Tuesday, January 17, 2012

என்னுள்ளே என்னுள்ளே... (தொடர்ச்சி-2 )



அவிலா தெரசாவின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துக் கொண்டிருந்தபோது மனம் கவனித்த இன்னொரு விஷயம் அவருடைய உருவ லட்சணங்களைப் பற்றிய வருணனை. ஆன்மிக ஞானிகளின் உருவங்கள் அவர்களுடைய போதனைகளைப் போல் நமக்கு அவசியமானவை அல்ல என்று மிக எளிதாகச் சொல்லி விடலாம். ஆனால் உலகில் தோன்றிய இறைத்தூதர்கள், இறைஞானிகள் போன்றோரின் உருவ லட்சணங்கள் பற்றிய குறிப்புக்கள் பேணப்பட்டு வந்துள்ளதையே நாம் காண்கிறோம். அவை ஞான சாதகர்களின் மனங்களில் ஏற்படுத்தும் தாக்கம் தனித்தன்மையான ஒன்று. எனவே ஞானியரின் உருவத்தைக் காண்பதே ஒரு ஆன்மிகப் பேறு எனலாம்.

ஆனால் புகைப்படங்கள் தோன்றாத காலத்தே ஞானியரின் உருவங்கள் ஓவியங்களின் மூலமாகத்தான் பதிவு செய்யப்பட வேண்டிய நிலை இருந்தது. ஓவியம் என்பது ஓவியனின் மனத்தின் பதிவு. எந்திரப்பதிவைப் போல் அது உள்ளதை அப்படியே பிரதிபலிக்கும் என்று சொல்ல இயலாது. ஓவியத்தில் ஓவியனின் புனைவு இடம்பெறுவதைத் தவிர்க்க இயலாது. அதிலும், ஒரு ஞானியின் வாழ்நாளில் அவருடைய உருவம் பதிவுசெய்யப்பட்டிராத பட்சத்தில் அவருடைய மறைவுக்குப் பின் ஓவியர்கள் வரையும் ஓவியங்கள் முழுக்க முழுக்க கற்பனைப் புனைவுதான். அதில் இருப்பது வரலாறு அல்ல. அதற்கு வரலாற்று மதிப்பும் இல்லை. ஆனால் அதில் இருப்பது புனைவினால் உள்வாங்கிக் கொள்ளப்பட்ட ஞானம். புனைவின் வழி வெளிப்படும் ஞானம். எனவே அந்த ஓவியங்கள் குறியீடாகப் பயன்படுகின்றன. இவற்றால்தான் உருவ அல்லது அருவுருவ வழிபாட்டை அனுமதிக்கும் சமயநெறிகளில் அத்தகு ஓவியங்கள் தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருப்பதையும், உருவ வழிபாடு அனுமதிக்கப்படாத சமயநெறியான இஸ்லாத்தில் அத்தகு ஓவியங்கள் உருவாகாத நிலையையும் காண்கிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே அவர்களின் காலத்திலேயே தன்னுடைய உருவம் ஒரு கலைப் பிம்பமாக மாற்றப்படுவதைத் தடுத்துவிட்டார்கள். அவ்வாறு இஸ்லாத்திற்குள் உருவ வழிபாடு நுழைந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கை காட்டினார்கள். ஓவியர் ஒருவர் அவர்களின் ஓவியத்தை வரைந்து கொண்டுவந்து அவர்களிடம் காட்டியபோது அதனை அவர்கள் தம் கைகளாலேயே கிழித்தெறிந்து விட்டார்கள்  என்பது வரலாற்றுப் பதிவு.

“என்னைக் கண்டவர் சத்தியத்தையே கண்டார்” (மன் ரஆனி ஃபகத் ரஅல் ஹக்) என்று திருவாய் மலர்ந்தருளிய நபிபெருமானின் உருவப்பதிவு இல்லவே இல்லை என்றபோதும் அவர்களின் அங்க லட்சணங்கள் பல ஹதீஸ்களில் (நபிமொழிகளில்) பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவர்களின் உருவ வருணிப்புக்களைக் கூறும் தனியொரு நூலாகவே “ஷமாயில் திர்மிதிஎன்னும் ஹதீஸ் கிரந்தம் திகழ்கின்றது என்பது கவனிக்கத்தக்கது. நபிகள் நாயகத்தின் உருவ லட்சணங்களை அறிந்து இன்பமடைய இது வழிசெய்கிறது. அவற்றைப் படிக்கும் நபிநேசர்கள் பரவசம் கொள்கிறார்கள். அதே லட்சணங்களில் தங்கள் உருவத்தை இயன்ற அளவு அமைத்துக் கொள்கிறார்கள்.

