அன்பர்களே! நீண்ட இடைவேளை எடுத்துக் கொண்டுவிட்டேன். ஒருசில நூல்களை மொழி பெயர்த்து முடித்திருக்கிறேன். அவற்றில் இருந்து சில பகுதிகளை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
துருக்கி நாட்டைச் சேர்ந்த ஸூஃபி ஞானியும் குருவுமான ஹாஜி மூசா தோப்பாஷ் எஃபந்தி என்பார் எழுதிய “தஸவ்வுஃப் வ மஃ’ரிஃபா” என்னும் நூலினை “ஸூஃபித்துவமும் இறைஞானமும்” என்று தமிழாக்கம் செய்திருக்கிறேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே!
அதிலிருந்து...
ஸூஃபித்துவம் அல்லது தஸவ்வுஃப் என்பது கரை இல்லாத கடல் ஆகும். அது பிரபஞ்சம் முழுவதையும் வளைத்து அடக்கியுள்ள இறைவனின் பேரறிவு ஆகும்.
ஸூஃபித்துவம் என்பது மஃ’ரிஃபா – அல்லாஹ்வைப் பற்றிய ஞானம்.
இது விளக்கி உரைக்க முடியாதது. எனினும், ஒவ்வொருவரும் தமது புரிதிறனுக்கும்
ஆன்மிக நிலைக்கும் ஏற்ப இதைப் பற்றிப் பேசுகின்றனர்.
பிரபஞ்சத்தின் பெருமிதமான இறைத்தூதர் நபி (ஸல்) நவின்றார்கள்:
”என் ரட்சகனே! நான் எப்படி
உன்னைப் புகழ முடியும்! நீ உன்னை நீயே புகழ்ந்துகொண்டபடி இருக்கிறாய்!”
மேலான அல்லாஹ்வின் அறிவுடன் ஒப்பிடும்போது இறைத்தூதரின் அறிவு
என்பது அந்தக் கடலில் ஒரு துளிதான். ஏனைய பெரும் இறைத்தூதர்களின் அறிவோ நபி (ஸல்) அவர்களின்
அறிவுடன் ஒப்பிடும்போது கடலில் ஒரு துளிதான்! இறைநேசர்களின் அறிவோ நபி (ஸல்) தவிர உள்ள
பெரும் இறைத்தூதர்களின் அறிவுடன் ஒப்பிடும்போது கடலில் ஒரு துளிதான். இதிலிருந்து,
ஸூஃபித்துவம் என்பது முடிவோ எல்லையோ வரம்போ இல்லாத தெய்வீக அறிவு என்று உணர்கிறோம்.
இந்த முடிவிலியில் இருந்து ஒவ்வொருவரும் தமது பங்குக்கு ஏற்ப
அடைந்து கொள்கின்றனர். அடையப்பட்ட இந்த அறிவு என்பது கடலில் ஒரு துளி அளவு கூட தேராது
என்பதால் ஸூஃபித்துவ உலகில் அல்லாஹ்வின் அடியார் ஒவ்வொருவரும் அவன் அவருக்கு அருள்கின்ற
அறிவின் அளவுக்கே அவனை அவதானிக்கவும் அடையவும் இயலும்.
எனவே, தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அறிவின் அளவுக்கே ஸூஃபிகள் பேச
முடியும். மேலோனான அல்லாஹ்வின் ஆன்மிகக் கருவூலம் ஒரு சிலருக்கே திறக்கும் என்றாலும்,
சிறப்பான சில இறைஞானிகளுக்கு அவனின் அருள் விசாலமாகவும் ஆழமாகவும் உள்ளது.
வாஜிபுல் உஜூது என்னும் அவசிய உள்ளமை ஆன இறைவனுக்கு கோடானு கோடி
அடியார்கள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவனின் வெளிப்பாடு வேறுபடுகிறது. இந்த
நோக்கில், கோடிக் கணக்கான மக்களின் அறிவும் நம்பிக்கையும் சமம் அல்ல. அவை அதேதான் என்று
தோன்றலாம், ஆனால் வெவ்வேறானவை.
இறை அறிவின் வெளிப்பாடும் போகப் போக மாறுகிறது. நேற்று வரை அவன்
வெளிப்படுத்தாத ஓர் அறிவை இன்று நாம் கண்டு கொள்ளலாம், நாளை அதனினும் வேறான ஓர் அறிவைக்
கொண்டு நாம் போஷிக்கப்படலாம்.
சுருக்கமாகச் சொன்னால், அது முடிவிலியான ஓர் அறிவாகும். அதன்
அம்சத்தை பேனாக்களும் நுண்ணோக்கிகளும், தொலை
நோக்கிகளும், புறவயமான அறிவுத் துறைகள் அனைத்தும் அளந்துவிட முடியாது.
வானவர் மீக்காயீல் பிரபஞ்சத்தில் பயணிக்க விரும்பினார். அவர்
பத்து ஆண்டுகள் பறந்தார். ஆனால் எந்த ஓர் அறிவையும் அடைய முடியவில்லை (இத்தனைக்கும்
வானவரின் வேகத்துடன் ஒப்பிட்டால் ஒளியின் வேகம் என்பது மாட்டு வண்டியின் வேகமாகவே இருக்கும்!)
அவர் மேலும் ஒரு பத்து ஆண்டுகள் அவகாசம் கேட்டார். அது அவருக்கு வழங்கப்பட்டது. மீண்டும்
அவர் தோல்வி அடைந்தார். அவரின் சிறகுகள் தீப்பற்றிக் கொண்டன. அதன் பின்னர், அல்லாஹ்வின்
வல்லமையின் முன்னே சிரம் சாய்க்க வேண்டும் என்று அவர் உணர்ந்தார். உடனே சஜ்தா செய்து,
“சுப்ஹான றப்பியல் அஃ’லா” (மிக உயர்வான என் ரட்சகன் பரிசுத்தமானவன்) என்று ஓதினார்.
அனுபவ ரீதியான இறைஞானத்தின் பரந்து விரிந்த இந்தக் களத்தில் தம் இயலாமை மற்றும் பலகீனத்தைப் புரிந்து கொள்கின்ற அடியார்கள் சிலர் இருக்கின்றனர். அல்-ஹக்கின் மகத்துவத்தின் முன்னால் அவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
வேறு சிலர் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தவனை
வியப்புடன் அவதானிக்கின்றனர்.
வேறு சிலர் தெய்வீக வல்லமையின் முன்னால்
வாயடைத்து நா எழாமல் மௌனம் ஆகிவிடுகின்றனர்.
வேறு சிலருக்கோ பேச்சாற்றல் மீண்டும் தரப்படுகிறது.
அவர்கள் மேலான அல்லாஹ்வையும் அவனின் அருள்களையும் உதவிகளையும் தாராளத்தையும் அவதானித்து
அவற்றைப் பற்றி ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கின்றனர்.
மலைகளும் சிகரங்களும் சமவெளிகளும்கூட சிலருக்குக்
குறுகலாகி விடுகிறது.
சிலர் ஒரு சிறிய குடிலுக்குள் புகுந்து
அதிலேயே தம் வாழ்க்கையைக் கழிக்கின்றனர்.
சிலர் நேசத்தால் முழுமையாக ஆட்கொள்ளப்
படுகின்றனர். அவர்கள் செல்வம், உடைமைகள், சந்ததிகள், உலக வீடுகள் என்று எதையுமே வேண்டுவதில்லை.
அவர்களின் ஆசை எல்லாம் ஏகனான அல்லாஹ் ஒருவனே.
மாபெரும் இறைஞானியரின் பங்குகளும்கூட பல்வகைப்
பட்டவை, வெவ்வேறு ஆனவை. ஒருவருக்கு அருளப்பட்டது இன்னொருவருக்கு அருளப்படுவது இல்லை.
ஒருவர் அறிவதை இன்னொருவர் அறியார்.
எனினும், அனுபவ அறிவால் கண்ணியப்படுத்தப்பட்ட
ஒவ்வொருவரும் இறுதியில் மேலோனான அல்லாஹ்வை விளங்கி அடைந்து கொள்கிறார். தம் படைப்பு
நோக்கத்தை நன்றாக அறிந்திருக்கும் அவர்கள் அல்லாஹ்வின் வல்லமையின் முன்னால் தம் மீது
சுமத்தப்பட்டுள்ள கடமை என்ன என்பதைத் தெளிவாக அறிந்து அதனைப் பேரார்வத்துடனும் நேசத்துடனும்
செய்கின்றனர்.
மஃ’ரிஃபா
என்னும் அறிவில் முன்னேற்றம் என்பது இதயத்தின் உலகம் எவ்வளவு ஒளிமயமாகவும் தூய்மையாகவும்
இருக்கிறது என்பதைப் பொறுத்து அமைகிறது.
சத்தியப் பாதையில் செல்லும் சாதகனிடம் நான்கு குணங்கள்
இருக்கும்போது தெய்வீக உதிப்பு அதன் முழுமையான அருளுடனும் கருணையுடனும் இதயத்தின் உலகின்
மீது இறங்குகிறது. அவை பின்வருமாறு:
அ) தீவிரமான நேர்மை இருப்பது.
ஆ) உறுதிப்பாடான (இஸ்திகாமா) நபர்களுடன்
சேர்ந்திருப்பது.
இ) சிரத்தையும் விடாமுயற்சியும்
ஈ) முழுமையான சரணாகதி.
