Wednesday, December 22, 2010

ஒரு வழி ஆகும் வழி

"ஜன்னலுக்கு உள்ளே" கட்டுரைக்கு வந்த முதல் பின்னூட்டத்தில் " 78 :33 ல் சம வயது கன்னியர் என்று தானே உள்ளது" என்று அப்துல் ரஹீம் மலிக் குறிப்பிட்டுள்ளார். நானோ  "முற்றிய முலை கொண்ட சம வயது கன்னியர்" என்று எழுதியிருந்தேன். மலிக் என் கட்டுரையைப் படித்துவிட்டு திருக்குர்ஆன் பிரதி ஒன்றை எடுத்து மேற்படி வசனத்தைத் திறந்து பார்த்துள்ளார் என்று தெரிகிறது. முற்றிய முலைகளைக் காணவில்லையே என்று அவர் பதறியிருக்கக் கூடும். அதைத்தான் பின்னூட்டத்தில் வெளிப்படுத்தியுள்ளார். ஜன்னலுக்கு உள்ளே இவ்வளவு குழப்பமா என்று எண்ணினேன்.

78 :33 என்று குறிப்பிட்டிருப்பது திருக்குரானின் 78 -ம் அத்தியாயமான சூரத்துன் நபா-வில் உள்ள 33 -ம் வசனத்தை. அரபி மூலத்தில் அந்த வசனம் "வ கவா-இப அத்ராபா" என்றுள்ளது. "கவா-இப்" என்னும் சொல்லும் "அத்ராபா" என்னும் சொல்லும் எதைக் குறிக்கின்றன என்று பார்த்தால் "முற்றிய முலை கொண்ட சம வயது கன்னியர்" என்று நான் அந்த வசனக் கருத்தை எழுதியிருப்பது ஏன் என்பது புரியும்.

"அத்ராபா" என்றால் சம வயதுள்ள கன்னியர் என்று பொருள். "கவா-இப்" என்பதற்கான அர்த்தம் என்ன என்பதுதான் பல மொழிபெயர்ப்பாளர்களுக்கு உள்ள சிக்கல். திருக்குரானை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பலர் இந்த வார்த்தையில் தடுமாறியிருக்கிறார்கள். சிலர் இதனை வெறுமனே "இணைகள்" (COMPANIONS ) என்று மொழிபெயர்த்துள்ளார்கள். அந்த வார்த்தையின் நேரடிப் பொருள் சார்ந்து அவர்கள் மொழிபெயர்க்கவில்லை. பின்வரும் உதாரணங்களைப் பார்க்க:
1 . "COMPANIONS OF EQUAL AGE " - மௌலான யூசுப் அலி.
2 . "AND YOUNG MAIDENS OF EQUAL AGE " - ஷேர் அலி.
3 . "AND THOSE SHOWING FRESHNESS OF YOUTH , EQUALS IN AGE " - எம்.எச்.ஷாகிர்.
4 . "AND MAIDENS FOR COMPANIONS " - முஹம்மத் மர்மதூக் பிக்தால்.
5 . "AND YOUTHFUL (COMPANIONS ), EQUAL IN AGE " - மௌலானா முஹம்மது அலி.
6 . "AND SPLENDID COMPANIONS WELL MATCHED " - முஹம்மது அசத்.
7 . "AND NUBILE MAIDENS OF SIMILAR AGE " - ஆயிஷா பெவ்லி
8 . "AND BUXOM MAIDENS OF MATCHING AGE " - முஹம்மத் தகீ உஸ்மானி.

தமிழில் மொழிபெயர்த்தவர்கள் மௌலானா யூசுப் அலியின் ஆங்கில மொழிபெயர்ப்பை முன்மாதிரியாக வைத்து மொழி பெயர்த்திருக்க வேண்டும் என்பது என் ஊகம். இவை "கவா-இப்" என்னும் சொல்லின் சரியான அல்லது வெளிப்படையான பொருளைத் தரவில்லை. சுற்றி வளைத்துச் சொல்கின்றன. சுற்றி வளைக்காமல் நேரடியாகப் பார்த்தால் "கவா-இப்" என்ன என்பது தெரியும். அப்படிப்பட்ட நேரடியான மொழிபெயர்ப்புக்களும் ஆங்கிலத்தில் உள்ளன.
1 . "AND FULL BREASTED MAIDENS OF EQUAL AGE " - அப்துல் மஜீத் தர்யபாதி.
2 . "AND FULL GROWN BREASTS AND SAME AGE / NOT AGING " - அஹமத் அலி.
3 . "MAIDENS WITH PAIRS - SHAPED BREASTS WHO ARE OF EQUAL AGE (TO THEIR SPOUSES )" -முஹம்மத் சர்வர்.
4 . "AND YOUNG FULL BREASTED (MATURE ) MAIDENS OF EQUAL AGE - முஹம்மத் அல்-ஹிலாளி மற்றும் முஹ்சின் காண்.

