Saturday, April 6, 2013

கால்தடம்




காத்திருக்கையில்
எல்லோரிலும்
வந்து போகின்றாய்...
ஒருமுறையாவது
என்னில் வரக்கூடாதா நீ?
*
என்ன விசித்திரமான நோய் இது?
இல்லாததைப் பார்த்தபடி
இருப்பதைத் தேடுகின்றார்கள்!
*

என்னில் தெரியும்
உன் அடையாளங்களில்
தெரிகின்றாய் நீ

’என்னில் உன் அடையாளங்கள்
எப்படித் தெரிகின்றன?’
என்றேன்
’என்னில்தான் இருக்கின்றாய் நீ’
என்றாய்
*
பூந்தோட்டத்தில் உலவுதல்
புத்துணர்ச்சிதான்
எனினும்
பசி வந்தபோதோ
பழத்தோட்டம் சென்றுவிட்டேன்
*
எத்தனையோ பேர்
நடந்து சென்ற பாதைதான்
இருப்பதோ
ஒரேயொரு காலடித்தடம்
*
‘எத்தகையது உன் காதல்?’
என்றேன்

‘முச்சுடர் விளக்கில்
மூழ்கும் விட்டிலே!
ஒவ்வொரு அறிதலும்
ஆயிரம் புரிதல்
ஒவ்வொரு புரிதலும்
ஆயிரம் எரிதல்’
என்றாய்.
*

1 comment:

  1. அருமை அருமை ஜஷாகல்லாஹ்

    ReplyDelete