Friday, April 6, 2012

ஆதம் கீதம்




வலது பக்கம் கடல்
இடது பக்கம் மலை
அலைகள் புரளும் கரை

மண்ணாகவில்லை நீர்
நீராகவில்லை மண்
உயிராகவில்லை உடல்
உடலாகவில்லை உயிர்

இரண்டிற்கும் இடையில்
இரண்டினும் வேறாய்
இருந்தேன் நான்

மூல ஒளியின்
முகவரியில் இருந்து
முதல் ஒளி
என்னைத் தீண்ட
எதிர்பார்த்திருந்தேன்

இருளும் ஒளியும்
இல்லாத பொழுதில்
ஒளியின் ஒளி வந்து
வழிகாட்டக் காத்திருந்தேன்

தூது வந்த
உயிரின் மூச்சில்
உள்ளும் புறமும்
நறுமணம் ஆனது
உயிரின் உயிருடன்
திருமணம் ஆனது

தன்னுள் இருந்ததை
என்னுள் வைத்தான்

ஒளிச்சிறகுகளின்
எல்லைக்கு அப்பால்
ஏகனின் ஒளி காண
ஏகும் ஒளி
என்னுள் வந்ததால்
விண்ணிலும் மண்ணிலும்
விரிந்த சிறகுகள்
அத்தனையும் எனக்குள்
அடங்கின

இறைவனின் பெயருடன்
இணைந்த பெயருக்கு
வடிவாகி நின்றேன்
அனைத்துப் பெயர்களும்
அருளானது

புறத்தில் ஒளியைப்
பார்க்கும் நெருப்பு
அகத்தில் ஒளியைப்
பார்க்கவில்லை
மண்ணின் முன் அது
இருளானது

முகூர்த்தம் முடிந்து
முதலிரவானது
அகத்தின் ஒளியைத் தேடினேன்
அகப்படாததால் வாடினேன்

இணையில்லான்
என்னிலிருந்து எனக்கொரு
இணை செய்தான்
துயிலும்போது
துணை செய்தான்

வளைந்த எலும்பில்
வடிவாகி வந்தாள் அவள்

அந்தரங்கத்தின் சாரம்
ஆனது என் தாரம்

தன்னிலிருந்து
என்னுள் வைத்ததைப்
பெண்ணில் காணச் செய்தான்
பேரின்பம் பேணச் செய்தான்

உயிரின் உயிரை
உடலின் உடலில்
கண்டேன்
காதல் கொண்டேன்

சுடரில் சுகம் பெறும் முன்
விளக்கை வாழ்த்தச் சொன்னான்

அடிமை தன் சாரத்தில்
அமைதி பெற்றிட
அடிமைத்தனத்தின் சாரம்
அவசியம் அல்லவா?

முதல் ஒளியான
விளக்கின் மீது
விளம்பும் வாழ்த்து
மூல மந்திரத்தின்
விளக்கம் அல்லவா?

அகிலங்களின் இறைவனுடன்
அகிலங்களின் அருட்கொடையை
இணையாக்காது
இணைத்து வைப்பதே
இணையுடன் இணைவதற்கு
மணக்கொடை ஆனது

தொழுகைகள்
சொர்க்கத்தின்
திறவுகோல் அல்லவா?

வெளிப்பட்ட உள்ளொளி
வெளிச்சமிட்ட உள்ளன்பில்
களித்திருந்தேன்…
கள்ளமில்லாக்
காதல் நாட்கள்
கழித்திருந்தேன்

நெருப்பின் ஒளி
நேச மொழி
பகர்ந்து மயக்கியதில்
விருப்புற்றுச் சுவைத்தாள்
விலக்குக் கனி

ரசித்ததால்
புசித்தேன் நான்
சோதிக் கனி
பாதிச் சுவைத்துத் தந்த
மீதிக்கனி

சோதனையில் தாழ்ந்தோம்
வேதனையில் வீழ்ந்தோம்

என்னுடலைத் தன்னுடலின்
மூலமாய்க் கொண்டவள்
என்னுடலின் மூலத்திற்கு
அழைத்து வந்தாள்

ரத்தம் ஓட்டுவான் என்று
வானவர்கள் சொன்னவனின்
ரத்த நாளங்களில் ஓடுபவன்
செய்த சூழ்ச்சியால்,
உயிரின் பன்னீர்
உருக்கொள்ளும்
கருவறை வாசலில்
கசிந்தது
உதிரச் செந்நீர்

அத்தனை பெயரையும்
அப்பால் ஆக்கி
முத்தாகிச் சுடர்ந்த
முதல் ஒளியின் பெயரை
முன்வைத்துக் கேட்டேன்
மன்னிப்பைப் பெற்றேன்

தீயொளியின் பக்கம்
திரும்பியவர்க்கெல்லாம்
மன்னிப்பைப் பெறும் மார்க்கம்
முதல் ஒளியின் முற்றத்தில்
போய் நின்று கேட்பதன்றோ?

என்னுள் வந்த
ஒளியை விட்டு
ஒதுங்கிப் போனவன்
என்னுருவில் வரும்
விழுதுகளை எல்லாம்
தீயில் வீழ்த்திவிட நாடுகிறான்
திட்டங்கள் பலவும் போடுகிறான்
நயமாய் நாடகம் ஆடுகிறான்

என்னுள் வந்த ஒளியை
நேசமுடன் நெஞ்சில்
ஏந்தி வருபவரைக் கண்டால்
எரிந்துவிடும் அச்சத்தில்
தூர தூரம் ஓடுகிறான்.

1 comment: