Tuesday, August 6, 2024

வான்கா

 



            வீட்டின் மிக முக்கியமான புழங்கிடங்களில் ஒன்று மொட்டை மாடி என்றால் ஏற்பீர்களா? இங்கே பலருக்கும் அந்த உணர்வில்லை என்றே தோன்றுகிறது.

            தரையில் மாலை நடை செல்வதை மாற்றி மொட்டை மாடியில் உலவத் தொடங்கியபோது அது ஒரு புது உலகமாக இருந்தது. எங்கள் குடியிருப்புப் பகுதியே வேறொரு கோணத்தில் காட்சியானது. ஆங்கிலத்தில் Bird’s view என்பார்களே, அப்படி. அதை மிகச் சிறப்பாகத் தன் கதை ஒன்றில் பதிவு செய்தவர் யுவன் சந்திரசேகர் என்றே கருதுகிறேன். எனக்கு மிகவும் பிடித்த ‘விருந்தாளி’ என்னும் கதையில் அவர் எழுதுகிறார்:

            ”எங்கிருந்தோ ஒரு பெண்குரல் எழுந்து உயர்ந்தது. ‘கா…கா…கா…..’ காக்கை லேசாக மேலெழும்பிவிட்டு மீண்டும் அமர்ந்தது. நாலைந்து எட்டுக்கள் தத்தியது. என்னிடம் சொன்னது: ‘வேப்பமரத்து வீட்டம்மாள் கூப்பிடுகிறாள். அவள் பையன் சாப்பிடும் நேரம்.’

            ”காக்கையின் சொற்களின் வழி, என் தெரு கதவிலக்கங்களையும் வாசல் முகப்பின் அலங்கார அடையாளங்களையும் இழந்து, மரங்கள் அடர்ந்த கானகமாக உருக்கொள்வது போல் தென்பட்டது.”

            இது போல், என் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து எட்டுத் திசைகளிலும் முழு வட்டமாகப் பார்க்கையில் வானகமும் இளவெயிலும் மரச்செறிவும் தென்பட்டன.

            மொட்டை மாடியில் வீடு பேறு தரும் நிறைவு இருக்கிறது. மண்படு வாழ்வை விட்டு விடுதலை ஆகி வெகுவாக மேலே உயர்ந்து விண்ணமுதம் பருகும் ஓர் உயிராக மாறிவிட்டோம் என்று தோன்ற வைக்கிறது. அதுவும், எங்கள் வீட்டுப் பகுதி ஏர்போர்ட்டுக்கு அருகில் இருப்பதால் தரை தளமும் ஒன்றாம் தளமும் மட்டுமே கட்ட(ட) அனுமதியுண்டு. எனவே, பக்கத்தில் அடுக்குமாடிக் கட்டடங்கள் வளர்ந்து நின்று தம் நிழல் சாய்க்க வாய்ப்பில்லை. சுற்றும் முற்றும் பார்த்தபோது ஒரு வீட்டிலும் மொட்டை மாடியில் ஆட்களைக் காணவில்லை. பலருக்கும் இங்கே அது ஆடைகள் உலர்த்தப் போடும் இடம். இன்னும் சிலருக்கு அது வடகம் வற்றல் காய வைக்கும் இடம்.

            மொட்டை மாடியில் வீட்டாரை விட காக்காயும் குருவியும்தான் அதிகம் புழங்குகின்றன என்று கருதுகிறேன். “காக்கை குருவி எங்கள் ஜாதி” என்றான் பாரதி. இங்கே அவன் ‘எங்கள் ஜாதி’ என்று கவிஞர்களைத்தான் குறிப்பிடுகிறான் என்று சொல்லலாம். 



அக்கம் பக்கத்தில் இவ்வளவு மரங்களா என்று வியப்பாக இருந்தது. பறவைகளுக்கான உலகம் ஒன்று அதில் இயங்கிக் கொண்டிருந்தது. பக்கத்துக் காலி மனையில் ஓங்கி வளர்ந்து என் வீட்டை விடவும் உயரமாக நிற்கும் வேப்ப மரத்தில் அவ்வப்போது ஏதேனும் ஒரு பறவையைக் காணக் கிடைக்கும். குயில், செம்போத்து, மைனா, வல்லூறு. இன்று ஒரு ஜோடி கிளிகள். இது வேம்பு பழுக்கும் வேனிற் பருவம். அது தன் சிவப்பு அலகால் பொன் மஞ்சளாகப் பழுத்த வேப்பங்கனி ஒன்றைக் கவ்வி எடுத்து லாவகமாகப் புசித்த காட்சியை ரசித்தேன். குறுந்தொகையின் 67-ஆம் பாடலில் அள்ளூர் நன்முல்லையார் இந்தக் காட்சியைப் பதிவு செய்திருக்கிறார்:

            ”______________ _______________ _______________ கிள்ளை

            வளை வாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்

            புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப்

            பொலங்கல ஒருகா சேய்க்கும”

            காசு மாலை என்று ஒன்று இருக்கிறதே, அது இந்தத் தமிழ் மண்ணில் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் பழமையான டிசைன்! பெண்களுக்கு அதன் மீது தனி ஆர்வம் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. பொற்கொல்லன் ஒருவன், நீண்டு வளர்ந்து வளைந்த நகங்கள் உள்ள விரல்களால் தங்க இழை ஒன்றில் பொற் காசுகளைக் கோர்க்கிறான்.  அது போல் இருக்கிறதாம் சிவந்து வளைந்த அலகால் வேப்பம் பழத்தைக் கிளி உண்ணும் காட்சி.

            கீழே மரங்களிடை இட்ட கட்டடப் பரப்பு என்றால், மேலே? விழிகள் மலர விரிவானை நோக்கியிருந்தேன். வானத்தை நோக்கியிருந்தால் மனமும் விரியும் என்கிறது ஸூஃபி உளவியல். அரசர்கள் தினமும் சற்று நேரம் வானம் பார்க்க வேண்டும். அஃது அவர்தம் உள்ளத்தை விசாலமாக்கும் என்று இமாம் கஜ்ஜாலி எழுதியுள்ளார்கள். யான் அதை அனுபவித்தேன்.

            ’வானம் எனக்கொரு போதி மரம்’ என்னும் பாடல் வரி நினைவுக்கு வந்தது. ஒரு மரம் மட்டுமா அது? அது ஒரு நீலக் காடு அல்லவா? வான்கா!

            அந்த நீல வானக் காடு மண்ணின் காடு போல் உறைந்து உருச் சமைந்தது அன்று. அதில் களிற்று யானைகள் பையப் பைய மான்களாகவும் மாறும், மரங்களாகவும் ரூபிக்கும். மேகங்கள் வெள்ளியாய் மின்னி வெண் வண்ணம் காட்டி, சாம்பல் நிறமுற்று அப்பால் பொன் வண்ணமாகிப் பிறங்கும்.

            எமது மூதூரின் அடையாளமாகச் சொல்லப்படுவது மலைக்கோட்டை. மேலும், பொன்மலை, காஜா மலை ஆகிய இரண்டு குன்றுகளும் உண்டு. வானத்திலோ நூறு நூறு வெள்ளிப் பனிமலைகள், இமய வெற்புகள். வரி வரியாய், கட்புலனாகா நதிகளின் மணல் படுகைகள்.

அந்த மேக மலைகளின் மீது யாமும் கோட்டைகள் கட்டுகிறோம். மனக் கோட்டைகளா அவை? அல்ல, அல்ல. சிறுமிகளின் மனநிலை அடைந்து யாம் இழைக்கும் சிற்றில்கள். கூர்ந்து நோக்கினால் தெரியும், மனிதர்கள் தம் வாழ்வில் ‘தன்னைப் பிழிந்த தவம்’ போல் சிரமப்பட்டுத் தீட்டுகின்ற திட்டங்கள் யாவும் இறைவன் எழுதும் விதியின் காலுதைப்பில் பொசுக்கென்று உடைந்து போகும் மணல் வீடுகளே. மனிதர்கள் யாவரும் “முற்றில்லாத பிள்ளைகளோம் முலைகள் போந்திலோம்” என்னும் நிலையில் இருப்பதால், அவனும்கூட ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’யாக நடந்து கொள்கிறான். புட்கள் சிலம்பும் அரவம் கேட்டு விழித்தெழுவோருக்கே அவன் சற்குருவாக வாய்க்கிறான். இவை எல்லாம் குறியீடுகளின் உள்ளர்த்தங்கள்.

இதெல்லாம் இருக்கட்டும். மொட்டை மாடியிலேயே ஒருவர் வசித்துவிட முடியாது. எதார்த்த வாழ்வு கீழே அழைக்கும்போது இறங்கித்தான் ஆக வேண்டும். பாதத்தில் மண் தோய நடந்துதான் ஆக வேண்டும். என்ன, பாதத்தில் ஒட்டி உதிரும் மண் கண்ணில் விழாமல் பார்த்துக் கொண்டால் போதும். 

No comments:

Post a Comment