Thursday, April 20, 2017

இஸ்லாமிய ஆன்மிகம் - part 2

Image result for green dome artwork

தனது பிரபஞ்ச ஆன்மிகப் பார்வையின் காரனமாக சூஃபித்துவம் அதன் இயல்பிலேயே சத்தியத்தின் அனைத்து வெளிப்பாடுகளுக்கும் திறந்த மனம் கொண்டுள்ளது. கிறித்துவ பௌத்த ஹிந்து மற்றும் நவ-ஆன்மநேயத்தின்  தாக்கங்கள் சூஃபித்துவத்தில் காணப்படுகின்றன. ஆன்மிக வழிகள் அனைத்தும் பொதுப் பண்புகளைக் கொண்டுள்ளதால் இது ஆச்சரியமான ஒன்றல்ல. ஆனால் சூஃபிகளின் இந்தத் பன்மவளத்தை ஏதோ தோராயமான கலப்படம் என்று எண்ணிவிடக் கூடாது. அதேபோல், சூஃபித்துவமே அவற்றின் விளைவுதான் என்பது போல் அவற்றின் தாக்கத்தை மிகைப்படுத்திக் கூறுவதும் தகாது. சூஃபிப் பாதையின் ஆரம்ப மூலமாய் இருப்பது இஸ்லாமிய இறைவெளிப்பாடுதானே தவிர நவ-ஆன்மநேயம் அல்லது கிறித்துவச் சிந்தனை குறித்த ஏதேனுமொரு நூலன்று. அதேபோல், சூஃபி வழியை முதன்முதலில் மெய்ப்படுத்தியவர் நபி(ஸல்) அவர்களே அன்றி ஏதோவொரு கிறித்துவத் துறவியோ பௌத்த சந்நியாசியோ அல்லர்.

சூஃபித்துவத்தின் பார்வையில் ஷைஃக் என்னும் குருவும் சூஃபிப் பாதையும் ஒன்றே. காதிரிய்யா சூஃபிப் பள்ளியை பன்னிரண்டாம் நூற்றாண்டில் தொடங்கிய அப்துல் காதிர் அல்-ஜீலானி அவர்கள் ஒருமுறை சொன்னார்கள், “பாதைதான் குரு, குருதான் பாதை”. பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி அபில் அப்பாஸ் அல்-முர்சி அவர்கள் சொன்னார்கள், “சூஃபித்துவம் என்பது நூற்களில் இல்லை”. அதாவது, சூஃபித்துவத்தின் போதனைகளும் பயிற்சிகளும் அதன் பாதையின் குருமார்களின் கைகளில்தான் தனித்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சூஃபிப் பள்ளியின் தற்போதைய குருவிலிருந்து இஸ்லாத்தின் மூலவரான நபி வரை இடையறாது பின்னோக்கித் தொடர்ந்து குருமார்களின் பெயர்களைப் பதிவு செய்த பட்டியலான சில்சிலா என்பது இக்கருத்தினைத் தெளிவாகப் புலப்படுத்தும். இவ்வாறு, இஸ்லாத்தின் அனைத்து சகாப்தங்களிலும், ஆன்மிகவாதியாக விரும்பும் ஒருவர் செய்ய வேண்டிய முதல் வேலையே உண்மையான குருவைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு எத்தர்கள் மற்றும் போலிகளை விட்டும் தூரமாக இருப்பதுதான்.

