Monday, October 10, 2011

போதிதர்மா – ஏழாம் அறிவு


’போதிதர்மா’… புத்தரின் பெயரைவிட மிகக் கவர்ச்சிகரமானது என்று நான் உணரும் பெயர். சில அம்சங்களில் புத்தரை விட சுவாரஸ்யமான மனிதராக நான் உணரும் ஞானி. ’ஜென்’ நெறிக்கு சீன மண்ணில் வித்திட்ட இவரை ஓர் ஆன்மிக ஆளுமை என்றுதான் நான் அறிந்து வைத்திருந்தேன். ஆனால் அவர் ‘SIX PACK’ தேகத்துடன் காற்றில் சுற்றிச் சுழன்று டைவ் அடித்து குங்ஃபூ போடுவார் என்று என் கனவிலும் நான் நினைத்ததில்லை.

 
’ஏழாம் அறிவு’ திரைப்படம் உருவான கதை என்றொரு நிகழ்ச்சியை இரு தினங்களுக்கு முன் தொலைக்காட்சியில் பார்த்த போது அதில் போதிதர்மா ஒரு குங்ஃபூ வீரராக இயங்கிக்கொண்டிருந்தார். போதிதர்மாவைப் பற்றி ஒரு திரைப்படமா? என்று முதலில் ஒரு பரவச உணர்வு ஏற்பட்டாலும், படத்தை எடுப்பவர்கள் தமிழரக்ள் என்பது வயிற்றில் புளியைக் கரைத்தது. தொலைந்து போன சோழ மன்னனைக் காட்டுகிறேன் பேர்வழி என்று ‘ஆயிரத்தில் ஒருவன்’ வந்து சொதப்பியதும், குலோத்துங்க சோழன் காலத்து சிதம்பரத்தை வைத்துப் பத்து நிமிடங்கள் ’ஷோ’ காட்டிவிட்டு அத்துடன் வரலாற்றை முடித்துக் கொண்ட தசாவதாரமும் நினைவில் வந்து பயமுறுத்தின. இந்தப் படத்திலும் போதிதர்மரின் கதை முதல் பத்து நிமிடங்கள் மட்டுமே இடம் பெறுகிறது என்று சொன்னார்கள். ஆக, இது போதிதர்மரைப் பற்றிய வரலாற்றுப் படம் அல்ல. அவரின் வரலாற்றில் ஒரு பகுதியை மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் படம். ஸ்டார் ஹோட்டல்களில் ‘மெய்ன் மெனு’வுக்கு முன் ‘ஸ்டார்ட்டர்ஸ்’ என்ற பெயரில் ஸ்ப்ரிங் ரோல்ஸ், சிக்கன் சூப் போன்ற சில ஐட்டங்கள் வைக்கிறார்களே, அதுபோல் போதிதர்மர் வரலாறு இந்தப் படத்தின் கதைக்கு ஒரு சுவாரஸ்யமான ஸ்டார்ட்டராக இருக்கும் என்று நினைக்கிறேன்.

போதிதர்மா ஒரு குங்ஃபூ கலைஞர் என்பதற்கான ஆதாரங்களை எல்லாம் அலசி ஆராய்ந்துதான் படத்தை எடுத்துள்ளோம் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சொன்னார். அவர் சொல்கிறார் என்பதாலேயே எனக்கு இன்னும் உத்தரவாதம் ஏற்படவில்லை. எப்படியெல்லாம் சொதப்பி வைத்திருப்பார்களோ என்று இன்னமும் மைல்டாக ஒரு சந்தேகம் இருக்கிறது. (இந்த இயக்குநர், கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய ‘மெமெண்டோ’ படத்தை அப்படியே பாமாயிலில் சுட்டெடுத்து தமிழிலும் இந்தியிலும் செலவாணி செய்த களவாணி அல்லவா?)

தமிழரின் ப்ரக்ஞையில் கதாநாயகன் பற்றிய பிம்பங்கள் மிகவும் செயற்கையானவை. தண்டியலங்காரம் சொல்லும் ‘தன்னேரில்லாத் தலைவன்’ என்னும் நிலையில்தான் ‘நேற்று’ வரை தமிழ்ப்பட ஹீரோக்கள் சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். ஒரு சராசரி மனிதனை அல்லது வேறுபட்ட பரிமானங்களில் தனித்துவம் கொண்ட ஒரு மனிதனை மையப்படுத்திய கதைகளைக் காண்பது அரிதாகத்தான் நிகழ்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது இருந்த சிந்தனையோட்டம் ஒன்று ஞாபகம் வருகிறது. அப்போது எங்களுக்கெல்லாம் ஹீரோ என்றால் ரஜினிதான். நான் படித்த கிறித்துவப் பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு வருடமும் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தை மாணவர்களுக்குத் திரையிட்டுக் காட்டுவார்கள். நாங்கள் சந்தோஷமாகப் பார்த்தோம், ரஜினி படம் என்று. அதில் இருந்த பிரச்சார அரசியல் என்ன என்று அந்த வயதில் தெரியவில்லை. அப்படிப்பட்ட காலத்தில், ‘மகாத்மா காந்தி வெள்ளைக்காரனிடம் போராடி நம் நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்தார்’ என்று படித்தபோது அவர் என் மனதில் ஒரு ’மகாத்மா காந்த்’ ஆனார். ஆனால் அவரின் கையில் இருப்பது ஒரு கைத்தடி மட்டும்தானே, துப்பாக்கி எதுவும் இல்லையே? அட, ரஜினி வெறும் கையில் முழம் போடவில்லையா? வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். வெள்ளைக்காரன் சுடுகிறான். சீறி வரும் தோட்டாக்களை எல்லாம் காந்திஜி தன் கைத்தடியால் துல்லியமாக அடித்துத் திசைதிருப்பி வெள்ளைக்காரனைச் சுட்டுத் தள்ளுகிறார். அவர் ஹீரோ அல்லவா? இப்படிப்பட்ட சிறுபிள்ளைத் தனமான அணுகுமுறையில் போதிதர்மாவைச் சித்தரித்து விடுவார்களோ என்றுதான் சங்கடமாக இருக்கிறது. (ரிச்ச்ர்ட் அட்டன்பரோவின் ‘காந்தி’ வெளிவந்தபோது அதன் சித்தரிப்பு எப்படி இருந்தது? காந்தியாக பென் கிங்க்ஸ்லியை அதுவரை யாராவது கற்பனை செய்திருக்க முடியுமா? முஸ்தஃபா அக்கதின் ‘உமர் முக்தார்’ சித்தரிப்பு எப்படி? ஆண்டனி க்வின்னை அந்தப் பாத்திரத்தில் அதுவரை யாராவது யோசித்திருப்பார்களா? அதுபோல் போதிதர்மாவைப் பற்றி ஒரு முழுமையான திரைப்படம் எடுக்கலாம். அது தமிழுலகில் சாத்தியப்படுமா?)


