Friday, September 13, 2024

அல்-ஹாரிஸ் இப்னு மிதாதின் தேசப் பிரஷ்டம்

 (இஸ்லாமுக்கு முற்பட்ட அறபு நாட்டு மரபுக் கதை)

அறபக மக்களின் பல்வேறு இனக்குழுக்கள் அல்லது குடிகளின் கால்வழித் தொடர்ச்சி என்பது வரலாற்று நோக்கிலும் பண்பாட்டு மானுடவியல் நோக்கிலும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அதனைப்பற்றிய ஆராய்ச்சிக்கான மூலப் பிரதிகளாக அறபிச் செவ்வியல் கதைகள் இருக்கின்றன. அவற்றுள் இக்கதை முக்கியமான ஒன்றாகும். நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் பூவுலக வருகை குறித்த முன்னறிவிப்புகள் இஸ்லாமுக்கு முந்தைய அறபகத்திலும் இருந்துள்ளன என்பதற்கான ஒரு குறிப்பு இக்கதையில் இருக்கிறது. எனவே, இக்கதையை இந்த ஆண்டு மீலாதுந் நபி தினத்துக்கான இடுகையாக இங்கே தருகிறேன். அனைவருக்கும் இனிய மீலாதுந்நபி வாழ்த்துக்கள். - ரமீஸ் பிலாலி.


கிதாபுல் திஜன் ஃபீ முலூக்கில் ஹிம்யார் (ஹிம்யாரின் அரசர்கள் குறித்த மகுடங்களின் நூல்) என்பதிலிருந்து.

[பழங்கதை ஒன்றின்படி, இஸ்ரவேலின் புதல்வர்கள் தாவூது (டேவிட்) மற்றும் சுலைமான் (சாலமோன்) ஆகியோரின் இறைக்கொள்கையைப் புறக்கணித்ததுடன் தாவூதுக்கு இறைவன் அருளியிருந்த அல்-ஜபூர் என்னும் வேதத்தின் வார்த்தைகளை மாற்றிவிட்டனர். விலைமதிப்பற்ற புனிதப் பிரதிகள் சிலவற்றை உள்ளடக்கிய பேழை ஒன்றைத் தம்முடன் வைத்திருந்த இஸ்ரவேலின் புதல்வர்கள் மக்காவின் மீது ராணுவத் தாக்குதல் நடத்தினர். அக்காலத்தில் மக்காவின் அரசராக இருந்த அல்-ஹாரிஸ் இப்னு மிதாதுல் ஜுர்ஹுமி என்பார் அவர்களைத் தோற்கடித்ததும் அவர்கள் அப்பேழையைக் கைவிட்டுப் போயினர். ஜுர்ஹும் மற்றும் இம்லாக் குடியினர் அப்பேழையை மக்கா நகரின் சாணிக் குவியல்களில் ஒன்றிற்கு அடியில் புதைத்துவிட்டனர். ஆனால் அதனுள் இருந்த கிரந்தங்களின் மதிப்பை உணர்ந்த அல்-ஹாரிஸிப்னு மிதாத் அவற்றைப் புதைப்பதற்கு எதிர்ப்புக் காட்டி, அந்தப் பேழையை இரவில் எரித்துவிட வேண்டும் என்று சொன்னார். ஜுர்ஹும் மற்றும் இம்லாக்கின் மக்கள் அப்பேழையின் உள்ளிருந்த புனித கிரந்தங்களை அவமதித்த காரணத்தினால் அதன் பிறகு அழிந்து போயினர். பெருந்துயர் உற்ற அல்-ஹாரிஸிப்னு மிதாத் தன்னைத் தானே முந்நூறு ஆண்டுகளுக்கு தேசப் பிரஷ்டம் செய்து கொண்டார். ‘அல்-ஹாரிஸிப்னு மிதாதின் தேசப் பிரஷ்டம்’ என்பது அறபியில் ஒரு முதுமொழி ஆகிவிட்டது.]

இயாதிப்னு நிஜாரிப்னு ம’அத்திடமிருந்து அறிவிக்கப்படுகிறதாவது, அவரின் செல்வச் செழிப்பைப் பற்றி வினவப்பட்டபோது அவர் பின்வரும் கதையைச் சொன்னார்:

 

            என் அத்தா நிஜார் இறந்தப்ப, அவருக்குப் பின்னால என்னோட சேத்து என்னோட தம்பிங்க முளரு, ராபி’ஆ, அம்மார்னு மூனு பேத்தையும் விட்டுட்டுப் போனாரு. நாந்தான் அவருக்கு மூத்த மவங்றதால அவுங்கள எம் பொருப்புல ஒப்படைச்சாரு. சொத்துப் பிரிக்கிறதுல என்னமாச்சும் கொழப்பங் கிழப்பம் வந்திச்சுன்னா நஜ்ரானின்1 நாகம்னு பேரெடுத்த குல்மூஸுங்ற அறிவாளிகிட்ட போயி ஆலோசனக் கேட்டுக்கடான்னு சொல்லீட்டுக் கண்ணெ மூடிட்டாரு.  நாங்க அவரப் பாக்கப் போனப்ப, ஒட்டகங்களும் செம்மறிகளும் எனக்கு, வீடு முளருக்கு, பொட்டக் குதிர ராபி’ஆவுக்கு, நெல்புலம் அம்மாருக்குன்னு பங்கு வச்சாரு.