இது பற்றி என் சொந்த அனுபவம் ஒன்றைச் சொல்கிறேன். நபிகள் நாயகத்தின் கண்களின் இமை முடிகள் நீண்டு இருக்கும் என்பது நபிமொழிகளில் காணப்படும் குறிப்பு. இதனை என் தந்தை படித்திருக்கிறார். என் மகனை ஓர்நாள் அவர் கொஞ்சிக் கொண்டிருந்தபோது இதைக் குறிப்பிட்டு “உன் கண்கள் ரசூலுல்லாவின் கண்களைப் போல் இருக்கின்றனஎன்று சொல்லிச் சொல்லி அவனை முத்தமிட்டார். என் மகனின் கண்ணிமை முடி நீளமாகத்தான் இருக்கின்றன. இதுபோல், நபிகளின் உருவ லட்சணங்கள் தென்படும் உருவங்களில் அவர்களின் ஞாபகத்தைத் தூண்டிப் பரவசம் அடைய முடிகிறது.


இதற்கு இன்னொரு கோணமும் இருக்கிறது. நபிமொழிகளைப் படிக்கும்போது அதில் நாம் நபியின் வாழ்க்கை நிகழ்வுகளையே படிக்கிறோம். ஒரு விஷயத்தைப் படிக்கும்போது அதனைக் காட்சிப்படுத்திக் காணும் இயல்பு மனிதனின் கற்பனைப் புலனுக்கு உண்டு. அவ்வகையில் முகம் பார்த்தறியாத ஒரு நபரைப் பற்றிப் படிக்கும்போதும் அவரைப் பற்றிய வருணனைகளின் தரவுகளை வைத்துக்கொண்டு அவருக்கொரு சாத்தியமான உருவத்தைக் கற்பனித்துக் காட்சிப் படுத்திக்கொள்ளவே மனம் நாடும். சராசரி மனிதர்களைவிட ஒரு கலைஞனின், ஆன்மிக சாதகனின் மனதில் இது மிக உக்கிரமாகவே இருக்கும். படிக்கும்போது உள்மனதைக் கவனித்தால் இது புரியும். தெளிவான உருவமாக இல்லாவிட்டாலும் மலைப்பிரதேசப் பனிமூட்டத்தில் நமக்குப் பத்தடி தூரத்தில் நிற்கும் ஒருவரைக் காண்பது போல, அல்லது பனி படிந்த கண்ணாடி வழியே காண்பது போல, ஒரு நிழலசைவாக அந்தக் கற்பனை உருவம் நம் மனவுலகில் அசையும். நபியின் சரிதக் குறிப்புக்களைப் படிக்கும்போது மனவெளியில் நிழலுருவாய் அசையும் அந்த உருவம் நம் மனம் வலிந்து செய்து கொள்ளும் கற்பனை அல்ல. இறைவன் மனத்தை அமைத்திருக்கும் இயல்பால் (ஃபித்ரத்) வருவது. புறவுலகிற்கும் அகவுலகிற்குமாக மனித மனம் பிளவுபட்டுக் கிடப்பதால் அக்காட்சி தெளிவாகத் தெரியாமல் நிழலுரு போல் மங்கித் தெரிகிறது. கண்ணாடியின் மீது படிந்திருக்கும் பனிப்படலத்தைக் கருணையின் கைகள் துடைத்தால் அவ்வுருவம் தெளிவாகத் தெரியும். ஞானிகள் தம் கனவில் நபிகள் நாயகத்தைக் காண்பது அவ்வாறுதான். புறவுலகத் தொடர்பு அறுபட்ட பின், இறந்த பின் மண்ணறையில் நபியின் காட்சி கிடைத்துவிடுவதும் அதனால்தான். என் ஆழ்மன வெளியில் உலவிக்கொண்டிருக்கும் அந்த நிழலுருவைத் தெளிவாகக் காண்பதற்கு நான் பயிற்சிகளால் முயலத்தான் வேண்டும். (மூத்து கப்ல அன்த மூத்து – நீ மரணிக்கும் முன் மரணித்துவிடுஎன்பது நபிமொழி.) அதை நோக்கி நான் மெல்ல மெல்ல நகர்ந்து நெருங்க வேண்டும்.

நபிகள் நாயகத்திற்குப் புறவுலகில் ஒரு படமோ பிம்பமோ இல்லாதபோதுதான் இந்த நிலை இருப்பது சாத்தியமாகிறது. ஒருவேளை அவர்களுக்கு ஸ்பஷ்டமாக ஓர் உருவத்தை மனம் வரித்துக் கொள்ளுமானால் காரியமே கெட்டுவிடும். வெளியிலிருந்து அந்த பிம்பத்தை எடுத்துக்கொண்டு மனதிற்குள் அதை நான் நுழைத்துவிடும்படி ஆகிவிடும். (இதனால்தான் அரவிந்தர் சிறையில் கண்ட கிருஷ்ண தரிசனம் பொய்க்காட்சி என்று ஓஷோ கூறுகிறார். முன்பு வெளியுலகிலிருந்து மனதிற்குள் பதித்துக்கொண்டதால் உருவான தன் மனப்பிம்பத்தையே அவரின் மனம் மீண்டும் வெளியுலகில் பிரதிபலித்துக் கண்டது என்று சொல்கிறார்.)


