Tuesday, March 26, 2013

விட்டில் சிறகு



’எதுவுமே
உவமை இல்லை
உனக்கு’
என்றேன்

’என் மகத்தான உவமை
நீதான்’
என்றாய்
*
விளக்கின் வெளிச்சத்தில்
வித வித வேலைகள்
விலகிச் செல்வோருக்கு

விட்டிலின் வேலை
விளக்கில் வீழ்வது மட்டுமே
*

காணாமல் போன விளக்கைத்
தேடித் திரிந்தது ஒரு விட்டில்

கண்டடைந்த போதோ
விளக்கில் வீழ்ந்து
காணாமல் போனது
*

ஆயிரம் நூல்களில்
அறியாத ஒன்றை
அறிந்தேன் உன் கண்களில்

ஆயிரம் நூல்கள் எழுதினும்
சொல்லிவிட முடியாது அதை
*

உன் காதலின் வீதியில்
அலங்கோலமாய்
அலைகின்றேன் மீண்டும்

பிறரிடம் நான் மதிப்போடிருந்த நாட்களுக்கு
எந்த மதிப்புமில்லை என்னிடம் இப்போது
*

வேறு வேறோ?
ஒன்றுதானோ?
உன் முத்தத்தின் இன்பம்
அதன் நினைவின் இன்பம்
*

பரிதாபம் கொள்வோர்க்குத் தெரியுமோ
என் வலியின் பின்னே உள்ள சுகம்?

பொறாமை கொள்வோர்தான் அறிவாரோ
என் சுகத்தின் பின்னே உள்ள வலி?

1 comment: