Saturday, October 23, 2010

பறவை-பாஷை.

ப்ளாக் உருவாக்கி எழுத ஆரம்பித்தவுடன் 'கையோடு அப்படியே ட்வீட்டரும் போட்டுடுங்க' என்று சிலர் சொன்னதைக் கேட்டு ஜோதியில் ஐக்கியமாகலாம் என்று நினைத்தேன். இது தகவல் தொடர்பில் ஒரு மாயாஜாலக் காலம். ஆர்குட், பேஸ்புக், ட்வீட்டர் போன்ற GROUP COMMUNICATION வலைகளில் உலகின் இளைஞர்கள் அனைவருமே, லிட்டரலி அனைவருமே சிக்கியிருக்கிறார்கள். நானும் முக நூலில் (FACE BOOK) ஒரு பக்கத்தைப் பட்டா போட்டேன். எங்கள் வீட்டுப் பசங்க மணிக்கணக்கில் அதில் மொக்கை போடுவதுபோல் என்னால் முடியாது என்பதைச் சீக்கிரமே தெரிந்து கொண்டேன். சாரு நிவேதிதா வெப்சைட்டையே பேஸ்புக் போலத்தான் நடத்தி வருகிறார். கொஞ்சம் இழுவையாக மொக்கை போடுபவர்களுக்கு இந்த ஏரியா சுத்தமாக ஒத்துவராது. ஜெயமோகன் மாதிரி ஆள் என்றால் லாகின் செய்வதே பாபம்! ஏற்கனவே LECTURER என்பதற்கு 'மொக்கையன்' என்று ஒரு குறியீட்டு மொழிபெயர்ப்பு உள்ளது. எதுக்கு தேவையில்லாம ரிஸ்க் எடுத்துக்கிட்டு என்று ஜகா வாங்கிக்கொண்டேன். (அடடே! "ஜகா வாங்கிக்கொண்டேன்" என்னும் டைட்டிலை யாராவது துணை இயக்குநர்கள் கவனிக்கலாமே?)



இந்த வலைமனைகள் (வலை டீ கடைகள்? WEBCAFE !) விடலைகளின் ராஜ்ஜியம். இதில் ஒரு வரி வீச்சுகள்தான் அதிகம். என் மச்சான் ஒருவன் பரீட்சைக்குப் படித்துக்கொண்டே சாட்டடிக்கிறான். "F for ?" என்று கேட்டால் ஒரு பத்து வார்த்தைகளாவது சொல்வார்கள். FASHION ,FUN , F FOR 4X இப்படி. (FATHER , FUND என்றெல்லாம் எதிர்பார்த்தால் நீங்கள் ஒரு ஏலியன்!) அந்தப் பத்து வார்த்தைகளில் நிச்சயம் FACEBOOK என்பதும் இருக்கும். BOOKREADING ஒரு நல்ல பழக்கம். அதனால்தான் பலமணிநேரம் FACEBOOK படிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
ஒரு ஹிந்தித் திரைப்பாடல் உண்டு. சோடா-புட்டிக் கண்ணாடி போட்ட தன் காதலனைப் பார்த்துக் காதலி பாடுவாள்: "ஏராளமான நூல்கள் படித்திருக்கலாம் நீ / கொஞ்சம் இந்த முகத்தையும் படித்துப் பார்!" இந்த வரிகளை நான் சூபித்துவப் பின்னணியில் அர்த்தம் எடுத்து / கொடுத்து ரசித்திருக்கிறேன். இப்போது அதை "FACEBOOK " என்றும் மறுவாசிப்பு செய்ய முடிகிறது.



அக்கவ்ன்ட் திறந்த சில நிமிடங்களிலேயே பல ஈ-மெயில்கள் வந்து மொய்க்கத் தொடங்கிவிட்டன. ஜங்க் மெயில்கள் மொய்ப்பதை ஈ மொயப்பதைப் போல் அருவருப்பவன் நான். எல்லாமே அழைப்பு அஞ்சல்கள், தன்னை என் நண்பன் / நண்பி என்று அறிவித்துக்கொண்டு வந்தவை. திடீரென்று உலக நாடுகள் ஒவ்வொன்றிலும் ஒன்னேமுக்கால் டஜன் நண்பர்கள் எனக்குக் கிடைத்துவிட்டார்கள்! அடப்பாவிகளா, நான் காலேஜில் படித்தபோது எனக்கு நான்கு நண்பர்கள்தான் இருந்தார்கள். நாங்கள் நாடோடிகளைப் போல் திரிந்துகொண்டிருப்போம். 



அட்ரஸ் என்பதைத் தமிழில் முகவரி என்றுதான் சொல்கிறோம். அதாவது முகம்தான் ஒருவரின் முதல் அடையாளம். மற்றதெல்லாம் பிறகுதான். இந்த பேஸ்புக்கை ஒரு டைனமிக் அட்ரஸ் புத்தகம் என்று சொல்லலாம். முகமே முகவரியாக உள்ள புத்தகம். அது தொடர்ந்து நம்முடன் அரட்டை அடிக்கும் புத்தகம். ஆனால் சில பேர் தங்களின் உண்மையான முகத்தைக் காட்டாமால் வேறு படங்களைப் போட்டுவைத்திருப்பார்கள். பள்ளி மாணவன்  ஒருவன் சிம்பு படத்தைப்போட்டு "நான் 99 % கெட்டவன்" என்று எழுதியிருந்தான். "அப்போ நீ 1 % நல்லவனா? இதெல்லாம் ரொம்ப ஓவர்டா மாப்ள" என்று அதற்கு எதிர்வினை அனுப்பினோம்.

என் உறவினர்களில் யாருமே தமிழில் டைப் செய்வதில்லை. நான் மட்டும் தமிழில் மின்னஞ்சல் அனுப்பிக்கொண்டிருக்கிறேன். பேஸ்புக்கில் தமிழை ஆங்கிலத்திலேயே அடிக்கிறார்கள். இவர்கள் ஒலிபெயர்ப்பெல்லாம் படித்தவர்கள் அல்ல. ஒரு மாதிரி அடிப்பார்கள். ஒரு மாதிரி நாமாகப் புரிந்துகொள்ள வேண்டும். என் மச்சான் எடுத்த ஒரு புகைப்படத்திற்கு ஒருவன் இப்படி காமென்ட் அடித்திருந்தான்: POTTO ATUKKUMPOTHU POWER KATAYITUCHUNNU NINAKKIREN ...
இதை நான் முதலில் 'போட்டு எடுக்கும்போது கரண்ட் கட்டாயிடுச்சு....' என்று வாசிக்கத் தொடங்கிக் குழம்பினேன். வாசிக்க வாசிக்கப் பழகிவிடும் என்றார்கள். நெட் தமிழும் நாப்பழக்கம்தான் அவ்வையாரே!

சில அச்சுப் பிழைகளும் குழப்பக்கூடும். "SHE IS FINE ..." என்று இருக்கவேண்டியது "SHE IS FIRE ..." என்று இருந்தது. தட்டியதில் ஏற்பட்ட தவறு!

"UNION IS STRENGTH " என்று வந்த சீரியஸான மெஸ்ஸேஜுக்கு "ONION IS STRENGTH " என்று ஒரு நக்கலான பதிலும் கீழே இருந்தது. யூனியனுக்கான சக்தியை ஆனியன் தரவல்லது என்னும் சூட்சுமம் அறிந்தவன்தான் இதை அனுப்பியிருக்க வேண்டும்! வெங்காயம்...!    