ராமகிருஷ்ண பரமஹம்சரின் அனுபவத்தையும் நாம் இங்கே கவனிக்கவேண்டும். ஓவியத்தில் / சிற்பத்தில் இருந்து அவர் பெற்றுக்கொண்ட காளியின் உருவம் ஆழ்நிலை தியானத்திற்குத் தடையாக இருந்தது. கண்களை மூடினால் காளியின் ரூபம் வந்து நிற்கிறது. அவளைத் தாண்டி என்னால் செல்ல இயலவில்லைஎன்று அவர் தன் குருவிடம் சொல்கிறார். ஒரு குறிப்பிட்ட நிலைவரை ஆன்மிகத்தில் முன்னேற உதவியாக இருந்த பிம்பமே இப்போது அப்பால் செல்வதற்குத் தடையாக இருக்கிறது. அத்வைத வேதாந்தத்தில் அவருடைய குருவாக இருந்த தோத்தாபுரி அவரை நோக்கி ‘வாளெடுத்துக் காளிரூபத்தை வெட்டிவிட்டு அப்பால் செல். இல்லையெனில் உனக்கு நிர்விகல்ப சமாதி சித்தியாகாதுஎன்று சொல்கிறார். “வாளை நான் எங்கிருந்து எடுப்பேன்?” என்கிறார் ராமகிருஷ்ணர். “காளியின் வடிவை எங்கிருந்து எடுத்தாய்? அதே கற்பனையில் இருந்து வாளையும் எடு. நான் உன் நெற்றியில் வெட்டுவேன். அதே கணம் நீ உன்னுள் காளியை வெட்டிவிடுஎன்று சொன்ன தோத்தாபுரி கண்ணாடித் துண்டொன்றை எடுத்து ராமகிருஷ்ணரின் நெற்றியில் கீறினார். அப்போது தன் மனத்தில் காளியின் பிம்பம் கிழிவது போல் கண்ட ராமகிருஷ்ணர் உருவமற்ற நிர்விகல்ப நிலைக்குச் சென்றார்.


இந்தச் சம்பவத்தைப் பல இடங்களில் ஓஷோ பேசியிருக்கிறார். தோத்தாபுரி சொன்ன வாசகம் ‘அஷ்டவக்ர கீதையில்உள்ள ஒரு ஸ்லோகத்தின் கருத்து என்று அவர் சொல்கிறார். இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு அவர் பேசும் ஒரு விளக்கம் சுவாரஸ்யமானது: “பல வருட சாதகங்களின் பின் ஒரு கிறித்துவன் கண்களை மூடுகிறான். அவன் மனதில் கிறிஸ்து தோன்றுகிறார். கிருஷ்ண பக்தன் ஒருவன் கண்களை மூடினால் அவனிடம் கிருஷ்ணன் வருகிறார். புத்தரை நேசிப்பவன் கண்களை மூடினால் அவனிடம் புத்தர் வருகிறார். மகாவீரரை நேசிப்பவன் கண்களை மூடினால் அவனிடம் மகாவீரர் வருகிறார். ஒரு ஜைனனிடம் கிருஸ்து வருவதில்லை; ஒரு கிருஸ்தவனிடம் மகாவீரர் வருவதில்லை; நீங்கள் முன்னிறுத்தும் பிம்பம்தான் வரும். ராமகிருஷ்ணரின் முயற்சி காளியின் மீதாக இருந்தது. அந்த பிம்பம் ஸ்தூலமாகவே ஆகிவிட்டது. மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டதால், நினைத்துக் கொண்டதால் அந்த பிம்பம் நிஜத்தைப் போலவே ஆகிவிட்டது. காளி அவரின்முன் நிற்பதாகவே அவருக்குத் தோன்றியது. அங்கே யாரும் நின்றிருக்கவில்லை.

“ப்ரக்ஞை தனியே இருக்கிறது. இரண்டாம் ஒன்று அங்கே இல்லை, வேறு இல்லை. உன் கண்களை மூடு. வாளெடுத்துக் காளியை வெட்டுஎன்று தோத்தாபுரி சொன்னார். ராமகிருஷ்ணர் தன் கண்களை மூடிய மாத்திரத்தில் அவருடைய துணிச்சல் அணைந்துவிடுகிறது. காளியை வெட்ட வாளை ஓங்க வேண்டும் – பக்தன் தன் தெய்வத்தை வெட்ட வேண்டும் – அது மிகக் கடினமானது. உலகைத் துறப்பது மிகவும் எளிது. பிடித்துக்கொள்ள இந்த உலகில் உருப்படியாக என்னதான் இருக்கிறது? ஆனால் உங்கள் மனதின் ஆழத்தில் நீங்கள் ஓர் உருவத்தை நிறுவிவிட்டால், அதில் கவித்துவத்தை உருவாக்கிவிட்டால், மனதின் கனவு பிரத்யக்‌ஷம் ஆகிவிட்டால், அப்புறம் அதனைத் துறப்பது மிகவும் கடினம். உலகம் ஒரு கெட்ட கனவு (அதனைத் துறப்பது எளிது.) ஆனால் பக்தியின் கனவு, உணர்வின் கனவு கெட்ட கனவல்ல. அது மதுரமான இனிய கனவு. அதைத் துறப்பது எப்படி? அதை உடைப்பது எப்படி?” (The Mahageeta Vol.1) 

