Monday, September 20, 2010

தட்டைமுகத் தரிசனம்

                         

மக்காவில் எழுப்பப்பட்டுள்ள மணிக்கூண்டு பற்றிய சிந்தனைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெரும் ஒரு கட்டிடம் ரொம்ப அவசியம்தானா? என்று தோன்றியது. இது போன்ற சிறுபிள்ளைத்தனமான வேலைகள் சவூதி வஹ்ஹாபிகளின் மார்க்க உளவியலையே கேள்விக்குறியாக்குகின்றது. எந்த விதமான சமய போதமும் அற்ற ஒரு தற்குறிக் கூட்டம் என்றுதான் இந்த சவூதி வஹ்ஹாபிகளையும் அவர்களின் அடிவருடிகளையும் பார்க்கவேண்டியுள்ளது. இந்த மணிக்கூண்டு எந்த வகையில் புனித மக்காவிற்குச் சிறப்பு சேர்க்கின்றது என்று தெரியவில்லை.



 சவூதி அரசு என்பது வம்சாவழி மன்னராட்சியில் உள்ளது. மன்னர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். மக்கா மற்றும் மதீனா நகரங்களின் நவீன வடிவமைப்பில் அவர்கள் காட்டி வந்துள்ள கட்டிட மோகத்திற்கு ஒரு சான்றாகவே இந்த மணிக்கூண்டு அமைந்துள்ளது. இது போன்ற பிரம்மாண்டமான கட்டிடங்கள் ஹஜ் பயணிகளின் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் காபாவின் மீதான அவர்களின் கவனத்தைப் பின்னுக்குத் தள்ளுவதாக அமைந்துவிடக் கூடும். ஏனெனில் சராசரி மனநிலை எப்போதும் பெருவடிவங்களின் முன் எளிமையின் பேரழகை கவனத்தில் இழந்துவிடுவதாகவே உள்ளது. இங்கோ, அந்த மணிக்கூண்டின் அடியில் காபாவைப் பார்க்கும்போது ராட்சத கோலியாத்தின் முன் சின்னஞ்சிறு தாவூது (அலை) நிற்பதைப்போல் உள்ளது.

  உலகப் பொருட்களின் அங்காடிகள், நவீன விடுதிகள் என்று ஏற்கனவே சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் எல்லா வசதிகளும் மக்கா மற்றும் மதீனாவில் உள்ளன. இப்போது உலகின் மிக உயரமான மணிக்கூண்டு வேறு. போகும் போக்கைப் பார்த்தால் ஹஜ் செல்வதை ஏதோ டிஸ்னி லேண்டுக்குப் போவதைப் போல் ஆக்கிவிடுவார்கள் என்று தோன்றுகிறது!

இப்ராஹீம் நபி (அலை) காபாவைக் கட்டியது  ஐயாயிரம் வருடங்களுக்கு முன். சுற்றிலும் வெறும் வனாந்தரம். நடுவிலே காபா. அது ஒரு கச்சிதமான வடிவத்தில்கூட இல்லை. நன்கு சுவர்களும் அளவெடுத்துக் கட்டியதாக இல்லை. கொஞ்சம் கோணலாக இருந்தது என்றுதான் வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. அப்படிப்பட்ட கட்டிடத்தைத்தான் இறைவன் தன் வீடு என்று கூறிச் சிறப்பளித்தான். கச்சிதமாக இருக்கிறதா அல்லது கோணலாக இருக்கிறதா என்பதல்ல அளவுகோல். அதைக் கட்டியது ஒரு இறைத்தூதர். அதுதான் விஷயம். ஒரு இறைத்தூதரின் கைகள் கோணலாகக் கட்டினாலும் அது இறைவனின் இல்லம்தான். சுலைமான் நபி (அலை) ஜெருசலேமில் கட்டிய இறையாலயம் கச்சிதமான கட்டிடாமாகும். அவர்கள் மாமன்னராக இருந்தார்கள். ஒரு அரண்மனைக்குரிய ஏற்பாடுகளுடன் இறையில்லத்தைக் கட்டினார்கள். அதுவும் இறையில்லம்தான். அது கச்சிதமாக இருந்ததால் அல்ல. அது ஒரு இறைத்தூதர் கட்டியது என்பதால். கோடிக்கணக்கான இறையில்லங்களைக் கட்டுவது விஷயமல்ல. எந்த மனநிலையில் ஒரு இறையில்லக் கட்டிடம் நிர்மாணிக்கப் படுகிறது என்பதுதான் இறைவனின் அங்கீகாரத்தைப் பெறும். இதைக் காபாவின் உருவாக்கமே நமக்குக் காட்டுகிறது.

இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டியபோது காபாவின் கட்டிட அமைப்பு  மிகவும் எளிமையானதாக இருந்தது. பின்னால் வந்த அரபிகளுக்கு காபாவில் ஒன்றுமே இல்லையே என்ற எண்ணம் மலர்ந்தது போலும். எனவே காலப்போக்கில் அதில் கூடுதலாகப் பல சிலைகள், அதாவது முன்னூற்றி அறுபது சிலைகள் நிறுவப்பட்டு மக்கள் தூல வணக்கத்திற்கு வந்துவிட்டார்கள். மக்களின் சிந்தனையை மீண்டும் அருவ வழிபாட்டிற்குத் திருப்பவேண்டிய நிலை வந்தபோது நபிகள் நாயகம் அந்தச் சிலைகளை எல்லாம் நிர்மூலப் படுத்தினார்கள். இப்ராஹீம் நபி அவர்கள் கட்டியபோது இருந்த நிலைக்கே காபா திருப்பப்பட்டது. காபாவைச் சுற்றிலும் சில சிறு மண் வீடுகள் தோன்றியிருந்தாலும் அவை காபாவை விடப் பெரிதாக இல்லை. எனவே காபா அந்த அரபு வனாந்திரத்தில் தன்னை முழுவதுமாகப் பரந்து விரிந்த வானத்திற்கு வெளிப்படுத்திக்கொண்டு நின்றது. அப்படித்தான் பல நூற்றாண்டுகளாக நின்றுவந்துள்ளது. ஆனால் அது இன்று மிகப்பெரிய நவீன கட்டிடத்திற்குள் உள்ளடங்கி ஒரு ஆஜானுபாகுவான மணிக்கூண்டை அண்ணாந்து பார்ப்பது போல் தோற்றமளிக்கிறது. இது வஹ்ஹாபிய உளவியலின் தோற்றம்தான்!

வஹ்ஹாபிய உளவியல் என்பது "டைட்டானிக்" கப்பல் கட்டிய அமெரிக்க உளவியலைப் போன்றதுதான். "உலகிலேயே பெரிசு என்னிடம்தான் உள்ளது"  என்று மார்தட்டிக் கூவவேண்டும். அதில் அதற்கு ஒரு தனிப் பெருமையும் அலாதியான சுகமும் உள்ளது. எளிமைக்கெல்லாம் அதன் அகராதியில் அர்த்தமே கிடையாது!

உண்மையில் காபா உருவாக்கும் சமய உணர்வெழுச்சி, ஆன்மிக மனநிலை என்பது அது நிற்கும் மண்ணோடு மட்டும் தொடர்புடையது அல்ல. காபாவின் மேல் பரந்து உயர்ந்து கவிந்து நிற்கும் வான வெளிக்கும் அதில் முக்கியமான பங்கு உண்டு. காபாவின் மாற்றப்படக்கூடாத ஒரு பரிமாணமாகவே அதன் மீது வானவெளி வியாபித்து நிற்கும் அமைப்பை நான் காண்கிறேன். அந்த நீல விதானம் எந்தக் கட்டிடத்தின் குறுக்கீடும் இன்றி ஹஜ்ஜிற்கு வருபவர்களின் பார்வைகளை இழுக்கவேண்டும். 
அப்போது அது உருவாக்கும் மனநிலை, மணிக்கூண்டு போன்ற கட்டிடங்கள் காபாவிற்கு அருகில் நிற்கும் நிலையில் உருவாக முடியாது.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு கூறு காலம் பற்றியது. உலகில் உள்ள எல்லாப் பொருட்களுமே ஓர் ஒற்றைக்காலத்தில் இருப்பதாகப் பார்க்கும் பார்வைதான் மக்காவையும் மதீனாவையும் நவீன கட்டிடக்கலைக்குக் கொண்டு வந்துள்ளது. ஆனால் பழைய அரபி இனத்திற்கென்று தனியாகச் செவ்வியல் கட்டிடக்கலை எதுவும் கிடையாது. இன்று அராபிஸ்க் (Arabesque) என்று அழைக்கப்படும் கட்டிடக்கலைக்  கூறுகள் - பூ வேலைப்பாடுகள், ஜியோமிதிக் கோலங்கள் போன்றவை - எதுவும் நபிகள் நாயகம் காலத்தில் அரேபியாவில், குறிப்பாக காபாவிலும், மஸ்ஜிதுன் நபவியிலும் இருக்கவில்லை. அவை பாரசீகக் கலையுலகிலிருந்து பின்னால் அரபுலகம் வரித்துக் கொண்டவை. அவற்றை இஸ்லாமியக் கூறுகளாக மாற்றியது சூபிகள்தான். நபிகள் நாயகத்தின் காலத்தில் காபாவின் சுற்றுப்புறமும் சரி, மஸ்ஜிதுன் நபவியின் அமைப்பும் சரி, எந்தக் கலையலங்காரமும் இல்லாமல் மிக எளிமையான நிலையிலேயே இருந்தன. அந்த எளிமை இன்று இல்லை. தங்கப் பூச்சுக்கள் அலங்கரிக்க மக்காவும் மதீனாவும் வாட்டிகன் போல் மாற்றப்பட்டுள்ளன. கட்டிட வேலைப்பாடுகளில் அவை தாஜ்மகால் போன்ற கட்டிடங்களின் கலையமைப்பைப் பின்பற்றுகின்றன. இந்தப் புறச்சூழலில் ஹாஜி எவரும் நபிகள் நாயகத்தின் காலச் சூழலை அங்கு உணரமுடியாது. ஹஜ்ஜில் அடைந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான அனுபவத்திற்கு இந்த நவீனப் புறச்சூழல் மிகப்பெரிய தடையாக இருக்கும்! 

 ஆனால் வஹ்ஹாபிகளுக்கு காலம்-வெளி உருவாக்கும் அகநிலை, உள்ளுணர்வு போன்ற விஷயங்களிலெல்லாம் நம்பிக்கையே இல்லை. இது போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே அவர்களுக்கு அலர்ஜியில் உள்ளம் எல்லாம் தடித்துக்கொண்டு அரிப்பெடுத்துவிடும். எனவே மக்காவிலும் சரி மதீனாவிலும் சரி, தொன்மைச் சூழலைப் பேணுவதற்குப் பதிலாகத் திட்டமிட்டே அழித்து வருகிறார்கள். உதாரணமாக, நபிகளாரின் குடும்பத்தாரும் தோழர்களும் வாழ்ந்த வீடுகளையெல்லாம் நூலகம், மருத்துவமனை போன்ற அலுவலகங்களாக மாற்றியுள்ளார்கள். அதாவது சும்மாக் கிடக்கும் இடத்திற்குப் பயன்பாட்டினை உருவாக்குகிறார்களாம்! இவ்வாறாக, மக்கா மற்றும் மதீனாவில் காணப்படுவது வஹ்ஹாபிசத்தின் தட்டையான அராஜக முகம்தான்!

இந்து மதத்தின் நிலை அப்படியே தலைகீழானது! டிஸ்கவரி சேனலில் காசியைப் பற்றி ஒரு ஆவணப்படம் காட்டினார்கள். காசி இன்னும் ஐந்தாம் நூற்றாண்டிலேயே இருப்பதாகத் தெரிந்தது. இது ஒரு தேக்க நிலை என்று கூறுவது முட்டாள்தனம். புரியாதவர்கள்தான் இதை உறைந்துபோன நிலை என்று காண்பார்கள். காசி முதன்முதலில் நிர்மாணிக்கப்பட்ட காலத்தின் சூழல் முடிந்த அளவு பேணப்பட்டு வருகிறது என்றுதான் கூறவேண்டும். சங்கரர் உலவிய காசியை, குமரகுருபரர் நடந்த காசியை இன்று ஒரு ஹிந்து அங்கே எளிதாக அடைந்துகொள்ள முடியும். ஆனால் இந்து மதத்தின் பிரச்சனை இந்தப் பேணுதலின் நீட்சியாக உண்டாவதுதான். அதாவது புறச்சூழலில் சுகாதாரக் குறைபாடு. ஆனால் இதை எளிதாக நிவர்த்தி செய்துவிட முடியும்.


   
இந்த விஷயத்தைப் பற்றித்தான் ஜெ.கிருஷ்ணமூர்த்தி ஒரு முறை, "இந்துக் கோயில்களில் சுத்தம் என்பதே இல்லை. எண்ணெய்ப் பிசுக்கும் வவ்வால் புளுக்கையுமாக உள்ளது. அதில் சென்று வணங்குவதைவிட நதியை வணங்கலாம். அதில் உயிர்த்துடிப்பு அதிகமாக உள்ளது!" ("ஒரே ஒரு புரட்சி")  என்று கூறினார்.

ஒரு பெருங்காய டப்பாவின் தூய வடிவம் என்பது உள்ளீடு எதுவும் இல்லாமல் காலி டப்பாவாக இருப்பதுதான். மார்க்கத்தை அதன் தூய வடிவில் பின்பற்றுவதாகக் கூறும் வஹ்ஹாபிகளின் நிலை ஆன்மிகச் சாராம்சம் எதுவுமற்ற வெறும் புறச்சடங்குகளால் ஆன காலி டப்பாவாகத்தான் இருக்கிறது. இதற்காக அது மிகுந்த இறுமாப்புடன் திரிகிறது!