 

            கொஞ்ச நாளுக்கப்புறம் பெரிய பஞ்சம் ஒன்னு எங்களத் தாக்குச்சு. பத்து ஒட்டகங்களத் தவுத்து என்னோட எல்லாச் சொத்தையும் எழந்துட்டேன். எங் குடும்பத்துக்குக் கஞ்சி ஊத்தியாவணுமே? பத்து ஒட்டகங்களையும் வாடகைக்கு விட ஆரம்பிச்சேன். ஒரு நா, என்னோட ஒட்டகங்கள வாடகைக்கு விட்டேன், எந் தம்பிகளும் அதவே செஞ்சாங்க. நானும் ஒரு ஒட்டகத்துல திமிஷ்குக்குப் போய்ட்டு மதீனாவுக்குத் திரும்பி வந்தேன். அங்கேர்ந்து என் ஒட்டகங்கள மக்காவுக்குப் போவ வாடகைக்கு எடுக்க ஆளே வர்ல. பயணக்குழு மக்யா நாக் காலைல கெளம்புது. ரெண்டு ஊருகளுக்கும் எடைல பத்து நிறுத்தங்க இருந்துச்சு.


திடீர்னு, என்னோட சங்கடமான நெலமைல, யாரோ ஒருத்தரோட கொரலு எனக்குக் கேட்டுச்சு:

 

            “மக்களே! திருத்தலத்துக்குப் போவ எனக்கு யாராச்சும் ஒட்டகந் தர்றீளா? தந்தீங்கன்னா ஒட்டகச் சவாரிக்கு நான் குடுக்குற வாடகைய கேட்டுக்கங்க, ஒங்க ஒட்டகம் எம்புட்டு சொமக்க முடியுமோ அம்புட்டுக்கு முத்தும் மாணிக்கமும் தங்கமுமாத் தருவேன்!”

 

            ஆனா, யாருமே அந்த ஆளக் கண்டுக்கல. எல்லோரும் அவுங்கவுங்க வேலையில மும்முரமா இருந்தாங்க. ‘நாம ஏன் ஒரு ஒட்டகத்தக் குடுக்ககூடாது?’ன்னு எனக்கு நானே யோசிச்சேன், ’அவரு சொல்றது உண்மையான இருந்தா நான் பணக்காரனாயிருவேன், அவரு சொல்றது பொய்யாயிருந்தா அதுனால எனக்கு நட்டம் ஒன்னும் வரப்போறதில்ல.’ கூவுனவுரத் தேடிப் பாத்தேன். பனமரம் மாதிரி நெட்டையா ஒரு தாத்தா. கண்ணு வேற பொட்ட. அவரோட தாடி மொழங்காலு வரய்க்குந் தொங்குச்சு. அவரோட உருவமே வித்தியாசமா இருந்தாலும் பேசித்தான் பாப்பமேன்னு அவருகிட்ட போனேன்.

 

            ’ஏ தாத்தா, நீங்க தேடுறது எங்கிட்ட இருக்கு’ன்னேன்.

 

            ’கிட்ட வா மகனே!’ என்று அவர் அழைத்தார்.

 

            நான் அவருகிட்ட போனதும் கைய என்னோட தோளு மேல வச்சாரு. மலையத் தூக்கி வச்ச மாதிரி கனமா இருந்துச்சு.

 

            ’இயாதிப்னு நிஜார்தானே நீயி?’ன்னு அவரு கேட்டாரு.

 

            ’ஆமா, எம்பேரு ஒங்களுக்கெப்படித் தெரியும்?’னு நான் ஆச்சரியமாக் கேட்டேன்.

 

            ’எங்க அத்தா எனக்குச் சொன்னாங்க. அவருக்கு அவுங்க அத்தா சொன்னாங்க, இயாதிப்னு நிஜாருதான் அல்-ஹாரிஸிப்னு மிதாத் அல்-ஜுர்ஹுமிய தேசப் பிரஷ்டம் முடிஞ்சப்றம் மக்காவுக்குத் திருப்பிக் கூட்டீட்டு வருவான்னு. சரி, ஒங்கிட்ட எத்தினி ஒட்டகம் இருக்கு?’

 

            ’பத்து’ன்னு நான் பதிலுரச்சேன்.

 

            ’ஆங், அது போதும்,’னு அவரு திருப்தியாச் சொன்னாரு.

 

            ’ஒங்க கூட மத்தவுங்களும் இருக்காங்களா?’ன்னு கேட்டேன்.

 

            ’இல்லெ. நான் ஒவ்வொரு நாளும் ஒரு ஒட்டகத்துமேல உக்காந்து வருவேன். அப்புறம் அது மொடமப் போயிரும்.’

 

            எனக்கு அவரு சொன்னது அதிர்ச்சியா இருந்தாலும், சொன்ன சொல்லுல நிக்கணுமேன்னு நான் ஒத்துக்கிட்டேன்.

 

            அவரு அன்னிக்கி ராத்திரி எங்கூடதான் தங்குனாரு. மக்யா நா காலைல சனங்க மக்காவுக்குப் பொறப்புட்டப்ப நானும் அவுங்களோட சேந்துக்கிட்டேன். கெழவனையும் கூட அழச்சிக்கிட்டுப் போனேன். பொழுது சாயுற வரய்க்கும் நாளு பூராவும் பயணம் பண்ணுனோம். அவரு உக்காந்து வந்த ஒட்டகம் காலு வெளங்காமப் போயிருச்சு. அடுத்த நா காலைல் அவருக்கு இன்னோரு ஒட்டகத்தக் குடுத்தேன். அன்னிக்கி சாயந்தரம் அந்த ஒட்டகமும் மொடமாயிருச்சு. இப்பிடியே ஒவ்வொரு ஒட்டகமா ஒவ்வொரு நாளும் சாஞ்சுக்கிட்டு வந்துச்சு. கடசீல ஒரு வளியா மக்கவுக்குப் போயி சேந்துட்டோம். மதாபிஃக் மலெ மேல இருந்தோம்.

