(பேராசிரியர் ஹாஜி. சே.மு.முஹம்மதலி அவர்களின் "இனிய திசைகள்” மாதிகையின் ஜூலை 2024 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.)
கடந்த சில நாட்களாக மூச்சுப் பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி
வருகிறேன். ஸூஃபிகளிடம் ஒரு சொலவடை உண்டு: ஹோஷ் பர் தம் (மூச்சில் கவனம்).
இன்று அதிகாலை – விடியலுக்கு முந்தைய நேரத்தில் – சிந்தையில்
ஒரு விளக்கம் உண்டானது, நான் யாரிடமோ பேசுவது போல், அல்லது யாரோ என்னிடம் பேசுவது போல்.
இரண்டு பேர் இப்போது மிகவும் உடல் நலம் குன்றிய நிலையில் இருக்கிறார்கள்.
இருவருக்குமே நினைவுகள் தப்பி விட்டன. ஒருவர் ஆண்; மற்றவர் பெண். இருவருக்குமே இப்போது
முன்பு மாதிரி வழிபாடுகள் செய்ய முடியவில்லை. அதிலும், அந்தப் பெண்மணி படுத்த படுக்கையாகிவிட்டார்.
எலும்பும் தோலுமாக மெலிந்து விட்டார். முதுமையின் இந்த அவல நிலையை அண்மையில் கண்டு
அது என் மனத்தை மிகவும் பாதித்திருக்கிறது. அதைப் பற்றிய சிந்தனைகள் ஓடுகின்றன.
இதில் ஓர் ஆச்சரியமான ஒற்றுமை. முதுமையால் முடங்கிக் கிடக்கும்
இந்த இருவருக்கும் ஒரே பெயர்: ஷரீஃப் மற்றும் ஷரீஃபா. இந்தப் பெயருக்கு கண்ணியமானவர்கள்,
சிறந்தவர்கள் என்று அர்த்தம். ஏனைய படைப்புகளுக்கு இல்லாத மேன்மை (ஷராஃபத்) அருளப்பட்டவன்
மனிதன். எனவே அவன் “அஷ்ரஃபுல் மஃக்லூகாத்” – படைப்புக்களில் மிகச் சிறந்தவன் என்று
போற்றப்படுகிறான். ஆனால், முதுமையின் அவலத்தை நோக்கும்போது மனம் திடுக்கிடத்தான் செய்கிறது.
’நாம் யாருக்கு ஆயுளை நீட்டுகிறோமோ படைப்பில் அவரை குறைபட்டவர்
ஆக்கிவிடுவோம். அவர்கள் விளங்கமாட்டார்களா?’ (மன்
நுஅம்மிர்ஹு நுனக்கிஸ்ஹு ஃபில் ஃகல்க்கி அஃபலா யஃகிலூன் – குர்’ஆன் 36: 68) என்று
அல்லாஹ் சொல்கிறான்.
இந்தத் திருவசனத்திற்கு உதாரணம் போல் தமது ஆயுளின் அந்திமக்
காலத்தில் சாய்ந்து கிடப்போர் பலரையும் பார்க்கத்தான் செய்கிறோம். அன்ன ஆகாராம் உட்செல்லாத
நிலையில் கிடப்போரைப் பற்றி விசாரிக்கும்போது ஒன்று சொல்வார்கள்: “மூச்சு மட்டும் இருக்கு.”
மரணம் என்பது அந்த மூச்சும் கூட திணற ஆரம்பிக்கும் நிலையாகும்.
“மூச்சுத் திணறும் மரணத் தருணம்” என்று என் குருநாதர் பாடியிருக்கிறார்கள். “தூங்கையிலே
வாங்குகின்ற மூச்சு அது சுழி மாறிப் போனாலும் போச்சு” என்பது தமிழில் ஒரு முதுமொழி.
இதைச் சிந்திக்கும்போது ஒரு விளக்கம் பளிச்சிட்டது. ஆம், மூச்சு மட்டுமே இறுதி வரை இயங்கி வருகிறது. எனவே, இறுதி வரை இறை வழிபாடு செய்ய வேண்டும் என்றால் மூச்சில்தான் செய்ய வேண்டும். எனவேதான் ஸூஃபிகள் ’மூச்சு திக்ரு’ என்னும் பயிற்சியை மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு மூச்சிலும் இறைதியானம் இருக்க வேண்டும். ஒரு மூச்சுகூட இறைவனை மறந்த நிலையில் வீணாகிப் போய்விடாமல் சுதாரிப்பாக இருப்பதையே ’ஹோஷ் பர் தம்’ என்கின்றனர். இந்தப் பயிற்சிக்கு ‘பாஸே அன்ஃபாஸ்’ (மூச்சைப் பாதுகாத்தல்) என்று பெயர் வைத்துள்ளனர்.
