Monday, August 5, 2013

நோன்பைத் திறந்து... part-2

அடியான் அவனது இச்சையையும் உணவையும் குடிப்பையும் விட்டுவிடுவதாக அல்லாஹ் சொல்கிறான். நோன்பு என்னும் ரசவாதத்தில் இச்சை மறைந்து இறைக்காதல் தோன்றிவிடுகிறது.

“அவனது உணவையும் அவனது குடிப்பையும்” (அக்லஹு வ ஷுர்பஹு) என்று அல்லாஹ் கூறுகின்றான். நோன்பைத் திறக்கும் அடியானோ “(இறைவா!) உன்னுடைய இரணத்தைக் கொண்டே நோன்பைத் திறக்கிறேன்” (வ அலா ரிஸ்கிக அஃப்தர்த்து) என்று சொல்கிறான்.

அடியானின் உணவு (அக்லஹு) என்று அல்லாஹ் சொன்னதன் பொருள், அந்த உணவு அவனுக்காக படைக்கப்பட்டது என்பதாகும். இது இறைவன் தன் அடியானிடம் கொண்டுள்ள கருணையைக் காட்டுகின்றது.

அல்லாஹ்வின் உணவு (ரிஸ்கிக) என்று அடியான் சொல்வது, அந்த உணவுக்கும் அல்லாஹ்வுக்கும் உள்ள தொடர்பை அவன் உணர்ந்துகொண்டான் என்பதைக் காட்டுகின்றது. உணவு (ரிஜ்க்) உணவளிப்பவனான (ரஜ்ஜாக்) இறைவனிடமிருந்து வருகின்றது (மினல்லாஹ்) என்பது நோன்பிற்கு முன்பே உணரப்பட்டதுதான். நோன்பின் அனுபவத்தில் உணர்ந்து கொண்டது அதனினும் ஆழமான ஓர் உண்மை.

இரணம் (ரிஜ்க்) என்பதும் ஒரு படைப்புத்தான் (ஃகல்க்). எனவே அதன் எதார்த்தமும் ’ஃபனா’வே ஆகும். அதன் எதார்த்த நிலையும் இல்லாமை (அதமிய்யத்) ஆகும். அதற்கென்று தனியே உஜூது (உள்ளமை) ஏது? அதுவும் இறைவனின் உள்ளமையில் அவனால் தரிப்படுத்தப் பட்டுள்ளது (காயிம் பிமவ்ஜூதிஹி). ரிஜ்க் ரஜ்ஜாக்கை விட்டுப் பிரிந்தில்லை. இதை நோன்பாளி உணர்ந்து கொள்கிறான்.

”இறைவா! உன் உணவைக் கொண்டே நோன்பைத் திறக்கிறேன்” (வ அலா ரிஜ்கிக அஃப்தர்த்து) என்று அடியான் சொல்கிறான். நோன்பின் நிலையிலிருந்து உண்ணவும் பருகவுமான நிலைக்கு மீள்வதற்கு ’இஃப்தார்’ என்று சொல்லப்படுகிறது. இதன் வேர்ச்சொல் ’ஃபதர’ என்பதாகும். அதற்கு முக்கியமான மூன்று அர்த்தங்கள் உள்ளன: உடைத்தல், படைத்தல் மற்றும் இயற்கை (ஃபித்ரத்).

மனிதன் தான் படைக்கப்பட்ட இயற்கை நிலைக்கு மீள்கிறான் என்னும் பொருளிலும் அது இஃப்தார் ஆகிறது. உடைத்தல் என்னும் அர்த்தத்தில்தான் ஆங்கிலத்தில் அதனை Breakfast அதாவது to break the fast என்று கூறுகின்றார்கள். தமிழில் ”நோன்பு திறத்தல்” என்று நளினமாகச் சொல்கிறோம்.

அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்று “அல்-ஃபாத்திர்”. படைப்புக்களை இன்மையில் இருந்து உள்ளமைக்குக் கொண்டு வருபவன்.

“கூறுக: அல்லாஹ்வே! வானங்களின் மற்றும் பூமியின் படைப்பாளனே!”
(குலில்லாஹும்ம ஃபாத்திருஸ் சமாவாத்தி வல் அர்ள் – 39:46)

சரி, உடைத்தலுக்கும் படைத்தலுக்கும் என்ன சம்பந்தம்? விடையாகப் பின்வரும் திருவசனத்தைக் கருதலாம்:

“நிச்சயமாக அல்லாஹ்தான் தானியங்களையும் விதைகளையும் பிளப்பவன். இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகின்றான். உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றை வெளிப்படுத்துகின்றான். அவன்தான் அல்லாஹ். பின் எப்படி நீங்கள் திசைகெட்டுத் திரிகின்றீர்?” (இன்னல்லாஹ ஃபாலிக்குல் ஹப்பி வந்நவா; யுஃக்ரிஜுல் ஹய்ய மினல் மய்யி(த்)தி வ முஃக்ரிஜுல் மய்யி(த்)தி மினல் ஹய்ய்; தாலிகுமுல்லாஹு, ஃபஅன்னா து’ஃபகூன் -6:95)

தானியங்களும் வித்துக்களும் உடைகின்றபோதுதான் அவை முளை விட்டுச் சிறு செடியாகின்றன. உடைப்பவன் என்பதற்கு மேற்கண்ட திருவசனத்தில் வந்துள்ள சொல் ’ஃபாலிக்’ என்பதாகும். இந்தச் சொல்லின் வேரிலிருந்தே விடியல் நேரத்தைக் குறிக்கும் ஃபலக் என்னும் சொல் வருகின்றது. ஆங்கிலத்தில் Daybreak!

”கூறுக: விடியற்காலையின் ரட்சகனிடம் பாதுகாவல் தேடுகிறேன்”
(குல் அஊது பி-றப்பில் ஃபலக் -113:1)

தானியங்களும் விதைகளும் முளை விடுவதற்காகப் பிளக்கின்ற செயல்பாட்டிற்கும் இருளில் வெளிச்சம் பரவுகின்ற விடியலுக்கும் ஓர் உருவகத் தொடர்பை இறைவனின் ஞானம் நமக்கு உணர்த்துகின்றது.

இருளின் விதை பிளந்து
ஒளி முளைவிட்ட போது...

தொழுகைக்கான பாங்கழைப்பில் ஓதப்படும் வரிகள்:
ஹய்ய அலஸ் ஸலாத் – தொழுகையின் பக்கம் வாருங்கள்
ஹய்ய அலல் ஃபலாஹ் – வெற்றியின் பக்கம் வாருஙள்

ஃபலாஹ் – வெற்றி என்பது என்ன? அறபிகளின் தொன்மையான பொருளில் ஃபலாஹ் என்பது வித்து பிளந்து முளை விடுவதைக் குறிக்கும். அதாவது ஹயாத்தின் (வாழ்வின், ஜீவனின்) அடையாளம் அது.

அதற்கும் ஸலாத் – தொழுகைக்கும் என்ன தொடர்பு? தொழுகை என்பது ஒருவித ’ஃபலாஹ்’ – விதை பிளத்தல் ஆகும்.

“இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும் அவனின் தூதருக்கும் பதிலளியுங்கள், அவர் உங்களை உங்களுக்கு உயிரளிப்பதின் பக்கம் அழைக்கும்போது” (யா அய்யுஹல்லதீன ஆமனுஸ்தஜீபூ லில்லாஹி வ லிர்ரசூலிஹி இதா தஆகும் லிமா யுஹ்யீகும் – 8:24)

விடிகாலை என்பதென்ன? இருளின் மீது வெளிச்சம் பரவித் தன்னைக் காட்டிக்கொண்டு அதனை மறைப்பதாகும்.

படைத்தல் என்பது என்ன? படைப்புக்களின் எதார்த்த நிலையான அதமிய்யத்தின் (இன்மையின்) மீது அல்லாஹ் தன் உள்ளமையின் (உஜூதின்) சுடர்களை வெளிப்படுத்துவது (ஜுஹூர்). படைப்புக்களின் இன்மையான குணங்களை (சிஃபாத்தே நாக்கிஸா) தன் பூரணமான குணங்கள் (சிஃபாத்தெ காமிலா) கொண்டு மறைப்பது.

எனவே விடியல் தொழுகையின் (ஃபஜ்ரு / ஸுப்ஹு) பாங்கழைப்பில் கூடுதலாகச் சொல்லப்படுகின்றது:
அஸ்ஸலாத்து ஃகைரும் மினன் நவ்ம்” – தூக்கத்தை விட தொழுகை மேலானது – உறக்கத்தினும் தொழுகை நன்று.

