Sunday, June 24, 2012

மரணத் திரை




செவியில் விழும்
மரணச் செய்தி ஒவ்வொன்றும்
சொல்கிறது என் எதிர்காலத்தை
சர்வ நிச்சயமாய்

மரணத்தில் மறைந்துள்ளது
ரணமும் மணமும்

எத்தனை விசித்திரம் இது!
மரணமில்லாப் பெருவாழ்விற்கு
ஒரேயொரு வாசலாக
மரணம்தான் இருக்கிறது!

காமுகனின் மனம்
காமத்தின் புள்ளியில்
மையம் கொண்டிருப்பது போல்
ஒவ்வொரு கணமும்
மரணத்தில்
மையம் கொண்டுள்ளேன்

புதையலின் தேடலில்
தேகக் கருவி
மரணத்தின் திசையையே
காட்டுகின்றது

காதலில் சுவைத்துக்கொண்டிருக்கிறேன்
மரணத்தின் இனிமையை...
காதலின் இனிமையை
மரணத்தில் சுவைப்பதற்காக

அவன் நினைவுகளில்
திளைத்த நாவில்
இனிக்கும் பானம்
மரணம்

இதயமே!
உலகின் காய்ச்சலில்
உன் நாவு
கசந்துபோகாமல்
காத்துக்கொள்.

No comments:

Post a Comment