'சாட்டிங்' வட்டாரத்தின் உள்மொழி (JARGON ) என்று சில வார்த்தைகள் உள்ளன. அந்தக் கலைச்சொற்கள் மிகவும் கலக்கலாக இருப்பதைக் காணலாம். கூலிங்கிளாசும் பாதி திறந்த சட்டையுமாக ஒருவன் தன் படத்தைப் போட்டு "THALA ROCKS ..." என்று டைப் அடித்திருந்தான். ராக்ஸ் என்னும் சொல்லின் அர்த்தபாவங்களை யோசித்தேன். இது ROCK MUSIC பின்னணியில் உருவான சொல்லாடல் என்று நினைக்கிறேன். இன்னொன்றும் தோன்றியது. தல பார்வையாலேயே பாறை உடைக்கிறாராம்! 
 "வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா - அங்கொர்
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி ஆனது வேலவா!"
என்று முருகனைப் பற்றிப் பாடியிருக்கிறார். இதை "MURUGAN ROCKS ... " என்று கூறலாம் போலும். ஆனால் எனக்குத் தெரிந்த வரையில் "THALA ROCKS ..." என்று போட்ட மேற்படித் தருதல தினமும் ஏழு மணிக்கு மேல் கடலைதான் உடைக்கிறது. எனவே "THALA NUTS ..." என்று பதில் அனுப்பினேன்!



"buddy ur cool!", "what's up there buddy?", "buddy reelly wanna stop the thing..." என்பன போன்ற உரையாடல்களை அடிக்கடி காணலாம். BUDDY என்றால் FRIEND . இப்படிப் பல 'பட்டி'கள் சாட்டடித்துக் கொண்டே இருக்கிறார்கள். 'பட்டி'களுக்கென்று வலைமனைகள் தனியாகவும் உள்ளன. 'பட்டி' மன்றங்கள்! "BUD "  என்றால் மலர் மொக்கு என்று பொருள். மொக்கை போடுபவனை BUDDY என்று கூறுவது அப்படிப்பார்த்தாலும் சரிதான்! இதற்கு இணையாக dude , crone , cobber , chum போன்ற சொற்களும் உள்ளன.
ஆனால் இந்தச் சொற்களையெல்லாம் அலேக்காக அள்ளிக் கடாசிவிடுகிறது ஒரு சொல். "baby !" ஆண் பெண் பேதமில்லாமல் ஒருவரை ஒருவர் இப்படி அழைத்துக்கொள்கிறார்கள். காதலர்கள், நண்பர்கள்... ஏன், எதிரியைக் கூட இப்படி அன்பொழுக அழைக்கிறார்கள்! பாப் பாடல்களில் இந்தச் சொல்லாடல் ஏறத்தாழ எல்லாப் பாடல்களிலும் வருகிறது.

"So baby, be mine.." - மைக்கேல் ஜாக்சன்
"This is not a love song, bye bye baby.." - மடோனா
"Baby hold me and never leave me
This love is my oxygen" - ஸ்பைஸ் கேள்ஸ் (காரப்பொடிச் சிறுமிகள்)
"Baby that's why you captured my heart" - பாக் ஸ்ட்ரீட் பாய்ஸ் (பின்தெரு பசங்க) 
"Hit me, baby, one more time" - பிரிட்னி ஸ்பியர்ஸ்

சட்டி சூடேறியவுடன் பொரிந்து தத்திக் குதிக்கும் சோளப்பொரி போன்று தகிக்கும் இசையைக் கேட்டபடி ரசிகர்கள் துள்ளிக் குத்தித்தாடுவதால் அது 'பாப்' இசை எனப்படுகிறது. It makes you pop out of yourself! இதுதான் ECSTASY - பேரின்பம் என்னும் சொல்லின் அர்த்தம்! தமிழில் சங்க காலத்திலேயே பாப் இசை வந்துவிட்டது. கலிப்பாவின் ஓசை "துள்ளல்" ஓசைதான்! இந்த "பேபி" என்னும் சொல்லாடல் தமிழ் நாட்டுப்புற இசையில் இருக்கிறது. காதலியை "புள்ள" என்று அழைப்பது "பேபி" என்று சொல்வதுதானே? எருமைக் கடா போல் வளர்ந்த ஒருவனை "பேபி" என்று கொஞ்சுவதெல்லாம் பார்க்க சகிக்கல என்று தோன்றுவது வாஸ்தவம்தான். ஆனால் உளவியல் அறிஞர்களைக் கேட்டால் சொல்லுவார்கள், குழந்தையாக அரவணைக்கப்பட வேண்டும் என்னும் ஏக்கம் வளர்ந்தவர்களின் ஆழ்மனதில் இருக்கிறது. அதனால்தானே "என்னைத் தாலாட்ட வருவாளா?" என்பது போன்ற பாடல்கள் இன்ஸ்டன்ட் ஹிட் ஆகின்றன! "குழந்தைகளைப் போல் ஆகாதவரை சொர்க்கத்திற்குள் நுழைய முடியாது" என்று ஏசு நாதரும் சொல்லிக்கீறாரு.