(6:95)-ஆம் திருவசனத்தில் விதை பிளத்தலைத் தொடர்ந்து ”இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகின்றான்” (யுஃக்ரிஜுல் ஹய்ய மினல் மய்யி(த்)தி) என்று அல்லாஹ் சொல்வதன் ஒரு விளக்கம் இது.

எவ்வாறெனில், நபி(ஸல்) நவின்றார்கள்: ’தூக்கம் என்பது மரணத்தின் சகோதரன்’ (நூல்:மிஷ்காத்).

திருக்குர்ஆனில் உறக்கம் என்பது மரணத்திற்கும், உறக்கத்திலிருந்து விழித்தெழுவது வாழ்விற்கும் தொடர்புபடுத்திப் பேசப்பட்டுள்ளது:
”அவன்தான் இரவில் உங்களை மரிக்கச் செய்கிறான். மேலும், நீங்கள் பகலில் செய்தவற்றை எல்லாம் அறிகிறான். குறித்த தவணை முடிவதற்காக மீண்டும் உங்களைப் பகலில் எழுப்புகிறான்” (ஹுவல்லதீ யதவஃப்பாக்கும் பில் லைல் வ யஃலமு மா ஜரஹ்தும் பின்நஹாரி ஸும்ம அப்அஸுகும் ஃபீஹி லியுக்ளா அஜலும் முசம்மன் – 6:60)

”அல்லாஹ் உயிர்களை அவர்கள் மரணிக்கும்போதும், மரணிக்காதவர்களுக்கு அவர்களின் தூக்கத்திலும் கைப்பற்றுகிறான். பின்பு, எதன்மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை நிறுத்திக் கொள்கிறான். பிறவற்றை குறித்த தவணை வரை அனுப்பி விடுகிறான். சிந்திப்போருக்கு இதில் அத்தாட்சிகள் உள்ளன” (அல்லாஹு யதவஃப்பல் அன்ஃபுச ஹீன மவ்த்திஹா வல்ல(த்)தீ லம் தமுத் ஃபீ மஹாமிஹா. ஃபயும்சிகுல்லதீ களா அலைஹல் மவ்த்த வ யுர்சிலுல் உஃக்ரா இலா அஜலிம் முசம்மன். இன்ன ஃபீ தாலிக லஆயாதில் லிகவ்மின் யதஃபக்கரூன் -39:42)

எனவே, உறங்கச் செல்லும்போது நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள்:
”உன் பெயரைக் கொண்டு, அல்லாஹ்வே!, மரணிக்கிறேன் பின் உயிர்த்தெழுகிறேன்” (பிஸ்மிக்க அல்லாஹும்ம அமூத்து வ அஹ்யா – நூல்: முஸ்லிம், ஃபத்ஹுல் பாரீ)

”உன் பெயரைக் கொண்டு, என் ரட்சகனே, என்னைச் சாய்க்கிறேன். உன்னைக் கொண்டே எழுகிறேன். நீ என் உயிரைக் கைப்பற்றினால் அதன் மீது கருணை செய். நீ அதை மீண்டும் அனுப்பினால் அதைப் பாதுகாப்பாயாக, உனது நல்லடியார்களை நீ பாதுகாப்பதைப் போல்” (பிஸ்மிக்க றப்பீ வளஃது ஜன்ம்பீ, வபிக அர்ஃபஉஹு, ஃபஇன் அம்சக்த நஃப்சீ ஃபர்ஹம்ஹா, ஃபஇன் அர்சல்தஹா ஃபஹ்ஃபழ்ஹா, பிமா தஹ்ஃபழு பிஹி இபாதகஸ் ஸாலிஹீன் – நூல்: புகாரி, முஸ்லிம்)

”அல்லாஹ்வே! நீயே என் ஆன்மாவைப் படைத்தாய், நீயே அதனை எடுத்துக்கொள்கிறாய். அதன் மரணமும் அதன் வாழ்வும் உனக்கே. நீ அதற்கு வாழ்வளித்தால் அதனைப் பாதுகாப்பாயாக. நீ அதை மரணிக்கச் செய்தால் அதற்கு மன்னிப்பு அளிப்பாயாக. அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உன்னிடம் ஆரோக்கியத்தை வேண்டுகிறேன்” (அல்லாஹும்ம இன்னக ஃகலக்த நஃப்சீ வ அன்த தவஃப்பாஹா லக மமாத்துஹா வ மஹ்யாஹா, இன் அஹ்யய்தஹா ஃபஹ்ஃபழ்ஹா வ இன் அமத்தஹா ஃபக்ஃபிர் லஹா, அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்கல் ஆஃபியத் – நூல்: முஸ்லிம், அஹ்மத்)
 
ஆக, உறங்கி எழும் நேரமான விடியல் என்பது வாழ்வுடனும் படைப்புடனும் தொடர்புடையதாக உள்ளது.

“இருளின் விதை பிளந்து
ஒளி முளைவிட்ட போது
என்னை அழைத்தாய் நீ
வைகறையின் வாசலில்
சட்டென்று என்னில் நிறைந்தாய் நீ”

விடியலை அறபியில் ’ஃபஜ்ரு’ என்றும் சொல்வார்கள். ஃபஜர என்னும் வேர்ச்சொல்லுக்கு உடைத்தல், பிளத்தல் ஆகிய அர்த்தங்கள் உண்டு.

ஃபலாஹ் என்றால் வெற்றி என்றும் அது விதை பிளத்தலைக் குறிக்கும் என்றும் கண்டோம். வெற்றி என்பதைக் குறிக்க இன்னொரு சொல் ஃபதஹ் என்பதாகும்.
அல்லாஹ் தன் நேச நபியைப் பார்த்துச் சொல்கிறான்:
”நிச்சயமாக நாம் உமக்குத் தெளிவான வெற்றியாக வெற்றியளித்தோம்” (இன்னா ஃபதஹ்னா லக ஃபத்ஹம் முபீனா – 48:1)

’ஃபத்ஹ்’ என்பதன் (வேர்ச்சொல்: ஃபதஹ) பொருள் என்ன? திறத்தல், ஆரம்பித்தல். எனவே திருக்குர்ஆனின் திறப்பாகவும் ஆரம்பமாகவும் அமைந்த அத்தியாயத்தின் பெயர் “அல்-ஃபாத்திஹா” என்றானது.

எனவே, (48:1)-ஆம் திருவசனத்தின் உட்பொருள்: “(நபியே) மகத்தான திறப்பாக உமக்கு நாம் திறந்தோம்.”

இது தொடர்பாக இன்னொரு திருவசனம்: “உமக்காக உம் நெஞ்சை நாம் விரிவாக்க வில்லையா?” (அலம் நஷ்ரஹ் லக ஸத்ரக் -94:1)

படைப்புக்கள் அனைத்திற்கும் நபியே மகத்தான திறப்பாவார், ஆரம்பமாவார். பிரபஞ்ச நூலின் அல்-ஃபாத்திஹா அவர்களே.

நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “வேதநூலின் திறப்பு இன்றித் தொழுகை இல்லை” (லா ஸலாத்த இல்லா பில் ஃபாத்திஹத்தல் கிதாப் – அறிவிப்பாளர்: உபாதா இப்னுஸ் சாமித் (ரலி), நூல்: புகாரி: அத்தியாயம்-12/ 723, சுனன் இப்னு மாஜா: அத்தியாயம்-7 /837).

ஃபாத்திஹா அத்தியாயத்திற்கு ‘உம்முல் குர்ஆன்’ (குர்ஆனின் தாய்) என்றும் ஒரு பெயர் உண்டு. நபி(ஸல்) நவின்றார்கள்: “எவர் தொழுகையில் உம்முல் குர்ஆனை ஓதவில்லையோ அவரின் தொழுகை செல்லாது” (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: சுனன் இப்னு மாஜா- அத்தியாயம்-7 / 838)

”உம்முல் குர்ஆன்” என்று சொல்லப்பட்டதன் காரணம் குர்ஆன் முழுவதும் அதிலிருந்து விளக்கமாக வெளிப்படுத்தப்பட்டதே. அதாவது, குர்ஆன் முழுவதும் அதனுள் அடக்கம். உம்ம் (தாய்) என்னும் சொல் இங்கே மூலம் (Source) என்னும் பொருளில் அமைந்துள்ளது.

படைப்புக்கள் முழுமைக்கும் பிரபஞ்சம் முழுமைக்கும் ’உம்மி’ நபியான முஹம்மத் (ஸல்) அவர்களே திறப்பாகவும் ஆரம்பமாகவும் மூலமாகவும் இருக்கின்றார்கள். அந்த நபியில் பிரபஞ்சம் முழுவதுமே அடக்கம்!

இனி, விடியல் – தொழுகை – பிளத்தல் – படைத்தல் - இஃப்தார் என்னும் பொருண்மைகளின் பக்கம் கவனத்தை மீட்போம்.

