Wednesday, July 18, 2012

காதலியைத் தேடி -2




GOOD WILL HUNTING என்னும் அத்திரைப்படம் 1997-ஆம் ஆண்டு வெளிவந்தது. அதன் திரைக்கதையை எழுதியவர்கள் மேட் டேமன் (Matt Damon) மற்றும் பென் அஃப்லெக் (Ben Affleck) ஆகியோர். படத்தின் கதாநாயகனாக மேட் டேமன் நடிக்க துணை நடிகர்களில் ஒருவராக பென் அஃப்லெக் நடித்திருக்கிறார். முதன்மைத் துணை நடிகராக ராபின் வில்லியம்ஸ் நடித்து சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதைப் பெற்றார். சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதினையும் இப்படம் வாங்கிற்று. அதன் சுருக்கம்:


இருபது வயதான வில் ஹண்ட்டிங் Massachusetts Institute of Technology-இல் துப்புறவுப் பணியாளராக வேலை பார்க்கிறான். ஓய்வு நேரங்களில் தன் மூன்று நண்பர்களுடன் கும்மாளமடித்துப் பொழுது போக்குகிறான். Combinatorics என்னும் கணிதப் பிரிவில் ஃபீல்ட்ஸ் பதக்கம் (இது கணிதத்திற்காக வழங்கப்படும் சர்வதேச அளவிலானதொரு விருது!) பெற்றவரான பேராசிரியர் ஜெரால்டு லம்ப்யூ என்பவர் அந்தப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வருகிறார். ஒருமுறை அவர் தன் மாணவர்களுக்கு அல்ஜீப்ரா கிராஃப் தியரியில் ஒரு கடினமான சிக்கலை முன்வைக்கிறார். அது நடைபாதையில் உள்ள பலகையில் எழுதப்பட்டிருக்கிறது. அவ்வழியாகச் செல்லும் வில் ஹண்ட்டிங் அந்தக் கணக்கிற்கான விடையை அப்பலகையிலேயே எழுதி வைக்கிறான். தன் மாணவர்கள் யாரும் அந்த விடையை எழுதவில்லை என்று அறியும் பேராசிரியர் ஆச்சரியப்படுகிறார். அதை எழுதியது யார் என்று கண்டறிவதற்காக அவர் அதனை விடவும் கடினமான ஒரு கணிதச் சிக்கலை எழுதிவைத்துவிட்டு மறைந்திருந்து கண்காணிக்கின்றார். துப்புறவுப் பணி முடித்து அவ்வழியாக வரும் வில் ஹண்ட்டிங் சர்வ சாதாரணமாக அதன் விடையை எழுதுகிறான். நேற்று விடையை எழுதியது அவனாக இருக்க முடியாது என்றும் அவன் ஏதோ கிறுக்குகிறான் என்றும் நினைக்கும் பேராசிரியர் கத்திக்கொண்டே அவனைத் துரத்துகிறார். அவன் ஓடிவிடுகிறான். பலகையைப் பார்க்கும் பேராசிரியருக்கு பேரதிர்ச்சி! அவன் சரியான விடையை எழுதியிருக்கிறான். தன்னாலேயே தீர்க்க முடியாத ஒரு சிக்கலுக்குத் துப்புறவுப் பணியாளன் எந்தச் சிரமமும் இல்லாமல் விடை எழுதிவிட்டான்! அவன் ஒரு ஜீனியஸ் என்பதை அவர் உணர்ந்துகொள்கிறார்.