அமெரிக்க ஸ்லாங்குகளைத்  தமிழில் மிக இலகுவாக மாற்றிப் பார்க்க முடிவதும் வியப்பாகத்தான் இருக்கிறது.
 "buddy im bit a sort of hang over from d stuff ynite" என்று புதுயார்க்கில் ஒருவன் டைப் செய்வதை "நேத்து அட்ச்ச சரக்கோட மப்பே இன்னம் எறங்கல மச்சி" என்று நியூசேரியில் ஒருவன் பேசுவதாக மொழிபெயர்க்கலாம். யாதும் ஊரே யாவரும் கேளிர்!
"Hi buddy, gonna u come 2 play? v gonna rock d harvard dudes"
"nope, i'm stuck o d party all nite, bad stuff u c"
என்னும் CHAT உரையாடலை,
"வாராயோ என்றனள் தோழீ ஆடுகளம் 
பாறை உடைப்பதொரு பூமுகை யன்ன  
அதனெதிர் வாரேன் என்றனன் யானே 
நெருநல் மடுத்த தேறலின் 
ஆகம் கடுப்ப ஆற்றா தேனே"
என்று சங்க இலக்கிய ஸ்டைலிலும் கூறலாம்!

இதெல்லாம் லைட்டான சொல்லாடல்கள்தான். இனிமேல்தான் வெய்ட்டான வார்த்தைகளைப் பார்க்கப்போகிறோம். நெட்டரட்டையின் (NET CHAT ) தத்துவப் பின்னணி இதில்தான் நமக்கு விளங்கப் போகிறது. பெருவியப்பின் விளிம்பு வரை அக எழுச்சி கொள்ளும் ஒரு 'பட்டி' அந்த அதீத நிலையில் உதிர்க்கும் மந்திரம் "HOLY COW !" என்பதாகும். "புனிதப் பசு" என்று தமிழில் கூறலாம். பசு இந்துக்களுக்குப் புனிதமானது. "கோமாதா எங்கள் குலமாதா" என்று புகழப்படுவது. பால் அமிர்தம் எனில் கோமியம் தீர்த்தம்! ஆனால், அமெரிக்க - ஐரோப்பிய 'பட்டி'களுக்கு பசு எப்படிப் புனிதம் ஆனது? 



கிருத்துவர்களின் புனித நூலான பைபிளின் பழைய ஏற்பாட்டில் 'BOOK OF NUMBERS " என்னும் பகுதியில் 'புனிதப்  பசு' பற்றிய செய்தி வருகிறது. இந்தப் பகுதி யூதர்களின் புனித நூலான "தோரா"விழும் உள்ளது. "கடவுள் யூதர்களைப் பார்த்துக் கட்டளையிட்டார், வடுவோ குறையோ இல்லாத, நுகத்தடி பட்டிராத ஒரு செந்நிறப் பசுவை அவர்கள் உம்மிடம் கொண்டு வரவேண்டும்." என்பதே அந்த முன்னறிவிப்பு. அப்படியொரு அதிசயப் பசுவுக்காக யூதர்கள் 2500 வருடங்களாகக் காத்திருக்கிறார்கள்! இதுவே "HOLY COW !" என்பதன் பின்னணி.