 

            ’மகனே, ஒட்டகம் மேல இளுக்குறாப்ல இருக்கே, மதாபிஃக் மலய்க்கு வந்துட்டமா?’ன்னு குருட்டுத் தாத்தா கேட்டாரு.

 

            ’ஆமாம்’னேன்.

 

            ’நாம் பேசுறதக் கேக்குறாப்ல பக்கத்துல வேற யாரும் இருக்காங்களா?’ன்னு கேட்டாரு.

 

            ’பக்கத்துல யாருமில்லெ. நமக்கு மின்னாடியும் பின்னாடியும் கொஞ்சம்பேரு இருக்காங்க’ன்னேன்.

 

            அப்புறம் அவரு கேட்டாரு: ‘நான் யார்னு ஒனக்குத் தெரியுமா?’

 

            ’இல்ல’ன்னேன்.

 

            ’நாந்தான் அல்-ஹாரிஸிப்னு மிதாத் இப்னு அப்துல் மசீஹ் இப்னு நுஃபைலா … இப்னு ஜுர்ஹும் இப்னு கஹ்தான். நான் மக்காவோட அரசனா இருந்தேன்… எனக்கு மின்னெ என் அண்ணாரு அம்ரிப்னு மிதாத் அரசனா இருந்தாரு. நாங்கள்லாம் முடிசூட்டிக்கிடா ராசாங்க. திரும்பியும் ஒருநா இல்ல மருநா நாங்க எங்க தலய்ல மகுடம் சூடுவோம். கொஞ்ச நாளு போவட்டும், எங்க மகுடத்த [மக்காவிலிருக்கும்] பைத்துல் அத்தீக்கோட2 வாசக்கதவுல தொங்க விடப்போறேன். அப்பொ என்ன நடந்துச்சுன்னா, இசுரவேலோட சந்ததீல ஒருத்தன் முத்தும் மாணிக்கமும் விக்கிறேன்னு சொல்லிக்கிட்டு மக்காவுக்கு வந்தான். அவங்கிட்ட இருந்த சரக்கு முழுசையும் அம்ரு ராசா வாங்கீட்டாரு. அதுகளத் தன்னோட்ட மகுடத்துல பதிச்சு அதெ ஒரு கேடயம் மாதிரி மாத்தீட்டாரு. ஆனா, அந்த இஸ்ரேலிப்பய ராசாகிட்ட வித்தத விட ஒசத்தியான மணிகள மறச்சு வச்சு மித்தவுங்கள்ட்ட வித்துப்புட்டான். இந்த விசயம் ராசாவுக்குத் தெரிஞ்சதும் அவனெ புடிச்சிட்டு வந்து தம் முன்னால நிக்க வச்சாரு.


’ஒசத்தியான மணிகள நீ எங்கிட்ட மறச்சியாமே? மாத்து கொறஞ்ச மணிகளத்தான் எனக்கு வித்தியாமே? நாங் கேள்விப்பட்டது உண்மையா? ஒங்கிட்ட நான் ஆக சிறப்பானதுதான் வேணும்னு கேக்கல?’ என்று ராசா கேட்டாரு.

 

            ’ஆமாங்க ராஜா’ன்னு அவன் நடுங்கிகிட்டே சொன்னான்.

 

            ’அப்புறம் ஏன் அப்படிப் பண்ணுன?’ன்னு ராசா கேட்டாரு.

 

            ’சரக்கு என்னோடது ராசா. நான் விரும்புனத விக்யவும் விரும்புனத மறச்சு வக்யவும் எனக்கு உரிம இருக்குல்ல?’ன்னு அவன் திருப்பிக் கேட்டான்.

 

            ”ராசாவுக்கு ஆத்திரம் தலைக்கேறிருச்சு. அவங்கிட்ட இருந்த கொஞ்ச நஞ்ச மணிகளையும் பறிமுதல் செய்ய ஆணையிட்டாரு. ஆனா அந்த இஸ்ரேலி தன்னோட தலைய வெட்ட வந்தவன கொலை பண்ணீட்டு, பைத்துல் அத்தீக்ல தொங்க விட்டிருந்த மகுடத்த எடுத்துக்கிட்டு பலமான ஒரு ஒட்டகத்துல ஏறி அங்கேர்ந்து சிட்டாப் பறந்துட்டான். அடுத்த நாளு, விசயம் வெளிச்சத்துக்கு வந்தப்ப அத செஞ்சவன் யாருன்னு ஒருத்தராலயும் கண்டுபுடிக்க முடியல. கொஞ்ச நாளுக்கப்புறம் ஜெருசலேம்ல இருந்து சேதி வந்துச்சு. அம்ரு ராசா இஸ்ரவேலருங்களுக்குச் சொல்லி அனுப்புனாரு. அப்போ அவுங்களோட ராசாவ இருந்தவனுக்கு ஃபாரான் இப்னு யாகூபு இப்னு சிப்து இப்னு யமீன்-னு பேரு. மகுடத்த திருப்பி அனுப்பணும், அத்தொட்ட, கொல செஞ்சதுக்கான ரத்த பணமும் அனுப்பனும்னும் கொலக் குத்தத்த அவுங்க ஆளுதான் பண்ணுனான்னு ஒத்துக்கிட்டு அதுக்கு உரிய வகைல மன்னிப்புக் கேக்கணும்னும் அவருகிட்ட சொல்லப்பட்டுச்சு… ஆனா, ஃபாரான் அத ஏத்துக்க மறுத்துட்டான்.