இந்நிலையில், வில் ஹண்ட்டிங் தான் சிறுவனாக இருந்தபோது தன்னைக் கொடுமைப் படுத்திய ஒருவனை வன்முறையாகத் தாக்கியதற்காகச் சிறைத் தண்டனை பெறுகிறான். பேராசிரியர லம்ப்யூ அவனுக்காக நீதிபதியிடம் பரிந்து பேசுகிறார். இரண்டு நிபந்தனைகளின் பேரில் வில் ஹண்ட்டிங் தன் சிறைக் காலத்தைப் பல்கலைக்கழகத்தில் கழிக்கலாம் என்று நீதிபதி சலுகை அளிக்கிறார். அதாவது, அவன் பேராசிரியருடன் சேர்ந்து கணிதப்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், சிறு வயது முதல் அவன் அடைந்த உளவியல் காயங்கள் ஆறுவதற்காக அவன் வாரம் ஒருமுறை மனநல மருத்துவரைச் சந்திக்க வேண்டும். அவர் தரும் அறிக்கைகள் ஒவ்வொரு வாரமும் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த நிபந்தனைகளின்படி வில் ஹண்ட்டிங் பேராசிரியருடன் சேர்ந்து கணித ஆய்வில் ஈடுபடுகிறான். அது அவனுக்குச் சிறுபிள்ளை விளையாட்டாகவே இருக்கிறது. ஆனால் மனநல ஆலோசகரைச் சந்திப்பதை அவன் வெறுக்கிறான். இரண்டு ஆலோசகர்கள் அவனின் கேள்விகளையும் கிண்டலையும் சகிக்க முடியாமல் ஓடிவிடுகிறார்கள். இது பேராசிரியர் லம்ப்யூவிற்குப் பெரிய சிக்கலாக இருக்கிறது.

பேராசிரியர் லம்ப்யூ தன் நண்பரும் பங்கர்ஹில் கம்யூனிட்டி கல்லூரியில் உளவியல் பயிற்றுவிப்பவருமான பேராசிரியர் சியான் மக்யூவைத் தனக்கு உதவும்படிக் கேட்டுக்கொள்கிறார். சியான் முதலில் முடியாது என்று சொன்னாலும் வில் ஹண்ட்டிங்கின் கணித அறிவையும் மேலும் அவன் அவருடைய பிறந்த ஊரிலிருந்து வந்தவன் என்பதையும் லம்ப்யூ எடுத்துச் சொன்னதும் அவனுக்கு மனநல ஆலோசனை வழங்க சம்மதிக்கிறார். இந்தக் காட்சியில்தான் வருகிறார் நம்ம ஊரு கணக்கு ஹீரோவான ஸ்ரீநிவாஸ ராமாநுஜம். தோராயமாக அந்த உரையாடல்:

சியான்: எனக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கின்றன
லம்ப்யூ: சியான், சியான்...
சியான்: எனக்கு ஓய்வே இல்லையேப்பா, ரொம்ப பிசியா இருக்கேன்
லம்ப்யூ: இந்தப் பையன் அற்புதமானவன் சியான், இவனைப் போல ஒருத்தன நான் பார்த்ததே இல்ல.
சியான்: அப்படி என்ன இருக்கு அவன்கிட்ட ஜெர்ரி?
லம்ப்யூ: ராமாநுஜன் பற்றிக் கேட்டிருக்கியா?
சியான்: ம்ம்.. இல்லை
லம்ப்யூ: நூறு வருஷங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்... இந்தியர். ஒரு கிராமத்துல குடிசைல இருந்தார். முறையான கல்வி எதுவும் இல்ல. ஆனால் ஒரு கணக்கு புத்தகத்தைப் பார்த்துட்டு அவருக்குள்ள பல தியரிகள் தோன்ற ஆரம்பிச்சுது.
சியான்: ம்ம்... அதையெல்லாம் எழுதி வைத்தார். அப்புறம்?
லம்ப்யூ: அதை கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வச்சார், பேராசிரியர் ஹார்டிக்கு.
சியான்: ஓஹோ...
லம்ப்யூ: ஹார்டிக்கு உடனே புரிஞ்சு போச்சு, இவரு ஒரு பெரிய மேதைன்னு. ராமாநுஜத்தை அவர் கேம்ப்ரிஜுக்கு அழைச்சுக்கிட்டார். இருவருமா உழைச்சு கணிதத்துல ஏகப்பட்ட தியரிகள் கண்டுபிடிச்சாங்க. இந்த ராமாநுஜன் – அவரோட மேதைமை நிகரற்றது. சியான், இந்தப் பையன் வில் ஹண்ட்டிங்கும் அதே மாதிரிதான். ஆனால் கொஞ்சம் முரட்டு சுபாவம். அதுக்குத்தான் உன் உதவியைக் கேட்கிறேன்.