திருக்குரானை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடிகள் முஸ்லிம்கள் அல்லர். அவர்கள் கிறித்துவ சமயத்தினர். அவர்களும் "கவா-இப்" என்னும் சொல்லின் நேர்ப் பொருளையே கொடுத்துள்ளார்கள்.
1 . "AND MAIDENS WITH SWELLING BREASTS , LIKE OF AGE " - ஆர்தர் ஜான் ஆர்பரி.
2 . "AND GIRLS WITH SWELLING BREASTS AS THE SAME AGE OF THEMSELVES " - எட்வர்ட் ஹென்றி பால்மர்.
3 . "AND DAMSELS WITH SWELLING BREASTS , OF EQUAL AGE WITH THEMSELVES " - ஜார்ஜ் சேல்.
4 . "AND DAMSELS WITH SWELLING BREASTS , THEIR PEERS IN AGE " - ஜான் மெடோஸ் ராட்வெல்.

இந்த வசனத்திற்கு விரிவுரை எழுதியுள்ள மார்க்க அறிஞர்கள் பலரும் இந்த நேரடிப் பொருளையே குறிப்பிட்டுள்ளார்கள். அலீ இப்ன் அபி தல்ஹா அவர்கள் ஹழ்ரத் இப்ன் அப்பாஸ்(ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் விரிவுரை (தப்சீர் இப்ன் அப்பாஸ்), அத்-தபரீ, கதாதா, இப்ன் ஜைத், இப்ன் கசீர், அஸ்-சம்'அனீ போன்றோர் அவர்களுள் சிலர். இந்த விளக்கவுரைகளுக்குள் இப்போது நான் செல்லவில்லை. இதுவரை பார்த்த செய்திகளே போதுமானது என்று நம்புகிறேன்.

இந்த நேரடிப் பொருள் சிலருக்கு மனக் கிலேசத்தை உண்டாக்கலாம். திருக்குரானில் இப்படியொரு வருணனையை இறைவன் கூறுவானா? என்று அதிர்ச்சி அடையலாம். அதன் விளைவாக சுற்றி வளைத்து வேறு பொருள் கொடுத்து அமைதி காண அவர்கள் முயல்கிறார்கள். அப்படிப்பட்ட வாதங்களும் இஸ்லாமிய உலகில் புதிதல்ல. மௌலானா யூசுப் அலி போன்றவர்கள் திருக்குரானில் சொர்க்க இன்பங்கள் பற்றி வருகின்ற வசனங்களுக்கு ஆன்மிகக் குறியீட்டுப் பொருள் தந்து அர்த்தத்தை மாற்றுகிறார்கள் என்று அபு ஆமீனா பிலால் பிலிப்ஸ் குற்றம் சாட்டுகிறார். அவர் சொல்கிறார்: "இப்ன் அப்பாஸ் அவர்களின் விரிவுரைபடி 'அத்ராபன்' என்பதற்கு சம வயது என்பதுதான் அர்த்தம். ஆனால் 'கவா-இபா' என்பதற்கு 'இணை' (COMPANION ) என்று பொருளல்ல.கவா-இப் என்பது 'கா-இப்' என்பதன் பன்மை. அதன் பொருள் 'முலை எழுகின்ற பெண் அல்லது எழுந்த முலை கொண்ட பெண்' என்பதுதான். (E. W. Lane, Arabic English Lexicon, vol. 2, p. 2616). 'கவா-இப்' என்றால் திரட்சியான பெண்கள் என்று பொருள். (J. Milton Cowan, ed., A Dictionary of Modern Written Arabic, (Beirut: Libraire Du Liban, 1980), p. 831). கவா-இப் என்றால் நவாஹித் என்று இப்ன் அப்பாஸ் அவர்களும் முஜாஹித் அவர்களும் கூறியதாக இப்ன் கசீர் மேற்கோள் காட்டியுள்ளார். அதன் விளக்கத்தில் அவர் கூறுகிறார்: 'அவர்கள் கருத்துப்படி சொர்க்கக் கன்னியரின் ஸ்தனங்கள் உறுதியாகவும் தொய்வின்றியும் இருக்கும், ஏனெனில் அவர்கள் கன்னியராவர்." இந்த போனஸ் செய்தியும் போதுமானது என்று நம்புகிறேன்.