 

            ’அப்புறம் அம்ரு ராசா அவனுக்கு ஒரு கடிதாசு எழுதுனாரு. மக்காவோட புனித அல்-பைத்துல் அத்தீக்கோட கதவுலதான் எப்பவும் மகுடம் தொங்கவிடப்படணும். இது வரய்க்கும் யாரும் அத பலத்தாலயோ சூழ்ச்சியாலயோ எடுத்துக்கிட்டுப் போனதா சரித்திரம் இல்ல. இதுக்கு ஃபாரான் என்ன பதிலு சொன்னாந் தெரியுமா? மகுடத்த நான் ஜெருசலேம்ல தொங்க வுட்டுக்குறேன்னு சொல்லீட்டான். அம்ரு திரும்பவும் எழுதுனாரு, ‘இறைவன் செல்வந்தன். அவனோட ஒரு வூட்ட அலங்கரிக்கிறதுக்காவ இன்னொரு வூட்ல எப்படித் திருடலாம்? இப்படி சூழ்ச்சி பண்ணியா கடவுளுக்கு கண்ணியம் பண்றது?’ ஃபாரான் அதுக்கும் முரண்டு பண்ணிக்கிட்டு ஒரு பதிலு போட்டான்: ‘நாங்கள்லாம் விசுவாசிங்க. எங்களுக்கு ஒரு புனித வேதம் இருக்கு. கடவுளப் பத்தி ஒங்கள விட எங்களுக்கு நல்லாவே தெரியும்.’ அம்ரு ராசா அதுக்கும் பதிலு சொன்னாரு: ‘கடவுள்ளு எவங் கட்டுப்படுறானோ அவனுக்குத்தான் கடவுள நல்லாத் தெரியும். இது கடவுளோட ஒரு வூட்டுக்காக இன்னொரு வூட்டத் திருடுறதில்ல. ஒரு ராசா இன்னொரு ராசாகிட்ட திருடுறது.’

 

            ’அதுனால நாங்க ஜெருசலேம் மேல போர் தொடுத்தோம். ஜுர்ஹும் குடியிலேர்ந்து நூறாயிரம் பேரு. கூட, இம்லாக் குடியிலேர்ந்து ஒரு நூறாயிரம் பேரு. குதா’ஆ இப்னு ஹிம்யார் குலத்தோட ஒரு கெளயான அப்தூது இப்னு குலைபுக் குடியச் சேர்ந்த அல்-அஹ்வாஸ் இப்னு அம்ருல் அப்தூதி எங்களுக்குப் பக்க பலமா ஒரு அம்பதாயிரம் பேத்த அனுப்பியிருந்தாரு. ஃபாரான் இப்னு யாகூபு அவனோட கூட்டணீல இருந்த பைஜாந்திகள்ட்ட ஒதவி கேட்டான். ஷுனைஃபு இப்னு ஹிராக்கில்-ங்றவந்தான் அப்போ பைஜாந்திகளோட தலைவனா இருந்தான். அவன் நூறாயிரம் பேருள்ள ஒரு படைய ஒதவிக்கு அனுப்பி வச்சான். இஸ்ரவேலு சந்ததிகள்லேர்ந்து இன்னொரு நூறாயிரம் பேருக்கு ஃபாரானே தலமெ தாங்குனான். அல்-ஷாம் [சிரியா] நாட்லேர்ந்து இன்னொரு நூறாயிரம் பேரு அவனுக்குத் தொணையா வந்தாங்க. இந்த மதாபிஃக் மலய்லதான் ஃபாரான் வந்து பாளையம் எறங்குனான். நாங்களும் அப்டியே செஞ்சோம். அந்த மலய்க்கு இந்தப் பேரு எப்டி வந்துச்சுன்னு ஒனக்குத் தெரியுமா?’ன்னு ஒரு வரலாறே சொல்லி முடிச்சாரு கெழவனாரு.

 

            ’தெரியலியே பூட்டா’ன்னேன்.

 

