Sunday, February 17, 2013

கண்சாட்சி



”கடற்கரையில் நடனமாடிய
காலடிச் சுவடுகள் எங்கே?”
                  -ஜோனி மிச்செல்

”THE EYE WITNESS” (கண்சாட்சி) என்னும் சூஃபிப் பாடலுக்கான பின்னூட்டத்தில் இந்த மேற்கோள் வரிகளைக் கண்டேன்.

இவ்வுலகம் கடற்கரை. இவ்வாழ்வு அந்தக் கடற்கரையில் நாம் ஆடும் நடனம். காலடிச் சுவடுகள் அடுத்தடுத்து அலைகளால் அழிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்னும் ஆழ்ந்த பொருள் இந்த மேற்கோளில் தொனிக்கிறது.

”ஐவிட்னஸ்” என்னும் அந்தப் பாடல் ஒரு சூஃபிப் பாடல். ”If man but knew” (1972) என்னும் இசைப்பேழையில் உள்ள மூன்றாம் பாடல். அப்பாடலை இயற்றியவர் சூஃபி குருவான ஷைக் முஹம்மத் இப்னுல் ஹபீப் (ரஹ்) என்பவர். அதை இசையுடன் பாடியிருக்கும் குழுவின் பெயர் ”ஹபீபிய்யா.” மொரோக்கோ நாட்டின் இசைக் குழு.

”ஹபீபிய்யா” என்னும் அந்த இசைக்குழுவின் உறுப்பினர்கள்: மைக்கேல் எவான்ஸ் (மண்டோலா & கிதார்), ஐயான் வைட்மேன் (வாய்ப்பாட்டு, ஷகுஹாச்சி, பியானோ, பினா ஆர்கன் & ஓபோ), ரோஜர் பொவெல் (சஃபி மேளம் & ட்ரம்ஸ்), கொன்றாட் அர்க்யுலெட்டா (வாய்ப்பாட்டு, ஷகுஹாச்சி, நை புல்லாங்குழல், சிதர் & பாஞ்சோ), சூசன் அர்க்யுலெட்டா (வாய்ப்பாட்டு, ஷகுஹாச்சி, கோட்டோ, வையோலா & கிதார்).

இக்குழுவில் இருக்கும் ஐயான் வைட்மேனும் ரோஜர் பொவெலும் முன்பு “மைட்டி பேபி” என்னும் இசைக்குழுவில் இருந்தவர்கள். அது 1968-ல் லண்டனில் உருவாக்கப்பட்டது. அதில் இவர்களுடன் அலன் பாம் கிங், மைக் இவான்ஸ் மற்றும் மார்டின் ஸ்டோன் ஆகியோரும் இருந்தனர். ”மைட்டி பேபி”, “ஜக் ஆஃப் லவ்” ஆகிய இரண்டு இசைப்பேழைகள் இக்குழுவின் பயனாக வெளிவந்தன. அத்தருணத்தில் வைட்மேன், இவான்ஸ், பொவெல் ஆகிய மூவரும் சூஃபி நெறிக்கு மாறியதால் அக்குழு முடிவுக்கு வந்தது. இவர்கள் மூவரும் “ஹபீபிய்யா” என்னும் பெயரில் ஒரு புதிய இசைக்குழுவைத் தொடங்கி “If man but knew” என்னும் இசைப்பேழையை 1972-ல் வெளியிட்டார்கள்.

சூஃபி நெறியின்பால் இவர்களை ஈர்த்த ஷைக் முஹம்மது இப்னுல் ஹபீப் அல்-ஹசனி (ரஹ்) என்பவர் மொரொக்கோவில் உள்ள தர்க்கவி-ஷாதலிய்யா தரீக்கா என்னும் சூஃபி ஆன்மிகப் பள்ளியின் குருவாக வாழ்ந்து 10-ஜனவரி-1972 அன்று இவ்வுலகிலிருந்து மறைந்தார். அதாவது, ஹபீபிய்யா இசைக்குழுவினர் சூஃபி நெறியில் தம்மை இணைத்துக்கொண்ட அதே வருடம்.