மகாவீரர், புத்தர், கிருஷ்ணர் மற்றும் இயேசுவைக் குறிப்பிட்ட ஓஷோ நபிகள் நாயகத்தைக் குறிப்பிடவில்லை. ஏனெனில் அவருடைய உருவப்படம் இல்லை. எனவே அவரின் உருவத்தை முஸ்லிம் ஒருவன் தன் மனத்தில் நிறுவிக்கொள்வது இயலாது. (கடவுளைக் குழந்தையாக பாவித்தல் என்னும் தியானமுறையைப் பற்றிப் பேசுமிடத்தில் திரு.வி.க அவர்களும் கிருஷ்ணன், முருகன், இயேசு ஆகியோரைத்தான் குறிப்பிடுகிறார். ஆனால் ‘நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ்என்று இலக்கியம் இருக்கிறது. அதை எழுதிய புலவர் எப்படிக் கற்பனை செய்திருப்பார்? அவர் மனம் கவர்ந்த ஏதேனுமொரு குழந்தை அவருடைய மனதில் நிழலாடாமல் இருந்திருக்க முடியாது.)

மனம் பற்றி நிற்க இஸ்லாத்தில் எந்த உருவமும் கிடையாது. நேரடியாக நிற்குண வழிபாடுதான். நேரடியாக நிர்விகல்ப மனநிலைக்கான சாதனைதான். கஃபா, குரான் நூல்வடிவம், அல்லாஹ் என்னும் பெயரின் எழுத்துவடிவம் என்று எந்த உருவம் மனதில் வந்தாலும் அதன் மீது லயிக்க முடியாது. லயித்தால் அதனைச் சிலையாக்கிக் கொண்ட நிலை ஏற்படும். அப்படி எதன்மீதாவது கவனத்தைக் குவிக்கும்படி நபிகள் நாயகமும் சொல்லவில்லை. இயல்பாக மனதில் பிம்பங்களின் பாய்தல் (Flow / Stream of images) இருக்கும். அதில் மனதைப் படியவிடக்கூடாது. காலப்போக்கில் பிம்பங்களுக்கிடையிலான இடைவெளி அதிகமாகும். ஒரு கட்டத்தில் பிம்பங்களே இருக்காது. இப்படித்தான் தொழுகையில் சாதகம் செய்ய முடியும். ஆனால் இந்த நிலை எத்தனை முஸ்லிம்களால் எட்டப்படுகிறது என்பது கேள்விக்குறிதான்.

இஸ்லாமிய ஞான நெறியான சூஃபித்துவத்தில் ஈடுபடும் சீடனுக்குக் கூட இந்த இடர்ப்பாடு உண்டு. நபித்தோழர்கள் நபியின்மீது செலுத்தியது போல் தன் குருவின் மீது ஆழ்ந்த கவனம் செலுத்திவரும் அவனின் மனதில் அவரின் உருவம் பதிந்து போய் அதுவே ஒரு தடையாகிவிடக் கூடும். அதனால்தான் மௌலானா ரூமி சொன்னார்கள், “ஒரு குருவின் முக்கிய பணி தன்னை வைத்து சீடன் உண்டாக்கும் சிலையைத் தகர்ப்பதே!   

ஒரு ஞானியின் உருவத்தில் நமக்குக் கிடைப்பதென்ன? அதனைக் காண்பதில் ஏன் அத்தனைப் பரவசம் பிறக்க வேண்டும்? ஞானியின் உருவத்தில் உள்ள அழகு என்ன வகை அழகு?

அது உடலில் தெரியும் அழகு என்றாலும் உடலழகு அல்ல. ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்என்பது ஞானிகளுக்குத்தான் மிகப் பொருத்தம். உடலைத் திரையாக்கித் தன்னைக் காட்டும் ஞானத்தின் அழகு அது.

காதலின் முதல் நிலை காட்சி என்று தமிழ்மரபு சொல்கிறது. உலகின் அனைத்து இலக்கிய மரபிலும் இதுதான் நிலை. காட்சி வழிதான் காதல் பிறக்கிறது என்றே எல்லா இலக்கியங்களும் பாடுகின்றன. மனிதக் காதலை வைத்து இறைக்காதலை விளக்கும் முறைமையான நாயக-நாயகி பாவிகத்தில் இது எவ்வாறு இடம் பெறுகிறது என்று பார்ப்போம். இறைக்காட்சி என்பது முதல் நிலையிலேயே கிடைத்துவிடுவதில்லை. அது பக்தனின் லட்சியங்களில் ஒன்று. காதலியைப் பார்த்த பின் காதல் பிறப்பதாகத்தான் மனிதக் காதலின் மரபு பாடப்பட்டுள்ளது. ஆனால் இறைக்காதலில் இது சாத்தியமில்லை. அது நம்பிக்கையின் அடிப்படையில் பிறப்பது. காணாமலே காதல் என்பது இறைக்காதலுக்குத்தான் அப்படியே பொருந்தி வருகிறது. கேள்விப்பட்டுக் கேள்விப்பட்டுத்தான் காதல் வளர்வதாக அப்பர் அருமையாகப் பாடியிருக்கிறார்: “முன்னம் அவன்தன் நாமம் கேட்டாள், மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள், பின்னை அவன்தன் ஆரூர் கேட்டாள், பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்