விடியலுக்கு அரபியில் உள்ள இன்னொரு பெயர் ‘ஸுப்ஹு’. விடியலை அல்லாஹ் வாழ்வுடன் அடையாளப்படுத்திச் சொல்லும் திருவசனத்தில் இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளான்:
“விடியலின் மீது சத்தியமாக, அது சுவாசிக்கும் போது”
(வஸ்ஸுப்ஹி இதா தனஃப்பஸ் -81:18)
மூச்சு விடுதல் என்பது வாழ்வின் அடையாளம் அன்றோ!

விடிகாலையில் தொழப்படும் ஃபலக், ஃபஜ்ரு ஆகிய சொற்களுக்கு உடைதல், பிளத்தல் என்னும் அர்த்தங்கள் உண்டு.

நோன்பு திறத்தல் என்பதைக் குறிக்கும் இஃப்தார் (ஃபதர) என்பதற்கும் உடைத்தல், பிளத்தல் என்னும் அர்த்தங்கள் உண்டு.

இந்த பிளத்தல் உடைதல் என்பவை தானியங்கள், விதைகள் ஆகியவை பிளந்து செடிகளும் பயிர்களும் பிறத்தலைக் குறிக்கின்றன. இதனால் அவை படைத்தல் என்பதைக் குறிப்பதாகின்றன.

ஃபதர என்னும் வேரிலிருந்தே அல்லாஹ்வின் திருநாமங்களுள் ஒன்றான ‘அல்-ஃபாத்திர்’ (படைப்பவன்) என்பது வருகின்றது.

இருளில் ஒளி பரவும் நேரம் விடியல். அது ஃபஜ்ரு. அது ஃபலக்.

என் அதமிய்யத்தில் (இன்மையில்) அல்லாஹ்வின் உள்ளமையின் சுடர்கள் பிரதிபலித்து என்னை நிலைப்படுத்தி வைத்திருக்கிறான் என்னும் அனுபவ உணர்வைத் திறப்பது இஃப்தார்.

அதை நான் அவனது உணவைக் கொண்டே திறக்கிறேன். உணவு மட்டுமென்ன, சுயமாகவா நிலைப்பட்டுள்ளது? அதுவும் அதம் (இன்மை) அல்லவா? படைப்பு (ஃகல்க்) அல்லவா? அதுவும் அவனின் உள்ளமையைக் கொண்டே நிலைப்படுத்தப் பட்டுள்ளது. (அவன் உணவாகிவிடவும் இல்லை, உண்பவன் ஆகிவிடவும் இல்லை என்னும் நிலையில்) உணவிலும் உண்பவனிலும் இருந்து உண்பவனுக்கு உணவை ஊட்டுபவன் அவனே. இது ரஜ்ஜாக் (உணவளிப்பவன்) என்பதன் விளக்கம் (தஃரீஃப்). எனவே, உணவில் உணவளிப்பவனை அடைவதே ’இஃப்தார்’ ஆகிறது.

இது நோன்பாளிக்கு கிடைக்கும் இரண்டு இன்பங்களில் முதலாவதாகும். அந்த இரண்டு இண்பங்களாக அல்லாஹ் சொல்கிறான் (ஹதீஸ் குத்ஸி): ”நோன்பாளிக்கு இரண்டு இன்பங்கள் உள்ளன: இஃப்தாரின் போதுள்ள இன்பம் மற்றும் அவன் தன் ரட்சகனைச் சந்திப்பதின் போதுள்ள இன்பம்” (லிஸ்ஸாயிமி ஃபர்ஹத்தானி ஃபர்ஹத்துன் ஹீன யுஃப்திரு வ ஃபர்ஹத்துன் ஹீன யல்கா றப்பஹு)

இஃப்தாரில் நோன்பாளி அடையும் முதலாம் இன்பம் – உணவில் உணவளிப்பவனை அடைந்துகொள்வது – சிறிய சந்திப்பு (லிகாயே அஸ்கர்) ஆகும். ஏனெனில் இதில் உணவு என்னும் திரையின் இடையீடு இருக்கின்றது.

நோன்பாளியின் இரண்டாம் இன்பம் என்று சொல்லப்பட்டுள்லது மறுமையில் அவன் தன் ரட்சகனைச் சந்திப்பதாகும். அது பெரிய சந்திப்பு (லிகாயே அக்பர்) ஆகும். அங்கே அவன் எவ்வித இடையீடுமின்றித் தன் இறைவனைச் சந்திப்பான்.

”சூரத்துல் கியாமத்” – ’மறுமை’ என்னும் அத்தியாயத்தில் அல்லாஹ் சொல்கிறான்:
“முகங்கள் அந்நாளில் பிரகாசிக்கும்
தம் ரட்சகனைப் பார்த்தபடி”
(உஜூஹுன்ய் யவ்மஇதின் நாளிர(ஹ்)
இலா றப்பிஹா நாழிர(ஹ்) -75:22,23)


இஃப்தார் என்னும் இந்தச் சிறிய சந்திப்பு அந்தப் பெரிய சந்திப்பிற்கு நம்மைத் தயார் செய்கின்றது.

(to be continued...)

Sunday, August 4, 2013

நோன்பைத் திறந்து... - part 1


இவ்வருட ரமலானின் ஆரம்பத்தில் இருந்தே மனம் நோன்பு வைக்கவும் திறக்கவும் சொல்லப்படும் மந்திரங்களின் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டது.

மரபாகச் சொல்லப்பட்டு வரும் மந்திரங்கள் ஆதாரமானவை அல்ல என்று ஒரு சிலர் ஆட்சேபனை செய்கின்றார்கள். நோன்பு வைக்க எந்த மந்திரமும் சொல்லத் தேவை இல்லை என்றுகூட சிலர் சொன்னார்கள். உண்மைதான். யார் இல்லை என்றார்கள்?

அலசிப் பார்த்ததில் மரபாகச் சொல்லப்பட்டு வரும் இந்த மந்திரங்கள் ஹதீஸ்களில் காணப்படும் மந்திரங்கள் சிலவற்றை ஒன்றாகக் கலந்து கோர்வை செய்யப்பட்டவை என்பது தெரிந்தது. அப்படிக் கோர்வை செய்தவர்கள் அஞ்ஞானிகள் அல்லர் என்பதும் புலப்பட்டது.

நோன்பு நோற்பதற்காக ஓதப்படும் மந்திரம் என்று ஹதீஸில் காணப்படுவது:
“வபி ஸவ்ம கதின் நவைத்து மின் ஷஹ்ரி ரமலான்” (ரமலான் மாதத்திலிருந்து பகலின் நோன்பிற்கு ’நிய்யத்’ செய்கிறேன்) [நூல்: அபூ தாவூத்]

இந்த ஹதீஸின் அடிப்படையில் உருவான ஒரு வாசகத்தைதான் மரபாக இங்கே ஓதி வருகின்றார்கள்: ”நவைத்து ஸவ்ம கதின் அன் அதாயி ஃபர்ளி ரமலான ஹாதிஹிஸ் ஸனத்தி லில்லாஹி தஆலா” (இவ்வருட ரமலானின் கடமையான நோன்பை பணிவுடன் பகலில் அல்லாஹ்வுக்காக நோற்க நிய்யத் செய்கிறேன்)

மாலை அந்திப் பொழுதில் நோன்பினை முடிக்கும்போது (இஃப்தார்) ஓதப்படும் மந்திரமாக ஹதீஸில் உள்ளது:
அல்லாஹும்ம இன்னீ லக ஸும்து வபிக ஆமன்து வஅலா ரிஸ்கிக அஃப்தர்த்து” (அல்லாஹ்வே! நிச்சயமாக நான் நோன்பு வைத்தேன், மேலும் உன்னையே நம்பினேன், மேலும் உன் இரணத்தின் மீதே நோன்பைத் திறக்கிறேன்) [நூல்: அபூதாவூத்: 2358]

இம்மந்திரத்தின் இடையே ‘வஇலைக்க தவக்கல்த்து’ (மேலும் உன்னிடமே பொறுப்பு வைத்தேன்) என்பதும் இணைக்கப்பட்டு மரபாக ஓதப்பட்டு வருகின்றது. மேலும் இதன் இறுதியில் “ஃபதகப்பல் மின்னீ” (என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக) என்று ஓதப்படுகின்றது. அதன் முகாந்திரம் பின்வரும் ஹதீஸ் ஆகும்:

