Tuesday, April 18, 2017

இஸ்லாமியக் கலையின் செய்தி - part1

ழீன் லூயி மிஷான்

Image result for jean louis michon

      (22 ஏப்ரல் 1982 அன்று ஜெனீவாவின் இஸ்லாமிய மையத்தில் ஃபிரெஞ்சு இஸ்லாமிய அறிஞர் ழீன் லூயி மிஷான் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்)

”ஓதுக: படைத்த நும் ரட்சகனின் நாமத்தால்
மனிதனைப் படைத்தான் ’அலக்’கில் இருந்து
ஓதுக, நும் ரட்சகன் மகா கொடையாளி
எழுதுகோலால் கற்பித்தவன்
மனிதனுக்கு அவன் அறியாதவற்றைக் கற்பித்தான்”
(குர்ஆன்:96:1-5)
     
   பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன், ஹிஜ்ரிக்குப் பத்து ஆண்டுகளுக்கு முன், கி.பி.612-ல் இந்த அழைப்புக்களை, வானவர் தலைவர் ஜிப்ரீல் அவர்களின் வழியே இறைத்தூதர் முஹம்மதுக்கு இடப்பட்ட கட்டளையைக் கொண்டே குர்ஆன் வெளிப்பாடு ஆரம்பமாயிற்று. உரக்க வாசிக்கும்படி, இறைச்செய்தியைப் பறைசாற்றும்படி முஹம்மதைத் தூண்டிய இந்த அழைப்புக்கள் ‘இஸ்லாமியக் கலை’ என்னும் பொருண்மை குறித்துப் பேசுவதற்கு மிகவும் பொருந்துவதாகக் கருதுகிறேன்.

      இது, இஸ்லாத்தின் மகத்தான பணியைத் தொடங்கி வைக்க இந்த வசனங்கள்தான் முதன் முதலில் அருளப்பட்டவை என்பதற்காக மட்டுமல்ல, அதற்குச் சற்றும் குறையாத பிற துல்லியமான காரணங்களாலும்தான். ஏனெனில், புனித நூலின் இந்த முதல் வார்த்தைகளில், அவை சொல்லும் செய்தியிலும் சொல்லப்பட்டுள்ள வடிவத்திலும், இஸ்லாத்தின் கலை என்பது முன்னதாகவே அமைந்திருக்கின்றது.

      இந்த வார்த்தைகள், அரபி மொழியில், மிகத் துல்லியமான ஒலியதிர்வு கொண்டுள்ளன. அந்த ஒலியதிர்வு பின்வரும் மூன்றெழுத்து வேர்கள் மற்றும் அவற்றின் மோனைகளும் வரிசை மாற்றங்களும் தரும் அர்த்தபாவங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. (மொ.பெ.குறிப்பு: அரபி அமைந்த மூன்றெழுத்து வேர்ச்சொற்களை இங்கே மூலக்கட்டுரையில் மிஷான் தரும்படிக்கே ஆங்கிலத்தில் தருகிறேன். அவற்றைத் தமிழில் மாற்றினால் தற்சமயம் குழப்பமே தரும்.) : Kh-L-Q (படைக்க) மற்றும் ‘-L’Q (ரத்தக்கட்டி); Q-R-‘ (படிக்க / வாசிக்க / ஓத) மற்றும் Q-L-M (எழுதுகோல் / பேனா); ‘-L-M (அறிய / கண்டுகொள்ள) மற்றும் மீண்டும் Q-L-M (எழுதுகோல் / பேனா).

      சுருக்கமாக, குர்ஆன், அதனுடைய அரபிப் பெயர் சுட்டுவதுபோல், படித்தல், ஈடு இணையற்ற ஓதுதல், கேட்கப்படுவது, மனனம் செய்யப்பட்டு மீண்டும் ஓதப்படுவது என்பதாக அமைந்து தன்னில் இஸ்லாத்தின் முதல் கலையான ’அரபியில் குர்ஆன் ஓதுதல்’ என்பதன் வேர்களைக் கொண்டிருக்கிறது. வெளிப்பாட்டின் சொற்கள் ஒரு நூல் வடிவில் தொகுப்புறும், அது எழுத்துக்களால் ஆகியிருக்கும் என்பதில் இஸ்லாத்தின் இரண்டாம் கலையான கலையெழுத்து (Calligraphy) என்பதன் கரு இதில் இருக்கிறது. இக்கலையும்கூட ஒருவகையில் வெளிப்பாட்டின் தொடக்கத்திலிருந்தே மனிதன் தன்னில் கொண்டிருப்பதுதான். ஏனெனில் “இறைவன் மனிதனுக்கு எழுதுகோல் கொண்டு கற்பித்தான்”. பேனா அல்லது எழுதுநாணல் என்பது முதலறிவின் குறியீடு. அஃது, இறைப் பேரறிவின் மைக்குள் தோய்க்கப்பட்டு மனிதகுலத்திற்கு அறிவூட்டும் புனித அடையாளங்களை எல்லாம் எழுதிச் செல்கிறது.