மனிதன் உடலால் வழிபாடுகள் செய்கிறான். அது இளமைக் காலத்தில்
அதிகமாகச் செய்ய இயல்வதாகும். ஆனால் முதுமை முற்ற முற்ற உடல் வலிமை குறைவு படுவதால்
உடலால் செய்யும் வழிபாடுகளும் குறைந்து போகின்றன. நின்று தொழுகை செய்த பலர் அமர்ந்து
விடுகின்றனர். கண் பார்வை மங்குவதால் நீண்ட நேரம் குர்’ஆன் பிரதியைப் பார்த்து ஓத முடியாமல்
ஆகிறது. ஆனால், உடல் ஓய்ந்தாலும் மூச்சு இயங்குகிறது. எனவே, மூச்சில் இறைநினைவை இணைக்கும்
கலையைப் பயின்று பயிற்சி செய்ய வேண்டும்.
எவருக்கு இறைவன் ஆயுளை நீடிக்கிறானோ அவர்களைப் படைப்பில் பலகீனமாக்கி
விடுகிறான் என்பது பொது நியதிதான். என்றாலும், இறைநேசர்கள் இதற்கு விதிவிலக்காக இருப்பதைப்
பார்க்கிறோம். அவர்கள் செய்யும் வழிபாடுகளை இளைஞர்கள்கூட செய்ய முடிவதில்லை. ஏனெனில் இறைநேசர்களுக்கு உடலை மிகைத்த உயிர்ப்பு
(ரூஹானிய்யத்) அருளப்படுகிறது.
ஆம். ஃகல்க் (படைப்பு) நிலையில் அவர்கள் மெலிந்தாலும் ஹக் (இறைவனை)க்
கொண்டு அவர்கள் வலிமையடைகின்றனர்.
”தஃகல்லகூ பி-அஃக்லாக்கில்லாஹ்”
– ’இறைவனின் பண்புகளைக் கொண்டு உங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்’ என்னும் நபிமொழிப்படி
இறைநேசர்களில் ஹக்கின் திருப்பண்புகள் நிறைகின்றன.
என் குருநாதர் எப்போதும் சொல்வார்கள், ”உடல் நலம் (ஆஃபியத்)துடன்
கூடிய நீடித்த ஆயுளுக்காகப் பிரார்த்தியுங்கள். அதற்கு அடுத்த நிலையில் பொருளாதார அபிவிருத்தி.”
ஆம்,
பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை அல்லவா? ஆனால் மனிதர்கள் பொருள் ஈட்டுவதில்தான் தம்
ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள். பொருள் வேண்டாம் என்றோ குறைந்த பொருளே போதும்
என்றோ அமைதிபடும் வாழ்முறை, பண்பாடு இன்று இல்லை. ’பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற
வாழ்க்கையும் துரத்துதே’ என்கிறார் இளையராஜா.
“அல் ஹாக்குமுத் தகாஸுர்; ஹத்தா ஸுர்த்துமில்
மகாபிர்” (அதிகம் ஈட்டிக் குவிக்கும் பேராசை உங்களை மறதியில் ஆழ்த்திவிட்டது;
நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை – குர்’ஆன் 102:1-2). பேராசை பற்றி வேதம் ஓதும்
பேரோசை நின் செவியில் கேட்டிலையோ, அன்றி நீதான் செவிடோ, எம்பாவாய்?
மனிதர்கள்
தம் இறுதி மூச்சு வரை வீணாக்கி விடுகின்றனர். எனவே, மூச்சைப் பற்றிய விழிப்புணர்வு
எவருக்கு இளம் வயதிலேயே உண்டாகி, இறை தியானத்தில் மூச்சினை ஈடுபடுத்தும் சித்திக்கப்
பெறுவாரோ அவர் தன் இம்மை மற்றும் மறுமை வாழ்வு தித்திக்கப் பெறுவார். இதில் ஐயமில்லை.