உபாதா இப்னு ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”ரமலான் நெருங்கும் காலத்தில் நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குப் பின்வருமாறு ஓதும்படிக் கற்றுத்தந்தார்கள்: ”அல்லாஹ்வே! ரமலானுக்கு எங்களைப் பாதுகாப்பாயாக, ரமலானை எங்களுக்குப் பாதுகாப்பாயாக; என்னிடமிருந்து அதனை நீ ஏற்றுக் கொள்வாயாக!” (அல்லாஹும்ம சல்லிம்னீ லிரமலான வ சல்லிம் ரமலான லீ வ தசல்லம்ஹு மின்னீ முதகப்பலா – நூல்: தபரானீ 912, 913; கன்ஸுல் உம்மால்)

நோன்பு வைப்பதற்கு சொல்லப்படும் மந்திரத்தில் ’நவைத்து’ (நிய்யத் செய்கிறேன்) என்று வந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: ‘இன்னமல் அஃமாலு பிந்நிய்யாத்’ (செயல்கள் அனைத்தும் நிய்யத்துக்களின் படியே அமைகின்றன). [அறிவிப்பாளர்: உமர் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்]

நிய்யத் என்னும் சொல் ஆங்கிலத்தில் INTENTION என்றும் தமிழில் எண்ணம் என்றும் மொழிபெயர்க்கப் படுகின்றது. ஆனால் எண்ணம் என்னும் சொல் அத்தனை சரியானதாகப் படவில்லை. ஏனெனில் உள்ளத்தின் செயல்பாடுகள் சம்பந்தப்பட்ட சொற்கள் அறபியில் நிறைய உள்ளன:

ஃகயால் – கற்பனை – Imagination; திக்ரு – நியாபகம் – Remembrance; ஃபிக்ரு – சிந்தனை – thinking, contemplation; ழன்ன் – அனுமானம், கருத்து – hypothesis, postulation; ரைய் – சுயக்கருத்து – opinion; இராதத் – நாட்டம் – will. வேண்டாம், மொழிச் சிக்கலில் இறங்கினால் நம் இழையைத் தவரவிட்டு விடுவோம்.

ஆனால், நிய்யத் என்பதற்கு ‘எண்ணம்’ என்பதை விடவும் ‘தேட்டம்’ என்னும் சொல் பொருத்தமானது. ஏனெனில் நிய்யத் என்பது ஒரு துஆ (பிரார்த்தனை), கோரிக்கை (இக்திளா). அதில் என் இயலாமை (இஜ்ஸ்) வெளிப்படுகின்றது.

நோன்பு வைப்பதற்கான மந்திரத்தில் ’நவைத்து’ – ’நான் நிய்யத்திக்கிறேன்’ என்றே உள்ளது. நோன்பிற்காக இறைவனிடத்தில் ‘நான்’ வைக்கும் கோரிக்கை அது. இந்தக் கோரிக்கையை அவனிடம் வைக்கும் என்னுடைய ’நான்’ (அனிய்யத் – ego) என்பது எதார்த்தத்தில் அவனுடைய அனிய்யத்தின் நிழல்தான். இது ’இளாஃபீ அனா’ (உள்ளமையற்ற சுயத்தின் தன்னுணர்வு) ஆகும்.

’நவைத்து ஸவ்ம’ – நோன்பு வைக்க ’நிய்யத்’திக்கிறேன். அதாவது நோன்பை நான் வைக்க முடியாது. என்னில் நோன்பை அவன்தான் வைக்க வேண்டும்.

நோன்பு பற்றிய பிரபலமான ஹதீஸ் குத்ஸி ஒன்றை கவனியுங்கள்:
“நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: அல்லாஹு தஆலா கூறுகின்றான்: ‘நோன்பு என்னுடையயது, அதற்கு நானே சன்மானம் தருகின்றேன். நோன்பாளி அவனது இச்சையையும் அவனது உணவையும் அவனது குடிப்பையும் எனக்காக தவிர்த்து விடுகிறான். நோன்பு என்பது ஒரு கவசம். நோன்பாளிக்கு இரண்டு இன்பங்கள் உள்ளன: ஒன்று அவன் நோன்பைத் திறக்கும் போது, இன்னொன்று அவன் தன் இரட்சகனைச் சந்திக்கும்போது. நோன்பாளியின் வாயின் மாறிய வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியை விடவும் நறுமணமானது.” (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸாயீ, இப்னு மாஜா)

அஸ்ஸவ்மு லீ” (நோன்பு என்னுடையது) என்கிறான் அல்லாஹ் அதாவது, உண்ணாமல் பருகாமல் இருப்பது அல்லாஹ்வின் நிலை. உணவும் குடிப்பும் அவனுக்குத் தேவை இல்லை. அந்த ஹால் (நிலை) நம்மில் பிரதிபலிப்பது நோன்பு. அதை அவன்தான் நம்மில் பிரதிபலிக்க வேண்டும்.

இந்த வகையில் நோன்பு என்பது அல்லாஹ்வில் அடியானின் ’நான்’ அழிந்து போகும் ஃபனா ஃபில்லாஹ் என்னும் நிலையாகும். அழிந்து போதல் என்பதன் கருத்து இல்லாமல் ஆதல் அல்ல. மறைந்து போதல் ஆகும். இருளும் ஒளியும் போல. ஒளி வந்ததும் இருள் மறைந்துவிடுகிறது. ஆனால் இருள் அங்கேதான் இருக்கிறது. ஒளி அதனை மறைத்துத் தன்னைக் காட்டுகின்றது. அல்லாஹ்வின் நிலை நம்மில் பிரதிபலிப்பது அதனைப் போன்றதே (பிலா தஷ்பீஹ்)

அடியானின் ‘நான்’ சுயமாக, அதுவாகவே ஃபனா ஆக முடியாது. அல்லாஹ்தான் தன்னில் அதை அழிக்க வேண்டும். எனவேதான் ’நான் நோன்பு வைக்கிறேன்’ (அனா அஸூமு) என்று சொல்லாமல் ’நவைத்து ஸவ்ம’ என்று நோன்பிற்கான தேட்டத்தை, கோரிக்கையை முன் வைக்கிறேன்.

நோன்பில் அடியான் அனுபவிக்க வேண்டிய தத்துவம் பின்வரும் திருவசனங்களின் பொருளைத்தான்:

“அதன் மீதுள்ள அனைத்தும் அழிந்துவிடும்
பின், மகத்துவமும் கண்ணியமும் மிக்க
நும் ரட்சகனின் முகம் மட்டுமே நிலைத்திருக்கும்”
(குல்லு மன் அலைஹா ஃபான்;
வ யப்கா வஜ்ஹி றப்புக துல் ஜலாலி வல் இக்ராம்
-55:26, 27)

ஃபனா ஆகும் படைப்புக்கள் அப்படியே இல்லாமல் ஆகிவிடுவதில்லை. மீண்டும் உள்ளமையில் கொண்டுவரப் படுகின்றன. சொர்க்கவாசிகளுக்கு அருளப்படும் உடல்களின் அமைப்பு இம்மையில் அவர்களுக்கு இருந்த உடலமைப்பினும் வேறுபட்டது. மாறா இளமை. அதற்குக் கழிவுகள் இல்லை. வியர்வையோ கஸ்தூரி மணம்.

இம்மையுலகம் ’தாருல் ஃபனா’ (அழியும் உலகம்) என்றும் மறுமையுலகம் ‘தாருல் பகா’ (நிலைத்திருக்கும் உலகம்) என்றும் சொல்லப்படுகின்றன.

அல்லாஹ்வில் ஃபனா ஆகிவிட்ட ’நான்’ என்பது அவனால் மீண்டும் நிலைப்படுத்தப் படுகின்றபோது அதன் அமைப்பே மாறிவிடுகின்றது. அல்லாஹ்வைக் கொண்டு அவனின் பொருத்தத்தில் இருக்கும் ’பகா பில்லாஹ்’ என்னும் நிலை அது. 

அடியானின் இயற்கை நிலை உண்ணலும் பருகலுமாகும். நோன்பின் நிலையில் இருந்து அந்த நிலைக்கு அடியானை அல்லாஹ் திருப்புகின்ற தருணத்தில் அவன் சொல்கிறான்: “அல்லாஹும்ம லக ஸும்து” (அல்லாஹ்வே உனக்காக நான் நோன்பு வைத்தேன்).

இங்கே அடியான் சொல்கிறான்: ‘ஸும்து’ (நான் நோன்பு வைத்தேன்)! இது அல்லாஹ்வைக் கொண்டு ‘பகா’ (தரிப்பாடு) நிலையில் உள்ள அனிய்யத்தின் பேச்சாகும். இது அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்பட்ட ’நான்’ (அனா) ஆகும்.