"ஜன்னலுக்கு உள்ளே" கட்டுரையில் நான் சொல்ல வந்த விஷயம் இதுவல்ல. தொழுகையில் இறைவனை நாம் எவ்வாறு அவதானிப்பது என்பது பற்றித்தான் அது பேசுகின்றது. திருக்குர்ஆன் வசனத்தை ஒதும்போதும் படைப்புக்கள்தான் நம் சிந்தனையில் வருகின்றனவே தவிர படைத்தவன் வருவதில்லையே என்பதைத்தான் அதில் சுட்டியிருந்தேன். வானம்-பூமி பற்றிய வசனம் வானத்தையும் பூமியையும் நம் சிந்தனையில் கொண்டு வரும். இறைவனைக் காட்டுகிறதா? என்ற போக்கில் நான் எழுதியிருந்த விசாரம்தான் அதன் சாரம். அதில் ஒரு எடுத்துக்காட்டுத்தான் சொர்க்கக் கன்னியர் பற்றிய வசனங்கள் ஓதப்படுவதும் அதனைப் பற்றி இஸ்லாமிய அறிஞர்களிடையே காணலாகும் கருத்துக்களும்.

இளைஞர்கள் உள்ள ஜமாஅத் தொழுகைகளில் ஹூருல் ஐன்கள் பற்றிய வசனங்களை ஓதாமல் இருப்பது நல்லது என்று இமாம் கஸ்ஸாலி(ரஹ்) அவர்கள் சொன்ன கருத்தையும் அதற்கு அவர்கள் சொன்ன காரணத்தையும் - அதாவது தவறான கற்பனையால் அவர்களின் மனம் சலனப்பட்டுத் தொழுகை பிசகிவிடும் என்பதையும் - எழுதியிருந்தேன். இதைப் படித்தபோதே எனக்குச் சில ஐயங்கள் தோன்றியதுண்டு. அப்படியானால் திருக்குர்ஆன் முழுமையாக ஓதப்படும் தராவீஹ் தொழுகையில் அத்தகைய வசனங்களை ஓதாமல் இருக்க முடியுமா? என்பது போன்ற கேள்விகள் என் மனதில் தோன்றின.

திருக்குர்ஆன் வசனங்களில் செம்பாகம் பிரபஞ்சத்தின் தோற்றம்-இயக்கம், வானங்கள், பூமி, சூரியன், நிலா, கோலங்கள், விண்மீன்கள், நதிகள், மலைகள், தோட்டங்கள், வயல்கள், விலங்குகள், மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை முறைகள் இத்தியாதி அத்தியாதி என்று படைப்புக்களைச் சொல்லித்தான் இறைவனின் ஆற்றல்களை விளக்குகின்றன. இறைவனை மட்டுமே நேரடியாகக் குறிக்கும்- அவனது உள்ளமை மற்றும் பண்புகளை நேரடியாகச் சுட்டும் வசனங்கள் மேற்படி பாணி வசனங்களுக்கு ஒரு முத்தாய்ப்பு வைத்தது போல சொல்லப்பட்டிருக்கும். படைப்புக்கள் பற்றிய வசனங்களைச் சிந்தனை செய்யும்போது மனக்கண்ணில் படைப்புக்கள்தான் தோன்றும். அவை இறைச் சிந்தனையை விட்டு மனதை திசை திருப்பிவிடாதா? என்ற கேள்வி தவிர்க்கமுடியாதது.