அத்தகைய
இறைநேசர்களுக்கு வாழ்க்கை முழுவதும் வழிபாடுகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாகும். எனவே,
மூச்சில் தியானிக்கும் பயிற்சியில் ஈடுபடுக. இது பற்றி நபிகள் நாயகம் நவிலும் நன்மாராயம்
(பஷாரா) ஒன்று சமிக்ஞை (இஷாரா) தருகிறது: தூபா
லிமன் தால உம்ருஹு வ தால அம்ருஹு (எவரின் ஆயுள் நீட்டப்பட்டு அவரின் நற்காரியங்களும்
நீட்டப்படுகிறதோ அவருக்கு நன்மாராயம்!)
இதனுடன் தொடர்புடைய இன்னொரு செய்தியும் நினைவில் எழுந்தது. என்றேனும்
வாட்ஸாப்பில் இடுகையனுப்பும் ஆன்மிக சகா உத்தமபாளையம் அப்துல் காதிர் பிலாலி அவர்கள்
ஐந்து நாட்களுக்கு முன் இடுகை ஒன்றை எனக்கு முன்னகர்த்தியிருந்தார். அதில் கல்வத்து
நாயகம் (ரஹ்) சொன்ன பாடல் வரிகள் இருந்தன:
”ஞானமும்
கல்வியும் நாழி அரிசிக்குள்ளே
நாழி அரிசியை நாய் கொண்டு போய்விட்டால்
ஞானமும் கல்வியும் நாய்பட்ட பாடே”
”ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது” என்பது ஔவையின் வாக்கு (தனிப்பாடல் #57). அவ்வயின் நோக்கின், ஔவையின் பாடலுக்கு கல்வத்து நாயகம் (ரஹ்) மேலும் நுட்பமான விளக்கத்தை ஸூஃபி பரிபாஷை கொண்டு பாடியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால் அதன் உட்பொருள் என்ன? யார் சொல்வது?
ஏர்வாடி மு.முகம்மது சலாகுதீன் என்பார் இப்பாடலுக்கு
அவரறிந்த விளக்கத்தைச் சொல்லியிருந்தார்:
“நாழி
என்றால் கால்படி அளவைக் குறிப்பதாகும். கால்படி என்பதை கால்+படி(தல்) அதாவது கால் என்கிற
மூச்சு ஓட்டத்தை சரக்கலையின் வாயிலாக படிய வைப்பதைக் குறிப்பதாகும். … … … மேலும் இதில் அரிசி என்கிற பதம் மிகவும்
நுட்பமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரிசி நமக்கு நேரடியாகக் கிடைப்பதில்லை. நெல் விதையில்
இருந்து உமியை (மேல்வுரை தொலியை) நீக்கியப் பின்னரே அரிசி என்பது கிடைப்பதைப் போன்று
சுவாசத்தில் ஏற்படுகின்ற கசடுகளை நீக்கி சுவாசத்தில் ஒரு சமநிலை பிறக்கின்ற போது உமி
(தொலி) நீக்கிய அரிசியை போன்று தூய அறிவு பயனுள்ளதாக உலகிற்குக் கிடைக்கிறது. சுவாசத்தி
நுட்பங்களை அறியாத மனிதர்களிடமிருக்கும் தூய அறிவினை நாய் என்கிற சைத்தான் மனோ இச்சையை
தூண்டி களவாடிக் கொண்டு போய்விட்டால் ‘ஞானமும் கல்வியும் நாய் பட்ட பாடே’. மனிதன் உலகிற்கு
ஏன் வந்தோம் என்கிற நோக்கத்தை அறியாமல் உலகின் மாயவலையில் சிக்கி உலகியல் தேவைக்காகவே
மறுமையின் நற்பேறுகளை மறந்து இறுதி மூச்சுவரை நாய் போல் உலகில் அலைந்து திரிந்து தேடி
தேடியது தேடியபடி கிடைக்காததால் நிராசையுடன் இறுதியில் துன்பத்தின் பிடியில் அகப்பட்டு
மரணப் படுக்கையிலே வீழ்ந்து மரணிக்கிறான்.”
இதில்
அரிசி என்பதற்குச் சொல்லப்பட்டிருக்கும் நயவுரையை எண்ணி எண்ணி மகிழ்ந்தேன். “காற்றுள்ளபோதே
தூற்றிக்கொள்” என்னும் தமிழ்ப் பழமொழி இதைத்தான் உணர்த்துகிறது. நம் சுவாசங்கள் அழுக்காகவும்
ஒழுங்கற்றும் உள்ளன. மூச்சைத் தூய்மை செய்தால், அதாவது சீர்படுத்தினால், அகத்தைத் தூய்மை
செய்யலாம்.