 

இப்படி இருக்கும்போது நாயக நாயகி பாவனையில் மனிதக் காதலை வைத்து இறைக்காதலை விளக்க வேண்டும் என்றால் அது எவ்வாறு சாத்தியம்? காட்சி என்னும் முதல் நிலைக்கு ஆன்மிகத்தில் எதைச் சொல்வது? காம்ம் சான்ற ஞானப்பனுவல்எனப்படும் திருக்கோவையாருக்கு எழுதப்பட்டுள்ள உரைகளில் காட்சி என்னும் முதல் நிலைக்குப் பேரின்பப் பொருள் சொல்லப்பட்டுள்ளது. “உத்தம சற்குரு தரிசனமாகும்என்கிறது திருக்கோவையாருண்மை. இதற்கு விளக்கம் எழுதியுள்ள பெருமழைப்புலவர், “(பேரின்பம்) ‘குருவின் திருமேனி காண்டல்என்பதாம். (விளக்கம்) மிக்கதொரு பக்குவத்தின் மிகு சத்திநிபாதம் மேவுதலும் மக்களுருவிலெதிர் வந்த இறைவனாகிய நல்லாசிரியனை உயிர் காணுதலை ஈண்டுக் காட்சி என்னும் துறையாக உருவகித்தவாறும் என்க. ஈண்டுக் குரு என்றது தலைவியை; காண்டல் என்றது உயிராகிய தலைவன் கண்டது என்பது கருத்துஎன்று எழுதியுள்ளார்.  

 


குரு என்பவர் இறைவனின் ஒளிச்சுடர்கள் பிரகாசித்து நிற்கும் தலம் (மழ்ஹர் என்பது இதற்கான சூஃபித்துவக் கலைச்சொல்.) இறைவனின் ஜோதி பிரதிபலித்து வெளிச்சமிட்டுள்ள மாடம் அவர். மண்ணாலான சுவர் என்றாலும் அதில் விளக்கின் ஜோதி பிரதிபலிக்கும்போது நம்மைக் கவர்வது விளக்கேதான், சுவரல்ல. குருவின் உடல் வெறும் எலும்பு சதை தோல்தான் என்றாலும் அதில் பிரதிபலிப்பது இறைச்சுடர் என்பதால் குருவில் நம்மை வசீகரிப்பது இறைவன்தான்.

 

இந்த இடத்தில் திருவெம்பாவையின் முதற்பாடல் நினைவுக்கு வருகிறது. அதிகாலை நேரத்தில் தெருவில் இறைப்புகழைப் பாடியபடி பக்தைகள் வருகின்றார்கள். ஒருத்தி தன் வீட்டில் இன்னமும் மெத்தையில் உறங்கிக்கொண்டிருக்கிறாள். அவளை எழுப்புவதற்காக அவர்கள் பாடுகிறார்கள்,

“ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்

 சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்

மாதே வளருதியோ?...

இவ்வரிகளுக்கு விளக்கம் தரும் பி.ஸ்ரீ சொல்கிறார், “இந்தக் கண்ணழகு புற அழகு மட்டுமன்று, அகத்தின் அழகையும் பிரதிபலிப்பதுதான். இவளும் தன் அகத்திலே ஆதியும் அந்தமும் இல்லாத சோதியைத் தியானிக்கிறவள்தான்.

 

இதுதான் ஞானிகளின் அழகிற்கும் விளக்கம். தம் அகக்கண்களால் அவர்கள் காணும் இறையொளியின் குளுமையான பிரகாசமே அவர்களின் கண்களிலும் ஒளிர்கிறது. எனவே கண்களே ஞானிகளின் பிரதானமான அழகு. ‘ஒளி படைத்த கண்ணினாய் வா வா வாஎன்று பாரதி அந்த ஞான அழகைத்தான் பாடினான். அதே ஒளி ஞானியின் உடலெங்கும் பரவிப் பிரகாசிப்பதை தேஜஸ் என்கிறோம். ஆனால் கண்களில்தான் அது அபரிதமாக ஒளிர்கிறது. எனவே கண்களே ஞானியின் விலாசம் எனல் தகும். மற்றவை எல்லாம் புறக்கோலம் ஆகக்கூடும். ஆனால் கண்கள் என்பவை அகக்கோலம்.

 

அவிலா தெரசாவின் உருவலட்சணங்கள் பற்றிய குறிப்பு இத்தனை சிந்தனைகளையும் தூண்டி விட்ட்து. அவரின் ஓவியங்களைப் பார்க்கும்போது ஒரு சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியாது. அதாவது, அவிலா தெரசா தன் நாற்பதாவது வயதிற்கு மேல்தான் ஆழ்நிலை தியானத்தில் காட்சிகளைக் காணத் தொடங்கினார். அவருடைய இளம் வயதில் அந்த நிலைகள் அவருக்கு ஏற்படவில்லை என்பதையே அவரின் சுயசரிதைக் குறிப்புக்கள் காட்டுகின்றன. வாலிபத்தில் மூன்று வருடங்கள் பக்கவாதத்தில் கிடந்ததும், அதன்பின் பதினெட்டு வருஷங்கள் வெறுமனே மந்தமாகவும் அகப்போராட்ட்த்திலும் கழிந்ததும் மட்டுமே அவர் வாழ்க்கை காட்டுவன. “என் கற்பனைப் புலன் மிகவும் பலவீனமாக இருந்தது. எந்த இறையியல் தத்துவத்தையும் விளங்கிக்கொள்ளும் நிலையில் என் அறிவாற்றல் அமைந்திருக்கவில்லைஎன்றே தன் இளமைக் காலத்தைப் பற்றி அவர் சொல்கிறார். ஆனால் அவிலா தெரசாவை ஓவியமாக வரைந்த பலரும் அவரின் இளமைக் கோலத்தையே தெரிந்தெடுத்து ஓவியம் தீட்டியிருக்கிறார்கள். அதிலும் அந்த ஓவியர்களின் தனித்தன்மையான புனைவுகளை நாம் காணமுடிகிறது.


 

அவிலா தெரசாவின் உருவம் பற்றிய குறிப்பு ஒன்றை “புனித அவிலா தெரசாவின் வாழ்க்கைநூலின் முன்னுரை தருகிறது: “வரலாற்று ஆசிரியர்கள் தெரசா தே அகுமதாவைப் பற்றி எதிர்காலத் தலைமுறைக்கு விரிவான விளக்கம் கொடுத்துள்ளனர். அவர் நடுத்தர உயரமும், சற்றுப் பருத்த உடலமைப்பையும் கொண்டிருந்தார். அவரது தனிச்சிறப்பான முகம் வட்ட வடிவு என்றோ நீள அமைப்பு என்றோ கூற இயலாது. அவர் வெண்ணிற மேனியும், செந்நிறக் கன்னங்களும் கொண்டிருந்தார். அகலமான நெற்றி, அடர்ந்த இளஞ்சிவப்புப் புருவங்கள், கரிய, கூரிய வட்ட வடிவிலான சற்றே முன் தள்ளிச் சரியாகப் பொருத்தப்பட்ட கண்கள், சிறிய மூக்கு; நடுத்தர அளவும் மென்மையாக அமைக்கப்பட்ட்துமான வாய்; வட்ட வடிவமைப்பான தாடை, சீரான அளவுடன் வரிசையாகப் பளிச்சிடும் வெண்பற்கள், இவை தெரசாவுக்கு எழில்மிகு தோற்றத்தைக் கொடுத்தன. முகத்தில் முத்துக்கள் போன்று அணிகலனாக மூன்று புள்ளிகள் அழகிற்கு அழகு சேர்த்திருந்தன. ஒன்று மூக்கின் நடுப்பகுதிக்கு கீழ், இன்னொன்று அதே பக்கம் வாயின் கீழ்ப்பகுதியில், அவருடைய கூந்தல் கருமையாகவும், பளபளப்பாகவும், அடர்த்தியாகவும், சற்றுச் சுருண்டும் காணப்பட்டது. எல்லோரிடமும் மகிழ்வுடனும், நட்புடனும் பேசிப்பழகும் பண்பு கொண்டவராகவும், பார்ப்பதற்கும் பேசுவதற்கும் இனிமையானவராகவும் காணப்பட்டார்” (பக்.2,3)

 


அவிலா தெரசா ஞானநிலை அடைந்த்து நாற்பது வயதுக்கு மேல்தான் என்று அவரின் சரிதை சொன்னாலும் மேற்சொன்ன இளமையான தோற்றத்திலேயே அவரை ஒரு ஞானியாகப் பல ஓவியர்கள் சித்தரித்திருக்கிறார்கள். அவருடைய கால கட்டத்திலேயே வரையப்பட்ட ஓவியம் என்று சொல்லப்படுவது யுவான் தே லா மைசரியா (Juan de la Miseria) வரைந்ததாகும். ஆனால் அந்த ஓவியத்தில் அவிலா தெரசாவின் முகம் இளமையை மெல்ல இழந்துவரும் ஒரு நடுத்தர வயதுப் பெண்ணின் முகமாகத்தான் காட்சி தருகிறது.

 


அவருடைய தனிச்சிறப்பான முகம் வட்ட வடிவு என்றோ நீள அமைப்பு என்றோ கூற இயலாது”  என்னும் குறிப்பை கவனிக்கவும். அவருடைய முகத்தை வட்டமாகவோ அல்லது நீளமாகவோ வரைந்துகொள்ளும் சுதந்திரத்தை ஓவியர்களுக்கு இது அளிக்கிறது எனலாம். எனவே ஓவியர்கள் இப்படியும் அப்படியுமாக அவரை வரைந்து வைத்திருக்கிறார்கள். இதற்குச் சிறந்த உதாரணமாக, ‘பருமனே அழகுஎன்னும் கோட்பாட்டாளரான பீட்டர் பால் ரூபன்ஸ் (Peter Paul Rubens) வரைந்த ஓவியத்தைக் கூறலாம். 