Image result for mansur al hallaj

இருந்தும், சூஃபி ஞானியர் சில குறிப்பிட்ட சமய அறிஞர்களிடமிருந்து புரிதலின்மை மற்றும் எதிர்ப்பைப் பெற்றுள்ளனர் என்பது ஆச்சரியமல்ல. இறைச்சட்டத்தின் சொற்கள் பரிசேயனின் கைகளில் அகப்படும்போது அதன் ஆத்மா நூந்துவிடுகிறது. பத்தாம் நூற்றாண்டில் சூஃபி மன்சூர் அல்-ஹல்லாஜ் அவர்கள் பக்தாதின் சமய அறிஞர்களின் கைகளில் மரண தண்டனை பெற்றது தீவிர சமயச் சடங்குத் தன்மை எப்படி ஆன்மிக வாழ்வு முழுவதையும் நெறித்துப்போடும் என்பதற்கான தெளிவான சான்று. எனினும், அல்-ஹல்லாஜின் உதாரணத்தைக் கொண்டு நாம் தவறான புரிதல்களுக்குள் மயங்கிச் செல்லக் கூடாது. இஸ்லாமிய வரலாற்றின் அனைத்துக் காலங்களிலும் சூஃபி வட்டங்களைச் சேர்ந்த மிகச் சிறந்த சமய அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அப்போதுதான், ஷரீஅத் வல்லுநர்கள் அனைவருமே சூஃபித்துவத்தின் பரம எதிரிகள் என்று பிழைபட எண்ண மாட்டோம். இரண்டாவதாக, அல்-ஹல்லாஜின் நிலை இயல்பான சூஃபித்துவ நிலை அல்ல. மாறாக, சூஃபித்துவத்தின் மாபெரும் மேதைகளான அல்-ஜீலானி, இப்னுல் அரபி, இமாம் அபுல் ஹசன் அஷ்ஷாதிலி போன்றோரெல்லாம் குற்றம் சாட்டப்படுவது என்று நினைப்பதற்கே இடமில்லா நிலையில் அவர்கள் காலத்தின் பொதுமக்களாலும் அறிஞர்களாலும் சங்கை செய்யப்பட்டுள்ளனர். மூன்றாவதாக, சூஃபித்துவம் என்பது இஸ்லாமியச் சமூக அமைப்பினுள் ஒருங்கிணைக்கப்பட்டவுடன் தனிப்பட்ட சமய அறிஞர்களின் தாக்குதல்களை ஒருவித விலகல் தன்மையுடன் பார்க்கவும், அந்த ஷரீஅத் பாதுகாவலர்களின் குறுகிய இறைச்செய்திப் புரிதலின் பொருட்டு அவை நிகழ்வதைத் தவிர்க்கவியலாது என்று ஏற்றுக்கொள்ளவும் சூஃபிகள் முற்பட்டனர்.

 எனவேதான், இஸ்லாத்தின் ஆன்மிக வரலாறு என்பது கிறித்துவத்தின் நிலையினின்றும் வேறுபட்டது. கிறித்துவத்தில் ஒருபக்கம் திருச்சபையின் சமய அதிகாரத்திற்கும் மறுபக்கம் மெய்ஞ்ஞானியரின் ஆன்மிக அதிகாரத்திற்கும் இடையில் எவ்வித செயல்முறைப் பிணக்கையும் நாம் காண்பதில்லை. மேலும், கிறித்துவ ஆன்மிகவாதிகள் திருச்சபையின் இடையீட்டிற்கு உட்படுத்தப்படும் நிலையைக் காண்கிறோம், ஆனால் இஸ்லாத்டின் சூஃபி குருமார்கள் சமயத் தலைவர்களை விட்டும் சுதந்திரமானவர்கள். பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சூஃபியும் இறையியலாளருமான அல்-கஸ்ஸாலீ அவர்கள், ஷரீஅத்தின் வல்லுநர்கள் சட்டவியலோடு தம்மை நிறுத்திக்கொள்ள வேண்டும், சூஃபிகளுக்கே உரியதான ஆன்மிக விஷயங்கள் பற்றிக் கருத்துச் சொல்லக்கூடாது என்று சுட்டிக் காட்டிய ஆரம்ப காலச் சூஃபிகளில் ஒருவராவார். அவ்வாறு, சூஃபித்துவம் தனது சொந்த போதனைகளையும் பயிற்சிகளையும் வகுத்துக்கொண்டது, தனது தனித்த அமைப்புக்களை நிறுவியது, தனது சொந்த வழிகாட்டிகளைப் பெற்றது. இவை அனைத்தும் அதனை இஸ்லாத்தின் வழமையான பிரதியை விட்டும் மேலும் தூரமாக்கின. இது முஸ்லிம் பாரம்பரிய உலகில் மாபெரும் கலீஃபாக்கள் மற்றும் அரசர்களின் அங்கீகாரத்தைப் பெற்றது. அவர்கள் சூஃபிக் கூடங்கள் தமது மண்ணில் கட்டப்பட ஆணையிட்டனர்; அவையில் சூஃபி குருமார்களுக்கான தனித்த நியதிகளை வகுத்து அவர்களைக் கண்ணியப்படுத்தினர்; அதற்கும் மேலாக, பல மன்னர்கள் தமக்கு சூஃபி குருமார்களைத் தேடிச் சீடர்களாகித் தமது கர்வம் முற்றழிந்த நிலையில் அவர்களைச் சந்தித்தனர். வேறு விதத்தில் சொல்வதெனில், ஆன்மிகம் என்பது முஸ்லிம் உலகில் எங்ஙனும் பரவியிருந்து பொது அமைப்புக்களில் அனைவரின் பார்வையிலும் படுவதாயிருந்தது. அது இஸ்லாமிய இருத்தலின் இயல்பான தலமே அன்றி அயற்பண்புடையதாகவோ கைக்கு எட்டாததாகவோ இருக்கவில்லை.