தர்க்கவி-ஷாதலிய்யா சூஃபிப்பள்ளியின் தியானக்கூடம் இங்கிலாந்திலும் இயங்கி வந்தது. அதன் வழியாகத்தான் ஹபீபிய்யா இசைக்குழுவினர் அந்நெறியில் இணைந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.

அவர்கள் இசையமைத்துப் பாடியுள்ள, “the eye witness” என்னும் பெயரில் இசைப்பேழையில் இடம்பெற்றுள்ள, ஷைக் அவர்களின் கஸீதா என்னும் ஆன்மிகம் கவிதையினைத் தமிழாக்கித் தருகின்றேன்.

“தூய காட்சிநிலை ஆசிப்பவனே!
உருவங்களையும் உயிரையும் விட்டு
மேலெழுவாயாக!

ஆதிப் பாழுக்கு ஆகு
இல்லாதவனாய் இரு, அழிந்தவனே!

ஒவ்வொரு காலத்திலும்
அர்த்தங்கள் பரவி வந்ததொரு
ரகசியம் கொண்டு உள்ளமையைத் தரிசிப்பாய்!

செயல்களின், பொருள்களின் தோற்றங்கள்
செய்பவனை எவ்வகையிலும் பலவாக்குவதில்லை.

அழியும் ஒவ்வொரு பொருளுக்கும்
அப்பால் எழுபவன்
உள்ளமையைக் காண்கிறான் இருமை இன்றி.

அருள்மயமான, பரிபாலிக்கின்ற, நெருக்கமான ரட்சகனின்
தரிசனத்தைப் பெற்றவனின் வெற்றியே!

தன் இருள்நிலை விட்டுத் திரும்பி வரும்
அடியவனை ஆதரிக்கும் ரட்சகன் அவன்.

அடிமையின் திருப்பமானது
காதலையும் நெருக்கத்தையும் கொண்டுவருகிறது.

அருட்கொடை காண்கையில்
அல்லாஹ்வை நினைத்தல்
உள்ளத்தில் ஒளிமிக்க
உதிப்பை உண்டாக்கும்.

தன்னைவிட்டும் பாதுகாப்படைந்தவன்
படைப்பைவிட்டும் பாதுகாப்படைந்தான்.

இச்சைகளில் மனதிற்கு எதிராகு
இறைஞானியின் உடனிருப்பைத் தேடு.

மனத்தின் மறைந்த குறைகளைக் காட்டி
ஆன்மிக மருந்தினை அளிப்பார் அவர்.

பாதையில் உன்னுடன் பதமாக இருப்பார்
சோதனையில் வீழ்வோரின் வழிதவரிச் சென்றோரின்
வேதனை மீது இரக்கம் கொள்வார்.

உள்ளமையின் தியானத்தில் உன்னை அழிப்பார்.

திருமறை கொண்டு திறப்பார்
இதயத்தில் இறைவனின் நீங்கா நினைவை.

அர்த்தங்கள் பொங்கிவரும் அறிவுரை வழியே
உயிருக்குப் புத்துணர்ச்சி ஊட்டிடுவார்.

இறைவா!
அருள்மறையின் தோற்றுவாய் தொனிக்கப்படும் காலமெல்லாம்
திருநபியின் மீது உன் பேரருளைப் பொழிந்திடுவாய்.

இறைக்கொள்கை கொண்டு மக்கள்
பலன் பெரும் காலமெல்லாம்
திருநபியின் குடும்பம் மீதும்
அன்னாரின் தோழர்கள் மீதும்
பேரருளைப் பொழிந்திடுவாய்.

சத்தியப் பரம்பொருளே!
என் வாழ்நாளில் உள்ளோர் அனைவருக்கும்
பேரின்பமும் திருப்தியும் அருள்வாயாக!”

1 comment:

  1. assalamu alaikum... na unga blogai thavarama padithu varubavan.... na unga ta pesanum.... pls advice me.

    ReplyDelete