போதிதர்மாவாக நடிக்க சூர்யாவை தேர்ந்தெடுத்திருப்பது மகிழ்ச்சி. ஆறு மடிப்புக்காக அல்ல. அவருடைய கண்களுக்காக. ‘நான் கடவுள்’ படத்தில் அகோரி கேரக்டரில் ஆர்யா கச்சிதமாகப் பொருந்தியதைப் போல் போதிதர்மா பாத்திரத்திற்கு சூர்யா பொருத்தம்தான். போதிதர்மா பென்னம் பெரிய விழிகள் கொண்டவர், மிகவும் பயமுறுத்தும் பார்வையும் முரட்டு முகமும் உடலமைப்பும் உள்ளவர் என்றுதான் வரலாற்றுக் குறிப்புக்கள் சொல்கின்றன. யோகாவில் பக்குவப்பட்ட சூர்யாவின் உடல், குறிப்பாகக் கண்கள், போதிதர்மாவின் சாயலுக்கு அருகில் வரக்கூடும். ஆனால், சீன ஓவியங்களில் காணப்படும் போதிதர்மாவின் பொம்மென்ற முகத்தையும் தாடியையும் பார்க்கும்போது கஞ்சா கறுப்பின் முகம்தான் பொருத்தமாகத் தோன்றுகிறது!


போதிதர்மாவைப் பற்றிய பதிவுகள் அவரை குங்ஃபூ தற்காப்புக் கலையின் பிதாமகர் என்று காட்டுகின்றன. ஆனால் போதிதர்மா சீன தேசம் சென்றது குங்ஃபூவை உருவாக்குவதற்கு அல்ல, பௌத்த சமயத்தின் ஆன்மாவை சீனாவிற்கு எடுத்துச் சென்றவர் அவர். பௌத்த சமயத்தின் ஆன்மா என்று நான் சொல்வது தியானத்தைதான். எனினும் அவர் குங்ஃபூ கலையின் பிதாமகராகக் கருதப்படுவதற்கும் சில பின்னணிகள் இருக்கின்றன.
போதிதர்மா பற்றிய தொன்மையான பதிவுகள் எதுவும் நம்பகத்தன்மை வாய்ந்தவையாக இல்லை என்றே வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அவரைப் பற்றிய புனைவுகள் நிறைய பின்னப்பட்டுள்ளன. குங்ஃபூ கலை பற்றி அவரின் பெயரால் அழைக்கப்படும் நூல்களும் வேறு யாரோ எழுதியவை என்றே சொல்லப்படுகின்றன. போதிதர்மா தன் கைகளால் நேரடியாக எந்தப் புத்தகத்தையும் எழுதவில்லை. அவருடைய போதனைகளை அவரின் சீடர்கள் பதிவு செய்து வைத்துள்ளார்கள். போதிதர்மாவின் கதையை ‘non-linear’ அமைப்பில் சொல்லிச் செல்ல விரும்புகிறேன்.


போதிதர்மாவுக்கும் குங்ஃபூ கலைக்கும் என்ன சம்பந்தம் என்பதை முதலில் பார்ப்போம். தமிழகத்தில் இருந்து சீனா சென்ற போதிதர்மா (ஆம், போதிதர்மா ஒரு தமிழர்!) மன்னர் ’வூ-டி’யைச் சந்தித்த பிறகு யாங்க்ஸி நதியைக் கடந்து ஹெனான் பகுதியின் மலைச் சிகரங்களில் உள்ள ஷாவொலின் மடலாயத்திற்கு வந்து சேர்கிறார். அங்கு தியானம் செய்துகொண்டிருந்த புத்த பிட்சுக்களைப் பார்த்தபோது அவருக்குப் பெரிதும் ஏமாற்றமாக இருந்தது. நாட்பட்ட பட்டினியாலும் தவத்தாலும் அவர்களின் தேகங்கள் வத்தலும் தொத்தலுமாக இருந்தன. ஆன்மிகவாதிகள் என்றால் இப்படி சோப்ளாங்கிகளாக இருக்க வேண்டும் என்று அவர்களின் மனதில் ஒரு தவறான கருத்து கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதை அவர் கண்டார். அவர்களின் ஆன்மா ஒளி வீசிக் கொண்டிருந்தாலும் உடல் படு மோசமாக இருந்தது. போதிதர்மா ஒரு முழுமைவாதி. உடல் ஆராதனைக்கு உரியது என்னும் கருத்துடையவர். ஓர் ஆன்மிகவாதிக்கு உடல் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை அந்த பிட்சுக்களுக்கு எடுத்துச் சொல்லி அதற்கான செய்முறைகளை அவர்களுக்கு வகுத்துக் கொடுப்பதாக வாக்களிக்கிறார். அதற்காக அருகில் இருந்த ஒரு குகையில் ஒன்பது வருடங்கள் தியானம் செய்கிறார் போதிதர்மா. ஒன்பது வருடங்களும் அவர் ஒரு சுவற்றைப் பார்த்தபடி அமர்ந்து தியானம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. (இது என்ன வகை தியானமோ தெரியவில்லை. ஓஷோ இந்த தியானத்தைத் தன் சீடர்களுக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறார். கம்பம் நகரில் அடங்கியுள்ள சூஃபி மகான் அம்பா நாயகம் (ரஹ்) அவர்கள் இதுபோல் சுவற்றைப் பார்த்தபடி பல வருடங்கள் அமர்ந்திருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.)


ஒன்பது வருடங்கள் தியானம் செய்த போதிதர்மா அங்கிருந்து கிளம்பியபோது அந்த இடத்தில் இரும்புப் பெட்டி ஒன்றை விட்டுச் செல்கிறார். பிட்சுக்கள் அதைத் திறந்து பார்த்தபோது அதில் இரண்டு கிரந்தங்கள் இருந்தன. ”க்ஸி சுய் ஜிங்” (மஜ்ஜை சுத்திகரிப்பு) மற்றும் “யி ஜின் ஜிங்” (தசைகளின் மாற்றம்) என்னும் நூல்கள் அவை. இவற்றில் முதல் நூலை போதிதர்மாவின் சீடரான ஹுய்கே என்பவர் எடுத்துக்கொண்டு அங்கிருந்து மறைந்து போகிறார். இரண்டாம் நூலை புத்த பிட்சுக்கள் எடுத்துக்கொண்டு அதில் இருந்த பயிற்சிகளை மாற்றியமைத்து ஷாவொலின் குங்ஃபூ கலையாக மாற்றிவிட்டார்கள். இப்படித்தான் போதிதர்மா குங்ஃபூவின் பிதாமகராக புனையப்பட்டார் என்று டாங் ஹாவோ, ஸூசென், மத்ஸுடா ர்யூச்சி, லின் போயுவான் போன்ற வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இது ஒரு புனைவுக்கதையாகவே இருந்தாலும் இதில் அற்புதமான ஒரு உள்-பார்வை (insight) இருக்கிறது. அதாவது, போதிதர்மா மனம்-உடல் இரண்டையுமே வலிவுள்ளதாக மாற்றுவதற்கான பயிற்சிகளைத்தான் வழங்கியிருக்கிறார். மஜ்ஜை என்பது அகத்தைக் குறிக்கும். தசைகள் என்பது உடலைக் குறிக்கும். இன்னொரு பார்வையில் மஜ்ஜை என்பது ஆன்மிக சாராம்சத்தைக் குறிக்கும். தசைகள் என்பவை புறச் சடங்குகளைக் குறிக்கும். ஆனால் அந்த பிட்சுக்கள் போதிதர்மாவின் ஆன்மிக சாராம்சத்தை விளங்கிக்கொள்ளும் நிலையில் இல்லை. எனவே அது ஒரு சீடரின் வழியே ரகசியமாக்கப்பட்டு விட்டது. பிட்சுக்கள் புறச்சடங்குகளை மட்டும் எடுத்துக்கொண்டார்கள். அதனைப் போர்க்கலையாக மாற்றிவிட்டார்கள்!