”நான் என்பதைப் புரட்டு நான் என்றே ஆகும்
லா இலாஹ இல்லல்லாஹ் என்பதன்
தெளிவான முகவரி இதுவே”
(அனா கோ பல்ட்டோ அனா ஹீ ஹே
யஹீ ஹே சாஃப் ப(த்)தா லா இலாஹ இல்லல்லாஹ்)
-பீர் கவ்ஸி ஷாஹ் அக்பரி (ரஹ்)

நோன்பு எதற்காக நோற்கப்பட்டது? அல்லாஹ்வே சொல்கிறான், “நோன்பாளி அவனின் இச்சைகளையும் அவனின் உணவையும் அவனின் குடிப்பையும் எனக்காகத் தவிர்த்துக் கொள்கிறான்” (யதவு ஷஹ்வதஹு வ அக்லஹு வ ஷுர்பஹு மின் அஜ்லீ)

மஹர் (மணக்கொடை) கொடுக்கப்படுவது மணப்பெண்ணுக்காக எனில் அந்த மணப்பெண்ணைத்தான் அடையப்பட வேண்டும். அவள் அன்றி வேறு பொருட்களை, அவளின் சொத்து பத்துக்களை அடைவது திருமணத்தின் நோக்கம் அல்ல.

சூஃபிகள் சொல்கிறார்கள்: ”யாருக்காக நோன்பு நோற்கப்பட்டதோ அவனை அடைதல் வேண்டும். அவன் அன்றி அவனின் சொர்க்கம் கிடைப்பது நோன்பின் நோக்கம் அல்ல”


அல்லாஹ்வின் வாக்கு: “நோன்பு என்னுடையது நானே அதற்குக் கூலி தருகிறேன்” (அஸ்ஸவ்மு லீ, வ அனா அஜ்ஸீ பிஹி). இந்த ’இபாரத்’ (பிரதிப் பொருள்) உணர்த்தும் ’இஷாரத்’ (குறிப்புப் பொருள்)-ஆக சூஃபிகள் சொல்கிறார்கள்: வ அனா உஜ்ஸா பிஹி – அதற்கு நானே கூலியாகி விடுகிறேன்! (தஷ்கீல் இல்லாத பிரதிகளாகவே அறபியில் இருக்குமாதலால் இரண்டு விதமாகவுமே வாசிக்க இயலும்.) இறைக்காதலர்களுக்கு இதை விளங்குவதில் முஷ்கில் (கஷ்டம்) ஏதும் இல்லை!

(to be continued...)

Sunday, July 28, 2013

மனதில் (3) உறுதி வேண்டும் - part3

மூன்று வகை யகீன்களையும் சொல்லும் திருக்குர்ஆன் தன்னைக் குறிப்பாக எதனுடன் அடையாளப்படுத்திக் காட்டுகிறது என்பதைப் பார்ப்போம்:

“மேலும் நிச்சயமாக அது மெய்த் திட்பமாகும்” (வ இன்னஹூ ல-ஹக்குல் யகீன் – 69:51)

திருக்குர்ஆன் தன்னை ’ஹக்குல் யகீன்’ என்றே அழைத்துக் கொள்கிறது. அதாவது அது இறையனுபவ நூலாகும்.

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் “முஹ்யீ” (உயிரளிப்பவன்) என்பதும் ஒன்று.

“இது ஏனெனில்
நிச்சயமாக அல்லாஹ்வே சத்தியம்
(தாலிக பிஅன்னல்லாஹ ஹுவல் ஹக்கு)
நிச்சயமாக அவனே மரித்தோரை உயிர்ப்பிக்கிறான்
(வ அன்னஹு யுஹ்யில் மவ்த்தா)”
(22:6)

இத்திருவசனத்தின் மேற்கண்ட இரண்டு பகுதிகள் இரண்டு சூஃபி மகான்களை – இறை நேசர்களை என் நினைவில் கொண்டு வருகின்றன. அவ்விருவரும் இறையனுபவத்தின் இருவேறு நிலைகளில் நின்று செயல்பட்டவர்கள்.

அவ்விருவரில் ஒருவரான மன்சூர் அல்-ஹல்லாஜ் (ரஹ்) இறையனுபவத்தில் தன்னை மறந்த நிலையான ‘மஹ்வ்’ என்னும் நிலையில் மூழ்கியவராக இருந்தார். அல்லாஹ் அவரை ‘அனல் ஹக்’ (நானே சத்தியம்) என்று சொல்ல வைத்தான்.

அவ்விருவரில் மற்றவரான முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்கள் இறையனுபவங்களில் தன்னுணர்வைத் தக்க வைத்திருக்கும் ‘ஸஹ்வ்’ என்னும் நிலையில் நிற்பவராக இருந்தார். அல்லாஹ் அவர்களை ‘கும் பிஇத்னீ’ (என் கட்டளையைக் கொண்டு எழு) என்று சொல்லவைத்து மரித்த பிணத்தை உயிருடன் எழ வைத்தான். இஃது அன்னாரின் கராமாத்துக்களில் (அற்புதங்களில்) ஒன்றாக விதந்துரைக்கப் படுகின்றது.

”நிச்சயமாக அவனே மரித்தோரை உயிர்ப்பிக்கிறான்” (22:6)
“நிச்சயமாக இறந்தோரை நாமே உயிர்ப்பிக்கிறோம்” (36:12)
இந்த அறிவு ’இல்முல் யகீன்’ என்னும் நிலை.

இப்றாஹீம் (அலை) இதனைக் காட்சியாகவே காணவேண்டும் என்று கேட்டார்கள். அந்த ஐனுல் யகீன் என்னும் நிலை அவர்களுக்கு அருளப்பட்டது.

“ஹக்குல் யகீன்” ஆன திருக்குர்ஆனின் வழியே இறையனுபவங்களில் மூழ்கியவருக்கு அது அனுபவத்திலேயே கண்டடைவதாக உள்ளது.

ஒவ்வொரு கணமும் இறைவனிடமிருந்து என்னில் ஜீவன் (ஹயாத்) வந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு கணமும் அவன் என்னை உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கிறான் என்பதை உணர்ந்து திளைப்பது அந்த அனுபவத்தின் ஆரம்ப நிலையாகும்.

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்களின் வழியே அல்லாஹ் நிகழ்த்திய கராமத் (அற்புதம்) – அதாவது இறந்தவரை உயிர்ப்பிப்பதற்கு இறைவனின் கருவியாகத் தான் ஆகிவிடும் நிலை அந்த அனுபவத்தின் உச்ச நிலையாகும்.

நபி ஈசா (அலை) [ஏசுநாதர்] இந்த அடிப்படையில் நிகழ்த்திய இரண்டு அற்புதங்களை குர்ஆன் பதிவுசெய்கின்றது:

1.”மேலும், என் உத்தரவைக் கொண்டு நீர் களிமண்ணினால் பறவை வடிவத்தைப் போல் படைத்து (வ இத் தஃக்லுகு மினத் தீனி கஹையத்தித் தைரி பி-இத்னீ) அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவை ஆகியது (ஃபதன்ஃபுஃகு ஃபீஹா ஃபதகூனு தைரன்(ம்) பி-இத்னீ )” (5:110)

2.“(மர்யமுடைய மகன் ஈசாவே!) இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறையிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைவு கூர்க) (வ இத் துஃக்ரிஜுல் மவ்த்தா பி-இத்னீ )” (5:110)

இந்தத் திருவசனத்தில் ஈசா நபியிடம் அல்லாஹ் உரையாடுகின்றான். எனவே “பி-இத்னீ” (என் உத்தரவைக் கொண்டு) என்பதை அல்லாஹ்வின் பக்கம் சார்த்திப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நிகழ்வுகள் ஈசா (அலை) அவர்களின் வழியே அல்லாஹ் நிகழ்த்திய அற்புதங்கள் (முஃஜிஸா – இறைத்தூதர்கள் வழி நிகழும் அற்புதங்கள்) ஆகும்.

இறைத்தூதர்களும் இறைநேசர்களும் இறைவனின் கருவிகள் ஆவர். அவர்களின் வழியே நிகழும் அற்புதங்கள் (இயற்கை வழமை இகந்த நிகழ்வுகள், மீவியற்கை நிகழ்வுகள்) உண்மையில் இறைவன் நிகழ்த்துபவைதான். அவற்றை இறைவனின் கருவிகளான இறைத்தூதர்களும் இறைநேசர்களும் சுயமாகவே நிகழ்த்துகிறார்கள் என்று நினைப்பது தவறான புரிதலாகும்.

ஈசா (அலை) இறைவனின் கருவியாக இருந்தார்கள்.

