Tuesday, April 18, 2017

இஸ்லாமியக் கலையின் செய்தி- part 3

Image result for jean louis michon
Jean Louis Michon

(1)  கலை வெளிப்பாட்டு மொழிகள்

நகரங்களின் பிறப்பினைப் போன்றே இஸ்லாமியக் கலை தனது முழு வளர்ச்சியை அடைவதற்கு குறுகிய காலமே எடுத்துக்கொண்டது. ஹிஜ்ரி 10-ஆம் வருடம் அல்லது கி.பி.632-இல் இருந்து நூற்றைம்பது ஆண்டுகளுக்கு அது நீண்டு ஆசியாவிலும் மத்தியத் தரைக்கடற் பகுதியிலும் மின்னல் வேகத்தில் பரவி கி.பி.750-ல் பாக்தாதில் அப்பாஸியக் கலீஃபா ஆட்சி நிறுவப்பட்ட ஆரம்பப் பத்தாண்டுகளைத் தொட்டு நின்றது.

      இந்த வளர்ச்சி இஸ்லாம் எதிர்கொண்டு தன்வசப்படுத்திய பழைய பண்பாடுகளுடனான தொடர்பின் விளைவாகும். சிரியாவின் ஹெலலனிய (மற்றும் ரோமோ பைசாந்திய) மரபு, பாரசீகம் மற்றும் மெசப்பொட்டோமியாவின் சஸ்ஸானிய மரபு, பிரவ்ன்கள் ஆட்சி செய்த எகிப்தின் காப்திய மரபு ஆகியவற்றின் கலை வடிவங்களும் வினைநுட்பங்களும் இஸ்லாம் எடுத்துக்கொள்வதற்கென ஆயத்தமாய்க் கிடந்தன. தனது பரவலில் இஸ்லாம் கைவசப்படுத்திய வட ஆப்ரிக்க பெர்பெர் மரபு மற்றும் ஸ்பெயினின் விசிகாத்திய மரபு ஆகியவற்றை இவற்றுடன் சொல்லலாம்.

      ஏற்கனவே செம்மைப் பட்டிருந்த இக்கூறுகள் புதிய சமூகத்தின் சேவைக்கு வந்தன. அவற்றின் அசல் வடிவங்கள் பெரிதும் அப்படியே நிலைத்தன. இஸ்லாத்தை புதிதாகத் தழுவியிருந்த கலைவினைஞர்கள் தமது புதிய சமயத்தின் அற மற்றும் அழகியல் நியதிகளுக்குட்பட்டுத் தம் பழைய கலை மரபுகளைத் தொடர்ந்த போது சில நிலைகளில் அப்பழைய கலைகள் மாற்றம் பெற வேண்டியிருந்தது. அந்தத் தேவைகளில் வழிபாடு என்பது பிரதானப் பங்களிப்பைச் செய்தது. பழைய கலைவடிவங்களை ஒருங்கிணைத்துத் தனது நோக்கிற்கும் தேவைக்குமேற்ப மாற்றியமைத்துக்கொள்வதில் இஸ்லாமியக் கலை முதலில் வெளிப்பட்டது சமயக் கட்டடக் கலையில்தான். எந்த நோக்கில் இப்பரிணாமம் நிகழ்ந்தது என்பதை அறிய கி.பி.ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் உமய்யாக்களால் டமஸ்கஸ் நகரில் கட்டப்பட்ட பெரிய பள்ளிவாசலை ஒரு சிறந்த உதாரணமாக நாம் பார்க்கலாம். 

Image result for great mosque of damascus

அதன் கட்டடப் பணியின் போது பைசாந்தியக் கலைஞர்கள் கண்ணாடி மொசைக் வடிவங்களைச் செய்வதிலும், முற்றத்தின் சுவர்களில் அடர்ந்த மரங்கள் முதலிய வடிவங்களைக் கிழக்கு ரோமானிய சாம்ராஜ்யத்தில் புகழ்பெற்றிருந்த மாயத் தோற்ற (த்ராம்பெ லோயில்) முறையில் உருவாக்குவதிலும் ஈடுபட்டிருந்தனர். ரோம் மற்றும் கிரேக்கத்தின் இயற்கைவாத (Naturalistic) மரபினை அது பிரதிபலித்தது. பின்னர் அது போன்ற இயற்கைவாத வடிவங்கள் சமயக் கட்டடங்களில் பெரிதும் குறைந்துவிட, ஜியோமிதி வடிவங்களும் இரட்டைச் சுருள்கள், பூவிதழ்கள், பசிய இலைகள் மற்றும் பூமாலைகள் போன்ற தாவர வடிவங்களும் தக்கவைக்கப்பட்டுப் பின்னர் செந்நிலைக்கு வளர்த்தெடுக்கப்பட்டன (ஸ்பெயின் நாட்டின் குர்த்துபா நகரப் பள்ளிவாசலினுள் உள்ள மிஹ்ராப் என்னும் மாடக்குழிவின் வடிவமைப்பில் இதனைக் காணலாம்).