இதில் இன்னொரு புள்ளியும் கவனத்திற்குரியது. அதாவது, போதிதர்மா சீனாவிற்குச் சென்றபோதே அங்கே பௌத்த மதம் ஏற்கனவே பரவியிருந்தது. பிறகு ஏன் போதிதர்மா சீனாவிற்குச் சென்றார்? இதற்கான அருமையான விளக்கத்தை ஓஷோவின் “BODHIDHARMA – THE GREATEST ZEN MASTER” என்னும் நூலில் காணலாம். போதிதர்மா ஓஷோவைக் கவர்ந்த மிக முக்கியமான ஆன்மிக ஆளுமை. போதிதர்மா புத்தருக்கு அறுநூறு வருடங்கள் பின்னால் தோன்றியவர். அவர் சீனா செல்வதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே பௌத்தம் அங்கே சென்றுவிட்டது. போதிதர்மா பௌத்த குரு-சிஷ்ய மரபில் இருபத்தெட்டாவது தலைமைக் குருவாக வருகிறார். ஜென் ஞானியான அவருடைய குரு ஒரு பெண் ஞானி! அவரின் பெயர் ‘ப்ரக்யதாரா’. அவர்தான் போதிதர்மாவை சீனாவிற்குச் செல்லும்படி கட்டளையிட்டவர். சீனாவில் பௌத்த மதத்தின் சடங்குகள் மட்டும் இருந்தன. அவை ஆன்மிக சாரமற்று வெறும் சக்கைகளாக இருந்தன. கன்ஃப்யூசியஸின் ‘அறத்துப்பால்’ மீண்டும் மீண்டும் மக்களைக் காய்ச்சிக்கொண்டிருந்தது. லாஓஸு, சுவாங்க்ஸு மற்றும் லெய்ஸு ஆகிய தாவோ மூலவர்கள் உருவாக்கிய அற்புதமான ஆன்மிக நெறி பொதுமக்களிடம் சென்று சேராமல் இருந்தது. இந்தச் சூழலில்தான் போதிதர்மாவின் பணி தேவைப்படுகிறது. அப்பணியால் பௌத்தம் தாவோவுடன் இணைந்து ‘ச்சான்’ (chan) ஆகிப் பின்பு அது ஜப்பானில் ’ஜென்’ (ZEN) என்பதாக வடிவம் கொண்டுவிட்டது. இது ஒரு மகத்தான ஆன்மிகப் புரட்சி!

புறச்சடங்குகள் வெகுஜனங்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதும், ஆன்மிக சாராம்சம் தகுதியான சிலரால் மட்டுமே ரகசியமாகப் பேணப்படுவதுமான நிலையை நாம் எல்லாச் சமயங்களிலும் பார்க்க முடியும். உதாரணமாக, இஸ்லாத்தில் சூஃபி மரபு தோன்றுவதன் புள்ளியைக் காட்டும் ஒரு நபிமொழியைப் பாருங்கள்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (மார்க்கக் கல்வியின்) இரண்டு பாத்திரங்களை நான் பாதுகாத்துக் கொண்டேன். அவற்றில் ஒன்றை நான் பரப்பி விட்டேன். மற்றொன்றை நான் பரப்பியிருந்தால் என் அடித்தொண்டை வெட்டப்பட்டிருக்கும்.” (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி, அத்தியாயம் 3 – கிதாபுல் இல்ம், ஹதீஸ் எண்:120)


புத்தரைப் போலவே போதிதர்மாவும் ஓர் இளவரசர். அவர் பல்லவ மன்னனின் மகன் என்று சொல்லப்படுகிறது. ‘களறிப்பயட்டு’ என்னும் தற்காப்புக் கலை வளர்ந்திருந்த கேரளப்பகுதியில் இருந்தவர் என்று ஒரு கருத்தும் உள்ளது. புத்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட போதிதர்மா அரச வாழ்வைத் துறந்து பௌத்த நெறியில் தீட்சை பெற்றுக்கொண்டார். 

அரச வாழ்வைத் துறந்து ஆன்மத் தேடலில் நாடோடியாகக் கிளம்புகிறேன் என்ற தன் முடிவை போதிதர்மா சொன்னபோது மன்னர் அவரைத் தடுத்தார். போதிதர்மா அவரை நோக்கி “சாவை விட்டும் என்னை நீங்கள் காக்க முடியும் என்றால் இங்கேயே இருக்கிறேன். உங்களால் அது முடியாது என்றால் நான் புறப்படுவதைத் தடுக்காதீர்கள்” என்று சொன்னார். ஆனால், மரணத்தை விட்டு ஒருவரை எந்த மனிதரால்தான் காப்பாற்ற முடியும்? எனவே கண்ணீரோடும் ஆசிகளோடும் மன்னர் தன் இளவரசனை அனுப்பிவைத்தார். அப்படிப் புறப்பட்டவர்தான் போதிதர்மா.

தன் குரு ப்ரக்யதாராவின் மறைவிற்கும் பின் அவரின் கட்டளையை நிறைவேற்ற போதிதர்மா கி.பி.520-ல் சீனா சென்றார். இந்தியாவிலிருந்து ஒரு மகாஞானி – பௌத்த மதத்தின் 28-வது தலைமைக்குரு - வருகிறார் என்பதை அறிந்த நான்ஜிங் பிரதேச மன்னர் லியாங் வூ-டி அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கிறார். அப்போது அவர் போதிதர்மாவிடம் கேட்ட கேள்வியும் அதற்கு போதிதர்மா சொன்ன பதிலும் மிகவும் சுவையானவை. போதிதர்மா எப்படிப்பட்ட ஞானி என்று காட்ட அது ஒரு சோற்றுப்பதம்.

ஓஷோவின் வார்த்தையில் சொல்வதென்றால் போதிதர்மா ஒரு கிளர்ச்சியாளர் (REBEL). அவருடைய அகப்பார்வை சடங்குகளின் தோலையும் சதையையும் எலும்பையும் துளைத்து நேராக மஜ்ஜையைத் தொடுவது. மன்னர் வூ-டி சீனாவில் நிறைய புத்த மடாலயங்களைக் கட்டியிருந்தார், அதில் பல்லாயிரம் பிட்சுக்களுக்கு போஷகம் அளித்து வந்தார். எனவே அவர் தன் பௌத்தத் தொண்டினைச் சுட்டிக்காட்டி போதிதர்மரிடம் கேட்டார், “மகாஞானியே! என்னுடைய இந்த தர்ம காரியங்களுக்காக சொர்க்கத்தில் நான் பெறப்போகும் சன்மானம் என்ன?” இதைக் கேட்டதும் போதிதர்மா மிக நிதானமாகச் சொன்னார், “உங்களின் காரியங்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை. நீங்கள் நேராக நரகத்தில்தான் விழுவீர்கள்.” இந்த விடையைக் கேட்டு மன்னருக்கு ஆத்திரமும் குழப்பமும் அதிர்ச்சியும் கலந்த உணர்வு ஏற்பட்டது. போதிதர்மா ஏன் அப்படிச் சொன்னார்? அந்த மன்னர் பெயருக்காகவும் புகழுக்காகவும்தான் அந்த தர்ம காரியங்களை எல்லாம் செய்துவந்தார் என்பதை அவரைப் பார்த்ததுமே போதிதர்மா கண்டுவிட்டார். போதிதர்மா போன்ற ஒரு ஞானியின் கண்கள் உள்ளத்தை ஊடுறுவும் எக்ஸ்ரே கதிர்கள் கொண்டவையாகத்தான் இருக்கும்! சுயநல எண்ணத்துடன் நிறைவேற்றப்படும் தர்ம காரியங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதைத்தான் அவர் அப்படிச் சுட்டிக்காட்டினார்.