5 comments:

  1. இஜட்.ஜபருல்லாஹ் நானா அவர்கள் சொன்னது போல் அன்று ஹாஜிரா அவர்கள் தண்ணீருக்காக ஓடினார்கள், இன்று ஹாஜிகள் கையில் மினரெல் வாட்டரை வைத்துக் கொண்டு ஏஸி அறையில் தொங்கோட்டம் ஓடுகிறார்கள்.. எல்லாவற்றையுமே மாற்றிவிட்டார்கள், நம்மை போன்றவர்கள் இந்த சூழலிலும் அந்த மனநிலையை கொண்டு வர போராடி தான் ஆக வேண்டும்

    ReplyDelete
  2. அருமையான எழுத்தாற்றலும்,பன்முக வாசிப்பும், ஆய்வுத் திறமும் உங்கள் கட்டுரைகளுக்கு ஒரு இன்டலெக்ச்சுவல் ஜொலிப்பை தருகின்றன. ஆன்மீக கட்டுரைகள் அதிகதிகம் உங்களிடமிருந்து வெளியாக வேண்டும் என்ற ஆர்வத்தை அது விதைக்கிறது. மணி கூண்டை பற்றிய உங்கள் பார்வை சரியானது தான் ஆனால் ஏ.ஸி. இல்லாத அரபு நாட்டில் நாம் மனம் ஒன்றி ஹஜ் செய்ய முடியுமா?

    ReplyDelete
  3. //இது போன்ற பிரம்மாண்டமான கட்டிடங்கள் ஹஜ் பயணிகளின் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் காபாவின் மீதான அவர்களின் கவனத்தைப் பின்னுக்குத் தள்ளுவதாக அமைந்துவிடக் கூடு//
    உண்மை உண்மை, முன்பெல்லாம் ஹிரா குகையும் அதில் ஏறுபவர்களின்
    வெள்ளை நூலேணித் தோற்றமும் தெரியும். இப்போது குகையென்ன மலையே தெரியவில்லை.

    ReplyDelete
  4. //இது போன்ற சிறுபிள்ளைத்தனமான வேலைகள் சவூதி வஹ்ஹாபிகளின் மார்க்க உளவியலையே கேள்விக்குறியாக்குகின்றது. எந்த விதமான சமய போதமும் அற்ற ஒரு தற்குறிக் கூட்டம் என்றுதான் இந்த சவூதி வஹ்ஹாபிகளையும் அவர்களின் அடிவருடிகளையும் பார்க்கவேண்டியுள்ளது//

    உங்கள் உள் விஷயம் என்றாலும்,ஜாகிர் நாயக் போன்ற வஹாபிகளின் எழுத்துக்களைப் படித்து,கேட்டு நொந்து போயுள்ளேன்.

    ReplyDelete
  5. மணிக்கூண்டு அவசியமா என்ற கேள்வி சரிதான், திசை திருப்பும் செயல்பாடு.. சிந்திக்கவேண்டிய ஒன்றுதான்... இதில் அப்துல் வஹ்ஹாப் நஜதி எங்கே வருகிறார் என்பதுதான் தெரியவில்லை..!!

    மணிக்கூன்டின் மற்றும் மக்காவின் மதீனாவின் டிசைன் என்சினியர் / சிட்டி பிளான் ஆர்க்கிடெக்ட் அவரா? என்ன அடிப்படையில் இந்த குற்றச்சாட்டு..?

    தாலிபானில் நடவடிக்கைகளை இஸ்லாமிய முறை என மேற்கத்தியர்களின் முன்மாதிரியா..?

    அதென்ன காலி பெருங்காய டப்பா? நபி வழியும் இறைமறையும் வெற்றிடமாக உங்களுக்குத் தெரிவதில் என்ன ஆச்சர்யம், பிச்சைக்காரனின் தட்டில் மிஞ்சிய கலவைகளை காவியம் என்னும் போதையில் அற்புதமாக காணும் வழக்கம் கொண்டதான் விளைவுதான் அது..!!

    வஹ்ஹாபியத்தை சாட வேண்டும் என்ற அரிப்புக்கு, மணிக்கூண்டை காரணமாக்கும் முயற்சி பலனலித்தாலும் ஆச்சர்யமில்லை !! மடையர்களுக்கா பஞ்சம் நாட்டில்............

    ReplyDelete