பேராசிரியர் லம்ப்யூவின் கோரிக்கையை சியான் ஏற்றுக்கொள்கிறார். வில் ஹண்ட்டிங்கின் மனம் செய்யும் எதிர்ப்புக்களை மெல்ல மெல்ல கரைக்கிறார். சியான் உளவியல் நிபுணர் மட்டும் அல்ல. அவர் ஒரு நல்ல கலைஞரும் கூட. அவருக்குள் கவித்துவம் இருக்கிறது. தன் காதல் காலத்தின் நினைவுகளை ஓவியங்களாகத் தீட்டி வைத்திருக்கிறார். அவருடைய மனைவி இளம் வயதிலேயே புற்று நோயால் இறந்து போன பின் வேறு வேறு பெண்ணை அவர் தேடவே இல்லை. இது பற்றி ஒரு சந்தர்ப்பத்தில் வில் ஹண்ட்டிங் அவருடன் உரையாடுகிறான். இந்தப் படத்தில் வரும் மிக அழகான உரையாடல்களில் இதுவும் ஒன்று:

ஹண்ட்டிங்: நீங்கள் ஏன் இன்னொரு திருமணம் செய்து கொள்ளவில்லை?
சியான்: அவள்தான் இறந்து விட்டாளே...
ஹண்ட்டிங்: அதனால்தான் கேட்கிறேன், நீங்கள் இன்னொரு திருமணம் செய்துகொள்ளலாம் அல்லவா?
சியான்: எப்படி முடியும், அவள்தான் இறந்து விட்டாளே...
(அவர் சொல்வதன் அர்த்தத்தை விளங்கிக்கொண்டு வில் ஹண்ட்டிங் மௌனமாகத் தலையாட்டுகிறான். உங்களுக்கு விளங்குகிறதா?)

இவ்வாறு நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும் போது வில் ஹண்ட்டிங்கிற்கு ஒரு புதிய நட்பு கிடைக்கிறது. ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் பிரிட்டிஷ்காரியான ஸ்கைலார் என்னும் யுவதிக்கு அவளின் ஆய்வுப் பணியில் உதவுகிறான். அந்த நட்பு மெல்ல மெல்ல காதலாகவும் மலர்கிறது. ஆனால் தன் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி அவளிடம் சொல்வதற்கு வில் ஹண்ட்டிங் தயங்குகிறான். இந்தக் குழப்பத்திற்கு சியான் ஒரு தெளிவைத் தருவார் என்று அவரிடம் பேசுகிறான். அவனுடைய ஆழ்மனத்தைத் தூரெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதை அவர் உணர்கிறார். பால்ய வயதில் அவன் பாலியல் ரீதியான கொடுமைகளை அனுபவித்தவன் என்பதைச் சொல்லி அவன் உடைந்து அழுகிறான். தானும் அவனைப் போலத்தான் என்று சியான் கூறுகிறார். அந்தக் கசப்பான நினைவுகளின் சுவடுகளை அழித்துவிட்டுப் புதிதாகப் பிறந்தவனைப் போல் இனி வாழ்வில் முன்னேறிச் செல்ல அவனுக்கு ஊக்கம் தருகிறார். இந்தக் காட்சிகளில் வரும் ஒரு உரையாடல் இப்படத்தின் அடிக்கருத்தைத் திரட்டித் தருகிறது:


சியான்: நீ அன்னிக்குச் சொன்னத நெனச்சுப் பார்த்தேன். என் ஓவியத்தைப் பற்றி.
ஹண்ட்டிங்: ஓ...
சியான்: நடு ராத்திரி வரைக்கும் நெனச்சுப் பார்த்தேன். எனக்கு என்னமோ ஆச்சுது. ரொம்ப ஆழமான நிம்மதியான தூக்கத்துல மூழ்கிப் போனேன். அதுக்கப்புறம் உன்னைப் பத்தி நான் நெனக்கவே இல்லை. எனக்கு என்ன ஆச்சுன்னு உனக்குத் தெரியுமா?
ஹண்ட்டிங்: ம்ஹூம்.
சியான்: நீ சின்னப்பையன். நீ எதைப் பற்றிப் பேசுறேங்கற அறிவே உனக்குக் கிடையாது.
ஹண்ட்டிங்: அப்படியா, ரொம்ப நன்றி!
சியான்: அது சரிதான். நீ பாஸ்டனுக்கு வெளியே போனதே கிடையாதில்லியா?
ஹண்ட்டிங்: இல்லை
சியான்: அப்படின்னா, நான் உன்கிட்ட ஓவியத்தைப் பற்றிக் கேட்டால், நீ மேம்போக்கா ஏதாவது அபத்தமான பதிலைச் சொல்லுவ... ஓவியத்தைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களைப் பற்றிப் பேசுவ. மைக்கேலேஞ்சலோ? ம், அவரைப் பற்றி உனக்கு நிறைய தெரியும். வாழ்க்கைப் பணி, அரசியல் சிந்தனைகள், அவரும் போப்பும், பாலியல் பார்வைகள். அவருடைய எல்லாக் கலைப் படைப்புக்களும், சரிதான். ஆனால் நான் சவால் விடுவேன், சிஸ்டைன் ச்சேப்பலினுள் என்ன விதமான மணம் வீசுகிறது என்பது பற்றி உன்னால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. நீ அங்கே ஒருபோதும் நின்று அந்த அழகான விதானத்தைப் பார்த்தது கிடையாது. நான் உன்னிடம் பெண்களைப் பற்றிக் கேட்டால், உன்னுடைய தனிப்பட்ட விருப்பங்கள் பற்றி எனக்கு ஒரு பட்டியலே நீ தரலாம். அவர்களில் சிலரைச் சில தடவை நீ அனுபவித்தும் இருக்கலாம். ஆனால், உன்னுடன் உறங்கிய ஒரு பெண்ணின் அருகில் காலையில் விழித்தெழுந்து அவளைப் பார்த்து மனம் மகிழ்ச்சியால் நிரம்பும் உணர்வு எப்படிப்பட்டது என்று உன்னால் சொல்லவே முடியாது. நீ ஒரு முரட்டுப் பையன். போர் பற்றி நான் உன்னிடம் கேட்டால் நீ என் மீது ஷேக்ஸ்பியர் மேற்கோள் ஒன்றை விட்டெறிவாய், சரிதானா? “Once more into the breach, dear friends.” ஆனால் ஒருபோதும் நீ ஒரு போர்க்களத்தில் நின்றது கிடையாது. உன்னுடைய மிக நெருங்கிய நண்பனின் தலையை உன் மடியில் ஏந்திக்கொண்டு, அவன் தன் கடைசி மூச்சை விட்டபடி உன் உதவிக்காக உன்னை வெறித்துப் பார்க்கும் அனுபவத்தை அடைந்தது கிடையாது. நான் உன்னிடம் காதலைப் பற்றிக் கேட்டால் நீ எனக்கு ஒரு சானட் பாடலைச் சொல்லிக் காட்டுவாய். ஆனால் தன்னை இழந்தவனாக ஒரு பெண்ணின் கண்களுக்குள் நீ ஒருபோதும் பார்த்தது கிடையாது. அப்படிப் பார்வையில் கலந்து யாரையாவது நீ அறிந்ததுண்டா? கடவுள் உனக்காகவே ஒரு தேவதையை இந்த மண்ணில் இறக்கியிருக்கிறான், நரகத்தின் ஆழத்திலிருந்து அவள் நம்மை மீட்டெடுப்பாள் என்பது போல் நீ உணர்ந்ததுண்டா? அந்த தேவதைக்காக என்றென்றும் காதலனாக இருப்பது எப்படி இருக்கும் என்பது உனக்குத் தெரியுமா? அவளை இழந்த பின்னும்? எதனாலாவது? கேன்சர்? ஒரு ஆஸ்பத்திரி அறையில், இரண்டு மாதங்கள், அவளின் கைகளைப் படித்தபடி ராத்திரி முழுதும் உட்கார்ந்து கொண்டே தூங்கி, ஏன்னா உன் கண்களைப் பார்த்தாலே டாக்டர்களுக்குத் தெரியுது, ‘பார்வையாளர் நேரம்’ங்கறது உனக்குப் பொருந்தாதுன்னு. உண்மையான இழப்பு பற்றி உனக்குத் தெரியாது. ஏன்னா. எதையாவது நீ உன்னைவிட அதிகமா நேசிச்சாதான் உண்மையான இழப்பு சாத்தியம். அந்த அளவுக்கு நீ யாரையாவது நேசிச்சிருப்பன்னு என்னால நம்ப முடியல. நான் உன்னைப் பார்க்கிறேன். ஒரு அறிவாளியான, தன்னம்பிக்கையான மனிதனை என்னால பார்க்க முடியல. ஒரு விடலைத் தனமான, பயந்தாங் கொள்ளியைத்தான் நான் பார்க்கிறேன். ஆனால் நீ ஒரு ஜீனியஸ், வில். அதை யாரும் மறுக்க முடியாது. உன்னுடைய ஆழங்களை யாரும் புரிஞ்சுக்க முடியாது. ஆனால், என்னுடைய ஒரு ஓவியத்தைப் பார்த்துட்டதாலேயே என்னைப் பற்றி உனக்கு எல்லாம் தெரியும்னு நீ நெனக்கிற. என் வாழ்க்கையை நீ பிளந்து எடுத்துட்ட. நீ ஒரு அனாதை, இல்லியா? உன்னுடைய வாழ்க்கையின் ஆரம்ப காலம் எவ்வளவு கஷ்டமானதா இருந்துச்சுன்னு எனக்குத் தெரிய வந்ததற்குக் காரணம் நான் ஒலிவர் ட்விஸ்ட் படிச்சதுனாலன்னு நெனக்கிறியா? அது உன்னை வரையறை செய்யுதா? தனிப்பட்ட முறையில, அதைப் பத்தியெல்லாம் நான் கொஞ்சமும் கவலைப் படல, ஏன் தெரியுமா? உன்கிட்டேருந்து நான் கத்துக்க எதுவுமில்ல. உன்னைப் புரிஞ்சுக்கனும்னா அதுக்கு நான் ஒரு எழவு புத்தகத்தையும் படிக்க முடியாது. நீயா உன்னைப் பத்தி மனம்விட்டுப் பேசினாத்தான் ஆச்சு. அப்ப எனக்கும் சுவாரஸ்யம். நான் உள்ளே வரலாம். ஆனால் நீ அதுக்குத் தயாரா இல்ல. உன் மனசுலேருந்து என்ன சொல்லுவியோன்னு பயந்து போயிருக்க. உன் ஆட்டம், தலைவா.

தான் ஒரு அனாதை என்றும் தன் வளர்ப்புத் தந்தையால் சிறுவயதிலேயே பாலியல் ரீதியாகச் சீரழிக்கப் பட்டவன் என்னும் உண்மையை அவன் தன் தோழியான ஸ்கைலாரிடம் சொன்ன பிறகும் தான் அவனைக் காதலிப்பதாகவே அவள் சொல்கிறாள். தன் மருத்துவப் படிப்பிற்காக கலிஃபோர்னியாவிற்குச் செல்வதாகவும் அவன் அங்கே வந்து தன்னுடன் இருக்கும் பட்சத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் அவள் கூறிச் செல்கிறாள். இந்நிலையில் பேராசிரியர் ஜெரால்டு லம்ப்யூ அவனுக்காக இண்ட்டர்வியூக்கள் ஏற்பாடு செய்கிறார். சிறந்த பேராசிரியராகவும் கணிதமேதையாகவும் அவன் உருவாகிப் புகழ் பெறலாம் என்று சொல்கிறார். இந்த இரண்டு வழிகளில் எதனைத் தேர்ந்தெடுப்பது என்று வில் ஹண்ட்டிங் குழம்புகிறான்.


தான் ஒரு கூலித் தொழிலாளியாகவே வாழ விரும்புவதாக அவன் தன் நண்பர்களிடம் சொல்லும் போது அவன் தன் திறமைகளை வீணடிக்கிறான் என்று கவலைப்படுகிறார்கள். பேராசிரியரின் ஏற்பாட்டினை ஏற்றுக்கொள்ளுமாறு அறிவுரை சொல்கிறார்கள். ஆனால், காதலின் பாதையில் செல்லும்படி சியான் அவனுக்குச் சொல்கிறார்.

ஒருநாள் பல்கலைக்கழக வகுப்பறைக்கு வரும் ஹண்ட்டிங் தன் பேராசிரியருடன் வாக்குவாதம் செய்கிறான். அவனின் முடிவு அவருக்குப் பிடிக்கவில்லை. கோபம் கொள்ளும் ஹண்ட்டிங் கணிதத் தியரிகள் எல்லாம் தனக்கு வெறும் நகைச்சுவைத் துணுக்குகள்தான் என்று சொல்கிறான். அந்தப் பேராசிரியர் தன் வாழ்க்கை முழுதும் போராடிக் கொண்டிருக்கும் ஒரு கணிதச் சிக்கலுக்கு என்ன விடை வரும் என்பதைத் தான் கண்டுபிடித்து விட்டதாகச் சொல்லி சில தாள்களைக் காட்டுகிறான். அந்த விடை அவரை ஆச்சரியப்பட வைக்கிறது. அது எப்படி வருகிறது என்னும் படிநிலைகள் அந்தத் தாளில் உள்ளன. அதைத் தன்னிடம் தருமாறு அவர் கேட்கும்போது அவன் மிக அலட்சியமாகக் கொளுத்திச் சாம்பலாக்கி விட்டு அங்கிருந்து வெளியேறுகிறான்.

அவனின் 21-ம் பிறந்த நாளுக்காக அவனுடைய நண்பர்கள் அவனுக்கு மராமத்துச் செய்யப்பட்ட ஒரு ஷெவ்ரொலே நோவா காரினைப் பரிசாகத் தருகிறார்கள். அதனைக் கிளப்பும் அவன் தன் காதலியுடன் இணைந்து புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காக கலிஃபோர்னியா நோக்கி விரைகிறான்.

உமர் கய்யாமிலும், வில் ஹண்டிங்கிலும் என் உள்ளத்தை நான் அடையாளம் காண்கிறேன். ஆன்மிகத்தின்பால் நாட்டமுள்ள ஒவ்வொருவரும் காண்பார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது. இதனை எழுதிக் கொண்டிருக்கும் தருணங்களில் அல்லாமா இக்பாலின் பாடல் ஒன்றும் எனக்கு நினைவு வந்துகொண்டிருந்தது.


’பாங்கெ தாரா’ என்னும் நூலில் உள்ள கவிதை அது. “அக்ல்-ஒ-தில்” (பகுத்தறிவும் இதயமும்) என்னும் அக்கவிதையில் பகுத்தறிவுக்கும் உள்ளுணர்வு மற்றும் காதலின் உதிப்பிடமாக விளங்கும் இதயத்திற்கும் இடையிலான முரண்பாடுகளை உரையாடலாகத் தருகிறார் அல்லாமா இக்பால் (ரஹ்):

“ஓர் நாள் பகுத்தறிவு இதயத்திடம் சொன்னது:
‘வழிதவறியோருக்கு வழிகாட்டி நான்
பூமி விட்டெழுந்து வானம் தொடுகிறேன் நான்
எத்தனை ஆழமாய் விளங்குகிறேன் என்பதைப் பார்!
இவ்வுலகில் வழிநடத்துவதே என் பணி ஆகும்
பண்பில் ஒரு ’கிள்ரு’ போல் இருக்கின்றேன் நான்
உள்ளமையின் நூலுக்கோர் உரையாளன் நான்
இறை மகத்துவம் வெளியாகும் தளம் நான்
நீயோ வெறுமொரு இரத்தத் துளி ஆவாய்
விலைமதிப்பில்லா ரத்தினத்தின் பொறாமை நான்’
இத்தனையும் கேட்டபின் இதயம் சொன்னது
‘இதெல்லாம் உண்மைதான்,
என்றாலும் என்னையும் கொஞ்சம் பார்
நான் யார் என்று.
உள்ளமையின் ரசசியத்தை நீ புரிந்துகொள்கிறாய்
நானோ அதனை என் கண்களால் காண்கிறேன்!
உன் தொடர்போ வெளியுலகின் மீது
நானோ அந்தரங்கம் அறிந்து வைத்திருக்கிறேன்
கல்வி உன்னிடமிருந்து எனில்
ஞானம் என்னிடம் இருந்து!
நீ இறைவனைத் தேடுபவன்
நான் இறைவனைக் காட்டுபவன்!
நிம்மதியின்மை கல்வியின் முடிவாகும்
அந்த நோய்க்கு மருந்து நான்.
உண்மையின் சபையில் மெழுகுவத்தி நீ
அழகின் அவையில் அகல்விளக்கு நான்
காலத்திலும் இடத்திலும் கட்டுண்டவன் நீ
எல்லை மரத்தின் கிளையமரும் பறவை நான்
என் படித்தரத்தின் உயர்வை என்னென்பது?
மகத்தான இறைவனின் சிம்மாசனம் நான்.’”

இந்தப் பாடலில் நான் காணும் நுட்பங்களில் மூன்றினை இங்கே சொல்ல விரும்புகிறேன்.


மனிதனுக்குப் பகுத்தறிவும் தேவைதான். ஆனால் அதுவே முழுமையாகிவிடாது. இப்பாடலில் அல்லாமா இக்பால் பகுத்தறிவிற்கு உவமையாக இறைநேசர் கிள்ரு அவர்களைச் சொல்லியிருக்கிறார். கிள்ரு அவர்களை மூசா நபி சந்தித்த நிகழ்ச்சி திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. கிள்ரு அவ்ர்களிடம் மூசா நபி சில பாடங்கள் கற்றுக்கொண்டார்கள் என்பதை வைத்து அவர் மூசா நபியை விட ஆன்மிகப் படித்தரத்தில் உயர்ந்தவர் என்று சொல்லிவிட முடியாது. நபியின் படித்தரம் ஆரம்பமாகும் நிலையைக் கூட எந்த ஓர் இறைநேசரும் எட்ட முடியாது.

அது போல், இதயம் தடுமாறும் நேரத்தில் பகுத்தறிவு செயல்பட்டுக் காப்பது உண்டு. அதை வைத்துப் பகுத்தறிவே பெரிது என்று சொல்வது தகாது. இதயத்தின் படித்தரத்தை அதனால் ஒருபோதும் எட்டவியலாது.

”எல்லை மரத்தின் கிளையமரும் பறவை நான்” என்பதன் மூல வரி “தாயிரெ ஸித்ரா ஆஷ்னா ஹூ(ன்) மெய்(ன்)” என்பதாகும்.

”ஸித்ரத்துல் முன்தஹா” என்பது ஏழு வானங்கள் தாண்டிய எல்லையில் இருக்கும் ஓர் இலந்தை மரம். நபி (ஸல்) அவர்கள் விண்ணேற்றம் சென்றபோது அந்த எல்லை வரைதான் வானவர்கோன் ஜிப்ரயீல், நபி (ஸல்) அவர்களுடன் வந்தார்கள். அதனைக் கடந்து ஓரடி எடுத்து வைத்தாலும் தான் இறையொளியில் நாஸ்தியாகிவிடுவேன் என்று சொன்னார்கள். எனவே நபி(ஸல்) தனியே முன்னேறிச் சென்று இறைவனை தரிசித்தார்கள்.

அந்த எல்லை மரம் பகுத்தறிவு முடியும் இடம் என்று சூஃபித்துவத்தில் ஒரு விளக்கம் உண்டு. அதைத்தான் இங்கே அல்லாமா இக்பால் தெரிவிக்கிறார்கள். இதயம் அந்த எல்லை மரத்தில் ஓய்வு கொண்டு அதற்கு அப்பால் உள்ள தெய்வீக வெளியில் சிறகடிக்கும் பறவையாக இருக்கிறது.

அந்த எல்லை மரத்தைத் தாண்டி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள்தான் சென்றார்கள். இதயம் என்பதற்கான ‘கல்ப்’ என்னும் அரபிச் சொல்லினை அப்ஜத் என்னும் ஒலியனியல் முறைப்படி மாற்றி அமைத்தால் முஹம்மத் என்னும் சொல் வரும்! (இதனை இத்ரீஸ் ஷாவின் “THE SUFIS” என்னும் நூலில் விளக்கமாகக் காணலாம்.)

பகுத்தறிவு ஒருபோதும் இறைவனை தரிசிக்க முடியாது. ஆனால் இதயத்தின் கண்ணே அவனைக் காணும் என்பது குறிப்பு.
”மகத்தான இறைவனின் சிம்மாசனம் நான்” என்பதன் மூல வரி “அர்ஷ் ரப்பெ ஜலீல் கா ஹூ(ன்) மெய்(ன்)” என்பதாகும். (அர்ஷ் என்பதற்கு இணையான  வேறு சொல் இல்லை. சிம்மாசனம் என்பது தோராயமான மொ.பெதான்.)

முத்தாய்ப்பான இந்த வரி நபி (ஸல்) அவர்களின் ஓர் அமுத வாக்கினை முன்வைத்து முடிகிறது: “கல்புல் முஃமின் அர்ஷுல்லாஹ்” – இதயம் இறைவனின் அரியணை ஆகும்.

No comments:

Post a Comment