இக்கருத்தைக் கூறும் நபிமொழி ஒன்று என் நினைவுக்கு வருகிறது: “செயல்கள் அனைத்தும் உள்நோக்கத்தைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது.” (அறிவிப்பாளர்: உமர் பின் கத்தாப் (ரலி), நூல்: புகாரி, அத்தியாயம்: 1 – கிதாப் பத்உல் வஹ்யி, ஹதீஸ் எண்: 1)

போதிதர்மாவைப் பற்றிப் பேசும்போது மறக்காமல் பேசவேண்டிய இன்னொரு விஷயம் தேநீர். ஆமாம், குங்ஃபூ கலையின் பிதாமகர் என்று அவர் சிலாகிக்கப்படுவது போலவே தேநீரைக் கண்டுபிடித்தவர் என்றும் போற்றப்படுகிறார். தேநீர் என்பது சீனர்களின் வாழ்வில் மிக முக்கியமான அம்சமாக விளங்குகிறது. ஜென் நெறியில் தேநீர் என்பது விழிப்புணர்வின், ஞானத்தின் குறியீடு. அலுவலகங்களில் நாமும்கூட கொஞ்சம் அசமந்தமாக உணர்ந்தால் தேநீர் பருகிவர கடை நோக்கி நடையைக் கட்டுகிறோம் அல்லவா? ஆனால், நாம் அரசியல் அல்லது கிசுகிசு பேசிக்கொண்டே, போண்டா, வடை அல்லது பஜ்ஜியைக் கடித்துக்கொண்டே அருந்துவது போல் சீனாவிலும் ஜப்பானிலும் உள்ள ஜென் மக்கள் தேநீர் அருந்துவதில்லை. அப்படிச் செய்வது அவர்களுக்குத் தெய்வ குத்தம்! நரகத்தில் தள்ளிவிடக்கூடிய பாவம். தேநீர் பருகுவது என்பது அவர்களுக்கு ஒரு நுட்பமான கலை, ஆழமான தியானம், ஒருவகை தாம்பத்ய சம்போகம்! 


மேலும், அவர்கள் அருந்துவது ஆங்கிலேயன் விரும்பிப் பருகும் தூசித் தேநீர் (dust tea) அல்ல. அவர்கள் பருகுவது பச்சைத் தேநீர் (Green Tea) அல்லது வெண் தேநீர் (White Tea). நான் ஒரு தேநீர்ப் பைத்தியம். பழச் சுவை கொண்ட தேநீர், பூக்களின் மணம் கொண்ட தேநீர், பெர்கமாண்ட் என்னும் சிட்ரஸ் பழம் போட்ட ‘ஏர்ல் க்ரே’ தேநீர், இஞ்சி-புதினா-எலுமிச்சை போட்ட பச்சைத் தேநீர், கெமோமைல் போட்ட பச்சைத் தேநீர் என்று விதவிதமான தேநீர் வாங்கி வைத்து அவ்வப்போது பருகுவேன். அவற்றில் மிகவும் விரும்பிப் பருகுவது க்ரீன் டீதான். என் பிள்ளைகளும் அதற்கு ரசிகர்கள் ஆகிவிட்டார்கள். (வெண் தேநீர் தேச்செடியின் பூக்களில் இருந்து எடுக்கப்படுவது. அதைச் சுவைக்க வேண்டும் என்னும் ஆசை இன்னும் நிறைவேறவில்லை.)

சரி, தேநீரை போதிதர்மா எப்படிக் கண்டுபிடித்தார் என்பதைப் பார்ப்போம். இது ஒரு தொன்மக் கதையாக ஜென் வட்டாரத்தில் சொல்லப்பட்டு வருகிறது. போதிதர்மா இரவும் பகலும் தொடர்ந்து தியானம் செய்து வந்தார். அப்படி இருக்கையில் அடிக்கடி சொக்கிக்கொண்டு தூக்கம் வந்தது. தியான நிலையில் இருந்து நழுவித் தூக்கத்தில் மனம் விழுவதை எண்ணி அவருக்குத் தன்மீதே கோபம் வந்தது. ஒரு நாள் அவர் தன் இமைகளைப் பிய்த்து மண்ணில் வீசியெறிந்தார். அவை விழுந்த இடத்தில் புதர் ஒன்று முளைத்தது. அவர் தியானம் செய்து கொண்டிருந்த மலையின் பெயர் ’டாய்’. எனவே அந்த மூலிகை சீன மொழியில் ‘டே’ என்று அழைக்கப்பட்டது. அதன் இலைகளைக் கொதிநீரில் போட்டு கசாயம் வைத்துக் குடித்தபோது சோம்பலை நீக்கிப் புத்துணர்ச்சி ஏற்படுவதை அறிந்தார்கள். அப்போதிலிருந்து தேநீர் அருந்துவது ஜென் நெறியிலும் சீனக் கலாச்சாரத்திலும் ஒரு முக்கியமான நிகழ்வாக, தியான முறையின் ஒரு அங்கமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.


போதிதர்மா ஒரு முரட்டு மனிதர் என்பதை முன்பே சொன்னேன். அவர் தன் கையில் எப்போதும் ஒரு கைத்தடி வைத்திருப்பார். மகாத்மா காந்தி வைத்திருப்பது போன்று வழவழப்பான நேரான கைத்தடி அல்ல அது. காந்திஜி வைத்திருந்தது அஹிம்ஸா கைத்தடி. போதிதர்மா தன்னைப் போலவே கரடு முரடான கைத்தடி வைத்திருந்தார். பேருக்குத்தான் அது கைத்தடியே தவிர, அதைப் பார்த்தால் அவர் ஏதோ ஒரு மரத்தையே வேறோடு பிடுங்கி வைத்திருப்பது போல் இருக்கும். முண்டு முடிச்சு உள்ள அந்தத் தடியை அவர் ஆன்மிக போதனைக்கும் பயன்படுத்தினார். அதாவது, ‘மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது மாஸ்டர்’, ‘மனம் குரங்கு போல் தாவிக்கொண்டே இருக்கிறது மாஸ்டர்’, ‘மனதிலிருந்து விடுதலை அடைவது எப்படி?’ என்றெல்லாம் கேட்டுக்கொண்டு வரும் சீடர்களை நோக்கி, “அப்படியா அந்த மனதைப் பிடித்துக் கொண்டு வாருங்கள். ஒரே அடியில் போட்டுத் தள்ளிவிடுகிறேன்.” என்று சொல்லித் தன் கைத்தடியைக் காட்டுவார்! (இந்தக் கைத்தடியை போதிதர்மா வைத்திருப்பதாக ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தில் காட்சிப் படுத்தியிருப்பதைப் பார்க்க நன்றாக இருக்கிறது.)