            இன்னொரு வரலாற சொல்ல ஆரம்பிச்சிட்டாரு: ‘ஃபாரானும் ஷுனைஃபும் இந்த மலயோட கெழக்குப் பக்கம் பாசற் போட்டுத் தங்குனப்ப நெருப்பு மூட்டி சமச்சானுங்க. நாங்க எங்க பங்குக்கு மலயோட மேக்குப் பக்கம் கூடாரம் அடிச்சு, தீ மூட்டி சமச்சோம். அதுனாலதான் இந்த மலய்க்கு ஜபலுல் மதாபிஃக் [அடுமலை]ன்னு பேரு வந்திச்சு… ரெண்டு படையும் ஒன்னெ ஒன்னு எதுத்து நின்னப்ப என் அண்ணாரு அம்ரு ராசா எங்கிட்ட வந்து ‘ஹாரிஸு, எனக்குப் பொறவு நீதாண்டா என் வாரிசு’ன்னாரு. அப்புறம் அவரு எதிரிப் படெ கிட்ட போயி, ‘ஒங்க ராசா யாரு? இந்தா, அம்ரிப்னு மிதாத் வந்திருக்கேன்’ன்னாரு. ஷுனைஃபு எந்திரிச்சு நின்னப்ப அவங்கிட்ட சொன்னாரு: ‘ஒனக்கும் எனக்குமா எதுக்கு சனங்க கெடந்து சாவணும்? வா, நாம ஒத்தக்கி ஒத்த பாத்துருவோம். நீ என்னெ கொன்னுட்டீன்னா எம் மக்க ஒனக்கு அடங்கியிருப்பாங்க; நான் ஒன்னெ கொன்னுட்டேன்னா ஒம் மக்க எனக்கு அடங்கீருக்கணும்.’ ஷுனைஃபு இதுக்கு ஒத்துக்கிட்டான். முடிவு என்னாச்சுன்னா, அம்ரு அவனெ கொன்னுட்டாரு… ஷுனைஃபும் தானும் பேசி ஒத்துக்கிட்ட மாதிரி நடக்கணும்னு அம்ரு கேட்டப்ப அதுக்கு ஃபாரான் மறுத்துப் பேசுனான். தான் மக்காவக் கைப்பத்துன பொறவு அந்த மக்களோட செல்வத்துலேர்ந்து பங்கு தர்றேன்னு சொன்னான். அதக் கேட்ட அம்ரு அவனுக்குச் சேதி அனுப்புனாரு; ஏற்கனவே பண்ணுன மாதிரி இப்பவும் நீ வாக்குக்கு மாத்தமா மரியாத கொறவா நடந்துக்குற. நாளய்க்கு நான் ஒங்கூட சண்டெ போடுவேன்.’

 

‘போர் ஆரம்பிக்கிறதுக்கு மிந்தி, அல்-அஹ்வாஸ் அம்ருல் அப்தூதி அவரோட குடிமக்கள்ட்ட பேசுனாரு: ‘என் இனிய அறபி மக்களே! நான் சொல்றத நல்லாக் கேட்டுக்கங்க. நெலம இன்னிக்கு இருக்குற மாதிரியே நாளய்க்கும் இருக்கும்னு சொல்ல முடியாது. எல்லா நலவுக்கும் ஊத்துக்கண்ணா இருக்குற அந்த இறைவனுக்கு நன்றி காட்டுங்க, ஒங்க புனிதத் தலத்த பாதுகாப்புப் பண்ணுங்க, நல்ல நடத்தைகள கடப்பிடிச்சி வாழுங்க, நீங்க அடுத்தவுங்களுக்கு செஞ்ச ஒதவி ஒத்தாசைகளச் சொல்லிக் காட்டாதீங்க, வீர தீரமா இருங்க, அதுதான் கண்ணியத்துக்குண்டான சாராம்சம், சுயநாசத்துக்கு வழி பண்ற கழிவிரக்கத்த விட்டொழிங்க. போருக்கு முந்தாதீங்க, அது அநியாயமா ஏகப்பட்ட உசுருகள அழிச்சுப்புடுது, ஆனா, ஒங்க நாட்டத்துக்கு மாத்தமா நீங்க தாக்கப்பட்டா உறுதியோட அத எதுத்துப் போராடுங்க, நிச்சயமில்லாத விசயங்கள நம்பி ஏமாந்துறாதீங்க, ஏன்னா போர்ல ஏகப்பட்ட நிச்சயமில்லாத விசயங்களும் ஆசைகளும் இருக்கு, அது மனுசனோட கண்ண குருடாக்கீரும். போர்களோட சூழ்ச்சிய பத்தி எச்சரிக்கையா இருங்க, அது ஒங்களோட அதிகாரத்த நாசமாக்கி ஒங்களோட பேரையும் புகழையும் மண்ணாக்கி ஓச்சுரும். நீங்க பெரிய சாம்ராஜ்யங்களோட பரம்பர. இந்த நெனப்ப ஒழிச்சிராதீங்க. நீங்க போர்க் கலைல வல்லமயான ஆளுங்கன்றத மறந்துறாதீங்க. ஆனா, இஸ்ரவேலு ஆளுங்களும் பைஜாந்தியனுங்களும் ராஜியத்தையும் போர் வரமொறங்யளையும் மீறுர பயலுங்க. நீங்க போர்ல தோத்தீங்கன்னா ஒங்க பழைய சாம்ராஜ்யம் அழிஞ்சுப் போயிரும். அது எப்ப விழுந்து போவுதோ அந்த நொடியே நம்ம குடி சுத்தமா அழிஞ்சு போயிரும். நெலச்சு நில்லுங்க மக்களே! ஆண்டவன் ஒங்களுக்கு ஆயுச நீட்டித் தருவான்!’

 

’இப்டிப் பேசுனதுக்கப்புறம் அம்ரு ராசா எங்க படையோட போயி அவனுங்களத் தாக்குனாரு. அவனுங்க எங்களத் தாக்குனானுங்க. ரொம்ப நேரம் சண்டெ போய்க்கிட்டே இருந்துச்சு. எங்க வாளு அவனுங்கள நார் நாராக் கிழிச்சுப் போட்டுச்சு. அந்தப் போர்ல நாங்க ஜெயிச்சோம். அந்த நாளத்தான் ’ஷுனைஃபுடைய நாள்’னு சொல்றோம். அம்ரு ராசா மலெ மேல ஃபாரான் இப்னு யாகூபைப் புடிச்சுக் கொல பண்ணுனாரு. அப்போலேர்ந்து அந்த மலைக்கு ’ஜபலே ஃபாரான்’ [ஃபாரானின் மலை]னு பேரு வந்திருச்சு… அதுக்கப்புறம் அவனுங்களத் தொரத்திக்கிட்டே அம்ரு ராசா ஜெருசலேம் வரய்க்கும் போனாரு. கடசீல அவுங்க அவுருக்கு அடபணிஞ்சு தங்களோட விசுவாசத்த அறிவிச்சாங்க. எங்க சாம்ராஜ்யத்தோட மகுடத்தையும் திருப்பிக் குடுத்துட்டாங்க.