Image result for attack on sufi shrine

எனினும், நவீன உலகின் தோதற்ற சூழல்களில் சூஃபிப்பாதை மிகவும் வதைப்பட்டுள்ளது. முஸ்லிம் உலகின் பெரும்பரப்பில் பொதுவானதொரு ஆன்மிக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கீழைத்தேயங்கள் முதல் இங்கே மேற்கு வரை நவீன மதச்சார்பற்ற நாகரிகத்தால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ள சமய வாழ்வுடன் அது பிணங்கி நிற்கிறது. இஃதொரு காரணம். ஏற்கனவே பலஹீனப்பட்டுக் கிடந்த முஸ்லிம் உலகிற்குள் நுழைந்த நவீன மேற்கத்திய நாகரிகம் அதன் பாரம்பரிய வாழ்க்கை முறையின் கூறுகளைப் பறித்துள்ளது. அதன் ஆன்மிகப்பாதைக்கு பலம் சேர்க்கும் அந்தக் கலாச்சாரக் கூறுகளை மேற்கத்திய நாகரிகம் குறைத்து மதிப்பிட்டு விட்டது. இது இரண்டாம் காரணம். இறுதியாக, அனைத்துவகை சீர்திருத்தவாதிகளும், நவீனமாயினும் பழமைவாதமாயினும், தமது மண்ணிலிருந்து சூஃபித்துவத்தை வெளியேற்றுவதற்குத் தம்மாலான வேலைகளைச் செய்திருக்கிறார்கள். நவீன சீர்திருத்தவாதிகள் சூஃபித்துவத்தை எதிர்ப்பது ஏனெனில், அது அவர்களக்கு அவர்களது மரபான இஸ்லாமியப் பிடிப்புக்களை நினைவுறுத்தி அவர்களின் நவீனத்துவம் பற்றிய குற்றவுணர்வைத் தூண்டுகிறது. அதற்கு நேரெதிர் நிலையில் பழமைவாத தூய்மைவாத முஸ்லிம்கள் இருக்கின்றனர். இஸ்லாத்தை சட்டவியல் நிலைக்குக் குறுக்கிவிட எத்தனிக்கும் தமது முயற்சிகளுக்கு சூஃபித்துவம் அச்சுறுத்தலாக இருப்பதாக அவர்கள் பார்க்கின்றனர். எனவே, சூஃபித்துவத்தை துடைத்தெறிய அவர்கள் முயன்று சிறிதோ பெரிதோ வெற்றியும் பெற்றுள்ளனர்.

முரணாகத் தெரியலாம், ஆனால் எப்படியும் இது காலத்தின் அடையாளம் – அதாவது, சூஃபித்துவம் என்பது ஒரு தேவையற்ற குழந்தையைப் போல் முஸ்லிம் உலகில் இடமிருந்தும் வலமிருந்தும் தாக்கப்பட்ட போதும் நவீனத் தொழில்நுட்ப நாகரிகம், பொருள்முதல்வாதக் கொள்கைகள் மற்றும் அறிவுத்துறைகளால் சடைந்து சோர்ந்துள்ள மேற்குலக இளைஞர்களால சூஃபித்துவம் ஆர்வத்துடன் தேடப்பட்டுவருகிறது. இந்நிகழ்வு, ஏன் மேற்குலக இளைஞர்கள் இஸ்லாத்தை அல்லாது சூஃபித்துவத்தை விரும்புகின்றனர் என்பது, சில முஸ்லிம்களை மருளச் செய்யலாம். அவர்கள் மருள வேண்டியதில்லை, ஏனெனில் சூஃபித்துவமே இஸ்லாமியச் சமயத்தின் உண்மையான இதயம். எந்தச் சமயத்திற்கும் ஆன்மிக வாழ்வே அதன் சாராம்சம். அதை நீக்கிவிட, அச்சமயம் மெலிந்து சாகும்.

