Tuesday, July 10, 2012

உதிப்பு (இல்ஹாம்)




பாலைவனத்திலும்
பொழிகின்றது
கடவுளின்
கருணை மழை

உதிப்புகள் அற்ற
உள்ளமோ
பாலையினும்
பாழானது

உதிப்பற்ற உள்ளத்தின்
உதடுகள் வீசும்
உரைகள்
திரையின் மேல்
திரைகள்!

பாலையின் சுழற்காற்று
மழை-மேகம் அல்ல
அது வெறும்
மணல் மேல் மணல்

முகத்திரையை மட்டுமே
பார்த்திருப்பவன்
முகத்தின் அழகை
வருணிப்பது எப்படி?

அவன் முகத்தில்
தரிசனமாவதில்லை
முகத்தை தரிசித்த
பரவசங்கள் எதுவும்

முத்தத்தின் சுவையைத் தருமா
முத்தம் பற்றிய கவிதை?

உதடுகளின் ஓவியத்தில்
பெற முடியுமா
உதடுகளில் பெறுவதை?

பனித்துளி வந்து
புல்லில் அமர்வது
புல்லிற்காக அல்ல

ஈர இதயத்தில்
சூரியன்
சுடர்வதற்காக

உதிப்புகள்
உணர்வுகளின்
ருது மங்கலம்

மனப்பெண்
மரப்பாச்சிகளை மறந்து
மணப்பெண் ஆகட்டும்

உன் உள்ளத்தை
உதிப்புகள் கிளறும்
உள்ளமாக்கு

இதயத்தை
ஆதி இறையில்லம்
ஆசிக்கும்
இல்லமாக்கு

No comments:

Post a Comment