 

‘அவுங்க நாட்ல ’பர்ராஹ் பின்த் ஷம்வூன்’னு ஒருத்தி இருந்தா. பேரழகி. யூசுஃப் இப்னு யாகூப் [ஜேக்கபின் மகன் ஜோசஃப்] வம்சத்துல அவளுக்குச் சமமா இன்னொரு அழகி யாருமே கெடையாது. ஒசத்தியான ஆடையும் நகநட்டும் உடுத்தி அவள அம்ரு ராசாகிட்ட அனுப்பி வச்சானுங்க. அவ மேல மொதப் பார்வ வுளுந்ததுமே கிறங்கிப் போயிட்டாரு. கொஞ்சமும் யோசிக்காம ஒடனே அவள கல்யாணம் பண்ணிகிட்டாரு. ஆனா அது அம்ரு ராசாவ ஒழிக்கிறதுக்கு இஸ்ரேவலுக்காரனுங்க தீட்டுன சதித்திட்டந்தான். 



அம்ரு ராசாவோட தனியா இருக்குறப்ப பர்ராஹ் அவருகிட்ட, ‘நான் ஒங்களுக்குத் திருப்தியா இருக்கேனா?’ன்னு கேட்டா. அவரு ‘ஆமா’ன்னாரு. ‘அப்ப என்னெத் திருப்தி படுத்துங்க’ன்னு அவ சொன்னா. ‘நான் ஒங் கையில. என்ன வேணும் ஒனக்கு’ன்னு அவரு கேட்டாரு. ‘எங்க சனங்கள நீங்க விடுதல பண்ணி எங்க நாட்ல வாழ விட்டுடணும். அவுங்களுக்கு ஒரு தீங்கும் பண்ணக்கூடாது. அவுங்களுக்காக நான் ஒங்கள்ட்ட பரிஞ்சு பேசணும்னு அவுங்க என்னெக் கேட்டுக்கிட்டாங்க’ன்னு அவ சொன்னா. ‘ஒன் விருப்ப்படியே குடுத்துட்டேன்’னு ராசா சொன்னாரு. அவனுங்கள அப்படியே விட்டுட்டு மக்காவுக்குத் திரும்பி வந்தாரு. ஆனா சும்மா வரல. இஸ்ரவேலுக்காரனுங்களோட சந்ததீலேர்ந்து ஓங்கு தாங்க வளந்த நூறு ஆம்பளைங்கள அவனுங்க பொண்டாடி புள்ளைகளோட கூட்டியாந்தாரு. அப்ப அம்ரு ராசாவோட புதுப் பொண்டாட்டி பர்ராஹ் பின்த் ஷம்வூன் தன்னெ திரும்பவும் ஜெருசலேமுக்குக் கூட்டீட்டுப் போறதுக்கு வலிமையான நூறு ஒட்டகங்களையும் ஆளுங்களையும் தயார் பண்ணி வச்சுக்கிட்டா. அப்புறம் அம்ரு ராசாவோட மெத்தக்குள்ள விசம் பாய்ச்சுன கத்தி ஒன்னெ நட்டக் குத்தலாப் பொருத்தி வச்சுட்டா. ராத்திரி அவ்ரு படுக்குறப்ப கத்தி முதுகுல சொருகி விசமேறி செத்துப் போயிட்டாரு. அத்தோட, பிணைக் கைதிங்களாப் புடிச்சு வச்சிருந்த நூறு பேரோட அவ அங்கேர்ந்து ஆளு சட்டுன்னு பறந்துட்டா. ஃபாரான் மலயக் கடந்துதான் அவுங்க போயாவணும், வேற வழி கெடையாதுன்னு தெரிஞ்ச நானு ஜுர்ஹும் இம்லாக்கோட குதிர வீரங்களக் கூட்டிக்கிட்டு அங்கெ போனேன். அவுங்க அங்க வந்ததும் எல்லாத்தையும் கைது பண்ணி திரும்பவும் மக்காவுக்கு இழுத்துட்டு வந்தேன். அங்கே நான் என் அண்ணாரு அம்ரு ராசாவ அடக்கம் பண்ணேன்… அப்புறம், கைதிங்களுக்கு மரண தண்டன நெறவேத்த ஆணையிட்டேன். இனிமே நாந்தான் ராசான்னு எனக்கு முடி சூட்டுனாங்க. அப்புறம் நான் இஸ்ரவேலனுங்க, பைஜாந்தியனுங்க, சிரியாவோட அஜமி [அறபியல்லாதாரு]ங்க அம்புட்டுப் பேரு மேலயும் படையெடுத்தேன். ஜுர்ஹும்லேர்ந்து நூறாயிரம் வீரர்ங்க, இம்லாக்குலேர்ந்து இன்னும் நூறாயிரம் வீரர்ங்க எங்கூட வந்தாங்க. நான் அவனுங்கள எதுத்துப் போராடி அம்புட்டுப் பயலுங்களையும் தோக்கடிச்சேன்… அதுக்கப்புறம் பர்ராஹ்வக் கொலை பண்ணீறனும்னு எனக்கு ஒரே யோசனையா இருந்துச்சு. ஆனா, அரசவையோட சூழ்ச்சியில தானே ஏமாத்தப்பட்டு நிக்கிறதா அவ சொன்னா. இஸ்ரவேலனுங்களோட தலைமை அமைச்சர்னு ஒரு ஆளு, மரண தண்டனைக்கு மொத ஆளா இருக்குறவன், அவந்தான் அவளுக்குத் தெரியாம ராசாகிட்ட வந்து செய்றதயெல்லாம் செஞ்சு முடிச்சவனாம். ‘என் வவுத்துல அவரோட புள்ளைய சொமந்துக்கிட்டிருக்குற நான் எப்படி அந்தக் காரியத்த செய்வேன்?’னு அவ ஆத்திரமும் அழுகையுமா சொன்னா. செவிலிகள வுட்டு அவள சோதிச்சுப் பாக்கச் சொன்னேன். அவ சொல்றது உண்மைதான்னு சொன்னாங்க. அம்ருக்கு ரெண்டு மகளுங்கதான் இருந்தாங்க. ஆம்பளப் புள்ளையே இல்ல. அதுனால, அவ சூலியா இருக்கான்னு தெரிஞ்சதும் அவ மேல எரக்கப்பட்டு அரண்மனைக்குள்ள அனுப்பி, கண்காணிப்புல வச்சிருந்தேன். பத்தாமாசம் ஒரு ஆம்பளப் புள்ளைய பெத்துப் போட்டா. அவனுக்கு ’மிதாத்’னு அவனோட தாத்தா பேரயே வச்சேன். அவன் இளந்தாரியா வளந்தப்ப அவன மாதிரி ஒரு அழகான வாலிபன யாருமே பாத்ததில்லேன்னு சொன்னாங்க. அப்பவும் ஒருக்கா எனக்கு யோசன வந்திச்சு, இப்ப பர்ராஹ்வ கொன்னுடலாமேன்னு. ஆனா அவளோட மவன் என்னெப் பழிவாங்குவான்னு பயமா இருந்துச்சு. பேசாம விசயத்த அவன் முடிவுக்கே வுட்டுருவோம்னு முடிவு பண்ணேன். தன் அத்தாவோட விசயத்துல தன் அம்மாவ என்ன பண்றதுன்னு அவனே பாத்துக்கட்டும்…’