சொதப்பலின் விளிம்புக்குத் தள்ளப்படும் ஒரு 'பட்டி' உதிர்க்கும் மந்திரச் சொல் "HOLY SHIT " என்பதாகும். இதை முன்பெல்லாம் "BULL SHIT " என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். புனிதப் பசுவின் சாணம் என்பதால் இப்போது அதை "HOLY SHIT " என்று சொல்கிறார்கள் எனலாம். "HOLY CRAP " என்னும் மாற்றுச் சொல்லும் உண்டு. இரண்டுக்கும் அர்த்தம் ஒன்றுதான்: "புனித மலம்!" மலத்தில் என்ன புனிதத் தன்மை என்கிறீர்களா? இந்த சொல்லாடல்களின் சமயப் பின்னணி புரிந்தால் இப்படிக் கேட்கமாட்டீர்கள். எகிப்திய புராண மரபில் தலைமைக் கடவுளாகக் கருதப்பட்ட சூரியக் கடவுள் "ரா"வின் நேரடிப் பிரதிநிதி என்று எகிப்தியர்கள் மலவண்டைத்தான் கருதினார்கள். மலத்தில் தன் முட்டைகளை இட்டு உருட்டிக்கொண்டு ஓடும் மலவண்டினை (SCARAB BEETLE / DUNG BEETLE ) 'ரா'வின் ஒரு வடிவமான 'கெபரா' என்னும் தெய்வத்தின் குறியீடாகக் கண்டார்கள். 'கெபரா' (KHEPERA ) என்றால் "வெளிப்பாடு" என்று பொருள். பொந்திலிருந்து வெளிப்படுவாதல் இந்தப் பெயர். எனவே மலவண்டுகளை "ரா"வின் புனித வெளிப்பாடு என்று எகிப்தியர்கள் வணங்கினார்கள்! 'கெபரா' சூரியனை வானில் உருட்டிச் சென்று மேற்கில் சாய்க்கிறான் என்பது தொன்மம். அதே போல் மலவண்டு மலப்பந்துகளை உருட்டிச் செல்வதால் அதை 'அழகியல்' பார்வையுடன் இப்படியொரு குறியீடு ஆக்கிவிட்டார்கள்! அதைத்தான் "HOLY SHIT !" என்னும் மந்திரம் குறிக்கிறது!

கிழக்கில் நாம் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் கண்டுபிடித்துள்ளோம். மேற்கில் அவர்கள் HOLY CRAP , HOLY SHIT என்று இரண்டு மந்திரங்களைக் கண்டுபிடித்துள்ளார்கள்!

சாட்டிங் வலைமனைகளில் ஒரு மணி நேரம் உரையாடிக்கொண்டிருந்தால் அது ஒரு மாயச் சுழல் என்பதை உணர்ந்துகொள்ளலாம். உள்ளே இழுக்கப்பட்டால் கொஞ்சம் PSYCHEDELIC FEELING தட்டுகிறது. பெங்களூரு வணிகச் சாலையில் இரவில் நடந்து செல்வதுபோல. மங்கோலியர்கள், அமெரிக்கர்கள், நீக்ரோக்கள், ஐரோப்பியர்கள், வட இந்தியர்கள், தென்னிந்தியர்கள் என்று உலகின் அனைத்து இன அடையாளங்களும் தென்படும் ஒருவித 'ராஸ லீலை' அது. கண்ணன் இல்லாத ராஸ லீலை!