இப்படியெல்லாம்
சிந்தனைகள் இன்று எற்பாட்டு வேளையில் ஓடிக் கொண்டிருந்தன. இப்போது, காலை உணவுக்குப்
பின்னர், மடிக்கணினியில் நூல் ஒன்றைத் திறந்தேன். ரஷாத் ஃபீல்டு என்பார் எழுதிய “The
Last Barrier” (கடைசித் தடை) என்னும் நாவல். மூன்று மாதங்களுக்கு முன்பு வாசிக்க ஆரம்பித்து
வேறு வேலைகளின் காரணமாக மூன்று அத்தியாயங்களுடன் நிறுத்தி வைத்திருந்தேன். தொடரலாம்
என்று எடுத்து நான்காம் அத்தியாத்தை ஆரம்பித்தேன். அதன் ஆரம்பத்தில் இப்னு அறபி (ரஹ்)
அவர்களின் மேற்கோள் ஒன்று இருந்தது:
”தெய்வீக மூச்சில் எல்லாம்
அடங்கியுள்ளன, வைகறை விடியலில் நாள் அடங்கியிருப்பது போல்.”
இதை
வாசித்ததும் என்னிச்சை ஏதுமின்றி மூச்சு ஆழப்பட்டது. தொடர்ந்து வாசித்தபோது இன்னுமொரு
வியப்பு. ஹமீத் என்னும் ஸூஃபி இந்தக் கதையின் நாயகனுக்கு மூச்சைப் பற்றிப் போதிக்கிறார்:
”இந்தக் காலை நேரத்தில் நான் உனக்கு மூச்சைப் பற்றிக் கொஞ்சம்
கற்றுத் தரப் போகிறேன். மூச்சே வாழ்வின் ரகசியம் என்பது உனக்குத் தெரியும் என்று நம்புகிறேன்.
ஏனெனில் மூச்சு இல்லாமல் எதுவும் இல்லை. சரியான சுவாசிப்பால் நீ பயணிக்க விரும்பும்
பாதையைத் தேர்ந்தெடுப்பது சாத்தியமாகும். காற்றைக் கவனி – அது வீசும்போது பூமியை விட்டு
மேலே தூக்க முடிந்த எடையற்ற எதனையும் ஏந்திச் செல்கிறது. அது பூக்களின் நறுமணத்தை எடுத்துச் செல்கிறது, மரங்களில்
இருந்து உதிரும் இலைகளைக் கொண்டு போகிறது, செடிகளில் இருந்து விதைகளைச் சுமந்து சென்று
அவை எங்கே வேர் பிடிக்க வேண்டுமோ அங்கே போடுகிறது. இதில் ஒரு பெரிய செய்தி இருக்கிறது!
நாம் மூச்சைக் கொண்டுதான் இவ்வுலகில் வருகிறோம், மூச்சைக் கொண்டுதான் இவ்வுலகை விட்டுச்
செல்கிறோம். எந்திரம் போல் வாழும் சராசரி மனிதன் தன் மரணத் தருணம் வரை மூச்சைப் பற்றி
மறதியிலேயே இருக்கிறான். மரண வேளையில் அவன் தன் நுரையீரலுக்குள் மூச்சை இழுக்கப் போராடுகிறான்,
இவ்வுலகின் வாழ்க்கை என்று அவன் அறிந்ததின் மிச்ச சொச்சத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டு
தவிக்கிறான்.”
மேலே நான் சொன்ன செய்திகளின் பிழிவு போல் இந்தப் பத்தி அமைந்திருக்கிறது
அல்லவா? மூன்று மாதங்கள் கழித்து திடீரென்று யோசனை வந்து இந்த நாவலை எடுத்து, இந்தப்
பத்தியை வாசிக்க நேர்ந்தது எப்படி? இதில் வியக்க ஒன்றுமில்லை. எல்லாம் ஒரே உள்ளமையில்
இருப்பவைதாம். ’இனம் இனத்தோடு சேரும்’ என்பது ஒரு ஞான வாக்கியம்.
(29-05-2024-இல் எழுதியது;
”இனிய திசைகள்” ஜூலை
2024-இல் வெளியானது.)
The Last Barrier தமிழில் வரும் நாளை எதிர்பார்க்கலாமா?
ReplyDelete