சூஃபித்துவம் என்பது இஸ்லாத்தின் ஆன்மிக வாழ்வு என்பதை மேற்குலக இளைஞர் பலரும் மறந்துவிட்டனர். ”சூஃபித்துவம் மற்றும் இஸ்லாம்” என்று பிரித்துச் சொல்வது தவறு, “ஆன்மிகம் மற்றும் சமயம்” என்று சொல்வது எப்படித் தவறோ அது போல. ஆதாரபூர்வமான சூஃபி குருமார்கள் இஸ்லாமிய ஷரீஅத்தைத் தமது கண்ணோட்டத்துக்குள் இடம்பெறச் செய்வது என்பது ஏதோ தற்செயலாக நடப்பதல்ல. இஸ்லாத்தின் புறக்கட்டுமானத்திற்கு ஏதோ அவர்கள் உதட்டளவு மரியாதை செய்கிறார்கள் என்பதல்ல. ஆனால், குறிப்பாக ஐந்து தூண்களின் பாதுகாப்பு மையமாக இருக்கின்ற இறைச்சட்டம் அவர்களது சீடர்களில் சமநிலையை உண்டாக்குகின்ற இன்றியமையாத வேலையைச் செய்கிறது என்பதாலாகும்.

 முற்காலத்து சூஃபிகள் சிலரிடம் வெளிப்பட்ட பிரபஞ்சந்தழுவிய பார்வைகள் சிலவற்றை நோக்க, மேற்குலகில் சூஃபித்துவம் என்பது இஸ்லாத்தை விட்டும் பிரிந்து கிடக்கும் நிலை புரிந்துகொள்ள முடிவதுதான். உதாரணமாக, இப்னுல் அரபியும் ரூமியும் இறைச்செய்தியின் பிரபஞ்சத் தன்மை பற்றிய குர்ஆனின் அறிக்கையை அதன் தர்க்க முடிவுகளுக்குக் கொண்டு சென்று சொல்லியிருக்கும் சில கருத்துக்கள், இறைவனை அவர்கள் அனைத்து மதங்களிலும் கண்டுகொண்டார்கள் என்பதால் ஏதோ அவர்கள் இஸ்லாத்திற்குத் தொடர்பற்ற பிரபஞ்சவாதிகள் போல் தோன்றச் செய்கிறது. ஆனால் உண்மையில், அவர்களின் பிரபஞ்சத்தன்மையுடன் எப்போதும் ஒரு யதார்த்தமான பிரத்யேகவாதமும் இணைந்தே இருக்கிறது. அவர்கள் தம் வாழ்வின் இறுதி வரை முஸ்லிம்களாகவே இருந்தனர். மேலும், இறைவனை அடைந்துகொள்வதில் அவர்களுக்கு வழிகாட்டிய இறைச்செய்தியைத் துறந்துவிடுவது பற்றி ஒருபோதும் அவர்கள் கனவுகூட கண்டிருக்கமாட்டார்கள். சொன்னால் வியப்பாக இருக்கும், ஆனால் உண்மை, இப்னுல் அரபி இஸ்லாத்தின் ஷரீஅத் பற்றி நூற்றுக்கணக்கான பக்கங்கள் எழுதியிருக்கிறார். இஸ்லாம் அவருக்கொரு பொருட்டில்லை என்றால் அவர் ஏன் அப்படி எழுத வேண்டும்?

இங்கே மேற்கின் நம் காலத்து ‘நாளைய ஆன்மிகவாதி’க்கு அல்லது கிழக்கின் இன்றைய ஆன்மிகவாதிக்கு இதில் ஒரு செய்தி இருக்கிறது. அனைத்துச் சமயங்களின் ஆன்மிக அனுபவங்களையும் அங்கீகரித்தல் என்பது ஒரு நல்ல விஷயம்தான். ஆனால், ஆன்மிகத்திற்கு மதம் தேவையில்லை என்னும் மாயைக்கு ஒருவரை அது தள்ளிவிடக்கூடாது. அத்தகைய மாயை இன்று அதிகம் உள்ளது. மகா சூஃபியான இப்னுல் அரபி ஒரு முஸ்லிம் ஆன்மிகவாதியே அன்றி அவர் ஒரு புத்த ஆன்மிகவாதியோ அல்லது ஹிந்துவோ அல்லது வெறுமனே சூக்கும ஆன்மிகவாதியோ அல்லர். அத்தகைய ஒரு ஞானியின் வாழ்வின் ஒரு கட்டத்தில், பரம்பொருளுடன் அவருக்கு ஏற்படும் ஆன்மிக இணைவின்போது, இஸ்லாமிய வடிவங்களை அவர் பின்னே விட்டுவிடுகிறார் என்பது உண்மைதான். ஆனால் அது, இப்னுல் அரபியின் மனிதவியல்பு பெற்றுள்ள இஸ்லாமிய இணைப்பைத் துண்டித்துவிடாத நிலையிலுள்ள ஆன்மிக அடையாளம் ஆகும். சொல்லப்போனால், இஸ்லாத்தைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு தொடங்கியிருக்கவில்லை எனில் அந்த ஆன்மிக இணைவு நிகழ்ந்திருக்கவே முடியாது.

முஸ்லிம் உலகில் சூஃபித்துவம் மீதான புரிதல் என்பது இங்கே மேற்கில் சூஃபித்துவம் பற்றிய புரிதலினும் வேறுபட்டது. தம் மீதான அல்லது தமது வாசகர்கள் மீதான சூஃபித்துவ ஆன்மிக விளைவுகளைப் பற்றிக் கொஞ்சமும் கவனம் செலுத்தாத மேற்கத்திய வல்லுநர்களின் நூற்களின் வழியாகவே பெரிதும் சூஃபித்துவம் பற்றி அறிந்து கொள்கின்ற நவீன முஸ்லிம்களும் இருக்கிறார்கள். மரபான சூஃபி இலக்கியங்களைப் படித்து, ஆன்மிகப் பாதையில் அடியெடுத்து வைக்கும் அளவிற்கு அல்லாது போயினும் சற்றாவது தாக்கமுறுகின்ற முஸ்லிம்களும் இருக்கிறார்கள். மேலும், அவர்களுக்கு மட்டுமே தெரிந்த பல காரணங்களால் சூஃபித்துவத்தைக் கடுமையாக எதிர்க்கின்ற முஸ்லிம்களும் இருக்கிறார்கள். அவர்களின் எதிர்ப்பு, புரிதலின்மையால் ஏறபடுமெனின் லேசாகவும், அவர்களுக்குள் மறைந்திருக்கும் வேர்களிலிருந்து வருமெனில் வன்மையாகவும் இருக்கும். இறுதியாக, வாழ்வின் அனைத்துத் துறைகளிலிருந்தும் வருகின்ற, பல்வேறு சூஃபிப் பள்ளிகளில் உறுப்பினர்களாயுள்ள கோடிக்கணக்கான முஸ்லிம்கள்  இஸ்லாமிய உலகம் நெடுகிலும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே ஆழ்ந்த தியானத்தன்மை  கொண்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது. உண்மையில், அவர்களில் பெரும்பாலோர் தமது சமய வாழ்வை பலப்படுத்தும் பக்தி நோக்கில்தான் அவற்றில் இருக்கின்றனர். அவர்களில் பலரும் சூஃபி ஷைஃகுகளிடம் தீட்சை வாக்குறுதி (பைஅத்) கொண்டுள்ளனர். அந்த ஷைஃகுகளில் சிலர் சூஃபிப்பாதையின் ஆதாரபூர்வமான மேன்மைமிகு வழிகாட்டிகள்தான்.

Related image


முற்காலத்தைப் போல் நமது காலத்தில் உண்மையான சூஃபி குருமார்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை என்பது தெளிவு. அப்போது முஸ்லிம் உலகம் இறைச்செய்திக்கு மிகவும் விசுவாசமாக இருந்தது, அதன் விளைவாக ஆன்மிக உள்ளுணர்வும் அதிகமாக இருந்தது, எனவே அதிகமான சூஃபி குருமார்கள் உருவாகி வந்தனர். எப்படியாயினும், உண்மையான சூஃபி குருமார்கள் நம் காலத்திலும் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் இருக்கும்வரை, குறைந்தபட்சம் ஆன்மிகப் பாதையை அக்கறையுடன் தேடுகின்றவர்களுக்காவது ஆன்மிக வாழ்வு என்பது முஸ்லிம் உலகில் சாத்தியமானதாகவே இருக்கிறது.

to be continued...

No comments:

Post a Comment