மில்லியன்த் எண்ணிக்கையில் மனங்கள் உறவாடிக்கொண்டிருக்கும் இந்த வலைத்தளங்கள் என்னதான் செய்கின்றன? உலகளாவிய பொது உளவியல் ஒன்றை உருவாக்க அவை எத்தனிக்கின்றன என்கிறார் டான் பிரவ்ன். அவருடைய "THE LOST SYMBOL " நாவலில் ஒரு காட்சியில், 'நோயடிக்ஸ்' அறிவியலில் பரிசோதனைகள் செய்த கேத்தரின், பேராசிரியர் ரொபர்ட் லங்க்டனிடம் கூறுவார்,"பிரபஞ்சப் பிரக்ஞை என்னும் கருத்து ஏதோ புதிய கால அப்பாலைத் தத்துவம் அல்ல. அது ஒரு பச்சை அறிவியல் எதார்த்தம். அதனைக் கட்டுக்குள் கொண்டுவருவதில் இந்த உலகையே மாற்றும் சாத்தியம் உள்ளது. நோயடிக் அறிவியலின் அடிக்கருத்து இதுதான். இன்னும் என்ன, அது இப்போதே நடந்துகொண்டுள்ளது. உன்னைச் சுற்றி அதை நீ உணர முடியும். சாத்தியம் என்று நாம் கற்பனை செய்திராத வழிகளில் தொழில்நுட்பம் நம்மை இணைத்துக்கொண்டு வருகிறது: ட்வீட்டர், கூகிள், விக்கிபீடியா மற்றும் பிற - எல்லாமே சேர்ந்து பின்னிப் பிணைந்த மனங்களின் ஒரு வலையை உருவாக்குகின்றன. நான் உனக்கு உறுதியளிக்கிறேன், நான் என் சோதனை முடிவுகளைப் பதிப்பித்தவுடன், டிவிட்டராட்டிகள் 'நோயடிக்ஸ் படிக்கலாம்..' என்று சொல்லும் ட்வீட்டுகளை அனுப்புவார்கள். உடனே இந்தத் துறை மீதான ஆர்வம் அதீதமாக வளர்ந்துவிடும்."   

உண்மையில், இலக்கிய வாதிகள் இப்போது பேசுகின்ற கட்டுடைப்பு, பின்-நவீனத்துவம் போன்றவற்றை இவற்றில் காணமுடியும். ஒரு மையமும் இன்றி விளிம்புகளும் இன்றி இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு ANONYMOUS இயக்கம் இது. அதனால்தான் "கண்ணன் இல்லாத ராசலீலை" என்று சொன்னேன். டான் பிரவ்ன் சொல்வதுபோல் ஒரு "பிரபஞ்சப் பொதுப் பிரக்ஞை" இதன் மூலம் உருவாகிவரும் என்றால் ராசலீலையின் கண்ணன் அந்தப் பிரக்ஞைதான். இப்போது அதற்கான BASE WORK இந்த வலைமனைகளில் நடந்து வருவதாகக் கூறலாம். ஆனால், பேருண்மைகளை உள்வாங்கக் கூடிய பக்குவத்தில்  ஒரு கூட்டுப் பிரக்ஞையை (COLLECTIVE CONSCIOUSNESS ) அது உருவாக்குமா என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இல்லை. அது கிருஷ்ணன் போன்ற ஆளுமையின் பிரக்ஞை நிலையின் ஒரு பரிமாணத்தை மட்டுமே எட்டக்கூடியதாக இருக்க முடியும். இப்போதே, சாட்டிங் பட்டிகளின் உலகில் காணலாகும் அம்சங்களுக்கு, சாரு சொல்வது போல், கலகம்-காதல்-இசை போன்ற அம்சங்களுக்கு, ஒரு ஆன்மிக ஆளுமையைக் கூற வேண்டுமென்றால் கிருஷ்ணனைத்தான் சொல்லமுடியும். எதிர்மறை அம்சங்கள் கச்சிதமாக இணையும் ஒரு ஆளுமை அவர்.(ஓஷோவின் "KRISHNA  - THE MAN AND HIS PHILOSOPHY " என்னும் நூலைப் படித்துப்பார்த்தால் தெரியும். இந்திரா பார்த்தசாரதியின் 'கிருஷ்ணா கிருஷ்ணா' நாவல் கிருஷ்ணனின் ஆளுமையை நவீன காலச் சூழலில் பொருத்திக் காட்டுகிறது.)

'உன்னைப்போல் ஒருவன்' படத்தில் ஒரு காட்சி. பெயர் தெரியாத ஒரு 'சராசரி மனிதன்' ஐ.ஜி.பி-யின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறான். அவன் யார் என்று கண்டுபிடிக்க ஐ.ஜி.பி அலுவலகத்தின் கணிப்பொறி மண்டைகள் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. HACKING EXPERT - ஐ அழைக்க வேண்டும் என்று சொன்னவுடன், "டாக் டு ஐ.ஐ.டி" என்கிறார் ஐ.ஜி.பி. சிறிது நேரத்தில் ஐ.ஐ.டி-யில் பயிலும் ஒரு மாணவன் வருகிறான். அவன் ஒரு HACKER. விஞ்ஞானி போன்ற தோற்றத்தில் ஒருவரை எதிர்பார்த்த ஐ.ஜி.பி-க்கு ஜீன்சும் டி-ஷர்ட்டும் ஸ்பைக் முடியுமாக பதினெட்டு வயதில் ஒரு முள்ளம்பன்றித் தலையணைப் பார்த்ததும் கொஞ்சம் வியப்பாக இருக்கும். உண்மைதான், நாற்பதைக் கடந்த பேராசிரியர்களுக்கெல்லாம் HACKING தியரிகூடத் தெரியாது. HACKING என்றால் கணிப்பொறி உலகில் கன்னம் வைத்துத் திருடுவது என்று சொல்லலாம். அல்லது, என்னவாவது செய்து தடைகளை மீறி உள்ளே நுழைந்து விலக்கப்பட்ட கனியைப் புசிப்பது. ஆதித்தகப்பன் ஆதாம் செய்த வேலைதான். அந்த உளவியல் பிள்ளைகளிடமும் இருக்கும் அல்லவா? HACKERS அந்த விஷயத்தில் பழம் தின்று கொட்டை போடுபவர்கள்! தீராத விளையாட்டுப் பிள்ளைகள்!



சாட்டிங் வலைமனைகளில் எனக்கு மிகவும் பிடித்த பெயர் "TWITTER " - ட்வீட்டர். "TWEET " - ட்வீட் என்றால் பறவையின் சத்தம் என்று அர்த்தம். சிட்டுக்குருவி போன்ற சிறிய பறவைகளின் சிக்னல் சத்தங்கள். அப்படிப் பல கோடி சிட்டுக்குருவிகள் ட்வீட்டிக் கொண்டிருக்கும் ஒரு 'சிம்பொனி' இது. ஆன்மிகத்தில் சங்கேத பாஷையைப் 'பறவையின் குரல்' என்று கூறுவார்கள். சூபி ஞானி அத்தார் "பறவைகளின் பரிபாஷை" (MANTIQ ul -TAYR ) என்று ஒரு காவியமே எழுதியிருக்கிறார். முப்பது பறவைகள் தங்களின் ராஜ பறவையைத் தேடிக்கொண்டு ஏழு பள்ளத்தாக்குகள் கடந்து ஒரு சிகரத்திற்குச் செல்கின்றன. எங்கு தமது கூட்டுப் பிரக்ஞையாகவே அந்த ராஜ பறவையைக் கண்டுகொள்கின்றன என்பது அதன் சாரம்.



