”ரூமியின் வைரங்கள்” நூல் சீர்மை பதிப்பகத்தின் சார்பில் மறு வெளியீடாக வரவிருக்கிறது, இன் ஷா அல்லாஹ். அதில் தேவையான இடங்களுக்கு அடிக்குறிப்புகள் எழுதிச் சேர்த்து வருகிறேன். அடிக்குறிப்புகள் பொதுவாக ஓரிரு சொற்றொடர்களில் அமைந்து விடும். இந்த அடிக்குறிப்பு ஒரு பக்க அளவுக்கு வந்துள்ளது:
”நன்மை தீமை எனும்
நினைவுகளுக்கு அப்பால்
உள்ளது ஒரு வெளி
உன்னை அங்கே சந்திக்கிறேன்”
- இந்த வரிகளுக்கான மூலக் கவிதை தீவானே ஷம்ஸ் என்னும் நூலில் உள்ள 395-ஆம் ருபாயீ என்னும் நான்கடிக் கவிதை ஆகும். அதன் ஃபார்சி ஒலிபெயர்ப்பு: “அஸ் குஃப்ரோ ஸ இஸ்லாம் பிரூன் ஸஹ்ருஹாயீஸ்த் / மா ரா ப-மியானே ஆன் ஃபஸா ஸவ்தாயீஸ்த் / ஆரிஃப் ச்சூ பதான் ரசீத் சர்-ரா ப-நிஹத் / நை குஃப்ரோ ந இஸ்லாம் ந ஆஞ்சா ஜாயீஸ்த்.” இதன் பொருளாவது: “இறை நிராகரிப்புக்கும் இஸ்லாமுக்கும் அப்பால் ஒரு பாலைவனம் இருக்கிறது; அந்தப் பாழ்வெளியின் மத்தியில் நமக்கொரு பெருநிதி இருக்கிறது / அங்கே சென்றடையும் இறைஞானி தன் தலையைச் சாய்க்கிறார் / அந்த இடத்தில் நிராகரிப்பும் இல்லை, இஸ்லாமும் இல்லை, அங்கே இடம் என்பதே இல்லை!”
இந்தக் கவிதையைப் பற்றி ’சாஹிபுஸ் ஸைஃப்’ ஷைஃகு அப்துல் கரீம்
அல்-கிப்ரீஸி அந்-நக்ஷபந்தி (ரஹ்) அவர்களின் ஆன்மிகப் பிரதிநிதி (கலீஃபா) ஷைஃகு லுக்மான்
எஃப்பந்தி அவர்கள் நீண்ட விளக்கம் ஒன்றை நல்கியுள்ளார். அதிலிருந்து சில கருத்துக்கள்
பின்வருமாறு:
“இந்த ஒரு வரியைப் பற்றி நான் நீண்ட காலமாகச் சிந்தித்து
வந்திருக்கிறேன். நான் பகடி பேசுவதாக நினைக்க வேண்டாம். நிஜமாகவே சொல்கிறேன், அந்த
ஒரு வரியைப் பற்றி நான் நெடுங்காலமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். எதையாவது நானே கருத்துப்
பண்ணிக்கொண்டு, ‘ஓ அவர் இதைச் சொல்கிறார், அதைச் சொல்கிறார்… இதன் படி இப்படிச் சொல்கிறார்…
என்றெல்லாம் கூறுவதற்காக அல்ல. நம் குருநாதர் (ஷைஃகு எஃப்பந்தி) நமக்கு போதித்திருப்பதன்
வெளிச்சத்தில் அதைப் பார்க்கிறேன். ஏனெனில், ஒரு ஞானியின் வார்த்தைகள் இன்னொரு ஞானியால்தான்
விளக்கப்பட முடியும். எந்த அறிஞரும் அதற்கு விளக்கம் சொல்லிவிட முடியாது. அவர்கள் விளக்கினாலும்
அது உங்களுக்கு யாதொரு பயனும் தராது. அவர் உங்களின் இதயத்தை, உயிரைத் தொட மாட்டார்.
பயன் இல்லை. அவர்கள் உங்களுக்கு மிகவும் அறிவார்ந்த, மிகத் தெளிவான விளக்கத்தைக் கூறலாம்.
ஆனால் அது உங்களைத் தொடப் போவதில்லை. ஏனெனில் ஞானி ஒருவரின் சொற்கள் ஞானியால்தான் விளக்கப்பட
வேண்டும். அப்போது அது உங்கள் இதயத்தைத் தொடும்.
“சிலர் இந்த வரியை இப்படி மொழிபெயர்க்கிறார்கள்: ’நன்மை செய்வதற்கும்
தீமை செய்வதற்கும் அப்பால் ஒரு வெளி இருக்கிறது, அங்கே உன்னைச் சந்திக்கிறேன்.’ நல்ல
மொழிபெயர்ப்பு. ’ஹலால் மற்றும் ஹராம் ஆகியவற்றுக்கு அப்பால் ஒரு வெளி இருக்கிறது. உன்னை
அங்கே சந்திக்கிறேன்’ இரண்டுக்கும் இடையில் என்ன இருக்கிறது? ஹலாலுக்கும் ஹராமுக்கும்
நன்மைக்கும் தீமைக்கும் இடையில், என்ன இருக்கிறது?
”நீங்கள் செய்ய வேண்டியது என்ன? விட வேண்டியது என்ன? நீங்கள்
செய்ய முடிந்தது என்ன? செய்ய முடியாதது என்ன? அங்கே இருக்கும் வெளி என்ன? அந்த இடம்
என்ன? அது என்ன?