தொழுகையின் நோக்கம் என்ன என்பதை இறைவன் தான் வேதத்தில் மிகத் தெளிவாகக் கூறியுள்ளான்:
"நிச்சயமாக நானே அல்லாஹ்
எனக்கே அடிமை செய்க
என்னை நினைவு கூரவே
தொழுகையை நிலையாக்குக"
(20 : 14 )
தொழுகை என்பதே இறைவனை நினைவு கூர்வதற்குத்தான். வேறு நோக்கத்திற்காகத் தொழுகையை நிலைநிறுத்துவது இறைக் கட்டளைக்கு மற்றம் செய்வதாகும். அது நிலையான தொழுகையாக இருக்காது, ஊசலாட்டமுள்ளதாக இருக்கும். அதாவது திருமறை சொல்லியுள்ள இலக்கணப்படி அது தொழுகையே கிடையாது. ஆனால் திருமறையின் வசனகளைச் சிந்திப்பவருக்கு அவரின் மனதில் அது வருணிக்கும் படைப்புக்களின் நினைவு தோன்றாமல் இருப்பது எப்படி? தொழுகையில் திருக்குரானைத்தான் ஓத வேண்டும் என்பது சட்டம். கவ்வாலி படிக்க முடியாது. பஜனை பாட முடியாது. தொழுகை என்பது நாம ஜபமும் அல்ல. தொழுகையில் தன்னையே நினைவுகூர வேண்டும் என்று சொன்ன இறைவன், அந்தத் தொழுகையில் தான் வேதத்தைத்தான் ஓதவேண்டும் என்று சொல்லி நமக்குத் தந்த அந்த வேதத்தில் படைப்புக்களைப் பற்றி வருணித்துள்ளது என் என்று சிந்தித்தால் இந்த மூன்று புள்ளிகளும் இணையும் ஒரு புள்ளியில் இதற்கான விடையைக் கண்டு விடலாம். அதாவது இறைவனை நினைவு கூர்வதர்கான கருவியாகத்தான் சர்வகோடி படைப்புக்களையும் அவன் படைத்துள்ளான் என்பதுதான் அது!

வானங்கள்-பூமி, கால்நடைகள், பறவைகள், மரங்கள், ஹூருல் ஐன்கள் என்று திருமறை வசனங்கள் ஓதப்படும்போது மனக்கண்ணில் அவை தோன்றத்தான் செய்யும்.(ஹூருல் ஐன்களை நேரில் காணாதவருக்கு மனக்கண்ணில் என்ன உருவம் தோன்றும்? என் மாணவன் ஒருவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். பிரபல நடிகை ஒருத்தியின் பெயரைச் சொன்னான். நாசமாப் போச்சு!). அப்படித் தோன்றுகின்ற படைப்புக்களைக் கருவியாக வைத்துத்தான் இறைவனை நினைவுகூர வேண்டும்.



மௌலானா ரூமியின் தந்தையும் இப்னுல் அரபியின் சூஃபி வழியில் குருவாக இருந்தவருமான பஹாவுத்தீன் (ரஹ்) அவர்களின் நூல் ஒன்று உள்ளது. உண்மையில் அது அவர்களின் நாட்குறிப்புக்கள்தான். தினசரி வாழ்வில் நடைபெறுகின்ற சாதாரண நிகழ்ச்சிகளின் குறிப்புக்கள்தான். புதினாச் செடி வளர்ப்பது எப்படி என்பது போன்ற டிப்ஸ்கள்கூட அதில் உள்ளன! அந்த நூலுக்கு அவர் வைத்திருக்கும் தலைப்பு "ம'ஆரிஃப்" (மெய்ஞ்ஞானம்)! என்ன சொல்ல வருகிறார் என்று புரிகிறதா? ஆன்மிகம் - மெய்ஞ்ஞானம் - இறைதியானம் என்பதெல்லாம் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளுக்கு அப்பாற்பட்டதல்ல. படைப்புக்களில்தான் படைத்தவனின் தரிசனம்!

பஹாவுத்தீன் தன்னுடைய இந்த நூலைத்தான் மௌலானா ரூமியிடம் தந்தார்கள். ரூமியின் ஆளுமையை உருவாக்கியதில் இந்த நூலுக்கு முக்கியமான பங்கு உண்டு. ரூமியின் குரு ஷம்சுத்தீன் தப்ரேஸ் அவர்கள் ரூமியை முதன்முதலில் சந்தித்தபோது நீர்த்தடாகத்தினுள் போட்டு கொஞ்சமும் நனையாமல் மீண்டும் வெளியே எடுத்துத் தந்தது இந்த நூலைத்தான். இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அமெரிக்கப் பேராசிரியர்களான கோல்மன் பார்க்ஸ் மற்றும் ஜான் மொய்ன் ஆகியோர் இதற்கு "மூழ்கிய புத்தகம்" என்றே தலைப்பைக் கொடுத்துள்ளார்கள். ("THE DROWNED BOOK - ECSTATIC AND EARTHLY REFLECTIONS OF BAHAUDDIN THE FATHER OF RUMI ", Coleman  Barks  & John  Moyne ).