“மர்யமின் மகன் மஸீஹ் (என்னும் ஈசா (அலை)) இறைவனின் தூதரே அன்றி வேறில்லை” (மல் மஸீஹுப்னு மர்யம இல்லா ரசூலுன் – 5:75)

இறைவனின் கருவியாக அவர்கள் இருக்கும் நிலையில் அவர்களின் வழியே இறைவனின் உத்தரவு வெளியாவது தன்னிலையாகவும் இருக்கலாம் படர்க்கையாக்வும் இருக்கலாம். அதாவது ‘கும் பி-இத்னில்லாஹ்’ (அல்லாஹ்வின் உத்தரவைக் கொண்டு) என்று வெளிப்பட்டாலும் ‘கும் பி-இத்னீ’ (என் உத்தரவைக் கொண்டு) என்று வெளிப்பட்டாலும் அது அல்லாஹ்வின் உத்தரவுதான்.

மூசா (அலை) அவர்கள் தீப்பிடித்த புதர் ஒன்றிலிருந்து நெருப்புக் கொள்ளியை எடுக்கச் சென்ற போது அல்லாஹ் அந்த புதரின் வழியே அவர்களை அழைத்துப் பேசினான். பேசுவது புதர் அல்ல, அல்லாஹ்தான் என்பதை மூசா நபி புரிந்துகொண்டார்கள்.

“நிச்சயமாக நான்தான் அல்லாஹ் (இன்னனீ அனல்லாஹ்); என்னைத் தவிர வேறு தெய்வம் இல்லை (லா இலாஹ இல்லா அன); என்னையே வணங்குவீராக (ஃபஃபுதுனீ); என்னை தியானிப்பதற்காகத் தொழுகையைப் பேணுவீராக (வ அகிமிஸ் ஸலாத்த லிதிக்ரீ)” (20:14)

இந்த வாக்கியங்கள் எரியும் புதர் பேசியவை அல்ல. அந்தப் புதரின் வழியே அல்லாஹ் பேசியவை. இதில் உள்ள ’நான்’ (அனா) அந்தப் புதருக்குச் சொந்தமான சுயம் அல்ல, அல்லாஹ்வின் சுயமாகும்.

அதேபோல், மன்சூர் அல்-ஹல்லாஜ் (ரஹ்) அவர்களின் வழியே வெளிப்பட்ட ‘அனல் ஹக்’ என்பதில் உள்ள ’நான்’ (அனா) அல்லாஹ்வுக்கு உரியதாகும்.

அப்துல் காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்களின் உத்தரவில் இருந்த நான் (இத்னீ – என் உத்தரவு) அல்லாஹ்வுக்குச் சொந்தமானதாகும்.

புதர், மன்சூர் அல்-ஹல்லாஜ், அப்துல் காதிர் ஜீலானீ, ஏசுநாதர் எல்லாம் இறைவன் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவிகளே. சுயம் அவனுடையதுதான்.

புதரிலிருந்து அல்லாஹ் பேசியதால் அது மூசா நபியை விடவும் அந்தஸ்தில் மேலானதாகி விடாது. நபி நபிதான், புதர் புதர்தான்.

அப்துல் காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்கள் ஈசா நபியின் அற்புதத்தைத் தான் செய்து காட்டியதால் அவர்கள் ஈசா நபிக்கு இணையானவர்கள் அல்ல. நபி (இறைத்தூதர்) நபிதான், வலீ (இறைநேசர்) வலீதான். இறைநேசரின் உச்சமான அந்தஸ்தும்கூட எந்த இறைத்தூதரின் ஆரம்ப நிலையையும் தொட்டுவிட இயலாது.

ஈசா நபி நிகழ்த்திய அற்புதங்களைப் போல் முஹம்மத் (ஸல்) அவர்கள் நிகழ்த்தியதாக திருக்குர்ஆனில் எங்கும் இல்லை. ஆனால் அத்தனை நபிமார்களுக்கும் தலைவரே அவர்கள்தான்.

”ஹக்குல் யகீன்” என்னும் நிலையை அந்த முஹம்மத் (ஸல்) அவர்களின் வழியே பொங்கும் அருட்கொடையாகவே (ஃபைஸானே முஹம்மதீ) இறைத்தூதர்களும் இறைநேசர்களும் அடைகின்றார்கள்.

எனவேதான் மேற்கண்ட அற்புத நிகழ்வில் அப்துல் காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்: “அல்லாஹ்வின் தூதரான முஹம்மத் (ஸல்) அவர்களின் சேவகன் நான்.”

’ஹக்குல் யகீன்’ ஆன திருக்குர்ஆன் இடம்பெறும் வழிபாடாகத் தொழுகை உள்ளது. அந்தத் தொழுகை பற்றி நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:

”நிச்சயமாகத் தொழுகையில் அனுபவம் உள்ளது” (இன்ன ஃபிஸ் ஸலாத்தி ஷுக்லா – நூல்: புகாரி:1216, 3875; முஸ்லிம்: 936)

தொழுகையில் ருகூ நிலையிலிருந்து எழும் தருணம் பற்றி அப்துல் காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்: ‘அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையிலான திரை நீக்கப்பட்டதன் நோக்கத்தை அடியான் அடைந்துகொள்ளும் தருணம்.’

அந்தத் தருணத்தில் ஓதப்படும் மந்திரம்: “சமிஅல்லாஹு லிமன் ஹமித(ஹ்)” (தன்னைப் புகழ்வோரின் புகழ்ச்சியை அல்லாஹ் செவியேற்கிறான்).

அந்த நிலையின் மேன்மையை அபூ மூசா அல்-அஷ்அரீ (ரலி) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்: “திண்ணமாக அல்லாஹ் தன்னுடைய தூதரின் நாவின் மூலம் ‘சமிஅல்லாஹு லிமன் ஹமித(ஹ்)’ என்று கூறினான்” (ஃப இன்னல்லாஹ கால அலா லிஸானி நபிய்ய்ஹி சமிஅல்லாஹு லிமன் ஹமித(ஹ்) - நூல்: முஸ்லிம்:680)

அடியான் இறைவனுடைய பேச்சின் கருவியாக இயங்கும் தருணம் அது. நாக்கு அடியானுடையது வாக்கு இறைவனுடையது. அந்த நிலையின் ஞானத்தையும் அனுபவத்தையும் யாருக்கு அல்லாஹ் எந்த அளவு அருளுகின்றானோ அவர்களின் ஆன்மிக அந்தஸ்தும் அந்த அளவு உயர்ந்துவிடுகின்றது.

நபி(ஸல்) அவர்கள் கலீஃபா உமர் (ரலி) அவர்களின் விஷயத்தில் சொன்னார்கள் “உமரின் நாவில் அல்லாஹ் பேசுகிறான்” (அல்-ஹக்கு யன்திகு அலா லிசானில் உமர் – அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: திர்மிதி)

நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “இறைவிசுவாசியின் அகப்பார்வையை அஞ்சிக்கொள். நிச்சயமாக அவர் அல்லாவ்ஹின் ஒளியால் பார்க்கிறார்” (இத்தகூ ஃபிராசத்தல் முஃமினி ஃப-இன்னஹு யன்ழுரு பி-நூரில்லாஹ் – அறிவிப்பாளர்: அபூ சயீதுல் குத்ரி (ரலி) நூல்: திர்மிதி:3127)

’விலாயத்’ என்னும் இறைநேசத்தின் இந்த நிலை பற்றி அல்லாஹ் சொல்வதை கவனியுங்கள்:
“நான் அவரை நேசிக்கும்போது (ஃப இதா அஹ்பப்துஹு)
அவரின் கேள்வியாக நானாகிறேன் (குன்து சம்அஹுல்லதீ)
அதைக் கொண்டு அவர் கேட்கிறார் (யஸ்மஉ பிஹி)
அவரின் பார்வையாக (நானாகிறேன்) (வ பஸருஹுல்லதீ)
அதைக் கொண்டு அவர் பார்க்கிறார் (யுப்ஸிரு பிஹி)
அவரின் கையாக (நானாகிறேன்) (வ யதஹுல்லதீ)
அதைக் கொண்டு அவர் பிடிக்கிறார் (யுப்திஷு பிஹா)
அவரின் காலாக (நானாகிறேன்) (வ ரிஜ்லஹுல்லதீ)
அதைக் கொண்டு அவர் நடக்கிறார் (யம்ஷீ பிஹா)”
(அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: ஸஹீஹ் புகாரி:கிதாபுர் ரிகாக்: 6502)

அல்லாஹ்விடம் இத்தகைய இறைநம்பிக்கையாளரின் மேன்மை என்ன என்பதை நபி(ஸல்) அவர்கள் ஓரிடத்தில் சொல்கிறார்கள்: “இறைநம்பிக்கையாளர் (ஆதி இறையில்லமாம்) ‘கஃபா’வை விடவும் மதிப்புடையவர்” (அல்-முஃமினு அக்ரம ஹுர்மத்தம் மினல் கஃபா – நூல்: இப்னு மாஜா, மிஷ்காத்தெ மஸாபீஹ்:பாகம்1:44)

மேற்சொன்ன செய்திகளெல்லாம் ’ஹக்குல் யகீன்’ என்னும் நிலையில் வாழுகின்ற இறைநேசர்களின் மேன்மையை எடுத்துரைப்பவையே ஆகும்.