 

            நாங்கள் மக்காவ அடஞ்சதும், நானு தங் கூட ஜைத்தூன் [ஒலிவ] தோட்டங்களுக்கு வரணும்னு பூட்டன் சொன்னார்.

 

            ’மகனே! யாராச்சும் ஒனக்கு ஒரு சேவ செஞ்சா அவுங்களுக்கு நீ நன்றி சொல்லணும். நீ எனக்கு ரொம்பப் பெரிய சேவ செஞ்சிருக்க. ஒனக்கு நான் நன்றி சொல்லிக்கிறேன். ஒனக்கு ஒரு சின்ன அறிவுரையும் சொல்றேன், கேட்டுக்க. ஒன்னெ எது காப்பாத்தும்னு நான் ஒனக்குச் சொல்றேன், மகனே! ஒனக்குச் செல்வத்தக் கொண்டாந்து சேக்குறத விட அறிவக் கொண்டாந்து சேக்குறதுதான் நல்லதுன்னு நீ புரிஞ்சுக்கணும். முளரோட சந்ததீல முஹம்மத்னு பேருள்ள ஒரு ஆண் பிள்ளை பொறந்திருக்கா?’

 

            நான், ’இல்லே’ன்னேன்.

 


            ’அப்படீன்னா சீக்கிரமே பொறக்கும். அவரோட காலம் வரும். அவரோட இறை நம்பிக்கெ ஒசந்து நிக்கும். அந்தக் காலத்துல நீ உசிரோட இருந்தீன்னா அவரு சொல்றத நீ உண்மையா நம்பணும். அவரோட ரெண்டு புஜங்களுக்கும் நடுவுல இருக்குற மச்சத்த நீ முத்தம் போடணும். அவர் மேல அமைதி உண்டாகட்டும். ‘வணக்கத்துக்குரிய ஏக இறைவனோட சத்தியக் கொள்கைய பிரகடனம் பண்றவரே! மனிதர்களில் சிறந்தவராகப் பிறந்தவரே!’ன்னு நீ அவருகிட்ட சொல்லணும்….’

 

            அப்புறம், நாங்க ரெட்ட ஒலிவ மரங்கள்ட்ட வந்துட்டமான்னு அல்-ஹாரிஸிப்னு மிதாத் எங்கிட்ட கேட்டாரு. வந்துட்டோம்னேன். தான் கீழ எறங்கவும் அந்த மரங்கள்ட்ட போவவும் ஒதவி பண்ணச் சொன்னாரு. அதுங்களுக்கிடையில நல்லா செதுக்கப்பட்ட பெரிய பாறாங்கல்லு ஒன்னு இருந்துச்சு, கன சதுர வடிவமா. அவரு அத சுத்தி சுத்தி வந்தாரு. அதோட எல்லாப் பக்கங்களையும் தொட்டாரு. அப்புறம் சொன்னாரு:

 

            ’மகனே! இந்த எடத்த மரணத்தோட எடம்னு சொல்லுவாங்க.’