மூழ்கிய புத்தகத்திலிருந்து ஒரு குறிப்பு இது:
"தொழுகையின் நடுவே மீண்டும் நான் சொர்க்கக் கண்ணிகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன் -  பாதி கற்பூரம், பாதி குங்குமப்பூ தேகமும் தூய கஸ்தூரிக் கூந்தலும் கொண்டவர்கள் என்று சொல்லப்படும் அழகிகளை.
அதன்பின் நான் நினைவு கூர்ந்தேன், தலை பாவத்தில் நனைந்திருந்தபோதும் பாதங்கள் சத்தியத்தில் உறுதியாக ஊன்றியிருந்தது என்று சொல்லப்படும் ஒரு மனிதனைப் பற்றி.
பிறகு நான் இறைவனின் பண்புகளை நினைவு கூர்ந்தேன்: கருணை, தயாளம், மகத்துவம், ஞானம், அருள், அழகு. என்னுடைய கொள்ளலவிற்கும் அதற்கு அப்பாலும்கூட, இந்தப் பண்புகளில் சிலவற்றின் சுவையை நான் அறிந்துள்ளேன் என்பதை நினைத்து என் மனதில் நன்றியுணர்வு பெருகியது.
விரிப்புடன் கூடிய ஒரு நீண்ட மேஜையை நான் காண்கிறேன். அதன்மீது சக்திகளும் பண்புகளும் படைப்புக்களும் நம் இன்பங்களைப் பிரதிபலிப்பான போன்று மின்னும் நட்சத்திரங்களும் உள்ளன. நினைவில்லாமல் நான் இருக்கும் நிலையிலும்கூட இறைவன் என் ஆசைகளுக்குள்ளும் ஆன்மாவிற்குள்ளும் தான் பண்புகளின் சுவையைப் புகட்டுகிறான்.
இறைவன் சுவைக்கும் பல வழிகளில் நானும் ஒரு வழி ஆவதை உணர்கிறேன்!"




     

4 comments:

  1. சார், பின்னூட்டமெல்லாம் படிப்பதுண்டா :-‍)

    இது வரை அல்லது இன்னும்

    'க அன்னக தராஹ்' பற்றி அல்லது 'ஸிபத்தே இஹ்ஸான்' பற்றி சொல்லவே இல்லையே, இனி வருமோ.

    டிஸ்கி:
    என்னதான் சொல்லுங்க, முலை மிக மிக அற்புதமான படைப்புக்களில் ஒன்று :-)

    ReplyDelete
  2. முற்றிய முலை என்பது 'முற்றிப்போன' முலைகளை ஞாபகப் படுத்துவதால்
    'முழுமையான முலை' அல்லது சுருக்கமாக 'முழுமதி' என்பதைப் போல் 'முழுமுலை' என்று சொல்வது சரியாகுமா.

    ReplyDelete
  3. பதறவில்லை.கண்ணியமிக்க இரவில் இறங்கிய வேதம் இலசென்றும் முற்றியதென்றும் வகைப்பிரிக்க வேண்டுமா என்று கவலைப்பட்டேன்.1430 ஆண்டுகளுக்குப்பிறகும் நம்மிடம் முழுமையான மொழிப்பெயர்ப்பு இல்லாமல்போனது யார்
    குற்றம்? ஃபத்வா ஃபாக்டரிகள் தன் உற்பத்தித்திரனைக்கூட்டுமா?--நன்றியும் சலாமும்.

    ReplyDelete
  4. ///"ஜன்னலுக்கு உள்ளே" கட்டுரையில் நான் சொல்ல வந்த விஷயம் இதுவல்ல. தொழுகையில் இறைவனை நாம் எவ்வாறு அவதானிப்பது என்பது பற்றித்தான் அது பேசுகின்றது.///

    விருப்பம் இருப்பின் என் இந்த ஆக்கத்தை அருள் கூர்ந்து வாசியுங்களேன்
    http://classroom2007.blogspot.com
    23rd sep2011
    "பேராசிரியன் ஆன பிறகு ஆரம்பப் பள்ளிகளை அழிக்கச் சொல்வார்களா என்ன?"

    ReplyDelete