நற்குணம், தாராளம், இரக்கம், பணிவு முதலிய
நல்ல பண்புகள் ஸூஃபிகளுக்கு அருளப்படுகின்றன. ஒவ்வொருவருடனும் நன்றாக பழகிக்கொண்டு,
அவர்கள் அகப்பார்வை மற்றும் சிரத்தையுடன் முன் நோக்குகின்றனர். அவர்களின் ஒவ்வொரு நடத்தையும்
செய்கையும் குர்’ஆனின் கட்டளைகளுக்கு உடன்பட்டதாகவும் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்)
அவர்களின் நடத்தை மற்றும் செயல் ஆகியவற்றுக்கு இயைந்ததாகவும் உள்ளது.
அவர்கள் தூயவனான அல்லாஹ்வையும் அவனின்
திருத்தூதரையும் தம் உயிர்கள், உடைமைகள், செல்வம், மற்றும் சந்ததிகள் அனைத்தையும் விட
மேலாக நேசிக்கின்றனர்.
நேசத்தின் கோப்பையில் இருந்து பருகும்படி அருளப்பட்டிருக்கவில்லை என்றால் அவர்களால் இந்த நுட்பமான அறிவையும் அந்தஸ்த்தையும் அடைந்திருக்க முடியாது.
ஸூஃபிகளின் செய்முறைகள் ஆரம்ப நிலையில் வேறுபடுவதாகத் தோன்றினாலும் வல்லமையும் செம்மையும் கொண்ட அல்லாஹ்வைப் பற்றிய அறிவு என்னும் புள்ளியில் அவை அனைத்தும் கடைசியில் ஒன்றாகின்றன.
ஆனால், இதே பாதையில் தத்துவவாதிகள் செல்ல
ஆரம்பிக்கும்போது அவர்களால் கருத்து உடன்பட முடிவதில்லை. இதற்குக் காரணம் அவர்களின்
தன்முனைப்புகள் (egos) எப்போதும் அடங்காமல் ரகளை பண்ணுகின்றன. இந்த நபர்கள் மேலான அல்லாஹ்வைக்
கண்டடைய முடியாது. எனவே அவர்கள் கடைசியில் ஒருவருக்கு ஒருவர் பகைவர்கள் ஆகி ஒருவரை
ஒருவர் சபித்துக் கொண்டு முடிகின்றனர். அடிப்படை அற்ற பல்வேறு கருத்துக்களையும் கோட்பாடுகளையும்
அவர்கள் முன் வைக்கின்றனர். தம் எதிர்பார்ப்புகளால் அவர்கள் சுருங்கிப் போகின்றனர்,
இஸ்லாமும் தத்துவமும் ஒன்று கலக்காது.
மவ்லானா ஜலாலுத்தீன் ரூமி மற்றும் இமாம் கஜ்ஜாலி போன்ற மாபெரும் இறை நேசர்களை முஸ்லிம்
தத்துவவாதிகள் (Philosophers) என்று சொல்ல முடியாது. அவர்கள் ஸூஃபிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.
ஸூஃபித்துவம் என்பது குர்’ஆனின் கட்டளைகளுக்கும்
இறைத்தூதரின் மேலான சுன்னாஹ்வுக்கும் (நபிவழிக்கும்) முற்றிலும் அடிபணிவதாகும்.
குர்’ஆனின் கட்டளைகள் அல்லது ஷரீஆ என்பது ஒரு தொலி / ஓடு என்றால் தரீக்கா என்பது அதன் உள்ளிருக்கும் பருப்பு
ஆகும். எனினும், தன் தொலி / ஓடு இல்லாத ஒரு பருப்பு இருக்கும் என்று நாம் யோசிக்க முடியாது.
ஓடு அதன் சாராம்சத்துடன் இணைக்கப்படும்போது அதுவே பூரணத்துவத்தை (கமாலிய்யா) தேடுவோரின்
பாதை ஆகும்.
மேம்படுத்தப்பட்ட ஆன்மிகம் கொண்டுள்ள குருநாதர்கள்
தமக்கு வழங்கப்படும் பானத்தை அருந்தும்போது அவர்கள் முன்னேறுகின்றனர். ஒரு கட்டத்தில்
அவர்களின் சுதாரிப்பு அவர்களின் போதையை மிகைத்து விடுகிறது, அவர்களின் பணிவு மேலும்
மேலும் அதிகமாகிறது. அவர்கள் அழிந்துவிடுகின்றனர். ஏக இறைவனுடன் சேர்வதே அவர்களின்
ஒரே ஆசை ஆகிறது. அல்லாஹ்வின் ஏற்பையும் பொருத்தத்தையும் அடைவதைத் தவிர உள்ள ஆசைகள்
அனைத்தும் இன்மை ஆக்கப்பட்டு அவர்கள் தம்மையே மறந்துவிட்டுள்ளனர்.