      மறையோதல் என்பது குர்ஆனின் அரபி மொழி வசனங்களின் ஒலியையும் அதன் ஏற்றயிறக்கங்களையும் காலத்தில் வெளிப்படுத்தும் கலையாகும். கலையெழுத்து என்பது மறையோதலின் ஓசைகளை காட்சிப்படுத்தி அவற்றை இடத்தில் பதிக்கும் கலையாகும். இவ்விரு புலப்பாடுகளில் நாம் முஸ்லிம்களுடைய கலையின் ஊற்றுக்கண்ணைக் கண்டடைகிறோம். இந்த ஊற்றுக்கண்ணிலிருந்து இஸ்லாத்தின் கலைஞர்கள் பல நூற்றாண்டுகளாகத் தமக்கு அகத்தூண்டலைப் பெற்றுக்கொள்ளத் தவறவில்லை.
     
 இஸ்லாமியக் கலையின் விற்பன்னர்கள் தமது பொருண்மையைக் காலக்கிரமமும் இடக்குறிப்பும் ஒருங்கேயுள்ள கோணத்திலிருந்தே அணுகுகின்றனர். அவர்கள் அதன் காலப் பரிணாம வளர்ச்சியை விளக்குகின்றனர்; பெறுதல்களையும் வழங்குதல்களையும் அலசுகின்றனர்; இஸ்லாமிய உலகின் பல்வேறு பகுதிகளில், கட்டடவியல் இசை தொழிலகம் மற்றும் வனப்புக்கலைகள் முதலிய பல்வேறு துறைகளில், பல்வேறு காலகட்டங்களில் உருவான வேலைப்பாடுகளின் தனித்தன்மைகளைச் சுட்டுகின்றனர். இச்சுருக்கமான கட்டுரையில் அத்தகு அணுகுமுறை பொருத்தமாய் இராது. செய்யின், இடங்கள் கலைப்பொருட்கள் மற்றும் புரவலர்களின் நீளமான பட்டியல்களே மிஞ்சும். மேலும், இஸ்லாமியக் கலைகளை எவ்வெக்காலங்களிலும் நிஜமாகத் தொடரச் செய்து அதற்கொரு அசல் தன்மையை வழங்கிவரும் அதன் நிலையான பண்புகளையும் மதிப்புக்களையும் அத்தகைய பகுப்பாய்வு அணுகுமுறை வெளிக்காட்டாது.

      எனவேதான் நான் இஸ்லாமியக் கலையை முற்றிலும் வேறு கோணத்தில் அணுகுவது மிகவும் அவசியம் என்று கருதுகின்றேன். அது வரலாற்று அணுகுமுறையும் அல்ல, பகுப்பாய்வு அணுகுமுறையும் அல்ல. மாறாக அது இஸ்லாத்தின் ”ஆன்மிகப் பிரபஞ்சம்” என்றொருவர் சொல்லத் தகுவதாகும். இப்பிரபஞ்சம் கலைஞர்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல என்பதில் ஐயமில்லை. வெளிப்படுத்தப்பட்ட செய்தி என்பதால் அது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரியது. ஆனால், கலைஞர் இடை நுழைந்தவுடன் சிந்தனைகள் பருவடிவுக்கு மாற்றப்பட்டு அவை சமூகத்தின் பொதுச் சொத்தாகிவிடுகிறது. எனவே, சிந்தனைகளை பருவடிவாக மாற்றும் ’கலைமொழி’யை வாசிக்கவும் விளங்கிக்கொள்ளவும் முதலில் ஒருவர் அந்தச் சிந்தனைகளின் அர்த்தங்களை அறிவது அவசியமாகிறது.


      தூர கிழக்கிலும் தூர மேற்கிலும் மரபான கலைஞர்களுடன் நான் நிகழ்த்திய அதிகமான சந்திப்புக்களின் நினைவுகளால் விளக்குநர்கள் வழி இஸ்லாமியக் கலையை அணுகும் பணி எனக்கு எளிதாயிற்று. எங்கும், அக்கலைஞர்களை நான் ஒரே மாதிரிதான் பார்த்தேன்: பணிவும் நேர்மையும், நுண்ணறிவும் ஒழுக்கமும் கொண்டவர்களாக, எத்தகைய விழுமியங்களுக்கு, பெரும்பாலும் பொருந்தாச் சூழல்களில் கூட அவற்றின் வாழ்வு நீட்டிப்பிற்குத் தாம் பொறுப்பாளராய் இருக்கிறோம் என்னும் பிரக்ஞை உள்ளவர்களாக, எனவே நான் முதலில் அவர்களின் பேரார்வத்தையும், அதன் பின் அவர்கள் பயன்படுத்திய வெளிப்பாட்டு முறைகளையும், இறுதியாக அவர்களின் கலைப்படைப்புக்கள் சிலவற்றையும் பற்றிப் பேசப்போகிறேன்.

to be continued...

No comments:

Post a Comment