இதையெல்லாம் படிக்கும்போது அவர் ஒரு தமாஷ் பேர்வழியாக நமக்குத் தெரியலாம். அது உண்மைதான். ஜென் நெறியில் தமாஷ் செய்யத் தெரியவில்லை என்றால் ஞானம் அடைந்த குருவாக ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். ஞானத்தின் அலாதியான சுவைகளில் நகைச்சுவை அவர்களுக்குப் பிரதானமானது. சூஃபி மரபில் நகைச்சுவைக்கு ஒரே ஒரு முல்லா நஸ்ருத்தீன் மட்டுமே இருக்கிறார். ஆனால் ஜென்னில் ஏறத்தாழ எல்லா ஞானிகளுமே முல்லாக்கள்தான்!

போதிதர்மா தன் கடைசிக் காலத்தில் இமயமலைப் பகுதிக்குச் செல்ல விரும்பினார். ஹாய்கோ என்னும் சீடனைத் தன் வாரிசாக அறிவித்தார். இதனால் அவர் மேல் மனத்தாபம் கொண்ட ஒருசில சீடர்கள் அவரின் உணவில் விஷம் வைத்து விட்டார்கள். அதை உண்ட போதிதர்மா ‘கோமா’வில் விழுந்தார். அவர் இறந்துவிட்டதாக அறிவித்து மடாலயத்திலேயே அவரைப் புதைத்துவிட்டார்கள். இது நடந்து சில நாட்கள் கழித்து சீனாவின் எல்லையில் அவர் நடந்து செல்வதை எல்லைக் காவல்காரன் ஒருவன் காண்கிறான். அவனுக்கு போதிதர்மாவை நன்றாகத் தெரியும். அவர் தன் கைத்தடியின் முனையில் ஒற்றைச் செருப்பைக் கட்டித் தொங்க விட்டிருப்பதைக் கண்டு அதற்கான காரணத்தை வினவுகிறான். “மடாலயத்திற்குப் போய் என்னை நீ இந்தக் கோலத்தில் பார்த்ததாகச் சொல். விவரம் உனக்கே விளங்கும்” என்று போதிதர்மா அவனிடம் சொல்லிவிட்டு எல்லையைக் கடந்து இமயமலைக்குச் சென்றுவிட்டார். அந்தக் காவலன் மடாலயத்திற்குச் சென்று தான் போதிதர்மாவைப் பார்த்ததாகச் சொல்கிறான். அவர்கள் அவரின் கல்லறையைத் திறந்து பார்த்தபோது அதனுள் அவருடைய மற்றொரு செருப்பு மட்டும் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். இப்படியாக போதிதர்மாவின் முடிவு சொல்லப்படுகிறது.


போதிதர்மாவின் ’வரலாறு’ அப்படி முடிந்துவிட்டாலும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு அவரை அப்படி முடித்துக்கட்ட மனமில்லை. எனவே ஆன்மிகம் + அறிவியல் புனைவு (சயின்ஸ் ஃபிக்‌ஷன்) என்னும் ஃபார்முலாவின் மூலம் போதிதர்மாவை அவரின் மரபணு கொண்டு மீண்டும் நம் காலத்தில் தோன்ற வைத்துக் காட்டுகிறார். ஐந்தாம் நூற்றாண்டு போதிதர்மாவிடம் இருந்த அதே திறமைகள் இந்த நவீன க்ளோனிங் போதிதர்மாவிடமும் இருக்குமாம். ஆனால் தமிழ்ப்படத்திற்குத் தேவையான குங்ஃபூ திறமை மட்டும்தான் இருக்கும் போலும். அவரது தியானமோ ஞானமோ இருக்காது! இந்த நவீன போதிதர்மா குங்ஃபூ திறமையை வைத்துக் கெட்டவர்களுடன் சண்டை போடுவார். ஒழிந்த நேரங்களில் ஹாரிஸ் ஜெயராஜின் பீட்டுகளுக்குத் தன் காதலியுடன் நவீன நடனம் ஆடுவார்! (என் அனுமானங்கள் பொய்யாகிப் போகுமெனில் மகிழ்ச்சி.)

போதிதர்மாவை நான் நேசிப்பது அவர் ஒரு தமிழர் என்பதற்காகவோ அல்லது குங்ஃபூ கலைக்காகவோ அல்ல. அவரின் ஞானத்திற்காகத்தான். ‘மனதிலிருந்து விடுதலை அடைய வேண்டியதில்லை. மனதிற்குள் ஆழ்ந்து ஆழ்ந்து போய்க்கொண்டே இருங்கள். இறுதியில் மனமே புத்தராக இருப்பதைக் காண்பீர்கள். மனதின் எதார்த்த நிலையே ஞானம்தான்” என்பதுதான் அவரது போதனைகளின் சாரம். மனம் என்பது ஆறாம் அறிவாகச் சொல்லப்படுகிறது. ஏழாம் அறிவு என்பது மனத்திற்கு அப்பால் உள்ளதல்ல. மனம் தன் எதார்த்த நிலையை அடைவதாகும் என்று சொன்னவர் அவர். அந்த நிலையை அடையும்போது மனத்தின் உண்மையான ஆற்றல் வெளிப்படும். கால-இடத் தளைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.
 
போதிதர்மாவின் ஞானம் மிளிரும் பல நூறு பொன்மொழிகளை எடுத்துச் சொல்ல முடியும். ஒரு மரியாதைக்காக இங்கே ஏழு மட்டும் தருகிறேன் (ஏழாம் அறிவு என்று வந்துவிட்டதால் ஏழு):
1.   1. ’மனம் எப்போதும் இக்கணத்தில் இருக்கிறது. நீதான் அதைக் காண்பதில்லை’
2.   2. ’பாதையை அனைவரும் அறிவார்கள். அதில் நடப்பவர்கள் சிலரே’
3.   3.  ’மாயைகளை உருவாக்காமல் இருப்பதே ஞானம்’
4.   4. ’வாழ்வும் சாவும் முக்கியமானவை. அவற்றை வீணடிக்காதீர்கள்’
5.   5. ’ஞானமே உங்களின் நிஜ உடல், உங்கள் நிஜ மனம்’
6.   6. ’மொழியைக் கடந்து போ, எண்ணத்தைக் கடந்து போ’

55 comments:

  1. போதி தர்மாவை எப்படி காட்டப் போகிறார்களோ என்ற பயம் உங்களுக்கு இருந்தாலும் அவ்ரை பற்றி இவ்வளவு எழுத வைத்ததற்காகவாவது ஏ.ஆர்.முருகதாஸை பாராட்டலாம்.

    ReplyDelete
  2. அசத்தல் பதிவு

    //இஸ்லாத்தில் சூஃபி மரபு தோன்றுவதன் புள்ளியைக் காட்டும் ஒரு நபிமொழியைப் பாருங்கள்:
    “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (மார்க்கக் கல்வியின்) இரண்டு பாத்திரங்களை நான் பாதுகாத்துக் கொண்டேன். அவற்றில் ஒன்றை நான் பரப்பி விட்டேன். மற்றொன்றை நான் பரப்பியிருந்தால் என் அடித்தொண்டை வெட்டப்பட்டிருக்கும்.” (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி, அத்தியாயம் 3 – கிதாபுல் இல்ம், ஹதீஸ் எண்:120) //

    First time hearing, very astonishing.

