parvai vendhegirin

    ReplyDelete
  2. Assalamu alaikum, migavum arumaiyaga erundhadhu. edhu varai oru guruvidam serndhu aanmigam payilum baakiam enaku kidaikka villai. adarkaha kaathu kondu erukkindraen. ungal muliamaga anda baakiam enakku kidaithal na romba baakia sali.

    ReplyDelete