Saturday, April 7, 2012

ரோ…ஜா




இந்த ரோஜா
இந்தப் பனித்துளிகள்…

வான்மணப் பெண்ணின்
துப்பட்டாவில்
வைர அலங்காரமா?

உள்ளுருகும் பக்தியால்
உறங்காத பாவை
வைகறை நீராடி
வருகின்றாளா?

காதலனின் இதயத்தின் மீது
காதலி சிந்திய
கண்ணீர்த்துளிகளா?

காலம் பல காத்திருந்து
காதலனைக் கண்டதால்
நாணத்தில் சிவந்த கன்னம்
நனைந்துள்ளதா
ஆனந்தக் கண்ணீரில்?

ஒருநாள் புன்னகை
பலநாள் அழுகை
யாருடைய விதியோ?


இந்த ரோஜா
இந்தப் பனித்துளிகள்…

இரவெல்லாம் அழுதிருந்த
இறைநேசரின்
சிவந்த விழிகளா?

மௌனம் கலைத்து
மொழிந்த ரகசியத்தின்
வார்த்தைகள்
உதடுகளிலேயே
உறைந்து போனதா?

இந்த ரோஜா
இந்தப் பனித்துளிகள்...

நபிக்கு இப்படித்தான்
வியர்த்தது என்று
செடிகள் நம்மிடம்
செப்பும் செய்தியா?

நபியின் நறுமணத்தை
வாங்கிச் செல்ல வந்திருக்கும்
வானவர்களா?

இமாம் ஹுசைனின்
இன்னுடல் மீது
வானத்திலிருந்து
வாஞ்சைநபி அழுத
காட்சியின் நிழற்படமா?

இந்த ரோஜா
இந்தப் பனித்துளிகள்...


No comments:

Post a Comment