    ReplyDelete
  3. அருமையான பதிவு தோழர். ஓஷோவின் புத்தகம் படித்திருக்கிறேன். தேநீர் சமச்சாராம் இப்போதுதான் முதல்முறை தெரிந்துகொள்கிறேன். அட அதற்குள் பதிவு முடிந்துவிட்டதே என நினைத்தேன்.

    அருமையான பதிவிற்கு நன்றி.

    அளவில்லா அன்புடன்
    அதிஷா

    ReplyDelete
  4. அருமையான பதிவு. (நன்றி சஞ்சய் கூகில் பஸ்ஸில் மீள்பதிவு செய்ததற்கு)

    ReplyDelete
  5. மிக விரிவான, ஆழமான பதிவு. போதிதர்மாவைப் பற்றி நிறைய விஷயங்களை அறிந்துகொள்ளமுடிந்தது. தங்களின் நேரத்துக்கும் உழைப்புக்கும் வணக்கங்கள்.

    ReplyDelete
  6. உங்களின் எழுத்தின் மூலமாக உங்களின் வாசிப்பு திறன் மிளிர்கிறது. மிகவும் ஆழ்ந்த பதிவு. மிக்க நன்றி. சுட்டி அனுப்பிய அதிஷாவுக்கும் நன்றி.

    ReplyDelete
  7. அருமையான பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  8. போதிதர்மரைப் பற்றிய அற்புதமான அறிமுகம்.. நன்றாக விவரித்து எழுதியிருக்கிறீர்கள்.. நன்றி..

    ReplyDelete
  9. Fantastic writing enjoyed the reading. Thanks Athisha for link in twitter

    Also please watch this video http://www.aaari.info/08-10-24Aranha.htm

    ReplyDelete
  10. ஏழாம் அறிவு 'Assassin's Creed'என்னும் வீடியோ கேம்மின் தழுவல். அந்த விளையாட்டில் Desmond Miles என்னும் தற்கால மனிதனை ஒரு DNA இயந்திரம் மூலம் பழங்காலத்திற்கு அனுப்புவர். டமாஸ்கஸ், ஜெருசலம் போன்ற ஊர்களில் ஒரு கொலையாளி (Assassin) வாழ்ந்தானாம். டேஸ்மாண்டை அந்த கொலையாளின் காலத்திற்கு அனுப்பி, அவனின் வித்தைகளை கற்றுவரும்படி அனுப்புவார்கள். எல்லாம் மனத்தின் மூலம் தான். Assassin's Creed மூன்று பாகங்களை கடந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. Desmond Miles தான் தற்காலத்தின் அந்த கொலையாளி என்பார்கள்.

    நம்ம ஏழாம் அறிவில் Assassinக்கு பதில் போதிதருமர். நிகழ்கால மனிதன் Desmond Milesக்கு பதில் சூர்யா. சூர்யாவை பழங்காலத்திற்கு அனுப்பி போதிதருமரின் மனதில் புகுந்து அவருடைய வித்தைகளை கற்று வந்து நிகழ்கால வில்லன்களை அடித்து உதைப்பது அதன் கதையாக இருக்கும். டிரைலரும் அப்படி தான் போகுது.

    தம்பி சூர்யா போதிதருமரின் குங் பூவைத்தான் கற்றுக்கொண்டு வருவார். வந்து சுருதியுடன் தாய்லாந்து கடற்கரையில் கும்மாளம் போடுவார் :))

    ReplyDelete
  11. நல்ல பதிவு . தேடிக்கொண்டிருந்த விடயம் .

    \\செயல்கள் அனைத்தும் உள்நோக்கத்தைப் பொருத்தே அமைகின்றன. \\
    இது போன்ற வசனங்கள் எல்லாம் ஆண்டாண்டு காலம் எல்லா மத நூல்களிலும் கூறப்பட்டு வருவதே ! இது போன்ற மேலோட்ட கருத்துகளை வரலாற்றில் வாழ்ந்த யோகிகள் சித்தர்கள் கருத்துடன் ஒப்பிட வேண்டாம் .அவர்கள் ஒவ்வொரு விடயத்துக்கும் தனித்தனியான விளக்க நூல்கள் கூட எழுதியிருக்கிறார்கள் .அவளவு ஆழமான விளக்கம் இருக்கும் !இஸ்லாமில் இருக்கும் மேலோட்ட பொதுவான கருத்தை அங்கிருக்கிறது இங்கிருக்கிறது என எப்படி ஒப்பிடுகிறீர்கள் ?

    ReplyDelete
  12. அட்சரம் விலகாமல் அழகான தொடுப்பு... இன்னும் பல நூறு பக்கங்களுக்கு அவரைப்பற்றிச் சொல்லிக்கொண்டே செல்லலாம்...

    ZEN என்பது உருவான விதம் உடனடியாக முடித்துவிட்டீர்களே... :)

    அருமையான பதிவு...

    ReplyDelete
  13. ரொம்ப சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள். மார்ஷியல் ஆர்ட் மன்னன் ஜானி ட்ரை நியூயென் வில்லனாக நடித்திருப்பதால் மறுபிறவி போதிதர்மா குங்ஃபூ பண்ணி வில்லனை துவம்சம் பண்ணும் சாத்தியங்கள்தான் அதிகம். மக்களுக்கு ஞானம் தியானம் என்றெல்லாம் சொன்னால் கமர்ஷியல் கல்லாக் கட்டுதல் கடினம்.

    ReplyDelete
  14. தேநீர் பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இப்பொழுதுதான் அறிகிறேன். மிக்க நன்றிகள்.

    அப்புறம் போதிதர்மரின் ஏழு பொன்மொழிகள் சொல்லுறேன்னு ஆறுதான் சொல்லிருக்கீங்க :))

    ReplyDelete
  15. அன்புள்ள ரமீஸ்,

    மசாலா தூக்கலாக இருந்தாலும், நன்றாக எழுதியுள்ளீர்கள்.
    போதிதர்மர் குறித்து, ஏதேனும் நல்ல நூல்கள் / இனைய சுட்டிகள் இருந்தால் அதனை பகிரவும்.

    நன்றி,
    மயிலேறி.

    ReplyDelete
  16. "போதி தர்மாவை எப்படி காட்டப் போகிறார்களோ என்ற பயம் உங்களுக்கு இருந்தாலும் அவ்ரை பற்றி இவ்வளவு எழுத வைத்ததற்காகவாவது ஏ.ஆர்.முருகதாஸை பாராட்டலாம்.

    அதே அதே. ஏதோ இந்த அளவாவது அவரைப்பற்றி பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகிறார்களே ! ஆ.இ.ஊ.இ.பூ சர்க்கரை.

    அந்த தேநீர் சமாசாரம் பற்றி யோசித்ததுண்டு. ஏதோ ஒரு சீன ஆங்கில படத்தில் பார்த்ததில் மிக பிடித்த சீன் அது. நாயகி தேநீர் தயாரிப்பார் பாருங்கள், என்னமோ இந்த பிறவி எடுத்ததே அந்த தேநீர் தயாரிப்பதற்குத்தான் என்பது போல.

    அப்போது தோன்றியது, ஒருவேளை, எளிய தேநீர் தயாரிக்கும் செயலைப்போலவே எல்லா செயலையும் அவ்வளவு ஈடுபாட்டுடனும் வேறெந்த கவனக்கலைப்புமில்லாத முழுமையுடனும் செய்யவேண்டும் என்பதை உணர்த்தும் ஒரு குறியீடோ என்று.