 

            அப்புறம் அவரு தன்னோட மொகமும் தாடியும் நனையுற அளவுக்கு அழுதாரு.

 

            மக்யா நா காலைல தன் கூட நானும் வரணும்னு சொல்லி நடத்திக் கூட்டீட்டுப் போனாரு. போன எடத்துல ஒரு பாறாங்கல்லு மேல இன்னொரு பாராங்கல்ல தூக்கி வச்சிருந்திச்சு. அதுங்களுக்கு இடய்ல குறுகலா ஒரு தொறப்பு இருந்துச்சு. எங் கைய புடிச்சுக்கிட்டு அவரு அந்தப் பாறாங்கல்ல நவுத்துனாரு. பூமிக்கு அடீல ஒரு பாதெ இருக்குறதப் பாத்தேன். இடக்கவும் வலக்கவும் ஆடிக்கிட்டுப் பாம்புங்க சீறிக்கிட்டிருந்துச்சு. நாங்க அதுக்குள்ற நடந்தோம். அதே மாதிரி ஒரு பாறாங்கல்லு மேல இன்னொரு பாறாங்கல்ல வச்சு பாதைய அடச்சிருந்த எடத்த அடஞ்சோம். அவரு எந் தோளப் புடிச்சுக்கிட்டு உள்ளெ நொழஞ்சு பாறய்க்கு அடீல எடது கைய வச்சு அந்தப் பாறைய அப்படியே பொறட்டிப் போட்டாரு. அடீல இன்னொரு பாத இருந்துச்சு. நான் பயந்து ஓடிப்போயிறாம அவரு என் தோள கெட்டியாப் புடிச்சுக்கிட்டாரு. நாங்க அதுக்குள்ள போனோம். வெளிச்சமான அற ஒன்னு இருந்துச்சு. ஆனா எங்கேர்ந்து அந்த வெளிச்சம் வருதுன்னு என்னால சொல்ல முடீல.

             ’நீ பாக்குறத பயப்படாத. நீ பாதுகாப்பா வெளீல போவ. ஒஞ் சந்ததீலேர்ந்து பல குடிங்க இந்த பூமி மேல நடப்பாங்க’ன்னு அவரு எங்கிட்ட சொன்னாரு.

அப்போ அங்கெ கரும்பூதம் ஒன்னு வந்துச்சு. அதோட கண்ணு ரத்தச் செவப்பா தீக்கங்கு மாதிரி இருந்துச்சு. பெரிய மல ஒன்னு அசையுறாப்ல அது அறய்ல சுத்தி சுத்தி வந்துச்சு. நான் அறய்க்குள்ற போயி அங்கே நாலு கட்டிலுங்க இருந்ததப் பாத்தேன். முனுல மூனு பொணங்க கிடந்துச்சு. நாலாவது காலியா இருந்துச்சு. [அந்த மூனு செத்த ஆளுங்க பூட்டனோட அத்தாவும், தாத்தாவும், கொள்ளு தாத்தாவும். அந்த நாலாவது படுக்கெ அவருக்கு.] அந்த அறயோட மத்தீல முத்தும் மாணிக்கமும் தங்கமும் நெப்பி வச்ச ஒரு சாக்கு இருந்துச்சு.

 

            ’ஒன் ஒட்டகம் சொமக்குற அளவுக்கு எடுத்துக்க. ஆனா அதுக்கு மேல எடுக்காத’ன்னு அல்-ஹாரிஸ் எங்கிட்ட சொன்னாரு. அவரு ஒரு ஹனஃபி. தன்னோட மூதாதைங்களான இபுறாஹீமு, இசுமாயிலு, இசுஹாக்கு [ஆண்டவென் அவுங்க மேல கருண பொழியட்டும்] போதிச்ச மதத்த நம்புனவுரு.

 

            [இயாத் சொன்னார்] நான் என் ஒட்டகம் சொமக்குற அளவுக்கு நல்ல தரமான முத்தும் மாணிக்கமும் தங்கமுமாப் பாத்துப் பொறுக்கி எடுத்துக்கிட்டேன். மிச்சத்த அங்கயே விட்டுட்டேன். அப்புறம் நான் வெளிய வந்துட்டேன்.


குறிப்புகள்:

1.       1. நஜ்ரான் என்பது யமன் நாட்டின் முக்கியமான தொல் நகரங்களில் ஒன்று. ‘நஜ்ரானின் நாகம்’ என்பது அந்தப் புரோகிதனின் கொண்டாடப்பட்ட ஞானத்தைக் குறிப்பதாகும். ஏனெனில் பாம்பு என்பது பண்டைய அறபியரிடம் ஞானத்திற்கான குறியீடாக இருந்தது.

2.       2. அல்-பைத்துல் அத்தீக் (பழைய வீடு) என்பது கஃ’பா என்னும் இறையில்லத்தைக் குறிக்கிறது. அது இப்போது முஸ்லிம்களின் வருடாந்திரப் புனித யாத்திரைக்கான மைய இடமாக உள்ளது. இறைவனை வழிபடுவதற்கான ஆலயமாக அது இப்றாஹீம் (ஆபிரகாம்) அவர்களால் கட்டப்பட்ட முதல் இறையில்லம் என்று கருதப்படுவதால் அன்னனம் அழைக்கப்படுகிறது.

 


No comments:

Post a Comment