 

அவதானித்துப் பார்க்கும்போது இன்னொரு விஷயமும் புலப்படுகிறது. அதாவது வட்டமாக வரையப்பட்ட அவிலா தெரசாவின் முகங்கள் நாற்பதின் முதிர்ந்த வயதுடைய நிலையைக் காட்டுவதாகவும், சற்றே நீளமாக வரையப்பட்ட அவரின் முகத்தோற்றம் இளமைக்காலத்தின் பிரதிபலிப்பாகவும் இருக்கின்றன. அவருடைய முகத்தை சற்றே நீளமானதாக வரைந்த ஜெரார்ட், ஃப்ரான்சிஸ்கோ தே கோயா, ஜியோவான்னி பாடிஸ்டா ராஸ்ஸி, ஜோஸஃபா டி ஒபிதாஸ், செபாஸ்தியன் லானொஸ் வால்தெஸ் ஆகியோரின் ஓவியங்களில் அவிலா தெரசா இளமையான வயதினராகவே காட்சி தருகிறார்.

 


நாற்பது வயதில்தான் மனிதனின் அறிவு முழுமைப் பெறுகிறது என்று சொல்லப்படுகிறது. எதார்த்தத்தில் வயோதிகமே ஞானத்திற்குப் பொருத்தமானதாகக் கருதப்பட்டாலும் புனைவுலகில் ஓவியர்களும் சிற்பிகளும் இளமையைத்தான் ஞானத்திற்குப் பொருத்தமான வயதாக வரித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காணலாம். வரலாற்று புத்தர் வயதானவர் என்றால் ஓவியத்தில் அவரை இளமையாக, மீசை தாடி இல்லாமல், சொல்லப்போனால் பெண்மையின் லட்சணங்கள் (வளைந்த புருவங்கள், சிறிய கூரான நாசி, சிவந்த குமிழ் உதடுகள்) ததும்பும் முகம் கொண்டவராக வரைகிறார்கள். இராமன், கிருஷ்ணன் ஆகியோரின் நிலையும் இஃதே. ஏனெனில் தம் கலைப்படைப்பில் அவர்கள் காட்ட நினைப்பது வெறும் எதார்த்தத்தை அல்ல. ஞானத்தை, அதன் தன்மைகளைத் தம் புனைவில் உள்வாங்கி உணர்ந்துகொண்ட வண்ணம் அவர்கள் சித்தரிக்க முயல்கிறார்கள். கலையில் முன்வைக்கப்படுவது புனைவுடுத்திய உண்மை. இது புரியாத மரமண்டைகள் கலை என்பது பொய்தானே என்று பிதற்றும்.

 

ஞானத்திற்குப் பொருத்தமான வயது என்று ஒன்று உண்டா? சொர்க்கத்தினருக்கு வயது முப்பத்து மூன்று என்று இஸ்லாம் சொல்கிறது. இயேசுநாதர் விண்ணுக்கு உயர்த்தப்பட்ட வயது அது. எப்படியோ, இளமைதான் ஞானத்தின் தன்மைக்குப் பொருத்தமானது என்று கலையின் கண் காண்கிறது. (ஞானமூலமாகிய இறைவனைத் தாடியில்லாத இளைஞனின் வடிவில் தன் கனவில் தரிசித்ததாக சர்ச்சைக்குரிய நபிமொழி ஒன்று உண்டு. (நூல்: முஸ்னத் அஹ்மத்). சொர்க்கத்தில் இறைவன் இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்கள் அறிந்த உருவத்தில் காட்சியளிப்பான், அப்போது அவனை அவர்கள் இறைவன் என்று தெரிந்துகொண்டு சாஷ்டாங்கம் செய்வார்கள் என்னும் கருத்தமைந்த நபிமொழியும் (நூல்: புஹாரி) சிந்தனைக்குரியது. அது என்ன உருவமோ?)

 

அவிலா தெரசாவின் உருவம் இளமைக் கோலத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதை எதார்த்தப் பதிவாகப் பார்ப்பதில் அர்த்தமில்லை. அவை குறியீட்டுத் தளத்தில் இயங்குவதாகவே நான் பார்க்கிறேன். அத்தகைய பதிவுகளில் மிகவும் முக்கியமான கலைப்படைப்பு ஒன்று உண்டு. அது ஓர் ஓவியம் அல்ல, சிற்பம். உலகப் புகழ் பெற்ற அந்தச் சிற்பத்தின் பெயர் (இத்தாலிய மொழியில்) “லா எஸ்டாஸி தி சாண்டா தெரசா” (THE ECSTASY OF SAINT TERESA – புனித தெரசாவின் பேரின்பம்.) இந்தச் சலவைச் சிற்பத்தைச் செதுக்கிய சிற்பியின் பெயர் ஜியான் லாரன்ஸோ பெர்னினி (GIAN LORENZO BERNINI (1598-1680)). ரோமில் (வாத்திக்கனில்) உள்ள சாண்டா மரியா தெல்லா விட்டோரியா (SANTA MARIA DELLA VITTORIA) என்னும் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை கிறித்துவ உலகில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய ஒன்று. இதனைச் சுற்றி நிகழ்த்தப்பட்டு வந்திருக்கும் விவாதங்கள் முக்கியமானவை. ஏனெனில் இந்தச் சிலை அவிலா தெரசா தன் ஆழ்நிலை தியானத்தில் அடைந்த ஒரு காட்சி நிலையை அடிப்படையாக வைத்து வடிக்கப்பட்டுள்ளது. அவிலா தெரசாவின் இளமைக்காலத்தின் நிகழ்வுகளில் இருந்து விளக்கங்களைக் கோரி நிற்கும் இந்தச் சிலை ஆழமான ஒரு குறியீடு என்றே நான் காண்கிறேன். அதன் உட்பொருளை அறிய கொஞ்சம் ஆழமாக அவதானிப்போம்.