    தேநீர் பாத்திரத்திலிருந்து குவளையில் ஊற்றுவது தேநீரல்ல அவரது ஆத்மாவும்கூடத்தானோ என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். (ஹி..ஹி)

    ReplyDelete
  17. அருமையான பதிவு..
    போதி தருமரின் குரு, பிரஜாநத்ரா என்று நினைக்கிறன். (பார்க்க http://en.wikipedia.org/wiki/Prajnatara )

    ReplyDelete
  18. மிக அருமையான பதிவு... உங்களின் ஞானத்தை இரசிக்க முடிகிறது...

    நேரம் கிடைத்தால் ஒரு விசிட் செய்யுங்கள்...

    www.emsabai.blogspot.com

    ReplyDelete
  19. தகவல்களும் அதைத் தந்த விதமும் அருமை.

    ReplyDelete
  20. நல்ல பதிவு.

    அன்புடன், ஜீவன்.

    ReplyDelete
  21. i dont like this post.. if someone taking a different risk movie. we should support them, atleast we shouldnt criticize them.. please remove this post.. if you dont have any job please go and sleep well.. dont do this again.. its my humble request..

    ReplyDelete
  22. அருமையான பதிவு தோழரே! நன்றி
    போதி தர்மரை பற்றிய பல விஷயங்ளை தெரிந்து கொண்டேன்

    ReplyDelete
  23. //அப்புறம் போதிதர்மரின் ஏழு பொன்மொழிகள் சொல்லுறேன்னு ஆறுதான் சொல்லிருக்கீங்க :)) //

    பதிவு தரிசனமாவது அதில் தானே!!

    ReplyDelete
  24. மிக அருமையான பதிவு

    ReplyDelete
  25. அ.முத்து பிரகாஷ்,

    ஏழாவது பொன்மொழி உங்களுக்குள் இருக்கும் போல் :-)

    ReplyDelete
  26. கலக்கல் பதிவு.போதிதர்மர் பற்றிய நல்ல விளக்கம்.

    ReplyDelete
  27. நல்ல ஆழமான கருத்துள்ள நல்ல பதிவு.

    ReplyDelete
  28. போதிதர்மாவைப் பற்றிய ஏராளமான தகவல்களைத் திரட்டித் தந்துள்ளீர்கள் .நல்லதொரு பதிவு. வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  29. //தொலைந்து போன சோழ மன்னனைக் காட்டுகிறேன் பேர்வழி என்று ‘ஆயிரத்தில் ஒருவன்’ வந்து சொதப்பியதும், குலோத்துங்க சோழன் காலத்து சிதம்பரத்தை வைத்துப் பத்து நிமிடங்கள் ’ஷோ’ காட்டிவிட்டு அத்துடன் வரலாற்றை முடித்துக் கொண்ட தசாவதாரமும் நினைவில் வந்து பயமுறுத்தின.//

    ஹ ..ஹா ..கிட்ட தட்ட இப்படி தான் இருக்கும்

    ReplyDelete
  30. மீண்டும் நல்ல பதிவு..உங்களின் சுவாரஸ்யமான நடை விஷயங்களில் உள்ள ஆழ்ந்த விஷயங்களை இலகுவாக்கி
    வாசிக்கும் ஆர்வத்தை அதிகப் படுத்துகிறது..தொடர்ந்து நிறைய படிக்கிறீர்கள் என்பது புலனாகிறது..உங்களைப் போலே சிரத்தை எடுப்போர்
    இப்படி வெளிப்படுத்தாவிட்டால் எங்களைப் போன்றோர் படித்ததை அறிய வாய்ப்பில்லாமல் போய்விடும்..தொடர்முயற்சிக்கு நன்றி..
    உங்கள் வலைப்பூ பற்றி இந்தத் தளத்திலே மறுபிறவி பற்றிய ஒரு உரையாடலிலே எனது பின்னூட்டத்தில் இன்று அறிமுகம் செய்துள்ளேன்..
    http://classroom2007.blogspot.com/
    குறிப்பாக தேநீர் பற்றிய உங்கள் கருத்து..இங்கு ஜப்பானில் tea ceremony என்றே புனிதத்துவம் கொண்டதாக இன்றும் நடைமுறையில் உள்ளதே..போதிதர்மாதான் இங்கு அடித்தளம் என்பது போன்ற விஷயங்கள் சராசரியாக எல்லோருக்கும் தெரியாதவை..தொடர்ந்து இப்படி பதிவுகளை பதிவிட ஆர்வத்துடன் வேண்டுகிறேன்..

    ReplyDelete
  31. ஒரு அக்கறையுடன் உழைத்து எழுதியுள்ளீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். பதிவு தொடர்பாக சில சுட்டிகளையும் இணைக்க முடிந்தால் இணையுங்கள். தொடர்ந்து தேடுபவர்களுக்கு உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  32. மிக அருமையாக,அக்கறையுடன்.. எழுதி உள்ளீர்கள்...........நன்றி....இதுபோன்ற மெனக்கெடுதலுடன் கூடிய பதிவுகள படிப்பது ரொம்பவும் அபூர்வமா போயிருச்சு.......மீண்டும் நன்றி.....


    // போதிதர்மாவை நான் நேசிப்பது அவர் ஒரு தமிழர் என்பதற்காகவோ அல்லது குங்ஃபூ கலைக்காகவோ அல்ல. அவரின் ஞானத்திற்காகத்தான் //

    100% - i agree....

    தமிழ் என்ற வட்டத்துக்குள்ள அவர குறுக்கனுமா..ன்னு தெரியல............நம்மாளுங்க இம்ச தாங்காமதான் அவரு அந்த பக்கம் போனது........திரும்பவும் அவர இழுத்து தமிழ்ன் - தமிழன்னு சொல்றாங்க......

    ReplyDelete
  33. ரொம்ப ரொம்ப அருமை.... ரொம்ப சுவாரசியமான நடை... அருமையான பதிவு...

    ////..நம்மாளுங்க இம்ச தாங்காமதான் அவரு அந்த பக்கம் போனது........திரும்பவும் அவர இழுத்து தமிழ்ன் - தமிழன்னு சொல்றாங்க.../////

    கொழந்த, கொஞ்சம் விரிவா சொன்னா நல்லாருக்கும்... எதனால போனாருன்னு....

    ReplyDelete
  34. ne enadhan solavara puriyala bodhidarmana pathi solriya ok good bt eduku 7am arivu filma compare panra oruthavan differenta think pani direct pana pudikadhe ungala madiri aalungaluku

    ReplyDelete
  35. மிக அருமையான பதிவு

    ReplyDelete
  36. நன்றாக தமிழ்படுத்தி இருக்கிறீர்கள். ஆனால் இதை படிபதற்கு முன்பே விக்கிபீடியா வையும் சில இணைய பக்ககங்களையும் படித்துவிட்டேன். சுத்தமான அக்மார்க் செராக்ஸ். புதுசா எதாவது எழுதுங்க தலைவா...

    ReplyDelete
  37. neenga nenaikura mathiri illai nanbare.... climax la mattum than surya ku bodhidharmaroda aatrala seluthuranga..... and it is not a cloning story.... so bodhidharmar duet paadinar nu kavalai pada vendam nanbare...