மவ்லானா ரூமி எழுதிய ஒரு சூபிக் கதை ஞானிகள் பறவைகளைப் போல் இருப்பார்கள் என்று கூறுகிறது: "அரபிகளின் அரசன் இம்ரவுல் கைஸ்
அழகன், காதல் பாடல்கள்  நிரம்பிய கவிஞன். பெண்கள் அவனை ஏக்கத்துடன் காதலித்தார்கள். எல்லோரும் அவனை விரும்பினார்கள். ஆனால் ஓர் இரவு அவனுக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்று அவனை முழுமையாக மாற்றிவிட்டது. அரசையும் தன் குடும்பத்தையும் துறந்தான்.சூபித் துறவிகளின் கம்பளி ஆடையை அணிந்துகொண்டு ஒரு நிலத்திலிருந்து இன்னொன்றுக்கு, ஒரு பருவ காலத்திலிருந்து இன்னொன்றுக்கு என்று அலைந்துகொண்டிருந்தான். அவனது அரச சுயத்தைக் காதல் கரைத்துவிட்டது! தபூக் நாட்டிற்குச் சென்று செங்கல் சூளையில் வேளை  செய்தான். தபூக் நாட்டின் மன்னனிடம் இம்ரவுல் கைஸ் பற்றிக் கூறப்பட்டது. அவனைச் சந்திக்க அன்றிரவே அவர் சென்றார்.
'அரபிகளின் அரசரே! இக்காலத்தின் அழகிய யூசுப் நீங்களே! இரண்டு ராஜியங்களின் மன்னர் நீங்கள். தேசங்களால் ஆனது ஒன்று. பெண்களின் அழகால் ஆனது மற்றொன்று. என்னுடன் நீங்கள் தங்கியிருக்கச் சம்மதித்தால் அது எனக்குக் கண்ணியமாகும். நீங்கள் ராஜியங்களைத் துறக்கிறீர்கள், ஏனென்றால், அவற்றைவிட மேலானதை ஆசிக்கிறீர்கள்!'
இவ்வாறு அந்த மன்னன் இம்ரவுல் கையசைப் புகழ்ந்துகொண்டும் இறைவனைப் பற்றிய தத்துவங்களை உளறிக்கொண்டும் இருந்தான். ஒன்றுமே பேசாமல் இருந்த இம்ரவுல் கைஸ் சட்டென்று அவன் பக்கம் சிந்து அவன் காதில் ஏதோ சொன்னான். அந்தக் கணத்தில் அந்த இரண்டாம் அரசனும் ஒரு சித்தனாகி விட்டான்! கையோடு கை கோர்த்தபடி அவர்கள் அந்த நாட்டைவிட்டுச் சென்றார்கள். ராஜ உடைகள் இல்லை. கோடடை இல்லை, கொடியும் இல்லை!
காதல் இதைத்தான் செய்கிறது, தொடர்ந்து செய்கிறது.       
பெரியவர்களுக்குப் பாலைப் போன்றும், சிறியவர்களுக்குத் தேனைப் போன்றும் அது சுவைக்கிறது.
காதலே கடைசி முப்பது எடை. அதை வைத்தவுடன் படகு கவிழ்ந்துபோகும்.
அவ்விருவரும் தானியங்களைக் கொத்தித் தின்னும் பறவைகளாகச் சீன நாட்டில் திரிந்தார்கள். தாம் அறிந்த ரகசியத்தின் அபாயத்தால் அரிதாகவே பேசினார்கள்.
மகிழ்ச்சியிலோ அல்லது எரிச்சலாகவோ
அந்தக் காதல் ரகசியம் பேசப்படுமானால்
நூறாயிரம் தலைகளை ஒரே வீச்சில் வெட்டும்.
இந்த ரகசியத்தின் வாள் தோன்றும்போது 
உயிரின் புல்வெளியில் காதலின் சிங்கம் நடக்கிறது.
உலக அதிகாரம் உண்மையில் வேண்டுவதெல்லாம் 
இந்த பலகீனத்தைதான்!
எனவே அந்த அரசர்கள் கிசுகிசு என்று பேசிக்கொண்டார்கள், எச்சரிக்கையாக.
என்ன பேசினார்கள் என்பதை இறைவன்தான் அறிவான்.
சொல்ல முடியாத சொற்கள் அவை.
பறவை-பாஷை.
ஆனால் சிலர் அதை பாவனை செய்தார்கள்,
சில பறவைச் சத்தங்களைக் கற்றுக்கொண்டார்கள்,
மதிப்புடையவர்கள் ஆனார்கள்."











  

3 comments:

  1. "....ஜெயமோகன் மாதிரி ஆள் என்றால் லாகின் செய்வதே பாவம்"...இதுக்கு என்ன அர்த்தம்? உண்மையாவே புரியல!!

    ReplyDelete
  2. முதன் முறையாக உங்கள் பதிவுகள் படிக்குறேன்..... சொல்லவே வார்த்தையில்லை... இண்டைக்கே எல்லா பதிவையும் படிச்சு முடிக்கணும் போல இருக்கு..... அப்படி ஒரு எழுத்து நடை.........


    உங்க ப்ளாக் ரொம்ப அழகா இருக்கு. வாழ்த்துக்கள்..........


    இந்த பக்கம் பிரபலம் அடைய நானும் என்னால் ஆன உதவிகள் செய்வேன்..........

    ReplyDelete
  3. அப்பா என்ன வீச்சு சார்!உங்கள் அகல நீளம் காணவே முடியாது.

    ReplyDelete