(தொடரும்...)      

4 comments:

  1. மனம் பற்றி நிற்க இஸ்லாத்தில் எந்த உருவமும் கிடையாது. நேரடியாக சற்குண வழிபாடுதான். // ஒரு சந்தேகம். இது 'நிர்குண வழிபாடு' என்று தானே இருக்கணும். நான்தான் தப்பாக புரிந்து கொண்டிருக்கிறேனா! - அகமும் புறமும்-மாயன்

    ReplyDelete
  2. மிக்க நன்றி மாயன் அவர்களே,
    நான்தான் தவறுதலாக சற்குண வழிபாடு என்று எழுதிவிட்டேன். இப்போது ‘நிற்குண’ என்று மாற்றியிருக்கிறேன். இது மேலும் விஷயத்தைச் சிக்கலாக்கிவிடக் கூடும். நிற்குணம் என்பது ’குணங்கள் அற்ற நிலை’ என்பதாக விளங்கிக்கொண்டால் அதற்கு இஸ்லாத்தில் இடமில்லை. “குணங்கள் கரந்த, வெளிப்படாத நிலை” என்னும் பொருளை பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் வழங்குவர். அந்த விளக்கத்தை “இறைவன் படைப்புக்களைப் படைப்பதற்கு முன்னிருந்த நிலை. அவனை அவன் மட்டுமே அறிந்த நிலை” என்று கொண்டால் சூஃபிகள் சொல்லும் விளக்கத்திற்குப் பொருந்தும். ஆனால் அந்த நிலையை அவனை அன்றி யாரும் அறிய இயலாது. படைப்புக்கள் அவனை அவனது திருக்கல்யாண குணங்கள் கொண்டே அறிய இயலும். அப்படியானால் அது சற்குண நிலையே. எனும்போது உருவ சிந்தனை இல்லாத நிலையில் தொழுகையில் இறைவனின் சற்குணத்தை உணருவது எவ்வாறு? அது திரை இல்லாமல் ஓவியத்தைக் காண்பது போன்றா? இல்லை நம் ஆழ்மனமே அவனது வண்ணங்களுக்குத் திரையா? இங்கிருந்து விஷயம் ரகசியப் பாதையில்தான் செல்லும்.

    ReplyDelete
  3. புரிகிறது.படைப்புகள் தோன்றுவதற்கு முந்தைய நிலையை 'குணங்கள் இல்லாத' என்று சொல்ல இயலாது. 'குணங்கள் உள்ள' என்பது சான்ஸே இல்லை. ஒரு வழியாய் மறைமுகமாக, ஒரு hint மட்டும் கொடுத்து விலகிக் கொள்வது.இனி சாதகனின் பாடு!
    எனக்கு ஜே.கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்தின் ஈடுபாடு உண்டு. அவரும் இதை வேறு மொழியில் சொல்கிறார். மனம் ஒன்று இருக்கும் வரை திருக்கல்யாண குணங்கள் வைத்து தான் அறிய இயலும். ஆனால் அறியப்படுகிறது அந்த குணங்கள் தோன்றுவதற்கு முந்தைய...அதாவது முடிவும்முதலும் இல்லாதது என்பார்.
    rockstar படத்தில் வந்த khun faya...என்ற பாடலில் வரும் வரிகள் இதைப் பற்றியும் பேசுகிறதோ...நீங்கள் அதைப் பற்றி எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.நன்றி! உங்கள் விளக்கத்துக்கு.

    ReplyDelete
  4. இஸ்தாத்தில் உருவத்துக்கு இடமில்லை என்பது எனக்குத் தெரியும். அப்போதுதான் குணங்கள் இல்லாத 'அதை' அறிய/உணர/ஏதோ ஒன்று...முடியும். ஆனால் 'ஒலி உருவத்தில்' மாட்டிக் கொண்டுவிட நிறைய வாய்ப்பு உள்ளதே! ஜெயமோகன் ஒரு கட்டுரையில் அவர் அனுபவத்தை விளக்கும்போது, அந்தி சாயும் வேளையில் குளக்கரையில்(என்று நினைக்கிறேன்) சட்டென்று கேட்ட தொழுகைச் சத்தம் மனதை வேறு ஒரு நிலைக்கு இழுத்துச் சென்ற அனுபவத்தை சொல்லியிருந்தார். எனக்கும் அதுபோல சில சமயங்களில் நடந்திருக்கிறது. இந்த ஒலி உருவத்தை கடந்து போகும் வழி 'ரகசியப் பாதையில்'தான் இருக்கும் இல்லையா?.

    ReplyDelete