    ReplyDelete
  38. மிக விரிவான, ஆழமான பதிவு. போதிதர்மாவைப் பற்றி நிறைய விஷயங்களை அறிந்துகொள்ளமுடிந்தது. தங்களின் நேரத்துக்கும் உழைப்புக்கும் மிக்க நன்றி.. in my point of view director cannot mistake friend.... soon they will make u happy.. dont worry friend...

    @shankar krishna (October 13, 2011 3:54 AM)
    he didnt like you da, his article said about his knowledge... if you have work do it otherwise go away..

    @ sridhar (October 18, 2011 10:00 AM)
    you dont have knowledge to read it, then why did you shout at him.. whatever movie it may be , when he taking movie about history or famous person, they shouldn't add their own creativity. that's y this author created this page.. we have to appreciate him..

    @ram:October 19, 2011 2:15 PM
    If you know means then y didn't you created this like article???? if you cannot please shut....

    ReplyDelete
  39. இஸ்லாத்தில் சூஃபி மரபு தோன்றுவதன் புள்ளியைக் காட்டும் அந்த நபிமொழி விளக்கம் எனக்கு புதியது ..ஆனால் இப்படியும் இருந்திருக்க கூடும் என்று யூகித்ததுண்டு ..மிக அருமையான பதிவு..!!

    ReplyDelete
  40. அருமையான தகவல்....ரொம்ப நன்றி.....

    ReplyDelete
  41. போதிதர்மாவைப் பற்றி தெரிந்து கொள்ள வைத்தமைக்கு மிக்க நன்றி...! தமிழன் என்று சொல்ல மிக்க பெருமையாக உள்ளது.

    ReplyDelete
  42. உங்களுடைய இந்த பதிவு என் ஆன்மீகசிந்தனைக்கு உதவிகரமாக இருந்தது.நன்றி
    தேனீர் அருந்துவது மட்டுமல்ல நமது ஒவ்வொரு செயலையும் அழகாகச் செய்யமுடியும்

    ReplyDelete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
  44. நீங்களும் ஒரு போதிதர்மரே!! எதிர்காலத்தை கனகச்சிதமாக எதிர்வுகூறியதற்காகா!!! படம் நீங்கள் பயந்ததை விட படு மோசம்!! அதிலும் தமிழன், தமிழனின் கண்டுபிடிப்பு, தமிழனின் பெருமை என்று சகட்டுமேனிக்கு ஆதாரமற்ற அல்லது இதுவரை நிரூபிக்கபடாத பல விடயங்களை அடித்துவிட்டிருக்கிறார் முருகதாஸ், அது போதாதென்று படம் வெற்றிபெற வேண்டுமென்று ஈழதமிழர்களையும் அவர்களின் பிரச்சனையையும் செருகி இருக்கிறார்கள்!!

    ReplyDelete
  45. //i dont like this post.. if someone taking a different risk movie. we should support them, atleast we shouldnt criticize them.. please remove this post.. if you dont have any job please go and sleep well.. dont do this again.. its my humble request..//

    “If you are not afraid, you have probably chosen too easy a mountain. To be worth the expedition, it had better be intimidating. If you don’t stand at the base uncertain how to reach the summit, then you have wasted the effort to get there.

    A mountain well within your ability is not only a misspending of resources, it is a loss of opportunity across a life time of potential achievement.”

    Todd Skinner (October 27, 1958 – October 23, 2006) was an American free climber who died in a fall at Yosemite National Park on October 23, 2006. His climbing achievements included the first free ascents of many routes and the world's first free ascent of a grade 7 climb.

    ReplyDelete
  46. ஸலாம்,
    இஸ்லாத்தில் புதிதாக தோன்றிய சூபி மரபை ஏதோ நபிகளே உருவாக்கியது போல காட்ட முனைகிறீர்கள். "“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (மார்க்கக் கல்வியின்) இரண்டு பாத்திரங்களை நான் பாதுகாத்துக் கொண்டேன். அவற்றில் ஒன்றை நான் பரப்பி விட்டேன். மற்றொன்றை நான் பரப்பியிருந்தால் என் அடித்தொண்டை வெட்டப்பட்டிருக்கும்.”"

    இந்த ஹதீஸின் சரியான விளக்கம் என்ன என்பதை சரியாக புரிந்து கொள்ளாததன் விளைவு தான் இது சூபியிசத்திர்கான ஆதாரம் என்ற உங்களின் உளறல்.

    அபூஹுரைரா ரலி அவர்கள் சொல்ல வரும் விஷயம் என்ன? நபிகள் மிக தெளிவாக அதையும் விளக்கி விட்டார்கள். அது அலி ரலி அவர்களின் காலத்திலும் அதற்கு பின்னர் ஏற்பட போகும் குழப்பத்தையும் அபூஹுரைரா அவர்களுக்கு விளக்கி விட்டு சென்றார்கள். அதை தான் வெளியில் சொன்னால் ஆட்சியாளர்களால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அபூஹுரைரா இந்த வார்த்தையை கொண்டு சொல்கிறார்கள். இப்படி ஹதீஸை தப்பு தப்பாக புரிந்து கொண்டதால தான் ஷியா , சூபியிசம், என்று உருப்படாத பிரிவுகள் தோன்றின.

    ReplyDelete
  47. சன்னி, ஷியா, சுஃபி மட்டுமா? 73 வகை கருத்தாக்கங்கள் உள்ளனவே.
    கீழே உள்ள வலை தளத்தினைக் காண்க.

    http://www.real-islam.org/73_8.htm

    ReplyDelete
  48. அருமையான பதிவுகள்...
    கற்றவரை கற்றவர்தான் அறிவார் போல
    ஒரு ஞானியை ஒரு ஞானிதான் அறிந்து,புறிந்து விளக்க முடியும். ஓசோதான் இந்த முடிச்சுகளை அழகாக அவிழ்கிறார்.
    http://naturehealthywealthy.blogspot.com

    ReplyDelete
  49. திராவிடமும்,ஆர்யமும் கலந்து போன ஒரு சமுதாய கட்டமைப்புகளை நாம் காணும் தற்கால இந்தியா...அதுவும் தமிழ்நாட்டில் பல்லின் மக்களின் கலப்பு ,மொழி,பண்பாடு,வாழ்வு முறை என பல்வேறு விதத்தில் மாறிபோயிருக்கிறது.அதுவேறின்றி தமிழர்,தமிழர் பண்பாடு,மொழி காப்பகம்,மொழியைப் பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட சட்டங்கள் அமலில் குறைவு.எனவே ஒரு தமிழன் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய வேண்டும்.தமிழ் படத்திற்கு வரிவிலக்கு செய்யும் அரசு ,தமிழர் வரலாற்றைப் பாதுக்காக்கவும் அதை மேன்மையுறவும் மொழி காப்பக வாரியமும், மொழி பண்பாட்டு அமைச்சு என புதிதாக அமைக்க வேண்டும்.தொடக்கப்பள்ளி முதல் பட்டம் பெறும் வரை தமிழ் மொழியும் கட்டாயக் கல்வியாக்கப் பட வேண்டும்.குடும்ப அரசியலை முற்றாக அகற்ற வேண்டும்

    ReplyDelete
  50. Soopara ezhuthirukkinga, innaikku paathi than padikkamudinjathi, meedi naalaikku kandipa padippen

    thanks

    ReplyDelete
  51. Itthana naala enga boss irundheenga??!!

    ReplyDelete