      அதே போல், உமய்யா கலீஃபாக்களுக்காகக் கட்டப்பட்ட பாலைவன அரண்மனைகளில் உள்ள சுவரோவியங்களில் (Fresco) ஹெல்லனிய அல்லது சஸ்ஸானிய பாணியில் தீட்டப்பட்ட மனிதவுருவங்கள் (இசைஞர்கள் ஆடலாளர்கள், வேடர்கள் போன்றோர்) அதிகமாகக் காணப்படுகின்றன. இந்த உருவச் சுவரோவியக் கலை சீக்கிரமே தடையுற்றது. பின் அது மிகவும் சுருக்கப்பட்ட அளவினதாகக் குறுஞ்சித்திரங்களில் (miniature) இடம்பெற்றதன்றி ஒருபோதும் மீளவில்லை.

      இதுபோல் இன்னும் பல எடுத்துக்காட்டுகள் தரலாம். ஆனால் எந்த நியதிகள் இந்தத் தேர்வினை நிகழ்த்தின என்பதையே நாம் இங்கே கவனிக்க வேண்டும். ஏற்கனவே நான் சொன்னபடி, கலை வடிவம் என்பது இறைவனின் ஏகத்துவத்தை நினைவூட்டுவதாய் அமைய வேண்டும் என்பதுடன் பார்வையாளனின் மனதைத் தேவையற்ற மாயக் காட்சிகளில் சிக்கவைக்கக் கூடாது என்பதே முதன்மை நியதியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். கலை என்பது நிலைத்த சாராம்சத்தை ஆன்மா ஊன்றிக் கவனிக்க உதவவேண்டுமே அலலாது அதனை நிலையற்ற விசயங்களின் பக்கம் திருப்பிவிடக் கூடாது.

      இஸ்லாமியக் கலையில் உருவ வெளிப்பாட்டுக்குத் தடை விதிக்கப் பட்டிருப்பதற்கான ஆழ்ந்த காரணத்தை இந்த முன் நிபந்தனையிலேயே நாம் காண வேண்டும். அது குர்ஆனில் நேரடியாக இடப்பட்ட சட்டவி ரீதியான தடையால் ஏற்பட்டதல்ல, ஆனால் இயற்கையை போலிச்செய்தலில் மனிதன் தன்னை இறைவனின் இடத்தில் வைத்துப் பார்ப்பதன் மீதான ஒவ்வாமையின் வெளிப்பாடாகும். கலைஞனின் படைப்புத்திறன் தன்னளவில் வெறுக்கத்தக்க ஒன்றல்ல. மாறாக, குர்ஆனில் இறைவன் தனது படைப்புத்திறனை விளக்கும் பொருட்டு குயவனின் உவமையைச் சொல்லியிருக்கிறான்:
    ”அவன் மனிதனைப் படைத்தான்
 களிமண்ணிலிருந்து
 குயவனைப் போல்”
         (குர் ஆன் : 55:14)

      எனினும் கலைஞனின் படைப்புத் திறனிலொரு அபாயம் உள்ளது. யாதெனில், படைப்புத் தொகுதியைத் தனது படைப்புக்கொண்டு கூட்டியிருக்கிறோம் என்னும் மனமயக்கை அது உண்டாக்கி அதன் விளைவாக அவனில் தற்பெருமை எழக்கூடும். தற்பெருமையோ இஸ்லாத்தின் பார்வையில் தீமைகளில் எல்லாம் மிகப்பெரிய தீமையாக இருக்கிறது. ஏனெனில் அது படைப்பான மனிதனை படைப்பாளனான இறைவனுக்கு இணையாக்க முனைகிறது. இதே போல் உருவக் கலையும் பார்வையாளனின் மனதைத் திருப்பி, அனைத்துப் பொருட்களின் மூலப்படிவங்களைப் படைத்தவனும் ஒரு மரத்தை ஒரு பூவை அல்லது ஒரு மனித உடலினை அதன் ஸ்தூலத் தோற்றத்தில் மறுபடி ஆக்கத் தெரிந்தவனுமான இறைவனின் முடிவற்ற படைப்பாற்றலை எண்ணிடச் செய்யாது அக்கலைப் பொருளைச் செய்த கலைஞனை வியக்கும்படிச் செய்துவிடுகிறது.