‘நிச்சயமாகத் தொழுகையில் அனுபவம் இருக்கின்றது’ (இன்ன ஃபிஸ் ஸலாத்தி ஷுக்லா) என்று நபிமொழியில் சுட்டப்பட்டுள்ள அனுபவம் (ஷுக்ல்) என்ன என்பதற்கு மேற்சொன்ன ஹதீஸ் குத்ஸி விளக்கம் தருகின்றது: ”நான் அவரை நேசிக்கும்போது (ஃப இதா அஹ்பப்துஹு)” என்று அல்லாஹ் சொல்கிறான். எனவே தொழுகையில் உண்டாகும் ஹக்குல் யகீன் – அனுபவ உறுதி என்பது முஹப்பத் என்னும் நேசத்தின் உறுதியாகும்.

”இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியானவர்கள்” (வல்லதீன ஆமனூ அஷத்த ஹுப்பன் லில்லாஹி – 2:165)

நோன்பிலும் அந்த ஹக்குல் யகீன் என்னும் அனுபவமே நோக்கமாக இருக்கின்றது என்பதை அல்லாஹ் குறிப்பிடுகின்றான் (ஹதீஸ் குத்ஸி): “நோன்பு எனது, அதற்கு நானே கூலி கொடுப்பேன்” (அஸ்ஸவ்மு லீ வ அனா அஜ்ஸீ பிஹி – அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்:புகாரி:1894)

இறைநேசரை இறைவன் நேசிக்கும்போது அவனே அவரின் கேள்வியாக, பேச்சாக, கையாக, காலாக ஆகிவிடுகிறான் என்று ஹதீஸ் குத்ஸியில் கூறப்பட்டுள்ளதன் ஞானத்தில் சூஃபிகள் இந்த ஹதீஸ் குத்ஸியை விளக்குகிறார்கள்: ‘நானே கூலி கொடுப்பேன்’ என்பதன் பொருள் ‘நானே கூலியாகி விடுகிறேன்’ என்பதாகும். அதாவது இறைநேசர் அவனையே அடைந்துகொள்கிறார்.

இறைக்காதல் என்பது ஆழங்காண இயலாத பல நுட்பங்களைக் கொண்டதாக இருக்கிறது. இறைக்காதலின் அனுபவங்கள் என்பவை எண்ணற்ற வண்ணங்கள் ஆகும். வண்ணங்கள் ஒன்றோடு ஒன்று பல விகிதங்களில் கலந்து பல நிறப்பிரிகைகளில் தம்மை வெளிப்படுத்துகின்றன. திறமை மிக்க ஓவியன் அவற்றைக் கொண்டு தனித்தன்மை கொண்ட பல ஓவியங்களைத் தீட்டுகிறான்.

அதுபோல், தன் நேசத்தில் இறைவன் தரும் அனுபவங்கள் ஒவ்வொரு இறைநேசருக்கும் வேறுபடுகின்றது. ஒவ்வொரு இறைநேசரையும் தன் நேசத்தின் ரகசியக் களஞ்சியமாக அவன் ஆக்கிவிடுகிறான்.

வெள்ளைத் தாளையே அல்லது திரையையே ஓவியன் தன் வண்ணங்களைத் தீட்டுவதற்குத் தேர்ந்தெடுக்கிறான். உள்ளத்தை சலவை செய்து வெண்மை ஆக்கியவர்களையே அல்லாஹ் தன் நேசத்தின் வண்ணங்களைப் பொழிவதற்குத் தேர்ந்தெடுக்கிறான்.

“அல்லாஹ்வின் வண்ணம் (சிப்கதல்லாஹி)
வர்ணம் கொடுப்பதில் அல்லாஹ்வை விட அழகன் யார்?
(வ மன் அஹ்சனு மினல்லாஹி சிப்கா)
அவனையே நாங்கள் வணங்குகிறோம்
(நஹ்னு லஹூ ஆபிதூன்)”
(2:138)


உள்ளத்தை வெள்ளை செய்வோம். இறைவன் தன் நேசத்தின் வண்ணத்தை அள்ளித் தருவான்.

Saturday, July 27, 2013

மனதில் (3) உறுதி வேண்டும் -part 2

இனி, மூன்று யகீன்களின் விஷயத்திற்குத் திரும்புவோம். அவை மூன்றும் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டவை என்றேன். இல்முல் யகீன் (102:5), ஐனுல் யகீன் (102:7), ஹக்குல் யகீன் (69:51) என்பது அவை இடம்பெற்றுள்ள திருவசன விவரமாகும்.

இத்தருணத்தில் ஒரு நபிமொழியைக் கவனத்தில் கொள்வோம்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் “நாமே இப்றாஹீம் (அலை) அவர்களை விடவும் சந்தேகம் கொள்ள அதிகத் தகுதி உடையவர்கள் ஆவோம். இப்றாஹீம் (அலை) அவர்கள், ‘என் ரட்சகனே! நீ இறந்தவர்களை எப்படி உயிராக்குகின்றாய் என்று எனக்குக் காட்டு’ என்று கேட்டபோது, அல்லாஹ், ‘நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?’ என்று கேட்டான். அவர்கள், ‘ஆம், ஆனாலும் என் உள்ளம் நிம்மதி அடைவதற்காக இப்படிக் கேட்டேன்’ என்று பதிலளித்தார்கள்” (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: ஸஹீஹ் புகாரி:3372)

மேற்கண்ட நபிமொழியில் இடம்பெற்றுள்ள சம்பவம் திருக்குர்ஆனில் (2:260)-ஆம் திருவசனத்தின் முற்பாதி ஆகும். அதன் பிற்பாதி பின்வருமாறு:
“’பறவைகளிலிருந்து நான்கைப் பிடித்து (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக் கொள்ளும். பின்னர் (அவற்றை அறுத்து) அவற்றின் ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்துவிடும். பின், அவற்றைக் கூப்பிடும். அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து) வரும். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்’ என்று (அல்லாஹ்) கூறினான்.” (2:260)

இப்றாஹீம் (அலை) இவ்வாறு இறைவனிடம் கேட்டது பற்றி அழகிய விளக்கம் ஒன்றைத் தருகிறார் மௌலானா ஃபஸ்லுல் கரீம்: “இவ்வகை ஐயம் அவர்களை இல்முல் யகீன் என்னும் அறிவு நிலையிலிருந்து ஐனுல் யகீன் என்னும் காட்சி நிலைக்கு உயர்த்துவதாக இருந்தது.” (நூல்: மிஷ்காத்துல் மஸாபீஹ் – கிதாபுல் அன்பியா, ஹதீஸ் எண்: 9 அடிக்குறிப்பு.)

மேற்கண்ட ஹதீஸில் மௌலானா ஃபஸ்லுல் கரீம் அவர்கள் விளக்காமல் விட்டு விட்ட பகுதி ஒன்றுள்ளது: ”நாமே இப்றாஹீம் (அலை) அவர்களை விடவும் சந்தேகம் கொள்ள அதிகத் தகுதி உடையவர்கள் ஆவோம் (நஹ்னு அஹக்கு பிஷ்ஷக்கி மின் இப்றாஹீம்)” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதன் கருத்து என்ன?

நிச்சயமாக அடுத்த நிலை நோக்கிய உயர்வுதான். அதாவது ஐனுல் யகீன் என்னும் காட்சி நிலையிலிருந்து ஹக்குல் யகீன் என்னும் அனுபவ நிலைக்கு உயர்வது!

திருக்குர்ஆனில் இந்த மூன்று வகை யகீன்களை நோக்கிய திருவசனங்கள் இருக்கின்றன.
அறிந்து கொள்ளத் தூண்டும் திருவசனங்களையும் அறிவித்துத் தரும் திருவசனங்களையும் இல்முல் யகீனை நோக்கியவை எனலாம்:

“அறிக: நிச்சயமாக அல்லாஹ்வை அன்றி இலாஹ் (தேவைகளைப் பூர்த்தி செய்து தரும் இறைவன், எனவே வணக்கத்திற்குரியவன்) வேறில்லை” (47:19)

“அறிக: நிச்சியமாக உங்களுக்குள் அல்லாஹ்வின் தூதர் இருக்கின்றார்” (49:7)

“அறிக: இதயங்களின் நிம்மதி என்பது அல்லாஹ்வின் தியானைத்தைக் கொண்டே உள்ளது” (13:28)

“அறிக: நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்கள் – அவர்கள் மீது அச்சம் இல்லை, மேலும் அவர்கள் கலைப்படவும் மாட்டார்கள்” (10:62)

இவையெல்லாம் அறிந்துகொள்ளத் தூண்டும் திருவசனங்கள்.

“நீங்கள் எப்பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உள்ளது” (2:115)

இது அறிவித்துத் தரும் திருவசனம். இதில் அல்லாஹ்வின் முகம் என்பது எதைக் குறிக்கும் என்று விளக்கப்படாமல் பூடகமாகவே சொல்லப்பட்டுள்ளது. மேலும் அல்லாஹ்வின் முகத்தைப் பார்க்குமாறு கட்டளை இவ்வசனத்தில் இல்லை.

“அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாக இருக்கின்றான்”(24:35)

இதுவும் தகவல் தருகின்றது. ஆனால் அந்த ஒளியை தரிசிக்குமாறு கட்டளை இவ்வசனத்தில் இல்லை.

“நீங்கள் எங்கிருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கின்றான்” (57:4)

“நாம் பிடரி நரம்பை விடவும் (மனிதனாகிய) அவனிடம் மிகவும் நெருக்கமாக இருக்கின்றோம்” (50:16)

இதிலும் அறிவித்துத் தருதல்தான் இருக்கின்றது. அனுபவத்தை அடையுமாறு கட்டளை இடப்படவில்லை.

ஆழ்ந்த பார்வையுடன் (தஃபக்குர்) அகப்பார்வையுடன் (பஸீரத்/ முஷாஹதா) கூடிய காட்சியைத் தூண்டும் திருவசனங்களை ஐனுல் யகீனை நோக்கியவை எனலாம்.
இவை இரண்டு வகைப்படும்.

1.படைப்புக்களில் அகப்பார்வை செலுத்தி அதில் இறைவனின் ’அஃப்ஆல்’ என்னும் செயல்பாடுகளைக் காணத் தூண்டும் திருவசனங்கள்:

”ஒட்டகத்தை அவர்கள் ஆழ்ந்து கவனிக்க வேண்டாமா, அது எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று?
மேலும் வானத்தை, அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது என்று,
மேலும் மலைகளை, அவை எவ்வாறு நடப்பட்டிருக்கின்றன என்று,
மேலும் பூமியை, அது எவ்வாறு விரிக்கப்பட்டிருக்கிறது என்று” (88:17-20)

“வானத்தின் வெளியில் கட்டுப்பட்டுப் பறக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றைத் தாங்கியிருப்பவன் அல்லாஹ்வே அன்றி வேறில்லை” (16:79)

வெறுமனே படைப்புக்களை மட்டும் பார்த்து வரும் மனிதனை அவற்றில் இறைவனின் செயல்பாடுகளைப் பார்க்குமாறு இவ்வசனங்கள் சொல்கின்றன.

2. படைத்தவனாகிய இறைவனை (அகப்பார்வை கொண்டு) தரிசிக்குமாறு சொல்லும் திருவசனங்கள். அதாவது அல்லாஹ்வின் சிஃபாத் என்னும் திருப்பண்புகளையும் உஜூது என்னும் உள்ளமையையும் வெளிப்பாடு (ஜுஹூர்) என்னும் அடிப்படையில் தரிசிக்கச் சொல்லும் திருவசனங்கள்:

”உம் இறைவனின் பக்கம் நோக்குக, எவ்வாறு நிழலை நீட்டுகிறான் என்று” (25:45)

இத்திருவசனத்தில் நிழல் என்னும் செயப்படுபொருள் (மஃப்ஊல்) மற்றும் நீட்டுதல் என்னும் செயல் (ஃபிஃல்) ஆகியவை குறிப்பிடப் பட்டிருந்தாலும் நோக்கும்படியான கட்டளை இவற்றின் பக்கம் இல்லாது றப்பு – இறைவன் என்னும் செய்பவன் (கர்த்தா – ஃபாயில்) பக்கம் சொல்லப் பட்டுள்ளது. அதாவது கர்த்தா – கர்மம் – கருவி ஆகிய மூன்றில் இவ்வசனம் கர்த்தாவைக் காணுமாறு கட்டளை இடுகிறது.

அதாவது, “நிழலின் பக்கம் நீங்கள் நோக்க வேண்டாமா, அது எவ்வாறு நீட்டப்படுகிறது என்று?” என்பதாக, மஃப்ஊல் (செயப்படுபொருள்) ஆன நிழலை நோக்கியதாக இவ்வசனம் இல்லை. ஆனால் அகப்பார்வை அருளப்படாதவர்கள், பொது நிலையைச் சேர்ந்தவர்கள், இல்முல் யகீன் நிலையில் நிற்பவர்கள் மற்றும் ஐனுல் யகீனில் அஃப்ஆல் என்னும் செயல்பாடுகளின் தரிசன நிலையில் மட்டும் நிற்பவர்கள் இந்தத் திருவசனத்தைத் தாம் நிற்கும் நிலைக்கு வளைத்து இவ்வாறுதான் பொருள் கொள்வார்கள்.

ஹக்குல் யகீன் என்னும் மெய்ஞ்ஞான அனுபவத்தை நோக்கித் தூண்டுகின்ற வசனங்களும் திருமறையில் உள்ளன:

”அல்ல, எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கு (முழுமையாக) அர்ப்பணித்து நற்கருமங்களைச் செய்கிறானோ அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உள்ளது. இத்தகையோர் மீது அச்சமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்” (2:112)

”நிச்சயமாக நான் என முகத்தை வானங்களையும் பூமியையும் படைத்தவனுக்காகவே உறுதியாக அமைத்துவிட்டேன்” (6:79)

”கூறுக: மெய்யாக என் தொழுகையும் என் தியாகமும் என் வாழ்வும் என் மரணமும் அகிலங்களின் ரட்சகனான அல்லாஹ்வுக்கே” (6:162)

”அல்லாஹ்தான் சுருக்குகிறான், விரிவாக்குகிறான்” (2:245)

“நிச்சயமாக அவனே சிரிக்க வைக்கிறான், அழச் செய்கிறான்
இன்னும் நிச்சயமாக அவனே மரிக்கச் செய்கிறான், மேலும் உயிர்ப்பிக்கிறான்” (53:43,44)

”அல்லாஹ்விடம் விரைக” (51:50)

“நாம் உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?
மேலும் நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்” (94:1,2)

”எனவே, நீர் ஓய்ந்ததும் முயல்வீராக
மேலும், உம் இறைவனிடம் சார்ந்து விடுவீராக” (94:7,8)

(விளக்கத்திற்கு ஓர் உதாரணம்: ஓர் இல்லத்தரசி, நாளெல்லாம் தன் கணவனுக்கும் அந்தக் கணவனைக் கொண்டு பெற்ற தன் பிள்ளைகளுக்குமாகப் பணிவிடை செய்கிறாள். வீட்டைப் பராமரிக்கின்றாள். கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் விருப்பமானபடி உணவு வகைகளைச் சமைக்கின்றாள். இரவு வரை வேலைகள் அவளுக்கு. அதன்பின் ஓய்ந்து உறக்கம் கொள்ளும் சமயம் தன் நேசக் கணவனின் மார்பில் தலை சாய்த்துக் கண் மூடும் அந்தத் தருணம்தான் அவளுக்கு எத்தனை இனிமையானது!)

திருக்குர்ஆனில் இறைவனைப் பற்றிய திருவசனங்களில் பெரும்பான்மை அறிவித்துத் தருபவையே ஆகும். ஏனெனில் ’இல்முல் யகீன்’ என்னும் நிலைதான் மனிதர்களுக்குப் பொதுவானதாக இருக்கின்றது. அதைத் தாண்டி ஐனுல் யகீன் என்னும் நிலையை அடைபவர்கள் அரிது. அதையும் தாண்டி ஹக்குல் யகீன் என்னும் நிலைக்கு வருபவர்கள் அரிதினும் அரிது. சூஃபிகள் என்றும் அவ்லியாக்கள் என்றும் அழைக்கப்படும் இறைநேசர்களே அந்த நிலைகளை அடைகிறார்கள்.


பொதுமக்களுக்கோ மேற்சொன்ன திருவசனங்கள் அனைத்துமே வெறும் ’கீல்’ (வாய்ச்சொல்) ஆக இருக்கின்றன. ஆனால் இறைநேசர்களான சூஃபிகளுக்கோ அவை அனைத்துமே ’ஹால்’ (மனநிலைகள்) ஆக இருக்கின்றன. எனவேதான் அவர்கள் சதா இறைவனின் அனுபவத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

(to be continued...)