ஒரு
முரீது சொல்கிறார்: ’ஷரீஅத்’
“இல்லை, ஷரீஅத் என்பது சரியும் தவறும், நன்மையும் தீமையும்
பற்றியது. அதுதான் ஷரீஅத்.
இன்னொரு முரீது சொல்கிறார்: “சுயேச்சை”
“இல்லை. சுயேச்சையானது அல்ல.
“அது ஷரீஅத் அல்ல. எனவே அது ஷரீஅத்தை விடவும் உயர்வான ஒன்றாக
இருக்க வேண்டும். இப்போது நாம் ஹகீக்கத், மஃ’ரிஃபத் இத்தியாதிகளைப் பற்றிப் பேச வேண்டாம்.
இப்போது விடயம் சுய இச்சைக்கு அப்பாலாகிவிட்டது. இப்போது அது சுய நாட்டத்துக்கு (இஃதியார்)
அப்பால் ஆகிவிட்டது, புரிகிறதா?
“சுயேச்சை என்றால் நீங்கள் இன்னமும் உங்கள் நாட்டத்தைச் செலுத்துகிறீர்கள்
என்று பொருள். இங்கேதான் நாம் சுய இச்சையை, சுய நாட்டத்தைக் காட்டி வருகிறோம். அதற்கு
அப்பால் என்ன இருக்கிறது? நீங்கள் சுயேச்சை என்கிறீர்கள். ஆனால் அதற்கும் அப்பால் ஒன்று
இருக்கிறது. இப்போது, சுயேச்சைக்கு அப்பால் உள்ளது என்ன?
”அது அல்லாஹ்வின் நாட்டம், இல்லையா?
“அல்லாஹ் நன்மைக்கும் தீமைக்கும் அப்பாலானவன் அல்லனா? நிச்சயமாக.
ஷர்ரிஹி வ ஃகைரிஹி மினல்லாஹ்… அவை அல்லாஹ்விடமிருந்தே வருகின்றன. நன்மையும் தீமையும்
அல்லாஹ்விடம் இருந்தே வருகின்றன. நன்மைக்கும் தீமைக்கும் அப்பால்.
“அவர்கள் சொன்னார்கள், அல்லாஹ் நன்மையானவன். அல்லாஹ் நன்மைக்கும்
அப்பாலானவன். நீங்கள் நன்மை என்றும் நீங்கள் தீமை என்றும் நினைப்பவற்றை விட்டும் அப்பாலானவன்.
தஸவ்வுஃப் (ஸூஃபித்துவம்) என்ன கற்பிக்கிறது? ஹஜ்ரத் ரூமி (கத்தஸல்லாஹ சிர்ரஹுல் அஜீஸ்)
அவர்கள் ஸூஃபித்துவத்தை போதிக்கிறார்கள். அவர் விவரிக்கவில்லை, அவர் விவரிப்பதற்காகக்
கவிதைகள் எழுதவில்லை. அவர் போதிக்கிறார், நம்மை அல்லாஹ்விடம் நெருக்கமாக்குகிறார்.
அல்லாஹ் நமக்கு அளித்திருக்கும் சுய நாட்டம், அது பற்றி நமது ஷைஃகு என்ன போதித்திருக்கிறார்கள்?
ஸாஹிபுஸ் ஸைஃப் பல தடவை சொல்லியிருக்கிறார்கள், அல்லாஹ் நமக்கு அளித்திருக்கும் சுய
நாட்டம், அதை நாம் அல்லாஹ்விடமே திருப்பி அளிக்கிறோம்.
“உங்களுக்குப் புரிகிறதா?
“அல்லாஹ் உங்களுக்கு அளித்திருக்கும் சுய நாட்டத்தை நீங்கள்
அர்ப்பணித்து விடுகிறீர்கள். நீங்கள் சொல்கிறீர்கள், சமிஃ’னா வ அதஃ’னா (நாங்கள் செவியேற்றோம், கீழ்ப்படிந்தோம்) உன்னிடமிருந்தே,
எம்மிடம் இருந்து அல்ல, யாம் எமது சுய நாட்டத்தைக் கொண்டு நன்மை தீமை சரி தவறு என்று
சிந்திப்பதை அல்ல. இல்லை, நாங்கள் சுய நாட்டத்தை உன்னிடமே திருப்பியளித்து விடுகிறோம்.
எங்கள் ரட்சகனே! இப்போது நின் நாட்டமே எமது நாட்டம். அடிபணிதல். அர்ப்பணமாதல். காதல்
என்பது இல்லை எனில் நீங்கள் அர்ப்பணிப்பு என்பதை அடையவே முடியாது. ஏனெனில் காதலனே அடிபணிகிறான்.
அவன் ஒருபோதும் எழுந்து நின்று தன்னைக் காட்டிக் கொள்வதில்லை. அவன் சொல்கிறான், ‘நீயே,
நீ மட்டுமே, நான் அல்லன்.’”
Profound
ReplyDeletethanks bro. remember to do dua for me too.
ReplyDelete‘நீயே, நீ மட்டுமே, நான் அல்லன்.’” HAQ
ReplyDeleteநீரோடையின் பாதையில் நீரோட்டத்துடனே பயணிப்பது போன்ற உணர்வு....அர்ப்பணிப்பு காதலால் தான் சாத்தியம்....அருமை நன்றி
ReplyDelete