      ஆதலால், ஜியோமிதி அல்லது கணித அடிப்படை கொண்ட பொதுமுறையான, ஒழுங்கமைவு வடிவங்களுக்கு இஸ்லாமியக் கலையில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நாம் முன்பே சொன்னது போல் வேத வெளிப்பாட்டில் கொடுக்கப்பட்ட இரண்டு கலை வடிவங்களினான மறையோதல் மற்றும் கலையெழுத்து ஆகியவற்றின் விசயமும் அதுதான்.

Image result for quran recitation painting

      குர்ஆனை ஓதுதல் என்பது இணையற்ற புனிதக் கலை. “எந்த ஒரு இறைத்தூதரையும் அவருக்கு இனிமையான குரலை வழங்காமல் இறைவன் அனுப்பியதில்லை” என்று நபி முஹம்மத் சொன்னார்கள். குர்ஆன் வெளிப்பாட்டு வரலாறு இந்தக் கருத்துக்குக் கட்டியம் கூறுகிறது. ”தெளிந்த அரபி மொழியில்” (குர்ஆன்:26:195) மனிதரிடம் கொண்டுவரப்பட்ட அந்த இறைச்செய்தி தெளிவாகவே பறைசாற்றப்பட வேண்டியிருந்தது. “குர்ஆனைத் தெளிவான நிறையுடன் ஓதுக” (குர்ஆன்:73:4) என்பது முஹம்மதுக்கு வழங்கப்பட்ட கட்டளை; அவரும் ஒரு ஹதீஸில் இறைவிசுவாசிகளுக்குச் சொல்கிறார், “குர்ஆனைக் கொண்டு உங்கள் குரல்களையும் உங்கள் குரல்களைக் கொண்டு குர்ஆனையும் அலங்கரியுங்கள்”. தெய்வீக வார்த்தைக்கும் மனிதக் குரலுக்கும் இடையிலொரு நிலையான தொடர்பு இருக்கிறது என்பதையே இது உணர்த்துகிறது. குர்ஆனை அரபியில் ஓதுதல் என்பது மிக நேரடியாக ஆற்றலுடன் இறைவனின் பேச்சு ஒருவருக்குள் ஊடுறுவிச் செல்ல விடுவதாகும், அதன் தனித்தன்மையிலும் அதிர்வுகளிலும் தோய்ந்துவிடுவதாகும், ஒவ்வொரு இறைவிசுவாசிக்கும் அது இறைவனை அணுகும் வழியாகும், இறைவனின் பிரசன்னத்தில் வாழ்வதாகும், இறைவனின் சுயத்தை அறிதலின் முன் அவனின் திருநாமங்களையும் பண்புகளையும் சுவைப்பதாகும்.


      குர்ஆன் என்பது எந்த இலக்கியப் படைப்புடனும் ஒப்பிடுவதற்கு உரியதல்ல என்பது எப்படியோ அப்படியே இஸ்லாத்தின் முதல் கலைக்குட்பட்டதான ஓதுதல்கள் எல்லாம் ஏனைய அனைத்து இசை வெளிப்பாடுகளை விட்டும் பிரித்துக் காணப்பட வேண்டியது அவசியம். அதனுடைய தனித்தன்மை அதன் கலைச்சொல்லால் உணரப்படுகிறது. ஏனெனில் அதனைக் குறிக்கும் எந்தக் கலைச்சொல்லும் இசை சார்ந்த சொல்லிலிருந்து வருபவையன்று. உதாரணமாக, கிராஅத் (ஓதுதல்), திலாவத் (தொனித்தல்), தஜ்வீத் (ஜ்-வ்-த் என்னும் வேரிலிருந்து) என்னும் ஒலியணி ஆகியவை குர்ஆன் சார்ந்த கலைச்சொற்கள். மாறாக ’க்கினா’ (பாடல், குரலிசை) என்பது குர்ஆனியக் கலைச்சொல் அல்ல. அதனை ஓதுதலில் குழப்பத்தை உண்டாக்கும் எந்தத் தன்மைக்கும், தனிப்பட்ட படைப்பாக்கக் கூறு எதற்கும் இடமிருக்கக் கூடாது. மாறாக, இறைவனின் முன் தன்னை இல்லாமல் ஆக்குவதும் அதனுடன் தன்னை முழுவதுமாகப் பொருந்திக் கொள்வதுமே அதனை ஓதுபவரின் நோக்கமாக இருக்க வேண்டும்.

      ஒலியணியுடன் ஓதல் என்பது துல்லியமான விதிகளுக்கு இணங்குவதை இது உறுதி செய்கிறது. அவை வெவ்வேறு சிந்தனைப் பள்ளிகளால் விவர வேறுபாடுகள் கொண்டிருப்பினும் பொதுவான கோட்பாடுகளால் அமைந்தவையே. (குறிப்பு: குர்ஆனை ஓதுவது குறித்து ஏழு, அல்லது வேறு வகைப்பாடுகளின்படி பத்துச் சிந்தனைப்பள்ளிகள் இருக்கின்றன. அவை கி.பி.2ஆம் நூற்றாண்டில் நபிவழியிலிருந்து தோன்றியவை. அவையாவன: 1) மதீனா சிந்தனைப்பள்ளி. இதன் நிறுவனர் நாஃபி (இறப்பு 169/785). இவரின் தலைமை மாணவர் இமாம் மாலிக். எகிப்து, துனீசியா, சிசிலி, அல்ஜீரியா மற்றும் ஸ்பெயினில் பரவிற்று; 2) மக்கா சிந்தனைப்பள்ளி. நிறுவனர் இப்னு கஸீர் (இறப்பு: 120/738); 3) பஸ்ரா சிந்தனைப்பள்ளி. நிறுவனர் இப்னு அல்-அலா (இறப்பு: 154/771); 4) திமிஷ்க் (டமஸ்கஸ்) சிந்தனைப்பள்ளி. நிறுவனர் இப்னு அமீர் (இறப்பு: 118/736). இப்போதும் பரவலாக சிரியாவில் பின்பற்றப்படுகிறது; 5) கூஃபா சிந்தனைப்பள்ளி. இதில் மூன்று கிளைகள் உள்ளன: அ) ஆசிம் அல்-அசதீயின் சிந்தனைப்பள்ளி (அவரின் இறப்பு: 128/745). முஸ்லிம் உலகமெங்கும் பரவியிருக்கிறது. சமீபத்திய குர்ஆன் பதிப்புக்களால் எகிப்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது; ஆ) ஹம்ஸா அல்-இஜ்லீயின் சிந்தனைப்பள்ளி (அவரின் இறப்பு 156/772). மொரொக்கோவில் பரப்பப்படுகிறது; இ) கிசாயீயின் சிந்தனைப்பள்ளி (அவரின் இறப்பு: 189/805). இப்னு ஹன்பல் அவர்களால் தீவிரமாக ஆதரிக்கப்பட்டது. கிழக்கு அரேபியாவிலும் இராக்கிலும் இன்றும் புகழ் பெற்றுள்ளது. (நூற்பார்வை: முஹம்மத் தாஹிர் அல்-ஃகத்தாத், “தாரீஃக் அல்-குர்ஆன், கைரோ, 2ஆம் பதிப்பு 1372/1953, ப.108)).

      முதல்பேச்சு, இறைமறையில் அதன் சுய ஒலிச்சீர்மை இருக்குமாதலால் அதன் ஓதுதல் ஒருபோதும் எந்தத் துணையிசைக் கருவியையும் அனுமதிப்பதில்லை. சரியான உச்சரிப்பு, உயிரொலி அளபெடை, மெய்யொலி இரட்டித்தல், மரபார்ந்த நிறுத்தங்கள் இடைவெளிகள் (இது கவனம் கோருதலுக்கும், கற்பனை இயங்குதலுக்கும், திருவசனங்களின் அர்த்தங்களை கிரகிப்பதற்கும் வழிகோலுகிறது) ஆகியன மூலம் அதன் ஒலிச்சீர்மையை புலப்படுத்துவது அதன் ஓதுவார் மீது கடமையாகும்.

      சுன்னியிஸத்தின் சட்டப்பள்ளிகளில் ஒன்றில் (இமாம் மாலிக் அவர்களினது) சொல்லப்படுவது போல், குர்ஆனின் அதிர்வு விளைவு எதனையும் இழந்துவிடாத நிலையில் ராக விளைவை முற்றிலும் தவிர்த்துவிடலாம். எளிய ஒற்றை ஸ்வர ஓதலின் துளைப்பாற்றலை உணர ஒருவர் மொரொக்கோவின் பள்ளிகளில் செய்யப்படும் கூட்டோதலைக் கேட்பதே போதுமானது. எனினும், பெரும்பாலும் பொதுவாக, ஓதுமுறைமைகள் ஒருவகையான துரிதச் சடங்கோதுதலையே கற்பிக்கின்றன.  அதன் ஏற்றவிறக்கம் குறுகியதாகவே இருக்கிறது. அஃது, ஸ்வரக்குறிப்பு மற்றும் குரலொலிப்புக் கொண்டு அசைகளையும் வார்த்தைகளையும் அலங்கரிப்பதன் மூலம் மிக எளிதாக மனித மனங்களில் பதியக் கற்பிக்கிறது.

      ”அரபிகளின் இன்னிசையையும் தொனிப்புக்களையும் பின்பற்றி குர்ஆனை ஓதுக” என்பது நபியின் அறிவுரை. முஸ்லிம் உலகில் காணலாகும் ஓதுமுறைகளுக்கு இடையில் உள்ள உறவுநிலை நபியின் இந்த அறிவுரை பொதுவாகப் பின்பற்றப்படுவதை நிரூபிக்கிறது. காலப்போக்கில் பல்வேறு இடங்களில் பரவியதால் மறையோதல் கலையில் அந்தந்த இடங்களின் இசைமரபு சார்ந்த மெல்லிசைக் கூறுகள் கிரகிக்கப்பட்டு மிக எளிதில் அடையாளம் காணக்கூடிய பண்புகளை அது அடைந்துள்ளது என்பது உண்மையே. இருப்பினும், இப்பாணிகள் அனைத்தும் இஸ்லாத்தின் மறுக்கவியலாத முத்திரையைப் பெற்றுள்ளன. அவற்றில் குர்ஆனியச் செய்திக்கொரு வாகனமாக விளங்கும் தனித்தன்மையான பெருந்தொனிக் கூறு பொதிந்துள்ளது.

      அனைத்து நிகழ்வுகளிலும் மறையோதல் தனித்தும் கூட்டாகவும் நிகழ்த்தப்படுகிறது. ஒவ்வொரு இறைநம்பிக்கையாளருக்கும் அது இறைவனையும் அவனது திருப்பண்புகளையும் அருட்கொடைகளையும் நினைவு கூர்வதற்கான ஒப்பற்ற வழியாக இருக்கிறது. “திண்ணமாக, வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும் இரவும் பகலும் மாறுவதிலும் இதயத்துள் ஆழ்ந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. அவர்கள் நின்றும் அமர்ந்தும் அவர்களின் சாய்விலும் அல்லாஹ்வை நினைவுகூர்வர். மேலும், வானங்களும் பூமியும் படைக்கப்பட்டதில் ஆழ்ந்து சிந்தித்து “எம் ரட்சகனே! நீ இவற்றை வீணுக்குப் படைக்கவில்லை. நீ மகத்தானவன்! தீயின் கொடுமையை விட்டும் எமை நீ காப்பாயாக!’ (என்பர்)” (குர்ஆன்: 3:190,191). ஆரம்ப வயது முதற்றே பிள்ளைகளுக்குக் கற்பிக்கப்படும் இந்த மறையோதல், இஸ்லாத்தின் ஆன்மிக மற்றும் அற போதனைகளை அவர்களில் பதிவது மற்றுமல்லாது, இறைவார்த்தையின் ரசவாதத்தால் மனிதப்படைப்புக்கு அதன் ஆதிப் புனிதத்தன்மையை மீட்டு வழங்குமொரு இயல்புவ்மாற்றத்தின் வழியாக  அவர்களது உணர்வுகளின், அவர்களது பணிகளின் ஒவ்வொரு இழையிலும் வேலை செய்கிறது.

Image result for sufi mawlid


      மறையோதலில் இருந்து, தொழுகையழைப்பு, மந்திர உச்சாடனங்கள், நபியின் பிறப்புப் புகழினைப் பாடும் மவ்லிதிய்யாத், ஆன்மிகப்பாடல்கள் போன்ற சமய வாழ்வுக்கூறுகள் பலவும் பெறப்படுகின்றன. அரபிய இசை முழுவதன் மீதும், கருவியிசை உட்பட, அது ஆன்மிகச் சகோதரக் கூட்டங்களில் இசைக்கப்படுவது போலான சமய இசையாயினும் அல்லது புலனின்ப இசையாயினும் (அரபி இசையில் இவ்விரண்டினையும் பிரிக்கின்ற இடைவெளி பெரும்பாலும் மிகக் குறுகியதேயாகும்), மறையோதலின் தாக்கம் என்பது சாதாரணமானதல்ல.

to be continued...

No comments:

Post a Comment